தயை

ரபேல் கிறிஸ்டி செல்வராஜ்

பகிரு

முழு ஆண்டு விடுமுறையைத் தடுக்கப் பார்க்கிறது 
அம்மாவின் ஓயாத முனகல்
மெல்லிய கையுறைகளை
முதன்முதலில் பார்க்கிறேன் 
‘கையுறையுடன் தாதி’
நான் வரையப் போகும் எண்ணெய் ஓவியத்தின் பெயர்
தாதிகளின் முலைகள் புட்டங்கள் என்று 
நூற்றுக்கணக்கான ஓவியங்கள் பின்தொடரும்
நாளங்களில் புகுந்து இரத்த அணுக்களை ஏமாற்றிய 
ஊசிகளின் கதைகளை கேரள தாதிகள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்
உடைந்த பாறைத்துகள்கள் திடீரென 
நீரை உறிஞ்சியது போல மலத்துண்டுகள்
வெல்டன் சேச்சி 
எனக்கு விடுமுறை கிட்டியது
நாசித்துவாரங்களில்  நிரந்தர குடல் மணம்
கிளம்பும் முன் நான் தேர்ந்தெடுத்த 
சொற்கற்கள் அம்மாவின் நெத்தியை
பதம் பார்த்திருக்க வேண்டும்
இதயம் கசிந்தது என பின் ஒரு கனவில் வந்து சொன்னாள்
வசதியாக அமர்ந்து ஆடை மாற்றும் உடல்களை 
வேடிக்கை பார்ப்பது போல 
ஜன்னல் இருக்கையில் இருந்து 
விடியலைக் காண்கிறேன் 
கருப்பு அடர் நீலத்தை ஒரு வெளிர் மஞ்சள் கீற்று குறுக்கிடும்போது 
அம்மா இறந்துவிட்டாள் என்று உறுதிகொண்டேன்
வானம் விடிவதை என்னால் எழுத முடியும்
பிறகு நான் என் விடுமுறைக்கான பரதீஸை அடைந்தேன் 
தாத்தா... என்று ஓடிச்சென்று 
செய்தி அறிவித்து அழைத்து வந்தேன்
வார்த்தைகளில் இருந்த வயதிற்கு மீறிய பிரசங்கங்கள் விலகி
தயை கூடிய நாள் அது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer