தலைவாசல்


பகிரு

அன்புடையீர் வணக்கம்

சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கும் எனக்குமிடையே ஒரு பஞ்சாயத்துமில்லை. அவருக்கு நான் எவ்விதமான பாலியல் வல்லாங்கும் செய்யவில்லை. பால் புதுமையினர் குறித்த ஓர் உரையாடல், வலுத்த வாக்குவாதமாகி அதன் உக்கிரம் தாளாது, சதீஷ் இரண்டாயிரத்துப் பத்தொன்பதில் முகநூல் பதிவொன்றை எழுதி இருந்தார். மன உளைச்சலில் நிதானம் தப்பி எழுதிய பதிவென்று அவரே பின்பதை அழித்தார். மனம் வருந்தி அவர் அனுப்பிய முகநூல் குறுஞ்செய்தியை இங்கே இணைப்பது நாகரீகமாகாது என்பதால் தவிர்க்கிறேன். அந்த முகநூல் கணக்கும் இப்போது புழக்கத்தில் இல்லை.

இரண்டாயிரத்து இருபத்தொன்று சென்னை புத்தகண்காட்சியில் நேர்கண்டபோது அவரும் நானும் பரஸ்பரம் உரையாடிக் கொண்டோம். அத்துடன் பிரச்சினை முடிந்தது. நிற்க. நீதிநாயகம் காயத்திரி அம்மாள் பட்டணக்கரையில் வசிப்பவர். படித்தவர், பண்புள்ளவர், ஹிங்கிதம் தெரிந்தவர். இளைத்தவர்கள் - சளைத்தவர்கள் ஏழைகள் - பாழைகள், ஏப்பை - சாப்பைகள், ஏதிலிகளுக்கு ஒரு துன்பம் துயரமென்றால் அவர் மடி சுரக்கும் கருணாமிர்தத்தை அந்த இந்து மகா சமுத்திரமும் கொள்ளாது.

இப்படியாக இருக்கத்தொட்டுத்தான் புழக்கத்தில் இல்லாத முகநூல் கணக்கில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்பே எழுதியவரால் அழிக்கப்பட்ட பதிவை கள்ளத்தனமாக எடுத்து வைத்திருந்து ஒரு முனைவர்ப் பட்ட ஆய்வாளர் பாலியல் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது அதன் விசையைத் திசை திருப்பும் விதமாக அப்பதிவை இடைச்செருகியதுடன் அன்றி வருவோர், போவோர், வம்பாடிகள் யாவற்றைப் பேர்களுக்கும் அதன் இணையச் சுட்டியைப் பகிர்ந்து களிப்பாடி அடங்கியிருக்கிறார்.

அம்மையார் குசு அமிழ்தவஸ்து என்றேங்கி மயங்கிய நமது யோக்கிய சிரோன்மணிகள் தங்கள் புஜ பல பராக்கிரமங்களை (வெகு சௌகரியமாக, வெகு சாமார்த்தியமாக) முகநூல் பக்கங்களில் ஏகத்துக்கும் காட்டி வசையாகப் பெய்து வைத்திருக்கிறார்கள். நரை முற்றியும் ஆராயாது கெட்ட முறை செய்யும் முந்திரிக்கொட்டைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது...

ஒருவர் எழுதிய முகநூல் பதிவை அவரே அழித்துவிட்ட பின்பு அவரது அனுமதியின்றி அதைக் கண்டவர் எடுத்து பாவிக்கலாமா? முகநூல் பதிவு ஒன்றை அதன் உண்மைத்தன்மையைச் சரி பார்க்காது முற்றான புகாராகக் கொள்ளலாமா ? முகநூல் நடமாடும் நீதிமன்றமா? கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிக்காமல் ஒருநிமிட கால அவகாசத்தில் நீதி வேண்டி உங்களிடம் மண்டியிட்டது யார் நீதிமான்களே?

காயத்திரி கார்த்திக் அம்மையார் அவர்கள் சமூகத்திற்கு… எனது இழிந்த செயலைக் கண்டு பொறுக்கமாட்டாது வெகுண்டு முகநூலில் என்னைப் பிளாக் செய்த நீதிநாயகமே! பிறகெதற்கு மானம் ஈனம் இன்றி எனது விவகாரத்தில் தலையிடுகிறீர்கள்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு... என்னைக் குறித்தோ எனது செயல்பாடுகள் குறித்தோ மறுமுறை எங்காவது ஒரு சொல்... ஒரே ஒரு சொல் அவதூறு செய்வது (அல்லது அவதூறாக வார்த்தையாடுவது) தெரிந்தால் உங்கள் மீது சட்டப்பிரகாரமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்... அன்றியும் இந்த இழிசெயலைத் தொடர்ந்து செய்வீர்கள் என்றால் அதனை அடுத்து நான் புழங்கும் எனது சொல்லில் மரியாதை இருக்காது நான் மேற்கொள்ளும் நடத்தையில் பண்பு இருக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு சொல் மானிடர் உத்தமபுத்திரர் சுயமோகச் செயமோகன் அவர்கள் சந்நிதானத்திற்கு... நான் செய்த நிதி மோசடி குறித்துத் தங்களிடம் பிராது கொடுத்த பெயரில்லாத பிரஹஸ்பதி யார்? பிரபஞ்சத்தின் ஒரேயொரு அறிவாளி, உன்னதக் கவிச்சிங்கம் உங்களுக்குத் தெரியாதா அய்யா வழக்காடு மன்றம் செல்லும் வழி? பொருளைத் தொலைத்தவனை அங்குப் போகும்படிக்கு அறிவுரைக்காமல் தங்கள் வலைப்பக்கத்தில் வழி வந்தமாய் வாய்ப்பந்தல் (காசில்லாத சேவை) போட்டுக்கொண்டிருந்தால் இழந்தவனுக்கு நிதி/ நீதி மீளக் கிடைக்குமா அறத்தெய்வமே சுவாமி? கொக்கு அறியாத குளம் உண்டா? தாங்கள் செய்யாத மோசடியா அறக்கடவுளே! பிராயத்துப் பிள்ளைகளை, அவர்களின் சிந்தனைப்போக்கை ஒருமுகமாக முடக்கி உங்கள் விளம்பரப் பிரலாபங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் பதாகைகளாக ஆக்கி வைத்திருக்கிறீர்களே இது மோசடியில்லையா?

பொறுக்கித் தின்பவைகளுக்கு மூக்கைத் தரித்து, இடுப்பையும் உடைத்து உரல் குழிகளையே கைலாசம் என்றாக்கி வைத்திருக்கிறீர்களே அறிந்தும் அறியாத எம் சிவமணியே இது மோசடியில்லையா? கையுழைப்பில் தேடிய பெரும் பொருளைக்கொண்டா தாங்கள் அறஞ் செய்கிறீர்கள்? ஊரெல்லாம் உண்டி குலுக்கித்தானே உங்கள் பாடும் விடிகிறது? கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் உங்கள் பரோபகாரச் சிந்தைக்கு உதிரிகளைக் கண்டால் இளக்காரம் விளக்காக எரிகிறது. சுதாகர் கதக்கின் கைம்மண்ணுக்கோ / கண்மணி குணசேகரனின் புள்ளிப் பெட்டைக்கோ / அழகிய பெரியவனின் நெரிக்கட்டுக்கோ / ஆதவன் தீட்சண்யாவின் நமப்புக்கோ /குமாரசெல்வாவின் உக்கிலுவுக்கோ /எழில் வரதனின் ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெருவுக்கோ ஈடானது இல்லை உங்கள் எழுத்து, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று அவ்வளவுதான்.

தலைத் தடவி மூளை உறிஞ்சப்பட்ட சுயமில்லாத மந்தைக் கூட்டத்திற்கு உகந்தபடி அவர்கள் மேவும் சந்தைக்குத் தக்க எழுத்தை உற்பத்தி செய்து விற்கும் வியாபாரி அவர்களே! எச்சரிக்கிறேன், இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். சுயாதீனமாகச் செயலாற்றும் எளியவர்களை, அவர்கள் செயல்களை, உணர்வுகளை இழித்துப் பழிப்பது, ஏகடியம் பண்ணுவது, வகைத் தொகை அறியாது வலைப்பக்கத்தில் நீதிபரிபாலனம் செய்வது போலான மலிவான செயல்களை…

இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாம்புக்கு ராசா மூங்கத்தடி.

------

வர வர மாமியார் கழுதைப் போலானார் என்றொரு சொலவடை தமிழ் நாட்டில் வழக்கத்தில் உண்டு. கருதி அரசுக் கட்டிலில் அமர்த்தப்பெற்றவர்கள் ஆரம்பத்திலே நம்பிக்கையைத் தரத்தான் செய்தார்கள் வாஸ்தவம்தான். திட்டக்குழுவிலே துறைசார் அறிவாளுமைகள் இடம் பெறச் செய்ததுமொரு நல்ல முன்னெடுப்பு. போகப் போகச் சிக்கல்கள் களையப்படாமல், குறைகள் தீர்க்கப்படாமல் பூசி மெழுகுதல், தப்பை வைத்துக் கட்டுதல் போன்ற தந்திர உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை இப்போது கைகண்ட மருத்துவமாய் நடைமுறைச் செல்நெறிகளாகிவிட்டன.

ஒத்தூதிகளை, துதிபாடிகளை, உடன் பிறப்புகளை, கட்சி அபிமானிகளை, வாரிசுகளை அரவணைத்து ஆலிங்கனம் செய்து அதிகாரத்தை, வருமானத்தைப் பங்கீடு செய்து காபந்து பண்ணுவது கிடக்கட்டும். ஆட்சி நாயகர்களை அம்போவென்று நடுத்தெருவில் விடலாமா?  சீர்கெட்ட விவசாயிகளின் நிலை மேலும் அவலத்திற்குள்ளாகிவிட்டிருக்கிறது. வருங்காலம் பிள்ளைகள் கையில். படித்த பட்டதாரிகளுக்கு அரசு தேர்வுகள் வழி கிடைத்துக்கொண்டிருந்த வேலை வாய்ப்புகள் இன்று அருகி மறைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. 

கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட தேர்வுகள் நான்கில் மூன்று பங்கு குறைந்துவிட்டது. வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் முறைகேடுகள், சீர்கேடுகள், துஷ்பிரயோகங்களை முற்றிலும் தவிர்க்க துரித நடவடிக்கைகளை அரசு உடன் மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் தோன்றுதல், சமூக ஊடகங்களில் காட்சிகொடுத்து சாதனைப்பட்டியல் வாசிப்பது, வெத்துவேட்டுப்பிரகடனங்கள் மற்றும் பழம்பெருமை திரைவசனங்கள் பேசுவது போன்ற மலினமான வழக்கொழிந்த யுக்திகளை விடுத்து நேரிடையாகக் களத்தில் இறங்கி மக்களுக்குகந்த செயல்களைச் செய்வதே சாலச் சிறந்தது ஈரோட்டில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு திருவாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மாரடைப்பு. செய்த செலவெல்லாம் வீணாகிவிடும் என்று சூழலே பரபரத்துக்கொண்டிருக்கிறது. வெட்கக்கேடு.

ஆட்சியாளர்களை வழித்துக்கொண்டு சிரிப்பது, கழுவி கண் மேல் ஊற்றுவது ஒருபக்கம் கிடக்கட்டும். காசு வாங்காமல் ஓட்டுப் போட நம்மால் ஆகாதா. ஆண்டி குறிச் சுவைக்கச் சொன்னால் தாதனுக்கு எங்கே போயிற்று புத்தி? இதிலே கொங்கு பெல்ட் தேர்தலுக்குத் தங்கம் விநியோகம், தலைக்குப் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்ற அங்கலாய்ப்புகள் வேறு. பகுத்தறிவு உள்ளவன் செய்கிற வேலையா நாம் செய்துகொண்டிருப்பது? தாரமங்கலத்து சட்டமன்ற தேர்தலில் ஜெயம் பெற்ற அபேட்சகர் அருமை அண்ணார் திருமிகு அர்ச்சுனன் அவர்கள் நன்றி நவில ஓர்முறை எங்களூருக்கு வந்தார்.

வந்தவருக்குத் துண்டுபோர்த்தி, மாலை சார்த்தி, சோடா உடைத்து கொடுத்து அனுப்பியிருந்தால் பாவம் அவர் பாட்டுக்கு வந்தவழி போயிருப்பார். எங்களூர் திருவாளத்தானொருவன் ஓட்டு போட்டச் சனத்துக்கு ரோடு போடறது, ஆத்து தண்ணி டேங்க் கட்டிக்கொடுக்கறது மாதர ஏதாவதொரு உபகாரஞ் செய்யுங்க சாமி என்றதுதான் மாயம்… கடன் வாங்கி, உடன் வாங்கி, எம்பொண்டாட்டி தாலி அடகு வெச்சி இருபத்தி அஞ்சு லட்சம் உரூபா ஏற்கனவே வாக்கரிசி போட்டுட்டேனே! இன்னும் என்னடா உங்களுக்கு எம்மயிர புடுங்கி அடிக்கணும்னு ஒரு செம கேள்வி கேட்டாரு. மனசுக்கு நெம்பக் குளுமையா இருந்தது அன்னைக்கு. இங்ஙனம் அரசியல் ஊழல்கள், சமூகச் சீர்கேடுகள், சாதி மதத் தீண்டாமைகள், உழைப்புச் சுரண்டல்கள், அறிவுக்கொள்ளைகள், தனிமனிதக் கொடுமைகள் எதுவென்றபோதிலும், அரசு எந்திரம், ஆட்சியாளர்கள், எதிர்க் கட்சியினர் போன்றோரைக் குற்றம் பாராட்டுகின்ற அதே காலை ஆய்ந்தோய்ந்தோமானால் கருததக்க வகிபாகம் அதில் நமக்கும் உண்டென்பதை உணரமுடியும். சமரசங்கள், சாக்குப்போக்குகள் கூறி நமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் முதலில் நமதளவில் உள்ள பிழைகளைக் தாமதங்கள் இன்றிக்களைவதே தார்மீக அறமாகும்.

----

எழுபது எண்பதுகளில் ஈழத்தில் எண்ணிறந்த குழுக்கள் இருந்தன. அவை ஈழத் தமிழ்மக்கள் விடுதலையை முன்னெடுத்துப் போராடின. இன்று அளவும் அந்தப் போராளிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். 

போலவே நமது தமிழ் நாட்டில் அதே காலகட்டத்தில் எழுத்து, நடை, நிறப்பிரிகை, கசடதபற, படிகள், மீட்சி போன்ற இதழ்களோடு மேலும் பல சிற்றிதழ்கள் சார்ந்து பல தோழர்கள் தீவிர இலக்கியம், நுண்கலைகள், புதிய பரிசோதனை முயற்சிகள், புதிய மொழியாக்கம், இளையவர்களுக்கான தளம், மனத்தடை இல்லாத புதிய எழுத்துவகைமைகள், உலக அளவிலான கலை இலக்கியப் போக்குகள், சினிமா உள்ளிட்ட மாற்றுக் கலை வடிவங்கள், மாற்றுத்துறை அறிவு வளர்ச்சி என்று தங்கள் உடல் பொருள் ஆவி ஈந்து மாறாத அர்ப்பணிப்புணர்வோடு இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தனர். சுருங்கக் கூறின் அவர்கள் தங்களைத் தின்னக் கொடுத்துக் கலை இலக்கியத்திற்கு உயிரூட்டினார்கள்.

இப்போதும் இருக்கின்றன பல இலக்கியக் குழுக்கள், அவை தங்களது தன்னகங்காரத் தீ எரிய இலக்கியத்தை நெய்யாய் ஊற்றுகின்றன. மேல் மேச்சலும், மித மிஞ்சின ஒப்பனையும், கண் கூசும் வெளிச்சமும், காதடைக்கும் விளம்பர இரைச்சலும் இலக்கிய இலட்சணமில்லை. 

இதழ்த் தரமென்பது ஓர் எடிட்டரின் பொறுப்புணர்வால் மாத்திரம் விளைவது அல்ல. படைப்பாளிகளுக்கும் ஏன் வாசகர்களுக்கும் கூட அதில் பாத்தியமிருக்கிறது. ஆக்கிப் படைத்திருக்கும் அவ்வளவும் பாகுபாடு இன்றி வெளியாகும் இதழ்களத்தனைக்கும் அனுப்பப் பெறல் வேண்டும். 

விடைப்பது, பிணங்குவது, வேரோடுப் பிடுங்கிக்கொள்வது, நிறைக்குடம் தண்ணீர் தலையோடு வார்த்துக்கொண்டு கோவிலில் முறைப்பாடு வைப்பது, மிளகாய் அரைத்துப் பூசுவது, மோடி வைப்பது, வசியம் பண்ணுவது, ஆடுவது, பாடுவது, ஓடுவது, ஒளிவது, அங்குமிங்கும் தாண்டிக்குதிப்பது, அழுவது, புறத்தே சிரிப்பது, கைக் கொடுத்துக் கொண்டே கடையாணி கழற்றுவது, கொண்டான் கொடுத்தான் உறவு கொண்டாடுவது போன்ற உள்ளடி வேலைத்தனங்களையெல்லாம் அவரவர் அந்தரங்கத்திலே வைத்துக்கொள்ளவேண்டும். இலக்கியத் தளத்திலே இலக்கியம் மட்டும்தான் முதற்பொருளும் கருப்பொருளுமாக இருக்கவேண்டும்.

இலக்கியத்தை முன்வைத்து அங்கே காரியம் பார்ப்பது மட்டுமல்ல படைப்பதையும், நுகர்வதையும் பொதுவில் வைக்கிறதை ஒரு பண்பாக வளர்த்துக்கொள்ளவேண்டும். அணுக்கமான ஆதர்ச புருஷர்களிடம் இலக்கியம் உசாவுகிற வேளையில் வாசகர்கள் வெறுமே ஊம் போட்டுக்கொண்டிருக்காமல், ஊடகங்கள் பால் அவர்கள் காட்டும் பாரபட்சங்கள் குறித்து, சுரணைக்கெட்டிருப்பதைக் குறித்துக் கேள்விகள் எழுப்பி அவரவர் கடமைகளைச் செய்ய வலியுறுத்தவேண்டும். (காசுக் கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிக்கிறவர் சொன்னால் எழுத்தாளன் கேட்டுக் கொள்ளவேண்டும்.) இந்நிலையில் ஊக்கமும் உத்வேகமும் உள்ள இளையவர்கள் படைப்பாளிகளாவது இன்றியமையாதது. தவிர மொழியும் கலையும் புழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கவேண்டும். தீவிர எழுத்து முயற்சி, இலக்கிய வாசிப்பு, மனம் திறந்த உரையாடல் ஆகியனவற்றுக்கான களமாக மணல்வீடு தன் பயணத்தைத் தொடர்கிறது உணர்வாளர்களின் பேராதரவோடு…

பதிலளியுங்கள், 
திரும்பப் பேசுங்கள்,
உரையாடுவோம் தொடர்ந்து...
இவண் 
ஹரிகிருஷ்ணன்

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer