நஞ்சிடப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்

காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ரெங்கநாயகி

பகிரு

மொழியாக்கக் கதை

நேப்பில்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் செனோரா புரூடென்சியா லினேரோ கவனித்தது நேப்பில்ஸூம் ரியோவாச்சா துறைமுகத்தில் வீசுவது போல அதே வாடையைக் கொண்டிருந்ததைத்தான். அவள் யாரிடமும் சொல்லவில்லை, வாஸ்தவமாக பயணிகளுக்கான பழைய பெருங்கப்பலில் நிரம்பி வழிந்த, போருக்குப் பின் முதன் முறையாக போனர்ஸ் அயர்ஸிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த இத்தாலியர்கள் எவரும் இதைப்புரிந்துகொண்டிருக்கமுடியாது. எப்படியாயினும், 72 வயதில், பேரலைகள் வீசும் கடலில் பதினெட்டு நாள் தொலைவில் இருக்கும் தன் மக்களையும், வீட்டையும் விட்டு வந்திருந்த அவள் சற்றே குறைவான பயத்தையும், குறைவான தனிமையையும், தொலைவான உணர்வையும் உணர்ந்தாள்.

புலர்காலைப் பொழுதென்பதால் கரையில் இருந்த விளக்குகள் தெளிவாகத் தென்பட்டன. பயணிகள் கரையில் தங்களுக்கென்று எந்த சரியான இடம் அமையும் என்ற நிச்சயமற்ற தன்மையால் கனத்த இதயங்களுடனும், கடந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒன்று மட்டுமே கப்பலில் செய்த முழுப்பயணத்திலும் ஒரு உண்மைத்தன்மை கொண்டது என்ற உணர்வோடும், வழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்து உடைகள் அணிந்துகொண்டனர்.

ஞாயிறு கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட ஒரு சிலரில் செனோரா புரூடென்சியா லினேரோவும் ஒருத்தி. இதற்கு முன் அவள் அணிந்திருந்த உடைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட, சற்று துக்கம் அனுஷ்டிப்பதான வகையில் உடையணிந்து அந்தக் கப்பலைச் சுற்றி நடந்து வந்த அவள், இன்று ஒரு பழுப்புநிற, முரட்டுத் துணியில், கயிற்றில் கோர்க்கப்பட்ட புனித பிரான்ஸிஸ் சின்னத்துடனிருந்த தளர் அங்கி அணிந்திருந்தாள்.

மேலும், ஒரு புனிதப் பயணியினுடையதைப் போலன்றி மிகப் புதியதாய் இருந்த, முரட்டுத் தோலால் ஆன செருப்புகளை அணிந்திருந்தாள். ஏதோ முன் காணிக்கை செலுத்துவதுபோல, ரோம் நகர மாவட்ட சமய முதல்வரை சந்திக்க கடவுள் அவளை ஆசிர்வதிப்பாரெனில், இனிவரும் வாழ்நாட்களில் தன் தகுதிக்கேற்ற உடை அணிவதாக கடவுளிடம் அவள் உறுதி சொல்லியிருந்தாள்.

மேலும், ஏற்கனவே அந்த ஆசிர்வாதம் அவளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவே கருதினாள், கரீபியக்கடல் புயல்களை தாங்கிக்கொள்ள ஏதுவான தைரியத்தை அவளுக்கு ஊட்டியதற்காக. கூட்டுப் பிரார்த்தனை முடிந்ததும், பரிசுத்த ஆவிக்கு நன்றியறிதலுடன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.

மற்றும், காற்றடிக்கும் ரியோ வாச்சாவின் இரவுப் பொழுதில் இவளைப் பற்றி கனவு கண்டுகொண்டிருக்கும் தன் ஒன்பது பிள்ளைகள், மற்றும் பதினான்கு பேரக் குழந்தைகள் ஆகிய ஒவ்வொருவருக்குமாகப் பிரார்த்தனை செய்தாள்.

காலை உணவிற்குப்பின் அவள் கப்பல் தளத்திற்குச் சென்றபோது கப்பல் வாழ்க்கை மாறி இருந்தது. நடன அரங்கத்தில் அந்த்தீலிய மாயச் சந்தையில் இத்தாலியர்கள் வாங்கியிருந்த, சுற்றுலாப் பயணிகளுக்கான பலவிதமான பகட்டுப் பொருட்களும், சிறு அணிகலன்களுடன் மூட்டை முடிச்சுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், அந்த விசேஷ மது அருந்தும் கூடத்தின் மேல் ஒரு வார்ப்பு இரும்புக் கூண்டினுள் பெர்னாம்பூக்கோ பிரதேசத்தின் மெக்காக் குரங்கு ஒன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அது ஒரு மின்னும் காலைப் பொழுதாக இருந்தது. நித்திய தினசரி வெளிப்படுகாட்சி போன்ற ஒளியுடன், போருக்குப் பிறகு வந்த முன்மாதிரியான கோடை ஞாயிறுகளில் ஒன்றாகும் அது. அந்த மிகப் பெரிய கப்பல், தெள்ளத்தெளிவான, நீரில் ஒரு நோயாளி சிரமப்பட்டு சுவாசிப்பதுபோல அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. ‘அன்ஜோ’ கோமான்களின் இருண்ட கோட்டை, தொடுவானின் மேல் தோன்ற ஆரம்பித்தது.

ஆனால் கப்பல் தளத்தின் மீதேறி வந்திருந்த பயணிகள் பரிச்சயமான இடங்களை கண்டுவிட்டதுபோல நினைத்து கவனத்துடன் அவற்றைப் பார்க்காமல் சுட்டிக்காட்டி, சந்தோஷத்தில் தெற்கத்திய வட்டார வழக்குமொழியில் சந்தோஷக் கூச்சலிட்டனர். கப்பலில் பல அன்பான, முதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொண்ட, நடனமாடும் பெற்றோரின் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொண்ட, முதன்மை அதிகாரியின் ஆடையின் ஒரு பட்டனைக் கூட தைத்துக் கொடுத்த செனோரா புரூடென்சியா லினேரோ ஆச்சரியப்படும் வகையில் இப்போது அவர்கள் அனைவரும் மிகத் தொலைவாகவும், மாறுதல் அடைந்தும் இருப்பது ஆச்சரியமளித்தது. அந்த வெப்ப மண்டலத்தின் மூச்சுத் திணற அடிக்கும் உஷ்ணத்தில் வீட்டு நினைவு தந்த அவளது துவக்க ஏக்கத்தைத் தாங்கிக்கொள்ள அனுமதித்திருந்த அந்த சமூக உணர்வு, மனித நேயம், பேரலை வீசும் கடல்களின் சாஸ்வதமான அன்பானது அந்தத் துறைமுகம் பார்வைக்கு வந்தபோது மறைந்து போயிற்று.

இத்தாலியர்களின் சொல்சரளமான தன்மைக்கு பரிச்சயம் அற்ற செனோரா புரூடென்சியா லினேரோ, பிரச்சினை அவர்கள் மனங்களிலன்று என்றும் மற்றும் அவளிடமே என்றும் நினைத்தாள், ஏனெனில், திரும்பி வந்துகொண்டிருந்த ஒரு கூட்டத்தில் போய்க்கொண்டிருந்த ஒரேயொரு நபர் அவள் மட்டும்தான். முதன்முதலாய் ஓர் அந்நியள் என்ற கூர் வலியில் வேதனையடைந்து ஒவ்வொரு கடற் பயணமும் இதுபோலத்தான் இருக்கவேண்டும் என்று அவள் நினைத்தாள்.

பாரம்தாங்கி குறுக்கு கட்டைகள் மேல் சாய்ந்தபடி நீர் ஆழங்களில் கண் பார்வைக்கு சான்றடையாளம் இன்றி முடிந்துபோன பல உலகங்களைப் பற்றி எண்ணியவாறிருந்தாள். அவளருகில் நின்றுகொண்டிருந்த மிக அழகிய இளம்பெண் திடீரென ஒரு பய அலறலுடன் அவளைத் திடுக்குறச் செய்தாள்.

“மாமாமியா” அவள் கத்தினாள் கீழே சுட்டிக்காட்டி.

“பார் அங்கே” அது நீரில் மூழ்கி இறந்துபோன ஒரு மனிதன். முகம் மேலே தெரியும்படி அவன் அலையில் மிதப்பதைப் பார்த்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ. அரிதான ஒரு வினோதம் இயற்கையிலேயே அமைந்ததான, ஒரு முதிர்ந்த, வழுக்கைத் தலை மனிதன், விடியல் நேர வானத்தின் நிறத்தை ஒத்த திறந்த சந்தோஷக் கண்களுடன் இருந்தான்.

மாலை நேரத்திற்குரிய முழு ஆடையும் அணிந்திருந்தான். பூ வேலைப்பாடு செய்த, கைகள் இல்லாத உள்சட்டை, வார்னிஷ் பளபளப்பு கொண்ட தோலால் ஆன ஷூக்கள், மேலும், மேல் சட்டையின் மார்புப்பகுதியின் பின்மடிப்புப்பகுதியில் ஒரு புத்தம் புதிய மஞ்சள் நிற கார்டனியா மலர் ஒன்று. வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்ட சிறிய சதுர வடிவ பரிசுப் பெட்டியை வலது கையில் பிடித்திருந்தான், மேலும், வெளுத்த, இறுகிய அவன் விரல்கள், இறக்கும் தறுவாயில் அவனால் பிடித்துக்கொள்ள ஏதுவாய் இருந்த கப்பலின் முன்புறப்பகுதியை இறுகப்பற்றியிருந்தன.

“திருமண விருந்தொன்றிலிருந்து அவன் தவறி விழுந்திருக்கவேண்டும்”, அந்தக் கப்பல் அதிகாரிகளுள் ஒருவர் கூறினார்.

“கோடை காலங்களில், இந்த நீர்நிலைகளில் இது போன்று அடிக்கடி நிகழ்கிறது” அது ஒரு க்ஷணநேரக் காட்சி, ஏனெனில், அப்பொழுதுதான் அவர்கள் வளைகுடாவிற்குள் நுழைந்துகொண்டிருந்தனர், மேலும், சற்று துயரம் குறைந்த சில விஷயங்கள் அந்தப் பயணிகளின் கவனத்தைத் திசை திருப்பின.

ஆனால் செனோரா புரூடென்சியா லினேரோ அந்த மூழ்கி இறந்த மனிதனைப் பற்றித் தொடர்ந்து எண்ணிவாறே இருந்தாள். மூழ்கிய, பரிதாபமான அந்த மனிதனின் நீண்ட பின்புறப் பகுதிகள்கொண்ட இறுக்கமான ஜாக்கெட், கப்பல் சென்ற பின், நீரில்விட்டுச் செல்லும் தடம்போல, சிற்றலை ஏற்படுத்தியது. துறைமுகத்திற்குள் கப்பல் மிதந்து வந்த உடனேயே, ஒரு பழைய சிறு நீராவிப்படகு வெளியே வந்தது.

போரால் சிதைவுற்றிருந்த எண்ணற்ற பல ராணுவக் கலங்களின் ஊடே, அந்த சிதைவுத் துருக்களை கடந்து தன் பாதைளை ஏற்படுத்திக் கொண்டு அந்தக் கப்பல் சென்றபோது, அந்த நீர் எண்ணெய்யாக மாறிக்கொண்டிருந்தது, மேலும், அந்த வெப்பம் ரியோவாச்சாவில் பிற்பகல் இரண்டு மணிக்கு நிலவும் வெப்பத்தைவிட ஆக்ரோஷமானதாய் மாறியது.

அந்தக் குறுகிய நீர்ப்பாதையின் மறுபுறத்தில், பதினோரு மணி சூரியனில் மின்னிய அந்த நகரம் அதன் எல்லா பொய்த்தோற்றம் கொண்ட அரண்மனைகளும், புராதன, அருவெறுக்கத்தக்க, வர்ணமடிக்கப்பட்ட குடிசைகளும் அந்தக் குன்றுகளின் மேல் ஒன்று சேர்ந்து பார்வைக்கு வந்தன. அப்பொழுதுதான், தாங்க முடியாத ஒரு துர்வாடை, கலங்கடிக்கப்பட்ட அடிப்பகுதியிலிருந்து எழும்பியது.

செனோரா புரூடென்சியா லினேரோ அதை அவள் வீட்டின் பின்முற்றத்தினின்று வரும் அழுகும் நண்டுகளின் வீச்சத்தை வைத்து அடையாளம் கண்டாள். திட்டமிட்ட நடப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே, பயணிகள் சந்தோஷத்தை மிகுந்த அளவில் வெளிப்படுத்தி, அவர்களது உறவினர்களை அடையாளம் கண்டனர் அந்தக் கப்பல் தள மேடை மேலே, அத்தனை அமளியான கூட்டத்திலே, பெரும்பான்மையோர் வயோதிகம் அடைந்த முதிர் பெண்கள். அதில் கணவனை இழந்தவர்கள் துக்கம் அனுஷ்டிப்பதற்கான அவர்களின் உடைகளில், பிரமிக்க வைக்கும் மார்புகளுடன், மூச்சுத் திணறிக்கொண்டிருந்தனர்.

மேலும் உலகிலேயே மிக அழகான, அதிகப்படியான குழந்தைகளுடன், மனைவிகளின் பின்னால், அந்த உஷ்ணத்திலும் கடுமையான ‘நோட்டரி’கள் போல உடையணிந்த சிறிய, ஊக்கம் தளராத, அழிவற்ற வகையான கணவர்கள் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தனர். இந்தத் கேளிக்கை கொண்டாட்டக் குழப்பத்தின் மத்தியில், ஆறுதல்படுத்த இயலாத ஒரு முகபாவத்துடன் ஒரு வயோதிகன், பிச்சைக்காரன் அணியும் மேற்கோட்டு ஒன்றை அணிந்து, சிறு கோழிக்குஞ்சுகளை ஏகமாய் அவன் பாக்கெட்டிலிருந்து இரு கைகளாலும் வெளியே இழுத்தான்.

பித்துக்குளியாய் அலைந்துகொண்டும், கீச்சிட்டுக் கொண்டும் ஒரு க்ஷணத்தில் அவை அந்தக் கப்பல்துறை மேடை முழுவதையும் நிறைத்தன. மேலும், இந்த மாயாஜால வித்தையின் பால் கவனமற்ற அந்தக் கூட்டம் மிதித்துச் சென்றபோதும் பல உயிருடனும், ஓடியவாறும் இருந்தன, மாய வித்தையில் தோன்றியவை என்ற காரணத்தால்தான். அந்த மந்திரவாதி அவன் தொப்பியை தலை கீழாகத் திருப்பித் தரையில் வைத்தான், ஆனால் அந்த கப்பலின் கைப்பிடிக்கிராதி பக்கமிருந்த எவருமே அவனை நோக்கி தர்ம நாணயம் ஒன்றைக்கூட வீசி எறியவில்லை. மரியாதைக்குரிய அவளுக்காகவே அந்த வியத்தகு காட்சி படைக்கப்பட்டது போல் தோன்றியதில் ஈர்க்கப்பட்டவளாய் அவள் மட்டுமே அதை மெச்சினாள்.

ஒரு படகிலிருந்து மற்றொரு படகிற்குச் செல்லத் தோதாக அமைக்கப்பட்ட பலகைப் பாலம் கீழிறக்கப்பட்ட மிகச்சரியான தருணத்தையும் ஒரு கடற்கொள்ளைக்காரனின் ஊளையிடும் இயங்கு விசைத் தாக்குதலுடன் ஒரு மனிதப் பனிச்சரிவு கப்பலை முற்றுகை இட்டதையும் அவள் அறியவில்லை. கோடையில் அழுகிய வெங்காய நாற்றம் கொண்ட அத்தனைக் குடும்பங்களின் காட்டுத்தனமான கொண்டாட்டத்தினால் திகைத்துப் போனாள். மூட்டை முடிச்சுகளைத் தூக்குவதில் அடிதடியில் இறங்கிய சுமைத்தூக்கிகளால் உந்தித் தள்ளப்பட்டவள், அந்தக் கப்பல் துறையின் மேல் அந்தச் சின்னஞ்சிறு பறவைக் குஞ்சுகளுக்கு ஏற்பட்ட கெடுதியான, இழிவான இறப்பு தருவித்த அச்சத்தை உணர்ந்தாள்.

இது நடந்தது அவள் அவளது வர்ணம் பூசப்பட்ட தகர மூலைகள் கொண்ட மர ட்ரங்குப்பெட்டியின்மேல் அமர்ந்துகொண்டபோதுதான், மேலும் கலங்காது அங்கேயே இருந்தவள், நச்சு வட்டப் பிரார்த்தனை ஸ்லோகங்களை ஜபித்துக் கொண்டிருந்தாள். இதுபோன்ற மத நம்பிக்கை அற்ற இந்த நாட்டினரால் வரும் அபாயம் மற்றும் சபலம், இவற்றிற்கு எதிராக. அந்தத் திடீர்ப் பிரளயம் கடந்த பின்னர் அந்த முதன்மை அதிகாரி அவளைக் கண்டார். மேலும், அவள் ஒருத்தி மட்டுமே யாருமற்ற அந்தப் பயணிகளின் நடன அறையில் இருந்தாள்.

“இங்கே இப்போது யாரும் இருக்கலாகாது எனக் கருதப்படுகிறது” அந்த அதிகாரி அவளிடம் ஒருவித அன்புப் பாங்குடன் கூறினார்,

“ஏதாவது உதவி நான் உங்களுக்குச் செய்ய முடியுமா?”

“நான் தூதரக பிரதிநிதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளது’’ என்றாள் அவள்.

அது உண்மைதான். அவள் கடல் பிரயாணம் மேற்கொண்ட இரண்டு நாட்களுக்கு முன்பு, அவளது மூத்த மகன் நேப்பில்ஸில் இருந்த அவனது தூதரக நண்பனுக்கு ஒரு தந்தி கொடுத்திருந்தான், அவன் தாயாரை துறைமுகத்தில் சந்தித்து, தொடர்ந்து அவள் ரோம் நகர் செல்வதற்குரிய ஏற்பாடுகள் அனைத்திலும் உதவி செய்யுமாறு கேட்டிருந்தான். அந்தக் கப்பலின் பெயரையும் நண்பனிடம் தந்திருந்தான். மேலும், அவன் தாயார் கரையை அடைந்ததும் புனித பிரான்ஸிஸின் உடை அணிந்திருப்பாளாதலால் அவளை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்றும் கூறியிருந்தான்.

இந்த ஏற்பாடுகள் குறித்து அவள் சமரசம் அற்றவளாயிருந்தாள். அந்த மாலுமிக் குழுவின் மதிய உணவு நேரம் நெருங்கியபோதிலும், மேஜை நாற்காலிகளை ஏற்கனவே தயாராக போட்டுவிட்டு, அந்தத் தளங்களை வாளித் தண்ணீரால் கழுவி விட்டுக்கொண்டிருந்தனர் என்றபோதிலும், அந்த முதன்மை அதிகாரி இவளை அவள் போக்கில் சிறிது நேரம் காத்திருக்க அனுமதித்தார். அது நனைந்துவிடக் கூடாதென்பதால் அவள் ட்ரங்குப் பெட்டியை பலமுறை அவர்கள் நகர்த்த வேண்டி இருந்தது, ஆனால் அவள் தன் முகபாவத்தை மாற்றிக்கொள்ளாமல் இடத்தை மாற்றிக்கொண்டிருந்தாள். அங்கிருந்த உயிர் காக்கும் தோணிகளுக்கு மத்தியில், முழு வெய்யிலில் அவள் ஜபம் செய்வதற்கு தடங்கல் ஏற்படுத்தாது அவர்கள் அந்தப் பொழுதுபோக்கு அறைகளின் வெளியே அவளைக் கொண்டுவந்து அமரச் செய்தனர்.

பாவமன்னிப்புக்கான உடையில் வியர்வையில் மூழ்கியவாறு, அந்த ஜபமாலையை உருட்டிக்கொண்டு, எந்த எதிர்பார்ப்புமின்றி இருந்த அவளை அங்கேதான் மீண்டும் ஒருமுறை அந்த முதன்மை அதிகாரி இரண்டு மணிக்கு சற்று முன்பு கண்டார். ஏனெனில், மிகவும் அச்சத்துடனும் வருத்தத்துடனும் இருந்தவள் அழமுடியாது என்ற பட்சத்தில் இதை மட்டுமே செய்ய முடிந்தது.

“இப்படி தொடர்ந்து ஜபித்துக்கொண்டிருப்பதால் உங்களுக்குப் பிரயோசனமில்லை,” அந்த அதிகாரி முந்தைய அந்த அன்புப்பாங்கின்றி கூறினார்:

“ஆகஸ்ட்டில் கடவுள் கூட விடுமுறையில் சென்றுவிடுகிறார்.” வருடத்தின் இந்தப் பருவத்தில் பாதி இத்தாலி கடற்கரையில்தான் இருக்கும், எல்லா நாட்களையும்விட குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் என்று விளக்கினார் அவர். எல்லா சாத்தியக் கூறுகளின்படி அந்தத் தூதரக பிரதிநிதி விடுமுறையில் இல்லை என்றும் பொறுப்புமிக்க அவரது பொறுப்புகளின் தன்மைப்படி கணித்தாலும், திங்கட்கிழமைக்கு முன்பே அந்த அலுவலகத்தைத் திறக்கமாட்டார் என்பது நிச்சயம்.

ஒரேயொரு நியாயமான விஷயம் என்னவென்றால் ஒரு ஹோட்டலுக்குச் சென்று ஓர் இரவுக்குரிய நல்ல தூக்கம் பெறுவதுதான். அந்த எண்கள் தொலைபேசி புத்தகத்திலிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தத் தூதரகத்திற்கு மறுநாள் தொலைபேசியில் தொடர்புகொள்வதுமே. அவரது நியாயமான பேச்சை ஒப்புக்கொள்வதைத் தவிர செனோரா புரூடென்சியா லினேரோவிற்கு வேறு வழி இருக்கவில்லை, மேலும் அந்த அதிகாரி புலம் பெயர்தலுக்காகவும், சுங்கவரி செலுத்துவதற்காகவும், நாணய மாற்றுதலுக்கான அத்தனை நடைமுறைகளிலும் உதவி செய்தார்.

பிறகு, தெளிவற்ற வழிகாட்டுதல்களுடன் அவள் ஒரு கௌரவமான ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்படவேண்டும் என்று அவளை ஒரு டாக்ஸியில் அமர்த்தினார். ஒரு சவ ஊர்தியின் தடயத்துடன் அந்தத் தளர்ச்சியுற்ற டாக்ஸி, யாருமற்ற தெருக்களில் தள்ளாடித்தடுமாறிச் சென்றது. தெருக்களின் நடுவில் தொங்கிக்கொண்டிருந்த துணி வரிசைகள் மட்டும் காணப்பட்ட அமானுஷ்ய நகரத்தில் அவளும் அந்த ஓட்டுநர் மட்டுமே உயிருள்ள ஜந்துக்கள் என்று ஒரு கணம் நினைத்தாள் அவள். ஆயினும் கட்டுக்கடங்கா உணர்ச்சியுடன், அதிகம் பேசும் ஒரு மனிதனுக்கு, ஒரு பாவப்பட்ட, தனித்து விடப்பட்ட, போப்பாண்டவரைக் காண கடல் ஆபத்துகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்ட ஒரு பெண்ணுக்கு கெடுதல் செய்யுமளவு நேரம் கிடைக்காது என்றும் நினைத்தாள். தெருவின் புதிர்ச்சிக்கலின் முடிவில் அவள் மறுபடியும் கடலைப் பார்த்தாள்.

‘பளிச்’சென்று வர்ணம் பூசப்பட்டிருந்த, ஏகப்பட்ட, சிறுசிறு ஹோட்டல்கள் காணப்பட்ட, மனிதர்களற்ற, கொதித்துக்கொண்டிருந்த ஒரு கடற்கரை வழியே மறுபடியும் அந்த டாக்ஸி சாய்ந்துகொண்டே தொடர்ந்து சென்றது. இவைகளில் ஒன்றின் அருகிலும் அது நிற்கவில்லை. ஆனால் கொஞ்சம் ஆடம்பரம் குறைவாயிருந்த ஒரு ஹோட்டலுக்கு நேராகச் சென்றது. ஒரு பொதுத் தோட்டத்தினுள், பெரிய தென்னை மரங்கள், பச்சைநிற பெஞ்சுகள் ஆகியவற்றின் நடுவில் அமைந்திருந்தது அது. நடைபாதை பக்கவாட்டு நிழலில் அந்த ட்ரங்குப் பெட்டியை வைத்தான் அந்த டிரைவர்.

பிறகு செனோரா புரூடென்சியா லினேரோவின் சந்தேக மனோபாவத்தைப் புரிந்துகொண்டவன், இதுதான் நேப்பில்ஸ் நகரில் உள்ள மிக கௌரவமான ஹோட்டல் என்று உறுதி செய்தான். ஒரு அழகான, கருணை உள்ளம் கொண்ட சுமைக்கூலியாள் அந்தப் பெட்டியை தன் தோளில் தூக்கிக்கொண்டு அவளைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான். இரும்புக் கம்பி வேலைப்பாடுகள் அமைந்த, படிதாங்கு அமைப்புக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டுக்கு படிக்கட்டு வழியாக நடத்திச் சென்றான். பிறகு உச்சஸ்தாயி குரலில் ஒரு அபாயமூட்டும் தீர்மானத்துடன் ‘புச்சினி’யின் ஓப்பரா பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தான். ஒரு பெருமரியாதைக்குரிய கட்டிடமாக, புதுப்பிக்கப்பட்ட அதன் ஒன்பது தளங்களில் ஒவ்வொன்றிலும் வேறு வேறு ஹோட்டலுடன் அமைந்திருந்தது அது. உடனே ஒருவித மாயத்தோற்றத்தில், செனோரா புரூடென்சியா லினேரோவிற்கு, எதிரொளிக்கும் படியான சலவைக்கல் படிக்கட்டின் நடுவில் மேலேறிக்கொண்டிருக்கும் ஒரு கோழிக் கூண்டில்தான் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது: ஒரு க்ஷணநேரத்தோற்றத்தில், கிழிந்த உள்ளாடைகளுடனும், புளிப்பு ஏப்பம் விட்டுக்கொண்டு அத்யந்தமான சூழ்நிலையில் இருந்த மனிதர்களைத் தெரியப்படுத்திய வீடுகள் கண்ணில் பட்டன. மூன்றாம் தளத்தில் அந்த லிப்ட் ஒரு குலுக்கலுடன் நின்றது.

அதன் பின்னரே அந்தக் சுமைக் கூலியாள் பாடுவதை நிறுத்திவிட்டு, அந்தக் கதவின் தள்ளக்கூடிய சாய்சதுரங்களைத் திறந்தான். பிறகு, தலை சாய்த்து, கௌரவமான ஒரு வணக்கத்துடன் செனோரா புரூடென்சியா லினேரோவிடம் அவளுக்குரிய தங்கும் இடம் வந்துவிட்டதாக அறிவித்தான். பார்வையாளர்கள் பயன்படுத்தும் அந்தப் பெரிய அறையில், இடையே வண்ணக் கண்ணாடி சொருகப்பட்ட, மரத்தாலான கவுண்ட்டரின் பின்னால் தளர்ச்சியுற்ற ஒரு விடலைப் பையனையும் செம்புப்பானைகளில் நிழலில் வளர் செடிகளையும் பார்த்தாள். அவளது குட்டிப்பேரனின் அதே மென்மையான சுருட்டைத் தலைமயிர் கொண்டிருந்தான் அவன்.

வெண்கல உலோகத் தகட்டில் செதுக்கப்பட்ட எழுத்துக்களுடனான அந்த ஹோட்டலின் பெயர் அவளுக்குப் பிடித்திருந்தது, மேலும், அந்த கார்பாலிக் அமிலத்தின் வாடையும், தொங்கவிடப்பட்டிருந்த பெரணிச் செடிகளும், அந்த அமைதியும், சுவர் ஒப்பனைத்தாளின் மேலிருந்த அந்த பொன்னிறமான லில்லிமலர் சின்னமும் அவளுக்குப் பிடித்திருந்தன. பிறகு அவள் லிப்டுக்கு வெளியே காலடி வைத்து வெளியே வந்தாள். அவள் இதயம் அமிழ்ந்தது.

ஒரு ஆங்கிலேய சுற்றுலாப் பயணக் குழுவினர் ஒரு நீள வரிசை சாய்வு நாற்காலிகளில், குறுங்காற்சட்டை அணிந்து, கடற்கரையில் நடப்பதற்கு ஏதுவான செருப்புகள் அணிந்து குட்டித் தூக்கத்தில் இருந்தனர்: அவர்கள் பதினேழு பேரும் ஒரு ஒத்திசைவான ஒழுங்கில் அமர்ந்திருந்தனர், ஏதோ ஒரே மனிதனே பலமுறை அந்த அறையின் நிலைக் கண்ணாடிகளில் திரும்பத் திரும்ப பலமுறை காட்சியளிப்பதுபோல. ஒருவரிடமிருந்து மற்றொருவரை வித்தியாசப்படுத்திடாது, ஒரே பார்வையில் அவர்களைப் பார்த்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ, மேலும் அவள் காண முடிந்ததெல்லாம், அந்த நீண்ட வரிசையில், ஒரு கசாப்புக் கடையில் கொக்கியில் தொங்கிக் கொண்டிருக்கும் பன்றி இறைச்சிப் பாளங்கள் போலத் தோன்றிய அடர்சிவப்பு நிற முழங்கால்களை மட்டுமே. கவுண்ட்டரை நோக்கி மேலும் ஒரு அடிகூட அவள் எடுத்துவைக்கவில்லை. அந்த லிப்டுக்குள் பெரும் பீதியுடன் பின்வாங்கினாள்.

“நாம் வேறு ஒரு தளத்திற்குச் செல்லலாம்” அவள் சொன்னாள். “சாப்பாட்டு அறை உள்ள ஒரே தளம் இதுதான், சினோரா” அந்தக் சுமைக்கூலியாள் சொன்னான். “அது ஒரு பொருட்டில்லை” என்றாள் அவள். சரி என்பதுபோல ஜாடை செய்த அந்தச் சுமைக்கூலியாள், லிப்டை மூடிவிட்டு, ஹோட்டலின் ஐந்தாம் தளம் வந்து சேரும்வரை அந்தப் பாட்டின் மீதிப் பகுதியைப் பாடினான். அங்கிருந்த ஒவ்வொன்றும் சற்று தளர்ந்த, கண்டிப்பற்ற தன்மை கொண்டதுபோலத் தோன்றியது. அதன் உரிமையாளர் ஸ்பிரிங் போன்ற ஒரு தலைமைப் பெண். அவள் ஸ்பானிய மொழியில் சரளமாகப் பேசினாள். மேலும், அந்த பார்வையாளர்களுக்கான பெரிய அறையில், சாய்வு நாற்காலிகளில் யாரும் இங்கே பகல் தூக்கம் கொண்டிருக்கவில்லை.

சாப்பாட்டு அறை என்பதே உண்மையில் அங்கே இல்லை, ஆனால் அந்த ஹோட்டல், அருகிலிருந்த உணவகத்தில் இருந்து குறைந்தவிலையில் விருந்தாளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்கிறது என்பதாலும், அந்த அறையில் அடர்சிவப்பு நிற முழங்காலுடன் எந்த ஒரு ஆங்கிலேயனும் உறங்கிக்கொண்டிருக்கவில்லை என்ற ஒரு விடுதலை உணர்வினாலும், அதே அளவில் அந்தப் பொறுப்பாளரின் பேச்சுத் திறன் மற்றும் அன்பு உள்ளத்தினாலும் இணங்கச்செய்யப்பட்டவளாக சரி என்று ஓர் இரவு அங்கே தங்குவதெனத் தீர்மானித்தாள். பிற்பகல் மூன்று மணிக்கு அவள் அறையின் திரைச்சீலைகள் இழுத்துவிடப்பட்டன. மேலும், பாதி இருளில் மறைவுண்டிருந்த மரங்கள் அடர்ந்த ஒரு சோலையின் குளிர்ந்த அமைதியைக் கொண்டிருந்தது. மேலும் அழுவதற்குத் தோதான நல்ல இடமாக அமைந்தது. அவள் தனித்துவிடப்பட்ட உடனேயே, செனோரா புரூடென்சியா லினேரோ இரண்டு பூட்டுகளையும் பூட்டினாள். பிறகு, காலையிலிருந்து, முதன்முறையாக தயங்கி வெளியேறும் மெல்லிய நீரோடையென சிறுநீர் கழித்தாள், அதுவே பிரயாணக் காலத்தில் அவள் தொலைத்துவிட்டிருந்த தனது சுய அடையாளத்தை திரும்பப் பெற அவளை அனுமதித்தது போல இருந்தது. பிறகு அவள் செருப்புகளைக் கழற்றினாள், இடுப்பைச் சுற்றியிருந்த அந்தக் கயிற்றுப் பட்டையைக் கழற்றினாள்.

பிறகு தன் இடப்புறமாக அந்த மிக அகலமான, அவள் ஒருத்திக்கு மிகத்தனிமையைத் தருவதான இரட்டைப் படுக்கையில் வீழ்ந்தாள், பிறகு நெடுங்காலம் கடந்துவிட்டிருந்த பிறிதொரு கண்ணீர் ஓடையைத் திறந்தாள். இதுதான் அவள் முதன்முறையாக ரியோவாச்சாவை விட்டு கிளம்பியது என்பது மட்டுமல்ல, அதுவும் அவள் பிள்ளைகள் திருமணமாகி விலகிச்சென்றபின் அவள் வீட்டை விட்டுச் கிளம்பிச்சென்றிருந்த சில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. மேலும் உயிரற்ற ஜடம் போன்ற அவள் கணவனை கவனித்துக் கொண்ட, வெறுங்காலில் நடக்கும் இரண்டு செவ்விந்தியப் பெண்களுடன் அவள் மட்டும் தனியாக இருந்தபோது. அவர்கள் இளமைக் காலத்தில் காதல் புரிந்திருந்த ஆட்டுத்தோல் படுக்கை விரிப்பில், முப்பது ஆண்டுகளாக சுயநினைவற்று கோமாவில் கிடந்த, எப்போதும் அவள் நேசித்த ஒரே மனிதனின் சிதைவுகளை அந்தப் படுக்கையறையில் நேருக்கு நேர் பார்ப்பதிலேயே அவளது பாதி வாழ்க்கை கழிந்தது. அதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தின் போது, திடீரென ஒரு தெளிவின் ஒளிக்கீற்றுடன் அந்த நோயாளி கண்களைத் திறந்தான்.

தனது குடும்பத்தை அடையாளம் கண்டு கொண்டான். பிறகு ஒரு புகைப்படக்காரரை வரவழைக்கும்படி அவர்களிடம் கேட்டான். தோலினால் ஆன ஒரு மாபெரும் துருத்தியும், கறுப்பு உறையிட்ட காமிராவும் அந்த வீட்டில் புகைப்படங்கள் எடுப்பதற்கான மெக்னீசியம் தகடும் வைத்திருந்த ஒரு வயதான மனிதனை அந்தப் பூங்காவிலிருந்து அழைத்து வந்தனர் அவர்கள். புகைப்படங்களை நோயாளியான அவனே வகைப்படுத்தினான். “புரூடன்சியாவிற்கு ஒன்று, வாழ்வில் அவள் எனக்களித்த காதலுக்கும் சந்தோஷத்திற்கும்” என்றான் அவன். இது முதல் மெக்னீசிய ப்ளாஷில் எடுக்கப்பட்டது. “இப்போது மேலும் இரண்டு என் அருமை மகள்களான புரூடன்சியாவுக்கும், நதாலியாவிற்கும்” அவன் சொன்னான். அவையும் எடுக்கப்பட்டன. “மேலும் என் இரண்டு மகன்களுக்கு, யாருடைய பாசமும், நல்ல நேர்மையும் இந்த குடும்பத்திற்கே சான்றாக அவர்களை ஆக்கியிருக்கிறதோ, அவர்களுக்கு”, அவன் சொன்னான். ஆக, இப்படியே, அந்த புகைப்படக்காரரிடம் தாள் தீர்ந்துபோய் புதியது வழங்க அவர் வீட்டிற்குச் சென்று வரவேண்டியதாயிற்று.

நான்கு மணிக்கு, அந்த உருவப் படத்தின் அவரவர்க்கான பிரதி நகலை பெற்றுக்கொள்ள குவிந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் அமளியான கூட்டமும், அந்த மெக்னீசியப் புகையும், அந்த படுக்கையறை காற்றை சுவாசிக்க இயலாதபடி ஆக்கியிருந்தது, தன் படுக்கையில் சுயநினைவை இழக்கத் தொடங்கிய அந்த நோயாளி விடைபெறுவதுபோல ஒவ்வொருவரையும் நோக்கி சென்று வருகிறேன் என கையை அசைத்தான், ஏதோ அவனை அந்த உலகத்திலிருந்து, அந்த கப்பல் கிராதியிலிருந்து அவனே தன்னை அழித்துக்கொள்பவனைப்போல. எல்லோரும் நம்பியிருந்ததைப்போல அவனது மரணம் அந்த விதவைக்கு ஆசுவாசமாக இல்லை.

அதற்கு மாறாக, அவள் அவ்வளவு துக்கத்தினால் பீடிக்கப்பட்டிருந்ததால் பிள்ளைகள் அவளைச் சூழ்ந்துகொண்டு அவள் சமாதானம் கொள்ள அவர்களால் என்ன செய்ய இயலும் என்று கேட்க, அவள் விரும்புவதெல்லாம் போப்பாண்டவரை சந்திக்க ரோம் நகரம் செல்லவேண்டும் என்ற ஒன்றே என்று பதிலளித்தாள். “நான் புனித பிரான்சிஸின் உடையணிந்து தனியாகச் செல்வேன்” என்று அவர்களிடம் தெரிவித்தாள். நான் ஒரு சபதம் செய்திருக்கிறேன். விழிப்புநிலையுடனிருந்து அந்த வருடங்களின் மிஞ்சியிருந்த ஒரே மனநிறைவு, இப்படி அழுவதில் கிடைத்த இன்பமாய் இருந்தது. கப்பலில், மார்செய்லில் கரையிறங்கிய இரண்டு கிளேரிசைன் சகோதரிகளுடன் ஒரே கேபின் அறையைப் பகிர்ந்து கொள்ளவேண்டி இருந்ததால், அவள் குளியலறையிலேயே யாரும் பார்க்காத வண்ணம் அழுவதற்கென்றே தயங்கித் தாமதிப்பாள்.

இதன் விளைவாக நேப்பில்ஸின் அந்த ஹோட்டல் அறையே அவள் ரியோவாச்சாவிலிருந்து கிளம்பியதிலிருந்து அவள் மனம் திருப்தியுறும் வண்ணம், அழுவதற்கு ஏற்ற இசைவான ஒரே இடமாக இருந்தது. உணவகத்திற்கு அந்த நேரத்தில் செல்லவில்லை என்றால் உண்பதற்கு ஏதும் அவளுக்குக் கிடைக்காது என்று கூறுவதற்காக அந்த உரிமையாளர் அவள் அறைக்கதவை ஏழுமணிக்குத் தட்டியிருக்கவில்லை என்றால், மறுநாள் ரோம் நகரம் செல்லும் புகைவண்டி சென்ற பிறகும் கூட அவள் அழுதுகொண்டே இருந்திருப்பாள். அந்த சுமைக்கூலியாள் உடன் சென்றான். கடலிலிருந்து குளிர் தென்றல் வீச ஆரம்பித்திருந்தது, மற்றும் வெளிர்ந்த ஏழுமணி சூரியனடியில் கடல் குளியல் போட்ட சிலர் இன்னும் கடற்கரையில் இருந்தனர். ஒரு சிக்கலான, செங்குத்தான அகன்ற நிலத்தின் வழியாக, அப்போதுதான் ஞாயிறு தூக்கத்தினின்றும் விழித்துக்கொள்ள ஆரம்பித்திருந்த குறுகிய தெருக்கள் வழியாக அந்தக் சுமைக்கூலியை பின் தொடர்ந்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ.

பிறகு, சிவப்புக் கட்டமிட்ட துணியால் மூடப்பட்டிருந்த மேஜைகளும், காகிதப் பூக்களுக்கான ஜாடிகளும் இருந்த, ஒரு நிழல் படிந்த கொடிப்பந்தல் வீடு போலிருந்த இடத்தில் தன்னைக் கண்டாள். அந்த முன் பொழுதில் அவள் போல பசியாற இருந்தவர்கள், உணவு பரிமாறும் மேஜைப்பணி ஆண்களும், பெண்களும் தவிர, ரொட்டியும் வெங்காயமும் சாப்பிட்டுக்கொண்டிருந்த பின்புற மேஜையிலிருந்த ஒரு ஏழை பாதிரியார் மட்டுமே. அவள் உள்ளே சென்றதும் எல்லோர் கண்ணும் அவளது பழுப்பு உடைமேல் இருந்ததாக அவள் உணர்ந்தாள், ஆனால் இது அவளை பாதிக்கவில்லை, ஏனெனில், அந்த கேலி கூட அவள் பிராயச்சித்தத்தின் ஒரு பகுதி என்பதை அவள் அறிந்தாள். மாறாக, உணவு பரிமாறும் அந்தப் பணிப்பெண் மீது இவளிடம் ஒரு இரக்கப் பொறி எழும்பியது. ஏனெனில், அந்தப் பெண் பொன்நிற தலைமுடியுடன் அழகாக இருந்தாள், ஏதோ கீதமீசைப்பது போலப் பேசினாள், ஆக, இப்படி ஒரு பெண் உணவகத்தில் உணவு பரிமாறி மேஜைப்பணி செய்யவேண்டுமெனில், இத்தாலியில் போருக்குப் பிறகு விஷயங்கள் மிக மோசமாக இருக்கவேண்டும் என செனோரா புரூடென்சியா லினேரோ நினைத்தாள்.

பூத்திருக்கும் அந்த நிழல் படிந்த இடத்தில் அவள் கலக்கமற்று, நிம்மதி உணர்வடைந்தாள், மேலும், சமையலறையிலிருந்து வந்த ‘பே’ இலை வாசனையுடன் அடர்குழம்பின் மணம் அந்த நாள் முழுவதும் பரவியிருந்த கவலைகளால் தள்ளிப் போடப்பட்ட பசியுணர்வைத் தூண்டியது. முதன் முறையாக நெடுநேரம் அழவேண்டும் என்ற இச்சையின்றி இருந்தாள். ஆயினும் அவள் விரும்பிய வண்ணம் அவளால் சாப்பிட முடியவில்லை, பாதி, அந்தப் பெண் நிறத்தலைமயிருடன் இருந்த பெண்ணிடம் பேசுவது கொஞ்சம் சிரமமாக இருந்ததனாலும், அவள் கனிவுடனும் பொறுமையுடனும் இருந்த போதிலும், பாதி, அங்கே கிடைக்கக் கூடிய மாமிசம் ரியோவாச்சா வீடுகளில், கூண்டில் வைக்கப்பட்டிருப்பது போன்ற சிறிய பாடும் பறவைகளின் கறி ஒன்று மட்டுமே அங்கு கிடைக்கக்கூடியது என்பதனாலும் அந்த மூலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்தப் பாதிரியார், பிற்பாடு ஒரு மொழிபெயர்ப்பாளராக ஆனவர், அவளைப் புரிந்துகொள்ள வைக்க பிரயத்தனப்பட்டார். அதாவது, அந்தப் போர் நெருக்கடிகள் இன்னும் ஐரோப்பாவில் முடிந்துவிடவில்லை என்பதையும், ஏதோ சில காட்டுப் பறவைகளாவது சாப்பிடக் கிடைப்பதே ஒரு அற்புதம் என்று பார்க்கப்படவேண்டும் என்றார். ஆனால் அவள் அவற்றைத் தொடாது தள்ளினாள்.

“என்னைப் பொறுத்தவரை என் குழந்தைகளில் ஒருவரை சாப்பிடுவது போலிருக்கும் அது” என்றாள் அவள். அதனால், சலவைக்கல் போல கடினமாக இருந்த ரொட்டித் துண்டு ஒன்றும், பழச்சாறுடன் கொதிக்க வைக்கப்பட்ட, துர்வாடை பன்றி இறைச்சித் துண்டுகள் ஒரு தட்டும், கொஞ்சம் சேமியா சூப் மட்டுமே அவள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அந்தப் பாதிரியார் அவள் மேஜை நோக்கி வந்து, ஈகையின் பேரில் அவருக்காக ஒரு கப் காப்பி வாங்கித் தரவேண்டும் என்று கூறிவிட்டு அவளுடன் அமர்ந்துகொண்டார்.

யூகோஸ்லேவியாவைச் சேர்ந்த அவர் சமயப்பணி காரணமாக பொலிவியாவில் இருந்தார், ஒரு தடுமாற்றம் நிறைந்ததும் வெளிப்பாட்டு திறன் மிக்கதுமான ஸ்பானிய மொழி பேசினார். செனோரா புரூடென்சியா லினேரோவுக்கு அவர் கடவுளின்பால் தாட்ஷண்யம் மிக்க தடயச்சாயல் இல்லாத, ஒரு சாதாரண மனிதன் போல தோற்றமளித்தார். மேலும், உடைந்த அழுக்கு நகங்களுடன், அவமானகரமான கைகள் அவர் கொண்டிருந்ததையும், அவருக்கே உரிய குணச்சித்திர இயல்பு என்பதைப் போல சுவாசத்தில் வெங்காய வாடை நீடித்து நிலைத்ததையும் கவனித்தாள். ஆனால் என்ன இருந்தாலும் அவர் கடவுள் சேவையில் உள்ளார், மேலும், வீட்டிலிருந்து வெகுதொலைவில் அவள் இருக்கும்போது, பேசுவதற்கு இப்படி ஒருவரை அவள் சந்திப்பதென்பது மகிழ்ச்சியான ஒன்றே.

சுற்றிலும் உள்ள மற்ற மேஜைகளில் மேலும் மனிதர்கள் அமர்ந்ததனால், அவர்களைச் சூழ்ந்த, பண்ணை முற்றத்தில் உண்டாகும் கனத்த சத்தத்தைக் கவனம் கொள்ளாது, கிடைத்த அவகாசத்தில் அவர்கள் பேசினார்கள். இத்தாலியைப் பற்றிய ஒரு தீர்மானமான கருத்தை இதற்குள் அடைந்திருந்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ. அவளுக்கு இது பிடிக்கவில்லை, இந்த மனிதர்கள் சற்று ஒழுங்கு முறையற்றவர்கள் போல இருப்பதாகச் சொன்னால் அது கொஞ்சம் மிகைதான், அல்லது இவர்கள் பாடும் பறவைகள் கறி உண்பதால் என்று கூறினால் அதுவும் அதிகபட்ச அபிப்பிராயம் எனத் தோன்றலாம், ஆனால் கடலில் மூழ்கிய ஒரு மனிதனை அப்படியே நீரில் மிதக்க விட்டுவிட்டிருக்கும் கொடிய வழக்கம் கொண்டவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். அவள் தயவில் ஒரு ‘கிராப்பா’ பிராந்திக்கு ஆர்டர் செய்திருந்த அந்தப் பாதிரியார் அவளது கருத்தின் மேம்போக்கான, ஆழமற்ற எண்ணத்தைப் புரிய வைக்க முயற்சி செய்தார். போர்க்காலத்தில் திறன் மிக்க சேவை ஒன்றை ஏற்படுத்தி மூழ்கிப் போய், நேப்பில்ஸ் வளைகுடாவில் பலியாகி மிதந்து கொண்டிருந்த பலரை அடையாளம் கண்டு, புனிதமான மண்ணில் புதைத்து, மிகச் சிறந்த பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

‘நூற்றாண்டுகளுக்கு முன்பு’, அந்தப் பாதிரியார் முடித்தார்,

“வாழ்வதற்கு ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்பதை இத்தாலியர்கள் நன்றாக அறிந்து கொண்டனர், மேலும், அதை எவ்வளவு சிறப்பாக அவர்களால் வாழ முடியுமோ அப்படி வாழ முயற்சிக்கின்றனர். இதுவே அவர்களை வாயாடிகளாகவும், கணக்காக இருப்பவர்களாகவும் செய்திருந்தது. ஆனால் கொடூரத்திலிருந்து இதுவே அவர்களை குணப்படுத்தியும் இருந்தது”.

“அவர்கள் கப்பலைக் கூட நிறுத்தவில்லை” என்றாள் இவள்.

“அவர்கள் என்ன செய்வார்கள் என்றால் துறைமுக அதிகாரிகளுக்கு ரேடியோ செய்தி அனுப்புவார்கள்” என்றார் அந்தப் பாதிரியார்.

“இதற்குள் அவனை அவர்கள் எடுத்திருப்பார்கள், கடவுள் பெயரால் புதைத்திருப்பார்கள்”

இந்த விவாதம் இருவரின் மன நிலையையும் மாற்றியது. செனோரா புரூடென்சியா லினேரோ சாப்பிட்டு முடித்திருந்தாள். அப்போதுதான் அவள் உணர்ந்தாள் மற்ற எல்லா மேஜைகளுமே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்பதை. மிக அருகில் ஏறக்குறைய நிர்வாணமாயிருந்த சுற்றுலாப் பயணிகள் மௌனமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களில் முத்தமிட்டுக்கொண்டிருந்த ஒரு சில ஜோடிகள் சாப்பிடவில்லை. மதுபான விற்பனைக் கூடத்தருகில், பின்புறம் இருந்த மேஜைகளில், உணவகத்தின் அருகில் வசித்த மக்கள் சூதாடிக்கொண்டும், நிறமற்ற ஒயின் குடித்துக்கொண்டும் இருந்தனர். சுவையற்ற அந்த நாட்டில் அவள் தங்க வேண்டியிருந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே என்று புரிந்துகொண்டாள் செனோரா புரூடென்சியா லினேரோ.

“போப்பாண்டவரைப் பார்ப்பது என்பது மிகக்கடினமான ஒன்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

அந்தப் பாதிரியார் பதிலளித்தார் கோடைகாலத்தில் எதுவுமே சுலபமில்லை என்று.

‘கேஸ்ட்டல் கேன்டோல்போ’வில் போப்பாண்டவர் விடுமுறையில் இருக்கிறார், மேலும், புதன்கிழமை பிற்பகல் பொழுதுகளில் உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் வரும் புனித யாத்ரீகர்களுக்காக பொது சந்திப்பு ஒன்று நிகழ்த்துவார்.

நுழைவுக் கட்டணம் மிக மலிவே: 20 லிரா.

“மேலும், ஒருவரின் பாவமன்னிப்பைக் கேட்பதற்கு அவர் எவ்வளவு வசூலிக்கிறார்?” அவள் கேட்டாள்.

“இந்தப் புனிதத் தந்தை பாவ மன்னிப்புகளைக் கேட்பதில்லை” என்றார் அந்தப் பாதிரியார், சற்று அவதூறு அடைந்ததுபோல,

“வாஸ்தவமாக மன்னர்களுடையது தவிர.”

“வெகு தொலைவிலிருந்து இதற்காக வந்திருக்கும் ஒரு பாவப்பட்ட பெண்ணுக்கு அவர் இந்த ஆதரவை மறுக்கவேண்டிய காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் அவள்.

“மேலும் சில மன்னர்கள், மன்னர்களாக இருந்த போதிலும், காத்திருந்தே இறந்துவிட்டிருக்கின்றனர்”, அந்தப் பாதிரியார் கூறினார்.

“ஆனால், சொல்லுங்கள் எனக்கு, புனிதத் தந்தையிடம் பாவமன்னிப்புக் கோருவதற்காக மட்டுமே தன்னந்தனியாய் இப்படி ஒரு பிரயாணம் நீங்கள் மேற்கொண்டிருப்பதால் தங்களுடையது ஒரு மோசமான பாவமாக இருக்க வேண்டும்”

ஒரு க்ஷணம் செனோரா புரூடென்சியா லினேரோ யோசித்தாள். பிறகு, முதன்முதலாக அவள் புன்னகையைப் பார்த்தார் அந்தப் பாதிரியார்.

“தேவ மாதாவே” அவள் சொன்னாள், “அவரைப் பார்த்தாலே போதும், திருப்தி அடைவேன் நான்,” மேலும், அவள் ஆத்மாவிலிருந்து எழுந்தது போன்ற ஒரு பெருமூச்சுடன் கூறினாள், “என் வாழ்நாள் கனவாக இருந்திருக்கிறது இது”.

உண்மை என்னவென்றால் அவள் இன்னும் பயமும் கவலையும் கொண்டவளாய் இருந்தாள், மேலும் அவள் விரும்பியதெல்லாம் தாமதம் சற்றும் இன்றி உடனே அந்த உணவகத்தை விட்டும், அதேபோல, இத்தாலியை விட்டும் வெளியேறிவிடவேண்டும் என்பதையே. இந்த, ஏமாளிப் பெண்ணிடம் பெற முடிந்ததெல்லாம் பெற்றுக்கொண்டு விட்டதாக அந்தப் பாதிரியார் எண்ணியிருக்கவேண்டும். அவளுக்கு வாழ்த்து கூறிவிட்டு, வேறு ஒரு மேஜைக்கு ஈகையின் பெயரால் அவருக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தருமாறு கேட்பதற்குச் சென்றார்.

அந்த உணவகத்தை விட்டு அவள் வெளியேறி நடந்தபோது, செனோரா புரூடென்சியா லினேரோ மாறுதல் அடைந்த ஒரு நகரத்தைக் கண்டாள். ஒன்பது மணிக்கு வீசிய சூரிய வெளிச்சத்தால் அவள் ஆச்சரியமடைந்தாள். மாலைத்தென்றலில் ஆசுவாசம் காண தெருக்களை படையெடுத்துக்கொண்டிருந்த, கரகரப்பான ஒலி எழுப்பிய மக்கள் திரளைக் கண்டு அச்சமடைந்தாள். பைத்தியம் பிடித்தாற்போல, துப்பாக்கி வெடிப்பொலி போல பின்புறம் சப்தமிட்ட வெஸ்பா ஸ்கூட்டர்கள் வாழ்வை சாத்தியமற்றதாக்கியிருந்தன. வெற்று மார்பைக் காட்டியபடி ஸ்கூட்டர் ஓட்டிய ஆண்களின் பின்புறம் அவர்தம் அழகிய பெண்கள் ஆண்களின் இடுப்பைக் கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.

அந்த ஸ்கூட்டர்கள் தொங்கிக்கொண்டிருந்த பன்றிகளின் நடுவேயும், முலாம்பழங்களால் நிரப்பப்பட்டிருந்த மேஜைகளுக்கு நடுவேயும், திடீரென்று, உள்ளேயும் வெளியேயும் ஓட்டப்பட்டன. அந்த திருவிழாக்கோலமாயிருந்த சூழல் செனோரா புரூடென்சியா லினேரோவுக்கு ஒரு பேரழிவுபோலத் தோன்றியது. அவள் வழியைத் தவறவிட்டாள், திடீரென ஒரு மகிழ்ச்சிக் கேடான தெருவில் தன்னைக் கண்டாள். அங்கு ஒன்றோடொன்று ஒத்திருந்த வீடுகளின் வாசல் வழியில் அதிகம் பேசாத பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.

அந்த வீடுகளில் கண் சிமிட்டிய சிவப்பு விளக்குகள் இவளை பெரும் அச்சத்தில் நடுங்க வைத்தன. சில கட்டிடங்கள் வரை, இத்தாலிய மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும், ப்ரெஞ்சிலும் ஏதோ பேசிக்கொண்டு நல்லமுறையில் உடையணிந்து, தன் ‘டை’யில் வைரம் தரித்திருந்த ஒரு மனிதன் அவளைப் பின்தொடர்ந்தான். எந்த பதிலும் பெற முடியாமற்போனதும், அவன் தன் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து ஒரு கட்டிலிருந்து ஒரு அஞ்சல் அட்டையை அவளிடம் காட்டினான். மேலும், ஒரு பார்வை மட்டுமே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது அவள் நரகத்தினூடே நடந்துகொண்டிருந்தாள் என்று நிச்சயமாய் உணர்ந்துகொள்ள.

பெரும் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடினாள், அந்தத் தெருக்கோடியில், மாலை மங்கல் ஒளியில் கடலைக் கண்டாள், மறுபடியும், அழுகிக்கொண்டிருக்கும் மீன் சிப்பிகளின் அதே துர்நாற்றம் ரியோவாச்சா துறைமுகத்தை ஞாபகப்படுத்தியபடி இருக்க. பிறகு அவள் இதயம் அதற்குரிய சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தது மீண்டும். மனிதர்கள் யாருமற்ற பீச்சை ஒட்டிய வர்ணம் பூசப்பட்ட ஹோட்டல்களையும் சவஊர்தித் தன்மையான டாக்ஸிகளையும் மாபெரும் வானத்தில் தோன்றிய முதல் விண்மீனின் வைரத்தையும் அடையாளம் கண்டாள். அந்த வளைகுடைவாவின் எல்லை முடிவில் தனிமையாகவும் பிரம்மாண்டமாகவும் ஒவ்வொரு தள அடுக்கிலும் ஒளிர்ந்தபடி கப்பல் நிற்கும் தளத்தில் நின்றிருந்த அவள் பயணம் செய்த கப்பலை அடையாளம் கண்டாள். இனி ஒருபோதும் அதனுடன் எந்த விதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தாள். ‘காராபியனரி’ என்றழைக்கப்படும் தேசீய இத்தாலிய போலீஸ் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த ஒரு கூட்டத்தினால் அவள் இடது பக்கம் திரும்பி அந்த மூலை வரை சென்றவள் மேலே செல்ல முடியாமற் போனது.

ஒரு வரிசை ஆம்புலன்ஸ் வண்டிகள் கதவை திறந்து வைத்தவாறு அவள் தங்கியிருந்த ஹோட்டல் கட்டிடத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தன. கால்விரல் நுனியில் நின்றபடி பார்வையாளர்களின் தோள்களின் மீதாக உற்றுநோக்கிய செனோரா புரூடென்சியா லினேரோ மீண்டும் ஆங்கிலேய சுற்றுலாப் பயணிகளைக் கண்டாள். இயக்கமற்றும் விழுமிய தோற்றத்துடனும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஸ்ரெட்சரில் தூக்கிச் செல்லப்பட்டனர். மேலும் அனைவரும் இரவு உணவுக்கான மரபான ஆடையில் ஒரே மனிதன் பல தடவைகள் பிரதி செய்யப்பட்டது போல் தோன்றினர். பிளானல் துணியால் ஆன கால்சட்டைகள், குறுக்குக் கோடுகள் கொண்ட கழுத்துப்பட்டிகள், மேலும் அடர் வண்ண ஜாக்கெட்டுகளின் மேல் டிரினிட்டி கல்லூரியின் முத்திரை அவர்களின் மார்பளவிலிருந்து பாக்கெட்டுக்களின் மேல் பூந்தையல் செய்யப்பட்டிருந்து.

அவர்களை வெளியே எடுத்து வரும் சமயத்தில் தமது பால்கனிகளிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள், மற்றும் தெருவில் தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் கோரஸாக அவர்கள் ஏதோ விளையாட்டரங்கில் இருப்பது போல் எத்தனை பேர் என எண்ணினர். பதினேழு பேர் இருந்தனர். இரண்டிரண்டு பேர்களாக ஆம்புலன்ஸ் வண்டியில் வைக்கப்பட்டனர், பிறகு, யுத்த அபாய சைரன்களின் ஓலத்துடன் வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டனர்.

திகைக்க வைக்கும் அத்தனை நிகழ்வுகளால் அதிர்ந்து போன செனோரா புரூடென்சியா லினேரோ பிற ஹோட்டல்களில் தங்கியிருந்த விருந்தினர்கள் லிப்டில் புரியாத பாஷையில் பேசியபடி நிறைந்திருந்தவர்களுடன் ஏறிச் சென்றாள். அடைக்கப்பட்ட, லிப்டில் மூன்றாவது தளத்தைத் தவிர ஒவ்வொரு தளத்திலும், இறங்கினார்கள். மூன்றாம் தளம் வெளிச்சமிடப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த கவுண்ட்டரிலோ அல்லது சாய்வு நாற்காலிகளிலோ, காத்திருப்பு அறையிலோ அடர்சிவப்பு நிற முட்டிகளைக் கொண்ட உறங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களோ எவரும் இருக்கவில்லை. அடக்கமுடியாத உணர்ச்சியுடன் அந்த ஐந்தாவது தள உரிமையாளர் அந்த அசம்பாவிதம் பற்றி கருத்துரைத்தார்:

“அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்”, அவர் செனோரா புரூடென்சியா லினேரோவிடம் ஸ்பானிய மொழியில் கூறினார்.

“இரவு உணவின்போது, உண்ணுவதற்கேற்ற ஒரு வகை சிப்பி கொண்டு தயாரித்த சூப் விஷமாகிப் போயிருக்கிறது. எண்ணிப் பாருங்கள், ஆகஸ்ட்டில் சிப்பிகள்.”

இவள் அறைச் சாவியை இவளிடம் கொடுத்தாள் அவள். பிறகு இவளை கவனிக்காது மற்ற விருந்தினர்களிடம் தனது சொந்த பாஷையில்

“சாப்பிடும் அறை இங்கே இல்லாததால் தூங்கும் ஒவ்வொருவரும் உயிருடன் விழித்து எழுவார்கள்” என்று கூறினாள். தொண்டைக்குள் மேலும் ஒரு கண்ணீர் முடிச்சுடன், செனோரா புரூடென்சியா லினேரோ தன் அறைக் கதவுகளைத் தாழிட்டாள். அதன் பிறகு, அந்த சிறிய எழுதும் மேஜையையும், சாய்வு நாற்காலியையும் ட்ரங்குப் பெட்டியையும் கதவை ஒட்டித்தள்ளினாள்: எங்கே ஒரேசமயம் மிகப்பல நிகழ்வுகள் நடந்து விட்டிருந்தனவோ அந்தக் கொடிய நாட்டின் பயங்கரத்திற்கு எதிராக கடந்து செல்லமுடியாத ஒரு தடுப்பரணை அமைக்க. பிறகு, கைம்பெண் அணியக்கூடியதான தன் இரவு உடையை அணிந்து கொண்டாள். படுக்கையில் மல்லாந்து படுத்தாள், பிறகு, அந்த நஞ்சிடப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்களின் ஆத்மாக்களின் நித்திய அமைதிக்காக பதினேழு ஜபங்கள் சொன்னாள். 

ஏப்ரல் 1980

Seventeen Poisoned English Men, from Strange Pilgrims,Twelve stories by Gabriel Garcia Marquez, Translated from the Spanish by Edith Grossman, Alfred A.Knopf, New York,1993 Seventeen Poisoned English Men, from Strange Pilgrims,Twelve stories by Gabriel Garcia Marquez, Translated from the Spanish by Edith Grossman, Alfred A.Knopf, New York,1993

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer