மிஸஸ். ஓர்லாந்தோவின் மனக்கிலேசங்கள்

லிடியா டேவிஸ்
தமிழில் : வளவன் தங்கவேல்

பகிரு

மிஸஸ்.ஓர்லாந்தோவினுடய உலகம் இருண்ட ஒன்று. அவளது வீட்டிற்குள் அபாயமாகரமானவை என்னவென்று அவளுக்குத் தெரியும்: கேஸ் அடுப்பு, செங்குத்தான மாடிப்படிகள், வழவழப்பான குளியல் தொட்டி மற்றும் பல்வேறுவகைகளான மோசமான வொயரிங். அவளது வீட்டிற்கு வெளியே உள்ள அபாயங்களைச் சிறிதளவே அறிந்திருந்தாலும் அவை குறித்து அவளுக்கு முழுமையாகத் தெரியாது. மேலும் தனது அறியாமையினால் அச்சப்படுமவள், குற்றச்செயல், பேரழிவு குறித்த செய்திகளை அறிய பேரார்வம் கொண்டிருந்தாள்.

அவள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பினும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் போதுமானதாக இருப்பதில்லை. தீடீர் பசி, ஜலதோசம், அலுப்பு, மற்றும் கடுமையான இரத்தப்போக்கிற்கென அவள் தயாராக முயல்வாள். ஒரு பேண்டெய்டோ, ஊக்கோ, மற்றும் கத்தியோயின்றி அவள் இருந்ததே இல்லை. இருக்கும் பல்வேறு பொருட்களோடு, ஒரு முழம் கயிறு, விசில் மேலும் இங்கிலாந்தின் சமூக வரலாறும், (எப்போதும் நெடுநேரம் ஷாப்பிங் செய்யும் மகள்களுக்காக காத்திருக்கும்போது வாசிக்க) அவளது காரில் இருக்கும்.

பொதுவாக ஆண்கள் தன்னுடன் இருப்பதை விரும்பினாள்: ஓங்குதாங்கான ஆகிருதியாலும் உலகு குறித்த பகுத்தறிவு கண்ணோட்டத்தாலும் அவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கின்றனர். தனது கேள்விகளுக்கு பதிலளிக்க தயங்கும் ஒருவன், சந்திப்பிற்கென முன்கூட்டியே மேசையை பதிவு செய்யும் ஆண், இவர்களது மதிநுட்பத்தை மெச்சுவதோடு மதிக்கவும் செய்வாள். வக்கீல்களை வேலைக்கு வைத்துக்கொள்வதில் நம்பிக்கை கொண்டிருந்த அவள் அவர்களுடனான உரையாடலில் மிகுந்த சௌகரியத்தைக் கொண்டிருந்தாள். ஏனெனில் அவர்களது சொற்கள் ஓவ்வொன்றும் சட்டத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டவை. ஆனால் நகருக்கு ஷாப்பிங் செல்ல வேண்டுமானால் தனித்து போகாமல் தன் பெண்களையோ அல்லது பெண் தோழியையோ அவளோடு வரக்கூப்பிடுவாள்.

நகரின் நடுவில், ஓரு முறை லிப்டில் வைத்து ஒருவனால் அவள் தாக்கப்பட்டாள். ஆளோ கருப்பினத்தவன், நேரமோ இரவு நேரம், இடமோ முன்பின் தெரியாதது. இவளோ அப்போது பருவப்பெண். இப்படித்தான் நெரிசல் மிக்க பேருந்திலும் பலமுறை தொந்தரவுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறாள். ஒரு முறை உணவகம் ஒன்றில், பரிசாரகனோடு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி விட்டது, கோபமடைந்த அவன், அவள் கைகளில் காப்பியை ஊற்றிவிட்டான்.

சுரங்கப்பாதையில் வழி தவறிச்செல்லும் அவள் நகரில் அதன் பாதாளத்துக்கு தூக்கிச் செல்லப்படுவோமோ என்று பயப்படுவாளே தவிர அந்நியப்பட்ட அந்த தாழ்ந்த வர்க்கத்திடம் வழிகேட்டுச்செல்ல மாட்டாள். பலதிறப்பட்ட குற்றங்களுக்கு திட்டமிடும் கருப்பினத்தவர்களை நடந்து செல்லுந்தோறும் கடந்து செல்வாள். அவர்களின் யாரேனும் ஒருவன் எந்த நேரத்திலும் இவளிடமிருந்தோ மற்றொருவளிடமிருந்தோ எதை வேண்டுமானாலும் அபகரித்துக் கொண்டுவிடலாம்.

வீட்டில், தன் பெண்களுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவாள். அவளது பேச்சு யாவும் பேரழிவுக் குறித்த முன்னறிவிப்பாகவே இருக்கும். தனது மனநிறைவை வெளிப்படுத்த விரும்பமாட்டாள், ஏனென்றால் அவள் அதிர்ஷ்ட ஓட்டத்தை கெடுத்துவிடக்கூடும் என்று பயப்படுவாள். ஏதோவொன்று சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல நேர்ந்தால், அதைக்கூற தனது குரலைத்தாழ்த்துவாள் மேலும் அதைக்கூறிய பின்பு தொலைப்பேசி மேசையில் முட்டிக்கொள்வாள். அவள் பிள்ளைகள் சொல்வதில் அவள் ஏதேனும் அச்சுறுத்தும் ஒன்றைக் கண்டுப்பிடித்துவிடுவாள் எனத் தெரிந்து, அவர்கள் மிகச்சொற்பமானவற்றையே இவளிடம் கூறுவார்கள். மேலும் அவர்கள் அவ்வளவு சொற்பமானவற்றை அவளிடம் கூறும்போது அவள் ஏதொவொன்று - அவர்களின் உடல்நலத்திலோ அல்லது அவர்களின் திருமணத்திலோ பிரச்சினையென்று பயப்படுவாள்.

ஒரு நாள் தொலைபேசியில் தன் பிள்ளைகளுக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தாள். ஷாப்பிங் செய்யத் தனியாக நகருக்கு வந்திருக்கிறாள். காரை நிறுத்திவிட்டு துணிக்கடைக்குள் செல்கிறாள். துணிகளைப் பார்க்கிறாள் ஆனால் எதையும் வாங்கவில்லை, இரண்டு துண்டு மாதிரிகளை மட்டும் எடுத்து அவளது பர்ஸில் வைத்துக்கொள்கிறாள். ஓரப்பாதைகளில் நிறைய கருப்பர்கள் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவளை நடுக்கமுறச் செய்தார்கள். காரை நோக்கிச் செல்கிறாள். அவளது சாவியை வெளியே எடுக்கையில், காரின் அடியிலிருந்து ஒரு கை அவளது கணுக்காலைப் பிடிக்கிறது. அவளது காரின் அடியில் ஒருவன் படுத்துக்கொண்டிருக்கிறான் தனது கருத்த கையால் இப்போது அவளது உறையணிந்த கணுக்காலை பிடித்துக் கொண்டு காரால் தடைப்பட்ட குரலில் அவளது பர்ஸைப் போட்டுவிட்டு விலகிப் போகச்சொல்கிறான். நிற்கவே முடியவில்லையெனினும், சொன்னபடியே செய்கிறாள்.

ஒரு கட்டிடத்தின் சுவரில் சாய்ந்து காத்திருந்தபடியே பர்ஸைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அது தடுப்பில் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. கொஞ்சம் பேர் அவளைப் பார்த்தனர். பின்பு காருக்கு நடந்துச்சென்றாள், ஓரப்பாதையில் மண்டியிட்டு கீழே பார்க்கிறாள். பின்னே தெருவில் தெரியும் சூர்ய வெளிச்சத்தையும் காரின் வயிற்றிலுள்ள சில குழாய்களையுமே அவளால் பார்க்க முடிந்தது. அவன் இல்லை. தனது பர்ஸை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செலுத்துகிறாள்.

அவளது கதையை அவளுடைய பெண்கள் நம்பவில்லை. ஏன் ஒரு மனுஷன் அந்த மாதிரி ஒரு விசித்திரமான விஷயத்தைச் செய்யவேண்டும், அதுவும் பட்டபகலில் எனக் கேட்டனர். அவன் அப்படியெல்லாம் சாதாரணமாக காற்றில் மறைந்து போயிருக்க முடியாது எனக்குறிப்பிட்டனர். அவர்களது நம்பிக்கையின்மையினால் கடுங்கோபமடைந்தாள். மேலும் அவர்கள் பட்டப்பகல், காற்றில் மறைவது என பேசும் விதம் அவளுக்கு பிடிக்கவில்லை.

கணுக்காலில் நடந்த தாக்குதலுக்கு பிறகான நாட்களில், இரண்டாவது சம்பவம் ஒன்று அவளை வருத்தமடையச் செய்தது. சமயங்களில் செய்வது போல மாலையில் தன் காரைச் செலுத்தி கடற்கரைக்கு அருகில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்துகிறாள், அப்போதுதான் அமர்ந்தபடி கண்ணாடி வழியே அஸ்தமனத்தைக் காணலாம். எனினும் இந்த மாலையில், எப்போதும் காணும் நிசப்தமான ஆளரவமற்ற கடற்கரையைப் பார்க்கவில்லை, தண்ணீருக்கு மேலே இருக்கும் மரப்பாலத்தைப் பார்த்தபடி இருக்கிறாள், சிறு கொத்தான மக்கள் மணலில் கிடக்கும் ஏதோவொன்றினைச் சுற்றி நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவள் உடனடியாக ஆர்வமாகிவிட்டாள், ஆனால் அஸ்தமனத்தைப் பார்க்காமலும் மணலில் என்ன இருக்கு என்பதை போய்ப் பார்க்காமலும் சென்றுவிடலாமென்று அரை மனதாகத் தோன்றிக்கொண்டிருந்தது. அது என்னவாக இருக்குமென்று யோசிக்க முயன்றாள். அதுவொரு விலங்காக இருக்கலாம், ஏனென்றால் மக்கள் இவ்வளவு நேரம் வெறித்து பார்க்கிறார்களென்றால் ஒன்று அது உயிரோடு இருந்திருக்கவேண்டும் அல்லது உயிரோடு இருக்கவேண்டும். பெரிய மீனை கற்பனை செய்து கொள்கிறாள். அது கண்டிப்பாக பெரியதாக இருக்கவேண்டும், சிறிய மீன் என்பது அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை, அல்லது ஜெல்லி மீன் போன்றதோ இல்லை அதுவும் சிறியது. டால்பினை கற்பனைச் செய்கிறாள் மேலும் சுறாவை கற்பனைச் செய்கிறாள். அதுவொரு கடல் சிங்கமாகவும் இருக்கலாம். அது ஏற்கனவே இறந்திருக்கக்கூடும், அது இறந்துக் கொண்டிருக்கவும் கூடும் மேலும் இந்த கொத்தான மக்கள் அது இறப்பதை பார்த்துக் கொண்டிருக்க எண்ணக்கூடும்.

இப்பொழுது கடைசியாக மிஸஸ்.ஓர்லாந்தோவே தானே போய் பார்க்க வேண்டும். தன் பர்ஸை எடுத்துக் கொண்டு காரை அடைத்துவிட்டு, தாழ்வான கான்கிரீட் சுவறைக் கடந்து, மணலில் இறங்குகிறாள். உயர்ந்த ஹீல்ஸில் கடினமாக, கால்கள் வெகு அகலமாக, மெதுவாக நடக்கிறாள், பளபளக்கும் பர்ஸை அதன் பட்டையைப் பிடித்துக்கொண்டிருக்கிறாள், அது முன்னும் பின்னும் வெகுவாக ஊசலிடுகிறது. கடற்காற்று அவளது பூப்போட்ட ஆடையைத் தொடைக்கெதிராக அழுத்துகிறது. மேலும் அதன் ஓரம் மகிழ்வோடு அவளது முட்டியைச்சுற்றி படபடக்கிறது, ஆனால் அவளது இறுக்கமான வெள்ளி சுருள்கள் அசைவின்றி இருந்தது, அவள் முன்னோக்கி செல்லச் செல்லக் குழப்படைந்தாள்.

அவள் மக்களிடையே நுழைந்தபடி கீழே நோக்குகிறாள். மணலில் கிடப்பது ஒரு மீனோ அல்லது கடற்சிங்கமோ இல்லை அதுவொரு இளைஞன். அவன் பாதங்கள் ஒன்றிணைந்தும் கைகள் அவனுக்கு ஓரமாகவும் இருக்க மிக நேராக கிடக்கிறான், அவன் இறந்துவிட்டான். யாரோ அவனை செய்திதாள்களால் மூடியிருக்கிறார்கள் ஆனால் காற்று காகிதத்தாள்களை தூக்கிச்செல்கிறது, ஓவ்வொன்றாக சுருண்டு மணலில் சறுக்கியபடி சுற்றியிருக்கும் மக்களின் கால்களைச் சுத்திக்கொள்கிறது. கடைசியில் ஒரு மாநிறத்தவன், மிஸஸ்.ஓர்லாந்தோவிற்கு அவன் ஒரு மெக்ஸிகனைப்போல் தெரிகிறான், வெளிவந்து கடைசியான செய்திதாளையும் மெதுவாக எடுத்துவிடுகிறான், இப்போது அனைவரும் இறந்தவனை நன்றாகப் பார்க்கிறார்கள். அவன் மெலிதாக அழகானவனாக இருக்கிறான், அவனது சாம்பல் நிறம் அங்கங்கு மஞ்சளாக மாறத்தொடங்குகிறது.

மிஸஸ்.ஒர்லாந்தோ பார்த்தபடி ஒன்றியிருக்கிறாள். சுற்றியிருப்பவர்களைப் பார்க்கிறாள் அவர்களும் தம்மை மறந்து பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்க அவளால் முடிகிறது. மூழ்கிச்சாவது... இது மூழ்கிச்சாவதுதான்... இது தற்கொலையாகக்கூட இருக்கலாம். அவள் மணலில் தடுமாறித் திரும்புகிறாள். அவள் வீடு திரும்பியவுடன், உடனடியாக அவளது பெண்களை அழைத்து அவள் கண்டதைக் கூறுகிறாள். தான் இறந்து போன மனிதனை கடற்கரையில் பார்த்ததுலிருந்து கூறத் தொடங்குகிறாள், மூழ்கிச்செத்தவன், பின்பு திரும்பவும் முதலிலிருந்து தொடங்கி மேலும் நிறைய கூறுகிறாள். அவளது பெண்கள் அமைதியிழந்தனர் ஏனென்றால் ஒவ்வொரு முறை கதை சொல்லும்போது அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாகிறாள்.

அடுத்த சில நாட்களுக்கு, அவள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறாள். பின்பு திடீரெனக் கிளம்பி தோழி ஒருவருடைய வீட்டிற்குச் செல்கிறாள். அவளிடம் தனக்கு ஆபாசமாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தான் இரவு இங்கேயே தங்கிவிடுவதாகவும் சொல்கிறாள். மறுநாள் வீட்டிற்குத் திரும்பவும், சில பொருட்கள் காணாமல் போயிருப்பதால், யாரோ வீடு புகுந்திருப்பதாக எண்ணுகிறாள். பின்பு ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு இடத்தில் இருப்பதைக் காண்கிறாள், திருடவந்தவன் அங்கு இருக்கிறான் எனும் எண்ணத்தை அவளால் இழக்க முடியவில்லை.

திருடர்களுக்கு பயந்தபடியே வீட்டிற்குள் அமர்ந்து என்ன பிரச்சனையாகப் போகுதோ என்று காத்திருக்கிறாள். குறிப்பாக இரவில் அமர்ந்திருக்கும்போது, அடிக்கடி வினோதமான சத்தங்களைக் கேட்பதால் ஜன்னல் விளிம்புகளுக்குக் கீழே திருடர்கள் இருப்பதாக உறுதியாக இருந்தாள். பின்பு வெளியே சென்று அவளது வீட்டை வெளிப்புறமாகப் பார்க்கவேண்டும். இருட்டில் வீட்டை சுற்றி வருவாள், திருடர்கள் யாரையும் காணாமல் திரும்ப உள்ளே சென்றுவிடுவாள். ஆனால் ஒரு அரைமணி நேரம் உள்ளே உட்கார்ந்த பின்பு திரும்பவும் வெளியே சென்று வீட்டை சோதிக்க வேண்டுமெனத்தோன்றும்.

வெளியே போவதும் உள்ளே வருவதுமாகவும் இருந்தாள், அடுத்த நாளும் வெளியே போவதும் உள்ளே வருவதுமாகவும் இருந்தாள். அதன்பின்பு வீட்டினுள்ளேயே இருந்தபடி தொலைபேசியில் மட்டும் பேசிக்கொண்டு, கதவுகளிலும் ஜன்னல்களிலும் ஒரு கண்னை வைத்தபடியும், வித்தியாசமான நிழல்களுக்கு உஷாராகவும் இருந்தாள், மேலும் இதற்கு பிறகான கொஞ்ச காலங்களுக்கு, அதிகாலையில் மண்ணில் கால்தடங்களைத் தேடுவதற்குத் தவிர அவள் வேறு எதற்கும் வெளியேச் செல்வதில்லை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer