காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்: நல்லவன் ப்ளாக்கமன், அற்புதங்களின் விற்பனையாளன்

இரா. சுகந்தன் / மொழிபெயர்ப்பு செம்மையாக்கம்: பிரம்மராஜன்

பகிரு

பொன்னிற நூலினால் பின்புறமாகத் தைக்கப்பட்டிருந்த அவனது வெண்ணிற காற்சட்டை தலைப்புவார்களுடன், ஒவ்வொரு விரலிலும் அணிந்திருந்த வண்ணக்கற்கள் பதித்த அவனது மோதிரங்களுடன், கலகலக்கும் மணிகளுடைய அவனது பிரி சடைகளுடன், அவனை நான் பார்த்த முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து எருதுச்சண்டை நடக்குமிடத்தின் ஒரு கோவேறு கழுதையையே அவன் எனக்கு நினைவுபடுத்தினான், சாந்த மரியா தெல் தாரியனின் கப்பல்துறைகளில் ஒரு மேசையின் மீது பிரத்யேக பிணிமருந்துகளின் குடுவைகளுக்கும் அவன் தயாராக்கிய துயராற்றும் மருந்துகளுக்கும் நடுவே நின்றவாறு கரீபியப் பிரதேசத்தின் நெடுகே உள்ள பட்டணங்களில் அவனது ஊறுபட்ட கூப்பாட்டுடன் கூவி விற்றுச் சென்றான், அந்தச் சமயம் மட்டும் இந்திய அழுக்கடைசல்களைத் தவிர்த்திருந்தான் என்பதைத் தவிர, அவர்களிடம் ஒரு நிஜமான பாம்பைக் கொணர்ந்து தரக் கேட்டுக்கொண்டிருந்தான், அதனால் அவன் தானே கண்டுபிடித்திருந்த நஞ்சுமுறிவு மருந்தினை, பிழையாத்தன்மை கொண்ட ஒன்றே ஒன்றினை, கனவான்களே சீமாட்டிகளே, நாகங்கள், பெருஞ்சிலந்திகள் மற்றும் பூரான்கள் அவற்றோடு அனைத்து வகையான விஷ விலங்குகளுக்கானதை அவனால் தன் உடல் மீதே பரிசோதித்துக் காட்டி விளக்க முடியும்.

அவனது தீர்மானத்தினால் ஈர்க்கப்பட்ட எவரோவொருவர் கண்ணாடிக் குப்பியில் அடைக்கப்பட்ட ஒரு நச்சுப் புதர் குழி விரியனில் மிக மோசமான ஒன்றினை எங்கிருந்தோ (சுவாசத்தை விஷமாக்கிக் கொல்லும் பாம்பினை) அவனுக்கு எப்படியோ கொண்டுவந்தார், பிறகு அவன் அத்தனை ஆர்வத்துடன் அதன் தக்கை மூடியினைத் திறந்தபோது அவன் அதனைத் தின்னப்போகிறான் என்று நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தாலும், பிராணியானது தான் விடுவிக்கப்பட்டோம் என்று உணர்ந்த உடனேயே கண்ணாடிக் குப்பியிலிருந்து தாவி வெளிவந்து அவனைக் கழுத்தில் கடித்து, அவனது மேடைப்பேச்சுக்கான சுவாசத்தை வெட்டிவிட்டது, முறிவு மருந்தினை எடுக்கப் போதுமான நேரம் அரிதாகவே தரவும் செய்தது, பிறகு அந்தக் கையடக்கக் கச்சிதமுள்ள மருந்தாளுநன் கூட்டத்தினுள் உருண்டு விழுந்து தரையில் உருண்டான், அவனது மாபெரும் உடல் அதனுள்ளே ஒன்றுமே இல்லை என்பது போன்று வதங்குற்றது, என்றாலும் அவன் தனது எல்லாத் தங்கப்பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டிருந்தான்.

அங்கு இருபது ஆண்டுகளாக நல்லெண்ண நோக்கத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்க்கப்பலானது பாம்பின் விஷம் கப்பலின் மேற்தளத்தை அடையாமல் இருப்பதற்காக வேண்டி தொற்று நிரல் தணிக்கையைப் பிரகடனம் செய்யும் அளவிற்கு ஆரவாரமானது அத்தனை பெரியதாக இருந்தது, பிறகு குருத்தோலை ஞாயிறை புனிதப்படுத்திக் கொண்டிருந்த மக்கள் தங்களது ஆசிர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளுடன் தேவாலயத்திலிருந்து வெளி வந்தனர், விஷமேறிய மனிதனின் காட்சியைத் தவறவிட எவரொருவரும் விரும்பவில்லை, மரணத்தின் காற்றுடன் ஏற்கனவே மூச்சுத்திணறிக்கொண்டு, அவன் முன்பிருந்ததை விட இருமடங்கு ஏற்கனவே உடல் வீங்கிப்போயிருந்தான், அவனது வாயின் வழியாகப் பித்த நுரை வழிய அவனது மயிர்க்கண்களின் வழியாகப் பதைத்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாலும், ஆனால் இன்னும் அத்தனை உயிர்த்துடிப்புடன் சிரித்துக் கொண்டிருந்ததால் அவனது உடலெங்கும் மணிகள் கலகலவென்று ஒலித்தன. வீக்கமானது அவனது உடல்பிடிப்பான கால்சட்டையின் இழைக்கச்சையையும் ஆடைகளின் தையல் மூட்டுப்பிரிகளையும் அறுந்துவிடச் செய்தது, மோதிரங்களின் அழுத்தத்தினால் அவனது விரல்கள் கருஞ்சிவப்பாயின, உப்பிலிட்ட மான் இறைச்சியின் வண்ணத்திற்கு அவன் மாறினான், மேலும் அவனது அடித்துவாரத்திலிருந்து வந்தது சாவின் கடைசிக் கணங்களின் சாடைக்குறிப்பு, ஆகையால் பாம்பினால் தீண்டப் பட்ட ஒருவனைக் கண்டவர் அனைவருக்கும் தெரியும் மரிப்பதற்கு முன்னர் அவன் அழுகிக்கொண்டிருக்கவும் அவனை ஒரு மண்வாரியால் எடுத்து சாக்கின் உள்ளில்போடும் அளவிற்குச் சுருண்டு மடங்கியும் இருந்தான் என்பதும், என்றாலும் பொடிந்து தூளாகிக் கிடந்தநிலையிலும் அவன் தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந் தான் என்றும் கூட அவர்கள் கருதினார்கள்.

அவனது வண்ணப்புகைப்படங்களை எடுக்கத் தமது நீண்ட தொலைவு லென்சுகளுடன் கடற்படையினர் மேற்தளத்திற்கு வந்தது அத்தனை வியக்கத்தக்கதாக இருந்தாலும், தேவாலயத்திலிருந்து வெளிவந்த பெண்கள் இறந்து கொண்டிருக்கும் மனிதனின் மீது ஒரு கம்பளியை வைத்துமூடவும் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளை அவனின்மீது வைத்து அவர்களின் நோக்கத்தைத் தடுத்தார்கள், அட்வெண்டிஸ்ட் (இயேசுநாதரின் மீள்வருகையில் நம்பிக்கையுள்ளவர்களுடைய) கருவிகள் வைத்து உடலினை தேவ நிந்தனை செய்யாதிருக்க வேண்டி சிலரும், சாகத் தயாராய் சிரிப்புடன் இறந்து கொண்டிருக்கும் போலி தெய்வ விக்கிரக வழிபாட்டினனைத் தொடர்ந்து பார்க்கப் பயந்து மற்றவர்களும், அந்த விதத்தில் ஒருவேளை அவனது ஆன்மா மட்டுமே குறைந்தபட்சம் விஷமேறாது இருக்கும் என்று எண்ணியதால் மேலும் பிறரும்.

எல்லோரும் அவன் இறந்துவிட்டான் என முடிவு செய்திருந்தபோது இன்னும் அரை மயக்கத்திலும் அவன் இருந்த கெட்ட நொடியிலிருந்து முற்றாகத் தேறாமலும் இருந்த சமயத்தில், ஒரு கையால் குருத்தோலைகளை அவன் ஒதுக்கித் தள்ளி, எவரொருவரின் உதவியும் இன்றி மேசையை அவன் தயாராக்கி, மீண்டும் ஒரு முறை நண்டினைப் போல அவன் அதன் மேல் ஏறி, அதோ அங்கே மீண்டும் அவன், நாமனைவரும் நமது சொந்தக் கண்களால் கண்டதைப் போல, கண்ணாடிக் குப்பியின் உள்ளே எனது நஞ்சு முறிவு மருந்தானது கடவுளின் கையல்லாத வேறொன்றும் இல்லை என்று மீண்டும் கூவியவாறு, ஆனால் இதன் விலை வெறும் இரண்டு குவார்ட் திலியோக்கள் தாம் ஏனெனில் அவன் இதனைக் கண்டுபிடித்தது விற்பனைக்காக அல்ல மாறாக மனித இனத்தின் நன்மைக்காக, மேலும் அவன் அதனைச் சொன்னவுடன், கனவான்களே சீமாட்டிகளே, என்னைச் சுற்றி கூட்டம் கூடி நெரிக்க வேண்டாம் என்று மட்டும் சொல்கிறேன், அனைவருக்கும் போதுமான அளவு என்னிடம் இருக்கிறது.

சுற்றிக் கூட்டம் கூடினார்கள், வாஸ்தவமாக, அவர்கள் அதனை நன்றாக அவ்வாறுதான் செய்தார்கள், ஏனென்றால் கடைசியில் அனைவருக்கும் தேவையானது இருக்கவில்லை. அராஜகவாதிகளின் விஷமேற்றப்பட்ட தோட்டாக்களுக்கும் கூட எதிராக இது நல்லதென்று அவனால் நம்ப வைக்கப்பட்டு, போர்க்கப்பலின் கடற் படைத் தலைவரும் கூட ஒரு குப்பி வாங்கினார், மேலும் மாலுமிகள் அவன் மேசையின் மேலே இருக்கும்படியான வண்ணப் படங்களை எடுப்பதோடு மட்டும் வெறுமனே சமாதானப்பட்டுவிடாமல், இறந்த நிலையில் அவனின் புகைப்படத்தை எடுக்க அவர்களுக்கு இயலவில்லை, எனினும் அவனது கை சுளுக்குப் பிடிக்கும்வரை அவனைக் கொண்டு ஆட்டோகிராஃப்களில் கையெழுத்திடச் செய்தார்கள்.

அப்போது இரவாகிக் கொண்டிருக்க மிகவும் குழப்பமுற்ற எங்களில் சிலர் மட்டுமே கப்பல்துறையில் மீந்திருக்க, அவனது கண்கள் முட்டாள் ஒருவனின் பார்வை கொண்ட யாரோவொருவனை அந்தக் கண்ணாடிக் குப்பிகளைத் தூக்கிப்போடுவதற்குத் தேட, பிறகு இயல்பாகவே அவன் என்னைக் கண்டுபிடித்தான். விதியின் பார்வை போலிருந்தது அது, என்னுடையது மட்டுமல்ல, அவனுடையதும் கூட, அது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்து முடிந்திருந்தது எனினும் அது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது போல நாங்கள் இருவரும் நினைவு கூர்கிறோம். நடந்தது என்னவென்றால் அவனுடைய சர்க்கஸ் மருந்துக் கடையைக் கற்றறிந்த சான்றோர் ஒருவரின் பேழை போன்றிருந்த ஊதா நிற பட்டைகளுள்ள பயணப் பெட்டியில் வைத்துக்கொண்டிருந்தோம், முன்னர் அவன் பார்த்திராத சில ஒளியினை என்னுள் அவன் கவனித்த போது, கடுகடுப்பான ரீதியில் யார் நீ என்று அவன் கேட்டான், இரு வழிகளிலுமே அப்பாவானவர் இறந்திருக்காததால் நான் ஓர் அனாதை என்று பதிலளித்தேன், விஷம் ஏறியிருந்தபோது அவன் வெளியிட்டதை விட உரத்த சிரிப்பை வெளியிட்ட அவன் பிறகு என்னிடம் கேட்டான் பிழைப்புக்கு என்ன செய்கிறாய் என்று, உயிர் தரித்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை என்று நான் பதிலளித்தேன், ஏனென்றால் பிரயாசைக்குத் தகுதியானது வேறொன்றும் இல்லை, இன்னும் சிரித்துக் கண்ணீர் உகுத்தவாறு உலகின் எந்தச் சாஸ்திரத்தை நீ கூடுதல் அதிகமாகக் கற்க விரும்புகிறாய் என்று கேட்டான், பிறகு ஏமாற்றாமல் நான் உண்மையைச் சொன்ன ஒரேயொரு நேரம் அதுவாகவே இருந்தது, நான் ஒரு குறி சொல்பவனாக ஆக வேண்டும் என்று விரும்பினேன், பின்னர் அவன் சிரிக்கவில்லை ஆனால் ஆழ்ந்துயோசித்தது போல எனக்குச் சொன்னதோ எனக்கு அதற்காக அதிகம் தேவைப்படாது ஏனென்றால் கற்பதற்குக் கடினம் கூடியதானது என்னிடம் ஏற்கனவே இருக்கிறது, ஓர் அசடனுடையதைப் போன்றிருந்த எனது முகம். அதே இரவு அவன் என் தந்தையிடம் பேசி ஒரு ரியால் மற்றும் இரண்டு குவார்ட்திலியோக்கள் மற்றும் பிறன்மனை நயத்தலை முன்கூறிய ஒரு சீட்டுக் கட்டுக்காக என்னை என்னென்றைக்குமாக வாங்கினான்.

அப்படித்தான் இருந்தான் கெட்டவன் ப்ளாக்கமன், ஏனென்றால் நான்தான் நல்லவன் ப்ளாக்கமன். பிப்ரவரி மாதம் என்பது கண்காணா யானைகளின் கூட்டம் என அவன் ஒரு வானவியல் வல்லுநரை நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாய் இருந்தான், ஆயினும் நல் வாய்ப்பு அவன் மேல் திரும்பியபோது இதயத்தின் அடியாழத்தில் கொடுவிலங்காக மாறிப் போனான்.

அவனது கீர்த்தி மிகுந்த நாட்களில் வைசிராய்களைப் பதனமிடுபவனாக இருந்தான், அப்படிப்பட்ட அதிகாரத்துடன் அவன் அவர்களுக்குக் கொடுத்த முகங்களுடன் அவர்கள் உயிருடனிருந்ததை விடச் சிறப்பாக மிகப் பல வருடங்களுக்கு நன்றாக ஆட்சி செய்தார்கள் என்று அவர்கள் சொன்னார்கள், மேலும் அவன் அவர்களுக்கு அவர்களின் இறந்த மனிதனின் தோற்றத்தைக் கொடுக்கும் வரை எவரொருவரும் அவர்களைப் புதைக்கத் துணியவில்லை, ஆயினும் ஒரு கிறிஸ்தவப் புரோகிதரைப் பைத்தியமாக அடித்து இரு புகழ்பெற்ற தற்கொலைகளையும் கொணர்ந்த ஒரு முடிவற்ற சதுரங்க விளையாட்டின் கண்டுபிடிப்பினால் அவனது கீர்த்தியானது பாழ்பட்டது, அதனால் அவன் வீழ்ச்சி யுற்றான், கனவுகளின் பொருள் கூறுபவன் என்பதிலிருந்து பிறந்தநாள் வசியக்காரனாய், பரிந்துரைத்தல் மூலம் கடைவாய்ப் பல் பிடுங்குபவன் என்பதிலிருந்து சந்தையில் குணப்படுத்துபவன் என்பதாகச் சீரழிந்தான்; ஆகையால் நாங்கள் சந்தித்த சமயத்தில், சனங்கள், ஏன் வழிப்பறிக்காரர்களும் கூட அவனை ஏற்கனவே சாடையாகப் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

எங்களது தந்திரநிலை தாங்கியுடன் நிலைபெயர்ந்து நகர்வுற்றுச் சென்றோம், வாழ்வானது நிலைபேறான நிலையற்ற தன்மையுடன் இருந்தது, கடத்தல்காரர்களை ஒளியூடுருவத்தக்க தாக்கி மறைந்து தப்பிக்கவைக்கும் உட்கரை குளிகைகள், ஞானஸ்தானம் பெற்ற மனைவிகள் தமது டச்சுக் கணவன்மார்களிடத்து பிதாவின் மீதான பயத்தை உண்டாக்குவதற்காக வடிசாற்றில் எறியும் துளி மருந்துகள், மற்றும் உங்களது சொந்த விருப்பத்தின் பேரில் நீங்கள் வாங்க விரும்பக்கூடிய எந்தவொன்றையும் விற்க முயலும்போது, கனவான்களே சீமாட்டிகளே, இது ஒரு கட்டளை அல்ல என்பதால், இது ஓர் அறிவுரை, மேலும், மொத்தத்தில் எப்படியிருந்தாலும் மகிழ்ச்சி என்பது நன்றிகடன் போன்ற ஒன்றல்ல.

இருந்தபோதிலும் அவனது நகைச்சுவைப் பேச்சில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரித்தோம் என்றாலும், உண்மை என்னவென்றால் எங்களுக்குச் சாப்பிடப் போதுமானதை சமாளிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது, மேலும் அவனது கடைசி நம்பிக்கை ஒரு குறிசொல்லி என்ற எனது தொழிலின் மேல் அமைந்திருந்தது. எனது புதிய சாஸ்திரத்தினைப்பற்றி உலகினை நம்ப வைப்பதற்காகச் சிறந்த வழியினைத் தேடியவாறு அவன் இலக்கணப் புத்தகத்தினை உட்பிளந்து வெளிப்படுத்தியபோது ஒரு ஜப்பானியனைப் போல மாறுவேடமிட்ட என்னை ஒரு கல்லறைப்பெட்டியில் வைத்துப் பூட்டி இரண்டு அரைக்கோளங்களை முனை களில் கொண்ட பாய்மரச் சங்கிலிகள் வைத்துக் கட்டினான், என்னால் இயன்றதை எனக்கு முன்கூற முயற்சிக்க முடியும் என்பதால், மேலும் இங்கே,  கனவான்களே சீமாட்டிகளே, எசேக்கியேலின் மின்மினிப் புழுக்களால் வதைக்கப்பட்ட குழந்தை இதோ உங்கள் முன் இருக்கிறது, பிறகு நம்பிக்கை அற்ற முகங்களுடன் இங்கு நின்று கொண்டு இருப்பவர்களே, நீங்கள் எப்போது இறக்கப்போகிறீர்கள் என்று இவனைக் கேட்கும் தைரியம் உங்களுக்கு இருக்குமா என்று பார்க்கிறேன், ஆனால் அந்தச் சமயத்தில் அன்று எந்த நாள் என்று கூட என்னால் ஊகிக்க முடியாமல் இருந்தது, செரிமானத்தின் அயர்ச்சி உங்களது கணிக்கும் சுரப்பியை இடர்ப்படுத்துவதால் நான் ஒரு குறிசொல்லி என்பதைக் கைவிட்டான் அவன், நல் அதிர்ஷ்டத்துக்காக எனது தலையில் கம்பு கொண்டு நையப்புடைத்த பிறகு, எனது தந்தையிடம் என்னைக் கூட்டிச் சென்று தனது பணத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தான்.

ஆனால் அந்தச் சமயத்தில் வேதனையின் மின்னோட்டத்திற்கு நடைமுறை தீர்வை அவன் கண்டு பிடிக்க நேர்ந்தது, உடம்பில் வேதனை உண்டாகும் இடத்தில் குருதி உறிஞ்சும் கண்ணாடிக் குடுவைகள் ஓடும் தையல் எந்திரத்தை உண்டாக்கச் சென்றான்.

கெடுவாய்ப்பினைத் துரத்திவிட அவன் எனக்குக் கொடுத்த நையப்புடைப்புகளால் நான் முனகியவாறு அந்த இரவைக் கழித்துகொண்டிருந்ததனால், தனது கண்டுபிடிப்பை சோதனைக்குட்படுத்த கூடியவனாக அவன் என்னை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று, பிறகு எங்களது திரும்புதல் மேலும் தாமதப்படவும், அவனது நல்ல நகைச்சுவைப் பண்பினை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தான், அவனது தையல் எந்திரமானது மிக நன்றாக வேலை செய்துகொண்டிருந்தது வரையிலும், அதாவது அது ஓர் அனுபவமற்ற கிறிஸ்தவப் பெண் துறவியினை விட நன்றாகத் தைத்ததோடல்லாமல் வலியின் இடத்திற்கும் தீவிரத்திற்கும் ஏற்றவாறு பறவைகளையோ அல்லது அஸ்ட்ரோமீலியா (பெரூவிய அல்லது இன்காஅல்லி) பூக்களையோ பூந்தையல் இடவும் செய்து கொண்டு. பிலடெல்ஃபியாவில் போர்க்கப்பலின் கமாண்டர் நச்சுமுறிவு மருந்தினை வைத்து பரிசோதனையை மீண்டும் முயற்சித்தபோது அவரது பணியாட்களுக்கு முன்னால் அட்மிரல் (கடற்படைத் தலைவன்) சொறியிழைப்பாகாக மாறிப் போனார் என்ற செய்தியானது எங்களை வந்தடைந்தபோது, எங்களது துரதிருஷ்டத்தின் மீதான எங்களின் விஜயத்தை நம்பியவாறு நாங்கள் இருந்தது எப்படியென்றால் அது அப்படித்தான்.

நீண்ட காலத்திற்கு அவன் மீண்டும் சிரிக்கவே இல்லை. இந்தியக் கணவாய்களினூடே தப்பித்து ஓடி எவ்வளவுக்கு எவ்வளவு நாங்கள் தொலைந்து போனதாக ஆனோமோ அவ்வளவுக்கு அவ்வளவு தெளிவாகக் கடற் படைக்காரர்கள் மஞ்சள் காய்ச்சலை இற்றொழிப்பது என்ற போர்வையில் நாட்டினை ஆக்கிரமித்தார்கள் என்ற செய்தியும் அவர்களின் வழியில் குறுக்கிடும் ஒவ்வொரு நெடு நாளைய அல்லது அறுதியாய் சுற்றித் திரிந்தலைபவர்களின் தலையைக் கொய்கிறார்கள் என்ற செய்தியும் எங்களை வந்தடைந்தது, மேலும் முன்னெச்சரிக்கை வேண்டி பூர்வீகக் குடிகளை மட்டுமல்லாது, கவனமாற்றம் செய்வதற்காகச் சீனர்களையும், பழக்கதோஷத்தில் நீக்ரோக்களையும், மேலும் பாம்பாட்டிகள் என்பதால் இந்துக்களையும் தலை கொய்யவும் செய்து மேலும் தாவர, விலங்கின, தாது வளங்களையும் துடைத்தழிக்க அவர்களால் இயன்றது ஏனென்றால் எங்களது விவகாரங்களில் அவர்களது வல்லுநனர்கள் கிரிங்கோக்களைக் குழப்பியடிப்பதற்காகக் கரீபியனில் வசிப்பவர்களுக்குத் தமது தோற்றத்தை மாற்றும் திறன் இருக்கிறது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பதால். அத்தகைய கொடுவெறி எங்கிருந்து வந்ததென்பதோ நாங்கள் ஏன் இவ்வளவு பயந்து நடுங்கினோம் என்பதோ லா வாஹீராவின் காற்றின் திசைகளில் எங்களை மிகவும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் ஆக்கிக் கொண்டதுவரை எனக்குப் புரியவில்லை, மேலும் அதற்குப் பிறகுதான் அவனுக்குத் தனது நச்சு முறிவு மருந்தானது ஒருவகையான பேதிமருந்தும் கற்பூரத் தைலமும் அல்லாத வேறொன்றும் இல்லை என்றும் விஷமெடுக்கப்பட்ட அந்தப் புதர்விரியனை அவனிடம் கொண்டு வர அலைகுடி ஒருவனுக்கு அவன் இரண்டு குவார்ட்திலியோக்கள் கொடுத்தான் என்றும் என்னிடம் ஒத்துக்கொள்ளும் தைரியம் வந்தது.

காலனியக் காலச்சமயப் பிரச்சார நிறுவன கட்டிட இடிபாடுகளில் நாங்கள் தங்கினோம், சில கள்ளக் கடத்தல்காரர்கள் அவ்வழி கடந்து போவார்கள் என்ற நம்பிக்கையில் ஏமாந்தபடி, ஏனென்றால் அவர்கள்தாம் நம்பத்தகுந்தவர்களும் நிலையற்றதான பாதரச வெயிலில் அந்த உப்பளங்களின் வழியாகக் கடந்து செல்லும் திறன் படைத்தவர்கள் அவர்கள்தான் என்பதால்.

முதலில் நாங்கள் புகையில் வாட்டிய சலமாண்டர்களையும் இடிபாடுகளிலிருந்த மலர்களையும் உண்ணவும் அதன் வேகவைத்த கால்களை நாங்கள் உண்ண முயலும் போது சிரிப்பதற்கான சக்தியை இன்னும் வைத்திருந்தோம், ஆனால் கடைசியாக நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீர் கோர்த்த ஒட்டடைகளையும் கூட நாங்கள் உண்டபோதுதான், அப்போதுதான், உலகத்தை நாங்கள் எவ்வாறு இழந்து வாடுகிறோம் என்பதை உணர்ந்தோம்.

அந்த நேரத்தில் மரணத்திற்கு எதிரான எந்தப் போக்கிடமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால், அது மிக மிகக் குறைவாக என்னை ஊறுபடுத்தக்கூடியதான இடத்தில் காத்துக்கொண்டு நான் வெறுமனே கீழே படுத்துக்கொண்டேன், சுவர்களினூடாக வெறும் ஒரு பெரு மூச்சினால் மட்டும் கடந்து செல்லக்கூடியவளாக இருந்த ஒரு பெண்ணினை நினைவு கூர்ந்தவாறு அவன் சன்னி கண்டு பிதற்றிக் கொண்டிருந்த போதும், அந்தப் புனைந்து தோற்றுவித்த பழம் நினைவுகொள்ளலும் கூட மரணத்தைக் காதற்பிணியினால் ஏமாற்றும் அவனது மேதமையின் ஒரு சூழ்ச்சித்திறன்தான்.

இருப்பினும், அந்தக் கணத்தில் நாங்கள் இறந்துபட்டிருக்க வேண்டும், இடிபாடுகளினூடே சீழ்கையடித்துக்கொண்டிருந்தது காற்றா அல்லது அவனது எண்ணங்களா என்று எனக்கு இப்போதும் சொல்லவியலாதவாறு மிகப்பெரும் பலத்துடன் சிந்தித்துக்கொண்டு முன் எப்போதையும் விட உயிர்ப்பு மிக்கவனாக அவன் என்னிடம் வந்து அந்த இரவு முழுவதும் எனது கடுந்துயரத்தைப் பார்த்தவாறே கழித்தான், அப்புறம் விடியலுக்கு முன்பு அதே குரலுடனும் இறந்த காலங்களின் அதே மனவுறுதியுடனும் தனக்கு இப்போது உண்மை தெரியும் என்று என்னிடம் சொன்னான், அஃதாவது அவனது அதிர்ஷ்டத்தினை மீண்டும் சுழற்றி மாற்றியது நான்தான் என்று, ஆகவே உனது காற்சட்டைகளைத் தயாராக்கிக்கொள், ஏனென்றால் எனக்காக நீ சுழற்றி மாற்றிய அதே வழியில்தான், நீ அதனை நேராக்கவும் போகிறாய்.

அவனிடம் வைத்திருந்த மிகச் சிறு நேசத்தையும் நான் இழந்தது அப்போதுதான். அவன் நான் அணிந்திருந்த கடைசிக் கந்தல் துணிகளையும் அகற்றி, என்னை ஏதோ சில முள் கம்பியில் சுருட்டி, எனது காயங்களில் பாறையுப்பினைத் தடவி, எனது மூத்திரநீரிலேயே என்னை அமிழ்த்தி, மேலும் சூரியன் என்னைத் தோலுரிப்பதற்காக எனது கணுக்கால்களில் கட்டித் தூக்கினான், இந்த இழிவுபடுத்தல்கள் எல்லாமுமே தனது துன்புறுத்துபவர்களை ஆற்றுப்படுத்த போதுமான தல்ல என்று தொடர்ந்து கத்தியவாறே இருந்தான்.

கடைசியாகக் காலனியக்கால மதப்பிரச்சாரகர்கள் மதவிரோதிகளை மறுஉற்பத்தி செய்யுமிடமான கழுவாய் சிறைக்கிடங்கில் எனது சொந்த துயர் நிலையில் என்னை அழுகிப்போகுமாறு தூக்கியெறிந்தான், பிறகு அவனிடம்  தேவைக்கு அதிகமாக இன்னும் மிஞ்சியிருக்கும் குரல்மாற்றிப் பேசக் கூடியவனின் நயவஞ்சகத்துடன், உண்ணத்தக்க விலங்குகளின் குரல்களையும், விளைந்து முதிர்ந்த பீட்ரூட் கிழங்குகளின் ஓசைகளையும், மேலும் சொர்க்கத்தின் நடுவே ஏழ்மையில் நான் இறந்துகொண்டிருக்கிறேன் என்று மருட்சியாகத் தோன்றும்படி தூயநீரூற்றுகளின் ஓசைகளை என்னைத் துன்புறுத்துவதற்காகப் போலி செய்து உண்டாக்கத் தொடங்கினான்.

இறுதியாகப் பண்டங்களைக் கள்ளக்கடத்தல்காரர்கள் அவனுக்கு வழங்கியபோது, சிறைக்கிடங்கிற்கு இறங்கி வந்து நான் இறந்துபோய்விடக் கூடாது என்பதற்காக எனக்குச் சிலவற்றை உண்ணக் கொடுத்தாலும், அதன் பிறகு அத்தகு ஈகைக்காகக் குறடுகள் வைத்து எனது நகங்களைப் பறித்தெடுக்கவும், சாணை தீட்டும் கல் வைத்து எனது பற்களை உடைத்தெடுக்கவும் செய்தான், அப்புறம் எனது ஒரேயோர் ஆறுதல் இன்னும் மோசமான தியாகங்களுடனான ஆகப் பெரும் பழியினைத் துறக்க வேண்டி வாழ்வு எனக்கு ஒரு தறுவாயினையும் நல்வாய்ப்பையும் தரும் என்ற விருப்பம்தான்.

எனது சொந்த அழுகலின் கொள்ளை நோயிலிருந்து என்னால் எதிர்த்து நிற்க முடியும் என்பதில் நான் கூட வியப்புற்றேன் மேலும் அவன் தனது உணவின் எச்சங்களை என் மீது எறிந்துகொண்டிருக்கவும் சிறைக்கிடங்கின் காற்றானது நஞ்சேறி என்னைக் கொல்வதற்காக அழுகிய பல்லிகள் மற்றும் பருந்துகளின் துண்டங்களை மூலைகளில் சுண்டி எறியவும் செய்தான்.

எனக்கு உண்ணக் கொடுப்பதைக் காட்டிலும் அஃது அழுகிப் போவதற்காக எறிந்துவிடவே அவன் விரும்புவான் என்று எனக்குக் காண்பிப்பதற்காக ஓர் இறந்த முயலை என்னிடம் அவன் கொண்டு வந்தபோது எத்தனை காலம் கடந்து போனது என்று எனக்குத் தெரியவில்லை எனினும், எனது பொறுமை அதுவரையே நீடிக்கவும் என்னிடம் எஞ்சியிருந்தது எல்லாம் கடும்வெறுப்பாக மட்டுமே இருந்ததால், நான் அந்த முயலின் செவிகளைப் பிடித்து, உடைந்து சிதறப்போவது விலங்கல்ல அவன்தான் என்று மாயமாகத் தோன்றும்படியாகச் சுவரை நோக்கி வீசியெறிந்தேன், ஒரு கனவில் நிகழ்வதைப் போலப் பிறகு அது நிகழ்ந்தது. முயல் மிரட்சியில் கீச்சிட்டு மீண்டெழுந்ததோடல்லாமல், காற்றில் தாவியபடி என்னிடம் வரவும் செய்தது.

அப்படித்தான் எனது மேன்மையான வாழ்வுத் தொடங்கியது. இரண்டு பெசோக்களுக்கு மலேரியா பாதித்தவர்களிலிருந்து காய்ச்சலை வலித்து எடுக்க, நான்கு - ஐம்பது பெசோக்களுக்குக் குருடர்களுக்குப் பார்வையளிக்க, பதினெட்டுப் பெசோக்களுக்கு நீர்க்கோவை பிடித்தவர்களிலிருந்து நீர்க்கட்டை வடித்து எடுக்க, முடவர்களுக்கு அவர்களின் அவையங்களை, அவை பிறப்பிலிருந்தே அவ்வாறு உள்ளதெனில் இருபதுபெசோக்களுக்குத் திருப்பி அளிக்க, அவை ஒரு விபத்தினாலோ சச்சரவிலோ அவ்வாறு ஆனதெனில் இருபத்து இரண்டு பெசோக்களுக்குத் திருப்பி அளிக்க, அவை போர்களினாலோ நில நடுக்கங்களினாலோ காலாட்படையினர் இறங்கியதனாலோ அல்லது ஏதொருவகையான சாதாரணப் பேரிடரினாலோ அவ்வாறு ஆனதெனில் இருபத்து ஐந்து பெசோக்களுக்குச் சரியாக்க, ஒரு சிறப்பு ஏற்பாட்டின்படி மொத்தவிலைக்குச் சாதாரண நோயாளிகளை, அவர்தம் வகைக்கு ஏற்ப பைத்தியக்காரர்களை, குழந்தைகளைப் பாதிக் கட்டணத்தில் பிறகு முட்டாள்களை நன்றிக்கடனுக்காக என நான் அப்போதிருந்து உலகைச் சுற்றி வந்தேன், அப்புறம் நான் ஒரு பரோபகாரி இல்லை என இனி தைரியத்தோடு யார் சொல்லக்கூடும், கனவான்களே சீமாட்டிகளே, மேலும் இப்போது, ஆமாம், ஐயா, இருபதாவது படையணியின் தளபதியே, தடையரண்களை நீக்குமாறு உங்களது பொடியன்களுக்கு ஆணையிட்டு அல்லலுறும் மனிதகுலத்தைக் கடக்கவிடுங்கள், தொழுநோயாளிகள் இடதுபுறமும், வலிப்பு நோயாளிகள் வலதுபுறமும், வேறு இடத்திற்கு மாற முடியாத முடவர்கள் அதேயிடத்திலும் குறைந்த அவசரமுடையவர்கள் பின்புறமும், தயைக் கூர்ந்து என் மீது கூட்டம் சேர்ந்து நெரிக்காதீர்கள் ஏனென்றால் நோய்நிலைகள் எல்லாம் ஒன்றுகலந்து போனால் அவர்கள் தமக்கு இல்லாத நோய்க்குத் தாம் சிகிச்சை பெற்றால் பிறகு நான் அதற்குப் பொறுப்பல்ல, மேலும் பித்தளைக் குழாய்கள் சூடாகிப் பழுக்கும் வரை இசையை வாசியுங்கள், அப்புறம் தேவதூதர்கள் எரிந்து போகும் வரை வாணங்களைக் கொளுத்துங்கள், அப்புறம் சிந்தைகள் அழியும் வரை மதுபானம் வழியட்டும், அப்புறம் சிறுக்கிகளையும் கழைக்கூத்தாடிகளையும், கசாப்புக்காரர்களையும் புகைப்படம் எடுப்பவர்களையும் கொண்டு வாருங்கள், ப்ளாக்கமன்களின் தீம் புகழ் இங்கே முடிவடைவதாலும் உலகளாவிய பெருங்கொந்தளிப்பு தொடங்குவதாலும் எல்லாம் என் செலவில், கனவான்களே சீமாட்டிகளே, ஒருவேளை எனது தீர்ப்பு பிழைக்குமென்றால் ஒரு பேரவையாளனின் நுட்பங்களுடன் அவர்களை நான் உறங்கவைக்கச் சென்றது அவ்வாறுதான், பிறகு சிலர் என் முன் தாம் முன்பிருந்ததைவிட மிகமோசமாகவும் மாறினார்கள்.

நான் செய்யாத ஒரேயொரு காரியம் மரித்தவர்களை உயிர்ப்பிக்காததுதான், ஏனென்றால் அவர்கள் தமது கண்களைத் திறக்கும்போது தம்மைத் தம்நிலையிலிருந்து இடையுறுத்தியவரின் மேல் கொலை செய்யும் வெஞ்சினம் கொள்ளவும், பிறகு எல்லாம் முடிந்ததும் தற்கொலை செய்து கொள்ளாதவர்கள் நம்பிக்கையிழப்பில் மீண்டும் மரிக்கவும் செய்கிறார்கள்.

எனது தொழிலின் சட்ட முறைமையினைப் பற்றி விசாரணை செய்யும் மதி நுட்பமுடையவர்களின் குழு ஒன்றினால் முதலில் பின்தொடரப்பட்டேன், அப்புறம் அவர்களுக்குப் புரிந்த பிறகு, அவர்கள் சிமோன் மாகோசின் நரகத்தை வைத்து என்னை மிரட்டவும் நான் ஒரு புனிதராய் ஆகக்கூடிய கழுவாய் தேடி மனந்திரும்புதலின் வாழ்வைப் பரிந்துரைக்கவும் செய்தார்கள், ஆனால் அவர்களின் அதிகாரத்திற்குப் பங்கம் இழைக்காமல், துல்லியமாக இந்த வகையில்தான் நான் தொடங்கினேன் என்று பதிலளித்தேன்.

உண்மை என்னவென்றால் இறந்த பின்னால் புனிதராவதிலிருந்து எனக்குக் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை, நான் ஒரு கலைஞன், கடற்படையின் தூதரிடமிருந்து நான் வாங்கிய இந்த ஆறு சிலிண்டர் காரில் கழுதை நிலையில் போய்க்கொண்டே இருப்பதற்காக, நியூ ஆர்லியன்ஸ் கடற்கொள்ளையரின் ஓபராவில் ஆண்குரலாக இருந்த இந்த ட்ரினிடாடைச் சேர்ந்த வாகன ஓட்டியுடன், எனது அசலான பட்டுச் சட்டைகளுடன், எனது கீழைத்தேய களிம்புகளுடன், எனது புஷ்பராகப் பல்வரிசைகளுடன், எனது தட்டையான வைக்கோற் தொப்பியுடன், மேலும் எனது இருவண்ண பித்தான்களுடன், அலறிமணிக் கடிகாரமின்றி உறங்குவதற்கும், அழகு இராணிகளுடன் நடனமிடுவதற்கும், எனது அகராதித்தன்மை வாய்ந்த சொல்லாட்சி திறத்தினால் அவர்களை மயங்கச் செய்தபடியும், மேலும் ஏதோ சில திருநீற்றுப் புதன்கிழமைகளில் எனது தொழிற்திறங்கள் வற்றி அழிவுற்றாலும் எனது ஈரல் பதைபதைக்காமல் இருக்கவும், உயிருடன் இருக்கவேண்டும் என்பதுதான் நான் வேண்டிக்கொள்ளும் ஒரெயொரு காரியம், ஏனென்றால் ஒரு மந்திரியின் வாழ்க்கையைத் தொடர எனக்குத் தேவையானதெல்லாம் ஓர் அசட்டு முகம்தான், மேலும் இங்கிருந்து மாலைச் செவ்வானத்திற்கும் அப்பால் இருக்கும் எனக்குச் சொந்தமான கடைகளின் தொடர்களால் எனக்குத் தேவைக்கும் அதிகமானது இருக்கிறது, அங்கே அதே பயணிகள் கடற்படைத்தலைவனின் வழியாக எங்களிடமிருந்து சேகரிக்கும் எனது கையொப்புக் கொண்ட உருப்படங்கள், எனது காதற்கவிதைகள் அடங்கிய பஞ்சாங்கங்கள், எனது பக்கவாட்டு உருவரைப்பொறிப்புகள் உள்ள பதக்கங்கள், எனது துணிகளின் துணுக்குகள் மற்றும் பளிங்குக்கல் குதிரைப் பொறிப்பகளாகச் செதுக்கப்பட்டு எல்லாப் பகல்கள் மற்றும் இரவுகளிலும் நமது நாட்டின் தந்தையரைப் போன்று குருவிகளால் எச்சமிடப்படும் மகத்தான கொள்ளை நோயின் பாதிப்பின்றி அனைத்தினாலும் அவர்கள் இப்போது தடுமாறுவார்கள்.

இதில் புனையப்பட்டது ஒன்றும் இல்லை என்று மக்கள் எண்ணும் விதமாகக் கெட்டவனான ப்ளாக்கமனால் இந்தக் கதையைத் திரும்பச் சொல்ல முடியாதது பரிதாபகரமானது. இந்த உலகத்தில் அவனைக் கடைசித் தடவையாகப் பார்த்த எவரொருவரும், அவன் தனது முந்தைய பகட்டின் காதணிகளைக் கூட இழந்துவிட்டிருக்கிறான் என்றும், தனது ஆன்மா முழுமையாகச் சீர்குலைந்த நிலையிலும் பாலைவனத்தின் கடுமையினால் தனது எலும்புகள் ஒழுங்கு குலைந்து இருந்தபோதிலும், சாந்த மரியா தெல் தாரியனின் கப்பல்துறைகளில் தனது சாசுவதமான கல்லறைப் பெட்டியினை வைத்து மறுதோற்றம் கொள்ளப் போதுமான கலகலக்கும் மணிகளை இன்னும் மீதம் கொண்டிருக்கிறான், விதிவிலக்காக இம்முறை அவன் எந்தவொரு முறிவு மருந்துகளையும் விற்க முயலவில்லை என்றாலும், எல்லோரும் காணும் விதமாகப் பொதுவிடத்தில் வைத்துத் தன்னைச் சுடுமாறு கடற்படையினரிடம் உணர்ச்சி பெருக்கடைந்த குரலில் வேண்டுகிறான், அப்படிச் செய்தால் தான் இந்த இயல் கடந்த ஜீவனின் உயிர் மீட்டளிக்கும் குணங்களை அவனால் தனது சொந்த உடலின்மேல் பரிசோதித்துக் காண்பிக்க முடியும், கனவான்களே சீமாட்டிகளே, ஒரு மோசடிக்காரனும் ஏமாற்றுகாரனுமாகிய நான் எனது கண்ணியமற்ற தந்திரங்களினால் நீண்டகாலமாக அவதியுற்ற பிறகு என்னை நம்பாமல் இருப்பதற்கான உரிமை உங்களுக்குத் தேவைக்கு அதிகமாக உள்ளதென்றாலும், இன்றிருக்கும் ஆதாரம் வேறோர் உலகத்திலிருந்து வந்தது அல்ல என்று நான் என் அன்னையின் அஸ்தியின் மீது சத்தியம் செய்கிறேன், வெறும் எளிய உண்மை, மேலும் உங்களுக்குச் சந்தேகம் ஏதேனும் மீதம் இருக்கிறதென்றால், வழக்கமாகச் சிரிப்பதைப் போன்று இப்போது நான் சிரிப்பதில்லை என்றாலும் அழுவதற்கான ஒரு வேட்கையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதையும் கவனியுங்கள். எவ்வளவு நம்பக் கூடியவனாக அவன் இருந்திருக்கவேண்டும், அவன் தனது சட்டைகளின் பித்தான்களைக் கழற்றியவாறு, அவனது கண்கள் கண்ணீரில் நிறைந்தவாறும், மரிப்பதற்கான ஆகச் சிறந்த இடத்தைக் குறிக்கக் கோவேறு கழுதையினைப் போலப் பின்னால் உதைத்தவாறு அவன் தனது இதயத்தைக் காண்பித்தாலும், ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அவர்களது தன்மானம் குலைவதைக் கண்டுபிடிக்கக்கூடும் என்ற பயத்தில் கடற்படையினர் இன்னும் சுடவில்லை.

கடந்த காலங்களின் ப்ளாக்கமன் - தன்மைய - சூழ்ச்சித் திறங்களை மறந்துவிட்டிருக்காத எவரோ ஒருவர், யாருக்கும் தெரிவதில்லை எப்படியென்று, கரீபியப் பிரதேசத்திலிருக்கும் கார்வினோ மீன்கள் அனைத்தையும் மேற்பரப்பிற்குக்கொண்டு வரும் அத்தனை அளவுள்ள பார்பார்ஸ்கோ வேர்களுள்ள ஒரு தகரக் குவளையை எப்படியோ பெற்று அவனிடம் கொண்டு வர, அவற்றை உண்மையில் தின்னப்போவதைப் போன்ற, பெரும் வேட்கையோடு அதனைத் திறந்தான், பிறகு நிஜமாகவே, அவற்றைத் தின்றான், கனவான்களே சீமாட்டிகளே, ஆனால் உணர்ச்சி வசப்படவோ எனது ஆன்மாவின் இளைப்பாறுதலுக்காக வேண்டுதல் செய்யவோ செய்யாதீர்கள், ஏனென்றால் இந்த மரணம் என்பது வெறும் ஓர் உசாவல் அன்றி வேறொன்றும் இல்லை. இம்முறை அவன் இசை நாடகரீதியான பிதற்றல்களை வெளியிட்டு நொறுங்கிக் குமைந்து போகாமல் மிகவும் நேர்மையாக இருந்தாலும், மேசையிலிருந்து ஒரு நண்டினைப் போல் ஊர்ந்து இறங்கி, சிறிது தயக்கத்திற்குப் பின் படுத்துக்கொள்வதற்கு மிகவும் தகுதியான இடத்தை நிலத்தில் தேடினான், பிறகு அங்கிருந்து அவன் ஒரு தாயைப்பார்ப்பது போன்று என்னைக் காணவும், ஈறில்காலத்தின் இசிவினால் சுழற்றப்பட்ட ஆண்மை மிக்கக் கண்ணீர்த்துளிகள் அனைத்தையும் இன்னும் கட்டுப் படுத்திக்கொண்டு, தனது கைகளில் கிடந்தவாறு அவனது கடைசி மூச்சினை விட்டான்.

நிச்சயமாக அந்த ஒரேயொரு முறைதான் எனது விஞ்ஞானம் என்னைத் தோல்வியுறச் செய்தது. முன்னெச்சரிக்கையாக அவனுக்கு வேண்டிய அளவில் இடம் விடப்படக்கூடியதாக இருந்த ஒரு பெட்டியில் அவனைக் கிடத்தினேன். வழிபாட்டு வினைமுறையாளர் தங்க அங்கி அணிந்திருக்கவும் மூன்று மேற்றிராணியார்கள் அங்கே அமர்ந்திருக்கவும் செய்ததனால் எனக்கு நான்கு - பெசோ முற்கால ஸ்பானிய பொற்காசுகள் செலவை ஏற்படுத்திய கூட்டு இரங்கற்பாடலை அவனுக்காக ஒலிக்கச் செய்தேன். ஒரு குன்றின் மேல் மிகச் சிறந்த கடற்புர வானிலைக்கு முகம் கொடுத்தவாறு அமைந்த ஒரு பேரரசனுக்கான ஒரு கல்லறை மாடத்தை, ஒரு சிறு தேவாலயத்துடன் ‘கடற்படையினரை ஏமாற்றியவனும் விஞ்ஞானத்தின் பலியாளும், கெட்டவன் என்று மிக மோசமாக அழைக்கப்பட்டவனுமான, இறந்த(வன்) ப்ளாக்கமன் இங்கிருக்கிறான்’ என்று கோதிக் பாணி கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ஓர் இரும்பு பட்டிகையினையும் அவனுக்காக மட்டுமே உண்டாக்கினேன், அப்புறம் அந்தக் கௌரவங்கள் அவனது நற்குணங்களுக்கு நீதி செய்யப் போதுமானது என்று எனக்குத் தோன்றியவுடன், அவனது இழிபழிக்காக எனது பழிதீர்த்தலைத் தொடங்கினேன், பிறகு அவனைக் கவசமிடப்பட்ட கல்லறை மாடத்தினுள்ளே உயிர்ப்பிக்கச் செய்து பேரச்சத்தில் அவனை உழலச் செய்தேன்.

இதெல்லாம் சாந்த மரியா தெல் தாரியனை தீ எறும்புகள் கபளீகரம் செய்வதற்கு வெகுகாலத்திற்கு முன்பே நடந்தது என்றாலும், அட்லாண்டிக் பெருங்கடற் காற்றுகளில் மேலேறி உறங்கும் டிராகன்களின் நிழலில் குன்றின் மேல் கட்டுக்குலையாது நிற்கிறது கல்லறை மாடம், பிறகு ஒவ்வொரு முறை நான் அதைக் கடக்கும் பொழுதும் ஒரு வண்டி நிறைய ரோசாப்பூக்களை அவனுக்காகக் கொண்டு வருகிறேன் அவனது நற்குணங்களுக்காக எனது இதயம் வலி கொள்ளவும் செய்கிறது என்றாலும், அதன் பிறகு நொறுங்கிக்கொண்டிருக்கும் பெட்டியின் சிதிலங்களில் அவன் அழுவதைக் கேட்பதற்காக அந்தப் பட்டிகையில் எனது செவியினை வைக்கிறேன், ஒருவேளை அவன் தற்செயலாக மீண்டும் இறந்து போயிருந்தால், ஒருமுறை கூடியும் அவனை உயிர்ப்பிக்கிறேன், தண்டனையின் அழகின் பொருட்டு அவனது கல்லறை மாடத்தின் உள்ளே, நான் வாழும் காலம் மட்டும் அவன் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பான், அஃதாவது, என்றென்றைக்குமாக.

ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: க்ரிகரி ரபாஸ்ஸா

Blacaman the Good, Vendor of Miracles by Gabriel Garcia Marquez. English translation: Gregory Rabassa.

From Gabriel Garcia Marquez Collected Stories

(Translated from the Spanish by Gregory Rabassa & J.S. Bernstein), Penguin, 1996.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer