அனாரின் சமீபத்திய கவிதைகளை முன்வைத்து...

ஹசீன் ஆதம்

பகிரு

பகிர்வு

அனார் இந்தகாலத்தில் மிகவும் பிரபலமான கவிஞர் அவர் பற்றி அவர் கவிதை பற்றிச் சம காலத்தில் நிறையப் பேசப்பட்டிருக்கின்றது. அவர் தொகுப்பில்கூடச் சேரன், சுகுமாரன் போன்ற கவிஞர்கள் அவரைப் பற்றி எழுதியிருக்கின்றார்கள். அவர்கள் அனார் முக்கியமான கவிதை ஆளுமை என்பதைச் சுட்டிக்காட்டி எழுதியிருக்கின்றார்கள்.

இப்போது நுஃமான் சேரும் அதனைத் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். நாம் செய்யவேண்டியதை அதனை விரிவாக விவாதிக்க வேண்டியதுதான். அதனை விரிவாக விவாதிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அனார் மூடி மறைத்து அலங்கரித்து வைத்திருக்கும் அந்தத் தங்கக்கூண்டு பற்றி நாம் விரிவாகப் பேசவேண்டும். அவர் கவிதையில் சஸ்பென்சும், பூடகமும் அதுதான். அதனை விரிவாகப் பேசினால் அவர் இன்னும் கடுமையாக வதைக்கப்படலாம் என்ற எண்ணம்தான் வருகிறது.

அதனால்தான் அவர் தன் எல்லைக்கோட்டைத் தாண்டி வருவதில்லை. அவர் நிச்சயமாகக் கவிதையால் மாத்திரம்தான் தன்னை வெளிப்படுத்தும் போராடும் மனுசி. அதற்கு வெளியே வரும் கோட்டை அவர் உடைத்து தனது சுதந்திர வானில் பறக்க நம்பிக்கையில்லாதவர்.

அவர் சுதந்திரத்தை அடைவதற்காகக் கொடுக்கும் விலை இன்றைய வேதனையைவிடக் கடுமையானதாக இருக்கும் என்றே நம்புகிறேன். இது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டால் நான் முதலாவது அவரது கவிதை வாசகன், இரண்டாவது நண்பன், மூன்றாவது யாரிடம் அவர் சுதந்திரத்தைப் பறிகொடுத்தாரோ அந்தச் சமூகத்தின் பிரதிநிதிகளில் ஒருவன். - அதற்காக நான் வெட்கப்படுகிறேன். அது எனக்கும் கடக்க முடியாத சஞ்சலமுள்ள ஆத்மாவாகத்தான் இருக்கிறது.

அவர் கவிதை திட்டவட்டமாக நான் நீ என்ற இருதுருவங்களாலானது. அவர் சக பயணி அதேநேரம் இந்தச் சமூகத்தின் முகம். அதனைத் திரும்பத் திரும்ப எழுதிப்பார்ப்பதுதான் அனாருக்கு வேலை. தொடர்ச்சியாக அதனை 150 கவிதைகளிலும் 150 விதமாக எழுதிப்பார்த்து வெற்றியடைந்திருக்கிறார்.

முன்னர் இருந்ததைவிடவும் இப்போது அதனை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் குறைந்திருக்கிறது. இளமை செல்வதால் தைரியம் குறைந்திருக்கலாம், சமூகத்தில் அந்தஸ்து கூடுவதாலும் ஏற்பட்டிருக்கலாம். பிள்ளைகள் வளர வளர தகர்க்க விரும்பும் குடும்பம் எனும் கோட்டைச்சுவர்கள் உயர்ந்துகொண்டு வரலாம். அப்படியான காரணங்களால் இருள்மை விழும் வார்த்தைகள் செதுக்குதல்கள் மிகவும் அழகானதாக இருக்கிறது. கடுமையான உழைப்புக்கூடிய வேலைப்பாடுகளையுடைய கவிதைகள் அவை. ஆனால் அவை மனம் இயைந்து இப்பொழுது அவர் மனம் அந்த வேலைப்பாடுகளை மிகவும் இயல்பாகக் கொப்பளிக்கின்றது. அவை ஒவ்வொரு படிமமும் மிகவும் கனிந்த மன நிலையில் இருக்கிறது.

 இருப்பின் பின்னால் வாழ்வின்வெளி
  ஓய்விடத்தை நோக்கிப்பயணிக்கின்ற
 சூரியன் மீதும் 
 விரைந்து செல்லத் தூண்டப்படும் 
 காலைப்பொழுதின் மீதும்
 காற்று வெளியின் 
 ஒவ்வொரு துணிக்கையிலும் 
 என் வேட்கைகளை எழுதுகிறேன்
  இடிபாடுகளை அதிகாரத்தை
  வெறுமையை எழுதுகிறது காலம்
 வெடித்துச் சரிந்து விழுந்த 
 கற்சுவர்களின் புழுதி
 சாக்கால முகத்தைத் துலக்குகின்றது
  சுற்றியெழுப்பப்பட்ட சுவர்களின் மேலால்
  என்னுடைய பெருமைகள் 
 தன்னம்பிக்கைகள் சுயமரியாதைகள் 
 வளர்கின்றன
 இணைக்கவும் விடுபடவுமான
 நிர்ணயங்களோடு 
 சாபத்தை உடைத்துப் பூத்திருக்கின்றேன் 
 மீளும் உரிமை கோரி 
 அற்றலை உறுதி செய்து
 என் உள்ளம் திறந்துகொள்கின்றது 
 பூமியில் முடிவற்ற பிரமாண்டமாய் 

அனாரை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும் சுமார் 10 வருடகாலமாக நண்பர்களாக இருக்கிறோம். நாங்கள் முரண்படக்கொண்டது குறைவு. நேரில் சந்திக்கக்கூடியவனாக இருக்கிறேன். அவர்போல் வாசிக்கின்ற நண்பர்கள் எனக்கு இலங்கையில் கிடைப்பது அரிது.

அவர் நிறையப் புத்தகங்களைத் தேடி வாங்குகிறார். எல்லாவற்றையும் படிக்கவேண்டும் என்பதைவிடத் தேர்ந்து நல்லது எது என்று யாரும் அறிமுகம் செய்துவைத்தால் படிக்கவேண்டும் என்ற எண்ணமுள்ளவர். தீவிரமாக ஓங்கி ஒலிக்கும் குரல்கள் மீது நம்பிக்கையற்றவர். தன்னை இந்த நிலையில் தன் எழுத்து அமைப்பிலிருந்து உடைத்துப் போடுகின்ற படைப்புகளுக்காக ஏங்குகின்றவர். ஆனால் தற்கால எழுத்துகள் எந்தமொழி எந்த நாடாக இருந்தாலும் ஒரு முடிச்சுக் கோர்வையில் இருப்பதுபோலத்தான் இருப்பதாக அலுத்துக்கொள்வார்.

அதனால்தான் அவர் தன் மனதை எழுதும் மொழியைக் கண்டுகொண்டார். அவை வார்த்தைகளால் மலர்ந்து கனவு போலத் ததும்பிக்கொண்டு இருக்கிறது. யாராவது அவரைக் கீறும்போது அல்லது அவர் வலியை உணரும்போது அந்தக் கனவில் மிதக்கும் நினைவை காகிதத்தில் அமர்த்திவிடுகிறார்.

அவற்றில் இருக்கும் வார்த்தை ஒழுங்கு அது மனதின் அமைப்பு. அது ஒரு நவீன ஓவியம் போல எண்ணத்தின் நிறம் மற்றும் கோடுகள். அவர் “பெரும் கடல் போடுகிறேன்” தொகுப்பில் கருமை, நீலம், ஒரேன்ஜ், சிவப்பு, எலுமிச்சை நிறப்பூ, நீலத்தேன் என்று நிறங்களை எழுதும் அளவிற்கு அவர் மனதின் பிரதிபலிப்பை நேரடியாக எழுத்தில் பதியவைக்கும் முறைக்கு வந்திருக்கிறார். அதேபோல அவர் படிமங்களில் இஸ்லாமிய பண்பாட்டின் நிலக்காட்சியும் வந்து விழுகிறது.

இப்போது அவர் எல்லா முஸ்லிம் பெண்களைப்போல உருமாறத் தொடங்கிவிட்டார். அவர் இப்போது எழுதும் கவிதையில் ஒரு சூபி கிழவிபோல நடந்துகொண்டு ஹதீத் கலரிக்கும் போவதற்கான நிலைப் பாட்டிற்கு வந்துவிட்டதாகவும் தோன்றுகிறது.

அவருடைய இந்த நீண்ட கவிதைப் பயணத்தில் ஒவ்வொரு கவிதையும் முக்கியம், இஸ்லாமிய பின்புலத்தில் ஒரு பெண் இளமைக்காலத்திலிருந்து அதனைக் கடக்கும் வரை செய்யும் போராட்டம் எத்தகையது என்பதற்கான சாட்சியம். அனாரின் கவிதைகள் தனித்தனி படிமங்களாகப் பார்த்து ஆராய்ந்தால் அவை செய்யும் மாயம் பற்றி மிக நீண்ட கலந்துரையாடலையே செய்யமுடியும்.

அவருக்கு வார்த்தைக் கற்பனை ஊற்றுக் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. தன் வரலாறு போல எழுதப்படும் படைப்புகளில், கதைசொல்லி தனது தரப்பு மேன்மைகளை உயர்த்திப் பிடித்து, தன்னுடன் வினையாற்றும் பிற பாத்திரங்களின் கெடுகுணங்களை வெளிச்சமிட்டுக் காட்டி, தன்னை மகாத்மாவாகப் புனிதப்படுத்திக் காட்டும் படைப்பூக்கமற்ற இலக்கிய அங்கங்களை வாசிக்க நேர்கையில், சில பக்கங்களிலேயே சலிப்பு மிகுந்து, பிரதிக்குள்ளிருந்து வெளியேறும் நிலை ஏற்படுவதுண்டு.

தனக்கு நேர்ந்த வாழ்வியல் அனுபவங்களை, உள்ளது உள்ளபடி விவரித்துக் காட்டும் எழுத்து முறையும் சிறந்த இலக்கியமாகாது. திருமண நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வீடியோ காமிராக்காரர், பந்தியில் வியர்வை வழிய வழிய அவசரமாகச் சாப்பிடுவோரையும், மொய் எழுதுபவர்களையும், மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும், அப்படி அப்படியே படம் எடுத்து தந்துவிடுவார். அத்தகைய வீடியோக்காரர்களைக் கலைஞர்கள் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?

ஒரு மிகச்சிறந்த படைப்பாளி, தனக்கு நேர்ந்த மறக்கவியலா வாழ்க்கைச் சம்பவத்தை, இருளாழத்தில் பதுங்கியிருந்து, தனக்குள் உறுத்திக்கொண்டேயிருக்கும் அசாதாரணத் தருணத்தின் அவலத்தைக் காற்று விசிறலில் கண்திறக்கும் தீக்கங்குபோலச்சட்டெனச் சந்திக்க நேரும் எதிர்பாராத வாழ்க்கை நிகழ்வில் உறக்கம் கலைந்து குகைவிட்டு வெளிவரும் துயரார்ந்த நினைவின் மூர்க்கமான நிழலுருவின் அசைவை, அதன் உபநிகழ்வுகளோடு விரித்தெடுத்து, தன் கற்பனை சக்தி மற்றும் படைப்பாற்றலின் திறனால், அக்கதை தன்னை நீடிக்க விழையும் பல்வேறு வாய்ப்புகளை நோக்கி பயணிப்பதாகி, அப்புனைவுப்பரப்பில், தன்னில் நிகழும் மன இயல்புகள், குணத்திரிபுகள் மற்றும் வாழ்க்கைப்போக்கில் நீர்த்துப்போகும் உக்கிரமான சபதங்கள் இவற்றை எழுதியெழுதியே கண்டடைவதாகத் தன்னயே உளவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக்கொள்கிறான்.

இத்தகைய சுயவிசாரணையின் வாக்குமூலங்களில் வாசகனும் தன் மன இயல்புகளின் அசலான தன்மைகளை அடையாளம் கண்டு, பிரதியை விட்டு வெளியேறும் தருணத்தில், தன் பழைய ‘நான்’ என்பதை அங்கே விட்டு விட்டு, துப்புரவு செய்யப்பட்ட மனம் அடைந்து தூய்மை பெற்றவனாக உணர்கிறான்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer