விக்னேஷ் காமராஜ் கவிதை


பகிரு

நாய் செல்லாட்டம்
அர்ஜுனா சத்தம் இடியை மிஞ்சும்
வீடடைவதற்குள் மழையோ கொட்டும்
பாத்திரங்களும் வைத்தாயிற்று
இன்னும் ஒருபாரல் அடித்தால்
சோளம் நடலாம்
கப்பல்விடும் கூட்டாளியின்
அப்பன் முனகல்
இதற்குமேல் சட்டியில்லை
தாயார் புலம்பல்
கொறகொற ஒலிக்கு இடையே எப்போதாவது
கேட்கும் கிட்டு மாமா பட்டு மாமி குரல்
வீடுநிறைக்கும் திருவிழாவாய்
பெரியவீட்டில் ஒருநாள் சின்ன வீட்டில் 
மறுநாள் படுக்கையென அப்பனுக்கு நல்லசுகம்
இராமாயண பாராயணம்வேறு அப்பப்பா
வளையல் விற்கும் அவ்வாவுக்கும் தாத்தாவுக்கும்
போட்டுக் கொள்பவரின் சாதிபற்றிக் கவலையில்லை 
பணம் வந்தால் சரி
பேத்தி சாதிமாறி ஆசைவச்சா அறுப்புதான்
குஞ்சிமணி தெரிய ஓட்டை டவுசரில்
சாணியில் உருட்டிய பல்லைக்
கூரையில் எறிய ஓடும் அண்ணனும்
முதற்சோறுண்ண
வண்ணாத்தியின் வருகைக்குக் காத்திருக்கும்
நானும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
manalveedu@gmail.com
Copyright © 2022 Designed By Digital Voicer