தலைவாசல்
இதழ் 42


பகிரு

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போலாயிற்று. முதல் சுற்றில் விளைந்த தீம்புக்கு மருந்து தேடும் முன்பே இரண்டாம் சுற்று கோவிட் 19 அணுக்கமான உயிர்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போயிற்று. தொடரும் வாதைகள் அவலமாக நிலைத்திருக்கிறது. இதில் ஏழு சுற்றுக்கள் வேறு வருமென்கிறார்கள். கொடுஞ்சூழலில் நமது இன்றியமையாத கடமை சுய ஆரோக்கியம் பேணுவதுபோல சூழல் ஆரோக்கியத்தையும் பேணுவது.


புதிய ஆட்சி, பொருத்தமான நிர்வாகிகள் நம்பிக்கையாக இருக்கிறது. உரியவர்கள் உரிய இடத்தில் இருப்பது அவசியம். மேடுபள்ளங்களை இட்டு நிரப்புவதை ஆட்சியாளர்கள் சாமார்த்தியமாகக் கொள்ளாது மக்களுக்கான ஆட்சி நிலைபெற்று இருக்க ஆவண செய்துகொண்டே இருக்கவேண் டும். பட்டியல்கள், விளம்பரங்கள், பதாகைகள், வெளிச்சங்கள், பாராட்டு பத்திரங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் ஓட்டுப்போட்டு உக்கார வைத்த மக்கள் நலனில் சமரசமின்றி கருத்தை வைக்க வேண்டும். அன்றாடம்  அரசுக்கு துதி பாடாமல் தொன்மையான தமிழ்க்குடிகளாகிய நாமும் ஓயா தொழியாது அறிவு விழிப்போடு இருக்கும்படியான நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டும்.


ஆடு அறுக்கும் முந்தியே அப்பாவெனக்கு புடுக்கு கறி என்னும் பிள்ளைகள் தாளில் எழுத்து விழும் முன்னே அதைப் படிக்க, பாராட்ட, அங்கீகரிக்க, ஆள் வேண்டுமென்கிறார்கள் அதுவும் வல்லிய கம்பெனி ஆள். பிள்ளைகளுக்குத்தான் பல்லூருகிறதென்றால் தோப்பன்மார்களாவது சித்தே நோகாமல் கடிக்க வேண்டாமா? முன்னேயாவது வலைப்பூக்களில் உருப்படியாக சிலர் எழுதிக்கொண்டிருந்தார்கள். முகநூல் வரும்படிக்கு அது மூன்று நான்கு வரியாயிற்று. இப்போதிந்த கிழடன் ஹவுசில் விடாது பதிமூன்று மணித்தியாலங்கள் கதைக்கிறார்கள். ஒரு பிரதியை எடுத்து தொடர்ந்து பதிமூன்று மணி நேரம் படித்த பாவிகளுண்டா? இன்றியமையாமை கருதி ஒரு ஆக்கம் குறித்து சிந்திக்க, கற்க, விமர்சிக்க, விவாதிக்க, எழுத, இத்தனை முனைப்புக் காட்டியிருக்கிறோமா? இதனால் சகலமானபேர்களுக்கும் சொல்லிக்கொள்வதென்னவென்றால் இலக்கியமென்பது படைப்பதன்று. வாய்க்குக் கேடாக வளவளவென்று பேசிக்கொண்டிருப்பது.


தளத்தில் இப்போதியங்குகிற இளையவர்கள் தனக்கு மூத்தவர்களோடும் அவர்தமக்கு மூத்தவர்களோடும் மனம் திறந்த இலக்கிய உரையாடல் தன்னை வேண்டுவது வாஸ்தவம்தான். ஆனால், அவர்களோ குரங்கானத்தை மருந்துக்குக் கேட்டாலது மரத்துக்கு மரம் தாவுகிறதைப்போல முறைத்துக் கொண்டும் விரைத்துக்கொண்டும் ஏற்ற கூடாரம் நமக்கெதுவென்றே தேடித் திரிகிறார்கள், வருங்காலம் பிள்ளைகள் கையில் என்று கருதாது.

(தம்பிகளும் லேசுப்பட்டவர்களல்லர் அவர்களும் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் எரியவேண்டுமென்கிறார்கள். கற்றாரைக் கண்டு காமுறுவதில்லை. விகல் பம் இன்றி இடைப்பட்டபேர்களிடம் உரையாட இணக்கம் காட்டுவதில்லை. கூடாரத்து தலைவர்களே வந்துதான் செவ்வெண்ணை வைக்கவேண்டுமென்று அடம் பிடிக்கிறார்கள்.)

விளையாட்டு முசுவில் உள் நுழைந்து குறுக்கு சட்டத்தைச் சாய்த்தால் வீதியில் ஒடியெடுக்கும் நெச வாளி பழுக்க முதுகிலறைவார். தறிக்குழியில் மிதி பலகையை உடைத்தாலும் முதுகுத்தோல் பெயர்ந்து விடும். ஒரு வண்டியைத் தள்ளி ஒன்பது வண்டியை உடன் சாய்த்தால் சைக்கிள் கடை மணியக்காரர் திருப்புளியில் கைமுட்டியை உடைப்பார். கிணற்றடியில் உக்கார்ந்து பேத்திக்கி பேன் ஈத்தும் கெண்டிக்கார கிழவியின் பின்புறம் சென்று சிண்டுப் பிடித்திழுத்து கீழே தள்ளினால் கன்னம் ஓய் என்க காது காதாய் அப்பு விழும். பூவாயா வீட்டு முற்றத்தில் அங்காயா புடைத்த சாமைத் தவிட்டில் காலிட்டு விளையாடும் நாய்க்குட்டிக்கும்  உலக்கைத்தடியில்  ஓரிடி  விழும்...

ஜூலை மாத அரங்காற்றுகை ஒன்றில் பாஞ்சாலி சபதம் கூத்து வைத்திருந்தோம் பென்னாகரம் அருகிருந்த கரியப்பன அள்ளி  கிராமத்தில். வீட்டுக்கு விலக்காகி அந்தப்புறமிருக்கும் பாஞ்சாலியை கௌராதிகளின் தலைவன்  துரியோதனன் தன் தம்பியாகிய வீரப்புலி துச்சாதனனை விட்டு சபைக்கிழுத்து வந்து துகிலுரிந்து மானபங்கம் செய்யப் பணிக்கிறதுபோலான ஒரு காட்சி. தமையன் சொல்லை தலைமேல் வைத்து, கொலுவிலிருந்து குதித்தோடிச் சென்று, அவமரியாதையான வார்த்தைகள் பேசி அழைக்கிறான் அவன் பாஞ்சாலியை. சிறுவன் சொல்லை செவிமடுக்காமல் அவளிருக்க, சிகையைப்பிடித்து இழுக்கப்போகிறான் துச்சாதனன். எட்டி அவர் பாஞ்சாலி வேடதாரியின் சிகையைப் பிடித்தாரோ இல்லையோ எங்கிருந்தோ வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல சீறிப்பறந்து வந்தாளொரு அம்மை. எகிறிப்பிடித்தாள் வீரப்புலியின் குரல்வளையை. அவளை விலக்கி சபைக்கு அப்புறம் கொண்டு செல்வதற்குள் நான்கு ஆகிருதியான ஆடவர்களுக்கு நாக்கு தள்ளிவிட்டது. பார்க்க பூஞ்சையான பெண்மணி, பத்து தினங்கள்கூட ஆகியிருக்கவில்லை அவளுக்கு கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சையாகி. நோய்மையுற்ற உடல்,  நலிந்த சிந்தனை.  காட்சி வழி ஒரு அத்துமீறல் அவளுக்குள் ஓர் உணர்வு  தாக்கத்தைத்  தப்பாமல்  உண்டு  செய்கிறது.

வினையில் ஒன்றியிருக்கும்போது நிலைக்கு ஊறு விளைந்தாலங்கு எதிர்வினை பிறக்குமென்பதே விதி. உப்புப் போட்டுத் தின்பவர்கள் உடம்பில்

நல்ல உணர்த்தி உள்ளவர்கள், செய்யும் காரியமும் அதுவே. நம்மவர்கள் நாடி செத்தவர்கள். எசக் கற்றவர்களை வசக்கு வசக்கு என்றால் அவர்கள் என்னதான் செய்வார்கள். அல்ப ஜகவாசம் பிராண ஜங்கடம்.


எழுத்தொன்றும் மகத்துவமில்லை. எழுதி இங்கே புரட்சி விளையாது. ஏன் அது அரை வயிற்றுகஞ்சிக் கூட வார்ப்பது உண்மையில்லை. எழுத்தால் ஆவித் துறந்தவர்கள் இங்கே வைத்துவிட்டு போனதைப் பார்க்கில் நாம் பண்ணுவது எள்ளளவும் காணாது. இந்தப் புரிதல் உள்ளவர்கள், இலக்கியத்தை இலக்கியமாகவும், கலையை கலையாகவும், நோக்கும் பக்குவம் உள்ளபேர்கள், உணர்வாளர்கள், செயற் பாட்டாளர்கள் இவர்களுடன் உடன் உழைக்கவே மணல்வீடு அவா கொண்டிருக்கிறது. பேரிடரில் இயற்கையுடன் கலந்த அன்பர்கள் நண்பர்கள் யாவற்றைப்பேர்களுக்கும் மணல்வீடு தனது நெஞ்சார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer