சமூக ஒப்பந்தத்தை மாற்றி அமைத்தல்
‘தி ஸ்கொயர் ‘திரைப்படம் குறித்து - ரூபன் ஆஸ்லண்ட் 

டெமி கேம்பாகிஸ்
தமிழில்: சரவண சித்தார்த்

பகிரு

சுவிடன் நாட்டவரும், தங்கப்பனை (---) விருதை வென்றவருமான திரை இயக்குநர் ஆஸ்லண்ட் தன்னுடைய படைப்பு செயற்பாடு, சமூகவியல் அறிவாவல்கள் மற்றும் முதன்மை சமூக உயிரியான மனிதனின் மனவிகாரங்கள் பற்றிய அவரது சிந்தனைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

- டெமி கேம்பாகிஸ்

இயக்குநர் ரூபன் ஆஸ்லண்டின் போர்ஸ் மெஜுர்’ 2015ஆம் ஆண்டு வெளியாகி சூழலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய திரைப்படம். அப்படம் வாழ்க்கையை அலுவல்கள் மயமாகவே ஆக்கிக்கொண்ட, விசாரணையே இன்றி அவற்றின்மீது மீது பித்துக்கொண்ட இன்றைய கலாச்சாரத்தை (ஒரு குடும்பஸ்தனின் இருத்தலியல் அடையாள சிக்கல்களின் முப்பட்டகப் பரிமாணத்தின் வழி) கடுமையாக பகடி செய்தது எனில், ‘தங்கப்பனை’ விருதை வென்றுள்ள அவரது ‘தி ஸ்கொயர்’ திரைப்படம் நவீன உலகில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் இயைந்து 

வாழும் சகவாழ்வு அதன் பிரச்சினைப்பாடுகள், செயலாக மாறாத வெறும் கருப்பொருளாகவே நின்றுவிட்ட லட்சியவாத சிந்தனை... இவற்றை எல்லாம் குறித்த வடிவான சித்திரத்தை உறுதிபடத் தீட்டியிருக்கிறது. முந்தைய படம் ஒரு பனிப்பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதியில் ஏற்படும் பனிச்சரிவை அதன் தலைப்பிற்கேற்ப கதாநாயகனின் ஆணாதிக்கத்துக்கு விடப்பட்ட லிட்மஸ் சோதனையாகக் காட்சிப்படுத்தியது என்றால், ஸ்கொயர் திரைப்படம் தனது கேமராக் கண்களால் குடும்ப அமைப்புக்கு அப்பாலான விவகாரங்களைக் கூர்மையாக நோக்குகிறது.

விரியும் அதன் பார்வை, விளம்பரங்கள் மலிந்த மிகை செருக்கு அறிவு செயற்பாடுகள், விவேகமற்ற சுயம் மற்றுமதன் மந்தமான தீவிரத்துவம், நிகழ்காலக் கலை உலகினதும் அதன் உபயதாரர்களினதுமான அறவீழ்ச்சிகள் ஆகியனவற்றின் மீது படர்வதோடு நகர்மய தாராளவாதம் குறித்த பூர்ஷ்வாக்களின் போதாமையுள்ள உணர்திறன் உள்ளிட்டவற்றை விசாரணைக்குட்படுத்துகிறது. இவ்வாறு இதைச் செய்ததன் மூலம் தன் திரைப்படத்தை, சமூக நல்லிணக்கதிற்குப் பதிலாகச் சுயநலனை மட்டுமே பேணி கைக்கொள்ளும் உலக முதலாளித்துவச் சமுதாயத்தின் மீதான காட்டமான விமர்சனமாக ஆஸ்லண்ட் மாற்றியுள்ளார்.

கலை வியாபாரமாக்கப்பட்டதைக் கறாராக விமர்சிப்பதின் மூலம் மக்கள் திரளின் மேல்தட்டைச் சேர்ந்தவர்களின் குறுகிய, பிரயோஜனமில்லாத - நல்லெண்ண அடிப்படையிலான உலகப்பார்வை, ஸ்டாக்ஹோமின் சமூக ஆய்வுகலத்தினுள் அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தில் மற்றவர்களுடைய கடுமையான வாழ்க்கை எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாமல் அச்சப்பட்டு விதிர்ப்பதை கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது ‘தி ஸ்கொயர்’. ‘தி ஸ்கொயர்’ திரைப்படம் தனது 150 நிமிட காட்சி ஓட்டத்தில் இரு வேறு உலகங்களை நமக்கு வழங்கக் காண்கிறோம்: ஒன்று படம் நெடுக பரவலாகத் தோன்றும் புலம்பெயர்ந்தவர்கள், பிச்சைக் காரர்கள் மற்றும் வாழ்நாள் முழுதும் வதிவிடக்கவலைகள் மாத்திரம் வாய்க்கப்பெற்ற நிற்க நிழலடி சொந்தமில்லாதவர்கள் உலகு… 

பணமும், பதவியும், கலவியும், அதிகாரமும் அவிழ்க்கமுடியாத வண்ணம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டதும் தான் என்ற அகங்காரத்தால் இயக்கப்படுவதுமான இருக்கப் பெற்றவர்களின் உந்துதல் குமிழ் உலகு இன்னொன்று...

ஸ்டாக்ஹோம் நகரின் எக்ஸ் - ராயல் தற்காலக் கலை அருங்காட்சியகத்தின் தலைமை காப்பாட்சியரான திரைக்கதை நாயகன் கிறிஸ்டியன் ‘தி ஸ்கொயர்’ என்னும் புதிய கலை நிர்மாணத்தை அமைப்பதற்கான பணியை அப்போதுதான் தொடங்கியிருக்கிறான். தி ஸ்கொயர் என்பது அருங்காட்சியகத்தின் முற்றத்தில் கருங்கற்கள் பாவப்பட்ட தரையில் 4 x 4 மீ அளவில் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு கம்பி அடைப்பு. “நம்பிக்கைக்கும், அக்கறைக்குமான ஒரு சரணாலயம்” என்ற செயல் நோக்கோடு அந்தக் கலைப் படைப்பு நிர்மாணிக்கப்படுகிறது - கனிவு, புரிந்துணர்வு, நம்பிக்கை, பரிவு மற்றும் பரஸ்பர மதிப்பு உள்ளிட்ட சமூக நெறிகளின் குறீயிட்டுப் பருவெளி அது. மிக விரைவிலேயே இந்த அறநெறிகள் கிறிஸ்டியனின் தனிப்பட்ட வாழ்வில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

சாலையில் தாக்கப்படும் ஒரு பெண்ணுக்கு அரை மனதோடு உதவுகிறான் கிறிஸ்டியன். அது பிக் பாக்கெட் அடிப்பதற்கான ஒரு உத்தி என்பதைத் தன்னுடைய மொபைல் போன், பர்ஸ், கஃப்லிங் திருடப்பட்டதை அறிந்தவுடன் தான் உணர்கிறான். தன்னுடைய உடைமைகள் எங்குள்ளன என்பதைத் தன்னுடைய ஐபோன் தடங்காட்டி (GPS) மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கும்போது, அது ஸ்டாக்ஹோமின் புறநகரில் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இட்டுச் செல்கிறது. திருடிய நபரின் குடியிருப்பைக் கண்டுபிடிக்க முடியாத கிறிஸ்டியன் தன் உடைமைகளை மீட்க தந்திரோபாயம் ஒன்றை கையாள்கிறான்.

ஏற்படப்போகும் விளைவுகளை அறியாமல் கிறிஸ்டியன் செய்த காரியம் அந்த அடுக்ககத்தில் குடியிருக்கும் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த ஒன்றும் அறியாத ஒரு சிறுவனைப் பாதித்து அவனைக் கடும் கோபத்துக்குள்ளாக்குகிறது. பிழையைக் களைந்து நிலைமையைச் சீராக்கத் தீவிரமாக முயற்சிப்பதற்குப் பதிலாக தன் சுவடுகளைத் தொடர்ந்து பற்றி வரும் அச்சிறுவனை புறக்கணிக்கிறான். ஒரு கட்டத்தில் மிரட்டவும் செய்கிறான். பின்பு குற்றவுணர்வினால் தன் தவறுகளைச் சரிசெய்யவும் முற்படுகிறான். ஆஸ்லண்டின் திரைப்படைப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது, அவர் ஆண்மையின் சிக்கலான பலவீனங்களைத் தொடர்ந்து தன் திரைப்படங்களில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆண்மை குறித்த ஆண்வழி சமூகத்தின் அளவுகோல்கள் (மற்றும் அந்த அளவுகோல்களை எட்ட முடியாதவர்கள்) மீது அவருக்குள்ள ஈர்ப்பை அவர் வெளிக்காட்டுகிறார். அதுவே கிறிஸ்டியனை அவனது குறைகள் மற்றும் இரக்கமற்ற செயல்களைத் தாண்டி சக மனிதனாக அணுக வைக்கிறது.

புலம்பெயர் சிறுவனுடனான இந்தச் சிக்கலை எப்படிச் சரி செய்வது என்ற கிறிஸ்டியனின் தடுமாற்றம் மேட்டுக்குடி முற்போக்கு கலைச் சூழலின் அபூதியான, எந்தச் சலனங்களுக்கும் ஆட்படாத அற இலட்சியவாதத்தில் ஒரு பெரிய பொத்தலை போடுகிறது. தான் அங்கம் வகிப்பதாகக் கனவு காணும் ஒரு சமூக ஒப்பந்தத்துக்கு இரண்டகம் செய்வதும், தன்னுடைய கலை தொழிற் சூழலில் அந்த ஒப்பந்தத்தின் நெறிகளை வழுவாதிருக்க உறுதி பூணுவதும் ஆனால் தன் சொந்த வாழ்வில் அவற்றைத் தேவை கருதி கடைப்பிடிக்காமல் இருப்பதும் அந்தத் தடுமாற்றத்திற்கான காரணமாக அமைகிறது.

ஆனாலும் கிறிஸ்டியன் கருணையே இல்லாத இதயமற்ற நடுத்தர வர்க்கத்தினன் அல்ல. தன்னுடைய உடைமைகளும், பணமும் அவனுக்குத் திரும்பக் கிடைக்கும்போது ஆனந்தத்தில் அப்பணத்தின் பெரும் பங்கை அவன் வீடற்ற நபருக்குக் கொடுக்கிறான். இதே போல் தருணம் பின்பு வரும் காட்சியிலும் அமைகிறது. ஆனால் அப்போது கிறிஸ்டியன் மன அழுத்ததிலும், அகச்சிந்தனையில் ஆழ்ந்து இருந்ததாலும் அந்தப் பிச்சைக்காரனை முழுதாகப் புறக்கணிக்கின்றான். இந்தத் தருணம் இன்னொன்றையும் நினைவுப்படுத்துகிறது. அந்தப் பிக்பாக்கெட் பெண்மனியை ‘காப்பாற்றியப்’ பின் கிறிஸ்டியனுக்கு ஏற்பட்ட தன் மனநிறைவு அளிக்கக்கூடிய அட்ரிணலின் சுரப்பு ஒரு கேள்வியை எழுப்புகிறது. உண்மையில் பிறர்நலன் பேணுதல் என்ற ஒன்று உண்டா? 

அல்லது அது நிபந்தனைகளுக்கு உட்பட்டதா? சக மனிதனுக்கு உதவுவது என்பது ஒருவருக்கு இதயத்தில் துளிர்க்கும் கருணையினாலா அல்லது சௌகரியமான சூழலிலும், இரு தரப்புக்கும் நலம் பயக்கும்போதும் மட்டும்தானா? இந்தச் சமூகம் தன்னலமின்மை என்னும் கருத்தாக்கத்தைக் குறித்து யோசிக்க நேரமில்லாத பேய்மனம் கொண்ட, பொருள்முதல்வாதத் தன்மையுடைய, நார்சிஸ குணமுள்ள ஒன்றாக மாறிவிட்டதா? இக்கேள்விகளை முன் வைப்பதன் மூலம் சகமனிதனை வெறுக்கும் ஒன்றாகத் தன் கண்முன்னே இச்சமூகம் மாறி வருவதை ஆஸ்லண்ட் குறிப்பால் உணர்த்துகிறார். அத்தனை ஊடாட்டங்களும் (எவ்வளவு நெருக்கமான, மென்மையான ஒன்றாக இருந்தாலும்) சுயநலன் சார்ந்ததாகவும் அதே நேரத்தில் குற்றம் நாடுகின்ற சந்தேகத்துடனேயே அணுகப்படுகின்றன. சமூக இயக்கவியல் குறித்த இந்தப் பரிவர்த்தனைச் சார்ந்த பார்வையைக் கிறிஸ்டியனின் கலவிக்குப் பின்பான வெடிச்சிரிப்பை உண்டாக்கக் கூடிய காட்சியில் இன்னும் வடித்துக் காட்டுகிறார் ஆஸ்லண்ட். 

அக்காட்சியில் கிறிஸ்டியன் ‘ஒரு இராக்கூடலில்’ ஈடுபட்ட பெண் தன் விந்தணுக்களைக் கர்ப்பம் தரிக்கப் பயன்படுத்திவிடுவாள் என்ற சந்தேக அச்சத்தில் கலவிக்குப் பயன்படுத்தப்பட்ட ஆணுறையைக் கொடுக்க மறுத்து அவளோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றான். ஈகோ, ஆஸ்லண்டின் உலகத்தில் வெல்ல முடியாத சக்தியாக உள்ளது. இவை ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க, ‘தி ஸ்கொயர்’ கலை நிர்மாணத்தின் துவக்கவிழாவிற்காகக் கிறிஸ்டியனும் அவனது காப்பாட்சியாளர்கள் குழுவும் தயாராகிக்கொண்டிருக்க, அவனுடைய செய்தித்தொடர்பு அணி நிறைந்த பிரபல்யம் பெறவேண்டி உருவாக்கி வெளியிட்ட கொடூரமான மற்றும் சர்ச்சையேற்படுத்தக்கூடிய (கிறிஸ்டியன் அறியாத அனுமதியளிக்காத) யூடியூப் காணொளி பொதுமக்களிடமிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பை பெற்றிருக்கும் செய்தியை அறிகிறான். அதிர்ச்சியளிக்கக்கூடிய அந்தக் காணொளியின் உள்ளடக்கம், சமூக அக்கறையின்மை குறித்த கடுங்குற்றச்சாட்டாக உருக்கொள்கிறது. நாணங் கொள்ள வேண்டிய இந்தப் பரபரப்புக்கான பசியை நிலைபெறச்செய்வதில் ஊடகம் மற்றும் பொதுமக்களின் கூட்டுக் கரங்களுக்கிருக்கும் பங்கு குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.

விளக்கங்கள் ஏதுமின்றி கண்ணியம், விலக்கப்பட்டவை உள்ளிட்டவற்றின் எல்லைகளை மீறுவதற்கான ஆஸ்லண்டின் நாட்டம் இதில் பூரணமாகவும் பிரகாசமாகவும் வெளிப்படுகிறது. இது போன்ற சிற்றின்ப காட்சிகளைப் பார்க்கும் போது தங்களின் எதிர்வினை என்னவாக உள்ளது என்ற கேள்வியைத் தாங்களே எழுப்பிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பார்வையாளர்களுக்கே சவால்விடும் வகையில் அந்தக் காணொளி உருவாக்கப்பட்டிருப்பதும், அந்த நோக்கத்தின் துணிச்சலும் கொஞ்சம் கூடுதலான பெருநகைப்பிற்கு உள்ளாகிறது. தி ஸ்கொயர் கலை நிர்மாணத்தின் பொன் விதியால் செலுத்தப்படும் கனவுலக லட்சியவாதத்திற்கு ஒரு கடுமையான கண்டனமாக இது அமைகிறது. இதன் மூலம் உணர்ச்சிகளற்று மாயையில் இருக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில், தற்கால மேற்குலக நாடுகளின் ஒரு பெருநகரில் இது போன்ற இனிமையான ஒரு சமூக ஒழுங்கை அடைவது சாத்தியமா என்பதைப் பரிசீலிக்கத் தன்னுடைய பார்வையாளர்களை ஆஸ்லண்ட் நிர்பந்திக்கிறார். மனதை வதைக்கும் முரண்நகையாக அந்தச் செய்தி தொடர்புக் குழுவின் பரப்புரை இறுதியில் மிகப் பெரிய வெற்றியடைவதுதான் இந்தக் காட்சியில் உள்ள விமர்சனத்தை மேலும் கூர்மைப்படுத்துகிறது. அது வெற்றிகரமாக முன்னிறுத்தும் கலையின் நேரெதிர் கருத்துருவமாக அந்தக் காணொளியே அமைகிறது இந்தப் படிமங்கள் நம்மைச் சீண்டக்கூடிய, குலைக்கக்கூடிய வகையில் இருந்தாலும், மிகச் சிறப்பாகப் புனையப்பட்ட தீவிரமான, சர்ரியல் தன்மையுடைய, தனித்துவமான வேறொரு காட்சி உள்ளது.

திரைப்படத்தின் ஒரு பகுதியில் ‘தி ஸ்கொயர்’ கலை நிர்மாணத்தின் தொடக்கவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஓலெக் என்ற பெயர் கொண்ட நிகழ்த்துக்கலைஞன் குரங்கைப்போல் நடித்து ஒரு பெருவிருந்துக்கூடத்தில் உள்ள செல்வச் செழிப்பான புரவலர்களுடன் ஊடாடுகிறான். அக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள டெர்ரி நோட்டரி ஒவ்வொரு அசைவையும், சத்தத்தையும், முகப் பாவனையையும் ஆணி அறைந்தாற் போல் இயல்புக்கு மீறிய துல்லியத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

புரவலர்கள் இந்தப் புதிரான விந்தை நிகழ்வை முதலில் ஆர்வத்துடனும், அருவருப்பான குழப்பத்துடனும் உற்றுநோக்குகிறார்கள். குரங்கு, புரவலர்களில் சிலரை தாந்தோன்றியாகத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் அச்சமேற்படுத்தும் வேட்டைக்குணத்துடன் ஊடாடத் தொடங்கியவுடன் விரைவில் அரங்கமே எளிதில் புலப்படக்கூடிய அசௌகரியத்திற்கும் இறுதியாகப் பயத்திற்கும் உள்ளாகிறது. இந்த நிகழ்த்துதலை அரங்கேற்றச் சொல்லி அது நிகழும்போதே படப்படிப்பை செய்துள்ள ஆஸ்லண்ட் நமக்கு ஐந்து நிமிடம் மூச்சு விடுவதற்கு இடம் கொடுக்கிறார். அது தவிப்பூட்டும், நெளியச்செய்யும் அதிர்ச்சிகரமான, அவல நகைச்சுவையின் மேல் மிதக்கும் நிகழ்த்துக்கலை படைப்பாக இறுதியில் முடிகிறது. இக்காட்சியில் பின்னணி இசையே இல்லாதிருப்பது இதிலுள்ள மூழ்கடிக்கும் இறுக்கத்துக்கு இன்னும் வலு சேர்ப்பதாக உள்ளது.

இது கவனமீர்க்கும் சினிமாத்தனங்களை அக்காட்சியிலிருந்து நீக்கி திரைப்படப் பார்வையாளர்களையும் அந்தப் பெருவிருந்துக்கூடத்தில் அமரச்செய்கிறது. மேலும் ஒவ்வொரு பார்வையாளனையும் நடப்பவற்றை மறைவாக ஒளிந்திருந்து பார்ப்பவனாக மாற்றி, நடப்பவற்றுக்கு உடந்தையானவனாகவும், காட்சி மற்றும் ஒலி சார் அனுபவங்கள் மூலம் விருந்தில் கலந்துக்கொண்டுள்ள புரவலர்கள் பெறும் அதே அனுபவங்களைப் பெறுபவனாகவும் மாற்றுகிறது. பார்வையாளர்களைத் தொடர்புப்படுத்தும் வகையில் அமைத்து அதைப் படமாக்கி, இது போன்ற ஒரு தொந்தரவு தரக்கூடிய சூழலில் நாம் எப்படிச் செயல்படுவோம் என்ற கேள்வியை நமக்கு எழச்செய்கிறது. புனைவு என்ற எண்ணத்தைப் பார்வையாளர்களின் மனதிலிருந்து நீக்குவதன் மூலம் பரீட்சார்த்த குறும் படத்துக்கான கனத்தைப் படத்தின் இப்பகுதி பெறுகிறது.

இதன் மூலம் திரைப்படத்திற்கும், திரைப்படத்தைக் காண வருபவர்களுக்குமான சமூக ஒப்பந்தத்தைச் சத்தமே இல்லாமல் ஆஸ்லண்ட் மீறுகிறார். இக்காட்சி தொடர்ச்சியாக ஒரே திசையில் பதற்றத்தை அதிகரித்து உச்சஸ்தாதிக்கு இட்டுச்சென்று அதிகாரமிக்கச் செல்வாக்கான நயநாகரிக செல்வந்தர்களின் சொகுசான, தூய்மையான, கண்ணியத்தைக் குத்திக் கிழிக்கிறது. தற்காத்துக் கொள்வதற்கான மிருக உள்ளுணர்வினால் ஒரு கண்ணியமான சமுதாயம் எவ்வளவு வேகமாகக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகத்தில் இறங்கும் என்பதை, நினைவுப்படுத்தும் விதமாகவும் இக்காட்சி அமைந்திருக்கிறது.

ஒரே நேரத்தில் நம்மைச் சீண்டுவதாகவும், சிந்தையில் ஆழ்த்தும் பகடியாகவும், கலாப்பூர்வமான கொள்கை விளக்க அறிக்கையாகவும், மனித குணங்களின் ஆய்வாகவும், சமூகவியல் சிந்தனையின் பரிசோதனையாகவும் மற்றும் ஒரு நிகழ்த்துக்கலைப் படைப்பாகவும் விளங்கும் ஆஸ்லாண்டின் தி ஸ்கொயர் திரைப்படம், அபத்தமே நவீன மனிதனின் நிலையாக இருப்பதை, பாதிப்பை உண்டாகக் கூடிய, விசித்திரமான, வழக்கத்துக்கு மாறான பார்வையில் அணுகுகிறது. அவருடைய வழக்கமான அகல சட்டகங்களால் ஆன காட்சிகள் மற்றும் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்பட்ட கேமரா, கட்டிடங்களின் மாசற்ற உட்பகுதிகளின் (கிறிஸ்டியனின் வீடு மற்றும் அருங்காட்சியகம்) மீதான ஓர்நிலை, ஒவ்வொரு சட்டகத்துக்குள்ளும் இருக்கும் காலியான அகன்ற வெண்ணிற இடங்கள் மீதான கவனத்தை அதிகரிக்கிறது. இது கருத்துரு கலையின் (Conceptual Art) சலிப்பூட்டும் மினிமலிசதன்மை மற்றும் ஒரே மாதிரியான சிக்கனத் தன்மையை அழகியலோடு பாவிக்கும் அணுகுமுறை. பொதுவெளி மற்றும் தனிமையில் மனிதனின் போக்குகள் குறித்தான ஆஸ்லண்டின் ஆர்வம் இத்திரைப்படத்தில் நகைச்சுவை, அதிர்ச்சி மதிப்பீடுகள் மற்றும் நம் மனதை எளிதில் இலகவைக்கும் உணர்வுகளையும் அகழ்ந்தெடுக்கிறது.

மீண்டும் அவர் பார்வையாளர்களைத் தி ஸ்கொயர் கலை நிர்மாணத்தின் சமூக நெறிகளைத் தூக்கிப்பிடிப்பதில் அவர்களுக்குள்ள குடிசார் பொறுப்புகளையும், தனி மனித அறிவில் உள்ள சுயம், நன்மை உள்ளிட்டவை எப்படிச் சமூகத்தின் கூட்டு நனவுநிலையோடு ஒத்துப்போகிறது என்பதையும் பரீசிலிக்க அழைப்பு விடுக்கிறார். ஸ்டாக்ஹோமை காற்று உட்புகாத சொகுசான வாழ்க்கைச் சூழல் கொண்ட நகரமாகச் சித்தரிப்பதன் மூலம், அந்நகரின் மாசுநீக்கப்பட்ட அதிநவீனத்தையும், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மனிதர்களை ஒன்றிணைக்கும் அதன் உள்ளார்ந்த மற்றும் முண்டு முடிச்சுகள் நிறைந்த பழமைவாதத்தையும் அடுத்தடுத்து வைத்து ஒப்புமைபடுத்திக்காட்டுகிறது ‘தி ஸ்கொயர்’. இந்தத் தனிமனித நலனுக்கும், சமூக எதிர்ப்பார்ப்பிற்கும் இடையே உள்ள ஒரு இருத்தலிய பொறிதான் இறுதியில் இப்படத்தின் மனமும் ஆன்மாவுமாகிறது.

‘தி ஸ்கொயர்’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியானதைத் தொடர்ந்து அதன் இயக்குநரை நான் நேர்காணல் எடுக்கும் இனிமையான வாய்ப்பை பெற்றேன். அவருடைய படைப்புச் செயல்பாடு, சமூகவியல் அறிவாவல்கள், உள்ளார்ந்த முன் முடிவுகள் மற்றும் கேன்ஸ் பார்வையாளர்கள் அவர்கள் இருக்கையில் இருந்துக்கொண்டே நெளிவதைக் காணும் மீகுறுகுறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் பற்றிய அவரது எண்ணங்களை அறிந்துகொள்ள முடிவெடுத்தேன்.

கேம்பாகிஸ்: ஸ்வீடனில் 1950களில் வளர்ந்த உங்கள் தந்தை கூறிய கதைகள் அளித்த உந்துதலின் பேரில் நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு படைத்த ஒரு கலை நிர்மாணமே இந்தப் படத்துக்கான கருவாக அமைந்தது என்பது உண்மையா?

ஆஸ்லண்ட்: ஆம் மற்றும் இல்லை. ஸ்டாக்ஹோமின் மத்தியில் உள்ள ஒரு பேரங்காடியில் நடைபெற்ற தொடர் திருட்டுகள் அளித்த அக வெழுச்சியே இந்தத் திரைப்படம் உருவாவதற்கான காரணம். நிறைய நபர்களுக்கு அதில் தொடர்பிருந்தது. அவர்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் அந்த வழக்கின் ஆவணங்கள் முழுவதையும் நான் வாசித்த பின்புதான் வயது வந்தவர்களின் பங்கு என்பது எப்போதாவது தான் அதில் இருந்திருக்கிறது. முழுக்கச் சிறுவர்களால் நடத்தப்பட்ட ஒன்று அது. இதற்காகப் பெரியவர்களிடம் எந்த உதவியும் அவர்கள் கோரவில்லை. நான் என் தந்தையிடம் இந்த நிகழ்வுகள் குறித்துப் பேசினேன். அவருக்கு ஆறு வயதானபோது பெயரும், முகவரியும் தாங்கிய சின்னச் சிட்டையை அவரது கழுத்தில் மாட்டி ஸ்டாக்ஹோமின் மையத்திற்கு அவருடைய பெற்றோர்கள் அவரைத் தனியாக விளையாட அனுப்பி வைப்பார்கள் எனச் சொன்னார். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் பெரியவர்கள் உதவுவார்கள் என்று 50களில் நம்பப்பட்டது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இன்று நாம் சகமனிதனை ஏறத்தாழ ஒரு அச்சுறுத்தலாகப் காண்கிறோம். நம் மனப்பாங்கில் ஏற்பட்ட இந்த மாற்றமே ஒரு மாநகரின் மையத்தில் இந்தத் திருட்டுகள் யாருடைய தலையீடும் இல்லாமல் தொடர்ந்து நடந்துள்ளன என்பதற்கான காரணம். அதாவது குழந்தைகளின் உலகமும், பெரியவர்களின் உலகமும் வெவ்வேறு பிரபஞ்சத்தில் இருப்பதைப் போல் இந்நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இதைக் கருவாக வைத்தே நானும் என் நண்பர் ஒருவரும் இணைந்து ஒரு குறியீட்டுத் வெளியை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டோம். ஒரு சக மனிதனாக நம்முடைய பாத்திரம் என்ன என்பதை உணர்த்தும், சாலையில் உள்ள பாதசாரிகள் கடக்குமிடத்தைப்போல் மிக எளிய ஒன்றாக அது இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். நாம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவும், சக மனிதன் மீது நம்பிக்கைகொள்ளவும் நம்மை நினைவுபடுத்தும் ஒரு குறியீட்டு வெளியாக அது இருக்கவேண்டும் என்றும் விரும்பினோம். அதாவது நம் சமூக ஒப்பந்தத்தை மாற்றியமைக்கும் ஒரு முயற்சி.

கேம்பாகிஸ்: இந்தச் சதுர வடிவ அடைப்பை முதலில் நிறுவும்போது அதை ஒரு கலை நிர்மாணமாகக் கருதி நீங்கள் படைக்கவில்லை என்பதாகத் தெரிகிறது. நீங்கள் முதலில் என்ன நோக்கத்தில் அதை அமைத்தீர்கள்?

ஆஸ்லண்ட்: முன்பு நான் அதை ஒரு கலைப் படைப்பாகப் பார்க்கவில்லை. மாறாக ஒரு போக்குவரத்துக் குறியீடாகத்தான் பார்த்தேன். அதை நான் ஒரு மனிதம் கூடிய போக்குவரத்து குறியீடு என்றுதான் சொல்லி வந்தேன். ஆனால் எனக்கும் என் நண்பனுக்கும் கலை அருங்காட்சியத்திலிருந்து  அழைப்பு வந்தவுடன் அது ஒரு கலைப்படைப்பாகத் திடீரென்று மாறிவிட்டது. (சிரிக்கிறார்) 

கேம்பாகிஸ்: பொதுவில் இருப்பதைவிடத் தனிமையில் மனிதர்கள் வேறு மாதிரி நடந்து கொள்வதன் (நாம் கிறிஸ்டியனின் கதாபாத்திரத்தில் பார்ப்பதைப் போல) மீதான ‘தி ஸ்கொயரின்’ தீவிர நாட்டத்தைப் எடுத்துக் கொண்டோமானால் உங்களுடைய ஸ்கொயர் நிர்மாணத்துக்கும், சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடத்துக்குமான ஒற்றுமைகளைப் பரிசீலிப்பது சுவாரசியமாகப்படுகிறது. இரண்டுமே குடிசார் பொது நடத்தையை வலியுறுத்த கோடிட்டு வரையரை செய்யப்பட்டப் பருவெளிகள். குறியீட்டு வெளிகள் மற்றும் பருவெளிகள், பொது மற்றும் தனி இவற்றின் இடையேயான பரஸ்பர உறவு குறித்த இருமை படப்பிடிப்பின் போதே உங்களுடைய மனதில் தோன்றியதா?

ஆஸ்லண்ட்: எனக்கு இந்த இருமைகள் எப்போதுமே ஒப்புமைக்கு உரியதாகவே இருக்கின்றன. ஏனென்றால் பாதசாரிகள் கடக்கும் இடம் நீங்கள் எங்கே நடக்கவேண்டும் என்பதைச் சொல்லும் முற்றிலுமான ஒரு பருவெளி. தி ஸ்கொயரும் அதை ஒத்ததே. நியூயார்க் நகருக்குள் வந்தீர்களென்றால் அங்கு நம் மனிதத்தை நினைவுக்கூர ஒரு சதுரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சதுரத்தின் எல்லைகளைத் தாண்டியும் அந்நகரில் பாதிப்பை அது உண்டாக்கும். ஆனால் தி ஸ்கொயர் (கலை நிர்மாணத்தை) பற்றி நீங்கள் சிந்தித்தீர்கள் என்றால் “இந்த நெறிகளெல்லாம் நிலைத்திருக்கும் ஒரு பருவெளியோ, குறியீட்டு வெளியோ நமக்கு உண்மையில் தேவைதானா? அவை ஸ்கொயருக்கு வெளியே அல்லவா உள்ளன?”  என்ற கேள்வி எழும். அதுதான் தி ஸ்கொயரை பார்த்தவுடன் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று.

கேம்பாகிஸ்: தற்காலக் கலையுலகப்போக்கை பொறுத்தவரை அவை புதிய கேள்விகளைக் கேட்கத் தூண்டுவதில்லை என நீங்கள் முன்பு கூறியிருந்தீர்கள். ஆனாலும் நீங்கள் முன்வைத்த கேள்விகளைக் கேட்பதற்கான சரியான இடமாக அக்கலை உலகைத்தான் ‘தி ஸ்கொயர்’ திரைப்படம் கருதுவதாகத் தெரிகிறது. சமூக நெறிமுறைகள் மற்றும் மனிதனின் நடத்தைகள் குறித்த உங்களின் தேடுதலில் அந்தக் குறிப்பிட்ட கலாச்சாரத்தில் அவ்வப்போது வெளிப்படும் பாசாங்குகளைக் குத்திக்காட்டுவதும் உங்கள் நோக்கமா?

ஆஸ்லண்ட்: தற்காலக் கலையுலகை என்னுடைய திரைப்படத்திற்கான பின்னணியாகப் பயன்படுத்துவதுதான் என்னுடைய எண்ணம். போர்ஸ் மெஜூரில் ஒரு பனிச்சறுக்கு உல்லாச விடுதியை அக்குடும்பத்தில் நடப்பவற்றிற்கான பின்னணியாகப் பயன்படுத்தியதைப்போல. இத்திரைப்படத்தில் என்னுடைய முக்கிய நோக்கம் கலை உலகை விமர்சனம் செய்வதல்ல, மாறாகத் தி ஸ்கொயரின் எண்ணங்களை வைத்து ஒரு உரையாடலை ஏற்படுத்துவதே. ஒரு கலை அருங்காட்சியகத்தில் இந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கமுடியும் என்பது எதார்த்தம்.

ஆனால் இப்படத்துக்கான தயாரிப்புகளின்போது நான் வெவ்வேறு தற்காலக் கலை அருங்காட்சியகங்களுக்குப் பயணப்பட்டேன். நான் பார்த்தவை எல்லாம் ஒன்று போலவே இருந்தன. சுவரில் ஒரு நியான் விளக்குக் குறியீடு, வார்ஹோலின் ஒரு படைப்பு, தரையில் இரண்டு பொருட்கள், ஆனால் அங்கு வருபவர்கள் முழுக்கக் கலையிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கலைக்கும் அருங்காட்சியகச் சுவர்களுக்கு வெளியே உள்ள உலகத்தில் நிகழ்பவைக்கும் எந்தத் தொடர்பையும் என்னால் காண முடியவில்லை. அதனால் ஆம் அதைத்தான் நான் விமர்சனம் செய்ய விரும்பினேன். இன்னும் சொல்லப்போனால் தாக்க விரும்பினேன். 

கேம்பாகிஸ்: இத்திரைப்படம் நிகழ்த்துக்கலையின் ஒரு சமூகவியல் படைப்பாக இரட்டிப்பாகும் என்ற நோக்கில் இதை நீங்கள் அணுகினீர்களா?

ஆஸ்லாண்ட்: குரங்கை போன்ற நிகழ்த்துதலை பொறுத்தவரை அதைத்தான் திட்டவட்டமாகச் சிந்தித்தேன். நீங்கள் சொல்வது சரியாக அந்தக் காட்சியைத்தான் என்று எண்ணுகிறேன். எனக்குச் சமூகவியல் மிகவும் விருப்பம். ஏன் என்றால் நாம் தோற்றாலும் மனிதர்களை மனிதத்தோடு பார்ப்பதற்கான வழி அதில் உள்ளது. தனி மனிதனை நோக்கி விரல் நீட்டி “நீ தவறிழைத்துவிட்டாய்” எனச் சொல்வதல்ல சமூகவியல். நாம் தவறிழைப்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தித்தந்த அமைப்பை அவதானித்து அதிலிருந்து கொஞ்சம் புத்தியைக் கற்றுக் கொள்வதுதற்கான முயற்சியே சமூகவியல். குறிப்பிட்ட தனிநபரின் மேல் கவனத்தைக் குவிக்காமல், மனித போக்குகளைப் பரிவுடன் அவதானிப்பதற்கான வழி. இதை நாம் தற்போது வாழும் காலத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இது அதிகமாகத் தனி மனிதனை பற்றியதாக உள்ளது. விரல்களை நீட்டி, குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. (சிரிக்கிறார்). எனக்கு இது தனிநபரை சரியான கருத்தாக்கத்தில் வைத்து பார்க்காத அமெரிக்கக் கலாச்சாரத்தோடு ரொம்பவும் பொருந்திப்போகிறது. அங்கு யார் வேண்டுமானாலும் அதிபர் ஆகலாம். ஒவ்வொருவரும் அவரவருடைய செயல்களுக்குப் பொறுப்பு என்ற வகையில் அக்கலாச்சாரம் உள்ளது.

கேம்பாகிஸ்: இந்தப் படத்தை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் சமுதாய எதிர்பார்ப்புகளுக்கும், தனி மனித விருப்புகளுக்கும் இடையேயான பதற்றத்தை ஆய்வதில் விருப்பமாக உள்ளது போல் தோன்றுகிறது.

ஆஸ்லண்ட்: இத்திரைப்படத்தின் நோக்கங்கள் என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்க நான் முயற்சித்தால் மீண்டும் ’தி ஸ்கொயர்’ எப்படி இச்சமூகத்தைப் பற்றிய உலகளாவிய கேள்விகளை எழுப்புகிறது மற்றும் என்ன மாதிரியான சமுதயாத்தை நாம் விரும்புகிறோம் என்பதற்கு என்னை இட்டுச்செல்கிறது. இது ஒரு விரிவான தலைப்பு. இந்தக் கதைக்கருவை நான் முதலில் சமுதாய அளவில் அணுக விரும்பினேன் - “இந்தப் பொதுச் செயல்திட்டத்தை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?” - அதே நேரத்தில் இதைத் தனி மனித அளவிலும் நான் அணுக விரும்பினேன். கிளாஸ் பாங்கின் கிறிஸ்டியன் கதாபாத்திரத்தை பல்வேறு அறதடுமாற்றங்களுக்கு இட்டுச் சென்று சவாலுக்கு உட்படுத்தினேன். அதே நேரத்தில் இந்தச் சமூகக் கலை செயல்திட்டத்திலும் அவனை ஈடுபடுத்தினேன். ஏன் என்றால் இது எனக்கே நான் விடுத்துக்கொண்ட சவால். இது போன்ற தருணங்களில் நான் மனித நெறிகளை வழுவ தவறிவிடுவேனா? 

கேம்பாகிஸ்: உங்கள் கருத்தை வைத்துப்பார்த்தோமானால், தி ஸ்கொயர் அதன் உலகப்பார்வையில் மிகுந்த மனிதத்தன்மை கொண்டதாக உள்ளது. அதே நேரத்தில் அந்தக் குரங்கு காட்சியில் கடுமையான மிருகத்தன்மையுடையதாகவும் உள்ளது. அத்தருணத்தில் ஏதேனும் குறிப்பிட்ட சமூக நிகழ்வு அல்லது போக்கை விசாரணை செய்ய விரும்பினீர்களா?

ஆஸ்லட்ண்ட்: நிச்சயமாக... ‘வேடிக்கைப்பார்ப்பவன் விளைவை’ (Bystander Effect) மையமாக வைத்து எடுக்கப்பட்ட அக்காட்சி ஒரு பின்னணி குரல் அறிவிப்போடு தொடங்குகிறது. “நீங்கள் விரைவில் ஒரு வனவிலங்கை எதிர்கொள்ளப்போகிறீர்கள்…” நாம் எல்லோருக்கும் தெரிந்தைப்போல, வேட்டையாடும் உள்ளுணர்வு பலவீனத்தின் மூலம் தூண்டப்படும்.” இது மனிதர்களுக்கும் பொருந்தும். பள்ளியில் சக வகுப்புதோழன் ஒருவன் பலகீனமானவனாகத் தெரிந்தால் அவனை ஒரு கும்பலே குறிவைப்பது உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? மந்தையிலிருந்து ஒருவரை இப்படித் தேர்ந்தெடுப்பது என்பது மிருகக்குணம். நீங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினீர்கள் என்றால் அதை மிருகம் உணர்ந்துவிடும். ஆனால் அசையாமல் மந்தைக்குள் ஒளிந்துக்கொள்ள முயற்சித்தால் வேறு யாரேனும் ஒருவர் இரையாக வாய்ப்புண்டு. அதனால்தான் அச்சப்படுக்கூடிய ஒரு விஷயம் நடைபெறும்போது எதுவும் செய்யாமல் நாம் முடங்கிபோகிறோம். ஏன் என்றால் “என்னை விட்டுவிடு, வேறு யாரையேனும் கொல்” என்று எண்ணுகிறோம்.

இந்நடத்தையைச் சுட்டிக்காட்டுவதற்கு அக்காட்சியின் அமைப்பு மிக எளிதாக இருக்கவேண்டும் என விரும்பினேன். கவுண் மற்றும் டக்ஸிடோ அணிந்துக்கொண்டு அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள புரவலர்கள் அனைவரும் குரங்குபோல் நடிப்பவரை எதிர் கொள்ளவேண்டும்.

இப்படம் கேன்ஸ் போட்டியில் திரையிடப்படுவதை எண்ணி உண்மையிலேயே அகமகிழ்கிறேன். அங்கே மற்றொரு டக்ஸிடோ அணிந்த பார்வையாளர்கள் படத்திலுள்ள கதாபாத்திரங்களின் அனுபவங்களைக் காணும்போது தங்களையே கண்ணாடியில் பார்ப்பது போன்று உணர்வார்கள். (சிரிக்கிறார்) பிறகு குரங்கைப் போல் நடிப்பவர் உள்ளே வருவார். தலைமை ஆணை அடித்து விரட்டுவார். பிறகு இனப்பெருக்கம் செய்யும் நோக்கில் ஒரு பெண்ணை அணுகுவார். (சிரிக்கிறார்) இறுதியில் அங்கிருந்த அனைத்துத் தூய்மை உள்ளம் படைத்த மனிதர்களும் காட்டுமிராண்டித்தனமான மிருகங்களாவார்கள்.

கேம்பாகிஸ்: அக்காட்சி கேன்ஸ் பார்வையாளர்களின் அனுபவத்தோடு தொடர்புடையதாக உள்ளது, படப்படிப்பின்போதே அக்காட்சியின் மீஎதார்த்தத்தை நீங்கள் பரிசீலித்தீர்களா? உதாரணமாகத் திரைப்படத்தைக் கூட்டத்தோடு காண்பதன் மூலம் கிடைக்கும் அனுபவம் மற்றும் தனிநபர் அனுபவம் இரண்டுக்கும் உள்ள வேற்றுமை படைப்பாக்கத்தின் போது உங்கள் எண்ணத்தில் இருந்ததா?

ஆஸ்லண்ட்: ஒருவர் திரைப்படத்தைத் தனியாக அமர்ந்து காண்பது என்ற எண்ணம் எனக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. ஏன் என்றால் அவர்கள் நகைச்சுவையை ஒரே மாதிரி உணரமாட்டார்கள். நீங்கள் மற்றவர்களோடு ஒன்றாக அமர்ந்து காணும்போது அந்த அனுபவம் எப்படி இருக்குமென்றால் “நான் இதற்குச் சிரிக்க அனுமதி உண்டா? ஓ சரி. நான் சிரிக்க வேண்டும்!” அது ஒரு விடுதலை. திரைப்படத்தைத் தனியாகக் காண்பது கடினமானதாகவும், தீவிரமானதாகவும் தெரிகிறது. இது ஒரு முக்கியமான மற்றும் தீவிரமான தலைப்பு என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் இதை உண்மையில் மற்றவர்களை மகிழ்விக்கும் வகையிலும், கட்டற்ற முறையிலும் செய்யவேண்டும் என்றே விரும்பினேன்.

கேம்பாகிஸ்: நீங்கள் நீச்சயமாக அதைச் சாதித்துவிட்டீர்கள்! நான் தொடர்ந்து அந்தக் காட்சிகளைச் சுட்டுவதற்கு காரணம் உள்ளது (சிரிக்கிறார்) ஏன் என்றால் அது ஒரு புதிய அலை காட்சியாக இருந்தது. ஒரே நேரத்தில் புதிரானதாகவும், வேடிக்கையாகவும், அசௌகரியமான காட்சியாகவும் அது வெற்றியடைந்திருக்கிறது. அக்காட்சி முழுவதும் நான் சிரிப்பதா, கவலைப்படுவதா அல்லது அச்சமுறுவதா என்ற திகைப்பிலேயே இருந்தேன். அந்த நிகழ்த்துதலின்போதே படப்படிப்புச் செய்வதுதான் இதைப்போன்ற நீடித்த பதற்றத்தையும், அசௌகரியத்தையும் உருவாக்குவதற்கான ஒரே வழி என்று நினைக்கிறீர்களா?

ஆஸ்லாண்ட்: சிறிதளவு. ஆம். சில வருடங்களுக்கு முன்பு “வங்கியினருகில் ஒரு சம்பவம்”. என்ற குறும்படத்தை எடுத்தேன். அந்தப் படப்பிடிப்புக்கு எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது என நினைக்கிறேன். ஒரு தோல்வியடைந்த வங்கிக்கொள்ளையை நான் நேரில் கண்டேன். அந்தக் கொள்ளை முயற்சியைக் கவனமாக அப்படியே மீட்டுருவாக்கம் செய்ய விரும்பினேன். அது மிகச் சிறிய நிகழ்வு அதே நேரத்தில் உணர்ச்சிகரமானது. ஒரு நிமிடம் துப்பாக்கிகள் காணாமல் ஆனவுடன், அடுத்து நாங்கள் கொள்ளையைப் படம்பிடிக்கப் பயன்படுத்திய செல்போன் கேமராக்களில் போதுமான அளவு ஸூம் செய்யமுடியவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தோம். இது ஒரே நேரத்தில் முழுக்க அபத்தமான, மதிப்பற்ற மற்றும் நாடகத்தன்மையான ஒன்று. ஒரு நிகழ்வு நிகழும்போது சிறந்த விஷயம் என்னவென்றால் அதில் உங்கள் செயல்பாடுகள் வெவ்வேறு படிநிலைகளில் மதிப்பிடப்படாது மாறாக அனைத்தும் ஒரே தளத்தில் உணரப்படும்.

கேம்பாகிஸ்: போர்ஸ் மெஜூர் திரைப்படத்தைக் காட்டிலும் தி ஸ்கொயர் அவல நகைச்சுவையின் பரப்பை அதிகம் புத்தாய்ந்திருக்கிறது என்று சொல்வீர்களா? ஆம் நான் ‘தி ஸ்கொயர்’ கலை நிர்மாணம் குறித்த சலசலப்பை அதிகப்படுத்த செய்தி தொடர்புக்குழு உருவாக்கும் அந்தப் பிரபல காணொளி குறித்துதான் எண்ணுகிறேன்.

ஆஸ்லாண்ட்: இல்லை. நான் போர்ஸ் மெஜூரில் கையாண்ட அதே அணுகுமுறையைத்தான் கையாண்டேன். இப்படத்தின் இருள் நிறைந்த பகுதி என்றால் அது அந்தக் குரங்கை போல் செய்த காட்சிதான் என்று எண்ணுகிறேன். ஆனால் போர்ஸை (மெஜூர்) போல் நான் தி ஸ்கொயர் (திரைப்படம்) அங்கதம் நிறைந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். மேலும் ஸ்வீடனில் ‘கால்க் ஹியூமர்’ என்று ஒன்றை அழைப்போம். அதாவது நீங்கள் தூக்குமேடையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போதும் அதைக் குறித்த பகடியில் ஈடுபடுவது.

கேம்பாகிஸ்: கேலோவ்ஸ் ஹியூமர்? (தூக்குமேடை நகைச்சுவை)

ஆஸ்லாண்ட்: நீங்கள் அப்படித்தான் சொல்வீர்களா? (சிரிக்கிறார்)

கேம்பாகிஸ்: அவல நகைச்சுவை என்பது இயக்குநராக எப்போதும் உங்களுடைய கலை நுண்ணுணர்வின் அங்கமாக இருந்துள்ளதா?

ஆஸ்லாண்ட்: எப்போதும் இல்லை. நீங்கள் என்னுடைய முந்தைய படைப்புகளில் சிலவற்றில் காணலாம். ஆனால் அது கடந்த இரண்டு திரைப்படங்களிலும் அதிகம் இடம்பெற்றுள்ளது.

கேம்பாகிஸ்: ‘தி ஸ்கொயரை’ உங்களுடைய முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது, எது உங்களை எலிசெபத் மாஸ் மற்றும் டோமினிக் வெஸ்ட் உள்ளிட்டவர்களை நடிக்கவைத்து ஹாலிவுட் பரப்புக்குள் துணிந்து நுழைய வைத்தது?

ஆஸ்லாண்ட்: கேன்ஸ் போட்டியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால் கொஞ்சம் தந்திரத்தைக் கையாளவேண்டும். அவர்கள் சிவப்புக் கம்பளத்தில் நடக்க ஏதுவான நபர்களைத்தான் விரும்புகிறார்கள். அதனால் இந்த முகங்களைச் சேர்த்துக்கொள்வது உதவும். கிளேஸ் பார்க்க அழகாக இருப்பவர். நீங்கள் போட்டிக்குள் நுழையவேண்டும் என்றால் அது ஒரு நல்ல விஷயம். அதேதான் எலிசெபத் மற்றும் டோமினிக்கிற்கும். எலிசெபத் தற்போது மிகப்பிரபலம் என்றாலும் நான் என் கதாப்பாத்திரங்களுக்கான கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நடிகர் பிரபலமா இல்லையா என்பது குறித்த எந்த அக்கறையும் என்னிடம் இருக்காது. டோமினிக் கதாபாத்திரத்திற்கு ஒரு ஆங்கிலம் பேசக்கூடிய நடிகரை நடிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கில்லை. ஆனால் அவர் மிகச் சிறப்பாக நடித்ததால் நான் அவரைத் தேர்ந்தெடுக்கவேண்டியதாயிற்று. எலிசெபத்தும் அப்படித்தான். அவள் ஒரு சிறந்த நடிகை. ஒரு காட்சியின் அமைப்பை பயன்படுத்தி முடிந்த அளவு நகைச்சுவையை எப்படி வெளிக்கொணரமுடியும் என்பதில் அவள் கெட்டிக்காரி என்பதையும் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலம் பேசும் நடிகர்களை இயக்கும்போது சில நுட்பமான விஷயங்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் எனக்கிருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்த நான் நம்பிக்கையாக உணர்கிறேன். அதனால் என்னுடைய அடுத்தப் படம் முழுக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

கேம்பாகிஸ்: உங்களுடைய அத்திரைப்படம் குறித்து நீங்கள் கொஞ்சம் பேச முடியுமா? அது இப்போது எழுத்து நிலையில் உள்ளதா?

ஆஸ்லாண்ட்: ஆம். பிறகு அதைப் பற்றிப் பேசுவதென்பது வேடிக்கையாக இருக்கும். அதன் பெயர் ‘துயரத்தின் முக்கோணம்’ (Triangle of Sadness) மன அழுத்ததால் உங்கள் புருவங்களுக்கிடையே ஏற்படும் சுறுக்கத்தையும் அப்படிச் சொல்லலாம். ஆனால் அதை எப்போதும் போட்டோக்ஸ் (தோள் சுருக்கத்தைச் சரி செய்யும் ஊசி) கொண்டு சரி செய்துவிடலாம். (சிரிக்கிறார்) இதன் முக்கியக் கதாப்பாத்திரம் ஒரு ஆண் விளம்பர நடிகன். ஏன் என்றால் அழகு என்பது பொதுவாகச் சுவாரசியமானது. உங்களிடம் பணம் இல்லையென்றாலும், கல்வி அல்லது திறமை இல்லையென்றாலும், அழகு உங்களைச் சமுதாயத்தில் முன்னேற்றி கூட்டிச் செல்லும். முக்கியமாகப் பொருளாதார ரீதியாக.

கேம்பாகிஸ்: பல வழிகளில் அழகு என்பது ஒரு பண்டம்.

ஆஸ்லாண்ட்: சரியாகச் சொன்னீர்கள். சமூக அல்லது பொருளாதார நிலையைத் தாண்டி யாருக்கு வேண்டுமானாலும் அந்த மரபியல் லாட்டரி விழலாம் என்பதில் உலகில் அத்தனை அநீதிகளுக்கு மத்தியிலும் ஒரு உலகளாவிய நியாயம் உள்ளது. அதனால் என்னுடைய முக்கியக் கதாபாத்திரம் சுலபமாக ஒரு கார் பழுது நீக்குபவனாக ஆகி இருக்கக்கூடியவன் அவனுடைய தோற்றத்தினால் ஒரு மிகப் பெரிய பேஷன் நிறுவனத்தின் முகமாக மாறுகின்றான். ஆனால் அவன் தலை வழுக்கை விழத் தொடங்குகிறது. அப்படியென்றால் அவனுடைய பொருளாதார மதிப்பையும் அதனால் அவனுடைய தன்னம்பிக்கையும் இழக்கிறான். அவனுக்கான சந்தையை மீட்க அவனுடைய முகவர் ஒரு பிரபலமான பெண் தோழியுடன் அவனை இணையச் சொல்கிறான். பிரச்சினை என்னவென்றால் அவன் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன் மற்றும் அவன் காதலில் இருக்க விரும்புகிறான். (சிரிக்கிறார்.) நமக்குப் பழக்கப்பட்டுள்ள பாலினப் பாத்திரங்களைத் தலைக்கீழாக்கி கலவி, பணம் மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கு இடையேயான உறவை புத்தாய்வதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.

நம்முடைய ஆண்வழி சமுதாயத்தில் உதாரணமாக ஒரு அழகான இளம் பெண்ணுடன் 55 வயதுடைய ஒரு ஆண் இருப்பது இயல்பான ஒன்று. நமக்கு இந்தப் படிமத்தின் மீது எந்தப் புகாரும் இல்லை. ஏன் என்றால் நாம் இந்த அமைப்பை புரிந்துக்கொள்கிறோம். ஆனால் நீங்கள் திடீரென்று பெண்வழி சமூகத்திற்கு மாற்றப்பட்டால் என்ன நடக்கும்? நான் என்னுடைய ஆண் விளம்பரப்படநடிகன் ஒரு 55 வயது துப்புரவு செய்யும் பெண்ணுடன் காதலில் விழவும், பிறகு சமூகத்தின் ஏணியில் மேலேறியவுடன் அப்பெண்ணின் போக்கு எப்படி மாறுகிறது என்பதையும் பார்க்க விரும்புகிறேன். இந்தக் கதையமைப்பு என்னைக் கிளர்ச்சியுறச் செய்துள்ளது. (சிரிக்கிறார்) இத்திரைப்படம் கலவியின் பொருளாதாரத்தோடு காதல் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த நம் எண்ணங்களுக்கான சவாலாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.

* துயரத்தின் முக்கோணம் கடந்த ஆண்டு வெளியாகி ஆஸ்லண்டிற்கு மேலும் ஒரு தங்கப்பனையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. மேலும் ஆஸ்கர், பாப்டா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளுக்குத் தேர்வானது. அத்துடன் சமீபத்தில் நமது தலைநகர் சென்னையிலுள்ள திரையரங்குகளிலும் வெளியாகி ஓரிரு வாரங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer