தலைவாசல்

ஹரிகிருஷ்ணன்

பகிரு

அன்புடையீர் வணக்கம், பிழைக்கு வருந்துகிறேன். சென்ற இதழில் பாக்கு பொறுக்குபவர்கள் மொழியாக்கச் சிறுகதையை மொழிபெயர்த்தவர் மருத்துவர் டி. எம். ரகுராம் அவர்கள். அவரது முகப்பெழுத்தை ஜி.வி. என்றுபிழையாக அச்சாக்கம் செய்துவிட்டோம். மருத்துவர் மன்னிப்பாராக.

***

ஓர் ஊழிக்காலத்தின் தொடக்கமாகவே இதைநான் உணர்கிறேன். அக்டோபர் ஆறாந்தேதி தொடங்கி முடிவிலாது தொடரும் இஸ்ரேல்பாலஸ்தீனம் போர் அதை உறுதி செய்கிறது. ஆயுதமேந்திய போராட்டம் ஏதிலி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று அழிக்கிறது. உயிரழிப்பு கருதியதை நம் கைக்குக் கொடுக்குமா? நிலைகுலையாத நிதானமே விவேக மாக இருக்க முடியும். மானுடம் பேணாது நாம் பெறும் எந்த விடுதலையும் இறையாண்மைஉள்ளதாக இருக்காது. இழப்புக்களைக் கருத்தில் கொண்டு முதலில் போரை நிறுத்தவேணும். எரிவதைத் தணித்தால் கொதிப்பது அடங்கும்.

***

இதழ் வளர்ச்சி மேம்பாடு என்று தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். இடையில் எழுத்தாளர் களிடம் படைப்புகள் கேட்பது குறித்தும் பேச்சு வந்தது. இளவலொருவர் ஒரு படைப்பாளி இதழுக்குப் படைப்புப் பங்களிப்புச் செய்ய வேண்டுமெனில் இதழ் ஆசிரியனாகப்பட்டவர் அந்தப் படைப்பாளியாகப்பட்டவரிடத்து மண்டியிட்டுத் தென்டனிட்டுக் குழைந்தும் பணிந்தும் ஆயிரத்தெட்டுமுறை அன்பொழுகத்தானே கேக்க வேண்டுமென்றும் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் தப்புவது மாத்திரமல்ல குரலை உயர்த்தவே கூடாதென்றும் உபதேசித்தார். இன்னொருவர் ஒரிஜினல் அக்மார்க் இலக்கியவாதி ஒருவர் அவருடைய இதழுக்கு இரண்டாயிரத்து எட்டுமுறை படைப்புகள் கேக்க நேரிட்டாலும் சற்றும் மனந்தளராது கன்னி முயற்சியில் எத்துணை தீவிர மிருந்ததோ, அழுத்தமிருந்ததோ அதற்கும் மாற்றுகுறையாதபடிக்குத்தானே ஊக்கத்தோடும் உத்சாகத்தோடும் படைப்புகளைக் கழற்றிவிடும் பாங்கையும் அந்த நேர்த்தியையும் சொல்லிச் சொல்லி மாய்ந்ததோடு அந்த வழிமுறைகளை அடியொற்றித் தானே பிறளாமல் பின்பற்றலாமே என்று அறிவுறுத்தவும் செய்தார். நேசமிகு மித்திரர்கள், நிலைய வித்துவான்கள், ஆளுமைகள், ஆகிருதிகள் ஆகியோர் களிடத்துப் பெற்ற பரிந்துரைகள் / இலச்சினைகள்இருந்தால் அவற்றினைக் காட்டிக் கூடக் கறந்து விடலாமென அங்கலாய்த்தார் இன்னொருவர். இதெல்லாம் கூடத் தேவலை.

கும்பகோணத்து உபாத்தியார் ஒருவர், அச்சுக்குப் போகும் சஞ்சிகையை இடை நிறுத்தி வைத்த கையோடு படைப்பாளிக்கு போனைப் போட்டு உங்கள் படைப்புக்குக் காத்திருக்கிறோம் ஐயா, வந்தால் அச்சுக்கு இல்லையேல் குப்பைக்கு என்று இறைஞ்சி கேக்குமாறு மருளாடி அருள்வாக்கு சொன்னார்.

பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது... வாசிக்க நாற்பத்தியெட்டு இதழ்கள் நமது கரங்களில் பெற்றுக்கொண்ட பின்னும் மனமுவந்து அதற்கு விசய தானம் செய்யும் உணர்த்தியும் ஓர்மையும் இல்லாமலிருப்பது உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பதுவே அன்றி வேறில்லை. இந்தப் பண்பு கெட்ட நடத்தையை மெச்சி அணியாகப் பூணும் எவரொருவரும் இலக்கிய உணர்வாளருமல்லர்; அவர்தம் படைப்புகள் இலக்கியத் தளத்தில் விளைவிப்பதுவும் எதுவுமில்லை.

***

சினிமாவே சத்தியம், சினிமாவே லட்சியம், சினிமாவே அச்சாண்ட காலம், சினிமாவே முக்தி மோட்சம் என்று எண்ணம் புழுத்த இலக்கியவாதிகள் மலிந்து பெருகி வருகிறார்கள் மதராஸப் பட்டினத்தில். கோடம்பாக்கம் இராசப்பாட்டையில் ஒரு புல்லாகவேணும் முளைத்துவிட்டால் போதும் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும் என்கிற அளவுக்கு ஈனப்பானம் கெட்டுக் கிடக்கிறது அவர்களது நடவடிக்கை. பிரபல்ய திரை நெறியாளுகைத் திலகங்கள் வீட்டு வாசலில் கூழுக்கு காத்துக் கிடப்பது, எண்ணமில்லாத ராசா பன்றிவேட்டைக்குக் கிளம்பியதுபோலவே இலக்கியத் தேட்டம் என்பதே கிஞ்சித்துமில்லாத அந்தப் பகல் வேசக்காரர்களை நட்சத்திர ஹோட்டல்களில் பகட்டாகத் தாங்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பது, பேப்பரில் எழுதிக்கொண்டு வந்து கவிதையையோ, கதையையோ புகழ்ந்து எங்காவது ஒரு வார்த்தை அவர்கள் பேசிவிட்டால் அதை நெற்றியில் ஒட்டிவைத்துக்கொண்டு திரிவது... அட அவன் தொட்டுத் தந்தால்தான் தாலியே கட்டுவேன் என்கிறார்களய்யா! தமிழ் சினிமா மார்வாடிகளின் கைகளுக்குப் போய் மாமாங்கம் பல ஆகிவிட்டது.

சினிமாவை வல்லிய கலை வடிவமாக உணருகிற, சிந்திக்கிற, அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றுகின்ற ஒரேயொரு ஈ, காக்கை குஞ்சுகள் கூட இன்றைக்கு இங்குக் கிடையாது. கந்துவட்டி மொள்ளைப்பட்டு அதைக் கட்ட முடியாமல் ஊரைவிட்டு ஓடிவந்தவர்கள், காதலித்தவளைக் கலியாணம்கட்டிக்கொள்கிறேன் என்று கையில் சத்தியமடித்தவர்கள், பெண்டுபிள்ளைகளை ஆடம்பர வாழ்க்கையில் மிதக்க வைக்கப் பிரயாசைப்படுகிறவர்கள் தாம் இந்தக் கேடு கெட்ட கோடம்பாக்கத்துக்குக் காவடி எடுக்கிறார்கள். சிவாசி, எம்சியார் காலந்தொட்டு, இன்றைய விசீயண்ணன், அசீத்தண்ணன் வரைக்கும் திரைக்கலைஞர்கள் யாவரும் ஏ, பி, சி சென்டர்களில் விலைபோகும் டிக்கெட்டுகள். முதலாளிமார்கள் ஆடுகிற சூதாட்டத்தின் ஜோக்கர்கள். ஆட்சியதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வடிவேலு என்கிற திரைக்கலைஞனை வருடக் கணக்கில் திரையில் தோன்ற முடியாதபடிக்கி முடக்கிப் போட்ட ஆண்மையற்ற இயக்குனர்கள், திரைப்படத்தை விநியோகம் செய்வதில் உள்ள குழறுபடிகளை, முறைகேடுகளை, முட்டுக்கட்டை களை, அத்துமீறல்களைக் குறித்தெல்லாம் வாய் திறக்க முடியாத புஜபல பராக்கிரமசாலிகளைநம்பி இந்தக் காமெடி பீசுகள் வான்டட்டாக வண்டி யில் ஏறிப்போய்த் தானாகவே உடையடித்துக்கொள் வதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

மணி சார், கமல் சார், ரசினி சார், ராம் சார், ரஞ்சித் சார், மிஸ்கின் சார் போன்ற சினிமா மூதாய்களிடம் ஞானப்பால் அருந்தாத, திரையாக்கம் மற்றுமதன் தொழில் நுட்பம், கலைநுட்பம் முறையாகக் கற்றுத் தேர்ந்த /தெரிந்த திறமைசாலி ஒருவனைத் தானாகக் கண்டு தெளியும் பட முதலாளிகள் யாரேனும் இங்கே இருக்கிறார்களா?

ஆகவே மக்களே மாரைத் தட்டி நெஞ்சில்வையுங்கள்...

கோடம்பாக்கத்துச் சினிமா தண்ணியில் தமிழ் இலக்கியக் கொள்ளு வேகவே வேகாது. சீரிய இலக்கியத்தை உள்வாங்கித் தின்று செமிக்கற சக்தி தமிழ் சினிமாவுக்குக் கிடையவே கிடையாது.

கல்யாணத்தில் மணமகன் இழவு வீட்டில் பிணம் பார்த்திருக்கத் தின்று முழித்திருக்கக் கை துடைக்கும் வெள்ளித்திரை பிரும்மாக்கள் ஏரி வேலைக்குப் போனால் என்ன சோத்துக்கு வழியில்லை கலைத்தாகமென்று சும்மா புலம்பித் திரிவது ஒட்டுத்திண்ணைவாசிகள் மேய்த்தால் மதனியை மேய்ப்பார்கள் இல்லையென்றால் பரதேசம் போவார்கள்.காடு வீடிழந்த குடியானவன் ரோட்டுக்கடையில்இவன் திங்க பிட்டுச் சுட்டு விற்கிறான்.தொட்டுக்கொள்ள எண்ணையில் சுட்ட கறிக்கோழியும்கையில் பணமிருக்கிறதாவென்றால் பணமிருந்த கையிருக்கிறதென்பதுமண்டையிலிருக்கும் மயிரும் சொந்தமில்லைஎடுப்புச்சாப்பாட்டுக்கு எகத்தாளம் கொஞ்சமல்ல மிக அதிகம்இளக்காரம் கண்டு பூலுக்குப் பூண் கட்டச்சொல்வதுஈரைப்பேன் ஆக்குவது பேனை பெருமாளாக்குவதுஎந்நேரமும் அடுத்தவன் வலப்பையைச் சுரண்டுகிறது.தன் காலில் பூ போட்டுக்கொள்வதுவராத நாயைக் கயிறு போட்டு இழுப்பதுகைகொடுத்துக்கொண்டே கடையாணி பிடுங்குவதுஈரத்துணி போட்டு கழுத்தை அறுப்பதுஅண்டப்புளுகு ஆகாசப்புளுகு பச்சைச்சிரிப்பு நீலிக்கண்ணீர்அவனியெங்கும் மணக்குது கனவுபட்டறை நாத்தம்கதவச் சாத்துங்க ஊசக் காத்தடிக்கிது உசுருக்கே கேடு.

***

வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னையில் வந்து அவதரித்திருக்கிறார் ஓர் இலக்கிய மேசய்யா. அதிகாரப்பூர்வமான கலைவளர்ப்பு உரக் கம்பெனியின் ஆஸ்தான ஸ்தாபகரான நம் பரிசுத்தர் செய்த கைங்கர்யம்... அண்மையில் அவரது சொந்தக் கற்பனையில் அவர் கைப்பட ஆக்கிச் சமைத்த நாவல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதச் சொல்லி போட்டி வைத்து அதிக்கிரமமான ஊரில் கொதிக்கிற மீனும் சிரிக்கிறதாம் என்கிற வடிகட்டின புளுகு மூட்டைக்கு ஆப்பிள் போனை வாங்கிப் பரிசளித்திருக்கிறார். அதை மன்னவனும் நீயே, வளநாடும் உனதே என்றேங்கி மயங்கி, ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்துள்ளது ஆர்வக்கோளாறொன்று. அன்றொரு காலத்திலே, ஆதியிலே ஒருப்பூட்டு ஆஷா நிவாஸில் வைத்து எனக்கும் கவிஞர் கென்னுக்கும் இந்தச் சொல்லேர் உழவன் தந்த கெட்டி அட்டை வழ வழத் தாள் கவிதைத் தொகுதியை அதன் கனம் கருதி சுமக்க முடியாது அவரிடமே திருப்பித் தந்தோம்... மட்டுமில்லாது வம்பாய் அவருக்குப் பிடித்திருந்த இலக்கியப்பித்து மற்றும் பேய்களுக்கு உடுக்கை அடித்து, திருநீறுக் கொழித்து மேலும் மேலுமவற்றைக் கிளர்ச்சி அடைய வைக்காமல் அப்பாலே போ சாத்தானே என்று வேப்பிலை அடித்து விரட்டினோம். போகிற போக்கில் இதழ்கள் நடத்தியாவது இலக்கியச் சேவை செய்யுங்கள் என்று கென் தோழர் ஒரு பேச்சிக்குச் சொல்ல அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டுவிட்டாரவர். ஓடிய விசையில் 24x7 என்ற இதழை ஒன்றோ இரண்டோ கொண்டு வந்தவர் அப்புறம் என்ன நினைத்தாரோ விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு என்று திரும்பவும் ஓட்டம் பிடித்தார். இப்போது போன மச்சான் பூமணத்தோடு திரும்பி வந்துதான் இந்த வெட்கங்கெட்ட வேலை பார்த்திருக்கிறார். அய்யா ராசேசு ஸ் பாண்டியனய்யா இலக்கியத் தளம் யாவருக்கும் பொதுவானது ஆடுங் கள் பாடுங்கள் என்னத்தையாவது எழுதி இங்கேகுப்பை போடுங்கள் வேண்டாமென்று சொல்லயாருக்கும் அதிகாரமில்லை. ஆனால் எழுத்து அச்சேறி பிரதியாக்கம் செய்யப்பட்டுவிட்டால் அந்தப் படைப்பு வாசிப்பவருக்குச் சொந்தம். விமர்சனம் வாசகனின் உரிமை. அதை உங்களுக்கு ஏற்றபடி காசு கொடுத்து எழுதத் தூண்டுவது தமிழ்இலக்கிய விமர்சன மரபுக்கு பொருந்தாத செயல்.

காசு கொழுத்தவன் கேளிக்கை பண்ண இங்கே இடம் இல்லை. இம்மாதிரியான கடைகெட்ட நடவடிக்கைகளை உடன் கைவிடுவது உங்களுக்குமிகவும் நல்லது. அவ்வாறின்றி அடர்ந்துஅவற்றைக் கைக்கொள்வீர்களானால்... முதலில்இலக்கியத்தளத்தில் உங்களுக்கு மரியாதை இருக்காது, அதன் பின் எங்கேயும் உங்கள் பேருமிருக்காது.

மாதாந்திர இலக்கியக் கூட்டமொன்றில் பீடித்தது
வெள்ளித்திரை விநோதங்கண்டுநாள்பட்ட வியாதியாச்சி
கமக்கட்டை விதைக்கொட்டை முதுகு பின்மண்டை
தனிச்சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தேன்
ஒப்பந்த முறைமையும் அறிமுகமாயிற்று
பிறகு கட்சி ஆரம்பித்துத் தொண்டர்கள் பெருகினார்கள்
வாரியங்கள் வைத்து மானியமும் கொடுத்துப் பார்த்தேன்
நமச்சல் அடங்கவில்லை கோடி லட்சம் செலவானாலும் சரி
பரந்த மனசுக்காரன் விழுந்து வணங்குகிறேன்
சித்த நேரம் சொறிந்து விடுங்கள் ராஜா.

***

உணர்வொன்றித் துய்க்குந்தன்மை, திளைக்குந் தன்மை மக்களிடத்திலே இல்லாமல் வழக்கொழிந்து விட்டது. துள்ளுவது, துடிப்பது, பதைப்பது, வியப்பது, விழைவது, மகிழ்வது, வெறுப்பது போன்ற மாந்த உணர்வுகள் எந்த நிலையிலும் தீவிரங்கொண்டவையாக இல்லை. படைப்பு தளத்திலொருவன் இயங்க வேண்டுமெனில் ஆழ்ந்த நினைவாற்றல், சிந்தனையாற்றல், கற்பனையாற்றல் உடன் உற்று நோக்கி உள்வாங்கும் கூருணர்வும் அவசியம் வேண்டும். தாய்மொழியில் வாசிக்க முடியாமல், எழுத முடியாமல் அசைபோட முடியாமல் ஏன் சிந்திக்கவே முடியாமல் செய்திருக்கிறது தலை திரும்பவொட்டாத தொடுதிரை மேய்ச்சல். வெற்று அறிவுப்பகட்டுக்குப் பலியாக்காமல் வளர் பிராயத்தினரை உணர்வுள்ளவர்களாகவும், பண்பு உள்ளவர்களாகவும், வளர்ப்பது பெற்றோர் களின் இன்றியமையாத கடப்பாடு ஆகும்.

நீர்வழிப் படூஉம் நாவலுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு  வாழ்த்துகள்!

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2024 Designed By Digital Voicer