ஊசியும் நூலும்
A Suit for Damages

ஹொனாரே தெ பல்ஸாக் தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி

பகிரு

போர்த்தியோன் நகரத்து நீதிபதி மேதாவியானாலும் கொஞ்சம் குஷியான பேர்வழி. பணிப் பெண்ணாக அவர் வைத்துக்கொண்ட, உருண்டு திரண்ட ஸ்தனங்களைக் கொண்ட ஜாக்குலின் என்ன மாதிரியான வேலைகளைச் செய்தாள் என்று அந்த ஜில்லாவில் இருந்த எல்லாருக்குமே தெரிந்திருந்தது. ஆனாலும் போர்தியோன் நகரத்து மக்களுக்குத் தாராள மனது: அந்த நல்ல மனிதரின் நீதிபரிபாலனத்தைப் பெரிதாக நினைத்து, அவர் குஷியாக ஓய்வு எடுத்துக்கொள்வதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

ஒரு நாள் காலை குஷிப்பேர்வழியான அந்த நீதிபதியின் அலுவலக அறையில், வாளிப்பும் வசீகரமும் நிரம்பிய இளம்பெண் ஒருத்தியைக் கண்டதும் அவருக்குச் சந்தோஷ போதை தலைக்கு ஏறியது. முந்தைய இரவில் ஜாக்குலின் அவருக்குப் பரிபூரணமாகச் சேவை செய்திருந்த போதிலும், ரத்தம் சூடேறி மேலிட்ட கிளர்ச்சியை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. “குட்மார்னிங் டியர்” என்று மெல்லச் சிரித்தபடியே, அவருடைய சுபாவப்படி அப்பெண்ணைக் கட்டித் தழுவி கொண்டார்.

“மைலார்ட்!” என்று அலறியபடியே அவருடைய தழுவிலில் இருந்து வேகமாக விலகி வெளிவந்தாள். “நான் உங்களிடம் பிராது கொடுக்க வந்திருக்கிறேன். இது மாதிரி எனக்கு நேர்ந்ததைப் பற்றி விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும்படி கேட்க வந்திருக்கிறேன்”.

“இந்த மாதிரி நேர்ந்ததா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார். “இது அற்புதமான விஷயம் அல்லவா! சொர்க்கத்துக்கு நிகரான சந்தோஷமான விஷயம் அது; எப்போதும் நினைத்து ஆனந்தப்படுவதுடன், அந்த அனுபவத்தைத் தந்தவனுக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டுமே ஒழிய, அதைப் பற்றிப் புகார் கொடுக்க வந்திருக்கிறாயே, பேதைப் பெண்ணே! உலகம் புரியாத முட்டாளாக இருக்கிறாயே... சரி சரி, என்ன நடந்தது சொல்லு. நீ யார்? அந்த மனிதன் யார்? அவன் செய்த காரியத்தில் என்ன புகார்? ம் ம் ?”

“ஐயா, நான் துணி வெளுக்கிறவள். அந்த ஆள் சீர்துய்ஃஉ செய்த காரியம்...”

“சீர்துய்ஃஉ ஆ? ராஜாவின் அரண்மனைக் காரிய தரிசியா? முட்டாள் பெண்ணே, நன்றிகெட்ட தனமாக அந்தக் கனவான் மீது புகார் சொல்கிறாயே?”

“மை லார்ட், அவர் என்னைக் கட்டாயப் படுத்தினார்...” சிணுங்கினாள் அவள்.

“கட்டாயப்படுத்தினாரா? நம்ப முடிய வில்லையே!” என்றவர், “சரி சரி மேலே சொல்லு” என்றார்.

சீர்துய்ஃஉ சில துணிகளை வெளுக்க அவளிடம் கொடுத்ததையும், வெளுத்த துணிகளை அவர் வீட்டில் போய்த் திருப்பிக் கொடுத்ததையும், அதற்கு உரிய கட்டணத்தைக் கேட்டபோது, அதுவரை அவளுக்குக் கிடைத்திராத, மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தரப் போவதாக அவன் சொல்லியதையும் அந்த அழகிய சலவைக்காரி சொன்னாள். அவன் பூடகமாகச் சொன்னது தங்கமோ வெள்ளியோ அல்ல. அவன் கொடுப்பதாகச் சொன்ன பொக்கிஷத்தைத் தருவதற்கு அவனுக்கு முப்பது நிமிஷத்துக்குக் குறையாமல் ஆனது.

அபிநய பாவனைகளோடு அந்தச் சலவைக்கார சுந்தரி வருணித்தவற்றை இங்கே வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. அம்மாதிரியான கிளுகிளுப்பான கதைகளைக் கேட்பதில் ஆர்வமாக இருக்கும் நீதிபதியும் சுவாரஸ்யத்தோடு எல்லாவற்றையும் கேட்டுவிட்டுச் சொன்னார்: “ஜாலியான கதையா இருக்கே! கேட்டதுமே எனக்குக் குஷியாயிடுச்சி... ஆமாம், உனக்குக் கட்டணமாகத் தரப்பட்ட அற்புதமான விஷயத்தினால உனக்குச் சந்தோஷமே கிடைக் கலையா?”

“ஆமாங்க, எனக்குத் துளியும் சந்தோஷமே கிடைக் கலை; பணமும் கிடைக்கலை. அதனால அந்தக் கனவானிடம் இருந்து நஷ்டஈடா ஆயிரம் க்ரவுன் வாங்கிக் கொடுங்க.”

“துளியும் சந்தோஷம் இல்லியா?” யோசித்தார் நீதிபதி. சீர்துய்ஃஉ துடிப்பாகக் காரியம் செய்கிற அனுபவஸ்தன். பெண்களைப் பரவசப்படுத்துறதுல என்னை மாதிரியே கைதேர்ந்தவன். காதல் களியாட்டத்தில கில்லாடி. இந்தப் போர்தியோன் நகரத்தில இருக்கிற பணிப்பெண்கள் எல்லாருமே அவன் கட்டணம் கொடுத்தமாதிரி கிடைக்காதா என்று ஏங்குவாங்கஞ் நீ என்னடான்னா சந்தோஷம் துளியும் கிடைக்கலை என்கிறாய். நம்ப முடியலையே!”

“மைலார்ட்...” என்று சாந்தமாகச் சொன்னவள், “அதுமாதிரி கொடுக்கிற எல்லா நேரத்திலேயும் ஒரு பெண்ணுக்குச் சந்தோஷம் இருக்குமான்னு உங்க அபிமானச் சுந்தரி ஜாக்குலினிடம் கேட்டுப்பாருங்க” என்றாள்.

“சரி, கேட்கிறேன்” என்றவர், மேஜை மீதிருந்த மணியை ஒலிக்கவும் ஜாக்குலின் அங்கே வந்தாள். சலவைக்காரியின் கேள்வியை அவளிடம் கேட்டார் நீதிபதி. ஜாக்குலின் அதற்குப் பதில் சொன்னாள்:

“சார், அதுமாதியான களியாட்டங்களில் எனக்குரொம்பவும் இஷ்டம். அதனால எனக்கு எப்போதும் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது. ஆனா நிஜத்தைச் சொல்லணும்னா, சின்னப்பொண்ணா இருந்தப்ப அந்தமாதிரி காரியம் பண்ணும் போதுஎனக்கு வலி ஜாஸ்தியா இருந்தது. இந்தச் சலவைக்காரிக்குச் சீர்துய்ஃஉ-விடமிருந்து சந்தோஷம் கிடைக்கவில்லை என்றால், அவள் சொல்ற மாதிரி கட்டாயப்படுத்தி இருக்கலாம்.”

“தேங்க் யூ மை டியர்” என்று ஜாக்குலினை அனுப்பிவிட்டு, “கட்டாயப்படுத்தினதா நீ சொல்வதை நிஜமான்னு நான் கண்டுபிடிக்கணும்” என்று சொன்னார். “ஒரு ஊசியும் கொஞ்சம் நூலும் கொண்டு வாங்க” என்று உத்தரவு போட்டார்.

ஊசியும் நூலும் வந்ததும், சலவைக்கார சுந்தரி யிடம் நூலைக் கொடுத்துவிட்டு, ஊசியைத் தன் கையில் வைத்துக்கொண்டார். “இப்ப நீ இந்த ஊசியில உன்னோட நூலைக் கோக்கணும்.”

“எதுக்கு மை லார்ட்?”

“எல்லாம் காரணமாகத்தான். நான் சொன்னபடி செய். நான் பிடிச்சிருக்கிற ஊசியின் காதில் உன் கையில இருக்கிற நூலைக் கோர்.”

தோளைக் குலுக்கிக்கொண்ட அந்தச் சலவைக் காரி கவனமாக நூலை ஊசியின் அருகே கொண்டுபோனாள். ஊசிக்குப் பக்கத்தில் அவள் நூலைக் கொண்டு போனதும் நீதிபதி மெல்லத் தன் கையை அசைத்தார். திரும்பவும் அவள் முயன்றாள். இந்தத் தடவையும் நீதிபதி தன் கையை ஆட்டினார். மூன்றா வது தடவை அவள் முயன்றபோதும் அதுமாதிரியே நடந்தது. எரிச்சலான அவள், “நீங்க ஊசியை அசைக் காம பிடிச்சிக்கிட்டு இல்லேன்னா, என்னால அதில நூலை நுழைக்க முடியாது” என்று இரைந்தாள்.

நீதிபதி வெற்றிக்களிப்போடு சிரித்தார். “சரியாய்ச் சொன்னாய் பெண்ணே! நீயும் இந்த ஊசிமாதிரி இடம் கொடுக்காம இருந்திருந்தா சீர்துய்ஃஉவால் எதுவும் செய்திருக்க முடியாது. அவர் கட்டாயப் படுத்தினார்னு சொல்கிறாய்... கதையளக்கிறாயா?... இந்த மாதிரி விஷயங்களில் கட்டாயப்படுத்தினது பற்றி விசாரிக்க எனக்கு இனியும் பொறுமை இல்லை. உன்னுடைய புகாரை நிராகரிக்கிறேன்”.

“மைலார்ட், கொஞ்சம் பொறுங்க. நீங்க நிதானமா ஆராயவில்லை” என்றாள் மென்மையாக. “எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்க. நூல் நேரா இல்லாமல் தளர்வா இருந்தால் திறமையான தையல்காரிக்கும் கூட ஊசியில கோர்க்கிறது கஷ்டமாக இருக்கும்ன்னு அவங்க சொல்றதைக் கேட்டிருக்கிறேன்”

“அப்படிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அப்புறம் வேறு என்னவெல்லாம் தையல்காரப் பெண்கள் சொல்லியிருக்காங்க?”

“கொஞ்சம் மெழுகைத் தடவி இந்தமாதிரி நூலை நேராக்கிட்டா வேலை சுலபமா முடிஞ்சிடும். மைலார்ட், எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்க.”

அந்தப் பெண்ணின் சாதுரியமான பேச்சு நீதிபதி யைக் கவர்ந்துவிட்டது. எனவே மறுபடியும் ஊசி யைக் கையில் வைத்துக் கொண்டார். இந்தமுறை உடனடியாக நூலைக் கோர்க்க முயற்சி செய்யாமல், ஊசியைப் பார்த்து நைச்சியமாக உருகிவழிகிற மாதிரி பேசினாள்: “ஆஹா, என்ன அருமையான ஊசி நீ. ரொம்ப மெலிஞ்சு இருந்தாலும் விறைப்பா நேரா இருக்கிற உன் அழகே அழகு. எதற்கும் வளைஞ்சு கொடுக்காத உன்னோட காது என்னை அப்படியே இழுக்குது! அருகே வா, அழகான ஊசியே உன்னைக் கெஞ்சுகிறேன்”. அவளுடைய வார்த்தைகளால் கிறங்கிப்போன நீதிபதி ஊசியை அவளுக்குப் பக்கமாகக் கொண்டுவந்தார். சட்டென்று அவருடைய மணிக்கட்டைப் இறுகப் பிடித்துக்கொண்டாள். அழகான ஊசியே இப்ப என்கிட்ட வந்திட்டியா” என்று கொஞ்சியபடியே மெழுகுகைத் தடவிநேராக்கி வைத்திருந்த நூலை அதன் காதில் கோர்த்து விட்டாள்.

போர்தியோன் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள விவரங்களின்படி சலவைக்காரப் பெண்ணுக்குச் சீர்துய்ஃஉ நூறு கிரவுன் நஷ்டஈடு தந்ததாகத் தெரிகிறது; அந்தப் பெண் கேட்டதுபோல் ஆயிரம் கிரவுன் கிடையாது. ஆனாலும் ஆவணங்களில் குறிப்பிடப்படாவிட்டாலும், காதில் விழுந்த செய்திகளின்படி, நீதிமன்றத்தின் மற்ற ஒன்பது நீதிபதிகள் தாம் பெற்றுக்கொண்ட சேவைக்காகத் தலா நூறு கிரவுன் தம்  பங்காகக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer