சாதீயச் சழக்கு!

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பகிரு

கட்டுரை

சாதி - ஒரு உரையாடல் என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில், எழுத்தாளர் ஜெயமோகன், தமிழகத்தில் நிலவும் ஒரு தனித்துவமான சமூக நிலையை முன்வைக்கிறார்.

அதாவது சாதிச் சங்கங்களைத் தாண்டி, முற்போக்குப் பேசும் அனைத்துக் கட்சிகளும், சமூகமும், மூர்க்கமான சாதிய மனநிலை கொண்டவை. அரசியல், பொருளியல் அமைப்புகள் கூட அப்படிப் பிரிந்து இயங்குகின்றன.

தவிர, இடைநிலைச் சாதி அரசியல் இருமுகம் கொண்டது. ஒரு பக்கம் அது பிராமணர்களிடம் நீங்கள் தான் சாதியைக் கற்பித்தீர்கள் என்று சொல்லி இழித்தும் பழித்தும் ஒடுக்க முயல்கிறது.

இன்னொருப் பக்கம் அது தலித்துக்களிடம் உங்களிடமிருக்கும் குறைந்தபட்சக் கல்விகூட நாங்கள் போட்ட பிச்சை என்கிறது. தமிழக இடைநிலைச் சாதியினர் எந்தக் காலகட்டத்திலும் தலித் விடுதலைக்காக ஏதும் செய்ததில்லை, அவர்கள் போராடியதெல்லாம் தங்களுக்காக மட்டுமே என்னும் அவதானிப்பையும் முன்வைக்கிறார்.

இந்த அவதானிப்புகள் சரியான அவதானிப்புகள். ஆனால், முழுமையான அவதானிப்பா எனயோசித்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. தமிழகம் தாண்டி, கர்நாடகம், ஆந்திரம், மராத்தியம், குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 16-17 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவங்களில், இது தமிழகத்தில் மட்டும் நிகழும் தனித்துவமான சமூக நிலை அல்ல என மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

தமிழக சமூக அரசியல் தளங்களில், சாதீய வாதங்கள், முன்னேறிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகள் என மூன்று தளங்களில் நிகழ்வதைக் காணலாம். ஒரு காலத்தில் அச்சு ஊடகங்கள் வழியாகவும், மேடைப்பேச்சுக்களிலும் மறைமுகமாக வும், நேரிடையாகவும் வெளிப்பட்ட கருத்துக்கள், இன்று சமூக ஊடகங்களுக்குத் தாவி விட்டன.

தான்நினைக்கும் கருத்துக்களைப் பெருமளவு சுதந்திரத்துடன், சமூக ஊடகங்களில் சாதீயக் கருத்துக்களை மூன்று தரப்பாரும் முன்வைக்கிறார்கள். 1990களுக்குப் பிறகான காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட தலித் தரப்பில் இருந்தது காத்திரமான குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

உயர், இடைநிலை, ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந் தவர்கள் தங்கள் சாதியின் மீது பற்றுக்கொண்டிருக்கும் வரை இந்த சாதிப் பிரச்சினை என்பது இருந்து கொண்டுதான் இருக்கும்.

இவர்கள், தமிழகத்தின் இந்த அரசியல் சமூக பரிணாம வளர்ச்சியில் உருவாகியிருக்கும் எந்த சாதிக்குழுவில் பிறந்திருந்தாலும், அதற்கேற்ற பாவனைகளையும், அரசியலையும்தான் கொண்டிருந்திருப்பார்கள். பெரிதாக மாறியிருக்காது...

இந்தக் குழுக்களின் அரசியல் இயங்கியலின் அலையை மட்டுமே நம்பி, சாதாரண மனிதர்கள் அவர்கள் தலைவர்களாக இருக்கும்வரை அந்தக் குழுவின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவர்களாகவே இருப்பார்கள்.

அது ராம்தாஸாக இருந்தாலும் சரி, கொங்கு ஈஸ்வரனாக இருந்தாலும் சரி.. அல்லது வேறெந்தச் சாதித்தலைவராக இருந்தாலும் சரி.

இது ஒரு சமூக, அரசியல் கட்டமைப்புச் சிக்கல்.

இது போன்ற காலகட்டத்தில்தான், திருமாவளவன் என்னும் தலைவர் எழுந்து வந்திருப்பதை மிகவும் நம்பிக்கையுடன் பார்க்கவேண்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்புகளுக்குள் தன் அரசியலைத் தொடங்கியிருந்தாலும், இன்று அவர் எழுந்து நிற்கும் தளம் வேறு.

எந்தக் கருத்தியலை எதிர்க்கிறோம், எந்த மக்கள் திரளுடன் நிற்கிறோம் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தெளிவாக மக்கள் முன் வைத்துக்கொண்டேயிருக்கிறார். அரசியல் தளத்தில், அறிவார்ந்த தகுதியில், தன் சாதியைத் தாண்டிய முதல் தலைவராக அவர் உருவெடுத்துள்ளது ஒரு முக்கியமான சமூக நிகழ்வு.

ஆனால், இது எவ்வளவு தூரம் இறுகிப் போயுள்ள சாதியக் கட்ட மைப்பைத் தகர்க்கும் என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என் தனிப்பட்ட அனுபவத்தில், பெண்களுக்கான கல்லூரிக் கல்வி, அவர்களுக்கு ஒரு விடுதலையைத் தருகிறது என அறிந்திருக்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் நடக்காத கலப்பு மணங்கள், இறுகிப் போன என் சாதியில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்திருக்கின்றன.

சாதியை உதறிச் சென்ற பெண்கள் பெரும் பாலும் சமூக அடுக்கில் கீழ் எனக் கருதப்படும்சாதி ஆண்களைத் திருமணம் செய்திருக்கின்றனர்.எண்ணிக்கை குறைவெனினும், முக்கியமான நிகழ்வு.

பெண்கள் கிடைக்காத என் சாதி ஆண்கள், பக்கத்து மாநிலத்திலும், மற்ற சாதிகளிலும், நிலத்தை எழுதி வைத்து மணம் புரிந்துகொண்டு வரும் சம்பவங்கள் நடந்துள்ளன. இங்கே என் சாதி என்பதை நான் அடையாளத்துக்காக மட்டுமே சொல்கிறேன்.

இரண்டாவது, தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்பைப் பற்றிப் பேசுகையில், தமிழ்ச் சமூகத்தை மட்டுமே மையமாக வைத்துப் பேசுவதைத் தாண்டி, இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்றும் பார்க்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, The India Forum என்னும் மின்னிதழில், ‘ Revolt of the Uppercastes ’, என்றொரு கட்டுரை வந்திருந்தது.

2015 ஆம் ஆண்டு, கட்டுரையாளர் அலகாபாத் நகரத்தில் உள்ள முக்கியமான அதிகாரப் பதவிகளில் (அதை அவர் Positions of Power and Influence (POPI) என அழைக்கிறார்) இருப்பவர்களின் சாதிகளை ஒருசர்வே செய்து தருகிறார்.

அந்தப் பதவிகளில், இருப்பவர்களில் 75 சதம் பேர், உத்திரப்பிரதேச மக்கள் தொகையில் 16 சதமே இருக்கும் உயர் சாதியினர் என்னும் தரவை முன்வைக்கிறார்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய மதராஸ் மாகாணத்தில் இது போன்ற ஒரு தரவை முன்வைத்துத்தான், Non Brahmin Manifesto என்னும் ஒரு அறிக்கை, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் குரலை முன்வைத்தது. பின்னர் அது பிற்படுத்தப்பட்டவர்கள் என்னும் அரசியல் அதிகாரக் குழுவாக உருவாகியது.

ஆனால், அரசியல் குழுக்களாகத் திரட்டப்படாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை, குறிப்பாக வட மாநிலங்களில் முற்றிலும் தலைகீழாக உள்ளது. இந்த வேறுபாடுகளைச் சில தரவுகள் மூலம் பார்க்கலாம்.

சமீபத்தில் ஈகலட்டேரியன்ஸ் என்னும் தன்னார்வக் குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே, இந்தியப் பல்கலைக்கழகங்களில், பன்மைத்துவம் தொடர்பான தகவல்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்கள். அதிலிருந்து மூன்று உதாரணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்

ஒன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்) (படம் 1)

தமிழகத்தில் 60-65% வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்கள், 76% இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். 19% இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள், 16% இடங்களையும், 1% இருக்கும் மலைவாழ்மக்கள் 0.66% இடங்களையும், 15% இருக்கும் உயர்சாதியினர் மற்றவர்களும் போட்டியிடக் கூடிய பொதுப்பிரிவில் 7.34% உள்ளார்கள்.

தெளிவாக, பிற்படுத்தப்பட்டவர்கள், தங்கள் சாதிச் சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் இருக்கிறார்கள். முன்னேறிய சாதிகள் தங்கள் சாதிச் சதவீத அளவுக்குக் குறைவாக இருக்கிறார்கள்.

இன்னொன்று மெட்ராஸ் பல்கலைக்கழகம். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில், நிலை கொஞ்சம் மாறியுள்ளது. 18% இருக்கவேண்டிய தாழ்த்தப்பட்டவர்களின் பங்கு 31.5% ஆக இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

இங்கு பிற்படுத்தப்பட சாதியினர் 56% சதவீதமாக இருக்கிறார்கள். ஆனால், இங்குமே முற்படுத்தப்பட்ட சாதியினரின் சதவீதம், அவர்கள் மக்கள்தொகை அளவுக்கு பிரதிநிதித்துவப்படுத்தப் படவில்லை.

ஆனால், இதைத் தாண்டி, தலித்துகள், மற்றும்பழங்குடியினர், பல்கலைக்கழக உயர் நிர்வாகத் தலைப்புப் பொறுப்புகளில் எத்தனை சதவீதம் இருக் கிறார்கள் என்பது நுணுக்கி ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்) (படம் 2)

1915 முன்வைக்கப்பட்ட வகுப்புவாரிக் கோரிக்கை, இடஒதுக்கீடு என்னும் சட்டத்தைத் தாண்டிய சமூக நீதிக் கருதுகோள். சமூக நீதி என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதுதான்.

அப்படி எனில், பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிலும் சில சாதிகளின் ஆக்கிரமிப்பு சரி செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சரியான பிரதிநிதித்துவம், உயர்சாதி மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கான இடங்கள் முதலியன தரப்பட வேண்டும்.

இப்போது இருக்கும் பிற்படுத்தப்பட்ட 3-4 சாதிகளின் தயவில் நிற்கும் அரசியல் கட்சிகள் இதைச் செய்யாது. ஜனநாயக வழியில், பாதிக்கப்பட்ட சாதியினர் இதை முன்னெடுத்து, அதிகாரத்திடம் போராடிப் பெறவேண்டிய ஒன்று.

பாதிக்கப்பட்டவர்கள் ஏன் போராடவேண்டும் எனக் கேட்கலாம். 1915ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்டதாக உணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகள் குறித்துப் போராடி, வெற்றி பெற்றார்கள் என்பதே அந்தக் கேள்விக்குப் பதில்.

ஜனநாயகத்தின் ஒரே சாதகமான அம்சம், நேர்மையான கோரிக்கைகளுக்காகப் போராடுகையில் வெற்றி பெறும் சாத்தியங்கள் அதிகம்.

அதே சமயத்தில், தமிழகம், கேரளம், மராத்தியம் போன்ற மாநிலங்கள் தாண்டிய தளங்களில், மத்திய அரசு நிறுவனங்களில் நிலைமை முற்றிலுமாக வேறு. இந்திய மக்கள் தொகை 100 கோடி பேர்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுகையில், தமிழகம், இந்திய மக்கள் தொகையில் 5% மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மத்திய அரசு நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக, ஐஐடி தில்லியின் தரவுகளைத் தருகிறேன், (படம் 3) (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்).

509 இடங்களில், 92.7% சதம் பேர் இந்தியாவில் 20 முதல் 30% வரை இருப்பதாகச் சொல்லப்படும் உயர்சாதியினர். 18% உள்ள தாழ்த்தப்பட்டவர்கள், 1.8% பேர் மட்டுமே உள்ளனர். 8% உள்ள பழங் குடியினர், 0.5% மட்டுமே உள்ளனர். 50% உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், 5% மட்டுமே உள்ளனர்.

இந்த சமநிலையின்மையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசியல் தலைமை வட மாநிலங்களில் இல்லை என்பது ஒரு நூற்றாண்டு சோகம்.

தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகையில், முன் வைக்கப் படும் இடைநிலைச் சாதிகளின் இன்றைய ஆதிக்கம்என்பது அவர்களின் ஜனநாயக அரசியல் எழுச்சியின் காரணமாக உருவானது.

அது மத்திய வடமாநிலங்களில் நிகழாததால், வழக்கமான சனாதனச் சாதிப் படிநிலைகள் இன்னும் அங்கே அப்படியே, மாறாமல் உள்ளன. உயர்சாதிகள், தங்கள் பாரம்பரிய மான சமூக, பொருளாதார அதிகாரங்களில் அமர்ந்துஇருக்கிறார்கள்.

20-30% உள்ள உயர்சாதிகள் 70-90% இடங்களைப் பிடித்திருப்பதைப் பல தரவுகள் பேசுகின்றன. மீதி உள்ள 70-80% பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மக்கள், 10-30%த்தையே பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் உரத்துப் பேசப்பட வேண்டிய விஷயம்.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதியத்தைப் பற்றி, அங்கே தலித்துகள், சிறு பான்மையினர் ஒதுக்கப்படுதல் பற்றி, பெங்களூரு மேலாண் கழகத்தின் பேராசிரியர் தீபக் மால்கன், “ When will Dalit Lives Matter ”, என்னும் ஒரு முக்கியமான கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

அதே போல, மத்திய அரசு நிர்வாகத்திலும், உயர் சாதியினர் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது. இன்றைய மத்திய அரசில், 89 துறைச் செயலாளர்களில், 85 பேர் உயர் சாதியினர். உச்ச நீதிமன்றத்திலும், பன்மைத்துவக் குறைபாடு உண்டு.

ஐஐடி கரக்பூரில், அங்கே பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு என ஒரு ரகசிய கோட்டா இருந் திருக்கிறது. இது பற்றி அகமதாபாத் இந்திய மேலாண்கழகப் பேராசிரியர் ராம்மோகன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

1998 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 88 பேருக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது. 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களும், ஐஐடி நுழைவுத் தேர்வை எழுதியதும் (வெற்றி பெறுவதல்ல) மட்டுமே தகுதி. வருடம் 10 மாணவர்கள், ஐஐடி இயக்குநரின் சிபாரிசில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

2005 ஆம் ஆண்டு தகவல் உரிமைச் சட்டம் வந்த பின்பு, அதன் வழியாகத் தரவுகள் திரட்டப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டவுடன், இது நின்றுவிட்டது.

கரிசல் இலக்கியப் பேராளுமை கி.ரா, கிராமத்துக்குப் பேட்டரி லைட் வந்த கதையைச் சொல்கையில், அது வந்த பின்பு, அய்யனார் இரவில் வேட்டைக்குப் போவது நின்றுவிட்டது என எழுதியிருப்பார்.

அது போன்ற கதை இது. தகவல் உரிமைச் சட்டம், இது போன்ற உண்மைகளை வெளிக் கொணர்கையில், ஊழல், சாதிய அய்யனார்கள் வேட்டைக்குப் போவது நின்று போகும் வாய்ப்புகள் உண்டு.

ஒப்பீட்டில், இந்தியாவில் சாதிய இழிவுகள் ஒரளவு குறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் கேரளத்திலும், முதலமைச்சரைப் பற்றிய சாதீய இழிவுகளை அவரின் அரசியல் எதிரிகள் பொதுவெளியில் பேச முடிகிறது.

தமிழகத்திலும், 2011 தேர்தலில், ஒரு முதுபெரும் தலைவரின் சாதி குறித்து இழிவாகப் பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் பேசியதைப் பார்த்தோம்.

தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் சமூக நிலை இழிவாக இருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களின் நிலை, வட மாநிலங்கள் மற்றும் மத்தியக் கல்வி நிலையங்களை விட மேம்பட்டுள்ளது என்பதையே இதுவரை உள்ள தரவுகள் காட்டுகின்றன.

எனினும், மாநில வாரியாகத் தரவுகள் திரட்டப்பட்டு, அவை அனைத்து மக்களும் காணும் வகையில் பொது வெளி யில் வைக்கப்பட்டு அலசப்படவேண்டும்.

சாதியம் என்பது, அதன் அத்தனை அசிங்கங்களுடனும் ஆராயப்பட்டு, மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்பட்டு, சமூக நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஜனநாயக வழியில் வெளிப்படையாகத் தீர்க்கப் படுவதே சரியான வழியாகும்.

இதில் பாலினச் சமத்துவம் 50% கட்டாயமாகப் பேணப்பட வேண்டும். இன்று நிலவும் சாதீயப் பிரச்சினைகளுக்கு (ஒடுக்கப்பட்ட மக்களைத்தவிர), ஒரு தரப்பு, மற்றவர்களைக் காரணமாகச் சொல்வது ஒரு சாக்கு மட்டுமே. அது ஜனநாயக அறிதலின்மையில் இருந்து உருவாகும் ஒன்று.


The Revolt of the Upper Castes | The India Forum <https://www.theindiaforum.in/article/revolt-upper-castes>

When Will India's Educational Institutes Have Their 'Dalit Lives Matter' Moment? (thewire.in) <https://thewire.in/education/princeton-woodrow-wilson-caste-discrimination>

The Big Picture: IIT Kharagpur had quotas for faculty's children! (ttrammohan.blogspot.com) <http://ttrammohan.blogspot.com/2010/08/iit-kharagpur-had-quotas-for-facultys.html>

Of 89 secretaries in Modi govt, there are just 3 STs, 1 Dalit and no OBCs (theprint.in) <https://theprint.in/india/governance/of-89-secretaries-in-modi-govt-there-are-just-3-sts-1-dalit-and-no-obcs/271543/>

One Too Many Mishras: India's Supreme Court Is A Brahmin Bastion (buzzfeed.com) https://www.buzzfeed.com/ravikiranshinde/one-too-many-mishras-indias-supreme-court-is-a-brahmin

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer