பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
கற்றுக் கொள்பவன்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

முதலில் மணல் மீதும் பிறகு பாறை மீதும் கட்டினேன்
பாறை நொறுங்கி வீழ்ந்தபோது
நான் இனியும் எதையும் கட்டவில்லை.
பிறகு நான் அடிக்கடி கட்டினேன்,
மணல் மீதும் பாறையின் மீதும்
அது வந்த விதத்திலேயே
ஆனால்
நான் கற்றுக் கொண்டுவிட்டேன்.

நான் என் கடிதத்தை நம்பி ஒப்படைத்தவர்கள்
அதைத் தூர எறிந்துவிட்டனர்.
ஆனால் நான் யார் மீது கவனமே செலுத்தவில்லையோ
அவர்கள் அதை என்னிடம் திரும்பக் கொணர்ந்தனர்.
அவ்வாறும் நான் கற்றேன்.

நான் கட்டளையிட்டது செய்து முடிக்கப்படவில்லை
நான் வந்து சேர்ந்த சமயம்
அது தவறானது என்பதைக் கண்டேன்.
சரியான விஷயம்
செய்யப்பட்டிருந்தது.
அதிலிருந்தும் நான் கற்றேன்.

வடுக்கள் வலி தருபவை.
இப்பொழுது குளிர்ந்திருக்கிறது
ஆனால் நான் அடிக்கடி கூறினேன்:
சவக்குழி ஒன்று மாத்திரமே
எனக்குக் கற்றுத்தர ஏதுமில்லாமல் இருக்கும்.

From The First Years of Exile 1934-1936

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer