சனையா இருபத்தியெட்டு

ஏ. ஜே. டானியல்

பகிரு

விடிவதற்குள் டாக்டர் தூக்கத்தில் இருந்து கண்களைத் திறந்துவிட்டார் நேரத்தை அறிந்துகொள்ளத் தொலைபேசியைத் தேடினார். தொலைபேசி தலையணையின் அடியில் துடித்து ஓய்ந்து போய் கிடந்தது. தலையணையை அணைத்தபடி மெல்ல கைகளைத் தலையணையின் அடியில் துளைத்து தொலைபேசியை எடுத்தார். தொலைபேசியின் தொடுதிரையில் அந்தக் குறுந்தகவலும் சிலதொண்டை இறுகிபோன அழுகுரல் பதிவுகளும் திரையில் அனுங்கிக்கொண்டிருந்தன.

கண்களை அழுத்தித் துடைத்தபடியே அக்குறுந்தகவல்களை எழுத்துப் பிழையின்றித் திரும்பத் திரும்பப் பதட்டத்துடன் படித்துக்கொண்டிருந்தார். டாக்டர் துரித கணேசன் சில நொடிகளின் பின்பு தெளிவாக அதை உறுதி செய்தார். கருணைநாதனுடைய சகோதரி இறந்துவிட்டாள். அந்த குறுந்தகவலில் முக்கியமான வேண்டுகோள் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது ‘தம்பி தங்கச்சி செத்த விசயத்த கருணைட்ட பக்குவமா சொல்லி அவனை ஆறுதல்படுத்து. இதக் கேட்டால் கெலிச்சுப் போயிருவான். கவனமா சொல்லிவிடு என்றதுதான் அந்த வேண்டுகோள்.

அப்போது இத்துயர் நிறைந்த செய்தியை எப்படிக் கருணைநாதனிடம் சொல்லுவதென்று டாக்டர் திணறிக்கொண்டிருந்தார். எப்படியாவது சொல்லிவிடவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தார். தங்கையின் இழப்பை நண்பன் கருணைநாதன் இலகுவில் ஜீரணிப்பானா? அவனது மனைவிதான் எப்படித் தாங்கிக்கொள்வாள்? கருணையின் மனைவி அண்ணி அண்ணி என்று உருகி வழிவாளே... இதை நினைக்கும்போது பூரணமான இருட்டு டாக்டருள் வியாபித்துக்கொண்டது. இந்த வருட ஆரம்பத்தில் கருணையின் மனைவி கர்ப்பவதி ஆகியபோது “என் வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சியான நிகழ்வு இதைத்தவிர வேறு ஏதும் இல்லை மச்சான் என்று அடிக்கடி இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொள்வான்.

அவனது மனைவியும் சேர்ந்து தலையாட்டி இதை உறுதி செய்த நாட்கள் பல அப்படி இருக்க இந்த நேரங்களில் நெருங்கியவர்களின் மரணச்செய்தி அவளது மகப்பேற்றுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அவரின் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. அவர்களை ஆறுதல்படுத்துவது என்ற கேள்வியே அவரைப் பாடாய்படுத்தின. இக்கொடியமரணம் அவனது முழுக்குடும்பத்தையும் வேரோடு உலுக்கிப் புரட்டிவிடப்போகின்றது என்பது டாக்டருக்கு தெளிவாகத் தெரிந்த உண்மை.

அதேநேரம் தன்னிடம் வழங்கிய பொறுப்பை டாக்டர் மிகக்கவனத்துடனும் பொறுப்புடனும் கையாளவேண்டுமென்று உறுதியாக இருந்தார். போர்வையை விலக்கி வெடுக்கென எழுந்த டாக்டர் குளியறைக்குள் விரைந்து பின் ஜன்னலைத் திறந்து பார்த்தார். இருள் மெல்ல பிரிந்து சென்று கொண்டிருந்தது. அது சிந்தனைவயப்பட்ட அதிகாலை வேளையாக இருந்தது. சிகரட் ஒன்றை பற்ற வைத்தபடி மாடி பால்கனி வழியே அரை இருட்டில் வீதியை சரிந்துபார்த்தார். தெரு மின்விளக்குகள் சினுங்கிக்கொண்டிருந்தன. முகத்தைக் குளிர்ந்த நீரில் அலம்பி விட்டு மடிக்கணணியைத் திறந்து அதன் முன் தன் கண்களைப் பதட்டத்தோடு படரவிட்டார்.

பிபிசி செய்திகளைப் படிக்க ஆரம்பித்த டாக்டர் லங்காசிறீ செய்திகளின் சுட்டியை அழுத்தியபோது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. கணனியின் வலது பக்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளரும் இன்னாள் சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியுமான சோதியா அரசாங்கத்தினால் விசஊசி ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி இரத்தக் கலரில் எழுதப்பட்டு இருந்தது. செய்தியை படித்தவுடனே டாக்டர் கடும் உக்கிரமடைந்தவராய் கால்களால் நிலத்தை ஓங்கி உதைந்தார்.

அதிர்ச்சியில் அவரது முகம் வெற்றுக் காகிதத்தைப்போல் வெளிறிக் கிடந்தது. அப்போது டாக்டர் தனக்கு வாயிலே வந்த தூசன வார்த்தைகளால் திட்டிக்கொண்டு இருந்தார். ஒவ்வொரு வார்த்தைகளின் முடிவிலும் சூத்தியா, பேன்சூத் போன்ற சொற்களை அழுத்தமாகச் சொல்ல மறக்கவில்லை.

இயந்திரமாய் மடிக்கணணியை மூடிவிட்டு ஒரு சிகரட்டை பற்றவைத்து அதன் புகையால் தாறுமாறாகப் பல கிறுக்கல் சித்திரங்களை வரைந்தார். அறைமுழுவதும் புகைமண்டலம் கிட்டத்தட்ட ஒரு டசன் சிகரட்டை புகைத்து தள்ளி இருக்கவேண்டும். அப்போது டாக்டருக்கு நண்பன் கருணைநாதனுடைய நினைவுகள் வரும்போது அவரது கண்களில் நீர் சுரந்தது. நண்பன் மீது அளவற்ற கருணைமிகுதியால் மனதில் சஞ்சலப்பட்ட டாக்டர் பற்களை நறும்பி இறுதியாகப் புண்டமக்களே! என்ற சொல்லை அழுத்தமாகச் சொல்லி சுவர்மீது ஓங்கிக் குத்தினார். அப்போது இருள் ஒழிந்துகொண்டு இருந்தது.

டாக்டர் மதியாபரணம் துரிதகணேசன் டாக்டர் ஸ்பீட் என்ற பெயரினால் லண்டனில் தமிழர்களினால் அழைக்கப்படடார். டாக்டர் ஸ்பீட்டும் கருணைநாதனும் மிக நெருங்கிய நண்பர்கள் பலவருடப் பழக்கம். அதைவிட டாக்டர்தான் கருணைநாதனின் முழுக் குடும்பத்துக்கும் பேமிலி டாக்டர் என்ற உயர்ந்த அந்தஸ்துக்குரியவர். கருணைநாதன் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன.

அதற்கு ஓரிரு வருடங்களின் முன் கிறிஸ்மஸ் பனி இரவொன்றில் தான் கட்டியான ஒலிவ் நிறகுளிரங்கியை அணிந்தபடி விமானநிலைய வாயிலில் தோன்றினார் கருணைநாதன் என்ற முழுப்பெயரையுடைய கருணை.

உள்ளம் துக்கத்தால் தோய்ந்து போய் கிடந்தது. இன்று வைத்தியசாலைக்குச் செல்வதற்கான மனநிலையோ ஈடுபாடோ இல்லாமல் பேயடித்தாற் போல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த டாக்டர் இறுதியாக ஒருமுடிவோடு வண்டியில் ஏறினார். வீட்டில் இருந்து வைத்தியசாலைக்குச் சென்றடைந்த டாக்டரால் எதுவித செயலிலும் ஈடுபடமுடியவில்லை. முடிவில்லாத வெறுப்பின் நிழல் அவரைத் தொடர்ந்தது. கழுத்தில் இருந்த டெதஸ்கோப்பைச் சுருட்டி வெண்ணிற கோட்டுக்குள் வைத்துவிட்டுப் பிரவுன் நிற லெதர்பங்கில் இருந்து இன்னுமொரு செல்போனை எடுத்து ஜீன்ஸ் பொக்கட்டில் செருகியபடி பெரும் பதட்டத்தோடு மருத்துவமனை வளாகப் பூங்காவை நோக்கி விறுவிறுவென நடந்து வந்தார்.

சூரியன் நடு உச்சிக்கு வந்துவிட்டான். டாக்டர் கடும் யோசனையோடு, மனம் கலவரப்பட்டவராய் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தார். டாக்டர் தோல் சிவத்த மனிசன் அழகான முகவெட்டு பார்ப்பதற்கு ஈரானிய நடிகரைப்போலத் தோற்றம் கொண்டவர். யாரும் இந்தியர் எனச் சொல்லமாட்டார்கள். அப்படிப் பளிச்சென்ற முகம் இப்போது கலவரப்பட்டு நெற்றிவழியே தாறுமாறாக நரம்புகள் புடைத்து அவை கழுத்தை தொட்டுக் கொண்டு நின்றன.

இப்போது சொல்லுவோமா? வேண்டாமா இல்லை வீட்டுக்கு சென்று மூலம் சொன்னால் என்ன? மண்டையைப் போட்டுக் கசக்கிக்கொண்டிருந்தார். சொல்வதற்கு உகந்த நேரத்துக்காகக் காத்திருந்தார். கருணைநாதன் இப்போது வேலையில் நிப்பான் இப்போது அவனது வேலையைக் குழப்பவேண்டாம் என முடிவெடுத்தார். டாக்டர் தன்னுடைய வெள்ளை நிற மேல் கோட்டின் கையைச் சுருக்கி இழுத்துவிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தார். நேரம் மதியம் 12 மணி.

நோ... நோ... அவன் இப்போது பிசியான நேரம் சேர்விசில் நிற்பான் சொல்வதற்குரிய தருணம் இது இல்லை கொஞ்சம் லேட்டாச் சொல்லுவோம்.

இல்லாவிட்டால் நேராக ரெஸ்டோரண்ட் சென்று சொல்லிவிட்டால் என்ன? மூளையில் எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது.

கறுத்து சுருண்டுகிடந்த தலைமுடியை கையை விரித்து விரல்களால் கோதிக்கொண்டார். பொக்கட்டுக்குள் இருந்த சிகரட் பெட்டியில் சிகரட் ஒன்றைப் பற்றவைத்தார். மூச்சை ஆழமாக இழுத்துவிட்டார். சிகரட் வெண்புகை மூக்கின் துவாரங்களின்ஊடே டாக்டரை அறியாமலே குபுகுபு என்று வெளிவந்து கொண்டிருந்து. அங்குமிங்கும் உலாத்தித் திரிந்த டாக்டர் இறுதியாக மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கோடைகாலப் பூங்காவின் நடுவில் உள்ள பச்சைநிற மரநாற்காலியில் அமர்ந்தார். அவரது முகத்தில் கலவரம் தணிந்தபாடில்லை.

அவர் இருக்கைக்கு எதிரே எலுமிச்சை செடி வளர்ந்து நின்றது. அதில் காய்த்து நின்ற எலுமிச்சை பிஞ்சுகளில் இருந்து நறுமணம் வீசிக்கொண்டு இருந்தது. அந்த நறுமணம் அப்பொழுது டாக்டருக்கு புத்துணர்வைக் கொடுக்கவில்லை. டாக்டர் வெறித்தபடி சிந்தனையில் உறைந்துபோனார்.

அவர் எதிரே கருவண்டு ஒன்று வெளிப்பட்டது. செடியில் அது நிற்பதுவும் பறப்பதுமாக அலைக்கழித்தது. முன்னங்கால்கள் இரண்டையும் கும்பிடுவது போலவும் உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து பல நாட்டிய முத்திரைகளுடன் டாக்டரின் முன்னால் வெளிப்பட்டது. சில நிமிடங்கள் தாமதிக்காமல் இறுதியாகத் தன் பின்கால்களை மெல்ல உயர்த்தி மெல்லிய ‘வீ’ வடிவச் செட்டைகளை உதறியபடி பேரிரைச்சலோடு டாக்டரின் முகத்தில் மொய்த்துப் பறக்க சடுதியில் கைகளால் மூர்க்கத்தோடு வண்டை துரத்தியபடி கண்களை ஒருமுறை படபடவென வெட்டி மூடினார். இப்போது டாக்டர் நூறாவது முறையாகப் புண்ட என்ற கெட்டவார்த்தையைத் தூய வெண்ணிற மேல்கோட்டை உதறியபடி எரிச்சலோடு சொன்னார்.

அப்போது அவரது கடிகாரமுட்கள் சரியாக மதியம் பன்னிரண்டு மணியில் இருந்து மெல்ல நகர ஆரம்பித்தன. அப்போது டாக்டர் காலடியில் சிதறிக் கிடந்த சருகுகளை ஆக்ரோஷத்துடன் உதைத்தார். சில இலைகள் விர்விரெனப் பறந்து இன்னுமோர் மேஜையில் பறவை போல் அமர்ந்தன. இப்போது நேரத்தை சரி பார்த்தார் மதியம் ஒரு மணியைத் தாண்டி முட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

கருணை இப்போது என்ன செய்வான்? ஜீன்ஸ் பொக்கட்டுக்குள் கிடந்த செல்போனை எடுத்து கருணைநாதனின் தொடர்பு இலக்கத்தைக் கைகளினால் உருட்டிக்கொண்டார். இப்போது டாக்டர் ஒரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். கருணையைத் தொலைபேசியில் அழைத்தார்.

மறுபக்கம் கருணை ஏதோ பணியில் இருந்தபடி “ஹலோ மச்சி சொல்லு என்ன அவசர அலுவலாடா?”

இல்ல மச்சான்...

அடைத்த குரலில் இழுக்கச் சரி வேல முடிய அடிக்கிறண்டா என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்தார். டாக்டர் தான் கூற வந்த செய்தியை கூற முடியாமல் போனது ஒரு வகையில் டாக்டருக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தாலும் அந்தப் பதட்டமான நிலையில் இருந்து அவரால் தன்னை விடுவிக்க முடியவில்லை. அல்லது எத்தனித்துக்கொண்டிருந்தார். ஓரிரு நிமிடங்கள் கதிரையில் அமர்ந்தபடியே காலையில் நேர்த்தியாகச் சீவிவிடாமல் திரண்டு கிடந்த தலைமுடிகளை விரல்களால் கோதி ஆசுவாசமடைந்தபடியே நிமிர்ந்து மகப்பேற்று வைத்தியசாலை கட்டிடத்தை நோக்கினார். அது இன்னும் அமைதியாகவே இருந்தது. அவரது உள்ளத்தில் பயம் மட்டும் வெடித்துப் பீறிட்டுக்கொண்டு இருந்தது.

இன்னும் மனதில் எந்த மாறுதலும் இல்லை. கடிகாரத்தைப் பார்த்தார். அவருக்கான ஓய்வுநேரம் கடந்து விட்டது. விறுவிறு என்று நடையைக்கட்டினார். டாக்டரால் வைத்திய பரிசோதனை எதுவும் செய்ய முடியவில்லை. நினைவுச்சுழிகள் அவரைப் பின்னிழுத்து ராட்சத மலைப்பாம்புகளைப் போலச்சுருட்டிக்கொண்டது.

உடனடியாக நண்பன் கருணைநாதனை சந்தித்து அவனுடன் துயரத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் எனத் துடிதுடித்தார். விறுவிறு என்று பளிங்குக்கல் பதிக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தார். அங்கே சில மணிநேரங்களில் உயரதிகாரியுடன் தீவிர சம்பாஷணையின் பின் வைத்தியசாலையை விட்டுவேகமாக வெளியேறினார்.

வண்டிச்சக்கரம் இடைநிலை வேகத்தில் சுற்றியபடி கருணைநாதனின் அப்பார்ட்மண்டை நோக்கிசென்று கொண்டிருந்தது. டாக்டரின் முகம் வாடி வதங்கிப்போய் இருந்தது. யுத்தகளத்தில் வீரர்மடிந்த பின் தகவலை வழங்கச் செல்லும் சகவீரனின் மனநிலையை ஒத்த நிலையை மாற்றிக்கொள்ள முயன்று கொண்டிருந்தார். வண்டி இன்னும் சற்றுவேகம் குறைக்கப்பட்டு ஓரிடத்தில் நின்றது. பெட்டியில் இருந்து ஒரு சிகரட்டை எடுத்து பற்றவைத்தபடி புகையை ஊதித்தள்ளினார்.

நேரம் நண்பகல் 2 மணி ஆகிவிட்டது. காரின் கறுப்புக் கண்ணாடி ஸ்ஸ்ஸ்… என்ற சத்தத்தோடு சற்றுக் கீழ் இறங்க டாக்டர் மென்கறுப்பு கண்ணாடி இடைவெளியால் கருணைநாதனின் ரெஸ்ரொறண்டை கூர்மையான கண்களால் நோட்டமிட்டார். கருணையின் நடமாட்டம் அங்கு இல்லை யூகித்துக்கொண்ட டாக்டர் ரயில் கடவை ஓரமாக வேகமாக வண்டியை செலுத்தினார். வலப்பக்கம் மின்னல் வேகத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

சில வானுயர்ந்த கட்டிடங்களை நெருங்க வண்டி எஞ்சின் வேகத்தைக் குறைத்துக் கொண்டது. நத்தையைப் போல வண்டி ஊர்ந்து தொடர் மாடியின் கார் தரிப்பிடத்தை அடைந்தது. ஓரிரு நிமிடங்களில் டாக்டர் கருணைநாதனின் வீட்டின் அழைப்புமணியை அழுத்தினார். கருணைநாதனின் மனைவி ஜீவிதா பெரிய வயிற்றோடு அரக்கி அரக்கி நடந்து வந்து கதவை மெதுவாகத் திறந்து உள்ளே வரவேற்றாள். அதற்கிடையில் கருணை ‘வா மச்சான் என்ன நேரத்துக்கு வந்திட்டாய்’ என்றபடி வாயிலை நோக்கி வந்தான்.

டாக்டர் எதுவும் சொல்லவில்லை துயரரேகை படிந்த முகத்துடன் வரவேற்பறையில் அமர்ந்தார். எதிரே மேசையில் கிடந்த ஏதோ நாளிதழை திறந்து படிக்க முற்பட என்ன அண்ணா ஏதும் குடிக்கிறீங்களா?

ஜீவிதா கேட்க அதைக் கண்டிக்கும் முகமாக என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறாய்? தண்ணீ கொண்டு வா முதலில் வேகமாகக் குசினியை அடைந்த ஜீவிதா கண்ணாடி குவளை நிரம்பிய குளிர்ந்த நீரோடு குலுங்காமல் மேசையை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

பொறுமை இழந்த கருணை என்ன மச்சி என்ன இப்பிடி இருக்கிறாய் முகமெல்லாம் வாடிப்போய் என்னடா ஆச்சு சொல்லுறிய இல்லையா? எனப்பயமுறுத்தும் தொனியில் கேட்க தலைகுனிந்து இருந்த டாக்டர் சற்று நிமிர்ந்தார்.

அப்போது டாக்டரின் கண்களில் இருந்து பொலுபொலுவெனக் கண்ணீர் ஆறு ஓடியது. உதடுகள் துடித்தன எதுவும் கூற முடியாதவாறு தொண்டை அடைத்துக் கரகரத்தது. மரத்தில் இருந்து பிடுங்கப்பட்ட இளம்தளிரைப் போல நடுங்கிக்கொண்டு இருந்தார் டாக்டர் ஸ்பீட். மச்சான் காலங்காலத்தால டெலிபோன் அடிச்சவ அம்மா!

அம்மாக்கு என்னாச்சு... அம்மாக்கு ஒண்டுமில்ல தங்கச்சிக்குத்தான்... என டாக்டர் இழுக்க என்னடா சொல்லு அவளுக்கு என்ன? தங்கச்சி திடீரெண்டு மயக்கம்போட்டு விழுந்திட்டாளாம் உடன கொஸ்பிட்டல் கொண்டுபோக ஒரு மணித் தியாலத்தால ஆள்... கையில் நீர்க்குவளையுடன் வந்துகொண்டிருந்த ஜீவிதா செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் தொம் என்று கையை நழுவவிட்டாள்.

தரையில் வீழ்ந்த குவளை சன்னமாக வெடித்துச்சிதறியது. அதைக்கண்ட கருணைநாதன் ஓடிப்போய் அவளைப் பத்திரமாகக் கதிரை ஒன்றில் அமர்த்தினார். டாக்டர் செய்வதறியாமல் திகைத்துப்போய் நின்றார். ஜீவிதா கருணைநாதனை கட்டியணைத்தபடியே கதறி அழுதாள். துக்கத்தில் வாயடைத்துப்போய் நின்ற நண்பனை டாக்டர் சமாதானப்படுத்த எத்தனித்துக் கொண்டிருந்தார். பொங்கி எழுந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஓவென்று கதறினார்.

டாக்டர், “மச்சான் இதுக்குள்ள பெரிய கேம் நடந்திருக்குடா இந்தச் சாவுக்குப் பின்னால அரசாங்கமும் இராணுவமும் இருக்கு என்று கதைக்கிறாங்கடா இன்ரர்நெட்ல செய்தி போட்டு இருக்கிறாங்கடா. முன்னால் பெண் போராளி சோதியா விச ஊசி ஏற்றிக்கொலை நம்ப முடியலடா மச்சான்” அதை விடக் கடுப்பான விசயம் இந்தத் தமிழ் தேவிடியா விபச்சார ஊடகம் ச்சைக் அவளைப்பற்றிக் கண்டபடி கண்மூடித்தனமா ஏதோ எல்லாம் எழுதித்தள்ளுதுடா தாங்க முடிலடா மச்சி அவள் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் செய்த தியாகம் எல்லாம் மண்ணாப் போச்சுடா…

அதுவரை தரையில் குனிந்திருந்த கருணைநாதன் செய்தியை கேட்டதும் கடும் சீற்றமடைந்தார். எழுந்து சீறிப்பாய்ந்தார் உதடுகள் துடித்தன. இயந்திரமாகத் தனது விரல்களை மடித்து எதிர் சுவரை மூர்க்கத்தோடு தாக்கினார். சுவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லைகையால் இரத்தம் ஓடியது. ஜீவிதா அச்சத்தில் கருணைநாதனின் கைகளைப் பற்றினாள். பற்களை நறநறவென்று நறும்பிக்கொண்டு ராட்சசசத்தத்தோடு நாதன் அங்குமிங்கும் நடந்து திரிந்தார். ஆனாலும் கருணையால் அந்த நிலையில் இருந்து விடுபட முடியவில்லை. நாதனின் கண்களில் இருந்து ஈரக்கசிவு மெல்ல மெல்ல வெளிப்பட்டது. சற்று நேரத்தின் பின் சோபாவொன்றில் அமர்ந்துகொண்டார்.

ஒளிமெல்ல மெல்ல அகல இருள் வீட்டை சூழ்ந்துகொண்டது. விறாந்தையில் ஜீவிதாவுடன் வெளி ஆட்களின் உரையாடல் மெல்லிய சத்தத்தோடு விட்டுவிட்டு கேட்டபடி கருணையின் செவிகளில் அழுத்தமாக வீழ்ந்தது. சன்னலுக்கு வெளியே பிரமாண்ட நகரம் வர்ணங்களால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த இரவு முழுவதும் வீடு இருளடைந்து சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. மரண அமைதியை பொதித்து வைத்த அறை போலத்தோன்றியது.

2

அண்மையில் டாக்டர் ஸ்பீட் எனக்குச் சொன்ன கதை...

வாழ்க்கையில் இலகுவில் எங்களால் மறக்கக்கூடிய நாளில்லை அந்த நாட்கள் பாலைவன வெயிலில் குளித்தெழுந்த நாட்கள் ஆரம்பத்திலேயே கதையை இடைநிறுத்தி சிறிய மௌனத்தின் பின் முகத்தை இருகரங்களாலும் தேய்த்தபடி மீண்டும் ஆரம்பித்தார் டாக்டர். நான் இந்தியாவில் இருந்து மருத்துவச் சேவையின் நிமித்தமாக வளைகுடா நாடான கட்டார் நாட்டுக்கு கருணைநாதன் கட்டாரில் காலடி வைப்பதற்குச் சரியாக நான்கரை வருடங்களின் முன்பு கட்டார் நாட்டின் தலைநகரம் டோகாவுக்கு வந்து சேர்ந்தேன்.

எனக்கான பணியிடம் அகமட் அல்தானி என்ற மருத்துவமனையில் வழங்கப்பட்டிருந்தது. நல்ல ஊதியம் நல்ல அக்கமெண்டேசன், எனது போக்குவரத்துக்காக ஒரு சாரதியுடன் ஒரு வண்டி இலவசமாக வழங்கி இருந்தார்கள். இந்த வைத்தியசாலை வெளிநாடுகளில் இருந்து கூலித்தொழிலாளர்களாக வந்தேறும் இருபாலாருக்குமான பெயர் போன மருத்துமனை இவ்வாறு கட்டாரில் என்னுடைய மருத்துவப் பணியோடு மெல்லமெல்ல வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு சென்றேன்.

வாரநாள் ஒன்றில் கடும் வெயில் எரித்துக் கொண்டிருந்த மதியவேளை ஒன்றிலேதான் முதன் முதலாகக் கருணையைக் கண்டேன். பார்ப்பதற்கு வாட்ட சாட்டமான மத்திய உயரம் வெளுத்த முகமும் சுருண்டு மடிந்த தலைமுடியும் கொண்ட அந்தப்பேஷண்ட் முகம் வாடிப் போய்த் தலைமுடி சரியாகச் சீவாமல் வரிசையில் மெல்லமெல்ல அந்த உருவம் என்னுடைய அறையை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தது.

“அசலாமு அலைக்கும்”

பதிலுக்கு அந்தப் பேஷண்டின் வாயில் இருந்து எந்தப் பதில் வார்த்தையும் வெளிவரவில்லை. சட்டென நிமிர்ந்து அந்த உருவத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் எதுவித உணர்ச்சியும் வெளிப்படவில்லை உதட்டில் சிறுபுன்னகை மட்டும் வெளிப்பட்டது. அதை வெளிப்படுத்த அவன் பெரும்பாடுபட்டிருக்க வேண்டும் கண்கள் சொருகி இருந்தன. துன்பத்தின் ரேகை கன்னாபின்னா வென்று Some text missing? ஆண்மகன் எனக்கு முன்னால் வைக்கப்படிருந்த வெண்நிற பிளாஸ்டிக் கதிரையில் மெதுவாக அமர்ந்தான்.

கியாஹ்லே பிறதர்?

போலோ ஆப்கா நாம் தோகியா ஹே? எந்தப் பதிலும் இல்லை!

யவாப்தேதோ... அவனது பத்தாக்காவை வாங்கிக்கொண்டு பெயரை குனிந்து வாசித்தபடி

ஹிந்திமாலுமே பாஹ்ய்

நோ...?

எந்த அனுங்கலுமில்லை. சற்று எரிச்சல் கொள்ளத் தொடங்கினேன்.  ஒரு வேளை வாய்பேசாத பெடியனோ என்ற முடிவுக்கு வருவதற்குள் சில நொடிகள் அமைதியின் பின் வசிலின் பூசாமல் வெடித்துப்போன உதடுகள் மெதுவாகத் திறந்து,

நான் தமிழ்…

ஓ... தமிழா? சொல்லுங்கோ என்ன பிரச்சினை உடம்புக்கு? எத்தின நாள் வேலைக்கி போக இல்லை நீங்களு? எப்ப வருத்தம் வந்தது?

பேஷண்ட் கதிரையில் தலையைச் சாய்த்தபடி ஏதோ சொல்ல முயற்சித்தான். அப்போது நான் அவனது வாயின் வார்த்தைகள் வெளிப்படும் வரை பொறுமையுடன் காத்திருந்தேன். பேஷண்ட்டியிடம் இருந்து மெல்லிய புன்முறுவல் வெளிப்பட்டது அது செயற்கையான புன்முறுவல் என்று எனது பழுத்த டாக்டர் மூளை இலகுவாகக் கண்டுபிடித்துவிட்டது. இது எனது வைத்திய துறையில் முதல் அனுபவம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வருகிறார்கள் போகிறார்கள் அதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆனாலும் ஒருசிலரை மட்டுமே எப்போதும் நினைவு கொள்ள முடிகிறது.

அன்றுதான் முதல்முதலாகக் கருணைநாதனை சந்தித்தேன். அவன் கட்டாரில் சனய்யா என்ற இடத்தில் தொழிலாளருக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்தான். தகப்பன் பெயர் முத்தர் தாயின் பெயர் திலகவதி ஒரு தங்கை சோதியா என்ற இயக்கப் பெயருடைய ராஜீ கருணையுடன் கூடப் பிறந்தவள். சில வாரங்கள் கழிந்தபின் மீண்டும் கருணையைச் சந்திக்க இரண்டாவது வாய்ப்புக் கிடைத்தது.

இம்முறை வேலைத்தளத்தில் மூக்கு வாயினால் இரத்தம் கக்கியதாகக் கூறி அவனது பாத்தாக்கா அட்டையில் யாழ்ப்பாணம் என்று குத்தப்பட்ட பெடியனை கருணைநாதன் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தான். இப்போது சிறிய மாற்றம் தலைமுடியை பொலிஸ்கு றொப் அடித்து இருந்தான். கடும்வேலை முகம் மட்டும் வெயிலில் காய்ந்து சிவந்து போய்க்கிடந்தது. இம்முறைதான் அவன் பேச்சில் மாற்றம் நிகழ்ந்து இருப்பதைக் கண்டேன். மூன்று நாட்களாகப் புழுதிப்புயல் ஓயாமல் சனயா நகரில் வீசிக்கொண்டிருந்தது. மூன்றாம் நாள் தீவிரமாகச் சற்று மூர்க்கமடைந்து அதன் எல்லைக் கோட்டைத் தாண்டி சவுதி நாட்டுக்குப் படையெடுத்ததனால் வாகன போக்குவரத்துப் பாதிப்படைந்துபோனது. வீதியைப் பார்க்க முடியவில்லை.

எங்கும் புழுதிக்காடு. அடிக்கடி அல்ஜசீரா மத்திய  கிழக்குச் செய்திகளில் சனயாவைத் தாக்கிய புழுதிப்புயல் பற்றியே செய்திகள் வந்த வண்ணமிருந்தன ஒவ்வொரு விடுமுறை நாள் புதனும் ஆறுமணிக்கு முன்னர் சக வைத்தியர்களுடன் வேட்டை நாய் றேஸ் பார்க்கச் செல்வது வழக்கம். வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்தப் பந்தயம் களைகட்டும். இருபதுக்கும் குறையாத ஒருவகையான உடல் மெலிந்து ஒட்டிப்போன வயிற்றுடன் பந்தயத்திடலில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருக்கும் இருபத்தைந்து அடி தூரத்தில் இருவாகனம் நிறுத்தப்படும் அதன் பின் பகுதியில் ஒரு முழு ஆட்டுக்குட்டி அடித்துத் தொங்கவிட்டு இருப்பார்கள்.

போட்டி தயார் எனச் சமிக்ஞை வழங்கப்பட்டதும் மின்னல் வேகத்தில் காற்றைக் கிழித்தபடி வேட்டை நாய்கள் ஆட்டிறைச்சியைக் கவ்வுவதற்குப் பசியோடு ஓடும். இது குதிரைப் பந்தயத்தைவிட அலாதியானது. வயது வேறுபாடின்றி அராபியர்கள் அனைவரும் பங்கெடுப்பார்கள் வெற்றிபெற்ற நாய் உரிமையாளர் பல்லாயிரக்கணக்கான றியால்கள் பரிசாகக் கிடைக்கும் தோற்றுப்போன நாய்களின் நிலை பரிதாபமானது. இதைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அராபியர்கள் ஒரு மொக்கனுகள் என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.

போட்டி முற்றுப்பெறும் வரைக்கும் நல்ல ஆர்ப்பாட்டமும் ஆரவாரமுமாக இருக்கும் திடல். பந்தயத்தின் பின்னர் இரத்த ஆறாகக் காட்சி தரும் தோல்வியடைந்த நாய்களைக் கூரியவாள்கள் கொண்டு வெட்டிக் கொன்றுவிடுவார்கள். இதைப் பார்க்க நாங்கள் யாரும் நிற்பதில்லை, அவ்வளவு கொடூரம். அராபியர்களுக்கு வீரவிளையாட்டு இவ்வீர விளையாட்டைக் காண பல ஊர்களில் இருந்து தமிழர்கள் மலையாளிகள் என பலரும் கூடுவார்கள்.

இவ்வாறு கூடும் ஒருநாளில் தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு இடம்பெற்றது. அப்போது கருணைநாதன் நல்ல வாட்ட சாட்டமாக இருந்தான். பார்ப்பதற்கு அவன் முகம் அவனது பெயரைப் போல கருணையின் திருவுருவமாக வெளிப்பட்டது. தூரத்தில் தனியாக வேட்டை நாய் பந்தயத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கருணையைப் புழுதி வீசிக்கொண்டிருந்த அந்தப் பிற்பகல் வேளை சந்தித்தேன். கண்டதும் மரியாதையுடன் கைகளைக் குலுக்கினான்.

நிறைய பேசினோம். இந்த வீரவிளையாட்டில் கொல்லப்படும் நாய்கள் குறித்து அதிகமாக இரக்கம் கொண்டிருந்தான். தானும் வீட்டில் நாய் வளர்ப்பதாகவும் தமது குடும்பம் எப்படி அதை அன்புடன் பராமரிக்கிறார்கள் என்று சொன்னபோது அவன் மீது அளவுகடந்த பிரியம் ஏற்பட்டுவிட்டது. மேலும் விரைவில் தன்னுடைய தங்கையின் கணவனைக் கட்டாருக்கு அழைத்து வரவேண்டும் என்று கூறினான். நாட்டில் போர் முற்றுப்பெற்றுவிட்டது.

ஆனாலும் கெடுபிடிகள் தீர்ந்து மக்கள் சுமுகமாக வாழ குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகளாவது தேவை. வேலை இல்லா திண்டாட்டம் வீட்டுப் பிரச்சனை சமாளிக்க இன்னும் ஒருவர் வெளிநாட்டிக்கு வந்தால்தான் தீரும் என்று பொறுப்புணர்ச்சியோடு கூறினார். கருணை மீது அளவற்ற கருணையும் மதிப்பும் அக்கணம் எனக்குள் பிறந்துவிட்டது. மனதுக்குள் பட்டதைத் தயக்கமும் ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக பேசுகின்றானே எதோ ஒரு வகையில் உதவ வாய்ப்புத் தேடினேன். குடிவெறி இல்லாமல் தன் குடும்பத்தை முன்னேற்றவேண்டும் என துடிக்கும் ஒருவனுக்கு உதவவேண்டும் என முடிவுசெய்துவிட்டேன்.

புழுதிப்புயல் சவுதி அரேபியாவின் எல்லையை ஆக்கிரமித்தபடி இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் சில தொழிலாளிகள் காவிநிற உடையுடன் ஒட்டகம் மேய்த்துக்கொண்டிருந்தனர். நானும் கருணை என அழைக்கப்படும் கருணைநாதனும் வேட்டைநாய் ஓட்டப்பந்தயம் இடம்பெற்ற திடலில் இருந்து மெல்ல நடந்து என்னுடைய வண்டி நிறுத்தப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்றோம். எங்களுக்குப் பின்னால் கருணையுடைய நண்பன் தொலைபேசியில் யாருடனோ இந்திமொழியில் உரையாடிக்கொண்டுவந்தான். மணல் மேடைகளைத் தாண்டி என்னுடைய வண்டியை அண்மித்தபோது நேரம் மதியம் 6.00 மணியைத்தாண்டி விட்டது. பள்ளிவாசல்களில் இருந்து வாங்கொலிகள் தாறுமாறாக ஒலித்துக்கொண்டிருந்தது.

பந்தயத் திடலில் இருந்து மக்கள் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றனர். சைக்கிள் ரியூப்புக்களினால் நுட்பமாகச் செய்யப்பட்ட சில பந்துகளைக் கிரிக்கெட் மட்டைகளால் வீசி அடித்தபடி சில இளைஞர்கள் உருது மொழி பேசிக்கொண்டு வந்தார்கள் அப்போது அதில் வந்த சிலர் கருணையுடன் கைகுலுக்கிவிட்டு செல்கின்றனர். அப்போது கருணை சொன்னான் “இந்தப் பாகிஸ்தானிகளின்ர கேம்புக்குமுன் கேம்புதான் எங்கட கேம்ப் டொக்டர் கிரிக்கெட் விளையாட என்னையும் அழைப்பார்கள் நான் ஓரிரு தடவை விளையாடி இருக்கிறேன்” என இருமியபடி சொன்னான்.

இப்போது கருணையுடன் வந்தவன் தொலைபேசிப் பேச்சை நிறுத்திவிட்டான்.

சரி டாக்டர் போச்சு வாங்க இன்னொரு நாள் சந்திப்போம் என்றபோது என்னுடைய மனம் கேட்கவில்லை. நானும் சனயாவாலதான் நஷினலுக்குப் போறேன். ஏறுங்க நான் உங்கட கேம்புக்குக் கொண்டு போய் வுடுறன் இருட்டுப்படுத்து இந்தப் புழுதிக்கால எப்ப போய்ச் சேர போறீங்க நாளைக்கு வேல வேற இல்ல.

டாக்டர் உங்களுக்கு ஏன் சிரமம்? சரி சரி ஏறுங்க என்று அழுத்தமாகக் கூறியபோது இருவரும் தயங்கித்தயங்கி ஏறினர். என்னுடைய வண்டி கண்ணாடியை இருக்கையில் இருந்து சரி செய்தபோது அவர்கள் முகத்தில் ஏதோ கலவரம் வெளிப்பட்டது. டஸ்போட்டில் இருந்து இளையராஜா ஹிட் சீடியை எடுத்து வண்டியில் ஒலிக்கச் செய்தபோது அவர்கள் இருவரது முகத்தில் எந்த ஈயாட்டமும் இல்லை. அவர்களுடைய சிந்தனை எங்கோ பறந்து கொண்டு இருந்தது. அவர்களைத் திசை திருப்புவதற்காகதும் குடிக்கப்போறீங்களா ?

பெப்சி... கிப்சி...

இல்ல... டொக்டர் பரவால

ஒரே சொல்லில பதில் வந்தது.

சரி ம்ம்ம்ம்ம் உங்கட முதிர் எப்படி நல்லவனா?

சீ சீ அவன் ஒரு நாய் மலையாளி எங்கள கண்டால் அவனுக்குப் புடிக்காது பேய் மாதிரி நிப்பான் இந்தியாக்காரரை மட்டும் நல்லா கவனிப்பான் எங்கள மாதிரி சிறீலங்காக்காரரை கண்ணில காட்டக் கூடாது அப்பிடி ஒரு சனியன் என்று பற்களை நறும்பியபடி சொன்னான்.

ஹலோ நானும் இந்தியன்தான் மெட்ராஸ்காரன் என்னையும் அப்படி நினைக்காதீங்க தோஸ்த் சீ சீ இல்ல டொக்டர் நீங்க ஏன் அப்பிடி சொல்றீங்க…

எங்கட போராட்டமும் எங்கட கஸ்ரமும் இந்த மலையாளிமாருக்கு மயிர் மாதிரியாம் அண்டைக்கி என்னோட கொழுவிப்போட்டு முகத்தில அடிச்ச மாதிரி சொன்னான். ராஜீவ்காந்திய கொண்டு போட்டோமாம். மயிரனுக்கு அதுதான் பிரச்சனையாம். இதைக் கூறும்போது வண்டி கிட்டத்தட்ட அவர்களது கேம்பை அண்மித்து விட்டது. சனயாவில் ஒரு பதிவான கூரையுடன் அமைக்கப்பட்ட நீண்ட எஸ்டேட் வீடுகள் போன்ற வடிவத்தையுடைய கட்டிடத்தின் முன்பு வண்டியை நிறுத்தச்சொன்னார்கள். தெங்க்ஸ் டாக்டர் எனக்கருணையுடன் வந்தவன் கண்களைச் சிமிட்டியபடி கூறினான்.

நேரமாச்சு என்னொரு நாள் பார்ப்போம் என்றேன். இல்லை வந்து விட்டீகள் ஒருமுறை வாருங்கள் எனக் கருணை அழைக்க அழைக்க அதைத்தட்ட முடியவில்லை. அவர்கள் என்னை வற்புறுத்தி அழைத்துகொண்டு சென்றார்கள். இலக்கம் 67 என்ற பொறிக்கப்பட்ட அறையினுள் மூவரும் நுழைந்தோம். அறை முழுவதும் இருளில் மூழ்கி கிடந்தது. எங்கும் நெருக்கமும் புழுக்கமும் மண்டிக் கிடந்தது. வாயிலில் காலணிகளின் குவியல்.அவர்கள் ரூம் வாசலை திறந்தபோது அங்கே  இயக்கப் பாடல் ஒன்று தொலைக்காட்சிபெட்டியில் ஓடிக்கொண்டு இருந்தது.

உள்ளங்கையில் சிறுபொடித்தூள்களை வைத்து மறு கையால் தேய்த்து ஒரு சிறுபொட்டலமாக உருட்டி அதைத் தன் வாயில் திணித்தபடியே ஒரு வங்காளதேச வாலிபன் என்னை வரவேற்றான். உள்நுழைந்தவுடன் குப்பென வியர்வை நாற்றம் நாசியைப் பதம் பார்த்தது. இப்படி ஒரு நாற்றத்தை இப்போதுதான் என் மூக்குச் சுவாசிக்கிறது. புளித்துப்போன உடைகளின் நாற்றம் குமட்டிக்கொண்டு வந்தது.

அந்த நேரத்தில்தான் முதன் முதலாகச் செல்லப்பாவுடைய பச்சை வயலே என்று தொடங்கும் அந்தப் பாடலை கேட்டேன். இப்போது லண்டனில் கூட அந்தப் பாடல் என்னுடைய மேர்சடஸ் காரில் கேட்டுக்கொண்டிருப்பேன். அந்தப்பாடல் ஏதோ ஒரு சோகமான சூழலில் அங்கு இருந்தவர்களால் கேட்கப்பட்டது. தலையைச் சுழற்றுவது போல இருந்தது நாற்றம், வாங்க டாக்டர் என்றபடி காலியாகக் கிடந்த கட்டிலில் குவிந்து கிடந்த உடைகளை அள்ளி வேறு எங்கோ மூலையில் மறைத்துப்போட்டான்.

இப்போது இருக்கை தயார் அதில் நான் அமர்த்தப்பட்டேன். டாக்டர் எதும் குடிக்கிறீங்களா? இல்ல பரவால வேண்டாம். நோ டொக்டர் முதன்முதலா வாறீங்க ரூமுக்கு இதோ பெப்சி கொண்டு வாறன் என்றபடி கருணை குளிர் சாதன பெட்டியைத் திறந்தான் அதுவரை குளிர்சாதன பெட்டி என்று எனக்குத் தெரியாது. அதன் முகப்பில் பல புரட்சியாளர்களின் முகங்கள் ஒட்டப்பட்டு இருந்தன. பார்வையைத் திருப்பித் தலைக்குப் பின்னால் வந்த குரலின் சொந்தக்காரனைப் பார்க்க முயற்சித்தேன். அதற்குள் குறிப்பறிந்து கருணை அந்த மனிதனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அப்போதுதான் அந்த மனிதனை முதன் முதலாகக் கண்டேன்.

கணக்கான உயரம் 37 வயது மதிக்கத்தக்க மனிதன் மூன்று நான்கு நாள் தாடி வழித்த முகம் கண்கள் சற்று குழி விழுந்த கண்கள் முகம் பொது நிறம் என்னைக்கண்டவுடன் மெல்லிய புன் சிரிப்பு மட்டும் அவனிடமிருந்து வெளிப்பட்டது. கருணை அந்த மனிதனை தன்னுடைய தங்கையின் கணவன் என்று அறிமுகப்படுத்தினான். முதல் ஒரு முறை சந்திக்கும்போது இவனைப் பற்றிக் கருணை சொல்லி இருந்தான்.

இறுதிக்கட்ட போர் முள்ளிவாய்க்காலோடு ஓய்ந்து போக வாய்க்காலிலிருந்து இராணுவத்திடம் சரணடைந்து நேரடியாக வவுனியா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுப் பின்பு அந்த மனிதனை சாமர்த்தியமாக வெளியே எடுத்து இங்குக் கொண்டு வந்திருக்கிறான் கருணை என்றார் டாக்டர். இதைச்சொல்லும்போது டாக்டரின் முகத்தில் ஒரு வித கலவரம் படர்ந்து இருந்தது. என்னிடம் கதை சொல்லுவதை நிறுத்திவிட்டு குளியல் அறைக்குள் சென்று முகத்தைச் சற்று குளிர்ந்த நீரால் கழுவி விட்டுப் பிரிட்சை திறந்து கொஞ்சம் பியர் எடுத்து வந்தார்.

கிளாசில் பியர் அளவாகப் பரிமாறப்பட்டபோது தொடர்ந்து கதையைக் கேட்கும் ஆவலில் டாக்டர் அந்தப்பெடியன் தானே இயக்கப்பெட்டை சோதியாயாவட புருசன்? சிறிய அமைதியின் பின் டாக்டரிடம் வாயை இடது பக்கம் கோணியபடி அதை உறுதி செய்தார். இப்போது கதை சுவாரசியமாகச் சென்றுகொண்டு இருப்பதையும் தொடர்ந்து டாக்டரிடமிருந்து மிகுதிக்கதையைக் கேட்டுத்தெரிந்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலெழுந்தது.

பியரை அருந்தி முடித்துவிட்டு குவளையை வைக்கும் அதே நேரத்தில் சொன்னார். கருணைநாதன் அந்த மனிதனை தனது தங்கையின் கணவன் என அறிமுகப்படுத்தும் முன் அவன் என் இருக்கைக்குப் பின்னல் போடப்பட்டு இருந்த கட்டிலில் இருந்தபடி கைத்தொலைபேசியில் எதையோ நோண்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

அவன் என்னைப் பார்த்ததும் கண்களை வெட்டி மூடியபடி எனக்கு மரியாதை செலுத்தும் முகமாக எழுந்து தலையை மெல்ல சிலுப்பிச் சற்று புன்முறுவல் செய்தான். அப்போதுதான் நான் அவனைக் கூர்ந்து கவனித்தேன். வெள்ளி கம்பிகள் போல நரைமுடிகள் நாடிப்பக்கம் இடைவெளி விட்டு மடிந்துகிடந்தன. கலவரம் அடங்காத முகம் நீண்ட நாட்களாக எதையோ தேடி அலைபவனைப்போல் அவனது கண்கள் படபடத்தன. இருவரும் கைகளைக் குலுக்கினோம். அவனதுவிரல்களை அழுத்தும்போது கடுமையான கட்டிட வேலை செய்யும் பாகிஸ்தானியர்களின் உள்ளங்கையை ஒத்து இருந்தது. அவனது விரல்கள் கம்பிபோல எனது உள்ளங்கையில் உரசியது. அருகில் கருணையின் அனுங்கிய குரல் அம்மனிதனிடமிருந்து முகத்தை வெடுக்கெனத் திருப்பினேன்.

எனக்குப் பின்னால் ஒரு தகர நாற்காலி வைக்கப்பட்டு இருந்தது. பரீட்சயமில்லா தண்ணீர்த்தொட்டியில் அமர எத்தனிக்கும் புறாவைப்போலப் பாதி நாற்காலியில் மெல்ல அமர்ந்தேன். வெளிக்கதவு திறந்து மூட அங்கிருந்தவனை மெல்ல எனது கண்களால் ஊடுருவிப்பார்த்தேன். அப்போதும் அந்த மனிதன் சதுர அறைக்குள் இருந்துகொண்டு தொலைபேசி தொடுதிரைக்குள் மெல்ல மெல்ல மூழ்கி அமிழ்ந்து மொழி இல்லாதவனைப்போல மௌனமாக இருந்தான்.

வானம் இருண்டு கறுத்துப்போய்க்கிடந்தது. நான் அறையை விட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது. ஒரு கையில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கப்பில் பால் டீயும் இன்னொரு கையில் விசுக்கோத்துகளும் நான் முடிப்பதற்காக எடுத்துவந்தான். நன்றி கூறி பெற்றுக்கொண்டேன். கப்புக்குள் நிரம்பிக்கிடந்த பால் டீயை ஒரு சில முரடுகள் குடித்துவிட அவர்களிடமிருந்து நன்றி கூறி விடைபெற்றேன்.

கதவை அடைந்ததும் அந்தக் கட்டிலில் சாய்ந்து இருந்த மனிதனைப் பார்த்தேன். அவன் அப்போது அங்கு இல்லை என் பின்னால் கருணை வந்தான் வீதி வரை வண்டியின் முன்பகுதி புழுதி மணலால் மூடிக்கிடந்தது. அதைத் துப்புரவு செய்யக் கருணை முற்பட்டான். அவனைத் தடுத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். குர்…குர்…குர் என்ற அலறலோடு உறுமியது.

கையைக்குலுக்கிவிட்டுப் புறப்பட்டேன். அப்போது வண்டி பாலைவன மணற்பாதைகளை ஊடறுத்து பெருந்தெருவை அடைய ஒரு சில நிமிடங்கள் வண்டியை அதிவேகமாகச் செலுத்த வேண்டி இருந்தது. ஒரு உயரமான இடத்தின் வளைவில் இருந்து சனயாவின் அந்தத் தொழிலாளர்களின் முகாம்களைப் பார்த்தேன். அங்காங்கே சில மின்மினிப்பூச்சிகள் மெல்ல பறக்க ஆரம்பித்தது போல மின் குமிழ்கள் ஒளிர ஆரம்பித்தன.

அன்று நான் முதன்முதலாக ஒரு போராளியின் முகத்தை நேராகப் பார்த்தேன். அவன் தன்னை எனக்கு ஓர் அந்நியனைப்போல உணரச்செய்தான். அவனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனது முகத்தில் இன்னும் துன்பத்தின் ரேகைகள் அகன்றுவிடவில்லை. எதோ இன்னும் துன்பத்தைச் சுமந்து வந்திருக்கும் ஒரு வழிப்போக்கனைப்போல என்னால் அவனை ஊகித்து அறிய முடிந்தது.

என்னுடைய வீட்டுக்கு வந்தாலும் அங்குச் சந்தித்த ஒவ்வொருவரையும் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திகொண்டு இருந்தேன் அவர்களை மதிக்க வேண்டும்போலத் தோன்றியது. துன்பத்தின் இருப்பிடத்தில் இருந்து தப்பி வந்தவனைப்போல அன்று இரவு உணர்ந்தேன் பெரிய லட்சிய கனவு நிறைவேறாமல் கருவோடு அழிக்கப்பட அந்த மக்களையும் அந்த மண்ணையும் ஒரு முறை அல்ல பலமுறை நினைத்துக்கொண்டேன்.

போர் ஒழித்து ஒரு வருடம் முடிந்தாலும் அங்கு மக்கள் நிம்மதியாக வாழதொடங்கவில்லை என்பது மட்டும் உறுதி. அந்த மக்களுக்கு எதாவது நல்லது என்னால் செய்வவேண்டும் போலத் தோன்றியது.

ஸ்பீட் இதை என்னிடம் சொல்லி முடித்துவிட்டு குசினிக்குள் சென்று சூடான தேநீரோடு வந்தார் அவரது கையில் ஒரு சிகரெட் ஒளிர்ந்துகொண்டு இருந்தது. இப்போது எப்படியாவது மிகுதிக்கதையை அவரிடமிருந்து கறந்து விட வேண்டும் என்றதில் நான் குறியாக இருந்தேன். கதையைக் குடுக்க ஆரம்பித்தேன் அஸ்வின் சற்று சினந்தபடி சிகரெட் துகள்களை மேசையில் இருந்த ஆஷ் றெயில் தட்டினார்.

ஒரு நாள் என்னை ஒரு நிகழ்வுக்கு அழைத்தார்கள் அந்த நிகழ்வு பிரிகேடியர் தமிழ்செல்வனுடைய நினைவு நாள் என்றார்கள். நான் கவுரவமாகக் கலந்து கொண்டேன். அன்றுதான் அந்த மனிதனை கண்ட கடைசி நாளாக இருந்தது. நிகழ்வை சனையாவில் வசித்து வரும் அத்தனை தொழிலாளர்களும் உணர்வு பூர்வமாக அனுசரித்தார்கள். மஞ்சள் சிவப்பு நிறங்களில் கொடிகள் தாயகப்பாடலின் மெட்டுக்கு அசைந்தது. வெவ்வேறு இடங்களில் இருந்து வருகைதந்து நிகழ்வைப் பூத்தூவி சிறப்பித்தார்கள்.

அங்கு உள்ள சுவர்களில் சில போராளிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அஞ்சலி செலுத்தினர். அன்று மதியம் நான் அங்கு இருந்து கிளம்பி விட்டேன். வீட்டுக்கு சென்று தொலைக்காட்சி பெட்டியை திறந்தபோது முதலாவது ஆச்சரியம் காத்து இருந்தது. அன்று இடம்பெற்ற வணக்க நிகழ்வுகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்து இருந்தது.

அடுத்த நாள் ஒரே பரபரப்புடன் காலை விடிந்தது. வைத்தியசாலைக்கு வந்த ஆம்புலன்ஸ் சிலவற்றில் தமிழ்பொடிகள் காயப்பட்டு வந்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. சரியான தகவல் இன்னும் இல்லை. உடனடியாகக் கருணைக்குத் தொலைபேசி செய்தேன். நம்ப முடியவில்லை. வணக்க நிகழ்வு நடந்த அன்று இரவு சனையாவில் கலவரம் நிகழ்ந்து இருப்பதாகச் சொன்னான்.

பல சிங்கள தொழிலாளிகள் காயம் அடைந்து போனதாகவும் தமிழர்கள் சிலருக்கு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளதாகவும் சொன்னான். நான் விரைந்து ஆம்புலன்ஸ் இரைந்த இடத்தை நோக்கி ஓடினேன். அங்கு கருணையும் அவனது நண்பர்களும் நின்றார்கள். கருணையைத் தனியாக அழைத்துச் சென்று விபரத்தை அறிந்தபோது விறைத்துப்போனேன். கேம்பை சுற்றி ஒட்டி இருந்த தமிழ்ச்செல்வனுடைய போஸ்ட்டர்களைச் சிங்கள தொழிலாளிகள் கிழித்துவிட்டதாகவும் கோபம் அடைந்த தமிழர்கள் அவர்களது இருப்பிடத்துக்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டதாகவும் அதில் ஒரு சிங்களவன் கண்ணாடி போத்தலால் வயிறு கிழிக்கப்பட்டுப் பரிதாபமாக இறந்ததாகக் கருணை சொன்னான். நம்ப முடியவில்லை. சனையா முழுவதும் போலீசார் ஆயுதம் தாங்கி பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. கொல்லப்பட்ட சிங்களவன் முன்னாள் பாதுகாப்புப் படை வீரன் என்ற தகவல் போலீசார் உறுதி செய்தனர்.

குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட இராணுவவீரன் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் போர் முடிந்தவுடன் அங்கிருந்து இலங்கை அரசாங்கத்துக்குத் தெரியாமல் தப்பி அரபு நாட்டுக்கு வந்ததாகவும் இலங்கை சிங்கள செய்தி சேவை ஒன்று தெரிவித்து இருந்தது. வவுனியா தடுப்பு முகாமில் உள்ள நபர்களைக் கடத்தியது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் குறித்த நபரை இலங்கை அரசாங்கம் சில காலம் தேடி திரிந்ததாகவும் அறியப்பட்டது.

அன்று இரவு நாங்கள் தூங்கவே இல்லை. நானும் முடிந்த அளவு அந்தக் கொலைகாரனை தெரிந்து கொள்ள முயற்சித்தேன் அந்தக் கொலைச்சம்பவம் சில தினங்களின் பின்பு தொழிலாளர்களால் மறக்கப்பட்டு மறுபடியும் அனைவரும் வேலைக்குச் சென்று வந்தனர். கொலை நடந்து ஏழாம்நாள் பின்னிரவு ஒன்றில் கருணையின் தொலைபேசி அழைப்பு அவனோடு பேச ஆரம்பித்தபோது ஓவென்று கதற ஆரம்பித்தான். என்ன சம்பவம் என்று அறிய அவன் அழுகையை நிறுத்தியபாடில்லை. பயந்து போனேன்.

இப்போது நம்ப முடியாத ஆச்சர்யம் எனக்காகக் காத்து இருந்தது. அவன் பிளான் போட்டு வந்து கொண்டிருக்கிறான் என்றான் கருணை. ஸ்பீட் கதையை நிறுத்திவிட்டு தன் அடர்ந்த தாடியைக் கோதிக்கொண்டு தன் முன்னால் இருந்த குவளையை மதுவால் நிரப்பினார். அதுவரை நான் அவரைக் கேள்விகேட்டு குழப்பவில்லை. சனையா புண்டையின் மயிர் என்று இழுத்து மெல்ல காலை உதைந்தார். அவன் இப்படிச் செய்வான் எண்டு கனவிலும் நினைச்சு பாக்க இல்லை என்றார். எனக்கு ஒண்டும் பிடிபட இல்லை.

குழப்பத்தோடு என்ன மச்சி அவன் கருணை சொன்னான் நான் கேட்டேன். அப்போதுதான் அந்தச் செய்தி தன்னைத் தூக்கிவாரிப்போட்டதாகவும் கருணையின் மச்சானை வேலைத்தளத்தில் போலீசார் தேடியதாகவும் அவன் அங்கு இல்லை என்றும் எங்கோ நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் மறைந்து இருந்தபோது அவனைக் கைது செய்துவிட்டதாகப் புலம்பி அழுதான். சுவரா ஏதோ நடக்கப்போது அராபிக்காரனட்ட தப்ப ஏலாது என்று கத்தினான். அடுத்த நாள் தொலைக்காட்சி செய்தியில் கருணையின் மச்சான் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலைகறுத்த துணியால் முகம் மூடப்பட்டு ஒரு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படட காணொளியை அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டது.

அடுத்த நாள் போலீசார் கருணையை விசாரணைக்கு அழைத்தது. அதில் நிச்சயம் அவனது மச்சானுக்கு மரணத் தண்டனை என்பது உறுதி ஆனது. இனி யாராலும் அவனைக் காப்பாற்ற முடியாது என்று முடிவானது. சில மாதங்கள் கழிய நான் இந்தியா வந்துவிட்டேன். இனி அரபு நாடு செல்வதாக எண்ணம் இல்லை என்று கருணைக்கு ரெலிபோனில் சொல்லி இருந்தேன். அதன் பின்பு கருணை இலங்கை செல்வது பிரச்சினை என்றான்.

அவனை அங்கிருந்து ஒரு அரபி முதிரை பிடித்துக் கள்ள பாஸ்போர்ட் முடிச்சு அங்கிருந்து லண்டன் எடுத்துவிடக் கொஞ்ச வருடம் பிடிச்சுது. மீண்டும் அவன் லண்டன் பாஸ்போட் எடுத்துக்கொண்டு இலங்கைக்குத் தங்கச்சியைப் பார்க்கபோகும்போதெல்லாம் அவன் என்னையும் அழைப்பான். ஏனோ நான் அதைத் தவிர்த்து வந்து இருக்கிறேன்.

சோதியாவும் பல முறை அழைத்து இருக்கிறாள். சோதியாவை லண்டனுக்கு எடுக்கவேண்டும் என்றது கருணையின் விருப்பம் ஆனால் எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நானும் கடைசிவரை அந்தப் போராளியின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. டாக்டர் இவற்றைச் சொல்லி முடிப்பதற்கு முன் தொலைபேசி அழைப்புக் கருணைநாதனிடம் இருந்து, மச்சான் இப்போது நான் டோகாவிலே டிரான்சிட் சில மணிகள் அங்கு நிற்பதாகவும் ஒரு பழைய நண்பன் தன்னைப் பார்க்க வருவதாகவும் தனக்கு மறுபடி அந்தக் கொலைகார மண்ணைத் தொட விருப்பம் இல்லை.

எயாப்போர்ட் உள்ளேயே இருப்பதாகவும் சொல்லி சிலோன் போய்ட்டு எடுப்பதாகச் சொல்லி விட்டு தொலைபேசி தொடர்பைத் துண்டித்தான். இந்தக் கதையை நான் எழுதி முடிக்கும்போது எனக்குள் எழுந்த சந்தேகம் அந்தச் சிங்கள ராணுவ வீரனை கொலை செய்வதற்கான காரணத்தை டாக்டரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இன்னும் திடுக்கிட வைத்தது. அதை வாசகருக்கு சொல்ல விரும்பவில்லை அவர்களே அதை ஊகித்து அறிந்து கொள்ளட்டும் இப்படியே முடி என்கிறார் டாக்டர். எல்லாம் அறிந்து நான் கதையை முடிக்க எனக்கு இரண்டு மாதங்கள் ஆகின.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer