பூவன்னா சந்திரசேகர் கவிதைகள்


பகிரு

எனக்குத் தெரியும்
நகரும் புகைவண்டியின்
தடத்தில் சிதறிக்கிடக்கும் கரிக்கற்கள்
என் மழையின் வெடிப்பில் பிறந்தவை
கக்கும் புகை கூடி
மேகமாய் பொழியும்
அலைக்கழிப்பில் மிதக்கும்
அமில நதியின்
நாவாயில் கிடக்கிறேன் நான்
சேராத இரு தண்டவாளங்கள்
தோளில் சுமந்தே
இத்தனை காலமாயும்
திரிந்தலைந்தேன்
போக்கிடம் வரத்திடம்
ஏதுமேயில்லை
வெறுமனே
எல்லாமும் வெறுமனே தான்
புரளாத ரயிலை
மயிர்ப்பூச்சியின் நிமித்தமாய்
கவிழ்த்திருக்கிறேன்
தொலைத்துவிட்ட நிறுத்தங்களை
மீள அடையவே முடிவதில்லை
இத்தனை நூற்றாண்டுகளையும்
அப்படித்தான் கழித்திருந்தேன்
தினசரி நிறையிரவின் சொப்பனமூடே
காலேறி அரவாய்
சங்கழுத்தும் தண்டவாளங்கள்
விட்டெரிய எத்தனித்தும்
எளிதில் மறந்தும்விடுகிறேன்.
சிண்டு புதர் தெறிக்க
ஊடே பாய்கிறது
செவலை முயல்
பிரியாய் வெடிக்கும்
நல்ல திடமேகங்கள்
இளமஞ்சள் தயிர்க்கட்டியாய்
மினுங்கி மினுங்கி
ஒளிந்துகொண்டிருக்கிறது
வழு மழை இழுக்குமுன்
சுள்ளி பொறுக்க மலையேறிய ஆத்தா
இடி பிளக்க விறகானாள்
கருவடி முனியனுக்கு
கூட்டி எரியும் சுடலையில்
நெய் ஒழுக
முற்றல் சேவலை
மூன்றாம் நாள்
சூட்டான் கொடுத்தான் அப்பன்
ஆத்தா மாண்ட
தினம் மூன்றில்
இன்னொரு மின்னல்
சவுக்காய் விழ
ஆத்தாளின் மஞ்சளாய்
மஞ்சளேறிப் பொரிந்தது
கடை வானம்.
சொட்டலில் நிறையும்
நீர்த் தொட்டி அடித்துவாரமற்றது
விளிம்பு தழுவி வழியும் ஏதும்
மட்டம் முட்டாமல் கரையும்
எங்கும் இவ்வெளியில்
வால் சுண்டி துடிக்கும்
லார்வாக்கள்
அம்மணமாய் வெம்மையில் புரளும்
என் பழைய ஆல்பத்தின்
புகைப்படம்
ஈரக்குலை நடுப்பாத்தியில்
தேங்கும் செந்நீர் பெருக்கும்
ஆயிரமும் ஆயிரத்தொன்றும்
துண்டம் பிண்டமாய் துளிர
நாள திரவ ஊற்றில்
நீந்தச் செய்வேன்
வரள் தொண்டை குளமாகும்
பின் மதிய பொழுதொன்றில்
ஒன்றின் பின் பிரிதொன்றாய்
லட்சோப லட்ச இருள் குட்டிகள்
பிரசவச் சுமையாய் ஈனும்போதில்
தணியும் வெயிலுள்
இறந்தும் போவேன்
உருவற்று வளரும்
உயிர்பெற்று தனித் துண்டமென
வழியிடை விதை வழித்தெறியும்
பத்தைக் கூடாய் இழக்குமெடை
காற்றாய் கனிய
நாசித்துளை இரண்டும்
தொண்டைக்குழி சிலவும்
தெளிக்கும் வெக்கையிலா குருதி
குரல்வளை அறுக்கும்
வான்மீன் காம்பு
துருநீரில் சிகிச்சைக் கத்தியாய்
கழுவப்படும்
தைலமணம் துளிர்க்கும்
தர்மாஸ்பத்திரி வராந்தா
மொய்த்துக் குவியும் ஈப்பூச்சியூடாய்
சிமிட்டிப் பறக்கும்
இறுதியின் சுவாசமே
உனக்கும் சேர்த்தே தான்
எனதிந்த ஆமென்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer