உளக் கண்ணிலிருந்து திறவுகொள்ளும் அறைகள்:
கி. சரவணன் ஓவியங்கள்

ஞா. கோபி

பகிரு

பழங்காலத்தொட்டே, மிகச் சிறந்த ஓவியங்கள் எல்லாம், இந்தப் பிரபஞ்சத்திலிருந்து தன் குறிக் கோளை சரிவர நிறைவேற்றக்கூடியவை எவைகளோ அவைற்றையெல்லாம் எப்போதும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறாக இயற்கை தனித்தனியான இடங்களில், சூழல்களையும், சிறப்புப்பண்புகளையும் எப்போதும் பரப்பி வைத்திருக்கிறது. அவற்றை உளக்கண் வழிநோக்கும் கலைஞர்கள் நுண்நயம் கொண்ட அந்தக் கணத்துச் சேர்க்கை களிலிருந்து மகிழ்வூட்டும் பல உண்மைகளைக் கண்டடைகிறார்கள். ஆகையால்தான், படைப்பு மனம் எப்போதும் வறட்டுத்தனமாக நகல் எடுப்பதைத் தவிர்த்து அதில் தன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தவே விரும்புகிறது. அந்த விருப்பத்தின் காரணமாகவே ஓவியர்கள் நம்பும் வெளிப்பாட்டு வகைமைகள் வழி, புதிய கண்டுபிடிப்பாளனாகவும் ஆகிவிடுகிறார்கள்.

அவ்வகையில், உலகெங்கிலும் உள்ள தற்கால ஓவியர்களின் படைப்புகள், அப்படைப்புகளில் ஈடுபடும் செயல்கிரமங்கள், (Process) வண்ண விநியோகம் நிகழ்த்தும் கணங்கள் மற்றும் இயங்குவெளியைக் கட்டமைப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் குவிக்கத் துவங்கியுள்ளது. அச்செயல் பற்றி இன்னும் எளிமைப்படுத்திச் சொல்வோம் எனில், ‘அச்செயல்கிரமத்தில் அக்கலைஞர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் தன்னுரையாடல்களைப் பெரிதும் விரும்பியே, அப்படைப்புச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.’ இதை அறிவியல்பூர்வமான சான்றுகளுடன் நோக்குவோமெனில்,

“மனிதர்களின் ஒவ்வொரு அனுபவமும் அவர்களின் மூளைச் செயல்பாடுகளில் ஒவ்வொரு நினைவகத்தை உருவாக்குகிறது. அது நீடிப்பது என்பதுஅவை உருவாகும் கணத்தில் எவ்வளவு திருத்தங் களைச் சந்திக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது.”

– Jo Hemmings, How Psychology Works.

இந்தத் திருத்தங்களே கலைஞர்கள் முன்வைக்கும் தன்னுரையாடல்கள். அந்த உரையாடல்களே, பார்வையாளர்களிடத்தின் முன் வந்து சமூக உரையாடல்களுக்கு வழி சமைக்கிறது. அவ்வகையில், புதுச்சேரியின் கிருமாம்பாக்கம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் கி.சரவணன் படைப்புகள், அந்தத் தன்னுரையாடல்களின் வலிமையையும் வெளிப்பாட்டு வகைமைகளையும் நமக்குஉணர்த்தும் சான்றுகளாக இருக்கின்றன. கி.சரவணன், புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில், வண்ணவியல் துறையில் இளநிலைப் பட்டப் படிப்பிலும், முதுகலைப் பட்டப்படிப்பினை ஆக்ரா,அம்பேத்கர் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். “அந்தப் பயின்முறை காலங்களில் கிடைத்த செயல்பாட்டு அனுபவங்கள், பங்கேற்ற ஓவிய முகாம்கள், கண்காட்சிகள், சமூக வாழ்வியல் மற்றும் தற்போது பணிபுரியும் பள்ளிக் குழந்தைகளிடத்திலிருந்து கற்றுக்கொள்ளும் வெளிப்பாட்டுச் சுதந்திரங்கள் போன் றவை எல்லாம் கலந்ததே என் படைப்புகள்” என்று சொல்லியபடியே சமீபத்திய படைப்புகளைக் காண்பிக்க அழைத்துச் செல்லும் இயல்பானவராய் நம் முன் இயங்குகிறார்.

அதே சமயம், அங்கு நாம் காணும் கி. சரவணனின் படைப்புகளோ நம்மை, நம் இயல்புநிலையிலிருந்து மெல்ல அகற்றி, நம் நினைவோடைகளில் ஆழ்ந்து பயணிக்க உந்துகிறது. அந்தப் பயண அனுபவம், நம் உள்ளத்தின்பால் ஒரு புதிய சீரமைப்பை ஏற்படுத்தத் தொடங்குகிறது. அத்தகைய படைப்புகளைப் பற்றிப் பேசுவது என்பது கூட நுண்ணிய மனித அசைவுகள் பற்றிய உரையாடல்களாகவே அமையும்என்பது என் எண்ணம். இவரது படைப்பு வரிசை யில், 2003 – 2006 ஆம் ஆண்டுக் காலங்களில் முழுக்க அடிப்படைப் பயிற்சி வகைகளைச் சார்ந்த ஓவியங்களே அதிகம் உருபெற்று இருக்கிறது. அதே சமயம், அந்த ஓவியங்களிலும் இவர் தனக்கான வெளியைக் கண்டடைய, அச்சமற்ற வெளிப்பாட்டு முறைகளில் பயணிக்கவும் தொடங்கி இருக்கிறார். அதே நேரம் அப்படைப்புகளிலேயே அவருடைய இயங்கு நுட்பங்களைக் கண்டடைந்திருப்பதும் புலப்படுகிறது. அதற்கு, சில படைப்புகள் சான்றாக இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்வதாயின், அத்தகைய படைப்புகளில், நுண் படிமங்களைக் கொண்ட படைப்புக்கான வெளி ஒன்றினைக் கண்டடைவது என்பதும். அவ்வெளியில் ஒரு கலைஞனாகப் படைப்பு மனோநிலையில் பயணிக்கும்போது, வண்ணங்களின் ஒளிகள் மற்றும் வெளிகளின் அடர்த்தி கள் போன்றவற்றில் வினையாற்றும் போதும் ஏற்படும் உணர்வை, அதே செயலில் இறக்கியும் வைத்திருக்கிறார் என்பதும்தான். ‘ஏரிக்கரையின் பார்வை வெளி’ எனும் ஓவியத்தில், அந்த வெளியைப் பார்க்கும்பொழுது ஏற்படும் மன உணர்வானது அதற்கான வண்ணங்களை அவர் தீட்டிய அளவுமுறைகளின் வழியாகப் பார்க்கும் நமக்கும் கிடைப்பதை உதாரணமாகச் சொல்லலாம். அதுபோல் ‘கடல் நிலம்’ எனும் ஓவியத்தையும் குறிப்பிடலாம். அதில் அந்தச் சூழலில் முக்கிய விளைவை ஏற்படுத்தும் காற்றின் வேகத்தினுடைய உணர்வு, அப்பரப்பில் இருக்கும் தாவரங்கள், மணல் மற்றும் நீரில் தெரியும் விதமாகத் தீட்டப்பட்டிருக்கும். அந்த நுட்பங்கள்தான் கவனிக்கத்தக்கவை.

“இயற்கையின் இருப்பைப் பார்த்த பின்னர் அதை அப்படியே நகலெடுக்க வேண்டாம். கலை என்பது அரூபங்களின் கூட்டியக்கமாகும்: இயற்கையிலிருந்து கலை படைப்பதாய் இருந்தால், அதற்கு முன், உள்வாங்கிய நிலையிலிருந்து கொண்டே கனவு காணுங்கள். மேலும் இறுதி முடிவைவிட உருவாக்கும் நேரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் தன்னுரையாடலில் அதிகக் கவனம் செலுத்துங்கள்” எனச் சொன்ன பிரெஞ்சு ஓவியர் காகின் அவதானிப்போடும் கி. சரவணனின் ஆரம்பக் காலப் படைப்புகள் ஒப்பு நோக்கத் தக்கதாய் இருக்கிறது. மேலும் இந்தப் பண்புகளின் புரிதல் இவரிடத்தில் பலப்பட்டு இருப்பதை, முற்றிலும் கற்பனை ரீதியிலான படைப்பு வரிசைகளில் பல்வேறு நிலைகளில் காண முடிகிறது. அதில், ‘காகிதக் கப்பல்’ ஓவியம், நம்மை நம் நினைவுகளோடும் காட்சிச் சலனங்கள் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சந்திக்கவும் செய்கிறது. அதில் குறிப்பிடும்படியான கூறுகள் சிலவற்றுள் கடலும் வானும் எவ்வித மாறுபாடுமின்றி ஒரே அளவிலான நீல வண்ணத்தில் தீட்டப்பட்டிருப்பது. மேலும் அந்தப்பரப்பின் நடுவில் நிற்கும் கப்பல், காகிதத்தால் செய்யப்பட்டது என்பதுதான் அது. இந்தக் காரணிகள், பார்ப்போரை தத்தமது சிறு பிராயத்து நினைவு களை மீட்டெடுக்க வல்லவர்களாக ஆகிவிடச்செய்கிறது. மேலும், காகங்கள் மற்றும் மணற்கீறல்கள் ஆகியவை அந்தக் கடற்பரப்பு மட்டுமின்றி, விளையாட்டுச் சார்ந்த எந்தவொரு நிலங்களையும் நினைவு மீட்டும் வாய்ப்புகள் அதிகம் பெற்ற கூறுகளாய் இப் படைப்பில் மிளிர்கிறது.

அதுபோல், அக்காலக்கட்ட வரிசையில் படைக்கப் பட்ட, ‘கருப்பு நாய்கள்’ ஓவியம் கி.சரவணனுடைய முந்தைய படைப்புகளிலிருந்து குறியீடுகள் மற்றும்வெளிகளின் வினையாற்றல் பற்றிய புரிதல்களிலும் வளர்ந்தெழுந்து புதியதொரு பரிமாணங்களை எட்டியது என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்ள லாம். மனிதர்களின் நினைவு அறைகள் ஒவ்வொன் றையும் கரிய நிற நாய்களாக்கி, அந்த நாய்களிலும் தாய்மை, நோய்மை, கொண்டாட்டம், மரணம் எனநீளும் வாழ்வின் சில அறைகளைத் திறந்துப் பார்க்கிறார். மனித வாழ்வின் முதலும் இறுதி நம்பிக்கை யுமான அன்பு பகிர்தலை, மஞ்சள் ஆறாக, அந்தக் கரிய நாய்களின் இடையில் பாய்ந்து செல்லும் வகையில் கி.சரவணன் ஏற்படுத்திய படிமம், உளவியல் விசாரணைகளின் பெரும் மையம். மேலும், ‘என்னுடைய நீலநிறப் படகு’, ‘ஏக்கம்’, ‘வட்டம்’, ‘தாய்மை’ என்ற தலைப்பிட்ட ஓவியங்கள் இதுவரை ஓவிய வெளிப்பாடுகள் கண்டிராத புற வடிவவியலைக் கொடுக்கிறேன், என்ற இவர், அக வடிவவியலை முந்திச் செல்லாமல், தன் படைப்புகளைப் பார்க்கும் பார்வையாளர்களுக்குச் சாதகமாகப் பொதுமைப்படுத்தலின் இடமாற்றங் களை ஒவ்வொரு படைப்பிலும் வெவ்வேறாகக் கட்டமைத்து அந்தந்த பரப்புவெளிகளில் பயணித் திருக்கிறார். அத்தகைய தெளிவை நோக்கி, இவர்நகர்ந்திருந்த காரணத்தால் இந்த ஓவிய வரிசைகளில், வெளிகளை முற்றிலுமாக நிரப்பி விடாமலும் படிமங்களை உணர்வதற்குச் சிரமம் ஏற்படுத்தாமலும் வினையாற்ற வழி கண்டவராகவும் மாறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக ‘தாய்மை’ ஓவியத்தில் கர்ப்ப முற்ற பெண் வயிற்றினை அல்லி மலர்கள் நிறைந்தகுளமாக உருவகித்து இருப்பார். அதற்கு மேல்அந்தக் குளத்தில் வேறெந்த விவரமும் இடம்பெறச்செய்யாததன் வழி, நம் பார்வையாள மனோபாவத் திற்கு நல்லதொரு சுதந்திரம் உருவாக்கித் தருகிறார். அதனால் நாம் அந்தக் குளத்தின் உள்ளே இன்னும் என்னவெல்லாம் இருந்து அசையும் என்ற ஆவலைப் பிடித்துக் கொண்டு நம் நினைவோடைகளின் அறைகளை, நம் அனுபவச் சாவி கொண்டு திறக்கத் தொடங்குகிறோம்.

‘வட்டம்’ ஓவியத்தில் இருநாய்கள் புணர்ச்சி கொள்ளும் நிலையில் தத்தமது எதிர் திசையை நோக்கியபடி இருக்கும். அந்தப் பார்வைகளில் இணைப்பை நாம் ஏற்படுத்திக்கொள்ளும்போது அங்கு வட்ட வெளியினைக்கொண்ட நீர்நிலை நோக்கி நகரத் தொடங்கு கிறோம். இத்தகைய நம் மன வழியிலான நகர்விற்குத் துணை செய்யும் காரணியைத்தான் கலைவல்லுனர்கள் ‘அசைவுக் குறிப்பு’ (key for movement) என்கின்றனர். அந்த அசைவுக் குறிப்பை கி.சரவணன்தன் படைப்புகளில் பொருத்தும் திறனுக்கு மிக முக்கிய உதாரணமாக ‘நினைவுப் புதையல்’ எனும்படைப்பைக் காணலாம். திறந்த வெளியில் காட்சியாகும் ஒருவன் சிவப்பு வண்ணத்தில் பல அறைகளைக்கொண்ட ஒரு பெட்டகத்தை இரு கைகளாலும் ஏந்தி தன் மார்போடு அணைத்துக்கொண்டிருப்பான். ஒவ்வொரு அறைக்கும் சாவி துவாரம்இருக்கிறது. அதனால் திறப்பது எனும் செயலுக்குப் பார்ப்போரை உந்தித் தள்ளுகிறது. அந்த அறைகளின்மேல் தீட்டப்பட்டிருக்கும் எளிய கோட்டோவியங் கள், மரம், நிலம், நீர், விலங்குகள், மனித உணர்வுகள் போன்றவைகள் எல்லாம் பார்வையாளர்களின் நினைவுகாலத்துப் பயணத்திற்கு உதவுகிறது. மேலும்நினைவுகளின் பெட்டகத்தைத் தன் மார்பில் அணைத்தபடி இருக்கும் அந்த மனிதனின் உடலே, நினைவில் உருவானதான உருவகமாக மாறி காட்சிவழியிலான தத்துவ உரையாடல்களுக்கான களன்களை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. இதன் வழிமனித மனம், உணர்வியல் அனுபவம் கொள்ளத் தன்னைத் தானே தயார்படுத்தவும் தொடங்குகிறது. அதாவது, மனித வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு முக்கியமான பொருண்மையை, ஒருவர் காட்சி மொழியின் வழி உருவகமாகப் படைக்கும்பொழுது, அவைகள் ஒன்று மட்டுமே என ஆகிவிடாமல் பல மாறுபட்ட இழைகளின் யோசனையை அது கொண்டிருக்கவேண்டும், அதிகபட்சம் பல காலங்களை இணைக்கும் இணைச்சரடாக இயங்குவதை உறுதியாகச் செய்யவேண்டும். அந்த உறுதி என்பது, அப்படைப்பில் இடம்பெறும் கோடுகள், வண்ணங்கள் மூலம் ஒரு மையத்தை உருவாக்கியும் இருத்தல் வேண்டும். அத்தகைய முக்கியக்கூறுகளையெல்லாம்தான் கி.சரவணனின் படைப்புகள் நமக்குக் காட்சி மொழியில் தருகின்றன.

2010 ஆண்டிலிருந்து தற்போது வரை கி.சரவண னின் வெளிப்பாட்டு ஓவியங்கள் பல்வேறு புதியதளங்களைக் கண்டடைந்து உள்ளன. அதே சமயம்,முன் போலவே அக்ரிலிக் வண்ணங்களையே (acrylic paints)  இவர் பயன்படுத்தினாலும், இந்தப் பத்தாண்டுகளின் ஓவிய வரிசைகளில் இவர் படைத்திருக்கும் ஓவியங்கள், அதன் கட்டமைப்பில் பலஅசையும் கூறுகளைக் கண்டுகொண்டதாக அவற்றைப் பார்க்கும்பொழுது உணர முடிகின்றது. அவ்வகையில் ‘உணர்வுகள்’ என்ற தலைப்பிலான ஓவியத்தைக் காணும்போது நம் மன அசைவை எவ்விதங்களிலெல்லாம் பயணித்துச் செல்கின்றன எனில், பெருவெளியில் எதார்த்த பாணியில் ஒரு பெண் தனியே அமர்ந்திருப்பதாகவும் அவர் எதிரிலிருக்கும் அல்லி மலர் பூத்த திட்டைப் பார்த்தவாறும் இருப்பார். அங்கிருந்து அவ்வோவியத்தின் அசைவானது நம்மை அவருடைய பின்னால் இடம் பெற்றிருக்கும், விளைநிலம் நோக்கி அழைத்துச் செல்கிறது. அந்த நிலம் குருதியின் சாயலை ஒத்திருப்பது அவ்விடத்திலிருந்து தொடங்கும் மற்றொரு அசைவு.அந்த அசைவின் நகர்வாக அந்த நிலம், அப்பெண்ணின் பார்வைக் கோடு இருக்கும் வானம் நோக்கி எழுந்து சுழல் கொண்டு பயணிக்கும் செயல் அசைவை நோக்கி அழைத்துச் சென்று விடுகிறது. அதுவே உச்சம். அதன்பின் பார்வையாளனான நான்,என் சார்ந்த இயற்கையோடு இயைந்த வாழ்வு அனுபவத்தில் தன்னிலை மறந்து கலக்கிறேன். பெண்உடல், மனம் என்னிலிருந்து எழும்பி என் நிலையென நம்பும் பால் பேதமையைக் கடக்கிறேன். இப்படி,ஒரு சிறிய அளவிலான தரவுகளிலிருந்து இயற்கையின் ஒரு அங்கமான மனித இருப்புகளைப் பற்றிய அனுமானங்களைச் செய்ய ஒரு மனிதனை இப்படைப்பு அனுமதிக்கிறது என்பதே சமூக மேம்பாட்டுக்கான வழிகோல்தான்.

அதுபோல், இவ்வரிசையில் ‘பார்வை’, ‘வெள்ளை அல்லி’, ‘ராணி’, ‘கப்பல் நகரம்’, ‘பெண் வனம்’, ‘தொடுதல்’, ‘புத்த ரேகை’ போன்ற ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல புது மொழிகளில் நம்மை அனு பவம் கொள்ளச் செய்கிறது. இப்படைப்புகள் மூலம்கி.சரவணன் அவருக்கேயுறிய உளவியல் இயக்கத்தை உருவகப்படுத்தினாலும், அவை வடிவமாக, பார்வையாளர்கள் முன் இயக்கம் கொள்வதென்பது என்பதையும் மிகத் தீவிரமாகக் கவனித்துச் செயல்படுகிறார் என்பதும் உறுதியாகிறது. ‘தொடுதல்’ எனும் ஓவியம் ஒரு கனவினை நினைவுபடுத்திக்கொள்ள மனித இயக்கம் எத்தகைய பிரயாசைப்படுகிறது என்ற பெரும் கேள்வியை நம் கண்முன் ஏற்படுத்துகிறது. அதற்கெல்லாம் பழக்கப்பட்டு இருக்கும் நம் கண்ணை, மீண்டும் தூண்டிவிடுகிறார். அதாவது மனித சிந்தனா சக்தி எனும் உளவியல் கலவையைச் சுற்றிநகர்த்துவதற்காக நம் இரண்டு விழிகளின் துணை கொண்டு மயக்கம் தரும் வண்ணங்களையும் அவைகளின் சமானமற்ற கட்டமைப்பு வழி, மறந்து போனதாக நாம் நம்பியிருந்த கனவுகளை முன்னெடுத்துத் தருகிறார், அந்த முன்னெடுப்பு, நம் கண்களில் தொடங்கிப் பால்வெளிக் கடந்த தொன்மச் சடங்குகளின் இடத்திற்குச் செல்ல நம்மைப் பழக்கப்படுத்துகிறது. இது பார்வையாளர்களுக்குக் கிட்டும் பேரனுபவம். அத்தகைய உளச்செயல்பாட்டு அனு பவம் அவர்தம் வாழ்வியல் அங்கமாகவும் மாறி விடுகிறது.

‘ராணி’ எனும் ஓவியமும் குறிப்பிடத்தகுந்தவகையிலான உள உரையாடலை முன்னெடுத்து இருக்கிறது. கி.சரவணனுடைய ஓவியங்களில் காகிதக் கப்பல், அவைகளைச் சுமந்த மனிதர்கள், நீட்டியும் மடக்கியும் கையாளும் வகையிலான விளைநிலங்கள் மற்றும் அஞ்சலக முத்திரைகள் என்பனவான குறியீட்டு வார்த்தைகளை இடம் மாற்றி வைப்பது இந்தப் படைப்பிலும் செயல்பட்டிருக்கிறது. அதே சமயம், இப்படைப்பில், பூனையின் நிழல் பெரிதாய் வளர்ந்து, அவ்வெளியில் நிகழும் அனைத்து தன் உரையாடல்களையும் தாங்கும் புதிய உலகமாகக் காட்சியளிக்கிறது. அதனால், ‘நாகரிகம்’ குறித்த தத்துவம் நம் முன் விழிக்கிறது. அவை, நாகரிகத்திற்கு உட்படுத்தப்படாத நமது பழமையான மரபணு மூதாதையர்கள் விலங்குகளை ஒத்தே இருந்திருப்பர் என்பதும். அவர்களின் “விலங்கு” குணம் நமக்குள் விழிக்கும் கணமாக அப்படிமத்தின் அசைவுகள் அதிரவும் தொடங்கி விடுகின்றன. அவ்வகையில், மனிதமனங்களின் உள உரையாடல்களைக் கண்டெடுத்து அவைகளைச் செயல் தொடச்சி வழியாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கும் கி.சரவணன் தமிழ்ப்படைப்புச் சூழலில் கவனம் கொள்ளத்தக்கவரே.

“ஒரு மனிதனாகவும் ஓவியராகவும் எனது சொந்த அனுபவங்களின் மூலம் வார்த்தெடுக்கப்பட்ட ஒருஓவியத்தை நான் உருவாக்கி முடிக்கும்போது நான் என்னுடன் பேசிக்கொண்ட அத்தனை குறிப்பு களும் அரிக்கப்பட்டு மங்கி மறைந்துவிடுகின்றன. அதே சமயம் வெவ்வேறு நிலைகளில் நானும், என் ஓவியத்தைப் பார்வையிடும் பார்வையாளர்களும் பிரகாசமடைந்து விடுகிறோம்” எனச் சொன்ன அமெரிக்க ஓவியர் பீட்ரைஸ் மோடிசெட் (Beatrice Modisett)  அனுபவத்தைப் போல, கி.சரவணனின்படைப்புலகமும் பிரகாசத்தோடு தொடர்புடையதே. அதனால்தான், உலகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பார்வையாளரையும் படைப்பாளரையும் அவர் தம்அகம் பிரகாசிக்கச் செய்து விடைகொடுக்கிறது கி.சரவணனின் படைப்புக் கண்காட்சிகள்.

இப்போது, இந்தச் சிறு அறிமுகமும் படைப்புக் குறிப்புகளும் உங்களைத் தூண்டுமாயின், கி.சரவணின் படைப்புகளைக் கண்டுவிடச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஏனெனில் அங்கு உங்களுக்குக் கிட்டும் உளச் செயல்பாட்டு அனுபவம் உங்கள் வாழ்வியல் அங்க மாகவும் மாறிவிடும் வாய்ப்புக்கள் நிச்சயம் இருக்கிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer