மதிப்புரை : இருள் நிறைந்த வீடு
கே.என். செந்திலின் சிறுகதைகள்

மு. குலசேகரன்

பகிரு

சிறுகதை வடிவமானது வாசிப்பை குவி மையப்படுத்துவதற்கான ஒருமை பண்பைக்கொண் டிருக்கிறது. அதனால் முடிந்தளவு ஒரு காலம், இடம் என்பவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. அதற்காக ஆரம்பம், நடு, முடிவு என்ற இயங்கு முறையையும் வைத்திருக்கிறது. அதன் நோக்கம் ஒற்றைத் தன்மையிலிருந்து பன்முகப் பார்வையை அடைவது. இப்போது உலகமயமாகிவிட்ட சூழ லில் மனிதர்களுக்கிடையிலான இடைவெளி சுருங்கி விட்டது. மனிதனுக்குத் தனியாக மொழியும் கலாச்சாரமும் நிலமும் இல்லாமலாகிக் கொண் டிருக்கின்றன. எனவே அவன் நிகழ்கணத்தில் வாழ் கின்ற நிலையிலிருக்கிறான். தன் இருப்பைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டும். இந்தச் சிக்கலான நிலையைப் படைப்பிலும் காட்டவேண்டியதாகிறது.

அதனால் இன்றைய சிறுகதை ஒருமைப் பண்பை இழக்கிறது. வாழ்க்கையைப் புறவயமாகவும் அகவயமாகவும் சேர்த்தே பார்க்கிறது. பாத்திரங்களை ஒரேசமயத்தில் விலகியும் உள்நோக்கியும் படைக்கிறது. சிறுகதை பிற எல்லா இலக்கிய வடிவங்களையும்போல காலத்துக்கேற்ப மாறிக்கொண்டிருக்கிறது.   அவசர வாழ்க்கையின் தேவைக்கு ஒருமை மிகுந்த உடனடிக் கதைகள் எழுதப்படுகின்றன. அவற்றிலிருந்து விடுபடச் சிறுகதைகள் பல கதைத்தன்மையுள்ளவையாக விரிகின்றன. இன்றைய ஆசிரியன் கதைக்குள் தன்னுடைய இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முயலுகிறான். அவனும் ஒரு கதைசொல்லியாகப் பிரதியில் குறுக்கீடுகளை நிகழ்த்து கிறான். தன் படைப்பில் வாசகப் பார்வையைக் கொள்வதால் இது சாத்தியமாகிறது. அது புனைவாக இருப்பதால் கருத்துகளால் உருவாகும் அதிகாரமும் தடுக்கப்படுகிறது. இப்போது சிறுகதை உருவத்திலும், உள்ளடக்கத்திலும் முழுச் சுதந்திரமானதா யிருக்கிறது. அதில் ஒரு வாக்கியத்தை நீக்கினால் குலைந்துவிடும் என்ற நம்பிக்கையில்லை. துப் பாக்கி தொங்கினால் வெடித்தாகவேண்டும் என்றகட்டுப்பாடும் கிடையாது. கதையை எங்கு வேண்டு மானாலும் தொடங்கி வாசித்துவிடலாம். அது பலகதைகள் உருவாகும் நிகழ்வுகள் கொண்ட தொகுப் பாகிறது. அல்லது தொடர் நினைவுகளின் பரப்பாக இயங்குகிறது. அங்குச் சம்பவங்களைக் காட்டிலும் மொழிச் செயல்பாடு முக்கியமாயிருக்கிறது.

கே.என். செந்திலின் முதல் சிறுகதைத் தொகுப் பான ‘இரவு காட்சி’ 2009இல் வெளியாகியிருக்கிறது. இரண்டாவது தொகுப்பு ‘அரூப நெருப்பு’2013இல் வெளியானது. இரண்டு தொகுப்புகளுக்கும் அடிப்படைப் பார்வையில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்று படுகிறது. இரண்டிலும் அவருடையகதைகள் அன்றாடச் செயல்களால் பின்னப்பட்டிருக் கின்றன. அந்தச் சூழலிலிருந்து பாத்திரங்களின் குணச் சித்திரங்கள் உருவாகின்றன. அதற்கு ஏதுவாகக் காலத் தின் முன், பின்னான வேறுபாடுகள் அழிந்து தொடர்நிகழ்வாகிறது. ஆசிரியர் பாத்திரங்களின் மன வோட்டங்களை நிகழ்ச்சிகளின் வழியாகக் கவனமாகப் பின்தொடர்கிறார். அவற்றால் மனிதனை இயக்குபவற்றை அடையாளப்படுத்த முயலுகிறார். பொருண்மையான உலகை மனதில் பிரதிபலிக்கச் செய்து அனைத்துக்கும் அர்த்தங்களைத் தேடுகிறார். மனிதனின் அடிப்படை இயல்புகளைக் கண்டறிவதற்காகத்தான் அவர் பெரிதும் விளிம்பு நிலையாளர்களை எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கள்ள டிக்கெட் விற்பவர், பிணவறை வேலையாள், அடியாள், கடைநிலைத் தொழிலாளி, லாட்டரிச் சீட்டு விற்பவர், லாட்டரிச் சீட்டு வாங்குபவர் போன்றவர்கள்தான் கதைசொல்லிகளாகிறார்கள். அந்த அடித்தட்டு மனிதர்கள்தான் ஆதி குணங்களை மறைக்காமல் வெளிப்படுத்துபவர்கள். அங்குக் கண்டடையப்படுவது தீமை, இச்சை, சாகசம். வாழ்வதொன்றுதான் இயல்பான நியதி. மிகையான மெல்லுணர்வுகளுக்கு இடமில்லை. அங்கு வாழ்க்கையைப் பற்றிய பெரும் விழுமியங்களுமில்லை.

ஆசிரிய அவதானிப்புகள்தான் கதையை இலக்கியமாக்குகிறது. அவை கதைப் படிமங்களாகி முழுவாசிப்பனுபவத்தைத் தருகின்றன. அவ்வகையில்கே.என். செந்தில் நனவோட்டங்களால் பாத்திரங் களின் பண்பை உருவாக்குகிறார். அதனால் அவரு டையதும் அவருடைய பாத்திரங்களுடையவையும் கலந்து உலகைப் பற்றிய தனித்த பார்வை எழுகிறது. அவருடைய நுண்ணோக்கு அவர் கதைகளின் முக்கிய அம்சமாகிறது. அப்படியாக இக்கதைகளில் வெளிப்படும் அதிகப்படியான சூட்சுமத் தகவல்களின் பெறு மதி என்ன? ஒரு கதையில், வாயில் ஊற்றப்படும்பால்துளிகள் கழுத்திலும் காதுப்புறத்திலும் வழிவதைசாகக்கிடக்கிறவருடைய பிள்ளைகளின் விலகலுக்குப் பொருத்தலாம். ரசத்தில் சோற்றைத் தூர் வாரி ஒருவன் சாப்பிடுவதில் மற்றொரு கதைத் தொடங்குவது மொத்தக் கதையின் போக்கையும் காட்டுகிறது.

அவர் எழுப்பும் உருவகங்கள், செயற்கையானவையாயில்லாமல், கதையின் போக்கில் அடையப்பட்டவையாயிருக்கின்றன.  சிலவற்றின் பட்டியல் :

ஒரு கட்டிடத்தின் நிழல் எதிர்க்கட்டிடத்தின் மீது கிழவி கால் நீட்டியுள்ளதை போல் படர்ந்திருக்கிறது.

நிலத்தில் குழி பறிப்பதை போல் கிழவன் நிலத்தைத் தேய்த்து நடக்கிறான்.

நாற்றம் பழகிய நாயைபோல் வந்து முகர்ந்து விட்டு மேலே செல்கிறது.

யானையின் மேற்செல்லும் பாகனை போல் எருமையின் கொம்பின் மீது அமர்ந்து காகம் ஆடி அசைந்து போகிறது.

செம்மறியாடுகள் சரிவில் இறங்குவதைப் போல்.

அப்பா பீடி எரிவதைபோல் ஒருவர் எரிவதை பார்த்தேன்.

கோணிப்பையை எறிந்ததுபோல் நாய் சாக்கடைக் குள்  விழுந்தது.

மர வேர்களைப் போல் கை நரம்புகள்.

(இரண்டாவது தொகுப்பில்): பட்டுப்போன மரத் தின் கிளையொன்று முறிவது போன்ற ஒலியுடன் கதவு  மெல்லத் திறந்தது.

ஒரு பெண் இடைவெளியின்றிக் கத்துகையில் பாலத்திற்கே வாய் முளைத்துக் கத்துவதைப் போலி ருந்தது என்றும், கொலுசு ஓசையைக் கேட்கையில்மௌனத்தின் ஆழத்துக்குச் சென்று திரும்பிவருவார் என்றும், முழங்கால்வரை மீன் செதில்கள் படிந்து அவனே மீனாகிவிட்டதைப் போலிருந்தது என்றும் எழுதுகையில் சூழல் மற்றும் பாத்திரங்களின் சாரம் வந்துவிடுகிறது.

அதே போல் பாத்திர உரையாடல்கள் கதையின் மூலங்கள். அவை இலகுவான வாசிப்புக்கும் உகந்தவை. ஆனால் பெரிதும் உரையாடல்களாலான கதைகள் எளிய கட்டமைப்பை உடையவையாகத் தோன்றுகின்றன. உரையாடல்கள் என்பவை முழுவதும் பாத்திரங்களின் இயல்புக்கேற்றவை. அதனால் ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் இடமளிக்காதவையாகின்றன. கே.என். செந்திலின் பல கதைகள் தன்னிலையிலிருந்து நமக்குச் சொல்லப்பட்ட நீண்ட உரையாடல்கள்தான். அவற்றில் பாத்திரங்களின் பேச்சுக் குறைவு. அவை பெரும்பாலும்நினைவுகளில் திளைப்பவை. அப்படிக் கதாபாத்திரங்கள் பேசினால் அவை தாம் வாழ நேர்ந்த இடத்தை அழுத்தமாக வெளிப்படுத்திவிடுகின்றன. இக்கதைகளின் சொற்ப பேச்சுகள் கதைக்கு முழுப் பிரதேசத் தன்மையை வழங்கிவிடுகின்றன. அவைஇலக்கிய உலகம் அறிந்த கொங்குப் பகுதியின் செழுமையான வட்டார வழக்குகள். எடுத்துக்காட்டாகச்  சில  உரையாடல்கள் :

யோசனை என்ன மயித்த நொட்றது. நோட்டா இருந்தென்ன சிலுவானமா இருந்தென்ன. அந்த ஈர வெங்காயமே வேண்டா.

ஒக்காந்துக்கிட்டே கிடக்கெறவங்களுக்கென்ன? அங்காருந்து வெயில்ல உன்னப்புடி என்னப்புடின்னு  வர்றதுக்குள  கண்ணாமுளி  திருகீருது.

கே.என்.செந்தில் தன்னிலையில் கதை எழுதுதலை சவாலாகக் கருதுபவர். ஆனால், எல்லாவித கதை சொல்லலும் தத்தமக்குரிய சிக்கல்களைக்கொண்டு தானிருக்கின்றன. இரண்டாவது தொகுப்பின் கதை கள் பெரும்பாலும் ஒற்றைத் தன்னிலையில் கூறப்படுபவை. அரூப நெருப்பு கதை இரட்டைத் தன்னிலையில் சொல்லப்பட்டதால் அது ஒரு கதையின் இரு பக்கங்களைக் காட்டுகிறது.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியிடம், மனித உடல்இயக்கங்களை ஓர் இயந்திரத்தினுடையவைபோல் ஆக்கிச் சொல்வதாயிருக்கும். கூடவே பெரும் மனிதவிசாரமும் இருக்கும் அவற்றையொத்தவைபோல் கே.என். செந்திலின்பாத்திர நடவடிக்கைகளும் அமைகின்றன. உதாரணங்கள்: சொடக்குகள் தெறித்தன / கண்ணீரின் சொட்டுகள், கைகள் உடம்பில் விழுந்தன / கால்களால் பூமியை பின்னுக்குத் தள்ளி ஓடுதல் / மயக்கத்தில் தொங்கிப்போயிருந்த முகத்தைத் தோள் தாங்கியிருந்தது / மனிதச் சதைகள் காலில்மிதிபட்டன.

கே.என். செந்திலின் கதையமைப்புகள் மிக அதிக மாகக் குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தைச் சுற்றியிருக்கின்றன. ஏனெனில் அது விளிம்புநிலையாளர்கள் செயல்படும் பிரத்யேக வெளி. அந்தக் குடும்ப அமைப்புக்கு வாழ்க்கையைத் துய்ப்பது ஒரு நோக்கமென்றால் மற்றொன்று அதை மறுஉற்பத்தி செய்வது. அது இறுகிப்போயிருப்பதால் அதில் அதிகப்படியான அதிகாரமும், வன்முறையும், சுயநலமும் வெளிப்படுகின்றன. குடும்பத்துக்குத் தலைவனாயிருப்பவன் பிற உறுப்பினர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறான். அவன் பிற அமைப்பு களில் பெற்ற வன்முறையையும் சுரண்டலையும் பிரதிபலிப்பவனாயிருக்கிறான். கடைசிக் கண்ணியாயிருப்பவள் மனைவி. அவள் பொருளாதாரம் சார்ந்தும் ஒழுக்கம் சார்ந்தும் ஒடுக்கப்படுகிறாள். குடும்ப அங்கத்தினர்கள் படிநிலையில் கீழுள்ளோர் மீது முடிந்தளவு அதே அதிகாரத்தைப் பரப்புகிறார்கள். அதிகாரமும் வன்முறையும் சுரண்டலும் கூடுதலாகப் புலனாகும் இடம், சமூகத்தின் அடிக்கட்டுமானமாயுள்ள குடும்பம்தான். அது சிதைந்துகொண்டிருப்பதின் சித்திரங்கள் இக்கதைகள். இவற்றை வாசிக்கையில் நமக்குள் உறைந்திருக்கும் வன்முறையானது தலையெடுக்கக் கூடுமென்ற அச்சம் தவிர்க்க வியலாததாகிறது.

‘வருகை’ கதை ஒரு சிறுவனின் நோக்கில் சொல்லப்படுவது. கதை சிறுவனுடைய நிகழ் காலமென்றால், அப்பா, அம்மாவினுடையது இறந்தகாலமாகவும், சிறுமியினுடையது எதிர்காலமுமாகிறது. முதலில் சிறுவனின் இயல்புத்தன்மையான விளையாட்டு, குடும்பத்தால் தடைபடுவதால் அவன்தோற்றவனாகிறான். அவனுடைய சுயமுன்னேற்றக் கருவியான கல்வியும் குடும்பத்தால் பாதிக்கப்படுகிறது. அப்பா குடித்துவிட்டு நனவிலியிலுள்ளவற்றையெல்லாம் கதைப்படுத்துகிறார். வேலை செய்யும் பனியன் தொழிற்சாலை தொடர்பான அவரின் பொருளியல் உலகமும், அவருடைய எம்ஜிஆர் உதிரி அரசியலும், அவருக்குள் அழுத்தப்பட்ட வெள்ளைத் தோல் சம்மந்தப்பட்ட காம உணர்வுகளும் ஒன்றோடொன்று பிணைந்து, சிறுவனுக்கு அவராலேயே வெளிப்படுத்தப்படுகின்றன. தெருவில் குடித்துவிட்டு விழுந்து கிடப்பவர் வீடுதிரும்பவேண்டுமெனச் சிறுவன் வேண்டிக்கொண்டாலும் அவனும் எதிர்காலத்தில் தன் அப்பாவை போல் ஆவான். ஏனெனில் அவனும் அப்பாவை போல் அடியைத் தவிர வேறொன்றும் அறியாமல் வளர்பவன். ஆனால் அவனுடைய அம்மாவின் வேண்டுதல்கள் அவனை வேறாக்கவும் செய்யலாம். இரண்டுக்கான வாய்ப்புகளையும் கதை திறந்து வைத்திருக்கிறது.

‘மதில்கள்’ என்ற கதையில், மஞ்சுளாவின் குடிகாரக் கணவன் பெயர் மது. குழந்தைப் பேறில்லாதது அவளுக்கு வேண்டுமானால் குறையாயிருக்கலாம், அவனுக்கு இழப்பாயில்லை என்றுபடுகிறது. அவன்குடித்து, சூதாட்டத்திலும் தோற்று வீட்டுக்கு வந்துமனைவியைத் தாக்குகிறான். எதெல்லாம் வீட்டிலுள்ளதோ அத்தனையாலும். முக்காலி, முருகன் படம், நிலைக் கண்ணாடி. மஞ்சுளா குழந்தை வரம் வேண்டி கருட தரிசனத்துக்குக் காத்திருக்கிறாள் என்னும் தகவல் போகிற போக்கில் கதை நடுவில் வருகிறது. முடிவில் அதே கருடன் தோன்றுகையில் அவளால் வணங்க முடிவதில்லை.

‘வாக்குமூலம்’ கதையின் முக்கியப் பாத்திரங் களெல்லாம் பெயரற்றுப் பொதுப்படையாயிருக் கின்றன. ஆனால் உதிரி பாத்திரங்கள் அத்தனையும் பழனிச்சாமி, ராஜேந்திரன், பாலன், மரகதக்கா, மகாதேவன் சார், பத்மநாபன் அண்ணா, சுந்தரியக்கா என்ற பெயர் அடையாளங்களுடனிருக்கின்றன. இக் கதையை நிகழ்த்துபவன் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரத்துடன் கொலையும் செய்து போதையில் பெற்றோரை நினைத்தபடி தற்கொலைக்காளாகிறான். கிணற்றை நோக்கி உள்ளாடையுடன் நடக்கிறான். நீரில் மிதக்கையில் நிர்வாணமாக மிதக்கிறான். இதுபோன்ற இடங்கள் வாசிப்பால்தான் நிரப்பப்பட்டாக வேண்டும். இப்படி அனைத்தையும் கூறிவிட்ட மேற்தோற்றத்துடன் கதைகள் இயங்கினா லும் உள்ளே வாசிப்பதற்கு நிறைய இடைவெளிகளைக் கொண்டிருக்கின்றன.

‘இரவு காட்சி’ கதையில் இருவர் இரவுக்காட்சி திரைப்படம் செல்கிறார்கள். அவர்கள் மேம்பாலத்தின் அடியில் திரும்பவேண்டியதாகிறது. அங்கு மேலேயுள்ள வெளிச்ச உலகம் தலைகீழாக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. பிச்சைக்காரர்கள் வருவாயைக் கணக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் தொழில் மும்முரமாக நடக்கிறது. ஒரு சிறுவன் கத்தியைக் காட்டி இவர்களைக் கொள்ளையடிக்க முயலுகிறான். இவை எல்லாவற்றிலும் கதைசொல்லி வெறும் பார்வையாளனாக மட்டுமில்லாமல் பங்கேற் பவனுமாகிறான். பிச்சைப்பாத்திரத்தை பிடுங்கி வீசுகிறான். சிறுவனை எதிர்க்கிறான். பாலியல் உறவு கொள்ள விழைகிறான். பாலியல் தொழிலாளியை இரவில் தாக்கியதோடு மட்டுமில்லாமல் பகலிலும் கண்டுபிடித்துத் தாக்குகிறான். நகரில் காவல் துறையின் தீவிரக் கண்காணிப்பு அமுலாக்கப்பட்டிருந்தது என்று கதையில் ஒரு வரி வருகிறது. அது கதையின் அச்சாகிறது. கடும் ஒழுக்க விதிகள் மறுமுனையில் எல்லையற்ற மீறலைதான் உருவாக்கும் போலும்.

இரண்டாவது தொகுப்பிலுள்ள ‘அரூப நெருப்பு’ கதையும் குடும்பமெனும் அமைப்புத் தன்னை மறு உற்பத்தி செய்துகொள்வதைக் காட்டுகிறது. அதன் கதைசொல்லியால் ஓர் உதிரியாக இருக்கமுடியவில்லை. குடும்பம் தரும் குறைந்தபட்ச பாதுகாப்பை பெற விரும்புகிறான். அதற்குத் தடையாகவுள்ள சக குடும்ப மனிதர்களை இயல்பான தந்திரத்தால் நீக்குகிறான். இறுதியில் அவனால் அக் குடும்பத்துக்குத் தலைமையேற்கவும் முடிகிறது. அது,குடும்பத்தின் ஓர் அங்கமாக மாறினால்தான் ஒருவரால் பிற நிறுவனங்களிலும் பங்கு பெற முடியும்என்ற நிலையிருப்பதைக் காட்டுகிறது. அப்போதுதான் வாழ்க்கை இன்பத்தைச் சுலபமாகத் துய்க்க முடியும் என்பதையும்.

இரண்டாவது தொகுப்பிலுள்ள மற்றொரு கதை ‘வாசனை’. பொதுவான கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசமான பிணவறையின் பின்புலத்தைக்கொண்டது. பிணவறை என்பது ஒரு வீட்டை ஒப்பீடுசெய்துவிடுகிறது. அதன் பணியாளன் இரண்டுக்கு மான சங்கிலிப் பிணைப்பு. பிணம் ஈறு தெரிய அவன் இருப்பை நோக்கி கேலியாக நகைப்பதையும் நுண்மையாகக் காட்டுகிறது. அவன் சொல்லலில் மனைவி உணர்ச்சியற்ற பிணத்தை ஒத்திருக்கிறாள். அதனால் சவங்கள் அவனுக்கு உடன் வாழும் உறுப்பினர்களாகிறார்கள். அவளுடைய கூறலில் கணவன் பிணங்களுடன் வாழ்பவன். அவளுடைய உயிர்ப்பான குடும்ப உலகில் பிணமான அவனுக்கு இடமில்லை.

இக்கதைகள் பெரும்பாலும் இயல்பு முடிவுகளைக் கொண்டிருப்பவை. அவை எப்போதும் திடீர்த்திருப்பங்களோடிருப்பதில்லை. எளிய மனிதர்களின்கதைகளாதலால் சாதாரண முடிவுகள் என்கிற வெளித்தோற்றத்தைக் கொண்டிருப்பவை. எழுத்தாளர் வண்ணநிலவனின் பல கதைகள் இயற்கையின் சிறுசலனங்களின் முத்தாய்ப்புகளுடன் முடிகின்றவை. அவை பிரபஞ்ச இயக்கத்தைப் பிரதிபலிப்பதின் சிறு படிமமாகும். அவ்வாறு கே.என்.செந்திலின் ‘மீட்சி’ கதை, ‘பெரிய மழை பெய்வதற்கான முஸ்தீபுகளோடு தூறல்கள் சடசடவென விழத்தொடங்கின’என்று முடிகிறது. இரண்டாவது தொகுப்பிலுள்ள ‘வெஞ்சினம்’, முதல் தொகுப்பிலுள்ள ‘கதவு எண்13/78’, ‘காத்திருத்தல்’, ‘வாக்குமூலம்’ போன்ற கதைகள், வாழ்க்கையின் இறுதியாயிருக்கும் மரணத்தில் போய் முடிகின்றன. வேறு சில கதைகள் நாவல்களினுடையவைபோல் தன்னியல்பான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. அவை நெடிய வாழ்வின்அடுத்த அத்தியாயத்துக்கான தொடக்கமாய் இருக் கின்றன போலும்.

இக்கதைகளில், ஒரு பாத்திரம் பூமியை உதைத்துமிதிக்கிறது. நந்தி எழுந்து நிற்கும்போது உலகம் அழியுமென்றால் அது நிற்கவேண்டுமென மற்றொரு பாத்திரம் விரும்புகிறது. இப்படி மனித மனதினடி யில் உறைந்துள்ள தீமைகள், அழிவுகள், சிதைவுகள்போன்றவற்றைதான் கதைகள் தரிசனமாக முன்வைக் கின்றன. திருடனை நோக்கி ஒரு குழந்தை பறக்கும் முத்தத்தை வழங்குவது, தெருவில் குடித்துவிட்டு வீழ்ந்திருப்பவர் வீடு திரும்பவேண்டுமென ஒரு சிறுவன் நினைப்பது போன்றவை அபூர்வமான தருணங்கள். அப்படி முளைத்தெழுபவற்றையே இக்கதைகள் மறைமுகமாக  உணர்த்த நினைக்கின்றன.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer