இவ்வாறாக எங்கள் ஊரில் மூன்று குளங்கள் இருந்தன பீச்செடிக் குளம் (பூச்செடிக் குளம்) எல்லோரும் குளிக்கும் பகலில் நேரெதிர் திசையில் கொட்டாங்குச்சிக்குள் மண்புழுக்கள் நிமிண்டிக்கொண்டிருக்கின்றன தொண்டைக்குழிக்குள் முள் முங்கி முங்கி எழுகிறது தக்கை.
சாணிக்கெண்டைகள் நீந்தித் திளைக்கின்றன வெள்ளியுடலை வெய்யிலில் காட்டி மின்னுகின்றன பாடப்புத்தகங்களைக் காற்றுப் புரட்ட அன்சாரி அடியாழத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான் வாப்பாவும் வும்மாவும் அழுதபடி கரையில் காத்திருக்கிறார்கள்.
சிறுவர்கள் காத்திருக்கிறார்கள் படர்ந்த காட்டாமணக்கு தலைநீட்டும் பாம்பு குறிதவறாத அடி காலத்தே புரள்கிறது வாலைப்பிடித்துக் கரையில் வீச இறந்துவிட்டது குளம்.