தலைவாசல்


பகிரு

அன்புடையீர் வணக்கம்.
பேரிடருக்குப் பிறகான பெருமழை ஓர் ஊழிக்காலம் போல் வந்து சனங்களை உறுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. அல்லல் மேல் அல்லல்பட்டே அவர்கள் இப்பொழுது தங்கள் அன்றாடங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கண் கெட்டாலும் ஊன்றுகோல் கிடைத்தது போல மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. நம் உழவர் பெருங்குடியினரின் போராட்டம் பெற்ற வெற்றி. ஒன்றிய அரசுக்கெதிரான நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அறப்பிடிவாதத்துடன் போராடிய நம் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த செவ்வணக்கம்.


உலைக்களமாக இருக்கவேண்டிய நம் இலக்கியத்தளம் விளம்பரக்காடாகி ஒன்றிரண்டு தசாப்தங்களாகிவிட்டது. என்றாலும் ஓயாது இன்னுமே அதன் ஆர்ப்பரிப்பு, இரைச்சல் நாள்பட்ட ரோகமாய்த் தொடர்கின்றது. எழுத்து வாசிப்பு என்பதெல்லாம் அவரவர் விருப்ப செயல்பாடு ஆத்ம திருப்தி.

அவதானம், விவாதம், உரையாடல், விமர்சனம், மதிப்பீடு, அங்கீகாரம் என்பவை படைப்பால் விளையும் எதிரீடுகள். வாய்த்தால் நலம் அன்றேல் அஃதொரு பெரும் பிழையன்று. அதையுணராத அறிந்தும் அறியாத சிவமணிகளாகிய நம் அண்ணாவிகள் கிடந்து அங்கலாய்ப்பதுவும் அழுது புலம் விழுந்து புரள்வதுவும் காணச் சகிக்கவில்லை. தானாகப் பழுப்பது நல்லதா இல்லை தடியால் அடித்துப் பழுக்க வைப்பதா.

உப்பிருந்த பாண்டமும் உபயமிருந்த நெஞ்சமும் தட்டியல்ல, தானே திறக்கும்.

உண்கின்ற சோற்றுக்கு உப்பைப் போட்டுத் தின்னும் உணர்த்தி உள்ளவர் எவரென்றாலும் சரி, பாவிக்கும் புழங்கும் படைப்பு வகைமை எதுவென்றபோதிலும் சரி, கண்டிப்பாய் அவை சோதிக்கும். தின்றதை நெஞ்சு அறியும். அப்படி அந்த உணக்கை கெட்டவர்கள் வந்து ஓர் எழுத்து மீது, ஒரு பிரதி மீது வெறும் வாய் வார்த்தையாடினால் உண்மையான உணர்வாளனுக்கு அது நிறைந்த அவமானமே அன்றி வேறில்லை.

நிற்க நம் சகோதரர்களின் நலம் விரும்பி சொந்த செலவில் யான் சில திட்டங்கள் செய்யலாமென்றிருக்கிறேன், அவையாவன,

முதல் கட்டமாக, மாதம் இருபதாயிரம் சம்பளத்திற்கு மும்மூன்று நபர்களை நேமிப்பது. (மூன்று பணிமுறை) ஒன்றியம், வட்டம், மாவட்டம் வாரியாக.

பிரதம பணிகள் பின்வருமாறு…

1

எழுத்து என்று ஓர் அட்சரம் நண்டு, சிண்டு, குஞ்சு, குழுவான் என எவர் உதிர்த்தாலும், காணூடகம், அச்சூடகம் என்றில்லை குமுகாய ஊடகமெது என்ற பொழுதிலும் ஷணம் பிசகாமல் சதா புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும். முகப்புத்தகம், மேம்பாட்டுப்பக்கம், தனிப்பக்கம், விளம்பரப்பக்கம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், புலனம் என்றவர் அவர் வினையாற்றும் தளம் ஒன்றுவிடாமல், வினாடியும் தாமதிக்காது சென்று லைக் இட வேண்டும்.

அவசியம் வாழ்த்துகள், ஆஹா ஆஹா, அற்புதம் அற்புதம், சக்கையா இருக்கேடா, பின்னீட்டீங்க, கொன்னுட்டீங்க, சூப்பர் சூப்பர், இது வேற லெவல், மரணமாஸ், செம, கெத்து, கண் திறந்தது, திவ்யதர்சனம் போன்ற ஹிதமான பதங்களைச் சொல்லி தொடர்ந்து தடவி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இமைப்பொழுதும் சோரலாகாது.

தினசரி, வாராந்திரி, மாதாந்திரி மற்றும் அவற்றின் இணையப் பிரசுர பருவ இதழ்களில் பிரசுரமாகும் சிறியதோ பெரியதோ அதைப்பற்றிக் காரியமில்லை. அவற்றைப் படியெடுத்து ஒரே ஒரு நபர் பாக்கியில்லாமல் சகபாடிகள் பக்கத்தில் டேக் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

மறக்காமல் மேற்படி பாராட்டுப் பதங்களை இட்டு நிரப்பிய வாசகர்கடிதம், பின்னூட்டச் சேவைகளை 24 x 7 நாட்களும் செய்யவேண்டும். முறை வைத்து அலைபேசி அழைப்புகள் வழி அவர்களுக்கான கவனத்தைச் சரியாகக் கொடுக்கப் பால்மாறக்கூடாது. அவர்கள் வேண்டாம் என்றுதான் கதறுவார்கள் விட்டுவிடக்கூடாது.

படைப்பாளன் உயிர்ப்புடன் பிழைத்திருக்க இன்றியமையாதது அது. அவர்தம் ஆவி நீங்கி அஸ்தியாய் கரையும் பரியந்தம், நுகர்வாளர் இறந்தாலும் அவரது வாரிசுகள் வாயிலாகக் கைங்கர்யம் தொடரவேண்டும்.

2

எழுதி எழுதி எம்மக்கள் விளைவித்த மாற்றங்கள், ஏற்றங்களுக்குத் தனிநபர்கள் புகழாரங்கள் போதவே போதாது. ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கும் குறையாத ஹோட்டல்களில், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக வளாகங்களில் கூட்டங்கள் போட்டு திரள் திரளான மக்கள் விண்ணதிரும் புகழாரங்களை
முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

3

நோபல், புலிட்ஜர், புக்கர், இயல் விருது, விளக்கு விருதுபோன்ற உலகளாவிய விருதுகள் மற்றும் ஞானபீடம், சாகித்திய அகாதமி, விஷ்ணுபுரம் போன்ற உள்ளூர் விருதுகளுக்கு அவற்றின் தெரிவு குழுக்களுக்கு எ.கலைஞர்களின் எழுத்துவன்மை, நுட்ப திட்பங்கள் ஆகியவற்றை நுணுகி ஆய்ந்த சான்றுகள் மற்றும் கோடிக்கணக்கான வாசகர் ஒப்பங்களுடன் பரிந்துரைகளைச் சமர்ப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

வருடங்களுக்கோர் முறை விருதுகள் வழங்கும் கேவலமான முறைமைகளை மாற்றி டெய்லி பேசிசில் அவை வழங்கப்படல் வேண்டும். (ஆளுமை, ஆகிருதி இவற்றைக் கருத்தில் கொண்டு அன்றாடம் மூன்று நேரங்கூட விருதுகள் வழங்கப்படலாம்) அவனி ஐம்பத்தி ஆறு தேசங்களிலும் அங்கு வழங்கும் ஆறாயிரத்து ஐநூறு மொழிகளிலும் விருதுபெற்ற பிரதி மொழிபெயர்ப்பு செய்யப்படல் வேண்டும்.

4

முக்கியப் பதிப்பகங்களான காலச்சுவடு, தமிழினி, உயிர்மை, எதிர் வெளியீடு, எழுத்து போன்ற பதிப்பக உரிமையாளர்களிடம் அன்னார்களது ஆக்கங்கள் குறித்து அவை பிரதிகளாவது குறித்து முக்கியமாக, கெட்டி அட்டை செம்பதிப்புகளாவது குறித்து நல்ல வார்த்தைகள் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

மூப்பு அடிப்படையில் அங்கு வெளியிடப்பெறும் நூல்களுக்கு முன்னுரை, பின்னுரை, பிளர்ப் எழுத ஒப்பந்தங்கள் கட்டாயம் ஆக்கப்படவேண்டும். அதைவிடக் கட்டாயம் நன்றி நவிலும் பட்டியல்களில் படைப்பாளிகள் பெயர்கள் தொச்சமின்றி இடம் பெறச் செய்வது.

5

எழுத்தாளன் சமூகத்தின் அங்கம், ஆகையால் அவன் குடும்பத்தின் அங்கத்தினனுமாவான். குடும்பச் சடங்குச் சம்பிரதாயங்கள், காதுக்குத்து, கெடாவெட்டு, திரட்டிக் கல்யாணம், தெவம், தெவசம், வேண்டுதலை, கும்பிடிக்கைப் போன்ற வீட்டு வைபவங்கள் யாவற்றையும் அவனை முதலாக முன்நிறுத்தியே நிகழ்த்தப்படுதல்வேண்டும்.

கூச்சப்படுவான் அவன், அதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. சாதியை மறுத்த திருமணமா இல்லை சாதியை மறுக்காத திருமணமா எந்தத் திருமணமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் நமதன்பர் பதிவேட்டில் ஒப்பமிடாமல், மங்கள நாணை தொட்டெடுத்துத் தராமல் கல்யாணம் நடக்கக்கூடாது. முகூர்த்த கால் நடுவது முதல் பிள்ளைக்குப் பேர் வைப்பது வரை அவனன்றி ஓர் அணுவும் அசையக்கூடாது.

6

நம்மாள் செத்து சிவன் பதி மாண்டு மயன் பதி ஏகிவிட்டால் தேசிய கடற்கரைகள் தோறும் நினைவாலயங்கள் கட்டுவிக்க, நகர, மாநகர, பேரூர்,
சிற்றூர், குற்றூர் பூங்காக்கள், வீதிகளுக்குப் பெயர் நாமங்கள் சூட்ட, மடங்கள், கோயில்கள், மடாலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள் தோறும் தேர் திருவிழாக்கள், கொடைகள், ஆராதனைகள் நடத்த, நடப்பு அரசு சிறப்புச் சட்டங்கள் கொணர உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

அது மட்டுமல்ல பெருத்த, நலிந்த, இளைத்த எழுத்துக் கலைஞர்களுக்குக் குடிமனை, ஓய்வூதியம், வைப்புநிதி போன்ற சகாய நலத்திட்டங்கள்
ஏலவே உள்ளதுதான் என்றாலும் உடன்செயலாக்கம் பெற ஆவண செய்யவேண்டும்.

7

ஏகாங்கியாக அவனிருந்து சிருஷ்டிக்க இலவய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சொகுசுப் பயணங்கள் அதற்கு வேண்டிய ரொக்க ரோஜனைகள் உலகெங்கும் உடன் பரிவர்த்தனைகள் செய்யும்படியான செலாவணிகள் வங்கிகளில் சேவைகளாக்கப்படவேண்டும்.

எழுத்தாளர்கள் எல்லாம் செல்லப்பிள்ளைகள் இதழாளர்களெல்லாம் எடுப்பார் கைப்பிள்ளைகளா? அவர்களது மாத்திரம் என்ன சூத்தப்பங்கா? அதிலும் இணைய இதழ்க்காரர்கள் இருக்கிறார்களே! அப்பப்பா அவர்கள் இலக்கியப் பங்களிப்பு அளப்பரியது. அவர்களாலேதான் இலக்கியம், அவர்களது மட்டும்தான் இலக்கியம்.

வாசக மடையர்களுக்கு இணைய இதழ்க்காரர்களின் அருமை பெருமைத் தெரிவதில்லை. துரோகிகள் ஒரு கண்ணுக்கு வெண்ணையும், ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் வைக்கிறார்கள். நம் சகோதரர்களை நாம்தான் இனங்கண்டு பாராட்டவேண்டும்.

படைப்பாளியாகப்பட்டவர் தனது படைப்பு வெளியான தினத்தில் இருந்து இதழ் சுட்டியை அறிந்தவர் தெரிந்தவர் என்றில்லாது அனைத்து சீவராசிகளுக்கும் பகிர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

படைப்பை வெளியிட்ட ஆசிரியருக்கு, அவரது குடும்பத்தார்களுக்கு, உற்றார், உறவினர்களுக்கு, மாமன், மைத்துனர் என்று எல்லா உறவின்முறைகளுக்கும் நன்றி கலந்த பாராட்டைச் சொல்லிக் கொண்டேயிருக்கவேண்டும் அதாவது ஒரு முறை இட்ட உளுத்த பிசுக்கோத்துக்கு ஒரு நாயாகப்பட்டது தன் ஆயுள் பரியந்தம் குழைந்து வாலை ஆட்டி ஆட்டி விசுவாசத்தைக் காண்பிக்குமே அத்தன்மைபோல.

சிறப்பு வெளியீடுகள் கொணரும் இணைய இதழ் ஆசிரியருக்குக் கூடுதல் பணி நேரம் கூடுதல் சிறப்புச் சேவைகள் தொண்டுகள். அதாவது வீதிதோறும் அவர் உருவம் வனைந்த பதாகைகள் நாட்டி, அவற்றிற்கு மூன்றுகாலப் பூஜைகள், பாலாபிஷேகம், தேனாபிஷேகம், பீராபிஷேகம், பிராந்தி அபிஷேகம், ஆராட்டல்கள், சீராட்டல்கள் என்னென்ன உண்டோ அத்தனையும் செய்தாகவேண்டும்.

முச்சந்திகள், நாற்சந்திகள், சதுக்கங்கள், ஒதுக்குப்புறங்களிலெல்லாம் அன்னாரது பெயரில் அன்னசத்திரங்கள், தண்ணீர் பந்தல்களமைத்து அல்லும் பகலும் அறுபது நாழிகையும் சேவைகள் தொடரவேண்டும். மக்கள் திரளாக உள்ள இடங்களில் எல்லாம் நின்று இலவயமாக அன்னாரது கையடக்கப் புகைப்படங்கள், அன்னாரது படம் போட்ட பயர்னைகள், அன்னாரது
புகழ்பாடும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை விநியோகம் செய்யவேண்டும்.

பிறப்புறுப்பு நீங்கலாக அங்க அவயங்கள் யாவற்றிலும் இணைய இதழாசிரியரின் திருவுருவத்தை (குறிப்பாக நெஞ்சுப் பகுதியில் கண்களுக்குப் பளிச்சென்று தெரியும்படி பெரிதாக) பச்சைக் குத்திக் கொள்ள
வேண்டும்.

மொத்தத்தில் சாவு வீட்டில் பிணமாகவும் கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் அவர்கள் இருக்கவேண்டும்.

கடைசியாக ஒன்று, படைப்பாளர் என்பவரது ஓர் எழுத்தை தானும் வாசிக்காது ஒன்றிய அரசிலோ, மாநிலத்திலோ, ஓர் உயிர் ஜனிக்கவோ, மரிக்கவோகூடாது. மேற்சொன்ன காரியங்கள் தடைகள் ஏதுமின்றி நிலைபெற்று நடக்கும்படியான தோதான நிலையைப் பணியாளர்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஆர்வம் உள்ளவர்கள் மணல்வீட்டு முகவரிக்கு விண்ணப்பிக்கவும். ஒத்தூதிகளுக்கும் துதிபாடிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.


வாழ்த்துகள்!

கோக் நிறுவனம் சர்வதேச அளவிலான இசைஅரங்க கச்சேரித் தொடர் ஒன்றை பதினான்கு ஆண்டுக்காலங்களாக யூடியூபில் நிகழ்த்துகிறது. எட்டாவது பருவத்தில் ஆடிப் அஸ்லம் என்றொரு இருபத்தி நான்கு வயது யுவன் அதில் பாடி இருந்தார். சர்வதேச கவனம்பெற்ற அரங்கில் பங்களிப்பு செய்த அவர் அங்கு வாய்ப்புப் பெறுகையில் அஸ்லாம் தம்கா-இ-இம்
தியாஸ் விருதுக்குச் (பாகிஸ்தான் அரசாங்கத்தின் நான்காவது-உயர்ந்த சிவிலியன் கௌரவம்) சொந்தக்காரர்.

அப்பன் கூத்தாடி ஆயி விவசாயி. அரிதாரம் பூசுகிற பிள்ளைக்கு அரிகண்டமாகயிருக்கிறது எந்திரவியல் பட்டயப் படிப்பு. மூன்று மணி கருக்கலில் வேடந்தரித்து வெளியே வந்தவன் தவசுக் கம்பமேறி கீழே இறங்கும்போது பழைய சோற்று நேரம் தாண்டிவிட்டது. (பகல் பத்துமணி) கூத்து முடிந்து கூட்டாளிகளை அவரவர் யதாஸ்தானம் கொண்டு சேர்த்து இவன் வீடு திரும்பியதும் தோட்டத்தில் பறித்த வெண்டை கொட்ட கொட்ட மூட்டையில் விழித்திருக்கும்.

வேவாரி போன் மேலே போன் போட்டு வாங்காமல் உயிரை வாங்குவார். ஈருருளியில் பாரம் ஏற்றி பறப்பான் மகன் பாலக்கோடு. வந்து சற்றுக் கண்
அயரலாம் என்றால் சம்சாரியின் வாசலில் வேலைகள் வரிசைக் கட்டி நிற்கும்.

குச்சிக்கிழங்கு காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்ச, மாட்டுக்குத் தட்டறுக்க, மடி கனத்த ஆவின் பால் கறக்க, அருக்காணி தங்காளுக்குக் கோழி பொசுக்க.
அந்திப்பொழுது அடி சாயுமுன்னே முந்தைய நாள் கூத்தில் திகைந்திருந்த முந்நூறு பிணக்கு தீர்த்து ஒவ்வொருவராக வருந்தியழைத்துச் சென்று இடம்
சேர தாமதமாக வந்த பிழைக்கு முகத்தில் உமிழ்வான் ஆட்டம் விட்ட பண்ணாடி.

வித்தைக்குச் சத்ரு விசனம் என்று ஒழுகும் எச்சிலை சிரித்த முகத்தோடு துடைத்துவிட்டு பவுடர் போட உட்கார்ந்தால் அன்றைக்கும் வைப்பார்கள் அர்ஜூனன் தபசு கூத்து.

வெற்றிவேலுக்கு வயது இருபத்தி நான்கு. இளையவர் முதியவர் என்று இருபதுக்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றிணைத்து ஜமா கட்டியிருக்கிறான். எல்லோரையும் போல அல்ல ஆட்டக்காரர்கள். ஒவ்வொருவர் மீதும் ஒன்பது கிரகங்களும் கூடி வந்து இறங்கி இருக்கும்.

அஞ்சிக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டுக் கிளைவிட்டு கிளைத் தாவுவது, நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவது, கைக் கொடுத்துக்கொண்டே கடையாணியைப் பிடுங்குவது இப்படி எல்லாச் சேட்டைகளையும் மனம் கோணாமல் சுதாரிக்கவேண்டும்.

இசைக்கலையோ, ஓவியக்கலையோ, நிகழ்கலைக்கலையோ அது எந்தத் தளமாக இருந்தாலும் சரி ஒரு நபர் அங்கே நட்சத்திரமாக மிளிர்ந்து ஒளிவீசும்நிலை அடைய எவ்வளவு அர்ப்பணிப்புணர்வோடு உழைத்திருக்க வேண்டும், எத்தனை ஈடுபாட்டோடு பயிற்சிகள், சாஹித்தியங்கள், அப்பியாசங்கள் செய்திருக்கவேண்டும், எவ்வளவு தேட்டத்தோடு கற்றோரை நத்தி கற்றிருக்கவேண்டும். எண்ணமும் சிந்தனையும் ஒன்றி எத்தனைக் காலம் அதில் ஆழ்ந்து ஆட்பட்டிருக்கவேண்டும்.

இவ்விதமான இயங்கு செல் நெறிகள் குறித்துக் கடுகத்தனை உறுத்தையாவது எழுத்துத்துறை இளவல்கள் கைக்கொண்டிருக்கின்றனரா என்றால் இல்லை. தகுதி தகமை இருந்து அங்கீகாரத்திற்கு ஆசைப்படுவதி
லொரு நாயமிருக்கிறது. ஆசைப்படுவதையே தகுதி தகமை என்று கொள்வது இழிகுணம். அல்லாத ஒன்றைக் கருதக்கூடாது என்றுதான் அவ்வை பிராட்டி ஏற்பது இகழ்ச்சி என்றோதி சென்றிருக்கிறாள்.



பெண்களின் இடுப்பைக் கிள்ளி ஊர்ப்பஞ்சாயத்தில் உதைபடுவது போலான சில்லறை ஜோலிகளை ஆசான் மடத்துச் சீடக்குஞ்சிகள் அவ்வப்போது பார்க்கிறார்கள்.

ஞானம் கெட்ட வெள்ளைச்சாமிகள் மடத்தாயை குருவம்மா என்று அழைப்பது மட்டுமல்ல, அங்க மட்டும்தான் தீவிர இலக்கியம் பண்றாய்ங்க, அங்க மட்டும்தான் நல்லா நொட்டறாய்ங்க, அங்க மட்டும்தான் நல்லா வெரைய்க்கிது, அங்க மட்டும்தான் ஜார்ஜ் ஏறுகிறதென்று மிழற்றித் திரிகிறார்கள்.

நேற்றொரு சீடக்குஞ்சு ஆசான் சொன்னதைமட்டும் படித்தால் போதும் இலக்கிய ஆகிருதியாகிவிடலாமென்று அடாவடி பேசுகிறது. சுயமாகத் தேடிக்
கண்டடையும் திறமும் தீரமுமில்லாத போலிகள் கொட்ட மரத்தை கருடகம்பம் என்கிறதுகள். சரிதான் எருமை மூத்திரம் எறும்பு கண்ணுக்கு ஏகப் பெருவெள்ளம்.


கலைஞர் பெருமக்களுக்குக் காலத்தினால் உதவியயாவற்றைப் பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer