ஓவியர் ராம்குமார்
(23, செப்டம்பர் 1924 - 14 ஏப்ரல் 2018)


பகிரு

எம்.எப்.ஹுசைன் சகவாசத்தில் வாரணாசி சென்றடைந்த இரவு நேரத்தை ஒரு பேட்டியில் நினைவு கூர்கிறார் ராம்குமார். அதன்பின்பு அவர் உருவங்களை, உருவகப்படுத்துவதைத் துறந்துவிட்டு, சுருக்க வியலுக்கு நகர்கின்றார். அவ்வாறான பெரும் பங்கிருந்தும் தன்னை அவர் ஒரு எஸ். எச். ரசா வகையினராகத்தான் அடையாளப்படுத்துகிறார்.

இரவுநேரத்தில் வாரணாசி அடைந்தபோது மனித நடமாட்டம் குன்றியிருக்கிறது. மெய்யில், உயிர் மரித்த, உயிரற்றவர்களின் நகரமாக அவருக்குத் தெரிகிறது.

காலை அவரும் எம்.எப். ஹுசைனும் கிளம்பி ஆளுக்கொரு பக்கமாகக் கிளம்பி வாரணாசியின் ஜனத் திரளுக்குள் கலந்து பின்னர் மாலைவரை நகரை நுகர்ந்து இரவு நேரத்தில் சந்தித்து இருவரும்  வாரணாசி குறித்து உரையாடியதாகக் கூறுகிறார்.

ஒரு பூனைத் தன் பாதத்தை நீர்மேல் தடவி தடம் பார்ப்பதைப்போல், வாரணாசியும் கங்கை நதியின் மீது தனது பாதத்தினை நீட்டி நீவுவதாகக் குறிப்பிடுகிறார், அதையே அவரது குறிப்போவியமும் சொல்கிறது. வாரணாசியின் மண்கற்கள் படிமங்கள் அவரது ஓவியத்தில் இடம்பெறுகிறது.

பார்த்தவுடன் பரவசப்படும், உணர்ச்சி வயப் படுத்தும் ஓவியங்களைப் படைப்பதில் நாட்ட மில்லாதவர் ராம்குமார். எஸ். எச். ரசாவின் படைப்பு  களைப்போல அமைதியாய் உற்றுநோக்கி மெதுவாக ஓவியத்தைப் புரிந்துகொள்ளத் தூண்டும் வகையில் அமைத்தலே தனது பாணியாக ராம்குமார் முன் வைக்கிறார்.

சிம்லா, லடாக், குமாவூன், ஆன்றேட்டா ஆகிய வற்றைத் தொடர்ந்து வாரணாசியும் ராம்குமாரின் நாஸ்டால்ஜியா பட்டியலில் ஒன்றானது. மச்சு பிச்சு, கீரீஸ் என பலயிடங்கள் சென்று தரிசித்து வரும் கலைஞனின் மிகப்பெரும் சவால் என அவர் குறிப்பிடும்போது, “இயற்கையைப் பருகும் வள  மான, ஆத்ம பரவசப்பட்ட கலைஞனின் மனமானது, சட்டென்று தாண்டிச்செல்லும் அவனது கலை எண்ணத்தின் வேகத்துடன் இயைந்து செயல்படுவ தென்பது ஒரு வாழ்நாள் சவால், வாழ்நாள் முயற்சி எனலாம்.”

ஐம்பது அறுபதுகளின் இந்திய நவீனத்துவக் கலை காலத்தியர்களிடையே வழமையான பாணியான பாரீஸ் மார்க்கத்தை ராம்குமாரும் மேற்கொண்டார். அவரது முன்னோடியான, ஒரு வகையில் வழிகாட்டி  யாய்ச் செயல்பட்ட சைலோஷ் முகர்ஜியின் ஓவியப் பள்ளியான சாரதா உகெல் கலைக்குழுவிலிருந்து ஐம்பதுகளில் பாரீஸ் கிளம்பினார் ராம்குமார். இரண்டு வருடத்தில் இரு வெவ்வேறு கலைஞர்களிடத்தில் பாரீஸ் பயில்வு. பின்பு இந்தியா வருகை. பாரீஸ் அவருக்குப் பாதைகளைக் கைகாட்டியதாகக் கூறுகிறார் ராம்குமார், ஒரு பக்கம் மோதிகிலெய்னி, மறுபக்கம் டாவின்ஸி, அவர் காலத்திய ஐரோப்பிய கலைஞர்கள் பலர், மேலும் அவர் அங்கு நடந்த கலைப்பொருள் ஏலத்தில் மாட்டிஸேயின் ஓர்  ஓவியம் இந்திய மதிப்பில் வெறும் நூற்றைம்பது ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக ஒரு துணுக்கு செய்தி என அவரது பாரீஸ் அனுபவம் விரிகிறது.

சிம்லாவில் பிறந்து வளர்ந்ததால் சிம்லா, குமாவூன் ஆன்றேட்டா, தில்லியில் வாழ்ந்ததால் கரோல்பாக், கனாட் ப்ளேஸ் மேலும் வாரணாசி நகரத்தின் நினைவுகள் எனப் பரவுகிறது ராம்குமார் சாயப்பூச்சுக்களின் ஓட்டம்.

எழுத்தாளராய் தொடங்கி ஓவியராய் மாறியவர் ராம்குமார், கரோல்பாக் பகுதியில் பரவலாக உணரப் பட்ட தேசப்பிரிவினையின் பதற்றங்களும் சங்கடங் களும் அவரது சிறுகதைகளிலும் ஓவியங்களிலும் பிரதிபலித்தது.

ராம்குமாரின் நவீனத்துவப் படைப்புகளில் வாழும் மாந்தர்கள் யாவரும் நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் பின்னணியில்லாத ஒரு சுவற்றில் ஒரு படல மாகத் தோன்றுகிறார்கள், அவர்கள் தோற்றங்கள், நுணுக்கங்கள் யாவும் பூசப்பட்டமேனிக்கு உள்ளன.

அவரது சக ஓவியர்களுடன் ஒப்பிடுகையில் பொரு ளாதார, லாபகரமான ஓவியராக ராம்குமார் வலம் வர வில்லை. அவரைப்போலவே கேய்தோந்தே அவரது படைப்புகளுக்கும் நேர்ந்ததெனக் கூறப்படுகிறது.

பொதுவாய் வைக்கப்படும் பதில், இவ்வோ வியர்கள் அவர்களது படைப்புகளுக்குத் தலைப் பிடாததுதான். ஒவ்வொரு கலை ஆர்வலருக்கும் ராம்குமாரின் எதாவது ஒரு படைப்பை வாங்கினால் போதும், எதாவது ஒரு ராம்குமாரின் படைப்பு.

கடைசி காலம் வரை வரைந்துகொண்டிருந்தாலும், ராம்குமார், தனது கடைசிக் கால படைப்புகளை விற்க முனையவில்லை, அவருக்கு அதில் பிடிப்பு குறைந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer