எட்கர் கெரெட் - நேர்காணல்
எட்கர் கெரெட் மற்றும் சோபி லீவிஸ்

மொழியாக்கம்: வளவன் தங்கவேல் - சிபி சக்கரவர்த்தி

பகிரு

சில வருடங்களுக்கு முன்பு, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒரு இலக்கியத் திருவிழாவின் போது, எட்கர் கெரெட்டோடு சோபி லீவிஸ் நடத்திய உரையாடலிது, Granta இதழில் முன்பு வெளிவந்ததன் தமிழாக்கம்.

சோபி லீவிஸ்: கடந்த வருடம், ஒரு சிறுகதை வகுப்பெடுப்பதற்கு உங்கள் கதையைப் பயன்படுத்தினேன். நாம் எதற்காக எழுதுகிறோம் மேலும் சிறுகதைகள் எழுதுவதை நாம் எப்படி அணுகுவது போன்றவற்றிற்கான அருமையான உதாரணமாக அக்கதை எனக்குப்பட்டது. குழந்தைகளுக்கான மேஜிக்மேன் என்ற உருவே எழுத்தாளனுக்கான மிகச்சிறப்பான ஒப்புமையாகிறது: எளிய, அன்றாடம் புழங்கும் பொருட்களைக்கொண்டு மேஜிக் செய்வது, பிரதானமாகக் குழந்தைகளின் கவனத்தைக் குவிக்கும் விதமாக ஈடுபாட்டோடு வைத்திருப்பது. தவிர மேஜிக்மேனின் யுக்தி அதனுள், பொதுவாகச் சிறுகதைக்கு அவசியமான ஒன்றைக் கொண்டுள்ளது: வெளிப்பாட்டுத்தன்மை, வேண்டுமென்றால் உள்ளர்த்தமென்றும் கொள்ளலாம். எழுத்திற்கான உங்களது அணுகுமுறையென்ன? நடைமுறையில், எழுதுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

எட்கர் கெரெட்: நான் கதைகள் எழுதும்போது, அது மிகவும் உள்ளுணர்வான விஷயமாகிறது. நான் ஒரு திட்டமோ அல்லது செயல்முறையோ கொண்டிருக்கிறேன் என்பதானதல்லதது. வழக்கமாகச் சில வகையான படிமம் அல்லது ஒரு எண்ணம் அல்லது ஒரு சொற்றொடரைக் கொண்டிருப்பேன். நான் எழுதத் தொடங்கும்போது, எனது கதாபாத்திரங்களுடனே நானுமிருப்பதாக உணர்வேன். மேலும் இந்தச் சாகசத்தில் நானும் செல்வதாக அடுத்து நிகழப்போவது என்ன என்று அவர்களைப் போலவே ஆவலுடனும் உற்சாகத்தோடும் இருப்பேன். நான் “ஹாட்ரிக்” எழுதியபோது என்னிடம் எந்த மாதிரியான திட்டங்களும் இல்லை ஆனால், அதை நான் வாசிக்கும்போது, நான் படைப்புச் செயல்பாட்டைக் குறித்துப் பேசுவதாக மிகவும் உணர்ந்தேன். அதாவது, நான் கதையெழுதும் போது, மேஜிக்மேன் தனது கையைத் தொப்பிக்குள் விடுகிறார். ஆனால், எதை அவர் வெளியில் எடுப்பார் என்பது அவருக்குத் தெரியாது. அது தலைத் துண்டிக்கப்பட்ட முயலாக இருக்கலாம் அல்லது இறந்துபோன குழந்தையாகவும் இருக்கலாம். ஆகவே எனக்கு அது முக்கியம் நான் ஒரு கதை எழுதும்போது, நான் ஒரு தொப்பிக்குள் இருந்து எதையோ வேகமாக எடுக்கப்போகிறேன், மேலும் அது என்னவாக இருக்குமென்று எனக்கும் தெரியாது. எவ்வளவு விபரீதமான அல்லது வினோதமான விஷயங்களை என்னுள் கண்டெடுக்கிறேனோ, அவ்வளவுக்கு எனது பார்வையாளர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். ஆகவே, நானும் குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களில் தொப்பிக்குள் இருந்து பயங்கரமான பொருட்களை வரவைக்கும் இந்த மேஜிக்காரனைப்போல் தான், மேலும், மேஜிக்மேன் தன்னையே கேட்டுக்கொள்கிறார்: ”ஏன்? இவை என்னைப்பற்றி என்ன சொல்கிறது? அதே வேளை, அவர் எல்லாக்குழந்தைகளும் விரும்பும் இந்த மயக்கும் மேஜிக்மேனாகிறார். சமயங்களில் நான் பலவீனம் மற்றும் அச்சம் அல்லது தர்மசங்கடம் குறித்தோ ஒரு கதை எழுதுவேன், ஆனால், அதை மக்களிடம் வாசித்துக் காண்பிக்கையில், அவர்களுக்கது பெரும் நகைச்சுவையாக இருக்கும். ஆக “ஹாட்ரிக்” வந்து எழுதுவது குறித்தான கதை மட்டுமல்ல அது எழுத்தாளனுக்கும் அவன் வாசகனுக்குமிடையேயான உறவைப் பற்றிய ஒன்று என உணர்கிறேன்.

சோபி: நீங்கள் இந்த மகிழ்வற்ற அல்லது தொந்தரவான அல்லது கடினமான பொருட்களை எழுதத் துணிவது சில பேர் அது குறித்து எளிதாக எடுத்துக்கொள்ள அல்லது இலகுவாக இருக்க உரிமமாகிறது என்பதா அது?

கெரெட்: புனைவைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்றால் அது வாழ்விலிருந்து விலக்கப்பட்ட ஒன்று, அதில் உள்ள எதுவுமே நிஜமல்ல, கதாப்பாத்திரங்கள் இறக்கலாம் அல்லது சிறகுடன் இருக்கலாம். எனக்கு அது மிகப்பெரிய விடுதலை. ஒருவனின் செயல்களோட விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கின்றவனைப் போன்றவன் நான். அதுவும் நாஜி பேரழிவில் மிஞ்சிய இருவரின் இளைய மகனுமாக. என் அம்மாவைப்பற்றி எனக்குத் தெரிந்த முதல் விஷயங்களில் ஒன்று என்னவென்றால், அவரின் அம்மாவும் சகோதரரும் அவர் கண்முன்னே படுகொலைச் செய்யப்பட்டனர். மேலும், அதற்கு அடுத்த வருடம் அவரின் அப்பாவும் படுகொலைச் செய்யப்பட்டார். அவர் வார்சாவின் குடிசைப் பகுதிகளில் இருந்தார். ஆக, மிக இளமையிலிருந்தே நான் உணர்ந்திருந்தேன், என் அம்மா என்னிடம் சாப்பிட இன்னொரு வெள்ளரி வேண்டுமா என்று கேட்பாளானால, எனக்குத் தேவையோ தேவையில்லையோ, நான் வேண்டும் என்று சொன்னால், நான் இவ்வாழ்வைவிட அதிகம் விரும்பும், அளப்பரிய துன்பங்களை அனுபவித்த, இந்தப் பெண்மணி, மகிழ்ச்சியடைவாள். நான் வேண்டாமென்று சொன்னால், அவள் மகிழ்ச்சியடையமாட்டாள். ஆக, விஷயம் என்னவென்றால் நான் எதுவொன்றை நினைத்தாலும் செய்தாலும், அது வாழ்வில் எதிரொலித்தது, மக்களுக்குத் துன்பத்தையோ மகிழ்ச்சியையோ கொடுத்தது. இது நான் சிறுவனான போதும் எனக்கு மிகப்பெரிய பொறுப்புணர்வைக் கொடுத்தது - சில சமயங்களில் எனது சொந்த உணர்வுகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு. புனைவை எழுத ஆரம்பித்தபோது, திடீரென நான் விரும்பியவற்றைச் செய்ய அனுமதிக்கப்பட்டேன்.

சோபி: அது திடீரென வெளிப்பட்டக் கருத்தா அல்லது படிப்படியாக உணரப்பட்ட ஒன்றா?

கெரெட்: நான் - மீண்டும் - நினைத்துப்பார்க்கிறேன், நான் ரொம்பத் தன் உணர்வுள்ள ஒரு நபர் கிடையாது. நீங்கள் என்னை ஏன் அழுகிறாய்? என்று கேட்கலாம். நான், (அழுதுகொண்டே) “நானொன்றும் அழவில்லை”.. எனப் பதிலளிக்கலாம். நான் எனது முதல் கதையை எழுதும்போதே, அப்போது எனக்குப் பத்தொன்பது வயது, எனது கட்டாய ராணுவப் பயிற்சியின் போது, இதுதான் என் வாழ்வைக் காப்பாற்றக்கூடியவொன்று என உணர்ந்தேன். அக்கதையை விரும்பினேன். அதை வாசித்தபோது மக்கள் என்ன சொல்லுவார்கள் என்று தெரியவில்லை. அந்த முதல் கதை, “நெடுங்குழாய்கள்” (Pipes) என்பது - அதுதான் நான் முதன்முதலில் எழுதிய புனைவுப் பிரதி. அப்போது நான் சிப்பாயாக இருந்தேன். நான் அந்தக் கதையைப் பார்த்தேன். மேலும், நான் வியர்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஒரு விஷயம்தான் நான் பிடித்துக்கொள்ள வேண்டியது: எழுத்து, என உணர்ந்தேன். அதே சமயம் அது ஏன் என்றும் சொல்லத்தெரியவில்லை. ஏன் என்பதை விளங்கிக்கொள்ள எனக்கு ரொம்பக்காலம் தேவைப்பட்டது.

சோபி: புனைவு உங்களுக்கான விடுவித்தல் என்பது கொஞ்சம் முரண்பாடாக இல்லையா; உங்கள் கதைகளில் மக்கள் இறந்துபோகும்போது உண்மையில் அவர்கள் இறப்பதில்லை. எனினும், புனைவு உங்கள் வாழ்வை மாற்றியுள்ளது; காப்பாற்றியுள்ளது எனலாமா.

கெரெட்: ஆம் - விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களது புனைவோடு மென்சுவர் அறைக்குள் போகிறீர்கள். அதாவது, நீங்கள் ஓடிச்சென்று சுவற்றில் தலையை மோதிக்கொள்ளலாம்; நீங்கள் நிறைய விஷயங்கள் பண்ணலாம் மேலும் அவையெதுவும் அந்த நேரடியான விளைவுகளைக்கொண்டதல்ல. அதே வேளை உங்களின் அனுபவமும் மற்றும் உங்கள் வாசகர்களின் அனுபவமும் ஒரே மாதிரி இருக்கவேண்டிய அவசியமில்லை என உணர்வீர்கள். ஐ லவ் திஸ்! ஒரு கதையென்பது எழுத்தாளன் - வாசகனுடைய இணைவாக்கம் என்பதை உண்மையில் நம்புகிறேன். திரைப்படங்களில், இயக்குநர் ஒரு தொன்னூறு சதவிகிதம் கொண்டு வருகிறார் என்றால், மேலும், பார்வையாளர்கள் கதையில் ஒரு பத்துச் சதவிகிதம் கொண்டுவருகிறார்கள். அது ஒரு புனைவில் வருகிற மாதிரி இல்லை. அங்கு நீங்கள் கதாபாத்திரத்தின் குரலைக் கற்பனை செய்வீர்கள், அவரின் தோற்றத்தை கற்பனை செய்வீர்கள், எவ்வளவு சீக்கிரம் விஷயங்கள் நடந்துவிட்டது.. எனக் கற்பனை செய்வீர்கள். சராசரியாக ஒரு நாவல், எழுபது சதவிகிதம் எழுத்தாளர் என்றால், முப்பது சதவிகிதம் வாசகர் பங்கு என்று சொல்வேன். என் கதைகளில் அது ஐம்பதுக்கு ஐம்பது பங்கு. நாங்கள் இணையான பங்குதாரர்கள் என்று நினைக்கிறேன். “பைத்தியக்காரத்தனமான பசை” என்ற எனது கதையுள்ளது. அது வாக்குவாதத்தில் ஈடுபடும் மணமான ஒரு தம்பதிகளைப்பற்றியது. ஒரு துண்டு, “பைத்தியக்காரத்தனமான பசை” வாங்குகிறாள் அந்தப் பெண், விளம்பரத்தில் அவர்கள் மேல்சுவற்றில் ஒட்டிக்கொண்ட ஒருவனைக் காட்டுகிறார்கள். மேலும், பைத்தியக்காரத்தனமான பசை உங்கள் எடையைத் தாங்கும் எனவும் கூறுகின்றனர்” அவர்கள் போட்டோ ஷாப் செய்துள்ளனர், இது முட்டாள்தனம், உனக்குத் தெரியும், இது உண்மையல்ல” என்கிறான் கணவன். “இல்லை, இல்லை, இது நிஜம்” என்கிறாள் மனைவி. அடிப்படையில், அவர்கள் உண்மையிலே தங்களுக்கிடையேயான உறவைப்பற்றி விவாதிக்கிறார்கள். அப்படியாக அவன் வேலைக்குச் சென்றுவிடுகிறான். தனது காதலியை அழைத்துப் பேசுகிறான் “உனக்குத் தெரியுமா, என் மனைவியிடம் என்னமோ பிரச்சினை. என்னவென்று தெரியவில்லை, ஒருவேளை உண்மையிலே அவள் என்னை எதிர்நோக்கி இருக்கலாம். இன்றைய இரவு சந்திப்பை ரத்து செய்து விடுவதுதான் நல்லது. நான் வீட்டிற்குச் செல்கிறேன்” எனக் கூறுகிறான். பின்பு அவன் வீட்டிற்குச் சென்றபோது வீடே அரவமற்று இருக்கிறது. அவன் ஒரு கிளாஸை எடுக்க முயற்சிக்கிறான். அது அடிப்பாகம் ஒட்டப்பட்டிருக்கிறது; ஃப்ரிட்ஜை திறக்க முயற்சிக்கிறான், ஆனால் அதுவும் பசையால் ஒட்டி மூடப்பட்டிருக்கிறது; அவன் சென்று யாருக்கோ ஃபோன் செய்யப்போகிறான், அதுவும் ஒட்டப்பட்டிருக்கிறது. அவன் கடும் கோபமடைகிறான் மேலும் எதையோ உதைக்க முற்படுகிறான். அதுவும் அதனிடத்தில் ஒட்டப்பட்டுள்ளது. அவன் வலியில் கத்தியபோது, ஒரு சிரிப்பொலியைக் கேட்கிறான். மேலும், அவன் மேலே பார்க்கும்போது, முற்றிலும் நிர்வாணமாக, அவன் மனைவியைக் காண்கிறான், அவளது கால் பாதங்கள் மேற்கூரையில் ஒட்டியபடி. அதைப்பார்த்தபோது அவன் பயந்துவிட்டான். “என்ன செய்கிறாய்? நீ ஒரு லூசு. நான் யாரையாவது கூப்பிடப்போகிறேன்.” ஆனால் அதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளை இவன் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறான். மேலும், அவள் புத்துணர்வோடு காட்சியளித்தாள்: தலைகீழாகத் தொங்கியபடி, அவள் முலைகள் மீண்டும் உறுதியாக இருந்தன, மேலும் அவள் சிரிக்கும்போது அவளின் சிரிப்பு இயல்பானதாகவும் சிரமமற்றதாகவும் ஈர்ப்பு விசையே அந்தச் சிரிப்பை உண்டாக்குவது போன்றும் இருந்தது. அது ஒரு பழைய புகைப்படம் போன்றது - மேலும், அவன் மீண்டும் அவள் மீது காதலில் விழுந்தான், தலை - கீழானபோதும் நிச்சயமாக. பின்பு அவன் புத்தகங்களைக்கொண்டு வந்து அடுக்கி வைத்துவிட்டு, மேலும், தான் அவளைக் கீழிறக்குவேன், கொஞ்சம் வலிக்கும் என்ற போதிலும் என்கிறான். அவள் அதைக் கேலி செய்ய இவன் அவளை முத்தமிடச் செல்கிறான், மேலும், தன் கால்களில் இருந்து புத்தகம் நழுவி விழுவதை உணர்கிறான். அவன் அங்கே இருந்தான், காற்றிலே, வெறுமனே அவளது உதட்டின் பிடியில். நான் இதைக் குறிப்பிடுவதற்கான காரணம் இந்தக்கதை ஒன்பது குறும்படங்களாக எடுக்கப்பட்டது. அவற்றின் பொருள்கொள்ளல்கள் ரொமாண்டிக் காமெடியிலிருந்து பேய் படங்கள் வரை என விரிந்திருந்தது. இயக்குநர்களில் ஒருவர் காதல் ஜோடிகள் சாகலின் ஓவியத்தில் மிதந்தபடி இருப்பது எனச் சிந்தித்திருக்கிறார், இன்னொருவர் உதடுகள் ஒன்றியிருந்து பின்பு பசையால் கிழிபடுவதில் - நிஜமாகக் கோரமான திகில், கவனம் செலுத்தியிருக்கிறார். எனக்கு அந்த இரண்டு வாசிப்புகளுமே சரியானவையாகப்படுகிறது. வெவ்வேறு மக்கள் தங்களை ஒன்றிணைக்கும் பொதுவான ஒன்றைக்கண்டடைவது வியப்பான ஒரு விஷயமாகிறது. மேலும், அது கொடூரமான ஒன்று எனவும் நினைக்கிறேன். ஆக, அது “உங்களுடையதைக்கொண்டு வாருங்கள்” என்பதைப் போன்றது. நீங்கள் இந்தக்கதையைப் படித்து மேலும் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான பொருளைக் கொண்டுவாருங்கள்.

சோபி: நீள அளவு முக்கியமா? சிறுபுனைவு வேலைகள் உங்களுக்குச் சிறப்பாக வருகிறதா?

கெரெட்: எனது பிரதிகளை எப்போதுமே கணிசமான அளவு எடிட் செய்து சுருக்குவேன். உண்மையில் கதை தொடங்குமிடத்தில், நான் கதையைத் தொடங்க முடியாமற்போன நிறையக் கதைகள் என்னிடம் உள்ளன. அதோடு, பெரும்பான்மையான என் கதைகளில், ஒருவிதமான அவசர உணர்வு உள்ளது. அதாவது, நீங்கள் உதவிக்குக் கூப்பிடும்போதோ அல்லது உங்கள் வீடு தீப்பிடித்து எரியும்போதோ, மக்கள் அதைப் பிடித்துக்கொள்ள, புரிந்துகொள்ளவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். என்னைப் பொறுத்தவரைக் கதைகள், ஒருவிதமான இயக்கத்தை மேற்கொள்கின்றன, அவைகளுக்குத் திசையைக் குறித்த ஒரு உணர்வு உண்டு; அவை எதனுடைய ஸ்தூல வடிவமும் கிடையாது. அது வேடிக்கையானது, ஒரு கதையொன்று உள்ளது, நான் எப்போதும் வாசிப்பரங்குகளில் வாசிப்பேன்: “ஆஸ்துமா அட்டாக்” என்ற பிரதி அது தான் நான் எழுதியதிலேயே மிகச்சிறிய கதை. அக்கதையை எப்படி எழுதினேன் என்று அவர்களுக்குச் சொல்வேன். நான் ஆஸ்துமாக்காரன், ஹானுக்கா (யூத விழாக்காலம்) தினத்தில் எமர்ஜென்சி வார்டில் இருக்கும்படியாயிற்று. எனவே என்னால் சுவாசிக்க முடியவில்லை அப்புறம் இந்த ஹூயூஜ் க்ரான்ட் போன்ற வசீகரத்துடனான டாக்டர், என்ன பிரச்சினை உங்களுக்கு என்று கேட்டார். மூச்சுத்திணறலோடு அவரிடம் கூறினேன் (கடுமையாகத் திணறியபடி), ‘நான் - அ - அந்த மெனோரா - அ - ப்ளாஸ்டிக்கால்… கட்ட…’ நடந்த கதையை விவரிக்க முயன்றேன். ஆனால் அவர், என் தோள் மீது கையை வைத்து ‘மகனே, நீ எல்லாவற்றையும் சொல்ல வேண்டியதில்லை. எது முக்கியமோ அதை மட்டும் சொல்லு’ என்றார். அப்புறம் நான் அவரிடம் கூறினேன், (திணறல்களோடு) ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’. பிறகு அவர் சொன்னார், “பாத்தியா, இது எவ்வளவு சுலபம்”. பின்பு, நான் இந்தச் சுவாசிப்பதற்கான மாஸ்க்கில் இருக்கிறேன். டாக்டர் மற்ற நோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது தான் நான் இந்தப் பிரதியை எழுதிக்கொண்டிருந்தேன். அது எப்படி, அவசரக் காலங்களில், போதுமான சொற்களை அடைவதற்கான வழி இல்லையேல், ஒருவரிடம் ‘ஐ லவ் யூ ’ அல்லது ‘ஐ ட்ரூலி லவ் யூ’ என்று தேர்ந்தெடுத்து சொல்வது மிகப்பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணும் என்பதைப்பற்றியது, ஏனென்றால், அந்த இன்னொரு சொல், அது ”ஆம்புலன்ஸாக” இருக்கலாம் அல்லது “காப்பாத்துங்க” என்பதாகக்கூட இருக்கலாம். முன்பொருமுறை நான் அந்தச் சிறந்த எழுத்தாளரைச் சந்தித்திருந்தேன். அவர் என்னிடம் சொன்னார், சமயங்களில் அவருக்கு ஒரு உருவகமோ அல்லது ஒரு குறிப்போ தோன்றும் போது அவர் அதை ஒரு அட்டையில் எழுதி வைத்து, ஒரு பெட்டியில் வைத்துவிடுவாராம். பிறகு அவர் கதை எழுதும்போது அவரது கதாப்பாத்திரம் ஒரு நடை செல்கிறது என்றால், இவர் சரி ஓகே, நான் அந்த நடக்கும் படிமத்தை தமது குறிப்புப்பெட்டியில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பாராம். மேலும் நான் அவரிடம் சொன்னேன், “ஏன்? அவன் தான் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறானே.” நான் ஒரு பிரதி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணவில்லை. நாம கொஞ்சத்த சொல்ல முயற்சி பண்றோம், எதற்காகவாவது உதவும்னு பண்றோம். அது ஒருத்தனின் முதுகில் இறகைச் சொருகுவது போன்றது. உங்களுக்குத் தெரியும் அவனுக்குப் பரிணாம வளர்ச்சியின் பொருட்டு சிறகு முளைக்கலாம் அல்லது அவனுக்குச் சிறகுகளே இல்லாமல் இருக்கலாம். எழுத்து குறித்தான எனது மனப்பாங்கு அதுதான் - இருப்பினும் எழுத்தாளர்கள் இங்கு இருக்கிறார்கள். நான் விரும்பக்கூடியவர்கள், அவர்கள் இவ்வழியில் எழுதுவது இல்லையென்பது எனக்குத் தெளிவாகத் தெரியும்.

சோபி: உங்கள் கதைகளில் பணம் அல்லது ஃபினான்ஸ் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனச் சொல்லுங்கள். அதோடு, முதலாளித்துவம் குறித்தும். முதலாளித்துவம் நமது கதைகளை வழிநடத்திச்செல்லும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோமா? அல்லது எப்பவுமே இதுதான் நிலையா?

கெரெட்: அது உண்மைதான் எனது புதிய தொகுப்பில் (திடீரெனக் கதவு தட்டப்படுகிறது: கதைகள்), பொருளாதாரம் ஒரு தொடர்ச்சியான பேசுபொருள்தான். நான் வாழ்வின் தீர்மானமான பகுதிகளாக நான் பார்ப்பவைகளாக இருந்தும், அது குறித்து கிரகித்துக்கொள்ள முடியாதவற்றைக் குறித்து மட்டும் தொடர்ந்து நான் எழுதுவதாக நினைக்கிறேன்; அவை எனக்கு விசித்திரமாகப்படுகிறது. உதாரணத்திற்கு, பங்குச் சந்தை எனக்கு எப்போதும் மிக விசித்திரமானது. உங்களுக்கு ஒரு கம்பெனி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம், ஒரு மிகப்பெரிய கட்டிடத்தில். மேலும், உங்களுக்கு ஒரு ஐம்பது லாரிகள் சொந்தமாக உள்ளது. பின்பு மக்கள் சொல்லுவார்கள் இந்தக் கட்டிடம் ஐநூறு மில்லியன் மதிப்புடையது என்று. ஆனால், அடுத்த நாளே இது நூறு மில்லியன் மதிப்புடையது என்று. அடுத்தது உங்களுக்குத் தெரியுமா, ஒரு பில்லியன் மதிப்புடையதாக ஆகும். ஆனால் இவ்வளவு காலமும் அது அதே கட்டிடம்தான். மேலும் அதே பழைய லாரிகள் தான். அதில் ஆதாய ஊகஞ்செய்வதில் என்ன இருக்கிறது? நமது அடிப்படை உள்ளுணர்வில் இருந்து மேலும் நம்மை விலகிச்செல்ல வைக்கும் அந்த மாதிரி விஷயங்களினால் தான் இதெல்லாம் என்று நினைக்கிறேன். நான் எப்போதும் அவைகள் குறித்து மிக ஆர்வத்தோடு இருக்கிறேன். மேலும் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

சோபி: ஆக இவ்விஷயங்களின் விசித்திரத்தன்மை யிலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்.

கெரெட்: ஆம் - அந்தத் தொகுப்பிலுள்ள சில கதைகளை எழுத ஆரம்பிக்கும்போது நான் அனைத்து வர்த்தகச் செய்தித்தாள்களையும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். எனது வங்கி மேலாளரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருந்தேன். ஆனால், அவர் உங்களிடம் ஒரு முதலீட்டு அட்டவணைக்குக் கூடக் கிடையாது, நாங்கள் ஏன் பதிலளிக்கவேண்டும் என்றார். ஆகையால், அவர்களிடம் பேசுவதற்காகவும், அவர்களது உளவியலை மற்றும் முதலீட்டாளர்களுடன் அவர்களது உறவுமுறைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கவும் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. நான் இந்தக் கதைகளை எழுதிவிட்டேன். பின்பு, நான் வாங்கியதை விற்றுவிடலாம் என நினைத்தேன். அதற்கு அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ‘நீங்கள் வெறும் நான்காயிரம் டாலர் தான் ஈட்டியுள்ளீர்கள்.’ அது மிகவும் விசித்திரமானது !

சோபி: இந்த உலகில் நீங்கள் ஆழ்ந்து இல்லை; நீங்கள்
ஓரங்களில் இருந்து பார்க்கிறீர்கள்.

கெரெட்: நான் செய்வனவற்றைச் செய்யாமல் இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக நான் பேசுபவற்றைப் பேசுவேன். நான் முதலீட்டு வங்கியாளர்களைச் சந்திக்கும்போது, அவர்களுடன் மணிக்கணக்கில் பேசுவேன். கிட்டதட்ட ஒரு உளவாளியைப்போல் உணர்வேன். அவர்களுக்கு விருப்பமானவைகள் எனை ஈர்க்கவே செய்யாது. ஆனால், இந்த உரையாடல்களை நடத்துவதன் மூலம் மனித விருப்புகள் மற்றும் இருப்பின் உச்ச நிலையையும் அபத்தத்தையும் பற்றிக் கொஞ்சம் அறிந்துகொள்கிறேன்.
எனது மகன் அவன் வீடியோ கேம்ஸ் விளையாடுவதை நான் பாக்க வேண்டும் என விரும்புவான். என் மனைவி எப்போதும் கேட்பார், ‘அதை ஏன் செய்கிறீர்கள்? அது ரொம்பச் சலிப்பூட்டுவது என்பாள்.’ என்னைப் பொருத்தவரை உரையாடலின் புறத்தோற்றம் குறித்து ஏதோ ஒன்று உள்ளது. என் மனதில் அதை அவிழ்த்துப்பார்த்தால் அது மொத்தமும் மனிதம் குறித்தானதாக இருக்கிறது. நாம் ஒரு உரையாடலை நிகழ்த்தலாம். அதன்பின்பு, நீங்கள் பேசியது எதையும் என்னால் நினைவுகூற முடியாமல் போகலாம், ஆனால், நீங்கள் கவனிக்கும்போது எப்படி உங்கள் உதட்டைத் தொட்டீர்கள், அல்லது கதை சொல்லல் குறித்து நீங்கள் உற்சாகமடைகிறீர்கள் என நான் கருதுவது என அதை நான் நினைவு வைத்திருப்பேன். அது உரையாடலின் புறத்தோற்றம் குறித்தது. நான் சிறுவனாக இருந்த போது - இது ஒரு உண்மைக்கதை - என் பெற்றோர்கள் என்னைக் கால்பந்தாட்டங்களுக்குக் கூட்டிச்செல்ல வேண்டும் என விரும்புவேன். எனக்கு எந்த அணிகள் மீதும் ஈடுபாடில்லை; எனக்கு சும்மா மக்களைப்பிடிக்கும். என்னோட தூரத்து உறவினர் ஒருவர் கால்பந்தாட்ட க்ளப்பில் வேலைச்செய்து வந்தார். அந்த க்ளப்பிற்கு எதிரி க்ளப்போடு ஆட்டமிருந்தது, தோற்கும் அணி ஒரு டிவிசன் கீழிறங்கும் நிலை. எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை; எனக்குச் சும்மா மக்களைப்பார்க்கவேண்டும். மேலும், அந்த அதிர்வையுணர்ந்து அதனுள்ளே ஆழ்ந்திருந்தேன். என்ன நடந்ததென்றால் என்னுடைய உறவினரின் அணி, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் தோற்றுப்போயிற்று. அவர் என்னை முதல் வரிசையில் உட்காரச்செய்திருந்தார் - எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். எனது ஆர்வம் அவ்வளவு அருவமாக இருந்தபடியால், அந்த இன்னொரு அணி ஜெயித்தபோது, களத்திற்குள் ஓடி அந்த வீரர்களைக் கட்டிப்பிடிக்க ஆரம்பித்துவிட்டேன் - அதன்பிறகு என்னுடைய உறவினர் பத்து வருடம் பேசவில்லை. ஏனென்றால், அவரைப் பொறுத்தவரை நான் ஒரு துரோகி. ஆனால் எனைப்பொறுத்தவரைக்கும், நான் ஆட்டத்திற்குப் போவது விளையாட்டு வீரர்களின் மகிழ்ச்சிக்காக மட்டும்தான். எப்பவெல்லாம் நான் ஆட்டத்திற்குச் செல்கிறேனோ நான் மகிழ்ச்சியானவர்களை மட்டுமே கவனிப்பேன். நான் அதனோடு ஒன்றாக முயன்றேன் சொல்லப்போனால் - என்னால் ஒன்றாக முடிந்தது. எனைப்பொறுத்தவரை அது இந்த முற்றிலும் கட்டாயமான அணி விஷயங்களுக்கு மேலான ஒன்றாகப்பட்டது. ஆனால் இதை என்னுடைய உறவினருக்கு எடுத்துச்சொன்னபோது, அவர் என்னைக் கொன்றேவிட்டார். அது என்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகக்கடுமையான அனுபவங்களில் ஒன்றாகும்.

சோபி: நான் உங்களிடம் கேட்கவேண்டும் எப்படி நீங்கள் எழுத்தைக் கையாளுகிறீர்கள் என்று, அல்லது உயிர் பிழைத்திருக்கிறீர்கள் என்று கூட, உங்கள் சொந்த நாட்டில் மோதல்கள் இவ்வளவு தீவிரமாக இருக்கும்போதும்.

கெரெட்: நான் உங்களுக்குச் சொல்லவேண்டும் இந்தச் சமீபத்திய மோதல்கள் ஆரம்பித்த பிறகு இரண்டு அபிப்ராயக் கட்டுரைகளைத்தவிர, நியூயார்க்கருக்கு ஒன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்க்கு ஒன்று; வேறொன்றும் எழுதவில்லை, இரண்டுமே ஹீப்ரு தினசரிகளில் முதலில் வந்தவை. அவையிரண்டும் மிக மொழியியலானவைகள். நான் நினைக்கிறேன் உண்மையில் ‘அமைதி’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது நிஜத்தில் அமைதி ஏற்படுவதற்கான சாத்தியங்களை அழித்து விடுகிறது. ’அமைதி’ என்ற சொல் பயன்பாட்டை நிறுத்தவேண்டும் அதற்குப்பதிலாக ’சமரசத்தை’ பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது, அது ஒரு உடன்படிக்கை, ஒரு ஒப்பந்தம்; ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறீர்கள். நான் உங்களிடம், ’நாம் காதல் செய்வோம்’ என்று சொல்கிறேன், இல்லை ’நாம் புணருவோம்’ என்று சொல்கிறேன், பின்பு ஒவ்வொரு விஷயத்திலும் வெவ்வேறு ஒப்பந்தம் நமக்கு இருக்கிறது. எனைப்பொறுத்தவரை, இஸ்ரேலில் ’அமைதி’ என்ற சொல்லே ஒரு விதமான மேசானிக் அம்சத்தோடு இருக்கிறது: அமைதிக்காக நீங்கள் பிரார்த்திப்பது. ஆனால் நீங்கள் ’சமரசம்’ என்பதைப் பயன்படுத்தினால் நீங்கள் எதிர்ப்பக்கத்தில் யாரோ இருப்பதைப் புறக்கணிக்க முடியாது; நீங்கள் எதையாவது விட்டுக்கொடுத்தால்தான் எதையாவது அடைய முடியும் என்பதைப் புறக்கணிக்க முடியாது. ‘அமைதி’ என்பது பரிசாக இருக்கலாம். எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாத சொல் அது. அது உங்களுடனும் இணைக்கப்படவில்லை, அவர்கள் பக்கத்திலும் இணைக்கப்படவில்லை.

சோபி: ‘அமைதி’ என்பது அதன் இயல்பிலே ஒப்பந்தமற்றது, நிபந்தனையற்றது என்பதும் ‘சமரசம்’ என்பது எப்போதும் ஒப்பந்தம் குறித்துப் பேசுவதும் என்பதைச்சொல்ல நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வீர்கள்.

கெரெட்: அடுத்து ‘சமரசம்’ என்பது கற்பனாவாத விஷயம் கிடையாது. இஸ்ரேலில் நமக்கு என்றுமே அமைதி ஏற்படாது என்று நிறைய மக்கள் கூறுவார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் எப்போதுமே நம்மை வெறுப்பார்கள். ஆனால் உங்களை வெறுக்கும் ஒருவரோடு நீங்கள் சமரசமாகலாம். அது ஒகே தான்! அவர்கள் உங்களை விரும்பவேண்டாம். நீங்கள் வெறுமனே ஒத்துக்கொள்ள வேண்டும் அதாவது இருவரும் ஒருவரையொருவர் கொலைசெய்து கொள்ள முயல்வதை நிறுத்துவோம் என்று, பிறகு எங்கயாவது கொஞ்சம் நீங்கள் செல்கிறீர்கள். நாம் வட்டங்களில் செல்வது குறித்தான உணர்வைப் பற்றியும் நான் எழுதியுள்ளேன், உண்மையில் அது வட்டங்களில் அல்ல, கீழ் நோக்கிய சுழற்சியில் செல்கிறோம். ஒரே புள்ளியை அடையும் போது, நாம் சொல்கிறோம் ‘ஓ, நாம் இங்கு முன்பே வந்திருக்கிறோம் என்று’. ஆனால் நாம் முன்பு இங்கிருக்க வில்லை; நாம் அதைவிட மோசமான இடத்தில் இருக்கிறோம். நான் இதற்கு ஒரு சான்று ஏற்படுத்த முயல்கிறேன். இந்த விஷயம் திரும்பத்திரும்ப நிகழுமொன்று போல் தோன்றலாம் ஆனால் அது உண்மையில் திரும்ப நிகழ்வது அல்ல அது சறுக்கல். நீங்கள் ஒரு தவறு செய்தால் மேலும் மோசமான ஒன்றைச்செய்தால், அது ஒரு பெருந்துன்பமானது. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்துகொண்டிருந்தால் அப்புறம்
மோசமான விஷயங்கள் நடக்கும், பிறகு உங்களின் களங்கமின்மையின் வாதம் இல்லாமலாகிவிடும். நான் கண்டிப்பாகச் சொல்லவேண்டும், எனக்குப் புனைவெழுத பிடிக்கும்; எனக்கு அபிப்ராயங்கள் எழுதப் பிடிக்காது. அது அப்படியே என்னை எழுத்தின்பால் கவரும் எல்லாவற்றுக்கும் அப்படியே நேரெதிரானது. எழுத்து குறித்து எனக்குப்பிடித்தமானது என்னவென்றால் அதற்கு நிஜ வாழ்வில் எந்தவொரு விளைவுகளும் கிடையாது. அபுனைவு ஊடே நீங்கள் இந்தப் பொறுப்புணர்வு என்ற எதிரியை அறிமுகப்படுத்துகிறீர்கள். எனது கட்டுரைக்கான மடத்தனமான மறுமொழிகளில் சில: “உனது குழந்தை கேன்சரில் சாகவேண்டுகிறோம்” அல்லது ‘‘உனது குழந்தையைப் பாராசூட் இல்லாமல் விமானத்தில் இருந்து காசாவின் மேல் தூக்கி எறியவேண்டும். அல்லது ‘உனது
புத்தகங்களையெல்லாம் எடுத்துக் குப்பைத்தொட்டியில்
தூக்கியெறிந்துவிட்டோம் ஏனென்றால் உன் பெயரை அட்டையில் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.’’ அப்படியாக அவையெல்லாம் ஒரு வித்தியாசமான உரையாடல். புனைவு எழுதும்போது, என்னமோ நான் காற்றிலே மிதப்பது போன்று இருக்கும். ஆனால் அபிப்ராயக்கட்டுரை எழுதுவது, நான் பாத்திரங்கள் கழுவுவது போன்றது. நான் அதை வெறுக்கிறேன் மேலும் அதைச் செய்வதற்கான ஒரே காரணம் எனக்கு வேறு தெரிவு இல்லை என்று உணர்கிறேன். வழக்கமாக எனது மனைவி என்னைக் கேலிசெய்வாள். ஒவ்வொரு காலையும் நான் எழுந்தவுடன் சொல்வேன் இந்த மாதிரி ஒரு எண்ணம் இருக்கிறது சினிமாவுக்காக, இசைக்காக, ஒரு டிவி தொடருக்காக, ஒரு செயலிக்காக; ஏதாவது ஒன்று, அது விஷயமல்ல. ஒவ்வொரு காலையும் அப்படிச்சொல்வேன், அது ஒரு சினிமா ஸ்டார் குடும்பக் கட்டுப்பாடு செய்யப் போவது பற்றிய கதை, டாக்டர் அவரது விதைகளைத்திருடி ரஷ்ய மாஃபியாகாரர்களிடம் விற்றுவிடுகிறார்… ஒவ்வொரு காலையும்! ஆனால் இந்தப் போர் ஆரம்பித்ததிலிருந்து, என்னிடம் ஐடியாவும் இல்லை எதுவுமில்லை.

எட்கர் கெரெட் சில துணுக்குக்குறிப்புகள்:

மூன்று கதைகளில் முதல் இரண்டு கதை “The Girl on the fridge” தொகுப்பில் உள்ள Asthma Attack மற்றும் The Girl on the fridge என்ற கதைகளின் தமிழாக்கம், மூன்றாவது கதை “Suddenly, a knock on the door” தொகுப்பில் உள்ள Unzipping என்பதன் தமிழாக்கம்.

உரையாடல் ‘Granta’ இதழில் வெளிவந்தது. http://www.etgarkeret.com/என்ற தளம் அவரது படைப்புகள் குறித்த அதிகார்வபூர்வ தகவல்களைக் கொண்டுள்ளது.

ஹார்ட்அட்டாகின்போதும் ஒரு கதை சொல்லிவிடும் திறன் கொண்டவராக, அன்றாடங்களின் அபத்தங்களை யதார்த்தம், மிகை யதார்த்தம் என முன்னோடி இலக்கியங்களின் வகைமைகளைக்கொண்டே தனக்கான தனித்த புனைவுகளை உருவாக்கிக்கொண்ட எட்கர் கெரெட், தான் கதைகள் சொல்வதற்கான அவசியமென்பது அடிப்படையில் நம்மைச்சுற்றியுள்ள யதார்த்தத்திற்கு ஒரு உருவம் கொடுக்கவேண்டிய அவசியமே ஆகும் என்கிறார், தற்கால உலக இலக்கிய அரங்கில் குறிப்பிடத் தகுந்த சிறுகதையாசிரியாகிறார். அவர் இஸ்ரேலைச்சேர்ந்தவர், ஹீப்ருமொழியில் எழுதுவது இன்னும் விசேஷமானது.

கெரெட்டின் ஒரு கதையில் ‘திடீரெனக் கதவு தட்டப்படுகிறது’ Suddenly, a Knock on the Door, அவர் கெரெட்டாகவே வருவார், துப்பாக்கி உட்பட ஆயுதங்களின் முனையில் அவரை இருத்தி ஒரு கதை சொல்லுமாறு ஒவ்வொருவரால் மிரட்டப்படுவார், அதற்கு அக்கதையில் அவர் சொல்லுவார், “நான் பந்தயம் கட்டுவேன் கண்டிப்பாக அமோஸ் ஓஸ், டேவிட் கிராஸ்மேன் போன்றோருக்கு இப்படியான விஷயங்கள் நடக்காது என”.

ஒரு யூதர், ஹீப்ரு மொழி, இஸ்ரேல் எனக் கெரெட் தொடர்பானவைகள் கொஞ்சம் ஆழமானவைகளாக, நமக்குக் கொஞ்சம் எட்டாத விஷயமாக இப்ப வரைக்கும் தொடர்கிறது. கெரெட்டின் கதைகளை வாசிக்கத்தொடங்கும்போது, அவரது படம், குறும்படங்களைப் பார்த்து முடிக்கும்போது, அவர் நமக்கு நம்மையே கதாப்பாத்திரங்களின் வடிவாகக் காட்டுகிறார் எனத் தோன்றும். கதையில் வரும் மனைவிகள் மற்றும் அவரது நண்பர்கள் என அவர்கள் அனைவரையும் தினமும் நான் சந்தித்துக் கொண்டிருப்பதாகப்படுகிறது.

நிலத்தை எழுதவில்லை? சடங்குகள் குறித்த போதிய குறிப்புகள் இல்லை? அவர்களின் மூதாதையரின் கதைகள் இல்லை? இப்படி நிறைய இல்லைகள். ஆனால் கெரெட் எழுதுவது புத்தம் புதிய இஸ்ரேலை, இஸ்ரேலின் மனிதர்களை, அவர் ஹோட்டலில் அமர்ந்து தெருவை வேடிக்கைப்பார்க்கும் காட்சி ஒன்று அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் வருகிறது (Etgar Keret : Based on a True Story), ஒரு கையில் காப்பிக்கோப்பையுடன், செய்தித்தாளை அதே கைகளுக்கிடையே சொருகிக்கொண்டு நிற்கிறார் ஒருவர், அவரை, அந்தக் கிழவனை மொத்த மனித இருப்பிற்கான உருவகமாகச் சொல்லுகிறார் கெரெட். ஒவ்வொரு முறை காப்பி அருந்தும் போதும் அந்தச்செய்தித்தாள் கீழே விழுந்தபடியிருக்கிறது, அவரும் மீண்டும் மீண்டும் எடுத்து அதே கைகளுக்கிடையில் சொருகிக்கொள்கிறார். மீண்டும் மீண்டும் தன் தவறை உணராமல் தொடர்ந்து அதே செயலில் ஈடுபடும் அவரை நம் எல்லாருக்கும் தெரியும் என்கிறார், அவர் தான் நாம், அவர் தான் நான் என்கிறார் கெரெட்.

தனது நண்பனான உசியைப் பெரும்பான்மையான கதைகளில், ‘நிம்ராத் நிலைபிறழ்’(The Nimrod Flipout) என்ற அவரது புகழ் பெற்ற கதை உட்பட, கதாபாத்திரமாக்கியிருக்கிறார். இன்னொரு முன்னோட்டத்தில், உசியை நமக்கு அறிமுகப்படுத்தும்போது வலிகளை உணராத ஒருவரென்று சொல்லிவிட்டு அவர் கழுத்தை நெறிப்பது, ஓங்கி ஒருவர் மாற்றி ஒருவர் அவரைக்குத்துவது என நண்பர்கள் அனைவரும் பெரும் கலாட்டா செய்கிறார்கள். பெரும் நகைச்சுவையாளரான கெரெட் தனது உரைகளில் அரங்கம் அதிர அதிர வாசகர்களைச் சிரிப்புக்குள்ளாக்குகிறார்.

ஐம்பது வயதான கெரெட்டின் இந்தக் குணாம்சம் அவரை அரசியலற்றவர், ஆழமற்றவற்றவர், மேம்போக்கானவர், ‘நீங்கள் ஓரங்களில் இருந்து’ பார்ப்பவர், காலையில் அலுவலகத்துப்போகிற போக்கில் ஒரு கதையெழுதுபவர், போன்ற விமர்சனங்களுக்கும் ஆட்படுத்தியுள்ளது. ஆனால் இயல்பாக ஒன்றின் மேல் இருக்கும் ஈர்ப்பை மிகப்பெரும் ஆற்றலாக வார்த்தெடுத்தன் வாயிலாக, யூதனாகப் பிறந்ததாலும் இஸ்ரேலில் வாழ்வதாலும் தன்னிடம் எதிர்ப்பார்ப்பவற்றிற்குச் சீரிய பாவனைகள் ஏதுமின்றித் திறந்த மனதோடு உரையாடுவதன் மூலம் கெரெட் - ஃப்லாஷ் ஃபிக்ஷன் , மைக்ரோ நரேசன், போன்ற வகைமை, யுத்திகளைத்தாண்டி மனிதர்களை எழுதும் உணர்வாளனாகப்படுகிறார்.

எட்கர் கெரெட்டின் படைப்புகள்:

Suddenly, a Knock on the Door
The Girl on the Fridge
Missing Kissinger
The Nimrod Flipout
The Bus Driver Who wanted to be God & Other Stories
Knellers Happy Campers
The Seven Good Years ( A Memoir)
Jellyfish (திரைப்படம்)

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer