கொய்யாவின் வாசனை
14. புகழும் புகழ்பெற்றவர்களும்

தமிழில்: - பிரம்மராஜன்

பகிரு

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸூடன் பிளினியோ அபுலேயோ மென்டோசாவின் உரையாடல்

மென்டோசா: நாம் சற்றே அசௌகரியமான ஒரு பேசுபொருளை நோக்கி செல்வோம் - புகழ். புகழ்பெற்ற பிறகு நீங்கள் உருவாக்கிக்கொண்ட நட்புகளைப் பிற நட்புகள் அளவுக்கே நெருக்கமாய் உணர்கிறீர்களா? நிஜமான நட்புகளையும் வெறுமனே புகழின் ஒளிசூழ்வட்டத்தினால் கவரப்பட்ட நண்பர்களையும் பிரித்தறிய உங்களால் முடியுமா?

மார்க்வெஸ்: பல ஆண்டுகளாக நான் எனது நண்பர்களை ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலுக்கு முற்பட்டவர்கள் என்றும் அதற்குப் பின் வந்தவர்கள் என்றும் பிரித்து வைத்திருந்தேன். இதில் முன்கூறப்பட்டவர்கள் அதிகம் நம்பகமானவர்கள் ஏனென்றால் நாங்கள் நண்பர்களானது நான் புகழ்பெற்றவன் என்ற காரணத்திற்காக அல்ல ஆனால் பல்வேறுபட்ட காரணங்களுக்காக என்று நான் சுட்டிக்காட்டுகிறேன் இதன் மூலம். பல ஆண்டுகளுக்குப் பிறகு அது ஒரு தவறு என்பதைக் கண்டுபிடித்தேன். ஒன்றுக்கும் மேற்பட்ட, ஆழம்காண இயலாத காரணங்கள் ஒரு நட்பின் பொருட்டு இருக்கலாம் மேலும் புகழால் தூண்டப்படும் ஈர்ப்பு வேறு எந்த ஒரு காரணம் அளவுக்கே செல்லுபடியாவது. நிச்சியமாக இது இரு வழிகளில் வினைபுரிகிறது. இதற்கு முன்னர் என்றுமே சந்தித்திருக்க முடியாத பல புகழ் வாய்ந்த நபர்களை நானும் கூடத் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது, மேலும் நான் அவர்களைத் தெரிந்துகொள்ள அவர்கள் புகழ்பெற்றவர்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அதன்பிறகு என்னுடைய புகழோ அல்லது அவர்களுடையதோ சம்மந்தப்படாத எந்தத் தொடர்புமற்ற அடிப்படை ஒப்புமையின் காரணமாய் நாங்கள் நண்பர்களானோம். இந்த அர்த்தத்தில் புகழ் நல்லதன்மையான விஷயம். வேறு எந்த வகையிலும் சாத்தியமாகியிருக்க முடியாத நட்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான தகுதிமிக்கச் சந்தர்ப்பங்களை அது அளிக்கிறது. இருந்தபோதிலும், என் புதிய நண்பர்களின்பால் நான் உணரும் அன்பிற்கும் அப்பாற்பட்டு ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலுக்கு முற்பட்ட நாட்களின் எனது பழைய நண்பர்களைத் தனித்துவமான குழுவாய்த்தான் நான் இன்னும் எண்ணுகிறேன்,

ஒரு பகிரப்பட்ட கடந்தகால நினைவினால் அழிவுக்கப்பாற்பட்டதாய் ஒன்றாய்ப் பிணைக்கப்பட்ட ஒருவகையான ரகசிய சங்கமாக.

மென்டோசா: அவர்களுடனான உங்களின் உறவினை புகழ் மாற்றிவிடவே இல்லையா? நான் எண்ணவியலும் ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால்

நீங்கள் முன்பு எழுதியதைப்போல் இப்போது கடிதங்கள் எழுதுவதில்லை.

மார்க்வெஸ்: அது உண்மைதான். முன்பு இருந்ததைப்போன்ற நபர்களின் மீதான ஒரு கள்ளமற்ற அதே நம்பிக்கை இப்போது என்னிடம் இல்லை, புகழின் நிலை உறுதியற்ற தன்மை அப்படிச் செய்ய என்னை அனுமதிப்பதில்லை என்பது அதற்கான காரணம் இல்லை, ஆனால் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாய் உங்களின் கள்ளமின்மையை எடுத்து விடுகிறது என்பதால். நான் எழுதிய தனிநபர் கடிதங்களை அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் ஆவணக் காப்பகத்திற்கு யாரோ ஒருவர் விற்றுவிட்டதை நான் யதேச்சையாகக் கண்டுபிடித்ததிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளாய் நான் கடிதங்கள் எழுதவில்லை என்பது உண்மைதான். அது என் நண்பர்களுக்கு மட்டுமல்ல. வேறு யாருக்குமே நான் எழுதவில்லை. என்னுடைய கடிதங்களும் கூட விற்கத்தக்க சரக்கு என்ற கண்டுபிடிப்பு எனக்கு நம்பமுடியாத அளவுக்கு மன அழுத்தத்தினை உண்டாக்கிவிட்டது அதன் பிறகு நான் ஒரு கடிதம் கூட எழுதவில்லை.

மென்டோசா: எனவே இப்போது உங்கள் நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்புகொள்கிறீர்கள்...

மார்க்வெஸ்: அல்லது அவர்களைச் சந்திப்பதற்காக உலகைப் பாதியைச் சுற்றி வர பைத்தியக்காரத்தனமான செலவு செய்கிறேன். நான் அவர்களை எவ்வளவு பாராட்டுகிறேன் என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

மென்டோசா: உங்களது மிகச் சமீபத்திய நண்பர்களில் சில தேசத்தலைவர்கள் உள்ளனர். அதில் சிலர், நான் அறிவேன், நீங்கள் சொல்வதைக் கேட்பது மட்டுமன்றி உங்களுடன் ஆலோசனையும் நடத்துகின்றனர். ஒரு அரசியல்வாதியின் ஏதோவொன்று உங்களுக்குள் இருக்கிறது அல்லவா? அல்லது அது அதிகாரத்தின் மீதான ஒருவித ரகசியமான ஈர்ப்பாக இருக்கக் கூடுமோ?

மார்க்வெஸ்: இல்லை. விஷயம் என்னவென்றால், வாழ்க்கைக்கான ஒரு கட்டுப்படுத்தவியலாப் பேருணர்ச்சி எனக்கு இருக்கிறது, அதில் அரசியல் என்பது ஒரு அம்சம் மாத்திரமே. ஆனால் அது நான் மிகவிரும்பும் அம்சம் அல்ல, ஒருவேளை லத்தீன் அமெரிக்காவை விடக் குறைவான அரசியல் பிரச்சினைகள் உள்ள ஒரு கண்டத்தில் நான் பிறந்திருப்பேனேயானால் நான் இந்த அளவுக்கு அதில் ஈடுபாடுள்ளவனாய் இருந்திருப்பேனா என்று வியக்கிறேன். சூழ்நிலைமைகளால் அரசியல் செயல்பாடுகளுக்குள் வலிந்து ஈடுபடுத்தப்பட்ட ஒருவனாய் நான் என்னைக் காண்கிறேன்.

மென்டோசா: உங்கள் தலைமுறையைச் சேர்ந்த எல்லா லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்களாயிருக்கின்றனர், ஆனால் நீங்கள் மட்டும் மற்ற எல்லோரையும்விட மிக அதிகமாக. நான் இப்போதுதான் குறிப்பிட்ட சில தேசத்தலைவர்களுடனான உங்கள் நட்பு பற்றிக்குறிப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

மார்க்வெஸ்: புகழ் அளிக்கக்கூடிய (அவர்களுடையது மற்றும் என்னுடையதும் சரிசமமாய்) மனிதர்களை அறிந்துகொள்வதற்கான ஏறத்தாழ எல்லையற்ற சாத்தியப்பாடுகளின் விளைவுதான் அவர்களுடனான எனது தனிநபர் உறவுகள். அவர்களில் ஒன்றோ இரண்டோ பேருடனான நட்பானது எந்தவிதத்திலும் அதிகாரம் சார்ந்ததோ அல்லது புகழ் சார்ந்ததோ அல்ல, அது தனிநபர் பண்பு ஒருமைப்பாட்டின் விளவு.

மென்டோசா: அதிகாரத்தின் மீதான ஒரு ரகசிய ஈர்ப்பினை இருப்பதாய் ஒப்புக்கொள்ளமாட்டீர்களா?

மார்க்வெஸ்: ஆம். நான் தீவிரமான விதத்தில் அதிகாரத்தினால் ஈர்க்கப்படுகிறேன். அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. அது எனது பல கதாபாத்திரங்களில் வெளிப்படையாகி இருக்கிறது என்று நினைக்கிறேன் - விமர்சகர்கள் அதனை ஒருவேளை மிகவும் குறைவாகக் கவனித்திருக்கக்கூடிய, உர்சுலா இகுவாரனிடத்தும்கூட. வாஸ்தவமாக இது மூதந்தையின் அந்திமக்காலம் நாவலின் இருப்பின் நியாயமாக அமைகிறது. சந்தேகமின்றி அதிகாரமானது மானுட விருப்பார்வமாகவும் உயர் அவாவாகவும் இருக்கிறது, அப்புறம் எவ்வாறு பிற எழுத்தாளர்கள் தங்களது முற்றான வாழ்வுகளையே சில சமயங்களில் தீர்மானிப்பதாக அமைகிற ரகசிய சதியைப் பற்றி உணராமல் இருக்கிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மென்டோசா: நீங்கள் எப்போதாவது அதிகாரத்தினால் சபலத்திற்குள்ளாகி இருக்கிறீர்களா?

மார்க்வெஸ்: நான் தொடர்ச்சியாகவும் திட்டமிட்டும் அதிகாரத்திற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும் தவிர்த்து வந்திருக்கிறேன் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன, அது எந்த அளவில் இருக்கிறது என்றாலும், காரணம் அதற்குத் தகுந்த பின்னணியோ, வாழ்தொழிலோ அல்லது தீர்மான மிகு தன்மைகளோ என்னிடம் இல்லை. இந்த மூன்று அம்சங்களும் எந்த ஒரு வாழ்க்கைத் தொழிலுக்கும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன, மேலும் அவைதான் என்னை ஒரு எழுத்தாளனாக வரையறுக்கின்றன. உங்கள் வாழ்தொழிலில் பிழைவிடுவது ஒரு தீவிர அரசியல் பிழையும் கூடவாகும்.

மென்டோசா: உங்களது ஒரு நண்பர் பிடல் கேஸ்ட்ரோ. அவருடனான உங்களின் நட்பை எங்ஙனம் நீங்கள் விளக்கமளிக்கிறீர்கள்? எது மிக அதிகமாகப் பாதிப்பினை உண்டாக்குகிறது - உங்களுடைய அரசியல் பண்பு ஒருமைப்பாடுகளினாலா, அல்லது அவர், உங்களைப் போன்றே கரீபியப் பகுதியிலிருந்து வருபவர் என்பதனாலா?

மார்க்வெஸ்: கவனியுங்கள், பிடல் கேஸ்ட்ரோவுடனான எனது மிக நெருக்கமானதும் அன்பு நிறைந்தததுமான நட்பானது இலக்கியத்தின் வழியாகத்தொடங்கியது. 1960இல் ‘பிரென்சாலேட்டினா’வில் நானும் நீங்களும் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் நான் அவரைச் சர்வசாதாரணமாய்த் தெரிந்து கொண்டேன். ஆனால் எங்களுக்கிடையே பொதுவான விஷயங்கள் நிறைய இருந்ததாக நான் ஒருபோதும் உணரவில்லை. சில காலங்களுக்குப் பிறகு நான் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளனாகவும் அவர் உலகிலேயே மிகச்சிறந்த அரசியல்வாதி எனவும் அறியப்பட்ட பிறகு, நாங்கள் பலமுறை சந்தித்துக்கொண்டோம் ஆனால் அப்பொழுதும் கூடப் பரஸ்பர மரியாதை மற்றும் நல்லெண்ணம் அவற்றை மிஞ்சியும் கூட, நான் அரசியல் பிணைப்பினைத்தவிர அந்த உறவுக்குக் கூடுதலாய் ஏதாவது இருக்கும் என ஒருபோதும் உணரவில்லை. என்றபோதிலும், ஒருநாள் அதிகாலையில், ஏறத்தாழ ஆறு வருடங்களுக்கு முன்னர், வீட்டில் நிறைய வாசிப்பதற்கு அவருக்காகக் காத்திருப்பதனால் அங்கிருந்து கிளம்பிச்செல்லவேண்டிய கட்டாயம் இருந்ததென்றும் கூறினார். இதனைச் செய்ய வேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கிறது என்றபோதிலும், இது சலிப்பூட்டுவதாயும் சோர்வூட்டுவதாயும் இருப்பதாகக் குறிப்பிட்டார். தேவையாக இருக்கும் இந்த வாசிப்பின் சலிப்பிலிருந்து விடுவித்துக்கொள்ள இன்னும் சற்று லேசான அதே சமயத்தில் நல்ல இலக்கியமாக இருப்பதை வாசிப்பதற்கு நான் பரிந்துரைத்தேன். நான் சில உதாரணங்களை எடுத்துச் சொல்லும்போது ஏற்கெனவே அவற்றையெல்லாம் அவர் படித்து முடித்துவிட்டார் என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், அதைவிடக் கூடுதலானது என்னவென்றால், அவற்றைப் பற்றிய சிறந்த கணிப்பினைக்கொண்டிருந்தார். அன்றிரவு நான் சில மனிதர்கள் மட்டுமே அறியும் விஷயத்தைக் கண்டுபிடித்தேன். அதாவது பிடல் கேஸ்ட்ரோ ஒரு தீராப்பெருவேட்கை கொண்ட வாசகர் என்பதையும், அவர் எல்லாக் காலகட்டங்களிலிருந்து வரும் படைப்புகளையும் விரும்புகிறார் என்பதையும், மேலும் அதில் அவர் தீவிர சுவைத்திற வல்லுநர் என்பதையும். மிகக் கடினமான சூழ்நிலைகளிலும்கூட, அவரின் அந்த விநோத உதிரி நேரத்தை நிரப்புவதற்கான ஒரு நல்ல புத்தகத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்தார். அவர் இரவு வணக்கம் சொன்னபோது வாசிப்பதற்காக ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன். மீண்டும் அவரை அடுத்தநாள் பன்னிரெண்டு மணிக்குச் சந்திக்கும்போது அவர் அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்திருந்தார். அவர் அவ்வளவு கவனமிக்க, விடாமுயற்சியுள்ள வாசகராக இருப்பதால் முரண்களையும் தகவல் பிழைகளையும் நீங்கள் அதிகம் எதிர்பார்த்திராத இடங்களில் கண்டுபிடிக்கிறார். கப்பல் தகர்வுக்கு ஆளான கடலோடி (The Story of a Shipwrecked sailor)யின் கதையை அவர் படித்த பிறகு, நான் படகின் வேகத்தைத் தவறாகக் கணக்கிட்டிருக்கிறேன் என்றும் வந்து சேரும் சமயம் நான் சொன்னது போலிருக்காது என்றும் சொல்வதற்காக மட்டுமே நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்திருந்தார். அவர் சொன்னது சரி. சாவு முன்கூறப்பட்ட சரித்திரம் நாவலை வெளியிடுவதற்கு முன் அவரிடம் நான் கைப்பிரதியை எடுத்துச்சென்றபோது அவர் வேட்டைத் துப்பாக்கியின் அளவுகளில் இருந்த பிழையைச் சுட்டிக்காட்டினார். இலக்கிய உலகினை அவர் உண்மையாகவே விரும்புகிறார் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது, அந்த உலகில் அவர் சௌகரியமாய் உணர்கிறார் என்பதன், மேலும் அவரது பெருகிவரும் எண்ணற்ற எழுதி வாசிக்கப்படும் உரைகளின் இலக்கிய நடைகுறித்து அக்கறை கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார் என்பதை அறிவதில். ஒரு சமயம் அவர் என்னிடம், ஒரு துயரார்ந்த நிலைக்குறிப்புடன் கூறினார், “நான் மறுபிறவி எடுத்தால், நான் ஒரு எழுத்தாளனாக விரும்புகிறேன்.”

மென்டோசா: மித்ராந் உடனான உங்கள் நட்பு எப்படி? அதுவும் கூட இலக்கியத்தின் அடிப்படையில் அமைந்ததா?

மார்க்வெஸ்: மித்ராந் உடனான எனது நட்பும் கூட இலக்கியத்திலிருந்து தொடங்கியதுதான். பிரான்ஸ் தேசத்திற்கான சிலேயின் தூதுவராய் இருந்த சமயம் பாப்லோ நெரூதா என்னைப் பற்றி அவரிடம் பேசியிருக்கிறார் எனவே சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் மித்ராந் மெக்ஸிக்கோவுக்கு வருகை புரிந்தபோது என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார்.

நான் அவரது புத்தகங்களைப் படித்திருக்கிறேன் மேலும் கேள்விக்குள்ளாக்கப்பட முடியாத அவரது இலக்கிய வாழ்தொழிலினையும் பிறப்பிலேயே எழுத்தாளர்களாய் இருப்பவர்களுக்கு மாத்திரமே மொழியின்பால் இருந்த பேருணர்ச்சியையும் நான் எப்போதும் வியந்து பாராட்டி இருக்கிறேன். அவரும் என்னுடைய புத்தகங்களைப் படித்திருந்தார். மதிய உணவின்போதும் அடுத்த நாள் இரவு உணவின்போதும் நாங்கள் இலக்கியம் பற்றி நிறையப் பேசினோம் எங்களது இலக்கியப் பின்னணி வேறுபட்டதாக இருந்தபோதிலும் எங்களுக்குப் பிடித்தமான பொதுவான எழுத்தாளர்கள் இல்லாதபோதிலும் கூட.

இதற்குப் பிரதான காரணம் எனக்குச் சரளமாக பிரெஞ்சு மொழி தெரியாததாலும் அவருக்கு அதில் மிக ஆழ்ந்த ஏறத்தாழ அதில் விசேஷத்துறை அறிவும் இருந்ததாலும். ஆனாலும் கூட அவருடனான என் உறவானது நான் பிடல் கேஸ்ட்ரோவுடன் கொண்டிருந்த உறவினைப் போன்றதல்ல, அதாவது எப்பொழுது நாங்கள் சந்தித்துக்கொண்டாலும், குறிப்பாக அவர் ஜனாதிபதியாக ஆனபடியால், நாங்கள் எப்பொழுதும் அரசியல் பற்றியே பேசவும் அரிதாகவே இலக்கியம் பற்றிப் பேசவும் செய்தோம். அக்டோபர் மாதம் 1981ஆம் ஆண்டு ஜனாதிபதி மித்ராந் மெக்ஸிகோவைச் சேர்ந்த எழுத்தாளர் கார்லோஸ் புயெண்ட்டஸ், கௌவத்தமாலா தேசத்தைச் சேர்ந்த விமர்சகரும் கவிஞருமான லூயி கார்டோஸாய அரெகன் ஆகியோருடன் என்னையும் ஒரு மதிய உணவுக்கு அழைத்திருந்தார்.

அது முக்கியமான அரசியல் சார்ந்த மதிய உணவு சந்திப்பாக இருக்கவும் அதன் பிறகு திருமதி. டேனியெல்ல மித்ராந் வெளிப்படையாக மிகவும் ஏமாற்றமடைந்திருந்தார் என்பதை நான் அறிந்தேன் காரணம் அவர் இலக்கியம் குறித்தான ஒரு பேச்சினை எதிர்நோக்கி இருந்ததுதான். மித்ராந் எனக்கு எலிஸீ மாளிகையில் வைத்து டிசம்பர் 1981ஆம் ஆண்டு ‘லீஜியன் டிஆனர்’ என்ற சிறப்பினை அளிக்கும்போது ஆற்றிய அந்தச்சிறிய உரையில், அவர் சொன்ன ஏதோ ஒன்று என்னைக் கண்ணீரில் ஆழ்த்தியது, மேலும் அது அவரையும் என் அளவுக்கே பாதித்திருக்கும் என்பது பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். அவர் கூறினார்,

‘Vous appartenez au monde que j’aime’. (நான் விரும்பும் உலகினைச் சேர்ந்தவர் நீங்கள்).

மென்டோசா: நீங்கள் பனாமாவின் வலிய மனிதரான ஓமர் தோரிஹோ (Omar Torrijos) வுக்கும் நல்ல நண்பராய் இருந்திருக்கிறீர்கள். அந்த நட்பு எப்படித் தொடங்கியது?

மார்க்வெஸ்: ஜெனரல் தோரிஹோவுடனான எனது நட்பு ஒரு விவாதப் பிரச்சினையிலிருந்து தொடங்கியது. 1973ஆம் ஆண்டிலோ அல்லது அந்தக் காலக்கட்டத்திலோ மிக அவசியமாகச் செய்தாகவேண்டிய சீர்திருத்தங்கள் எதையும் செய்யாமலிருப்பதற்கான ஒரு முன்மறைப்பாகப் பனாமா தேசத்தின் தேசீயக்கட்டுமானத்திற்கான பிரச்சாரத்தினைப் பயன்படுத்திய ஒரு மக்கள் கிளர்ச்சித் தலைவர் என்று நான் ஒரு பேட்டியில் கூறியிருந்தேன். எனக்கு நானே நேரிடையாகப் பார்த்து எனது சொற்பாடு எந்த அளவு நியாயமற்றது என்பதைத் தெரிந்துகொள்ளத் தோரிஹோ என்னைப் பனாமாவுக்கு அழைக்க விரும்பியிருப்பதாய் லண்டனிலிருந்த பனாமா தேச துணைத்தூதுவர் என்னை வந்து சந்தித்துக் கூறினார். தோரிஹோ விரும்பியதெல்லாம் ஒருவிதமான பிரச்சாரச் சதி என்று சந்தேகித்த நான் எனது பயணம் விளம்பரப்படுத்தப்படக்கூடாது என்கிற ஒப்பந்த நிபந்தனையின் பேரில் அந்த

அழைப்பை ஏற்கிறேன் என்று சொன்னேன். அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் நான் அங்குச் சென்று சேரவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பே செய்தி நிறுவனங்கள் அதை வெளிப்படுத்திவிட்டன. ஆக நான் நேராகக் கொலம்பியாவிற்கு விமானத்தில் வந்துசேர்ந்தேன். உண்மையில் யாரோ ஒருவரின் நம்பிக்கை மோசமாக இருந்த இது தோரிஹோவுக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட மேலும் அவர் தன் அழைப்பினை இன்னும் வலுப்படுத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு நான் என் செல்கையை அநாமதேயமாகச் செய்தேன். ஆனால் அவர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுபிடிக்கத் தேசீய பாதுகாப்புப் படையினரின் உதவியை நாடியும் கூட நான் அங்குச் சென்று சேர்ந்த பின் இருபத்தி நான்கு மணி நேரம் காத்திருக்கவேண்டியதாயிற்று. என்னை இறுதியாக அவர் பார்த்த பின் அவரால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. “உங்களுக்குத் தெரியுமா ஏன் தேசீயப்பாதுகாப்புப் படையினரால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை என?” என்றார். “காரணம் நான் எனது வீட்டிலிருந்தேன், வேறு எவரும் பாதுகாப்புத் துறையையும் சேர்த்து என்னைத் தேடுவதற்கான கடைசி இடம் என் வீடு என்றுதான் எண்ணுவார்கள்.” அப்போதிருந்து நாங்கள் நண்பர்களானோம் - ஒரு நிஜமான கரீபிய கூட்டு சதித்தன்மையின் அடிப்படையில் அமைந்த நட்பு. ஒரு சமயம், பனாமாக் கால்வாய் பேச்சுவார்த்தைகளின் போதான ஒரு பதற்றமானதும் நிச்சயமற்றதுமான நொடியில், நாங்கள் இருவரும் ஃபாராலோனியன் ராணுவத் தளத்தில் பதினைந்து நாட்களை ஒன்றாகக் கழித்தோம், விஸ்கி அருந்தியபடியும் பேசிக்கொண்டிருந்தவாறும். அவரைவிட்டுப் பிரிய நான் துணியவில்லை, காரணம் எனக்கு ஒரு மோசமான முன் உணர்வு இருந்தது, ஒருவேளை அவர் தனியே விடப்பட்டால், அவர் அந்தப் பதற்றங்களின் சுமைக்குப் பலியாகி தன்னைத்தானே சுட்டுக்கொண்டுவிடுவார் என்று பயந்ததால். ஆனால் என் பயங்களுக்கான அடிப்படை இருந்ததா என்பது எனக்கு எப்போதுமே தெரியப்போவதில்லை; ஆனால் எப்படியாயினும் தோரிஹோவின் குணநலனில் இருந்த மிகுந்த எதிர்மறையான அம்சம் தியாகி ஆவதற்கான அவரது வாழ்தொழில்தான் என்று நான் எப்போதும் எண்ணி வந்திருக்கிறேன்.

மென்டோசா: நீங்கள் எப்போதாவது அவரிடம் புத்தகங்கள் பற்றிப் பேசியிருக்கிறீர்களா?

மார்க்வெஸ்: தோரிஹோவும் வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கவில்லை - திட்டமிட்ட முறையில் வாசிப்பதற்கான அதீத பொறுமையின்மையையும் மற்றும் மனஅலைவையும் கொண்டவராய் இருந்தார். ஆனால் அவர் அச்சமயத்திலிருந்த பிரபலமான புத்தகங்கள்வரை எப்பொழுதுமே படித்திருந்தார். நான் அறிந்த வேறு எவரையும் விட ஏறத்தாழ ஒரு விலங்குக்கு உரித்தான உள்ளுணர்வினைக் கொண்டிருந்தார் - அவரது யதார்த்தம் பற்றிய புரிதல் பல சமயம் முன்வருவதை முன்கூட்டி அறிவிக்கும் எல்லையுடன் ஒட்டியிருந்தது. ஒரு கருத்தாக்கத்தைச் சூழ்ந்து சலிப்பின்றிப் பேசி அதனை ஒரு வடிவத்திற்குக் கொண்டுவரும், பிடல் கேஸ்ட்ரோவைப் போலன்றி, தோரிஹோ எதுவும் புகமுடியாத ஒரு மௌனத்திற்குள் தன்னை அடைத்துக் கொள்வார் அவர் சொல்லிக்கொண்டிருந்த ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றினைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார் என அவர் நண்பர்கள் புரிந்து கொள்வார்கள். நான் அறிந்தவர்களிலேயே மிகவும் சந்தேகப்படும் நபராகவும் முன்னறிந்துவிட முடியாத ஒருவராகவுமிருந்தார்.

மென்டோசா: நீங்கள் அவரைக் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

மார்க்வெஸ்: அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு. ஜூலை 23, 1981இல் அவருடைய பனாமா இல்லத்தில் அவருடன் இருந்தேன், உள்நாட்டுப் பயணத்தில் அவர் என்னைத் தன்னுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். என்னால் என்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்ன காரணத்தினால் என்று -நாங்கள் நண்பர்களான பிறகு முதல் தடவையாக நான் மறுத்தேன். அடுத்த நாள் நான் மெக்ஸிகோவுக்குக் கிளம்பிச் சென்றேன். அவரது பல நண்பர்களும் நாங்களும் அடிக்கடி இணைந்து பயணம் செய்யும் விமானத்தில் ஏற்பட்ட விபத்தில் தோரிஹோ இறந்தார் என்ற செய்தியை இரண்டு நாட்கள் கழித்து ஒரு நண்பர் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். நான் நினைத்திருந்ததைவிட மிக ஆழமாக அவரை நேசித்திருந்தேன் என்பதையும் அவரது மரணத்திற்கு நான் பழக்கப்படுத்திக்கொள்ள என்றுமே இயலாதென்றும் அதன் பிறகுதான் நான் உணர்ந்ததால் என் வயிற்றில் உணர்ந்த கடும் சீற்றத்துடன் அவரது மரணத்திற்கான எதிர்வினையாற்றினேன். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் என்னால் அது என்றுமே முடியாது என்பதை எனக்கு உறுதிப்படுத்துகிறது.

மென்டோசா: கிரயாம் கிரீனும் தோரிஹோவுக்கு ஒரு நல்ல நண்பராக இருந்தார். நீங்கள் கிரயாம் கிரீனின் நூல்களை இளமையில் நிறைய வாசித்திருக்கிறீர்கள், சில காலத்திற்குப் பிறகு அவருடன் பரிச்சயமானீர்கள். அவரைப்பற்றிய உங்கள் மனப்பதிவு என்ன?

மார்க்வெஸ்: யாருடைய படைப்புகளை நான் மிகநன்றாக அறிந்து வைத்திருக்கிறேனோ அவர்களில் ஒருவர் அவர். நான் அதை என் மாணவப்பருவத்தில் படிக்கத் தொடங்கினேன். வெப்ப மண்டலப் பிரதேசத்தின் மறைகுறியீட்டுக் குறிப்பினை வெளிப்படுத்த உதவிய எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார் - இலக்கியத்தில் யதார்த்தமானது புகைப்படத்தன்மையானதல்ல என்பதையும் மாறாகப் பல்பொருளாக்கமான நிலையில் உள்ளதென்பதையும் அவசியமான பல்பொருளாக்கத்திற்கான அம்சங்களைக் கண்டுபிடிப்பதுதான் விவரணையின் ரகசியங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க உதவினார். கிரயாம் கிரீன் அதை அற்புதமாகச் செய்கிறார். மேலும் அந்த ரகசியங்களை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். இவை யாவும் எனது புத்தகங்கள் சிலவற்றில் மிகவும் கண்டுபிடிக்கத்தக்க வகையில் உள்ளதென நான் எண்ணுகிறேன், குறிப்பாகத் தீவினைக் காலத்தில் நாவலில். நானறிந்தவர்களில் வேறு எந்த எழுத்தாளரும் என் மனதில் கொண்டிருந்த அவரது படிமத்தைப் போலிருக்கவில்லை. அவர் மிகக் குறைவாகப் பேசுபவர். நீங்கள் சொல்லவேண்டியிருப்பதில் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டுபவர் போல் தோன்றுவதில்லை, ஆனால் ஒன்றாக இருக்கும் சில மணிநேரங்களுக்குப்பிறகு நீங்கள் ஒரு தொடர்ச்சியான இடைவெட்டில்லாத உரையாடலில் இருந்தது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும். ஒரு சமயம் நாங்கள் இருவரும் இணைந்து சென்ற ஒரு நீண்ட விமானப்பயணத்தின்போது அவரும் ஹெமிங்வேயும்தான் என்னால் அவர்களில் எந்தவிதமான இலக்கியப் பாதிப்புகளையும் கண்டுபிடிக்க இயலாத எழுத்தாளர்கள் என்று கூறினேன். “கோன்ராட் மற்றும் ஹென்ரி ஜேம்ஸின் பாதிப்பு எனது படைப்பில் மிகவெளிப்படையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார். அவருக்கு ஏன் இன்னும் நோபல் பரிசு அளிக்கப்படாமலிருக்கிறது என்பது பற்றிய அவரது கருத்து என்ன என்று பிறகு அவரிடம் கேட்டேன்.

அவர் நேரடியாகப் பதில் கூறினார்: “அவர்கள் என்னை ஒரு தீவிர எழுத்தாளர் என்று கருதுவதில்லை.” இது விநோதமாய் இருந்தபோதிலும் நிறுத்தமே இல்லாத ஐந்து மணிநேர உரையாடலாக இருந்த அந்தப் பயணத்தின் நினைவினைப் பற்றி நிறையவே சிந்திப்பதற்கு எனக்கு அந்த இரு பதில்களும் சந்தர்ப்பம் அளித்தன. பவர் அன் த குளோரி (வல்லமையும் மகிமையும்) நாவலை வாசித்த காலம் தொடங்கி, என்னால் அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் என்று நினைவு கூற இயலவில்லை, நான் அதன் படைப்பாளரை இப்போது எப்படி இருக்கிறாரோ அவ்வாறே கற்பனை செய்திருந்தேன்.

மென்டோசா: உங்களுடையதைப் போன்றே ஒத்த ஒரு நட்பினை அவர் தோரிஹோவிடம் கொண்டிருந்ததை எப்படி விளக்குவீர்கள்?

மார்க்வெஸ்: தோரிஹோவுடனான அவரது நட்பு, அவர்கள் இருவரிடத்தும் நான் கொண்டிருந்ததைப் போலவே, ஒருவிதமான உடந்தமையின் அடிப்படையில் அமையப் பெற்றது. அவரது விசா விண்ணப்பத்தில், அவரது இளமைக்காலத்தில் சில மாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தினராய் இருந்ததை அறிவித்திருந்த காரணத்தால் பல ஆண்டுகளாய் கிரயாம் கிரீன் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தார். எனக்கும் அதே பிரச்சினைதான் இருந்தது காரணம் நான் கியூப பத்திரிகைளின் ஏஜன்சியின் அமெரிக்க நிருபராய் இருந்தேன். 1978ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடக்கவிருந்த பனாமா கால்வாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் நாங்கள் இருவரும் அவரது விருந்தாளிகளாய் இருக்கவேண்டுமெனத் தோரிஹோ விரும்பினார். எனவே எங்கள் இருவருக்கும் அவர் பனாமா தேசப் பாஸ்போர்ட்டுகளை வழங்கினார். எக்காள முழக்கங்கள், தேசீயகீதங்கள், மற்றும் பீரங்கி ஒலியுடன் கூடிய வணக்கங்களுடன் – தேசத்தின் முதல்வர்களுக்கு உரித்தானது அவ்வகையான வரவேற்பு - வாஷிங்டனில் உள்ள ஆன்ட்ரூஸ் விமானப் படைதளத்தில் விமானத்திலிருந்து இறங்கியபோது கிரயாம் கிரீனின் அந்த வசைப்பாங்கான முகவெளிப்பாட்டினை நான் என்றுமே மறக்கவியலாது. அடுத்த நாள் விழாவில் லத்தீன் அமெரிக்காவின் எல்லாத் தேசத்தலைவர்களும் அமர வைக்கப்பட்டிருந்த நீள மேஜையிலிருந்து சில அடிகள் தூரத்திலேயே நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம் - பராகுவே தேசத்தின் ஸ்ரோஸ்னர் (Stroessner), சிலேவின் பினோஷே (Pinochet), அர்ஹெந்தினாவின் விதெலா (Videla) மற்றும் பொலியாவின் தலைவரான பேன்ஸர் (Banzer). உங்களுக்கே நன்றாகக் கற்பனை செய்யமுடியும் அந்த ருசி மிகுந்த மானுட விலங்குக்காட்சியின் நாட்டத்தைப் பார்த்து எங்கள் இருவரில் ஒருவரும் எவ்விதமான வார்த்தையும் சொல்லவில்லை. அப்போது கிராயாம் கிரீன் திடீரென என் பக்கம் சாய்ந்து என் காதுகளில் பிரெஞ்சு மொழியில் குசுகுசுத்தார்... (பேன்ஸர் மிகவும் சோகமான மனிதனாய் இருப்பார்) என்னால் அதை என்றுமே மறக்க முடியாது, காரணம் அதிகமாயும் அவர் அதை அளவற்ற கருணையுடனும் சொல்வதாகத் தோன்றியது.

மென்டோசா: கடந்த காலத்தைச் சேர்ந்த எந்த எழுத்தாளருடன் நீங்கள் நண்பராய் இருந்திருப்பீர்கள்?

மார்க்வெஸ்: பெட்ரார்க்.

மென்டோசா: இரண்டாம் ஜான் போப் அவர்களால் நீங்கள் வரவேற்கப்பட்டீர்கள். அவர் என்னவிதமான மனப்பதிவினை உங்கள் மீது ஏற்படுத்தினார்?

மார்க்வெஸ்: ஆம். போப் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் என்னை வரவேற்கவும் வாத்திகனில் உள்ள மாளிகையில் மட்டுமல்லாது இந்தப் பரந்த உலகம் எங்கிலுமே தொலைந்து போன ஒரு மனிதனின் மனப்பதிவினை எனக்கு ஏற்படுத்தவும் செய்தார். அவர் போலந்தின் க்ராக்கோ நகரப் பிஷப்பாக இருப்பதிலிருந்து இன்னுமே கூட விடுபடாமலிருப்பதைப் போன்றிருந்தது. என்னிடம் அவர் போய்வருகிறேன் என்று சொன்னபோது அவரது நூலகத்தின் சாவியைக்கூடத் திருப்பித் திறக்க இயலாதிருந்தார், நாங்கள் ஒரு நொடி உள்ளேயே பூட்டப்பட்டோம் அவரது உதவியாளர்களில் ஒருவர் வெளிப்புறமிருந்து வந்து கதவைத் திறந்துவிடும் வரை. நான் இது பாதகமான மனப்பதிவு என்று உங்களுக்குச் சொல்லவில்லை.

அதற்கு எதிரானது. அவர் திணற அடிக்கும் உடல்வலிமை கொண்ட மனிதராய் எனக்குத் தோன்றினார், மிக எளியவராய், மிக அரவணைப்பானவராய், ஏறத்தாழ போப்பாண்டவராய் இருப்பதற்காக மன்னிப்புக்கோரத் தயாராய் இருப்பவராய்.

மென்டோசா: அவரை ஏன் பார்க்கச் சென்றீர்கள்?

மார்க்வெஸ்: லத்தீன் அமெரிக்காவில் சில மனித உரிமை பிரச்சார இயக்கங்களுக்கு உதவி கேட்கும் முகமாய் நான் அவரைப் பார்க்கச் சென்றேன், ஆனால் அவர் கிழக்கு ஐரோப்பாவின் மனித உரிமைகளில் மட்டுமே ஈடுபாடு கொண்டவராய்த் தோன்றினார். என்றபோதிலும், சில வாரங்கள் கழித்து அவர் மெக்ஸிகோவுக்கு விஜயம் செய்தபோது மூன்றாம் உலக நாடுகளின் வறுமையை முதல் முறையாகக் கண்ணுற்றபோது, அவர் இதுவரை அறிந்திராத மானுடத்தின் ஒரு பக்கத்தை இப்பொழுது பார்க்கத் தொடங்குகிறார் என்று நினைத்தேன். நான் அவரைப்பார்த்த நேர அளவு ஏறத்தாழ பதினைந்து நிமிடங்கள் இருக்கும். அவர் மெக்ஸிகோவுக்குச் செல்வதற்குமுன் ஸ்பானிய மொழியில் பேசிப்பழக விரும்பியதால் நாங்கள் ஸ்பானிய மொழியில் பேசிக்கொண்டோம், மேலும் நான் யாரென்ற மிக மெல்லிய கருத்தாக்கம் கூட அவரிடம் இருக்கவில்லை என்பது போன்ற ஒரு மிக ஆறுதல் அளிக்கும் மனப்பதிவினை உண்டாக்கி அவர் என்னிடமிருந்து விடைபெற்றுச்சென்றார்.

மென்டோசா: நான் ஒருமுறை நீங்கள் மார்கா ஹெமிங்கேயுடன் பாரிஸில் வெளியில் சாப்பிடுவதைப் பார்த்தேன். அவருடன் பேசுவதற்கு உங்களால் எதைக் கண்டுபிடிக்க இயலும்?

மார்க்வெஸ்: அவர் தனது தாத்தாவைப் பற்றி நிறைய விஷயங்களை என்னிடம் சொல்கிறார், நான் என்னுடைய தாத்தாவைப் பற்றி அவருக்குச் சொல்கிறேன்.

மென்டோசா: நீங்கள் சந்தித்த மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் நபர் யார்?

மார்க்வெஸ்: என் மனைவி, மெர்ஸிடஸ்.

14. The Fame and the Famous, THE FRAGRANCE OF GUAVA Conversations with Gabriel Garcia Marquez by Plinio Apuleyo Mendosa

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
manalveedu@gmail.com
Copyright © 2021 Designed By Digital Voicer