கலைச்செயல்பாட்டில் சுதந்திரமிழப்புக் குறித்த
அமோல் பலேகரின் விமர்சன உரை

தமிழில்: அல் பெருனி (Proxy)
நன்றி : The Wire

பகிரு

‘அச்சுக்கோட்டை மறைத்தவர்’ குறித்து நேரடியாகப் பேசத் தொடங்குகிறேன், தலைசிறந்த பிரபாகர் பார்வேயை நான் அப்படித்தான் குறிப்பிடுவேன்!

அவர் இனங்கண்டுக்கொள்ளக்கூடிய உலகிலிருந்து அதன் வெளி அடிப்படையில் விலகிச்சென்றார் இருந்தும் இனங்கண்டுக்கொள்ளக்கூடிய வடிவங்களையே பயன்படுத்தினார்; அந்த இனங்கண்டுக்கொள்ளக்கூடிய வடிவங்களைச் சிதைப்பதற்கான முயற்சியும் இருந்தது, இருந்தும் அந்த முழுவுரு அதனுள்ளே உட்பொதிந்திருந்தது; உட்பொருளில் தோய்ந்த சிறுகூறுகள் மூலம் ஒரு சந்தம் அமைக்கப்பட்டிருந்தது. மொத்த பிரயாணமும் அருவமாகுதல் நோக்கியே இருக்கிறது; அறிவார்ந்த மனதின் குறைப்பாடுகளைக் கடப்பதற்கே அந்த பின்தொடர்தல், இருந்தும் நமது காட்சி உலகின் தத்ரூப எச்சங்களைக்கொண்டு நம்மை நங்கூரமிடுகிறார். பரிந்துரைக்கும் விதமான ஒன்றாய் இருப்பினும் அது ஒரு விசாரணைக்குட்படுத்தும் கட்டமைத்தலாகும்! வெளிப்பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பவற்றிற்கும் அதற்கிடையில் இருப்பவைக் குறித்தும் நிறைய விஷயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை! இருந்தும், வெளிப்படுத்தப்படாத விஷயங்கள் கனவுலகையோ மாய உலகையோ பிரதிபலிப்பவையல்ல, அது அங்கே கண்முன்னே கிடக்கும் ஒன்றை நோக்க எனைச் செலுத்துகிறது.

அந்த சர்ரியலிச திருப்பங்களின் மூலம் அவரது உள் உலகத்தோடு எனக்கு ஒரு பிணைப்பிருப்பதாக எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். வெளிபடுத்தப்படுவற்றை கிரகித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கில்லாத அச்சுக்கோட்டை பிடித்துக்கொள்ள தொடரும் உந்துதலோடு நான் ஒன்றிவிடுகிறேன். அவரது ‘மாக்ரீட்தனமான அமைப்பு’ வேலைப்பாடுகளால் வசீகரிக்கப்பட்டாலும், அவரது உள்ளார்ந்த படிமங்களோடான எனது நெருக்கம் அவரது அனைத்து படிநிலைகளிலும் நான் உணர்ந்தவொன்றாகும்.

எப்பொழுதெல்லாம் நான் பார்வேயை சந்தித்தாலும், எனது கேள்விக்கான விடையை எப்படியாவது கண்டுபிடித்துவிட முயல்வேன், ‘அச்சுக்கோட்டை எங்கு ஒளித்து வைத்திருக்கிறார்'.

முதன்முதலில் அவரை சந்திக்கும்போது அவரது பெரும்பான்மையான ஓவியங்களைப் பார்த்திருக்கவில்லை. அது 1973ல்… சராயு மற்றும் வினோத் பாஹியின் இல்லத்தில் கோச்சீயின் (சதானந்த ரெகேயின் மராத்தி நாடகம்) நிகழ்த்துதலுக்குப் பிறகு. அங்கு ஜஸ்ராஜ், கெய்தாந்தெ, பார்வே, பிரஃபுல்லா, ஜிதேந்திரா அபிஷேகி மற்றும் பலர் பார்வையாளர்களாக இருந்தது நாடகத்தின் இயக்குநராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அரங்க வளைவுகளுக்கு அப்பாலுள்ள வெளிகளை சோதிக்க எடுத்த எனது முயற்சி அனைவராலும் பாராட்டப்பெற்றது. ‘நான்காவது காட்சியின்’போது ஏற்பட்ட மதுகளிப்பிலும், அதை ‘மது மற்றும் விவாதங்கள் அமர்வென்று’ அழைத்தோம், எனது நாடகத்தினை அழகியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியது தெளிவாக ஞாபகமிருக்கிறது. சிறிய வெளியிலே, த்வனியை / ஒலியை புதிய அணுகுமுறையில் கையாண்டது குறித்து ப்ரஃபுல்லாவும் அபிஷேகியும் வெகுவாக பாராட்டினர். கதையை சர்ரியலிச தன்மையில் அணுகியதை கெய்தாந்தேவிற்கு பிடித்திருந்தது. எனது படைப்பில் உள்ள காலவெளியின் ஊடாட்டம் குறித்து பார்வே பேசினார். நம் வாழ்வின் சிறுமையோடு இருத்தலிய இருப்பின் பெருங்களிப்பை இணைத்த விதம் குறித்து பரவசப்பட்டார். ‘கோச்சீயின் பல்வேறு கணங்கள், டாலியின் ‘உருகும் காலத்தை’ நினைவுபடுத்துகிறது’. பார்வேயின் இந்த வரியை என்னால் என்றுமே மறக்கமுடியாது! என்னுள் இருக்கும் ஓவியனை உயிர்ப்போடு இயக்கத்தில் வைத்திருப்பதற்கு பார்வேயும் கெய்தாந்தேவும் வாழ்த்தினார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் பார்வேயும் கெய்தாந்தேவும் என்னுடைய படைப்புக்குறித்து அவ்வளவு பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இன்றைய கூட்டம் சிறப்பான விழாவாவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பார்வேயின் புகழ்வாய்ந்த மீபுனைவு படைப்பாக்கங்களின் கண்காட்சி… அவர் இறப்பிற்குப் பிறகு முதன்முறையாக சுமார் இருபத்தி நான்கு ஆண்டுகள் கழித்து நடைபெறுவதே வரலாற்றுச் சிறப்புடையதாகிறது! இந்தப் பெரும் நிகழ்வை ஒருங்கிணைப்பதற்கும் அதை திறந்து வைப்பதற்கு என்னை அழைத்ததற்கும் ஜெசலுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சிறப்பான கண்காட்சியை நடத்த மூன்று தளங்களுக்கு உயர்ந்திருக்கும்
உங்களின் இந்த பிரம்மாண்ட வஸ்துவை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த என்.ஜி.எம்.ஏவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எல்லோரும் எதற்கு நான் குறிப்பாக என்.ஜி.எம்.ஏ விற்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என சிந்திக்கக்கூடும். மிகவும் முக்கியமான ஒரு கலைஞனின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்க தேசியக்கலைக்கூடம் தன் இடத்தை தருவதில் அப்படியென்ன சிறப்பிருக்கிறது? இது என்னை என் இரண்டாம் காரணம் நோக்கி இட்டுச்செல்கிறது, ஏன் இவ்விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக ஆகிறதென! முன்னர் குறிப்பிட்ட மாக்ரீடின் மேற்கோள் இரண்டினைக் குறிப்பிடுகிறேன். ‘கட்புலனாகிற விஷயங்கள் எப்போதும் மற்ற புலப்படக்கூடிய விஷயங்களை மறைத்துவிடும். நாம் காணுவதால் மறைக்கப்பட்டு விடும் விஷயங்களையே நாம் எப்போதும் காண விரும்புகிறோம்’. மேலும் மாக்ரீத் ஒரு முறைக்கூறியிருக்கிறார், ‘துயரமான உலகை எப்போதும் முழுதாக ஒளிரச்செய்வதால் நாம் பகல் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சக்கூடாது’

இங்கிருக்கின்ற புலப்படக்கூடிய விஷயங்களையும் அதனுள்ளே ஒளிந்திருக்கக்கூடிய புலப்படக்கூடிய விஷயங்கள் குறித்தும் குறிப்பிடுகிறேன்! இந்த கண்காட்சிதான் இங்கு நடக்கக்கூடிய கடைசி நிகழ்ச்சியென்று உங்களில் பலருக்கு தெரியாது. அதுவும் அந்த முடிவு ஒரு அரசாங்க அதிகாரியால் எடுக்கப்பட்டதோ அல்லது ஒழுக்கமான நடத்தையை கோரும் அரசு இயந்திரத்தின் செயல்பாடோ அல்லது ஒரு பக்க கருத்தியல்சார் சாய்வு கொண்ட கலைப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கோ அல்ல, மாறாக அம்முடிவு வட்டார கலைஞர்களின் ஆலோசனைக்குழுவால் எடுக்கப்பட்டது. 13 நவம்பர் 2018டோடு மும்பையிலும் பெங்களூரிலும் செயல்பட்டு வரும் கலைஞர்களின் ஆலோசனைக்குழு கலைக்கப்பெற்றதாக அறிகிறேன். நான் கேள்விபெற்றதை அதிகாரபூர்வமாக விசாரித்து அறிந்துகொள்ளும் வேலையில் இருக்கிறேன். எந்த கூட்டம் என்.ஜி. எம்.ஏ.வின் எந்த இடத்தில், அதாவது மும்பையிலா பெங்களூரிலா எங்கு நடக்குமென்பதை இதுநாள் வரையில் முடிவு செய்தது வட்டார கலைஞர்களின் ஆலோசனைக்குழு. ஒவ்வொரு குழுவும் மூன்று வருடங்களுக்கு செயல்பட்டது.

காலம் நிறைவடைகையில் புதிய உறுப்பினர்களால் குழு மறுஆக்கம் பெற்றுவந்தது. கண்காட்சியின் கருப்பொருள் / உள்ளடக்கம் ஆகியவற்றை முடிவு செய்வதிலும், யாருடைய படைப்புகள் காட்சிக்குட்படுத்துவது போன்ற முடிவுகளிலும் வட்டார கலைஞர்களின் நேரடியான பங்கேற்பு இருந்தது. 13ம் நவம்பர் 2018லிருந்து இத்தகைய அனைத்து முடிவுகளும் டெல்லியிலுள்ள கலாச்சார அமைச்சகத்தின் மூலம் எடுக்கப்படப் போவதாக அறிகிறேன். தற்போது பழைய குழுவின் காலம் அக்டோபர் 25, 2018 -டோடு முடிவடைந்ததற்கு பிறகு புதிய குழு கூட்டப்படவில்லை என்பதும் தெரிகிறது.

2017ல், என்.ஜி.என்.ஏ.வின் புதிய கிளைகள் கொல்கத்தாவிலும் வடகிழக்கிலும் திறக்கப்பட உள்ளதாகவும் மும்பை கிளை விரிவு செய்யப்பட உள்ளதாகவும் வெளியான தகவல்களை கேட்டபோது மனதிற்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது.

மேலும் நவம்பர் 13, 2018ல் இன்னொரு மோசமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது, ‘எதிர்காலத்தில் என். ஜி .எம்.ஏவின் சொந்த கலைச்சேகரிப்பைத் தவிர மற்றவற்றிற்கு மும்பை மையத்திலுள்ள மாடப்பகுதியில் ஆறில் ஒரு பங்கு இடம் மட்டுமே ஒதுக்கப்படும்’. அப்படியென்றால மீதமுள்ள பகுதியில் புதிய கலைஞர்களின் அல்லது சேகரிப்பில் இல்லாத பழம்பெரும் கலைஞர்களின் படைப்புகள் காட்சிக்குட்படுத்தபட மாட்டாதா?

இந்தப் புது கொள்கைக்குச் சான்றாக, மெஹ்லி கோபாய் மற்றும் சுதீர் பட்வர்தனுக்கான மார்ச் ஏப்ரல் 2019ல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆகையால், இந்த கண்காட்சியும் ரத்து செய்யப்படாமல் நடைபெறுவதற்கு, நாமனைவரும் சர்வல்லமைப் படைத்த அமைச்சகத்துக்கு நன்றி கடன்பட்டிருக்கிறோம். இன்று நம்முடன் இல்லாத மெஹ்லி கோபாயின் முன்னூறுக்கும் மேலான மிகச்சிறப்பான படைப்புகளைக் காண முடியாமல் போவது வருத்தத்திற்குரிய விஷயமாகும். அது நடந்திருந்தால் ஆசானுக்கான மிகச் சிறப்பானதொரு புகழஞ்சலியாக இருந்திருக்கும். சுதீர், என்னை மன்னியுங்கள், நீங்கள் எவ்வளவு பெரிய கலைஞனாகவும் இருக்கலாம், ஆனால் உங்கள் படைப்புகளும் கருத்தியல்களும் எங்களுக்கு பிடித்தமானவையாகவோ எங்களால் ஒப்புதல் பெற்றவொன்றாகவோ இல்லை.

ஏனிப்படியான தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுகின்றன? இந்தக் கட்டுப்பாடுகளுக்கு பின்னால் உள்ள உண்மையான நோக்கங்களென்ன? இது இன்னொரு அளவிலான கலைச்சுதந்திரத்தின் மீது செய்யப்படும் தணிக்கைமுறையல்லவா? இந்த பன்மை தேசத்தின் கூட்டாட்சி முறை மேல் நடத்தப்படும் இன்னொரு தாக்குதல் அல்லவா? பன்முக குரல்களையும் கலைச்செயல்பாடுகளையும் அழித்து தளரச்செய்யும் செயல்திட்டம் இன்னுமொரு நிறுவனத்தையும் முடக்கிவிட்டது. கலைவெளிப்பாட்டிற்கும் பலதரப்பட்ட கலைகளையும் காண்பதற்கான புனித இடம் என்.ஜி.எம்.ஏ.

அதன் மேலான ஆதிக்கமென்பது, யாரோவொருவர் சொன்னது போல இந்த ‘மானுடவியலுக்கு எதிரான போரின்’ சமீபத்திய பலியாகும்! நான் உண்மையாகவே கலக்கமாக உள்ளேன்… எங்கு போய் இது முடியப்போகிறது?

நாளுக்கு நாள் கொஞ்சகொஞ்சமாக ஆனால் இடையிறாது தொடர்ந்து இந்த சுதந்திர சமுத்திரம் குறைந்துக்கொண்டே வருகிறது… ஆனால் நாம் ஏன் இது குறித்து மௌனமாக இருக்கிறோம்? இந்த தன்னிச்சையான முடிவுகளால் பாதிக்கப்பட்டோர் அது குறித்து பேசவோ, எதிர்க்கவோ அல்லது ஒரு கேள்விகூட கேட்காததுதான் பெருங்கவலையாக இருக்கிறது!

இந்தச் சூழ்நிலையில் பார்வே என்ன செய்திருப்பார்? நம் முன்னே புலனாகிற விஷயங்கள் மூலம் மறைத்திருக்கும் விஷயங்களை நமக்குக்காட்டியிருப்பார். துவக்கவிழாவில் எதிர்பார்க்கப்படும் மேடை நாகரிகத்தை மீறியதற்காக ஜாசெல் என்னை மன்னிக்கவேண்டும் - ஆனால் உரக்கப் பேசுவதில் நம்பிக்கையுள்ளவன் நான். ஆகவேதான் இந்தச் சோகமான நீண்ட உரை!

குறிப்பு:
தேசிய நவீன கலைக்கூடம் நடத்திய ( National Gallery of Modern Arts - NGMA ) மராத்திய ஓவியர் பிரபாகர் பார்வேயின் கண்காட்சியில் அமோல் பலேகர் ஆற்றிய உரையில் தமிழ் வடிவம் இது. பலேகரின் உரையில் அவர் குறிப்பிட்டது போலவே பாதிக்கப்பட்டோர் உட்பட ஒருவரும் கலைச்செயல்பாட்டின் மேல் திணிக்கப்படும் கெடுபிடிகளை எதிர்த்து ஒரு கேள்விக்கூட கேட்டிராத சமயத்தில், இந்தச் சொற்கள் அதிகாரத்தை அதன் முகத்திற்கெதிராக, சிறந்த கலைஞனின் பாணியில் உண்மையின் வாயிலாக திடுக்கிடச்செய்தது. ‘உப்பிட்டு உண்பவன் கலைஞன்’ என்ற சொற்றொடருக்கு சான்றாகியது இந்த உரை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer