ஈகோவும் அதன் இருமையும்

முனைவர் தி.கு. இரவிச்சந்திரன்

பகிரு

நாட்டுப்புறக் கதைகள்வழி உளப்பகுப்பாய்வு விளக்கம்

மனிதனுடைய அகநிலையானது (Subject) நனவு மற்றும் நனவிலி ஆகிய இரண்டு ஒழுங்கமைவுகளைக் (Conscious and unconscious systems)  கொண்டு இயங்கு வதாகும். புறவாழ்வில் (Outer life) நனவுமனமும் அகவாழ்வில் (Inner life) நனவிலி மனமும் முதன்மையாகச் செயல்படுபவையாகும். இவ்விரண்டு மனங் களும் மனித ஆளுமையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றுக்கு இடையே பல முரண்பாடுகள் இருக்கின்றனவென்று ஃப்ராய்ட் தனது ஊடக உளவியல் (Meta psychological theory) விளக்குவார். இந்த முரண்பாடுகள் காரணமாக ஒன்றை மற்றொன்று ஆளுகைக்கு உட்படுத்த முயலுவதால் மனதிற்குள் போராட்டங்கள் (Conflicts) அமுக்கம் (represlon)  தற்காப்பு (Deiance Mechanism) ஆகியவை நிகழ்கின்றன. நனவும் நனவிலியும் முரண்பாடுகளின்றிச் செயல்பாட்டால் அகநிலையின் செயற்பாடுகளில் எவ்வித பாதிப்பும் நிகழ வாய்ப்பில்லை. மாறாக, முரண்பாடுகள் இருந்தால் அகநிலையின் செயல்கள் பாதிப்பிற்கு உட்படும். இந்தப் பாதிப்பின் காரணமாக மனிதனின் நடத்தைகள், செயற்பாடுகள், வாழ்க்கை முறைகள் போன்றவை இயல்புக்கு மாறாக நிகழும். இதை உள மாறாட்டம் (Mental disorder) என்பர். மனிதனின் நனவும் நனவிலியும் முரண்பாடுகளோடே என்றென்றும் உறவு கொள்கின்றன. இந்த இருநிலை வேற்றுமை (Binary opposition) அனைவரின் அகநிலைக்குள்ளேயும் மாறாட்டம் இருக்கவே செய்கிறது. நனவிலி அரசனாகிய இச்சை உணர்ச்சியும் (மிபீ) நனவு அரசனாகிய சூபர் ஈகோவும் (Super Ego) போரிடுகின்ற போராட்டக்களமாகவே மனிதனின் அகநிலை விளங்குகிறது. அகப்போராட்டங்களினால் புறச்செயல்களில் மாறாட்டங்கள் ஏற்படுகின்றன.

புறச்செயல்கள் அனைத்தும் ஈகோவின் (Ego)செயற்பாடுகளே ஆகும். ஈகோவினுடைய  செயற்பாடுகளில் மாறாட்டம் உள்ளதென்றால் ஈகோவே மாறாட்டத்திற்கு உள்ளானதாகப் பொருள்படும். ஈகோ மாறாட்டத்திற்கு அகநிலைக்குள் இருக்கின்ற நனவு நனவிலி முரண்பாடுகளே காரணமாகின்றன. இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால் சூபர் ஈகோவுக்கும் இட்டுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளே ஈகோவின் மாறாட்டச் செயலுக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்த முரண்பாடுகள் பிறப்பிலிருந்தே வருவதல்ல. சூபர் ஈகோவின் திணிப்பிற்குப் பின்னால் ஏற்படுபவையாகும். மனிதனின் அகநிலையைச் சூபர் ஈகோ என்கிற செயற்கை உணர்ச்சி பெரும் பிளவு ஏற்படுத்துவதால் ஈகோவின்செயல்களில் பிறழ்நிலைப் போக்கு வெளிப்படு கின்றன. எனவே மனிதனின் உளமாறாட்டத்திற்கும் பிறழ்நிலைப் போக்கிற்கும் சூபர் ஈகோ என்கிறஆதிக்க உணர்ச்சியே மூலகாரணியாக விளங்குகின்றது.

சூபர் ஈகோ என்பது மனிதத்தன்மை (Humanity) மனசாட்சி (Conscience), பண்பாடு (Culture), மரபு (tradition), நாகரிகம் (Civilization), ஒழுங்கு (Order) சட்டம் (Law) போன்ற நெறியியலைச் சார்ந்த உணர்ச்சி களின் தொகுப்பாகும். இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வருகின்ற மனிதனை இயற்கையிலிருந்து விலக்கி செயற்கை வழியில் இட்டுச் செல்வதற்குச் சூபர் ஈகோ பெரும் பங்காற்றுகின்றது. குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் திணிக்கப்படுகின்ற இந்த உணர்ச்சியானது, சுமார் நான்கு வயதிலிருந்தே தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தித் தன்னை நிலைநாட்டத் தொடங்கி விடு கின்றது. சுதந்திரமாகத் தன்னியலாக (Autonomous) செயல்பட்டு வந்த ஈகோ தனக்குள் சூபர் ஈகோ வை அகவயமாக்கிக்கொண்ட பிறகு சூபர் ஈகோ வின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இயங்கத் தொடங்கி விடுகின்றது. அதாவது சூபர் ஈகோவின் கட்டளைக்கு ஏற்பச் செயல்பட வேண்டுமென்று ஈகோகட்டாயப்படுத்தப்படுகின்றது. இந்தக் கட்டுபாடு களை மீறக்கூடாது என்றும் மீறினால் குற்றமாகக் கருதப்படும் என்றும் சூபர் ஈகோ எச்சரிக்கிறது. எனவே சூபர் ஈகோ என்கிற ஆதிக்க உணர்ச்சி ஒருபுறம் இட் உணர்ச்சியையும் மறுபுறம் ஈகோவையும் ஆளுகைக்கு உட்படுத்துவதைக் காணலாம். இட், ஈகோ ஆகிய இரண்டு இயற்கை உணர்ச்சிகளைச் சூபர் ஈகோ என்கிற செயற்கை உணர்ச்சி அதிகாரம் செய்கின்ற போக்கு மனித அகநிலையில் மட்டுமே நிகழ்கின்ற விசித்திரமாகும். எனவேதான் மனிதன் மாறாட்டத்திற்கும் பிறழ்நிலைக்கும் அதிகமாக உள்ளாகின்றான்.

மனித அகநிலையில் மேற்குறித்த மூன்று முரண்பட்ட உணர்ச்சிகள் இருப்பதைக் காணலாம். இட்(இச்சையுணர்ச்சி) மற்றும் சூபர் ஈகோ (பண்பாட்டுணர்ச்சி) ஆகிய இரண்டும் எதிரும் புதிருமான உணர்ச்சிகள் ஆகும் ஈகோவானது வெளிப்படையாக முரண்பாடுகளைக் கொண்டதில்லை என்றாலும் இட் மற்றும் சூபர் ஈகோ உணர்ச்சிகளில் ஏதாவது ஒன்றைச் சார்ந்து இருந்தால் மற்றொன்றிற்கு முரணாகி விடுகிறது. இட் உணர்ச்சிக்கும் சூபர் ஈகோவுக்கு இடையே போராட்டம் நிகழ்கின்றபோது ஈகோவானது ஏதேனும் ஒன்றை சார்ந்திருந்தால் அகநிலையில் பெரிய பாதிப்பு நிகழாது. மாறாக இட் மற்றும் சூபர் ஈகோ ஆகிய இரண்டுமே தேவை என்கிற நிலை ஏற்பட்டால் ஈகோவிடம் தடுமாற்றம் உண்டாகிறது. இட் உணர்ச்சியின் முக்கியப் பண்பு உடனடி நிறைவேற்றம் (Immediate gratification) ஆகும். புறநிலை பற்றிய கருத்தாக்கங்களை அது கணக்கில் கொள்ளாது. அதாவது மோகப் பொருள் யார், என்ன உறவு, நேரம் காலம் இடம் என்ன என்பவை போன்ற கருத்துக்களுக்கு இட் இடம் கொடுப்பதில்லை. தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கம் அல்லது வேட்கை தான் இட் உணர்ச்சிக்கு உள்ளது. இந்த இட் உணர்ச்சியின் வெறித்தனமும் சூபர் ஈகோவின் ஆதிக்கத் தனமும் ஈகோவின் மேல் விழுகின்றன. இந்நிலையில் இருதலைக் கொள்ளி எறும்பாக ஈகோ தவிக்கிறது. ஒரு பக்கம் இட் உணர்ச்சியை வெளிப்படுத்திவிட்டால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி விடுகிறது. மறுபக்கம் இட் உணர்ச்சியை அமுக்கினால் நோய்குறிக்கு ஆளாகி விடுகின்றது இந்நிலையில் ஈகோ தன்னுடைய வலிமை மற்றும் வலிமையின்மைக்கு ஏற்பச் செயல் படுகிறது.

ஈகோவின் வலிமைக்கும் வலிமையின்மைக்கும் குழந்தைப் பருவ அனுபவங்களே காரணமாகின்றன. அனைவரின் ஈகோவும் தாயின் மார்பகத்தில் இருந்தே வளர்ச்சி பெறுகின்றன என்று ஃப்ராய்ட் கூறுவார். பாலை மாந்துகின்ற குழந்தை தாயின் மார்பகத்தைத் தனது உறுப்புகளில் ஒன்றாகவே எண்ணுகிறது. பசி என்கிற தனது வேட்கையைத் தன்னியலாகவேதீர்த்துக்கொள்வதாகக் குழந்தை எண்ணுகிறது.இதைத் தன்னியல் மோகம் (auto erotism) என்று ஃப்ராய்ட் கூறுவார். தன்னியல் மோக நினைப்பிலேயே சில மாதங்கள் குழந்தையின் ஈகோ வளர்கிறது. ஒரு கட்டத்தில் தாய் அல்லது மார்பகம் என்பது புறப் பொருள் என்று குழந்தை உணர்கின்ற நிலை உருவாகும்போது குழந்தையின் ஈகோவில் பெரும் ஆபத்து ஏற்படுகின்றது. இந்நிலையில் புறநிலையைச் சார்ந்து இருப்பதா அல்லது அகநிலையைச் சார்ந்து இருப்பதா என்கிற இருநிலை வேற்றுமைக்குள் (inary Oppostion) சிக்கிக் கொள்கிறது புறநிலையாகிய தாயை அதிகமாகவும் அகநிலையாகிய தன்னைக் குறைவாகவும் சார்ந்து வாழ்கின்ற குழந்தைகள் உண்டு. அதேபோலப் புறநிலையாகிய தாயைக் குறைவாகவும் அகநிலையாகிய தன்னை அதிகமாகவும் சார்ந்து வாழ்கின்ற குழந்தைகளும் உண்டு. புறச் சார்புடைய குழந்தைகள் ‘தாயின் (Absence of Mother) பொழுதுகளில் அதிகமாக அழும். அதைச் சமாதானப்படுத்த முடியாது. அகச் சார்புடைய குழந்தைகள் அதிகமாக அழாது. இதனடிப்படையில் குழந்தையின் ஈகோ புறச்சார்பு வழியிலேயோ, அல்லது அகச்சார்பு வழியிலேயோ வளர்கின்றது. இந்த வளர்ச்சி தாயிடம் இருந்துதான் தொடங்குகிறது.

மனிதனின் ஈகோ வளர்ச்சி புறச்சார்பு வழியிலோ அல்லது அகச்சார்பு வழியிலோ வளரும்போது அதன் பண்புகள் வேறுபட்டு அமையும். புறச்சார்பு வழியில் வளர்கின்ற ஈகோ புறப்பொருளுக்கே முதன்மை இடம் கொடுக்கும். அகச்சார்பு வழியில் வளர்கின்ற ஈகோ அகநிலைக்கே முதன்மை இடம் கொடுக்கும். புறச்சார்பு ஈகோவும் அகச்சார்பு ஈகோவும் வெவ்வேறு தன்மைகளையும் பண்புகளையும் கொண்டவை. அவைகளே அந்தந்த ஈகோவின் இயல்புகள் ஆகின்றன. மனிதன் ஒரு நெருக்கடியைச் சந்திக்கும் போது அவனது ஈகோவின் இயல்புக்கு ஏற்பச் செயல்படுகின்றான். மேற்கூறிய சார்பு நிலையைக் கொண்டு அகமனிதன், புறமனிதன் என்று மனிதர்களை வகைப்படுத்தலாம். இரண்டு வகை மனிதர்களுக்கு இடையே நடத்தைகள், குணங்கள் மற்றும்வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் வேறுபாடு களைக் கணிசமாகக் காணலாம். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களின் ஈகோ அதனதன் இயல்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு கட்டங்களையும் கடந்து வருகின்றது. அவர்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு கட்டங்களிலும் ஈகோவின் இயல்புப்படியே செயல்படுகின்றனர். இவைகளைச் சித்தரிப்பது போல் நாட்டுப்புறக் கதைகளில் இரண்டு கதைகள் உள்ளன. அந்தக் கதைகளில் வருகின்ற கதை மாந்தர்களின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முரணாக இருப்பதை உணரமுடிகிறது. அவைகளில் முதல் கதையின் சுருக்கம் வருமாறு:

கரிசல் காட்டில் கோடை காலத்தில் உழவர்கள் வயல் வேலை செய்துவிட்டு கஞ்சிகுடிக்க மரத்தடியில் உட்கார்ந்தனர். கஞ்சியை ஒருவர் கலயத்தில் இருந்து ஊற்ற, அதை ஒவ்வொருவராகக் கைகளில் வாங்கிக்கொண்டு குடிக்கவேண்டும். இப்படி ஒருவன் குடித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில் மரத்திலிருந்து சிறிய தெண்டு ஒன்று கையில் உள்ள கஞ்சியில் விழுந்துவிட்டது. இதை உழவன் பார்த்து விட்டான். கையில் விழுந்த தெண்டு எப்படிப் போனது என்று தெரியவில்லை. அந்தத் தெண்டை விழுங்கிவிட்டோமோ என்று ஐயப்பட்டான். வீட் டிற்குச் சென்றும் அவனால் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. தெண்டை விழுங்கிவிட்டதாக எண்ணி வாந்தி பேதி வரவழைத்துப் பார்த்தான். தெண்டு அகப்படவில்லை. உழவனுக்குள் அச்சம் பிடித்துக்கொண்டது. வயிற்றுக்குள் தெண்டு பிராண்டுவது போலத் தோன்ற வயிற்று வலி என்று திடீரென அலறு வான். பிறகு சாப்பிட முடியாமல் தவித்தான். பதட்டமுற்றான், தூக்கமிழந்தான், நிம்மதி இழந்தான்உடல் மெலிந்தது, கடைசியில் படுக்கையில் விழுந்து விட்டான்.

பல மருத்துவர்கள் அவனுக்கு மருத்துவம் செய்தும் பயனில்லை. சோதிடர்கள் சாமியாடிகள் ஆகியோரையும் அணுகினர். நேர்த்திக் கடன் பட்டதால் இவ்வாறு நிகழ்வதாகக் கூறினர். அதையும் செய்துபார்த்தாயிற்று. ஆனால் சரியாகவில்லை. கடைசியில் ஒருவர் தமது ஊரில் உள்ள மருத்துவரிடம்அழைத்துச் சென்றார். அம்மருத்துவரும் உழவனைநன்கு பரிசோதித்து உடல் நலமாக இருப்பதை உணர்ந் தார். இருந்தாலும் தெண்டினை விழுங்கிவிட்டதாக உழவன் நம்புவதைக் கண்ட மருத்துவர் வயிற்றில் தெண்டு இருக்கிறது அதை எடுத்துவிடலாம். நாளைவாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் காலை ஒரு தெண்டைப் பிடித்துக் கொதி நீரில் போட்டு சாகடித்து அதைத் தோட்டத்தில் உள்ள பானையில் போட்டு வைத்துக்கொண்டார். அந்த உழவன் வந்ததும் வாந்தி எடுப்பதற்கு மருந்தினைக் கொடுத்துப் பானையில் வாந்தி எடுக்கச் சொன்னார். உழவனும் வாந்தி எடுத்தான். மருத்துவர் பானையிலிருந்து தெண்டை எடுத்து உழவனுக்குக் காட்டினார்.உழவன் மகிழ்ந்தான் நிம்மதியடைந்தான். நோய்க் குறிகள் நாளடைவில் மறைந்து பழைய நிலைக்கு வந்து விட்டான்.

இந்தக் கதையில் நகைச்சுவை உணர்வு இருந்தாலும் நுணுக்கமான மருத்துவ அணுகுமுறை பொதிந்து கிடப்பதைக் காணலாம். இக்கதை ஒருவரின் உள்ளத்திலிருந்து கற்பனையாக வெளிப்பட்டதா அல்லது நடந்த நிகழ்ச்சியைக் கூறுவதாக வந்துள்ளதா என்பது முக்கியமல்ல. உள மருத்துவம் பற்றிய சிந்தனை இக்கதையில் வெளிப் பட்டிருப்பதையே இங்கு முக்கியமாகக் கொள்ள வேண்டும். உள மருத்துவம் (றிsஹ்நீலீஷீtலீமீக்ஷீணீஜீஹ்) என்பது இன்றைய உலகில் தவிர்க்க முடியாத மருத்துவ முறையாகும். உடல் நோய்களுக்கு உடல்தான் காரண மாகின்றன என்கிற அடிப்படையில் தொடங்கிய மருத்துவம், முழுமையான பலனை அது பெறவில்லை. உடலியல் கோளாறுகளுக்கு உள்ளம் கூட முக்கியக் காரணியாக விளங்குகின்றது என்பதைக் கண்டுணர்ந்த பிறகே மருத்துவம் தமது இலக்கை முழுமையாக அடைந்தது. மனித உள்ளம் எந்தெந்த விதங்களில் தமது மாறாட்டங்களை உடல் வழியில் வெளிப்படுத்துகின்றன என்பதை அறிவியல் முறைப்படி உலகிற்கு அறிமகப்படுத்தியவர் ஃப்ராய்ட் ஆவார். அவர் எடுத்துக்காட்டிய பிறகுதான் உள்ளத்தின் மீது புதிய வீச்சுகள் நிகழத் தொடங்கின. உள்ளத்திற்கும் உடலுக்கும் இடையே தொடர்பு இருப்பதைக் காலங்காலமாகவே மனிதன் அறிந்து வைத்திருந்தான். உள்ளத்தின் பிறழ்நிலையினால் உடல் பாதிப்பிற்குள்ளாவதை சமயவாதிகள் கூடப் புரிந்து வைத்திருந்தனர். அவர்களின் மருத்துவமுறைகூட ஒருவித உளமருத்துவமே ஆகும். ஆனால் அம்மருத்துவமுறை நம்பிக்கை அடிப்படையில் நடந்து வந்தது. நாட்டுப்புற மருத்துவமுறைகளில் ஒன்றாகிய பேயோட்டும் சடங்குமுறை ஒருவிதத்தில் உள மருத்துவ முறையே ஆகும். நோயாளியை உட்கார வைத்துக் கேள்விகள் கேட்டு அந்நோயாளிகளைப் பேசவிடுவது பேயோட்டத்தின் முக்கியச் சாரமாகும். இந்த மருத்துவமுறை ஃப்ராய்டின் உளப்பகுப்பு மருத்துவ முறையோடு இணைவரையாக இருப்பது வியப்பிற்குரிய செய்தியாகும். உளப்பகுப்பு மருத் துவம் செய்து வருகின்ற பேச்சு வழித் தீர்வை (ஜிணீறீளீவீஸீரீ நீuக்ஷீமீ) நாட்டுப்புற மருத்துவ முறையும் செய்கிறது. ஆக, உள்ளத்திற்கும் உடலுக்கும் இடையே தொடர்பு இருப்பதை நாட்டுப்புற மக்களும் உணர்ந் திருக்கின்றனர்  என்பதில்  ஐயமில்லை.

உள இயக்க மாறாட்டமானது (Psychical disorder) உடலியக்க மாறாட்டமாக (Physical disorder) மாறுவதை மாற்றியக்க நரம்பு நோய் (Conversion neurosis) என்று உளப்பகுப்பாய்வு சுட்டுகிறது. இது நோய்க்குறி உருவாக்கம் (Symptom Formation) என்கிற உளச்செயலின் விளைவாகும். உள்ளத்தில் மாறாட்டத்தினை உருவாக்கக் காரணமாக இருக்கின்ற எண்ணமானது உடல் வழியில் வெளிப்படுவதால் உடலியல் (Somatic Symptoms) தோன்று கின்றன. இந்த உடலியல் குறிகள் மாறாட்ட நிலைக்கான குறியீட்டுப் பொருளாக (Symbolle Meaning)  விளங்குகின்றன என்று ஃப்ராய்ட் கூறுவார். எந்த எண்ணத்திலும் பிடிபடாத உள்ளத்தில் நோய்க்குறிகள் உருவாவதில்லை. பீடிப்பு எண்ணங்களே (Obsessive Thought)  நோய்க் குறிகளை விளைவிக்கின்றன. கதையில் ‘தெண்டு’ விழுங்கிவிட்டதாக நம்புகிற எண்ணத்தில் உழவனின் மனமானது பீடிப்புக்கொண் டதால் அவனிடம் நோய்க்குறிகள் உருவெடுக்கின்றன. அந்த நோய்க்குறிகள் அவனின் மாறாட்டச் செயல்கள் வழியிலும் உடல் மெலிதல் படுக்கை யில் விழுதல் போன்ற உடல் வழியிலும் வெளிப் படுகின்றன.

உழவனின் செயல்பாடுகள் அனைத்தும் பிறழ் நம்பிக்கை அல்லது ஐயப்பாட்டின் (Delusion) விளைவில் நிகழ்வதாகும் தெண்டை விழுங்கி விட்டோமோ என்கிற ஐயப்பாட்டு எண்ணமானது உண்மையிலேயே தெண்டை விழுங்கிவிட்டால் என்னென்ன நிகழுமோ அனைத்தையும் செய்கிறது. உள்ளத்தின் பீடிப்பு எண்ணத்திற்கு வல்லமை அதிகம், பொய்யான எண்ணமாகிய ‘ஐயப்பாடு’ (Suspicious)  நாளடைவில் உண்மை எண்ணமாகச் செயல்படத் தொடங்கிவிடுகிறது. இந்த ஐயப்பாட்டு எண்ணம் ஒரு மாய எண்ணமாகும். மாய எண்ணங்கள் உள்ளத்தில் குடிகொண்டு பல தோற்றங்களை, கற்பனைகளை விளைவிக்கின்றன. அவற்றை மாயத் தோற்றங்கள் (Fantacies) என்று உளப்பகுப்பாய்வு கூறுகிறது. மாயத் தோற்றங்களுக்கு ஃப்ராய்ட் மிகுந்த சிறப்பிடத்தைத் தருகிறார். அவரின் முதல் படைப்பாகிய இசிப்பு நோய் பற்றிய ஆய்விலிருந்து (Study on Hysteri.)  கடைசிவரை மாயத்தோற்றங்களின் வெளிப்பாடுகள் பற்றிப் பரவலாகப் பேசுகிறார். காரணம் அவரிடம் வந்த நோயாளிகள் பெரும்பாலோரிடத்தில் இம் மாயத்தோற்றங்கள் இருப்பதைக் கண்டுணர்ந்தார். எனவே மாயத் தோற்றத்திற்கும் நோய்க் குறிகளுக்கும் உள்ள தொடர்பை அறிய முற்பட்டார். ஐயப்பாடு (Suspicious) மிகை உணர்ச்சிவசம் (Hyper Sensitivity) தற்காப்பு (Defensiveness) ஆகியவை மாயத் தோற்றங்களுக்கு ஆதாரங்களாக விளங்குகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். இவை மூன்றும் உழவனிடத்தில் இருப்பதைக் காணலாம். மாய எண்ணத்தின் பிடியில் சிக்குண்ட உள்ளமானது தம்மைவிடுவித்துக் கொள்ளமுடியாமல் இருக்கின்ற சூழ்நிலையில் மாயத்தோற்றங்களாக வெளிப்படுகின்றன. தெண்டை விழுங்கிவிட்டோமோ என்கிற மாயஎண்ணம் வயிறு குடைதல் வலியெடுத்தல் ஆகியவற்றை நினைக்கச் செய்கிறது. அதேபோலத் தூக்கமிழத்தல், நிம்மதியின்றிப் பதட்டத்துடன் இருத்தல் போன்ற செயல்கள் வழியிலும் வெளிப்படு கின்றன. கடைசியில் உடல் மெலிதல், படுக்கையில் விழுதல் ஆகியவை நிகழச் செய்கின்றது. உடல்மெலிதலுக்கு மனச்சோர்வும் முக்கியக் காரணியாக விளங்குவதை உளவியல் தெளிவுபடுத்தியுள்ளது. உழவன் மெலிந்து போவதற்கு மனச்சோர்வு பெரும்பங்கு வகிக்கிறது. உழவனின் மனச் சோர்வுக்கு மாயஎண்ணமே காரணமாகும். எந்த ஒரு நோயும்படிப்படியாக வளர்ச்சி பெற்று முதிர்ச்சி அடைவது இயற்கை, உடல் நோய்க்கு மட்டுமல்லாது மனநோய்க்கும் இது பொருந்தும். மாய எண்ணத்தால்தாக்குண்ட உழவனின் உள்ளமானது மாயத் தோற்றங்களையும்(Delusional Phantasies)  பிறழ்நிலைசெயற்பாட்டையும்  ((Abnorma activities) வெளிப் படுத்தி, கடைசியில் உடல்நலிவுக்கும் காரணியாக அமைந்து படுக்கையில் விழும் வரை இட்டுச்செல்கிறது, உடல் மெலிதல் படுக்கையில் விழுதல்ஆகியவை உளம்சார் உடலியல் நோய்க்குறிகள் (Psycho Somatic) ஆகும். உழவனின் உளமாறாட்டங்கள் அவனின் நடத்தைகள் (Bahaviours) வழியிலும் உடலியல் (Sematic) வழியிலும் நோய்க்குறிகள் வெளிப் படுவதைக் காண முடிகிறது.

மாய எண்ணத்தின் பிடியில் சிக்குண்ட நோயாளியாகிய உழவனுக்கு மருத்துவர் தருகின்ற மருத்துவ முறை சிறப்பிற்குரியதாகும். உண்மையிலேயே உழவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை மருத் துவர் அறிவார். ஆனால் தெண்டை விழுங்கிவிட்ட தாக எண்ணுகின்ற அந்த நம்பிக்கை அவனை ஆட்டிப்படைக்கிறது. அவனை எந்த மருத்துவமும் குணப்படுத்தாது. மனதில் உள்ள மாய எண்ணத்தைப் போக்கினாலன்றி அவன் குணமடைய மாட்டான் வயிற்றில் உள்ள தெண்டை வெளியேற்றவேண்டும் என்பதே உழவனின் முக்கியக் குறிக்கோளாக உள்ளது. அவனின் தேவையும் அதுவாகவே அமைகிறது. உளமருத்துவத்தின்போது நோயாளியின் நோய்க்குறிகளைப் போக்க வேண்டுமென்றால் அந்த நோயாளிஎன்ன எதிர்பார்க்கின்றாரோ அதற்கேற்ப மருத்துவர்செயல்படுவர். இந்த முறையை மாற்றீட்டு முறை (Method of Transference) என்று ஃப்ராய்ட் கூறுவார்.இந்த முறையையே கதையில் வருகின்ற மருத்துவரும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உழவன் குணமாக வேண்டுமென்றால் வயிற்றில் உள்ள தெண்டு வெளியே வந்துவிட்டது போன்ற தோற்றத்தை அல்லது எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் அவனின் மாயஎண்ணம் மறையும், அதற்காக மருத்துவர், செத்துப்போன தெண்டை பானையில் போட்டு வைத்து அதை உழவனுக்கு எடுத்துக் காட்டினார். அந்தத் தெண்டைப் பார்த்த மாத்திரத்தில் உள்ளத் தின் பீடிப்பு எண்ணம் தளர்ந்துவிட்டது. உழவன் நோய்க்குறிகள் மறையத் தொடங்கி நாளடைவில் குணமடைந்து விடுகின்றான். உள்ளத்தின் பீடிப்புவெளிப்பட இது ஒரு வழியாகும். பீடிப்புஎண்ணத்தின் தன்மையே இதுதான். எந்த வடிவில்அவ்வெண்ணம் இருக்கின்றதோ அதே வடிவில் தான் வெளிப்பட முனையும் அப்படி நடக்காமல் போனால் மற்ற வழிகளில் வெளிப்பட வழியைத் தேடும். இதுவே மாற்றியக்க நோய்க்குறியாக மாறு கிறது.

மாய எண்ணங்களின் பிடியில் சிக்குண்ட உள்ளம்மாயை நரம்பு நோயை (Delusional neurosis) உருவாக்குகிறது. இந்த நோய்க்குறிகள் அனைவரிடத் திலும் ஒரே தன்மையில் வெளிப்படுவதில்லை. அவரவரின் ஈகோவின் இயல்புக்கு ஏற்ப வெளிப்படும். உழவனின் ஈகோ மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியது. அதனால் அந்த இயல்புக்கு ஏற்ப நோய்க்குறிகள் வெளிப்பட்டுள்ளன. இந்த இயல்புக்கு மாறான ஈகோவில் மாயை எண்ணங்கள் எப்படியெல்லாம் நோய்க்குறிகளை உருவாக்குகின் றன என்பதை இன்னொரு கதை மூலம் விளங்கிக் கொள்ளலாம். அந்தக் கதையின் சுருக்கம் வருமாறு:

ஓர் ஊரில் முரடன் ஒருவன் இருந்தான். ஊர் மக்களை அச்சுறுத்தி வந்தான். கடைகளில் சென்று வேண்டிய பொருட்களையும் பணத்தையும் எடுத்துக் கொள்வான். அவனை எதிர்த்துக் கேட்க யாருக்கும் துணிவில்லை. முரடனுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று இளவட்டம் கூடி ஆலோசித்தது. ஒரு நாள் அந்த முரடன் தன் மகள் வீட்டிற்குச்செல்லப்போவதை அவர்கள் அறிந்துகொண்டனர். முரடன் போகிற வழிநெடுக குறிப்பிட்ட இடை வெளியில் இளைஞர்கள் ஒவ்வொருவராக நின்று கொண்டனர். முதலில் இருப்பவன் முரடனைப் பார்த்து வணக்கம் கூறி ‘முகம் கொஞ்சம் வாட்டமாக இருக்கிறதே’ என்று விசாரித்தான். தனக்கு ஒன்றுமில்லையென்றும் ‘எமப் பயல பேயடிக்குமா இரும்பைக் கரையான் அரிக்குமோ’ என்றும் பதி லுரைத்துவிட்டு நடந்தான் முரடன், கொஞ்சம் தொலைவு சென்றதும் இன்னொரு இளைஞன் எதிரே வந்தான். முரடனைப் பார்த்து ‘சோர்வாக இருக்கிறீர்களே’ என்று வினவினான், முரடனின் முகத்தை ஆராய்வதுபோலப் பாவனைச் செய்து ‘உடம்பு இவ்வளவு மோசமாக இருக்கிறதே’ என்று கூறிவிட்டுச் சென்றான். முரடனின் கைவீச்சு நடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. ஒருநாளும் இல்லாத களைப்பை உணர்ந்தான் முரடன்.கொஞ்சம் தொலைவில் இன்னொரு இளைஞன் வந்து ‘அண்ணாச்சிக்கு என்னவாயிற்று’ என்று வினவியபடி பரபரப்பாக அங்குமிங்கும் பார்த்தபடி கைகளைப் பிசைந்தான். அவனின் பாவனைகளைப் பார்த்து முரடன் மேலும் நலிவுற்றான். இப்படிச் சில இளைஞர்களைக் கடந்து செல்வதற்குள் அவனின் நோய் அதிகமாகச் சுயநினைவை இழந்து, தான் செத்துப்போய்விட்டதாகவும்  எண்ணிக்கொண்டான்.

இந்தக் கதையில் முரடனின் உடல் நிலையானது உளமாறாட்டங்களினால் பாதிக்கப்படுவதைச் சித்தரிக்கிறது. அது எந்த முறையில் பாதிக்கிறது என்பதை அறிய முரடனின் அகநிலையைக் கொஞ்சம் அலசிப் பார்க்கவேண்டும். முரடன் என்றாலே அவன்முரட்டுத்தனமானவன் கோபக்காரன், அச்சுறுத்து பவன் போன்றவற்றைக் குறிக்கும். கதையில் வருகின்ற முரடன் குணமும் அப்படியே அமைந்துள்ளது. அவன் ஊர் மக்களை அச்சுறுத்தி வதைப்பிற்குள்ளாக்கி ஆதிக்கம் செலுத்தி வந்தான், கடைகளில் தனது விருப்பம்போலப் பொருட்களை எடுத்துக் கொள்வதும் பணத்தை மிரட்டி வாங்குவதும் அவனுடைய நடைமுறை வாழ்க்கையாகவே இருந்தன. இதனால் மக்கள் துன்பப்படுவார்கள் என்று அவன்அறிந்தும் அவைகளைச் செய்து வந்தான். அதுதான் அவனுக்கு வாழ்க்கையாகவும் இருந்தது. ஒருவரைத் துன்புறுத்தி இன்பமடைகின்ற செயல் வதைப்பியம் (Sadism) என்கிற உளப்பண்பைக் குறிக்கும். வதைப்பு உந்தல்களைப் புறநிலை மேல் செலுத்தி அகநிலை இன்புறுகின்ற உளத்தன்மையாகிய வதைப்பியத்தை மோகத்திரிபுகளில் (Sexual Perversion) ஒன்றாக உளப் பகுப்பாய்வு சுட்டுகிறது. அதாவது இயல்பாக வெளிப்படவேண்டிய இச்சையுணர்ச்சி திரிபுற்று வெளிப்படுவதையே இது குறிக்கும் வதைப்பு என்கிற பண்பு இருக்கின்ற உள்ளத்தில் மூர்க்கமும் (Aggression)  இருக்கும் என்று ஃப்ராய்ட் கூறுவார். மூர்க்கம் இல்லாமல் வதைப்பு நிகழாது. முரடன் என்றாலே மூர்க்கத்தனமானவன் என்பது அறிந் ததே. மூர்க்கத்தனத்தைக் கொண்டுதான் வதைப்புச்செயலை நிகழ்த்த முடியும். வதைப்பும் மூர்க்கமும் கொண்ட மனிதன் புற மனிதர்களைத் துன்புறுத்துவதற்கு அஞ்சமாட்டான். அவனுக்குள் இருக்கின்ற இயல்பூக்கத்திற்கு அது ஒரு வழியாகவே அமைந்து விடுகிறது. அதாவது இயல்பூக்கத்தில் பெரும்பகுதி மற்றவரைத் துன்பப்படுத்துவதிலேயே இன்பம் பெறுகின்றது. இப்படிப்பட்ட வதைப்பு மன நிலை முரடனிடம்  காணப்படுகின்றது.

துன்பத்தைக் கொண்டு இரண்டு முறைகளில் இன்பம் பெறுவதாக ஃப்ராய்ட் கூறுவார். மற்றவரைத் துன்புறுத்தி இன்பம் பெறுவது வதைப்பியமாகும். மற்றவரால் தான் துன்பப்பட்டு இன்பம்பெறுவது வருந்தியம் (Masochism) ஆகும். வதைப்பியமும், வருந்தியமும் ஒன்றுக்கொன்று எதிரான மோகத் திரிபுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வருந்தியம் பண்பினைக் கொண்ட உள்ளமானது வலியையே தேடும். அதாவது அகநிலையின் இச்சை வேட்கையானது வலியை அனுபவிப்பது மூலமாகத் தீர்வுகாண விழையும், துன்பம் பெறுகின்ற போது வலியைத் தனக்குள்ளேயே மோகிப்பதால் வருந்தியத்தைத் தன்மோகத்துடன் (Narcissism)  இணைத்துப் பேசுவார் ஃப்ராய்ட் மோக உறவில் புறநிலை உறவு  (Object Relation) மற்றும் அகநிலை உறவு (Subject Relation) என இரண்டு உள்ளன. புறப்பொருளை மோகிப்பது புறநிலை உறவாகும். மாறாகப் புற நிலையைப் புறக்கணித்துவிட்டுத் தனக்குள்ளேயே மோகிப்பது அகநிலை உறவாகும். இந்த அகநிலை உறவைத்தான் உளப்பகுப்பாய்வில் முதனிலைத் தன்மோகம் (Primary Narcism) இரண்டாம்நிலைத் தன்மோகம் (Secondary Narsism) ஆகிய இரண்டு நிலைகள் இருப்பதாக ஃப்ராய்ட் எடுத்துக்காட்டுவார். முதல்நிலைத் தன்மோகம் என்பது குழந்தைப் பாலியலுடன் (Infantile Sexuality)  தொடர்புடையது. இந்த நிலை மோகத்தில் புறநிலை பற்றிய எண்ணம் ஏதுமின்றி அகநிலையானது தனக்குள்ளேயே மோகித்துக் கொள்கிற உளச்செயல் நிகழ்கிறது. சான்றாக முன்பே கூறியபடி குழந்தையானது பால் மாந்தும்போது தனக்குத்தானே நிறைவு காண்பதாகக் குழந்தை எண்ணுவதை முதல்நிலைத் தன் மோகத்தின் வெளிப்பாடு எனலாம். இரண்டாம் நிலைத் தன்மோகம் என்பது குழந்தைப் பருவத்திற்கு அடுத்த நிலையிலேயே தொடங்கிவிடுகிறது. இந்த நிலை மோகத்தில் லிபிடோ என்கிற பாலூக்க சக்தியை (Libido) புறநிலையிலிருந்து விலக்கி அகநிலைக்குத் திருப்பிக்கொள்வதாகும். புறநிலை மோகம் கை கூடாதபோதோ அல்லது நிறைவு தராத போதோ   இந்தத்  தன்மோகம் நிகழ்கிறது.

முதல்நிலைத் தன்மோகமும், இரண்டாம் நிலைத் தன்மோகமும் அகநிலையையே அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு நிலைத் தன்மோகங்களிலும் ஈகோவானது அகநிலைக்குள்ளேயே தன்னை மோகித்துக் கொள்கிறது என்று ஃப்ராய்ட் விவரிப்பார். தன்மோகமென்பது அகநிலையை அடிப்படை யாகக்கொண்டு இயங்குவதுபோல் புறநிலையையும் அடிப்படையாகக்கொண்டு இயங்குவதுண்டு ஃப்ராய்ட் இதைச் சுட்டிக் காட்டவில்லை. தன்மோகம் என்பது புறநிலையை முழுவதும் புறக்கணித்து விட்டுத் தன்னை மோகிப்பதாகவே உளப்பகுப்பாய்வு காட்டுகின்றது. புறநிலை மோகத்திலும் தன்மோகம் கலந்து வருவதுண்டு. ஆனால் இவ்வகையில் புறநிலையைத் தன்னுடைய பிம்பமாகவே எண்ணி ஈகோவானது மோகிக்கிறது. இதில் இரண்டு பிரிவுகள் அடங்கியுள்ளன. புறநிலையைச் சார்ந்து ஈகோ தன்மோகம் கொண்டால் புறச்சார்த் தன்மோகம் (Objective Narcissism) ஆகும் அகநிலையைச் சார்ந்து ஈகோ தன்மோகம் கொண்டால் அகச்சார்த் தன்மோகம்  (Subjective Narcissism) ஆகும். சான்றாக மது அருந்துவது புறச்சார்த் தன்மோகம் எனக் கொண்டால் கவிதை ரசிப்பது அகச்சார்த் தன்மோகம் ஆகும். காரணம் மது குடிப்பதில் புறப்பொருளான மது முதன்மையாக இருக்கிறது. கவிதை ரசிப்பதில் ஈகோவின் சிந்தனை முதன்மையாக இருக்கிறது. மது இன்பம் - கவிதை இன்பம் ஆகிய இரண்டிலும் புறப்பொருள் உள்ளன. ஆனால் அவற்றைக் கொண்டு ஈகோ இன்பம் பெறுகின்ற வழிகள் வெவ்வேறாக இருக்கின்றன. மது - இன்பத்தில் மதுவானது உடல் வழியே அதுவாக இயங்கும்போது ஈகோ இன்பம் அடைகிறது. கவிதை இன்பத்தில் புறப்பொருளான கவிதையில் ஈகோ தனது சிந்தனையைச் செலுத்துகின்ற வழியில் இன்பம் அடைகிறது. இவற்றில் மது இன்பத்தில் புறச்சார்பும் கவிதை இன்பத்தில் அகச்சார்பும் வெளிப்படு வதைக் காணலாம். ஈகோ தன்னை மையப்படுத்திப் பெறுகின்ற இன்பத்தை அகச் சார் தன்மோகம் என்றும் புறநிலையை மையப்படுத்திப் பெறுகின்ற இன்பத்தைப் புறச் சார் தன்மோகம் என்றும் கூறலாம்.

துன்பம் வழியில் இன்பம் பெறுகின்ற மோகத் திரிபுகளான வதைப்பியமும் (Masochism) வருந்தியமும் (Sadism) வலியை ஆதாரமாகக் கொண்டவை. வலி என்பது உளப்பகுப்பாய்வில் மனவலியையே குறிக்கும். வதைப்பியத்தில் மற்றவருடைய வலியாலும் வருந்தியத்தில் தன்னுடைய வலியாலும் ஈகோ இன்பமடைகின்றது. மற்றவருக்கு வலியை ஏற்படுத்துகின்ற பண்பினைக் கொண்ட வதைப் பியத்தில் புறநிலைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தனக்கே முதன்மை அளிக்கின்றது. தன்னைச் சார்ந்து தான் ஈகோ வதைப்பியத்தைச் செய்கிறது. எனவே வதைப்பியத்தை அகச்சார்த் தன் மோகம் (Subjective Narcissism) எனலாம். வருந்தியத்தில் இதற்கு மாறாக நிகழ்கின்றது. வலியைத் தானே அனு பவிப்பதால் தனக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது புலனாகிறது. மதச் செயல்களான அலகு குத்துதல், பூ மிதித்தல் போன்ற செயல்கள் இவ் வகையில் அடங்கும். எனவே வருந்தியத்தைப் புறச்சார்த் தன்மோகம்  (Objective Narcissism) எனலாம்.

மேற்கண்ட முரடன் கதையில் முரடனானவன் ஊர் மக்களைத் துன்புறுத்தி தொல்லைப்படுத்தி முரட்டுத்தனமாக நடப்பதால் புறநிலைக்கு முதன்மைதரவில்லை என்பதை ஊகிக்கலாம். எனவே அவன் வதைப்பியனாக (Sadist) நடந்துகொள்கின்றான். ‘எமப் பயலை பேயடிக்குமோ இரும்பை கரையான் அரிக்குமா’ என்று முரடன் கூறுகின்ற கூற்றுக்களிலிருந்து தன்னை மிகவும் உயர்வாக எண்ணிக் கொள்வதையும் அறிய முடிகிறது. தற்பெருமை, அதீத தன்னம்பிக்கை, சுய மரியாதை, தற்சார்பு, போன்றவை தன்மோகத்தின் வெளிப்பாடுகள் என்று உளப்பகுப்பாய்வு நோக்கில் கூறலாம். எனவே முரடனிடம் இருப்பதையும் அது அகச்சார்ந்த தன் மோக வகையைச் சார்ந்தது என்பதையும் அறியலாம்.

உழவனும் முரடனும் ஈகோவின் இரண்டு வகைப்பட்ட செயற்பாடுகளுக்கான குறியீட்டுப் பொருண்மைகளாக விளங்குகின்றனர். இருவரும் மாய எண்ணத்தில் சிக்குண்டவர்களே ஆவர். ஆனால் இருவரிடத்திலும் வெவ்வேறான உளச் செயல்கள்வழியில் அது இயங்குகிறது. உழவன் தெண்டை விழுங்கி விட்டதாகத் தனக்குத் தானே எண்ணிவருந்துகிறான். முரடனோ மற்றவர் கூற்றுக்களின் வழியில் வருத்தமுறுகின்றான். இருவரிடத்திலும் ‘ஐயப்பாடு’ என்பதுதான் மாய எண்ணங்களை உரு வாக்குகின்றன. உழவனின் ஈகோ உணர்ச்சிவசப்படக் கூடியதால் அவனிடம் பதட்டங்கள் அதிகமாக வெளிப்பட்டுள்ளன மாறாக முரடனின் ஈகோ வானது உணர்ச்சி வசப்படாதது. அதனால் பதட்டம்வெளிப்படுவதில்லை. பதட்டம் என்பது எதிர்காலஅச்சத்தையே குறிக்கும். இதை உள நரம்புநோய் களுக்கான காரணிகளில் முக்கியமானதாக உளப்பகுப்பாய்வு காட்டுகிறது. உழவனிடத்தில் இவ்விதமான நரம்பு நோயைக் காண்கிறோம். பாலூக்க சக்தியின் முறிவே பதட்ட நரம்பு நோய்க்கு முக்கியக் காரணியாகின்றது என்று ஃப்ராய்ட் கூறுவார். உழவனின் உள்ளத்தில் எங்கோ புதைந்து கிடக்கின்ற முறிவுதான் உழவனிடம் பதட்டத்தை ஏற்படுத்துகின்றது. அந்த முறிவு எப்படி உருவாகின்றது என்பதைப் பார்க்கவேண்டும். அதே நேரத்தில் முரடன் பதட்டப்படாமல் இருப்பதற்கான காரணத்தையும் அறிய வேண்டும். இவைகளைப் புரிந்துகொண்டால் அவர்களின் செயல்களுக்கான காரணிகளைப் புரிந்துகொண்டது போலாகும். இதற்கு ஆதாரமாக இருப்பது அவர்களின் முடிவு நிலைகளே ஆகும். அதா வது பதட்டப்படுகின்ற உழவன் குணமடைந்து விடுகின்றான் மாறாகப் பதட்டமுறாத முரடன் குணமாவதில்லை.

பதட்ட நரம்பு நோய்க்கு மூலாதாரமாக இருப்பது அச்சம் என்கிற உணர்ச்சியாகும். உள்ளத்தின் அச்சங்கள் பலவகைப்பட்டன. உடலைச் சார்ந்த அச்சங்கள், உள்ளத்தைச் சார்ந்த அச்சங்கள், வாழ்க் கையைச் சார்ந்த அச்சங்கள் என மூன்று வகை அச்சங்கள் உள்ளன. இம்மூன்று அச்சங்களிலும் எதிர்காலம் பற்றிய அச்சமே பதட்டத்தைத் தோற்றுவிக்கின்றன. ‘இதுதான் நிகழும்’ என்று உறுதி கொண்ட மனதில் பதட்டம் நிகழாது, பதட்ட நரம்பு நோயில் காணப்படுகின்ற அச்சமானது தன்னுடைய எதிர்கால எண்ணத்தில் ஈகோவை உழலச்செய்கிறது. அதன்படியே நோயாளியும் செயல்படு வான். பதட்ட நரம்பு நோயை உள நரம்பு நோய்களில் ஒன்றாக ஃப்ராய்ட் கூறுவார். உள நரம்பு நோய் என்பது உள்ளத்தை ஆதாரமாகக் கொண்டு வெளிப் படுகிற நோயாகும். உள்ளத்தில் இரண்டு ஒழுங்கமைவுகளான நனவு, நனவிலி ஆகிய இரண்டு நிலைகளுமே உள நரம்பு நோய் ஆக்கத்தில் பங்கு கொள்கின்றன. அனைத்து நரம்பு நோய்க் குறிகளும் நனவு நிலையில் வெளிப்படுபவையே என்றாலும் அவை ஒவ்வொன்றிற்கும் நனவிலிக் கூறுகளே காரணிகளாகத் திகழ்கின்றன. அந்த நனவிலிக் கூறுகள் என்ன என்பதைக் கண்டறிவதே உளப்பகுப்பாய்வின் சாரமாகும். பதட்டம் என்பது நனவு நிலையில் நடக்கின்ற உளச் செயலாகும். அதற்குள் பொதிந்து கிடக்கின்ற உணர்ச்சி அச்ச உணர்ச்சியாகும். எனவேநனவு நிலை அச்சமே பதட்டத்தை உண்டு பண்ணு கிறது. இந்த நனவு அச்சத்திற்குக் காரணியாகத் திகழ்கின்ற நனவிலிக் கூறினைக் கண்டுவிட்டால் உழவனின் பதட்டத்திற்குக் காரணம் என்ன என்பதையும் முரடனின் பதட்டமின்மைக்குக் காரணம் என்ன  என்பதையும்  அறிந்துவிடலாம்.

நோயாளிகளின் நனவு அச்சம் அவனின் நனவிலிக்குள் இருக்கின்ற அச்சத்தின் எதிரொலியே என்பதில் ஐயமில்லை. நனவிலி அச்சங்கள் அனைத்தும் குழந்தைப் பருவ வளர்ச்சியில் ஏற்படுகின்ற அச்சங் களாகும். குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற அச்சங்களில் தண்டிப்பு அச்சமே (Fear of Punishment) உள்ளத்தை மிகவும் பாதிக்கின்றது. குழந்தையின் அகநிலை வளர்ச்சியில் தண்டிப்பு என்ற கருத்தாக்கம் பெற்றோர்களால் உருவாக்கப்படுகின்றது. இதைச் செய் (Demand) அதைச் செய்யாதே (Prohibition) என்று குழந்தையின் உள்ளத்தில் நெறிமுறை திணிக்கப்படுகின்றன. இந்த நெறிமுறைகளின் தொகுப்பே சூபர் ஈகோ ஆகும். பொதுவாக மனிதனின் ஈகோ இயற்கை வழிப்பட்டது. தன்போன போக்கிலேயே செல்கிற வேட்கை உடையது. இதன்படி குழந்தையின் ஈகோ வளர்கிறது அவ்வழியில் சூபர் ஈகோவின் குறுக்கீடு நிகழும்போது தடை ஏற்படுகின்றது. அந்தத் தடையை மீறவே குழந்தை முனைகிறது. அவ்வேளையில் கண்டிப்பு (Threaten) அல்லது தண்டிப்புக்கு (Punishment) குழந்தை ஆளாகிறது. நாளடைவில் சூபர் ஈகோவை மீறுவது குற்றம் என்று உய்த்துணர்கிறது. குழந்தையின் அகநிலை வளர்ச்சியில் குற்றம் என்கிற எண்ணம் ஈகோவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற கருத்தாக்கமாகும். ஏனென்றால் இந்தக் குற்ற உணர்வுதான் ‘தண்டிப்பு’ என்கிற துணைக் கருத்தையும் உருவாக்கி அகநிலையின் செயலையே மாற்றத்திற்கு உள்ளாக்குகிறது.

ஈகோவில் வலிமையான ஈகோ வலிமையற்ற ஈகோ என இரண்டு வகைகள் இருப்பதைப் பார்த் தோம். இவ்விரண்டு ஈகோவும் குற்றம் என்கிற கருத்திற்கு உட்படுகின்றபோது வெவ்வேறு தன்மை களில் பாதிப்பிற்குள்ளாகி அதற்கேற்ப அதன் தன்மைகள் மாறுகின்றன. இம்மாற்றம் நடத்தைகள் மூலம் வெளிப்படுகின்றன. இருவித ஈகோவில் வலிமையற்ற ஈகோவானது சூபர் ஈகோவின் கட்டளைக்கு ஏற்ப நடந்துகொள்கிறது. வலிமையான ஈகோ சூபர் ஈகோவை மீறப்பார்க்கிறது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மீறப்பார்க்கும். இம்மாறுபட்ட செயல்களுக்குக் காரணம் உள்ளது. வலிமையற்ற ஈகோ புறநிலையைச் சார்ந்து இருக் கின்ற இயல்புடையதால் சூபர் ஈகோவாகிய புற நிலையையும் சார்ந்து இருந்து விடுகின்றது. அதேபோல் வலிமையான ஈகோ அகநிலையைச் சார்ந்து இருக்கின்ற இயல்புடையதால் புறநிலை யாகிய சூபர் ஈகோவை பொருட்படுத்தாமல் அதை மீற முயல்கிறது, அப்படி மீறினால் தண்டிப்பு நிகழும் என்பதால் மறைமுகமாகச் செய்கிறது. இந்தக்கட்டத்தில் இரண்டு ஈகோவிலும் குற்றம் மற்றும் தண்டிப்பு ஆகியவை வேரூன்றி விடுகின்றன. ஃப்ராய்ட் கூறுவதுபோலச் சூபர் ஈகோ என்று அகநிலைக்குள் குடிபுகுந்ததோ அன்றே மனிதன் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிவிடுகின்றான். வலிமையற்ற ஈகோவிடம் இக்குற்றவுணர்ச்சி நனவு மனம் வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்து வளர்கின்றது. வலிமையான ஈகோவிடம் குற்றவுணர்ச்சியானது நனவிலிக்குள்ளேயே தங்கிவிடுகிறது.

வலிமையற்ற ஈகோ சூபர் ஈகோவிற்குக் கட்டுப்படவேண்டிய காரணம் தண்டிப்பு அச்சமே ஆகும்.தண்டிப்பு அச்சத்திற்குக் காரணம் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிற விழைவாகும். அதாவது புறத்தைச் சார்ந்து தன்னைக் காத்துக் கொள்கிற செயலாகும். இப்படிப்பட்ட மனநிலையில்தான் பதட்டங்கள் அதிகமாக நிகழ்கின்றன. உழவனின் பதட்டத்திற்கு இதுவே காரணமாகின்றது. உழவனின் ஈகோ வலிமையற்றது என்பதை அவனின் உணர்ச்சிவசப்பட்ட செயல்களின் வழியில் அறியலாம். நனவிலிக்குள்ளே இருந்து தொடர்ந்து வளர்ந்து வருகின்ற தண்டிப்பு அச்சமே உழவனின் பதட்டங்களுக்கும் மாயை எண்ணங்களுக்கும் காரணமாகின்றது. முரடனின் செயற்பாடுகள் இவைகளுக்கு நேர்மாறானவை. முரடனின் ஈகோவானது வலிமையானது. இதனால் பதட்டம் நிகழ்வதில்லை. தொடக்கத்திலிருந்தே அவனுடைய ஈகோ சூபர் ஈகோவை மீறவேண்டும் என்கிற வேட்கையையே கொள்கிறது. அதன் காரணமாக முரடன் சமூகக் குற்றங்களைச் செய்கின்றான்.

அனைவரின் நனவிலியும் குற்றம் என்கிற கருத்திற்கு ஆளாகிறது. இந்தக் குற்ற எண்ணம் இரண்டு வழிகளில் வெளிப்படுவதாக ஃப்ராய்ட் கூறுகிறார். ஒன்று, குற்ற உணர்வு (Gult Feeling) மற்றொன்று குற்ற உய்ப்பு (Sense of Guld) குற்ற உணர்வானது நனவிலியிலிருந்து நனவுமனம் வரை பரவிக்கிடப்பதாகும்.  ஈகோவின் வளர்ச்சியோடு கூடவே இது வளர்ந்து வரும். இப்படி வரும்போது தண்டிப்பு அச்சமும் அது தொடர்பான பதட்டமும் சேர்ந்துவரும். உழவனிடம் இத்தகைய மனநிலை வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். குற்ற உய்ப்பு என்பது நனவிலிக்குள் மட்டுமே பொதிந்துக் கிடப்பதாகும். இந்தக் குற்ற உய்ப்பை ஈகோ பொருட் படுத்தாமல் இருந்தாலும் நனவிலிக்குள் இருந்து கொண்டு நன மன இயக்கங்களுக்குக் காரணி யாக இருக்கவே செய்கிறது. காரணம் குற்றத்தை செய்தால் தண்டிக்கப்படுவோம் என்கிற எண்ணம் ஈகோவிற்கு இருந்தாலும் அக்குற்றத்தைச் செய்யக் காரணம் தண்டிப்பு விழைவே ஆகும். அதாவது தான் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற வேட்கையே ஒருவனைச் சமுதாயக் குற்றங்களைச் செய்ய வைக்கிறது. இந்த எண்ணம் இடிபஸ் சிக்கலில்  (Oedipus Complex) உருவாவதாக ஃப்ராய்ட் கூறுவார். சமூக விரோதிகள், கிரிமினல்கள் அனைவரும் நனவிலிக் குற்றத்திற்கு ஆட்பட்டவர்கள் என்று மேலும் அவர் கூறுவார். அதாவது ‘தான் தண்டிக்கப்படவேண்டும்’ என்கிற உந்தல் அவர்களின் நனவிலிக்க்குள் வேரூன்றிவிடுவதால் இத்தகைய செயல்களைச் செய்கின்றனர். தண்டிக்கப்படவேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதால் அவர்களின் ஈகோபதட்ட நிலைக்கு உள்ளாவதில்லை. இத்தகைய மன நிலையை முரடன் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன் காரணமாகத்தான் தண்டனையைக் கொஞ்சம் கொஞ்சமாக முரடன் பெறுகின்றான். மாறாகஉழவன்  தண்டனையிலிருந்து  விடுபடுகின்றான்.

மேற்கண்ட விளக்கங்களின்படி குற்றம் என்கிற கருத்தாக்கத்தின் இருவிதத் தன்மைகளைக் காணலாம். நனவிலிக்குள்ளேயே இருந்துவிட்டால் தவறுகளைச் செய்யத் தூண்டுவதாகவும் நனவு மனம்வரைவளர்ந்துவிட்டால் தவறுகளைச் செய்யாமல் ஈகோவைப் பார்த்துக்கொள்வதாகவும் அமைகிறது. இந்தஇரண்டு உளச் செயல்களில் மனிதன் எப்படியெல் லாம் நடந்துகொள்வான் என்பதை உழவன், முரடன்கதைகள் மூலம் அறிந்துகொள்ளலாம், முரடனின்அகச்சார்பு ஈகோ வலிமையுடையதே என்றாலும்தண்டிப்பு விழைவைக்கொண்டு இயங்குவதாகும்.உழவனின் புறச்சார்பு ஈகோ வலிமையற்றதே என்றாலும் தண்டிப்பு அச்சத்தின் காரணமாக வாழவேண்டும் என்கிற எண்ணமுடையதாகத் திகழ்கின்றது. அகச்சார் ஈகோவும் புறச்சார் ஈகோவும் குற்றவுணர்ச்சியின் ஆளுகையிலிருந்து தப்புவதில்லை என்பது புலனாகிறது. அகச்சார் ஈகோ புறச்சார் ஈகோ ஆகிய இரண்டுக்கும் இடையே பல அலகுகள் உள்ளன. ஒவ்வொருவரின் ஈகோவும் அவைகளில் ஏதேனும் ஒரு அலகில் அமைந்திருக்கும். அந்த அலகின் நிலைக்கு ஏற்ப நோய்க்குறிகள் வேறுபடும். அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான நோய்க்குறிகள் ஏற்படாது என்பதும் குறிப்பிடத் தக்கது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer