பால்புதுமையினர் கவிதைகள்
Allpoetry.com  இணையத்தளத்திலிருந்து.

தமிழில்: காளிங்கராயன்

பகிரு

துயரத்தின் நிறங்கள்

மனித சமூகத்தில் உலகெங்கிலும் கறாரான இருமையின் எதிர்வுகளால்(0:1, ஆண்: பெண்) கடுமையான உடல் - மனச்சிதைவிற்கு ஆளாகிறவர்களாக பால்புதுமையினரே இருந்துகொண்டிருக் கிறார்கள்.

பருவ மாற்றங்களின்போதான உடலியல் முகிழ்வுகள் பொதுவாக மனிதர்களுக்கு புதுமையின் ஒளிர்வாக- பரவசமூட்டுவதாக - காலத்தின் வசந்தமாக அமைந்துவிடுகிறது. 

ஆனால், அதுவே பால் புதுமையினருக்கு நரகத்தில் நுழையும் கொடுந்துயராக இருக்கிறது.

அத்தகைய நோவுகளையும் பாடுகளையும் உலகெங் கிலும் உள்ள பால்புதுமையினப் படைப்பாளர்கள் பல்லாயிரம் பக்கங்களில் எழுதி வைத்துள்ளனர்.

அதில் கவிதையில் எளிய சொற்களின் கோர்வையில் மிகப்பெரிய விசயங்களைச் சொல்லிச் செல்கின்றனர். அக்கவிதைகளில் படரும் துயரத்தின் சில நிறங்கள் ...

Allpoetry.com  இணையத்தளத்திலிருந்து.

உன் மகன்...

தடை செய்யப்பட்ட அப்பெயரை
தட்டச்சு செய்கையில்
நான் தொட்டப் பலகையின் ஒவ்வோர் விசையும்
என் விரல் நுனிகளை எரித்தன
உன் பெற்றோரின் கேள்வி
“இதிலென்ன தவறு, நீயேன் 
இதை விரும்பவில்லை?”

அவர்கள் உனக்குச் சொல்கிறார்கள்
நீ ஒருபோதும் அவர்களது மகனாக
இருக்க  முடியாதென
ஆனால், நான் எப்போதும் அவ்வாறுதான் இருக்கிறேன்

அந்தப் பெண் இறந்து விட்டாள்
வெகுகாலம் முன்பே அவள் மறைந்துவிட்டாள்

ஆனால், அவன் இங்கேதான் வாழ்ந்துகொண்டு
மற்றும் உயிருடன் இருக்கிறான்
இறந்தவொரு உடலத்தைக் காட்டிலும்
உயிருள்ள மகன் மேலன்றோ...

உங்கள் மனங்களில் அவள் இறந்துவிடவே
நான் விழைகிறேன்
ஏனெனில், நான் அவளில்லை
அவள்
வெகுகாலம் முன்பே மறைந்துபோய் விட்டாள்.

- சலிம் வைஸர்

முடிவற்ற...

அந்தச் சிறுமி தன் முடிவற்ற இரவுகளை
கண்ணாடிக்கு முன்பே கழித்தாள்
தனது மாறுபட்ட பிறப்பினை விரும்பியவண்ணம்
அவள் வேண்டுகிறாள்
தனது குரல் தடித்த அழுத்தமான ஒன்றாக இருக்கலாகாது என
தனது கணுக்கால்கள் மயிரடர்ந்ததாக
இருக்கலாகாது என
தனது தோள்கள் மிக அகன்றதாக
இருக்கலாகாது என
தனது மார்புகள் தட்டையானதாக
இருக்கலாகாது என
வேண்டினாள்
யாசித்தாள்
பிராத்தித்தாள்
தன் மாறாத் துயர் மீண்டு
வெறுமை அகன்று போகவென்று
ஒரு நாள் அவளது இறந்த உடலத்தை
அவர்கள் கண்டடைந்தனர்
அவளது இறுதி அடக்கம்
நடைபெறவுள்ளது - ஓர்	
ஆணின் உடலுக்கானதாக.

-டெஸ்மொமென்ட்

குரல்கள்

மக்கள் மென்மையான குரல்களைப் 
போற்றிப் புகழ்கின்றனர்
அவை
அன்பும் அரவணைப்பும் நிறைந்த குரல்கள்
இனிமையும் நம்பிக்கையும் கொண்ட குரல்கள்

கரகரப்பான குரல்களின் மீது அவர்கள் மையல் கொள்கிறார்கள்
ஆண்மையும் ஆழமும் மிகுந்த குரல்கள்
பாதுகாப்பு உணர்வு தரும் தொலைதூரக் குரல்கள்

எனது கரடு முரடான குரல்களை
எவரும் பொருட்படுத்துவதில்லை
அது உடைந்து திரிபுற்ற குரல்
ஆழமற்ற - அதே நேரம்
பெரும் ஓசையற்ற குரல்
அமைதியான ஆனால்
மென்மையில்லாக் குரல்
பாதுகாப்பான - ஆனால்
ஆண்மையற்ற என் குரல்

எவருமே பொருட்படுத்துவதில்லை
ஆணாகப் பிறந்திடாத
ஓர் சிறுவனின் குரலை.

-மெனோடொரா கெய்

மயிர்

கருத்த கோடுகளும் குறுகிய கம்பியிழைகளும்
சிந்தனைக்குத் தடையாக வெளியே துருத்திக்கொண்டிருக்கும்
ஓர் எளிய தொடுகை மட்டுமே போதும்
அது கைகளின் அலைச்சலை நீக்கிப்
பின் மனதை விழிப்புறச் செய்யும்

ஓர் தகுதியான உடலில் இது
முதிர்ச்சியின் அடையாளம்
அழகான முரட்டுத்தனமான
நிச்சயம் கவர்ச்சிகரமான அடையாளமே அது

ஆனால் எனக்கோ அதுவொரு சாபம்
என்றென்றைக்குமான
ஓர் துயரத்தின் நினைவூட்டல்
நீயொரு போலி நீயொரு தோல்வி என்பதாக
அது சதியின் தோற்றுமுகமாயிருக்கிறது

கண்ணாடியில் பார்க்கையில்
பயங்கர நிழலெனத் தெரிகிறது
சவரம் அவசியத் தேவை - ஒருவேளை
அதைத் தீயிலும் பொசுக்கலாம்
ரசாயனங்கள், இடுக்கி, லேசர் மற்றும் மெழுகு
எல்லாம் எனக்கான ஆயுதங்கள்
இவைகளின்றி
என்னால் நிம்மதியாக இருக்க முடியாது

என்மனம் பலவீனமானது
அது உடைந்து நொறுங்குகிறது
நினைவுகளின் வேதனை என்னை
இருளுக்குள் தள்ளுகிறது

மயிர்களும் கனத்த சதைகளும் கொண்ட
கூண்டினுள் மீண்டும் நான் சிக்குண்டேன்
எனது இடுப்பு மிகக் குறுகியது
தோள்கள் நல்ல அகலமானவை
என் மார்புகள் மிகத் தட்டையானவை
வயிறு வீங்கிய வடிவிலானது
என் மயிர் மெல்லியதாக இருக்கவேண்டும்
அவை விரைவாக வளர்வதை
நான் வெறுக்கிறேன்

நீங்கள் நினைப்பதுபோல்
இதுவென்றும் நகைச்சுவை அல்ல
நான் அச்சம் கவலை மற்றும் மனச்சோர்வில்
வீழ்ந்திடும்போது சில மயிர்களின் மேல் மட்டும்
அதீத கவனம் செலுத்துகிறேன்

இயற்கையன்னை உதவிக்கு வருவாள் 
மயிரின் நிறம் மெதுவாக மங்கும்போது
அதன் ஒரு பகுதியை 
அவள் எடுத்துச் சென்றுவிடுகிறாள்

நான் உடைந்து நொறுங்கி வீழும்பொழுதிலெல்லாம்
எனக்குள் முணங்கிக்கொள்கிறேன்
உறுதியுடன் இரு
ஒன்பது ஆண்டுகளில் ஓர் மாற்றம் உருவாகும்
நான் ஒவ்வொருமுறை கடந்து செல்லும்பொழுதும்
கண்ணாடி என்னிடம் கிசுகிசுக்கிறது
இறுதியில் அமைதியே நிலவுமென்று 

என் விருப்பங்களை நிலைநிறுத்த
எனக்கேயான நங்கூரங்கள் இருக்கின்றன
ஆனால் அவை அச்சத்தின் தொலைகாலத்திற்கு
அப்பால் உள்ளன

எனவே, இந்த மூடுபனிக்குள் சிக்குண்டவாறு
நானிருக்கிறேன்
எரியும் கோபத்தின் கடும் மன அழுத்தத்தின்
வாழ்வினை நகர்த்தியவாறு.

-சராஃபியா

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer