கறுத்தடையான் கவிதைகள்
வய்யாளி


பகிரு

தலைவி கூற்று

யானைக்கதன் கண் சிறிது
பூனைக்கதன் மயிர் பெரிது
பகற் வேட்டைக்குப் பயப்படும் கூகை
கரை முட்டைக்கஞ்சிடாது ஆமை
எறும்பாயெல்லாமுரை
உனக்கென்ன?
உட்தாழும் உனையறியும்
வெளித்தாழும் நினைத் தொழும்
எனக்கேன் குத்துகிறது
நற் காய்ச்சல் பாசி நெற்றாய்.
மகவீனும் மடவயிறே மடவயிறே
வீராப்பை விறைப்பாக்கு
ஆடையுள் மறையும் நூலே
மன அமயம் நீ கேளேன்
பழிச்சொல் பலவாறாயினும்
கிளிச்சொல் நமக்கிதுதான்
பாறையிலுங் கோழி கிண்டும்
நீரிலுங் கொக்கு நொண்டும்.
பிராயத்தில் பிளவுபட்ட நாக்கூர்
படர்ந்தும் மறந்தும் பழசையேற்கிறது
குரால்களின் கூட்டத்தில்
தப்புமொன்று
குத்துச்செடிக்கு தாழிடும் தாபங்கள்
தொட்டிச் செடிக்கு மாற்றப்படுகின்றன
ஆட்டெரு செம்மண் அடி மேல் மண்
காற்றோ கண்டபடி கத்தும்
பூவோ நின்றபடியே சுற்றும்.
வளைக்கரங்களின் பிடியில் களிறு
மூங்கில் குருத்தை தின்னமாட்டாது
முகந்திருப்புகிறது
நீயேயுரை முறிந்த மூங்கில்
கிளை பரப்புமா களை பரப்புமா?
பிணங் கனங் கொண்டிருக்கும் பிரியம்
நிறை குறைவடைந்தது என்னுடையதோ
மனங் குளிர மருகும் தளிர் தாகம்
அந்தியும் பொழுதும் பெருபெருக்கிறது
நினைவற்ற நிலவுகள் திரும்பத் திரும்ப
எனை மட்டுமேயேன் காய்கிறது
சருகுலர்த்தும் வெங்காயங்கள்
போன தடம் புலப்படும் பொழுதில்வருந் தடம்
காத்தோ காத்திருக்கும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer