“ஓவியத்தின் முதல் நோக்கம், அவை உலகப் பொது வெளிப்பாடாக இருக்கவேண்டும்.” - பைட் மாண்ட்ரியன் (Piet Mondrian)
உலக ஓவிய வெளிப்பாட்டுத் தளத்தில் நவீன இயக்கங்களின் போக்குகள் என்பது, எல்லாக் கலைகளிலும் நேர்ந்தது போலவே, அணுசக்தி யுத்த அச்சுறுத்தலுடன் கூடிய வாழ்வின் விளிம்பில் இருந்தும், போருக்குப் பிந்தையதான வாழ்வில், அதிகாரம் கட்டியெழுப்பும் ஒரு விசித்திரமான உலகத்திற்குள் வாழ்ந்துகொண்டே தத்தமது திறவுகோலைக் கண்டெடுப்பதாகவும் தோன்றியிருக்கிறது. அதே சமயம் அரச மாளிகையை மையமிட்ட படைப்புச் சுருக்கங்களிலிருந்தும் வெளியேறி மீண்டிருக்கிறது என்பதே உண்மை. அங்கிருந்து வளர்ந்தெழுந்துகொண்டிருக்கும் பல்வேறு பாணிகளிலும் ஓவியப் படைப்புகளின் அடிப்படையிலும், வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது “தன்னுள் உரையாடி, முற்றிலும் புதிய வெளிப்பாடுகளைக் கண்டெடுத்து, கண்டெடுத்ததன் அளவுகளைக் கூட்டியும் குறைத்தும் என ஒரு புதிய நிலையில் நிறுத்திக்கொள்வது எனத் தொடர்கின்றன.”
தமிழ் நிலப்பரப்பில், சென்னை ஓவியக் கல்லூரியின் பயிற்சியும் பரிசோதனை முயற்சிகளும் பல வெளிப்பாட்டு வடிவங்களை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கும் ஓவியங்களைச் சேகரிப்பவர்களுக்கும் தந்த வண்ணம் உள்ளது யாவரும் அறிந்ததே. அவ்வரிசையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆலங்குடி சுப்பிரமணியனின் ஓவியங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஏனைய ஓவியர்களைப் போலவே இவருடைய கல்லூரிக் காலத்தின் பயிற்சி ஓவியங்கள் வழி தன் படைப்பு மனதைக் கண்டடைந்தவராய் இருக்கிறார்.
குறிப்பாக, “நிலப்பரப்பு ஓவியங்கள், முக உருவங்கள் மற்றும் நீர்வண்ண ஓவியங்கள் எனப் பயிற்சிகள் எவ்வளவு தூரம் தன்னை அழைத்துச் சென்றதோ அதுவரை அதனுள் திளைத்துத் திளைத்து அங்கிருந்து மெல்ல வெளியேறியிருக்கிறார்”.
ஆம், “கலை மிகவும் அகநிலையின் பக்கம் சார்ந்திருப்பது, புறக்காட்சிகளைப் பார்த்து வரையும்போதுகூட, அதில் தெறித்து எழும் அகநிலைக்காரணிகளைக் கண்டுகொள்ளும்போது அத்தகைய வெளியேற்றங்கள் பல புதிய பயணப் பாதைகளையும் காண்பிக்கத் தவறுவதில்லை. அதே சமயம், இதெல்லாம் படைப்பாளிகளின் மனம் சம்பந்தப்பட்டது என, பார்வையாளர்கள் ஒதுங்கிக்கொள்ளவும் அவசியமில்லை. ஏனெனில், தொடர் ஓவியப் பார்வையாளர்களுக்கும் தான் பார்க்கும், உணரும் ஓவியங்களின்வழி தன்னிலிருந்தும் தன் நிலையிலிருந்தும் வெளியேறி வாழ்வின் புதிய பாதைகளுக்குப் பயணப்படும் சாத்தியங்களையும் உணர்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. அவ்வகையில், ஆலங்குடி சுப்பிரமணியனின் நீண்ட கால ஓவிய வரிசைகளைப் பார்க்கும்போது, அவருடைய அகநிலையில் இருந்து எழும் வண்ணங்களின் பயன்பாட்டில், இந்த வெளியேற்றச் சாத்தியங்கள் மிகவும் முக்கியமான காரணிகளாய் இருக்கிறது.
ஆலங்குடி சுப்பிரமணியனின் ஓவியங்கள் கல்லூரிக்காலப் பயிற்சி முறைகளில் இருந்து வெளியேறி தன் குழந்தைப்பருவம் அதிக அளவில் திளைத்த தன் நிலப்பரப்பின் மிக முக்கிய வெளியான ‘சித்தன்ன வாசல்’ குகையோவிய வண்ணக்கலவைகளிலும் கதை கூறும் முறைகளையும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில், ‘அன்பு’, ‘மஞ்சள்நிறப் பெண்’, ‘தடாகம்‘, ‘தடாக மலர் சேகரிப்பவள்’, தடாக விளையாட்டு’ எனப் பாரம்பரியக் கதை சொல்லல் முறைகளில் கண்டெடுத்த முறைகளுக்குள்ளிருந்தே புதிய, அரூப வெளிகளைக் கண்டடைந்திருக்கிறது.
இந்த ஆரம்ப காலப் படைப்பு வெளிப்பாட்டில் இவரிடமிருந்த கதை சொல்லும் முறைகளிலிருந்து ஒரு நேரத்தில் மாறுபட்டு, அதிலுள்ள அரூபப் பாடல்களைக் கண்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகவே, உருவங்களைத் தவிர்த்த ஒரு புதிய இசைகளைப்போல ‘புனிதமான உணர்வின்பம்’ எனும் தொகுதிக்கான வெளிகளைக் கண்டடைந்திருக்கிறார்.
இத்தகைய வெளிப்பாட்டுப் பாதைகள் பற்றி ஓவிய உலகம் என்ன பொருள் கொண்டுள்ளது என்பதைக் கண்டுகொள்வதும் மேலதிக புரிதல் உணர்விற்கு உகந்தது. அதாவது, தன்னைச் சுற்றி ஒலிக்கும் ஓசைகளை உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஒரு புதிய இசையை உருவாக்குவது என்பதாகச் சொல்லலாம். ஓவியங்களில் ‘அரூபப் பாடல்கள்’ என்பது சுயத் தோற்றத்தை வரையறுக்கும் ஒரு சொல், ஓவிய உலகில் இன்னும் தலைமுறைகளாக அதன் தோற்றம் மற்றும் பொருள் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்கக் கலை சேகரிப்பாளர் லாரி ஆல்ட்ரிச் 1969 இல் ‘லிரிக் கல் அப்ஸ்ட்ராக்ஷன்’ (Lyrical Abstraction) எனும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார், அதைத் தொடர்ந்து பிரெஞ்சு கலை விமர்சகர் ஜீன் ஜோஸ் மார்கண்ட், 1947 இல், அமெரிக்காவில் அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசத்தைப்போன்ற ஓவியத்தில் வளர்ந்து வரும் ஐரோப்பியப் போக்கைக் குறிப்பிட, ’அப்ஸ்ட்ராக்ஷன் லிரிக்’ (Abstraction Lyric) என்ற சொல்லின் மாறு பாட்டைப் பயன்படுத்தினார். இந்த வார்த்தையின் இரண்டு பயன்பாடுகளும் புறநிலை யதார்த்தத்துடன் தொடர்பில்லாத புதியதொரு உணர்ச்சிகரமான, தனிப்பட்டதொரு புதிய வெளிப்பாடுகளால் வகைப்படுத்தப்படும் கலைவெளியைக் குறிக்கின்றன.
அவ்வகையில், ஆலங்குடி சுப்பிரமணியனின் இந்த ஆரம்பகால அரூப ஓவியங்களில் என்ன அர்த்தம் இருக்கும் என்பது எனக்குத் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் அந்த வண்ணவெளிகளையும் அதனுள் அசையும் உருக்களையும் அணுகினோமெனில். அழகியல் அல்லது புறநிலை உலகம் பற்றிய முன்முடிவுகள் இல்லாமல், சுதந்திரமாக ஓவியம் வரைவதன் மூலம், தெரியாத ஒன்றைத் தன் படைப்பின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அவற்றைக்காணும் நம்மிடமும் புதிய புதிய சுதந்திர வெளிகள் திறவுகொள்வதன் சாத்தியங்களையும் கண்டுணர முடியும். இதைத்தான், மிகவும் செல்வாக்கு மிக்க கலை விமர்சகர்களில் ஒருவரான ஹரோல்ட் ரோசன்பெர்க் (Harold Rosenberg), “இன்று, ஒவ்வொரு கலைஞரும் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.
நம் காலத்தில் கலையின் அர்த்தம் சுய உருவாக்கத்தின் இந்தச் செயல்பாட்டில் இருந்து பாய்கிறது.” என்கிறார். இவ்வகையில்தான், ஆலங்குடி சுப்பிரமணியனின் வண்ணப்பிரவாக ஓவிய வரிசைகளை நாம் காண முடிகிறது. முன்முடிவுகளற்ற இந்தப்பயணங்களின் வழி முன்னர் தானும் பார்வையாளர்களும் பழக்கப்பட்ட அனுபவங்களில் இருந்து வெளியேறி வண்ணங்களின் செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித நிர்வாணத் தன்மையின் பயணப் பாதைகளைக் கண்டடைய வேண்டுமென உழைத்திருக்கிறார். அதை அவர் சென்றடைந்ததன் வழி அவ்வோவியங்களைக் காணும் நமக்கும் புதியதொரு அனுபவத்தைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறார். குறிப்பாக, அத்தகைய படைப்புகளில் ததும்பும் மென்மையான மற்றும் துடிப்பான வண்ணங்களில் உள்ள உணர்வுப்பூர்வமான, அன்பின் மடிப்புக்கள் எல்லாம் கலைஞரின் தொடுதலின்போது எழுந்த மனநிலைகளின் அசைவு உண்மைகள்தான் எனினும் இந்த வகை ஓவியங்களில் எப்போதும் தெரியும், ‘தன்னுள் நீடித்திருக்கும் பிடிமானங்களைத் துறத்தல்’ என்பதன் வழி மனித வாழ்வின் பேருண்மைகளாக எழுந்து நிற்கின்றன. இந்தப் படைப்புகளை ஒரு செயல் ஓவியங்களுடன் தொடர்புபடுத்தலாமா? எனும் கேள்வி எழும் போதே, இவரது வண்ணக் குழைவு ஓவியங்கள் மயக்கஅணுகுமுறையோடு இயைந்த மாய உணர்வுச் செயல்பாட்டுடன் தொடர்புடையது என்ற பதில் நம்மை வந்தடைகிறது. அதுபோல் இவருடைய ஒற்றை வண்ண ஓவிய வரிசைகளும் கவனிக்கத்தக்கதாகவே இருக்கின்றன. பொதுவாக ஒற்றை வண்ணங்களில் உடல்களைத் தேடியெடுக்கும் முயற்சியாக இவ்வோவியங்களைக் காணமுடிகிறது. அத்தகைய தேடல் நம்மிடம் வந்து சேரும்போது, நமக்குள் அர்த்தமுள்ள ஆற்றல் மற்றும் பால் பாகுபாடற்ற காட்சி அல்லது மனோதத்துவ நுண்ணறிவு ஆகியவற்றின் உணர்வை வழங்கத் தொடங்குகின்றன. குறிப்பாக, நேரடிக் கருத்துகளைக் கூறுவதற்கு மாறாக, மூளை அலைகளால் உருவாக்கப்பட்ட வடிவங்களின் வித்தியாசம் இவ்வரிசை ஓவியங்கள் எனவும் சொல்லலாம். இப்படி, ஆலங்குடி சுப்பிரமணியன் தனது சொந்த மனதின் காட்சி ஆய்வுக்குத் தன்னைத்தானே உட்படுத்திக்கொள்வதே அவருடைய தற்காலப் படைப்புகள் எனலாம். இவருடைய கடந்த இரண்டு ஆண்டு காலப் படைப்புகளில் மனிதர்கள் புழங்கும் இயற்கையின் உருவங்கள், வடிவங்களில் இவர் ஈர்க்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது, சிறிய அளவிலான படைப்புக்கள் என்றாலும், புதிய பாதைகளில் தெரியும் பல காட்சி மொழியை உருவாக்கித் தருகிறார், அவ்விதம் அப்படைப்புகளில் பரிணாமத்தைக் கடந்த காலத்துடன் ஒரே நேரத்தில் தொடர்பையும் நவீன உலகத்தின் மனநிலையிலிருக்கும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தி, அவர் ஒரு அழகியல் நிலையை நமக்குக் காணத் தருகிறார். இவ்விதம் படைப்புகள் வரிசையில், ஒவ்வொன்றிலிருந்தும் வெளியேறி தற்போது முற்றிலும் புதிய முறைகளில் வினைபுரிந்து கொண்டிருக்கும் ஆலங்குடி சுப்பிரமணியன் தனது பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக, “சுவாரசியமான தொடர்ச்சியுடன் என் படைப்பு வெளியேற்றம் மனிதர்களின் வளர்ந்து வரும் யதார்த்த உணர்விற்குச் சாட்சியமளிக்கிறது. வாய்மொழியாகச் சொல்ல இயலாத காட்சி அசைவுகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறேன். அதன் யதார்த்த ஆவலே என் கலையில் பிரதிபலிக்கிறது” என்று சொல்கிறார்.
தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் மற்றும் பல இலக்கிய வடிவங்களின் அட்டைப்படங்கள் என இவரது ஓவியங்கள் பரவலாகப் பயணப்பட்டு வருவது ஒருபுறம் இருப்பினும் கண்காட்சிகளுக்காகத் தொடர்ந்து பல வரிசை முறைகளை உருவாக்குவதே தனக்கான செயல் கணங்கள் என இயங்கி வருகிறார். இவருடைய தற்கால ஓவியங்களின், மேற்பரப்புகளில் பல உடல்களின் அசைவு அடையாளங்களைக் காணமுடிகிறது. அதே சமயம் அந்த உடல்கள் எவ்வாறு நகர்கிறது, அது அவ்வாறு நகர்வதற்கு என்ன காரணம்? உடல் எவ்வாறு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது? எதனால் பார்க்கும் நமது மனக்கிடக்கையின் உட்பரப்புடன் தொடர்பு ஏற்படுகிறது? என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணிகளைத்தேடி நேரம் கூட்டி அவ்வோவியங்களுக்குள் செல்வோம் எனில், சில உணர்வுப் புரிதல்கள் நம்மை வந்து சேருகின்றன. அதாவது, வண்ணங்களின் பிரயோகக் குறியீடுகளில்தான் இவர் படைப்பின் சாராம்சம் இருக்கிறது. அதுதான், இவரது ஒவ்வொரு படைப்பிலிருந்து எழும் உடல்களின் குறியீட்டு இயக்கங்கள். ஓவியரின் அக உள்ளிருப்பின் சாரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும் படைப்புவெளியின் மேற்பரப்பில் தெரிவிக்க, வினையாற்றும் கணங்களின் மாயமே, படைப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நுட்பமான அடையாளத்தை விளைவித்திருக்கிறது. ஒரு குழப்பமான குறியீடு வண்ணங்களின் மதிப்பீட்டில் அவ்வுடலின் குழப்பத்தை நமக்கு விளைவிக்கிறது. விரக்தியான உடல்கள் வெற்றிடமான அடையாளங்களைக் காட்சியின் சலனத்தால் நமக்குள் ஏற்படுத்துகின்றன. இதற்குப் பேருதாரணமாக 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது 2021 வரையிலான இவரது படைப்பு வரிசைகளைச் சுட்டலாம். அதில் வண்ணங்களும் ஒரு நிறப் படைப்பும் அடங்கும். ஆலங்குடி சுப்பிரமணியன் எனும் ஓவியரின் இவ்வாறான மெனக்கெடல்கள், உடனடியாகச் சமூகத்தில் யாதொரு புரட்சிகர மாற்றத்தைத் தூண்டப்போவதில்லை. அதே சமயம், ஹரோல்ட் ரோசன் பெர்க்கின் வார்த்தைகளில், செல்வதானால் “அந்தச் செயல்பாட்டுக் கணங்கள் ஒரு ஓவியம் மட்டும் அல்ல, அது ஒரு நிகழ்வும் கூட” எனும் பார்வையில் பார்க்க முடியும். ஆம், ஓவியமெனும் தொடர் நிகழ்வில் திளைத்து தன்னுடல் எனும் படைப்புகளைப் படைத்துக்கொண்டிருப்பதும் மனிதவாழ்வின் புரட்சிகரப் பக்கங்களில் ஒன்றுதான். அதனால்தான், வாழ்க்கையின் ஆற்றலையும் இயக்கத்தையும் கேன்வாஸில் தெரியும் வகையில் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.
படைப்பின் முன் பயணங்களிலிருந்து வெளியேறி, தற்போது ஆலங்குடி சுப்பிரமணியன் திறந்திருக்கும் பாதை புதியது. ‘பொருட்களற்ற பொருட்களின் உறைநிலை’ எனும் வரிசையில் வரைந்துகொண்டிருக்கிறார். இதில் இவரது முந்தைய படைப்பின் உருவங்கள் மற்றும் நிலப்பரப்புகளை விட்டுவிட்டு, ‘பல வடிவங்களின் கூட்டு’ எனும் நிலையைக் காண்கிறார். இவ்வரிசையின் முதல் ஓவியத்தில், வெதுவெதுப்பான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடது புறத்தில் இருந்து வரும் விசித்திரமான கருப்பு நிலை மற்றும் கீழ் பகுதியில் நீல நிறத்தின் துலக்கமான சுழல்களால் சிதைக்கப்படுகின்றன. மங்கலான விளிம்புகள், பிரிக்கப்பட்ட வண்ணத் தொகுதிகள் மற்றும் செவ்வகப் பதிவேடுகளின் தொடக்கங்கள் ஆகியவற்றை வடிவங்கள் வண்ணங்களாகக் கூடுவதைக் காணலாம், அதே போல் வண்ணப் பிரயோக அளவு மற்றும் தளத்தின் அளவுடன் சில சோதனைகளையும் தொடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. இவை முற்றிலும் பிரதிநிதித்துவமற்ற ஓவியத்திற்கான முன்னேற்றத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையைக் குறிக்கிறது. அது முற்றிலும் தீர்க்கமான விஷயத்துடன், அவர் தனது வாழ்க்கையின் சிந்தனைக்குரிய அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது: செங்குத்து மற்றும் கிடைமட்ட வடிவங்களுக்கு இடையே இடம் மாறும் உறவு; முக்கியமாக இருண்டதொரு பிரகாசமான நிறத்தின் கண்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உருவம் முற்றிலும் மறைந்துவிட்டது, ஒரு விசித்திரமான, வெடிக்கும் வண்ணத் துறைகளைத் தவிர இவருடைய தற்காலப் படைப்புகளில் வேறு எதுவும் இல்லை. படைப்புக்கூறுகள் என்பது - முன்புறம் மற்றும் பின்புறத்திற்கு இடையே பண்பு ரீதியாக வியத்தகு உறவுகளைக் கொண்டுள்ளது; ஒளி, இருள் - ஆலங்குடி சுப்பிரமணியன் பேச்சில் முன் வைக்கும் உடல்கள், நிலங்களின் உறவுகள், வாழ்வும் மரணமுமாய்க் கேன்வாஸின் மையத்தில் ஒன்றிணைகின்றன. இப்படைப்புகள் எல்லாம், நாம் கண்காட்சிக்கூடத்தில் இடைவெளியின் துணையுடன் நின்று ஊடுருவிச் சென்று பார்த்து அனுபவம் பெற்றுக்கொள்ளவேண்டியதாய் இருக்கின்றன. அப்போது ஆலங்குடி சுப்பிரமணியனின் படைப்புக்களால் நம் சிந்தையில் அதுவரை காணாத புராண உலகம் திறவுகொள்வதை நம்மால் உணர முடியும். அவ்வுலகில் பிரிவினை அற்ற புனைவுகளும் உலக உடல்கள் கரைந்து போகும் பல அறிவியல் புனைகதைகளும் மோதுகின்றன, அம்மோதல்கள் நிகழ்காலத்தில் பார்வையாளர்களான நம்மை நமக்குள் எளிதாகக் கண்டுபிடிக்கும் பாதைகளை உருவாக்குகின்றன.
எனவே, வாய்ப்புக் கிட்டும்போது ஆலங்குடி சுப்பிரமணியனின் படைப்புகளைக் கண்டு உணர்ந்து இன்றைய நம்மிலிருந்து வெளியேறி, அகக்காட்சிகளின் புதிய பயணப்பாதையில் பயணிப்போம்.
ஆங்கில மொழியில் எழுதி ஆங்கிலேயக் கவிஞர்களுக்கு இணையான பெயரைப் பெற ஒரு தெற்காசியக் கவிஞனால் முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக இருப்பவர் டவ்கிலியன் என்ற புனைப்பெயரைக் கொண்ட ஹோஸே கார்சியா வில்லா. ஆங்கிலத்தில் எழுதிய இந்தியக் கவிஞர்களை வகைப்படுத்தும்போது இந்தோ - ஆங்கிலக் கவிஞர் என்ற அடைமொழி தரப்படுகிறது. இது அமெரிக்காவிலேயே பாதி காலத்தை வாழ்ந்த ஏ.கே.ராமானுஜனில் தொடங்கி நிஸீம் எஸக்கீல் வரையிலான கவிஞர்களுக்கு ‘ஆங்கிலத்தில் எழுதிய இந்தியக் கவிஞர்கள்’ என்ற வகைப்பாடுதான் தரப்பட்டு வந்திருக்கிறது. தவிர ஏ.கே.ராமானுஜன் கவிதை தவிர பிற துறைகளான மானுடவியல், மொழியியல், வாய்மொழிக்கதைகள் சேகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
கீ.பி.ஆடன், எடித் சிட்வெல், ஈ.ஈ.கமிங்ஸ் போன்றோருக்கு இணையான இலக்கிய அந்தஸ்து ஆசியக் கவிஞர்களிலேயே ஹோஸே கார்சியா ஒரே ஒருவருக்குத்தான் அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் தேசத்தில் பிறந்த (1908) வில்லா, ஒரு கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் மற்றும் ஓவியர். டவ்கிலியன் என்ற அவரது புனைப்பெயரில் புறா, சிங்கம், கழுகு ஆகியவை மறைந்திருக்கின்றன. தவிர கவிதையாக்கத்திலும் வடிவத்திலும் அதன் ஒலி இயைபுகளிலும் அதுவரை செய்யப்பட்டிராத சில பரிசோதனைகளை அவர் வெற்றிகரமாகச் செய்ததாலும் அவர் அமெரிக்கக் கவிஞர்களுக்கு இணை யானவராய்க் கருதப்படுகிறார். அவரை சிலர் கிரீன்விச் கிராமத்தின் போப் எனக் குறிப்பிட்டாலும் அந்தப் பெயரின் நல்தன்மைகளை தக்கவைத்துக் கொள்ளும் படைப்புத் திறன் கொண்டவராய் இருந்தார் வில்லா.
1929ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ஹெரால்ட் மேகஸின் (Phillipines Herald Magazine) பத்திரிகையில் ‘மேன்-சாங்ஸ்’ (Man-Songs) என்ற பாலுணர்வைத் தூண்டும் கவிதைகள் ஓ.செவில்லா (O.Sevilla) என்பவர் எழுதியதாக வெளியிடப்பட்டன.
மூன்றாவது தொடர் வெளியிடப்பட்ட உடனே ஹோஸே கார்சியா வில்லா பிலிப் பைன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பொது ஒழுக்கமுறைமைகளுக்கு நாசம் விளைவித்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு 50 பெசோ அபராதம் விதிக்கப்பட்டார். பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகத்தின் டீன் ஆக இருந்தஜோர்ஜ் போக்கோபோ அந்தக் கவிதைகள் “பண்பு கெட்டவை மற்றும் ஆபாச மானவை” என்று அறிவித்து அப்போது இரண்டாம் ஆண்டு சட்டம் படித்துக் கொண்டிருந்த வில்லாவை பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிக நிறுத்தம் செய்தார். பிலிப்பைன்ஸ் ஹெரால்ட் பத்திரிகை பொது வாசக அழுத்தத்தினால் பாலுணர்வு தூண்டக் கூடிய கவிதைகளை வெளியிட்டதற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இந்த மென் உணர்வுகளை உறுத்தும் கவிதைகள் வில்லாவை ஓராண்டுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து நிறுத்தம் செய்யக் காரணமாக இருந்தன. மாறாக வில்லாவின் மாறுபட்ட இலக்கியப் பிரதியொன்று பிலிப்பைன்ஸ் தேசத்திலிருந்து முடிவாகக் கிளம்பிச் செல்லக் காரணமாயிற்று. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிலிப்பைன்ஸ் Hg பிரஸ் (Phillipines Free Press) நடத்திய சிறுகதைப் போட்டியில் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக வில்லாவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பரிசுத் தொகையாக ஆயிரம் பெசோக்களை வழங்கியது. இந்தத் தொகையைப் பெற்ற வில்லா அதை வைத்தே (தன் பெற்றோரின் உதவியின்றி) அமெரிக்கா கிளம்பிச்சென்றார். ஆனாலும் கூட அவரது தொகுக்கப்பட்ட சிறுகதைகளான (1933) (Foot note To Youth) நூலில் இந்த பரிசுக் கதை சேர்க்கப்படவில்லை.
நியோ - காலனியலிசம் மற்றும் எலைட்டிசம் போன்ற காரணங்களுக்கு எளிதாக வில்லாவை கண்டனம் செய்வதற்கும் இந்த இரண்டு நிகழ்வுகளும் காரணமாயின. வில்லாவுக்கு ஒரு ‘இனக்குழு அடையாளம்’ இல்லை என்றும் அவரது சொந்த நாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஆனால் வேறு இலக்கிய வட்டங்களில் பின்வருமாறு பாராட்டப்பட்டார்: “ The inventor of modernist writing in English in the Philipines .”
1930இல் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அங்கே துவங்கப்பட்ட இலக்கிய ஏடான கிலே (களிமண்)வின் ஸ்தாபகர் களில் ஒருவராக வில்லா இருந்தார். பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரும்போது அமெரிக்க இலக்கிய வட்டங்களின் கவனத்தைப் பெற்ற முக்கியமான ஆசியக் கவிஞராய் ஆனார்.
1933இல் வெளியான (Foot note to Youth) நூலுக்குப் பிறகு வில்லா உரைநடையிலிருந்து முழுமையாக கவிதைக்கு மாறினார். 1942இல் வெளியிடப்பட்ட கவிதை நூலில் ரிவர்ஸ்டு கான்ஸொனன்ஸ் (Reversed Consance) என்ற புதிய ஒலிஇயைபு முறையை ஆங்கிலக் கவிதைகளுக்கு அறிமுகப்படுத்தினார். 1949ஆம் ஆண்டு புதிய கவிதை எழுதும் ஒரு முறையை அறிமுகம் செய்தார். இவை ‘கமா கவிதைகள்’ என்றழைக்கப்பட்டன. இந்த உத்திமுறையில் ஒவ்வொரு சொல்லுக்குப் பிறகும் ஒரு கமா பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வார்த்தையும் அதன் வார்த்தை அடர்த்தியை அடைய கமாக்கள் உதவுவதாக அறிவித்தார். வார்த்தைகளின் தொனியும் கூடுதல் பலமும் பெறுவதாய் அவர் நம்பினார். இந்த ‘கமா’ வடிவ முறையுடன் முரண்பட்ட நிறைய எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் டேம் எடித் சிட்வெல் போன்ற கவிஞர்கள் இந்த முறைக்கு வரவேற்பளித்தனர்.
1949ஆம் ஆண்டிலிருந்து 1951ஆம் ஆண்டு வரை நியூ டைரக்ஷன்ஸ் வெளியீட்டு நிறுவனத்தின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்பு நியூயார்க் சிட்டி காலேஜின் கவிதைப் பட்டறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
1964ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பணியையும் விட்டு விட்டு நியூயார்க் ஸ்கூல் ஃபார் சோஷியல் ரிசேர்ச் (New York School for Social Research )இல் 1964லிருந்து 73ஆம் ஆண்டுவரை ஆசிரியப் பணியை ஏற்றார். இந்தக் கால கட்டத்தில் அவர் இலக்கிய வட்டாரங்களிலிருந்து வெளியேறிவிட்டாரோ என்று தோன்றும்படியாக இருந்தது. ஐ.நா சபைக்கான பிலிப்பைன்ஸ் தூதுக் குழுவின் கலாச்சார இணை அதிகாரியாக 1952லிருந்து 1963வரை இருந்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் கலாச்சார ஆலோசகராக 1968இல் அமர்த்தப்பட்டார்.
கல்லூரி தவிர அவரது இல்லத்திலும் கவிதை பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். டபிள்யூ.ஹெச்.ஆடன், எலிசபெத் பிஷப், எடித் சிட்வெல், மரியன் மூர் போன்றவர்களின் இலக்கிய வட்டத்தில் அவரால் முக்கிய இடம் பிடிக்க முடிந்தது மட்டுல்ல அவர் கவிதைகளை அவர்கள் வாசித்து ஏற்றனர் என்பது சரிசமமான முக்கியத்துவம் பெறும் விஷயம்.
1942இல் அமெரிக்காவில் வில்லாவின் Have come, am here கவிதைத்தொகுதியை வைக்கிங் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டது. இதன் மூலம் அமெரிக்காவின் இலக்கிய எல்லைகளில் அவரது இடத்தைப் பதித்தார். Have come இரண்டு அமெரிக்கக் கவிஞர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. ஒருவர் மார்க் வேன் டோரன். மற்றவர் இ.இ.கமிங்ஸ். இந்தத் தொகுதியின் வெளியீட்டுக்கு முந்தியும் பிந்தியும் கமிங்ஸ் மாறுபட்ட மனநிலைகளில் இருந் தார் என்பது தெரிகிறது. 1938ஆம் ஆண்டிலிருந்து கமிங்ஸை சந்திக்க பல கடிதங்கள் எழுதியும் பதில் பெறாமல் வில்லா இருந்திருக்கிறார். இதில் கூடுதல் விசேஷம் என்னவென்றால் கமிங்ஸின் மொத்தக் கவிதைத் தொகுதியையும் படித்த பிறகுதான் உரை நடை (சிறுகதை) எழுதுவதை விட்டுவிட்டு முழுமையாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் வில்லா. இறுதியில் கமிங்ஸ் நண்பராகவும் கவிதை எழுது வதற்கான தூண்டுதலாகவும் அமைந்தார். இந்த இரு கவிஞர்களின் நட்பு இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்டு நீடித்தது.
Volume two என்ற கவிதைத் தொகுதி 1949இல் வெளிவந்தது. இந்தத் தொகுதியில்தான் வில்லாவின் கமா கவிதைகள் முதன்முதலில் வெளிவந்தன. விவாதங்களை எழுப்பச் செய்தன இந்த ‘கமா’ கவிதைகள். வில்லாவின் இறுதியானதும் மிக முக்கியமானதுமான செலக்டட் போயம்ஸ் அன்ட் நியூ ( Selected Poems and New ) 1958-ல் வெளிவந்தது. நியூயார்க் இலக்கியக் களம் வெள்ளை அமெரிக்க எழுத்தாளர்களால் அரசோச்சப்பட்ட காலகட்டத்தில் வில்லா தனக்கான இடத்தை நிறுவிக் கொண்டது ஆச்சரியமளிக்கிறது. 1948ஆம் ஆண்டு லைஃப் பத்திரிகை ஆசியக் கவிஞரின் வருகையை அறிவித்து எழுதியபோது வில்லாவின் இலக்கிய ஸ்தானம் கூடுதலாய் ஸ்திரமாயிற்று. மேன்ஹேட்டனிலிருந்த கோத்தம் புக் மார்ட் என்ற புத்தக விற்பனை நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற புகைப்படம் ஒன்றும் அதில் வெளிவந்தது. அந்தப் புகைப்படத்தில் இருந்த இலக்கியவாதிகளின் பட்டியல் பின்வருமாறு: டென்னஸீ வில்லியம்ஸ், மரியன் மூர், எலிசபெத் பிஷப், ரேண்டல் ஜேரல், டபிள்யூ.ஹெச். ஆடன், அவருக்கு அருகில் வில்லா.
மெலுஸ் [ MELUS ] என்ற ஆய்வுப் பத்திரிகையின் 2004ஆம் ஆண்டின் இதழில் டிமோதி யூ (Timothy Yu) என்ற கீழைத்தேயவியல் விமர்சகர் பின்வருமாறு எழுதியது கவனிக்கப்பட வேண்டும்:
“ The presence of Villa, an actual Asian subject, as modernist writer is quite different kind of subversive Orientalism; he threatens to overturn the Orientalist hierarchy at the heart of modernism, in which classic Asian art and literature provide passive inspiration to a vibrant Western modernism.”
வில்லா ஒரு வெள்ளை எழுத்தாளர் அல்ல என்ற பிரக்ஞை கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். 1946ஆம் ஆண்டு ஹென்றி மில்லர் வில்லாவுக்கு எழுதிய கடிங்களில் ஒன்றில் எழுதியதையும் ஊன்றிப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்:
ஹென்றி மில்லர் பின்வருமாறு எழுதினார்: “ What amazes me, since you were born in the Phillipines, is your deep grasp of English.”
1942ஆம் ஆண்டு நியூ ரிபப்லிக் என்ற பத்திரிகையில் எழுதிய முன்னணி விமர்சகர் பேபட் டியூட்ச் வில்லாவுக்கு ஒரு ஆழ்பார்வை மிக்க மதவியல் கவிஞர் என்ற தகுதியை அளித்துப் பாராட்டினார்.
அதே ஆண்டு நேஷன் பத்திரிகையில் எழுதிய மரியன் மூரின் வரிகள்: “ ....ravely deep poems'' where ''final wisdom encountered in poem after poem merely serves to emphsize the disparity between tumult and stature.
வில்லா பயன்படுத்திய ஆங்கிலம் இந்திய எழுத் தாளர்களும், கரீபிய, ஆப்பிரிக்க எழுத்தாளர்களும் பயன்படுத்திய காலனியாதிக்க எஜமானர்களின் ஆங்கிலத்திற்கு சமானமானது அல்ல என சில பின் -காலனிய இலக்கிய விமர்சகர்கள் சொல்லக்கூடும்.
ஒரு இம்ப்பீரியலிச மொழியைத் தனதாகக் கோரிய ஜோஸப் கோன்ராட் மற்றும் விளாதிமிர் நெபக்கோவ் ஆகியோர் செய்ததுபோல வில்லா நிரூபித்தார்: மொழியியல் உரிமை கொள்ளல் என்பதற்கும் ஸ்தூல பூகோள எல்லைகளுக்கும் தொடர்பில்லை என்பதை. மேலும் கவிதையின் வாக்கியக் கட்டுமானம் என்பது சாதாரண உரையாடலின் கட்டுமானமோ அன்றி உரைநடையின் கட்டுமானமோ அல்ல. அவர் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் கூட அது அதற்குரிய விநோதத் தன்மைகளுடன்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர் ஒரு விநோதமான மனிதர்: டவ்கிலியன், அதாவது புறா, பருந்து மற்றும் சிங்கமாக இருந்தவர்.
வில்லா பிலிப்பைன்ஸ் அதிகார வர்க்க அமைப்புகளை மட்டும் பகைத்துக் கொள்ளவில்லை. அவரது தந்தையிடமிருந்தும் பிரிந்து சென்றார். அவரது தந்தை ஜெனரல் அக்வினால்டோ ஒரு மருத்துவர் மற்றும் படையணி அதிபராக இருந்தார். அவரது பதவி ஒரு கர்னலுக்கு இணையானது. ஆனால் மகனின் நடவடிக்கைகளை ஏற்காமல் அவன் அமெரிக்கா சென்றபின் பண உதவியை முற்றிலுமாய் நிறுத்திவிட்டார். வில்லா ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்ற கனவு அவரது தந்தைக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. நிலைத்த பகைமை உறவே இறுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவியது. பல நவீன இலக்கிய விமர்சகர்கள் சொல்வதுபோல அவர் ஓர் வெகுண்டு எழுந்த போராளி. மேலும் அவரது கவித்துவ மற்றும் மொழித்திறன்களை எவர் ஒருவராலும் குறைசொல்ல முடியாதிருந்தது. பிலிப்பைன்ஸில் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்ட விடுதலைக்கான தயார்நிலை இருந்தபோது பல இடதுசாரிகள் கலை கலைக்காகவே என்றிருந்த வில்லாவை புறக் கணித்தார்கள். இடதுசாரி வறட்டுவாதிகள் கண்டனம் செய்து ஒதுக்கப் பார்த்தனர்.
வில்லாவின் கவிதைகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கையானது முற்றிலும் உள்வயப் படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒருவேளை ஜெரார்ட் மேன்லி ஹாப்கின்ஸ் என்ற கவிஞர் சிலாகித்த இன்ஸ்கேப்ஸ்-க்கு இணையானதாய் இருந்திருக்கும். கவிதையில் வில்லாவுக்கு முன்வைப்பதற்கோ அல்லது தற்காப்பதற்கோ கவிதையைத் தவிர வேறு எதுவும் இல்லாமலிருந்தது என்பதை அவர் கவிதைகளின் ஊடாய் வாசிக்கும் வாசகன் புரிந்து கொள்ள இயலும். ஆனால் வில்லா எழுதியது போன்ற கவிதைக்கு ஒரு கூர்ந்த விமர்சன அறிவாண்மை அத்தியாவசியமானதாய் இருந்தது. உணர்ச்சிப் பாக்களை எழுதும் கொடையும் இதற்கு இணையானதொரு தேவையானது. இவை இரண்டுமே அவரிடம் அபரிமிதமாய் இருந்தன என்பதை எவராலும் மறுக்க இயலவில்லை. அவரது கவித்துவ மென் உணர்வானது உரைநடையுடன் எந்த உறவாடலும் கொள்ளாத் தூய்மையுடன் இருந்தது -அவர் உரைநடையில் புழங்கியவர் மற்றும் சிறந்த சிறுகதைகளை எழுதியவர் என்ற போதிலும்.
வில்லாவின் கவிதைகளைப் பற்றிப் பேசும் விமர்சகர்கள் அவரை வில்லியம் பிளேக் (William Blake 1757-1827 ) என்ற ஆங்கிலக் (பிரித்தானிய) கவிஞரின் கவிதைகளுடன் ஒப்பிட்டு பேசி இருக்கின்றனர். இந்தப் புள்ளியின் விவாதத்தை புரிந்துகொள்ள நாம் வில்லியம் பிளேக்கின் கவிதைகளுடன் அறிமுகம் கொண்டவர்களாய் இருத்தல் அவசியம். குழந்தைத் தன்மைமிக்க கள்ளமின்மை என்ற அம்சம் இவர்கள் இருவரையும் இணைப்பதாகக் கொள்ள முடியும். குறிப்பாக வாசகர்களுக்கு பிளேக்கின் கவிதை நூலான Songs of Innocence and of Experience ( 1789 ) -ல் இடம்பெறும் கவிதைகள் மிக இன்றி யமையாத வாசிப்பாக இருக்கும். புலி என்ற தலைப்பிலான கவிதையை பள்ளிக் காலத்திலேயே படித்தவர்கள் இருக்கக் கூடும். 1950களில் அமெரிக்கா வில் நிகழ்ந்த எதிர்க்கலாச்சாரத்தின் விளைவாக உருவான பீட் கவிஞர்களான ஆலன் கின்ஸ்பர்க்கும், பாப் டைலானும் பிளேக்கின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்ற தகவல் முக்கியமானது.
சிற்றடக்கமான ஆசிரிய வசனங்கள் ( Aphorism ) எழுதுவதிலும் தன் முத்திரையைப் பதித்தவர் வில்லா. ஆனால் ஆங்கிலத்தில் பொதுவாக இதற்கான வார்த்தையான Aphorism க்குப் பதிலாக Xocerisms என்ற வார்த்தையை அவர் உருவாக்கினார். கவிதையின் முதல் வரி: “The poem's First line: The Coiled Cobra” ஆக இருக்க வேண்டும் என அவர் சொன்னது அவரது கவிதைகளுக்கு முற்றிலும் பொருந்துகிறது.
O
இந்தக் கவிதைகள் யாவும் கீழ்க்கண்ட அச்சு நூலிலிருந்து தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கப்பட்டவை: JOSE GARCIA VILLA- Doveglion / Collected Poems / Edited by John Edwin Cowen / Penguin Classics (2008)
நொய்யல் (நாவல்), தேவிபாரதி, தன்னறம் பப்ளிகேஷன், குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை-635307 & 98438 70059. விலை: ரூ 800.
(27.11.22 ஒசூர் ‘புரவி-கூடுகை’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
25 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த தேவி பாரதியின் கவிதைத்தொகுப்பான ‘கண்விழித்த மறுநாள்’ தொகுப்பின்பின் அட்டை உள்பக்கத்தில் அவரது அடுத்தபடைப்பு ‘நொய்யல்’ நாவல் எனும்குறிப்பு இருந்தது. அந்த நாவலை இவ்வளவு ஆண்டுகாலம் கழித்து இப்போதுதான் பார்க்க நேர்கிறது. இதற்கிடையில் அவர் சில சிறுகதை - நெடுங்கதைத் தொகுப்புகள் கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’, ‘நீர் வழிப்படூஉம்’ என மூன்று நாவல்களையும் எழுதிவிட்டார்.
பொதுவாகவே, தேவிபாரதியின் நெடுங்கதைகள் நவீனத்தமிழின் ஆற்றொழுக்கான நடையில் எழுதப் பட்டவையாகும். அவற்றில், வட்டார வழக்குகளின் மொழிப் பயன்பாடு பெரும்பாலும் குறைந்த அளவிலேயே இருக்கும். நெடுங்கதைகளில் அவர் கையாளும்மொழி முற்றிலும் நவீனத்துவம் சார்ந்த ஒன்றாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. தவிர, செழுமையான அந்த மொழிப்பின்புலத்தில் வைத்து மனிதவாழ்வு குறித்த பேரவலங்களையும், உன்னதங்களையும் தொடர்ந்து விசாரணை செய்கிற ஒன்றாகவும் அந்நெடுங்கதைகள் இருக்கின்றன. விசாரணை என்பது தத்துவங்களின் பாற்பட்ட அகவயப்பட்ட திறப்பிற்கான சாராம்சங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
மனித வாழ்வின் இடர்பாடுகளை, நுண்ணுணர்வு களை எழுத முற்படுகையில் பல்வேறுவிதமான சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. சிலநேரம் மொழி நம்குறுக்கே வழிமறித்து நின்று எதனை- எப்படி பேசுவது என்கின்ற சிறிய குழப்பத்தை முன்வைக்கிறது. சொல்வதற்குகந்த மொழித் தேர்வினை அநாயசமாகத் துண்டித்துவிட்டு இவ்விடத்தில் இயங்குகிற ஆற்றலும் வல்லமையும்சாத்தியம் இல்லைதான். தவிர, படைப்பின் துல்லியவெளிப்பாட்டுக்கு - நம் உள்ளார்ந்து கிடக்கும்அர்த்தப் பொதிவுகளுக்கு - அந்தத் தருணத்தின், அந்த நொடியின் தீர்மானிப்பே படைப்பின் வடிவத்தை மெல்லத் தொட்டுணரச் செய்கிறது. பிறகுதான், அந்தப் பாதை படைப்பின் அடர்ந்த கனதியைப் பொறுத்து நீண்டு செல்கிறது.
நாவல்களைப் பொறுத்தவரை, தேவிபாரதி பெரும் பாலும் வட்டாரவழக்கின் மொழிநடையை மிகச் சரளமாகப் பயன்படுத்துகிறார்.
அவரது நாவலின் கதைக்களங்களுக்கு படைப்பின் நம்பகத்தன்மைக்கு உச்சபட்ச செறிவினையூட்டி, வாசகரை நெருக்கமாக உணரச் செய்கிற வட்டார மொழியின் தேவை அவ்வளவாக இருக்கிறது. அதை வாரியெடுத்துக் கைக்கொள்ளாமல் அந்த மனிதர்களின் கதைகளை, அந்நிலப்பரப்பின் கதைகளை ஒருபோதும் சொல்லிவிட முடியாதென உணர்ந்திருப்பதால்தான் இந்த மொழி அவருடைய நாவல்களில் பிரதானப்பட்டு இருக்கிறது.
இந்த ‘நொய்யல்’ நாவல் நிகழும் கதைக்களம் கொங்கு மண்டலத்தைச் சார்ந்ததாக இருப்பினும், கொங்குநிலப்பரப்பு என்பதை ஒரு முகமாக - ஒருபடித்தானதாக நாம் பொத்தாம் பொதுவாக முன்வைத்துவிட முடியாது. அரசு நிர்வாகக் காரணங் களுக்காகக் கொங்குமண்டலம் என்பது எட்டுமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், வடபுலமான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியின் வழக்குமொழி முற்றிலும்பிற மாவட்ட எல்லைகளுக்குப் பொருந்தாத வேறொன்றாக இருக்கிறது. தென் புலமான ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் மொழிப்புழக்கம் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.
அந்தவகையில் கொங்கு மண்டலத் தென்பகுதி யையும், வடபகுதியையும் பொதுவாக்கிவிட முடி யாது. பல்வேறு சொற்கள் இந்த நிலப்பரப்பினுள் மிகுந்த மாறுபாட்டுடனே புழக்கத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒருபடித்தானதாக ஒரே சொற் களின் புழங்குதன்மைகொண்ட நிலமாக கொங்கு நிலப்பரப்பு இல்லை.
இவ்விடத்தில், மனிதவாழ்வு சந்திக்கிற இடர்ப் பாடுகளையும், அதனுடைய மாயத் தன்மையான கற்பிதங்களையும் சொல்வதற்குரிய மொழியாக ஈரோடு, திருப்பூர் சார்ந்த கொங்குவட்டார வழக்கு மொழியினைத் தேவிபாரதி பயன்படுத்தி இருப்பதையும், அதைப் பரவலாக வாசகர்களுக்கு கடத்தும் படி செய்திருப்பதையும் இந்தநாவல் பெருமளவு சாத்தியப்படுத்தி இருக்கிறது.
மனிதகுலம் தத்தமது தொல்மரபுக்கதைகளை, நம்பிக்கைகளை, சடங்குகளை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு வெளிப்பாட்டு உத்திகளை கையாண்டு வருகிறது. ஆனால் அதைமொழியில் கொண்டு வரும்போது அதில் தனித்தியங்குவதற்கு எளிமையின் பூடகச் சொற்களைக் கொண்ட, நாம் சார்ந்த நிலத்தின் வட்டாரவழக்குமொழியைப் பயன்படுத்தி அந்தத் தொல்குடிக்கதைகளை அந்தரத்தில் ஒலிக்கும் ஓர் அசரீரியைப்போல் சொல்லிப் பார்ப்பதென்பது இந்த ’நொய்யல்’ நாவலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொங்குத்தமிழின் நன்முயற்சியாகக் கருதலாம்.
‘நொய்யல்’நதி, அதன் கரையில் வாழும் மனிதர்களுடைய வாழ்வின் அங்கமாகவும், அவர்களுடன் பின்னிப்பிணைந்த உயிர்ப்புமிக்க ஒரு வஸ்துவாகவும், மேலும் அவர்களது எல்லாவித நம்பிக்கைகளின் சாரமாகவும் அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது ஒற்றைநதியின் கதையாக மட்டுமே முன்நிறுத்தப்படாமல் அந்நிலப்பரப்பின் மனிதர்களதுஒட்டுமொத்தக் கதைகளாகக் கிளைத்துப் பரவி இருக்கிறது. இயல்பாகவே ஒருநிலப்பரப்பின் கதையைச் சொல்லும்போது, அங்கே குறிப்பிட்ட சாதியின் கதையாக அல்லது ஆதிக்கச் சாதிக்கும் அல்லது அதற்கு எதிர்நிலைச் சாதிக்கும் உண்டான பகைமுரண்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறஒன்றாக அமைந்துவிடுவது இருக்கும். ஆனால், இந்த ‘நொய்யல்’ முன்னிறுத்தும் கதைமாந்தர்கள் - சாதியின் பல்வேறு அடுக்குநிலைகள் அவர்களுக்குள் இருப் பினும்- புழங்குசாதி, புழங்குவதற்கு அப்பாற்பட்டசாதி என்ற படிநிலைகள் அவர்களுக்குள் மறை முகமாகவும் நேரிடையாகவும் இருந்தாலும்கூட, குறிப்பிட்ட சில அபூர்வமான தருணங்களில், அது ஒன்றை ஒன்று மீற முடியும் என்கிற இளகுத்தன்மை யையும் நாவல் தனக்குள் கொண்டிருக்கிறது.
அது சாத்தியப்படுவதற்கு மனிதவாழ்வு தனதுசாதிப் பெருமிதங்களையெல்லாம் கடந்து நிராதர வாக்கப்படும்போது அல்லது நிர்க்கதியாகக் கையளவு சோறுக்கு வழியின்றி நிற்கும் சூழல் நேர்ந்துவிடும் எனும் எதிர்கால அச்சம் பிடித்தாட்டும்போது அல்லது தாம் காப்பாற்றி வந்த ஆதிக்கச் சாதியின்பெருமைப் போர்வை கிழிந்து தொங்கும்போதுதான் அதுவரையிலான கௌரவத்தின் பிடிமானம் அற்றுப் போக நேர்கிறது... அப்படித்தான் நாட்டார் தெய்வங் களின் பின்புலத்தில் சாதி என்ற கனத்த திரை நாட்டார் தெய்வமாகிப்போன தேவனாத்தா கோயிலின் முன்பாக மெல்லக் கிழிபடுகிறது. அந்நேரம், அதி காரம் - கௌரவத்தில் உயர்ந்ததாகக் கருதப்பட்ட வெடத்தலாங்காட்டுப் பண்ணாடிகள் நாட்டார் தெய்வத்தின் ஆகிருதியில் கட்டுண்டு சிலையாக நிற்கிறார்கள்.
அதிலொன்றும் தவறில்லை, அவர்கள் அப்படியே நின்று கொண்டிருக்கட்டும்...
இந்த ’நொய்யல்’ நதி, அதனை ஒட்டி வாழ்கிற மனிதர்களின் சுபாவங்களில் உண்டாக்குகிற அபூர்வ மாற்றங்கள் - அதனுடன் பொருந்திப் போகிற நம்பிக்கைகள் - வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள் அலாதியானது. ஒரு சகமனிதனைப்போல அல்லது தனக்கு அணுக்கமான கடவுளைப்போல அல்லது நமது ஒட்டு மொத்த வாழ்வையும் நிர்மூலமாக்க வந்த ஒருகொடும் துயரமாக, யாவற்றையும் அழித்தொழித்து விடும் அடங்காத சூறையாக அல்லது ஊர்எல்லையில் வீற்றிருக்கும் நாட்டார் தெய்வமான தேவனாத்தாளே நொய்யல் நதியாகவும் மருவிக்கிடக்கிறது. நதியை, சூறைக்காற்றைக் கரங்கூப்புவது தொன்றுதொட்டு இயற்கையை வணங்கி வருகிற தொல்மரபின் நீட்சியாகும். அப்படியாகத்தான், உள்ளார்ந்த தெய்வத் தன்மையை ஒருநதியின் முகமாக உள்வாங்கிக் கொண்டே அந்நொய்யல்கரைவாசிகள் அங்கு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். கரைகொள்ளாது ஊருக்குள் புகுந்து ஓடித் திரிந்தாலும் அல்லது காய்ந்துபோன வெம்பரப்புமணலாக திரிந்து கிடந்தாலும் எப்போதும் அது, அவர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது.
நாவிதரான குமரப்பபண்டிதன் இந்த நாவலின் மிகமுக்கியமான பாத்திரம். சேவை சாதியைச் சார்ந்த அவர் சாதிரீதியாக கீழ்மைப்படுத்தப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒருவராக இருந்தாலும், தன் முனைப்பால் அவர் கற்றுக்கொண்டுள்ள ஜோதிட மற்றும் ஜாதக பலன்களை கணிக்கும் திறன், பிணிபோக்கும் மருத்துவஞானம் அல்லாமல் ஒருநல்ல வார்த்தை அவர் சொல்லிவிட்டால் தம்காரியத்தை அடுத்து தயங்காமல் பார்க்கலாம் என்கிறபண்ணாடிகளின் அசாத்திய நம்பிக்கை என ஒரு வித்தியாசமான பார்வையை நாவல் முன்னிறுத்துகிறது. வறட்சியின் கோரப்பிடியில் ஊர் சிக்குண்டிருக்கும்போது குமரப்ப பண்டிதனின் ஒற்றை வார்த்தையை நம்பித்தான் அந்தக் கிணற்றைத் தோண்டுகிறார்கள். இறுதியில், நீர்க் கண்கள் தட்டுப்படாமல் பரிதவித்து ‘ஓர் நல்வழி பிறந்துவிடாதா’ எனும் ஏக்கம் படரும்போது அவர்கள் குமரப்ப பண்டிதன் முன்னால் கிட்டத்தட்ட கையேந்திப் பிதற்றுகிறார்களே அக்கணத்தில் பண்டிதன் வெறும் ஓர் நாவிதன்தானா...? அதுகாறும் தன்மீது வாரியிறைக்கப்பட்ட கீழ்மையின் சகதிகளை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டு நிற்கும் அவர்களின் கடவுள் அல்லவா...?
வேம்பணகவுண்டர் - சாமியாத்தாள், குமாரசாமி - பூபதி - வேலாத்தாள் - கிரிக்கவுண்டர் - காரிச்சி - சென்னிமூப்பன், நாய்க்கர்கள் என பலதரப்பட்ட பிரிவு மனிதர்களும் இந்த நாவலில் உலவுகிறார்கள். ஆனால்இந்த நாவல் சாதிகளுக்குள் இருக்ககூடிய ஏற்ற இறக்கங்களை பிரதானப்படுத்தி முன்னிறுத்துகிற ஒன்றாக தொழிற்படவில்லை. அதனுடைய ஏற்றஇறக்கங்களைக் கடுமையான மொழியில் விமர்சிக்கக்கூடிய ஒன்றாக இல்லை. ஆனால் அந்த சாதியப்படிநிலை உண்டாக்குகிற அவலத்தை வாசகர்கள் புரிந்துகொண்டு, தம் மனதளவில் விமர்சிக்கக்கூடியஒருவராக மாறும்படி அரவமின்றி நிர்பந்திக்கிறது. அந்த விமர்சன மனப்பான்மையிலிருந்து இந்தநாவலை விலக்கி வைத்துவிட்டு, சாதாரணமாக வெறுமனே ஒரு கதை சார்ந்ததாக, அதீதத்தின் உருவக மாக வெளிப்பட்டிருப்பதாகக் கருதி மேலெழுந்தவாரியாக ஒருவாசகன் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.
‘சாமி எசமாங்களே ராசாங்கமே’ என்ற குரல் தனித்து ஒலிக்கும் குரல் அல்ல. அது கீழ்நிலைப் படுத்தப்பட்ட ஒருவன் தன் ஆழ் மனதிலிருந்து தன்னியல்பாகவே வெளிப்படுத்தி காலத்திற்கும் நான் உங்களுக்கு சேவகம் புரியவே உயிர்பிழைத்து இருக்கிறேன் என்பதனை நேரடியாகவே சொல்கிற வார்த்தையாகும். அந்த இழிவு சுபாவத்தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. அதை அவ்வளவு சுலபத்தில் மாற்றி வைத்துவிட முடியுமா...? ஆனால் தெய்வம் அல்லது பிசாசு என்ற நம்பிக்கைகளின் வழி ஓர் ஊரே பிதிர் கெட்டு நிற்கும்பொழுது மாயத் தன்மையிலான அந்தச் ‘சங்கிலி’ உடைபடுகிறது தெய்வநிலை அல்லது தெய்வத்தன்மை அல்லது பயந்தடங்கும் படியான அமானுஷ்யமான பேயின் வருகையின் பொருட்டோ அந்தக் கண்ணி சட்டென உடைகிறது.
கூடியிருக்கும் சபையின் முன்பாக, மாதாரிப் பெண்காரிச்சி அவ்வளவு சுலபமாக கிரிக் கவுண்டரை - அது என்ன காரணமாக இருந்தாலும் அதைமுன்னிட்டு - நெஞ்சோடு சேர்த்து அணைத்துவிட முடியாது. வழிவழியாக வந்த அவர்களது நம்பிக்கை களின் பொருட்டு, தம்மை சூழ்ந்திருக்கக்கூடிய-ஊரைப் பிடித்திருக்கக்கூடிய தீவினைகளிலிருந்து வெளிவருவதற்கு ‘காரிச்சியின்’ மேல் இறங்கி இருக்கும் ‘பார்வதி’ எப்படியேனும் கிரிக்கவுண்டரை அடையாமல் விடமாட்டாள் என்கின்ற புரிதலிருந்தே சபை முன்பாக காரிச்சி கிரிக்கவுண்டரை அணைக்கிறாள். இதுவரையிலான கொங்குவட்டாரக் கதைகளில் காணப்படாத ஒன்று. ஆனால், அதை எந்தவிதமான நெருடலுமின்றி, அந்த ‘நொய்யல்’ நதிநீரின் விசைக்கேற்ப அதில் ஓடுகிற சிறிய உயிரினங்கள், மிதக்கும் சருகுகள்போல கடந்து போகும்படி பிரதியில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் தேவிபாரதி.
கட்டற்ற பாலுறவு வேட்கை ஒரு கொடிய விலங்கினைப்போல் குமாரசாமி - சாமியாத்தாளைச் சுற்றி, பூபதியைச்சுற்றி, ஏன் வேம்பணகவுண்டரையும் ஒருகாலத்தில் சுற்றிப்படர்ந்த சித்திரத்தை இந்தப் பிரதி குறிக்கிறது. ஆனால், அந்த வழிவந்த வெள்ளியங்கிரி என்கிற கிரிக்கவுண்டர், அவனைநெருங்க முடியாமல் உள்ளுக்குள் தவித்துக்கொண் டிருக்கும் காரிச்சி-இந்த இரண்டு பாத்திரங்களும் அதற்கு எதிர்முனையில் நின்று சம்பாஷிக்கின்றன. இதைப் பாலுறவு வேட்கையின் நிலம் என்று அணுக முயன்றால், அதற்கு மாறாக கணவனால் தீண்டப் படாமலேயே தன் உயிரை மாய்த்துக்கொள்கிற ‘பாரு’ என்கிற பார்வதியையும் எதிர்நிலையில் வைத்து சித்தரிக்கிறார் தேவிபாரதி. எவ்விதப் பழிபாவத்திலும் முகங்கொடுக்காத அவளுடைய தூயஆன்மா, காரிச்சியின் மூலமாகக் கணவனான கிரிக்கவுண்டரை தீண்ட முற்படுகிறது. ‘காரிச்சி - கிரி - பார்வதி’, இந்த மூன்று உடலங்களுமே ஒன்றுக்கொன்று புணர்ச்சியின் பொருட்டுத் தீண்டிக்கொள்ளாத தூய ஆன்மாக்களாக இருப்பதால்தான், இது அந்தச்சபையின் முன்பாக நொய்யலின் வெளியில் சாத்தியமாகிறது.
ஊருக்குள் புகுந்து அழிவினை உண்டாக்கி பேரச்சத்தை விளைவிக்கிற ‘நொய்யல்’ நதியும், மனிதர்கள் சூழுமிடங்களிலெல்லாம் அபாயத்தின் அறிகுறிபோல் வந்துபோகிற ‘சூறையும்’ அந்த மனிதர்களின் வழியே அமானுஷ்ய நிகழ்வாக உருவகிக்கப்படுகிறது. கண்ணி கண்ணியாகக் கிளைக்கதைகளை விரித்து செல்கிற இந்த நாவலின்நிலப்பரப்பு மனிதவாழ்வின் உயர்வினைக் கொண் டாடுதல் அல்லது பிழைப்பிற்காக வம்பாடு படுகின்ற அவலநிலை என இருமையுடனிருக்கிறது.
வாழ்வின் நிலையாமையை, மகாபாரத-ராமாயண கிளைக்கதைகளின் வழியாகப் பேசுதல் என்கிற தகவமைப்பினை நாவல் பெற்றிருக்கிறது. உதாரணங்களையும் உவமைகளையும் இதிகாசத்தின் கிளைக்கதைகளிலிருந்து அல்லது நம்பிக்கையின் பாற்பட்ட நாட்டார்வழக்குக் கதைகளிலிருந்து எடுத் தாள்கிற ’நொய்யல்’ நதிக்கரை மனிதர்கள், தமது வழிபாட்டிற்கு பெருந்தெய்வங்களன்றி நாட்டார் தெய்வங்களை மட்டுமே முன்னிறுத்தி தமதுவாழ்வை அதன் காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அது சொல்கிற ஒருவாக்குக்காக, அதன்முன் தவம்கிடப்பவர்களாக இருக்கிறார்கள். நாட்டார் தெய்வங் களின் ஆகிருதியை, தொன்மக் கதையாடல் வழி யாக நிலைநிறுத்த இந்த ‘நொய்யல்’ நாவல் முற்பட்டிருக்கிறது. அதனாலேயே நம்பிக்கை மற்றும்அச்சவுணர்வு புதிர்க் கதைகளாகவிரிந்து இந்தப் பிரதியினுள் இழுத்துச் செல்கிறது. மருள் ஏறி சன்னதங் கொண்டு பழனி மூப்பன் அடிக்கிற உடுக்கை ஒலி வெடத்தலாங்காட்டு வெட்டவெளியெங்கும் காற்றில் பரவிக்கிடக்கிறது.
அந்த உடுக்கையொலியினூடாகவே, இந்த ‘நொய்யல்’ கரை வாழ்வின் கண்டுணரவியலாத சூட்சுமத்தை - அளவிடமுடியாத கொண்டாட்டத்தை-புறந்தள்ள முடியாத மனித அற்பத்தனங்களை-அவிழ்க்கவியலாத புதிர்களைச் சொல்வதற்குத் துணிந்திருக்கிறார் தேவிபாரதி...
போர்த்தியோன் நகரத்து நீதிபதி மேதாவியானாலும் கொஞ்சம் குஷியான பேர்வழி. பணிப் பெண்ணாக அவர் வைத்துக்கொண்ட, உருண்டு திரண்ட ஸ்தனங்களைக் கொண்ட ஜாக்குலின் என்ன மாதிரியான வேலைகளைச் செய்தாள் என்று அந்த ஜில்லாவில் இருந்த எல்லாருக்குமே தெரிந்திருந்தது. ஆனாலும் போர்தியோன் நகரத்து மக்களுக்குத் தாராள மனது: அந்த நல்ல மனிதரின் நீதிபரிபாலனத்தைப் பெரிதாக நினைத்து, அவர் குஷியாக ஓய்வு எடுத்துக்கொள்வதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
ஒரு நாள் காலை குஷிப்பேர்வழியான அந்த நீதிபதியின் அலுவலக அறையில், வாளிப்பும் வசீகரமும் நிரம்பிய இளம்பெண் ஒருத்தியைக் கண்டதும் அவருக்குச் சந்தோஷ போதை தலைக்கு ஏறியது. முந்தைய இரவில் ஜாக்குலின் அவருக்குப் பரிபூரணமாகச் சேவை செய்திருந்த போதிலும், ரத்தம் சூடேறி மேலிட்ட கிளர்ச்சியை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. “குட்மார்னிங் டியர்” என்று மெல்லச் சிரித்தபடியே, அவருடைய சுபாவப்படி அப்பெண்ணைக் கட்டித் தழுவி கொண்டார்.
“மைலார்ட்!” என்று அலறியபடியே அவருடைய தழுவிலில் இருந்து வேகமாக விலகி வெளிவந்தாள். “நான் உங்களிடம் பிராது கொடுக்க வந்திருக்கிறேன். இது மாதிரி எனக்கு நேர்ந்ததைப் பற்றி விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும்படி கேட்க வந்திருக்கிறேன்”.
“இந்த மாதிரி நேர்ந்ததா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார். “இது அற்புதமான விஷயம் அல்லவா! சொர்க்கத்துக்கு நிகரான சந்தோஷமான விஷயம் அது; எப்போதும் நினைத்து ஆனந்தப்படுவதுடன், அந்த அனுபவத்தைத் தந்தவனுக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டுமே ஒழிய, அதைப் பற்றிப் புகார் கொடுக்க வந்திருக்கிறாயே, பேதைப் பெண்ணே! உலகம் புரியாத முட்டாளாக இருக்கிறாயே... சரி சரி, என்ன நடந்தது சொல்லு. நீ யார்? அந்த மனிதன் யார்? அவன் செய்த காரியத்தில் என்ன புகார்? ம் ம் ?”
“ஐயா, நான் துணி வெளுக்கிறவள். அந்த ஆள் சீர்துய்ஃஉ செய்த காரியம்...”
“சீர்துய்ஃஉ ஆ? ராஜாவின் அரண்மனைக் காரிய தரிசியா? முட்டாள் பெண்ணே, நன்றிகெட்ட தனமாக அந்தக் கனவான் மீது புகார் சொல்கிறாயே?”
“மை லார்ட், அவர் என்னைக் கட்டாயப் படுத்தினார்...” சிணுங்கினாள் அவள்.
“கட்டாயப்படுத்தினாரா? நம்ப முடிய வில்லையே!” என்றவர், “சரி சரி மேலே சொல்லு” என்றார்.
சீர்துய்ஃஉ சில துணிகளை வெளுக்க அவளிடம் கொடுத்ததையும், வெளுத்த துணிகளை அவர் வீட்டில் போய்த் திருப்பிக் கொடுத்ததையும், அதற்கு உரிய கட்டணத்தைக் கேட்டபோது, அதுவரை அவளுக்குக் கிடைத்திராத, மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தரப் போவதாக அவன் சொல்லியதையும் அந்த அழகிய சலவைக்காரி சொன்னாள். அவன் பூடகமாகச் சொன்னது தங்கமோ வெள்ளியோ அல்ல. அவன் கொடுப்பதாகச் சொன்ன பொக்கிஷத்தைத் தருவதற்கு அவனுக்கு முப்பது நிமிஷத்துக்குக் குறையாமல் ஆனது.
அபிநய பாவனைகளோடு அந்தச் சலவைக்கார சுந்தரி வருணித்தவற்றை இங்கே வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. அம்மாதிரியான கிளுகிளுப்பான கதைகளைக் கேட்பதில் ஆர்வமாக இருக்கும் நீதிபதியும் சுவாரஸ்யத்தோடு எல்லாவற்றையும் கேட்டுவிட்டுச் சொன்னார்: “ஜாலியான கதையா இருக்கே! கேட்டதுமே எனக்குக் குஷியாயிடுச்சி... ஆமாம், உனக்குக் கட்டணமாகத் தரப்பட்ட அற்புதமான விஷயத்தினால உனக்குச் சந்தோஷமே கிடைக் கலையா?”
“ஆமாங்க, எனக்குத் துளியும் சந்தோஷமே கிடைக் கலை; பணமும் கிடைக்கலை. அதனால அந்தக் கனவானிடம் இருந்து நஷ்டஈடா ஆயிரம் க்ரவுன் வாங்கிக் கொடுங்க.”
“துளியும் சந்தோஷம் இல்லியா?” யோசித்தார் நீதிபதி. சீர்துய்ஃஉ துடிப்பாகக் காரியம் செய்கிற அனுபவஸ்தன். பெண்களைப் பரவசப்படுத்துறதுல என்னை மாதிரியே கைதேர்ந்தவன். காதல் களியாட்டத்தில கில்லாடி. இந்தப் போர்தியோன் நகரத்தில இருக்கிற பணிப்பெண்கள் எல்லாருமே அவன் கட்டணம் கொடுத்தமாதிரி கிடைக்காதா என்று ஏங்குவாங்கஞ் நீ என்னடான்னா சந்தோஷம் துளியும் கிடைக்கலை என்கிறாய். நம்ப முடியலையே!”
“மைலார்ட்...” என்று சாந்தமாகச் சொன்னவள், “அதுமாதிரி கொடுக்கிற எல்லா நேரத்திலேயும் ஒரு பெண்ணுக்குச் சந்தோஷம் இருக்குமான்னு உங்க அபிமானச் சுந்தரி ஜாக்குலினிடம் கேட்டுப்பாருங்க” என்றாள்.
“சரி, கேட்கிறேன்” என்றவர், மேஜை மீதிருந்த மணியை ஒலிக்கவும் ஜாக்குலின் அங்கே வந்தாள். சலவைக்காரியின் கேள்வியை அவளிடம் கேட்டார் நீதிபதி. ஜாக்குலின் அதற்குப் பதில் சொன்னாள்:
“சார், அதுமாதியான களியாட்டங்களில் எனக்குரொம்பவும் இஷ்டம். அதனால எனக்கு எப்போதும் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது. ஆனா நிஜத்தைச் சொல்லணும்னா, சின்னப்பொண்ணா இருந்தப்ப அந்தமாதிரி காரியம் பண்ணும் போதுஎனக்கு வலி ஜாஸ்தியா இருந்தது. இந்தச் சலவைக்காரிக்குச் சீர்துய்ஃஉ-விடமிருந்து சந்தோஷம் கிடைக்கவில்லை என்றால், அவள் சொல்ற மாதிரி கட்டாயப்படுத்தி இருக்கலாம்.”
“தேங்க் யூ மை டியர்” என்று ஜாக்குலினை அனுப்பிவிட்டு, “கட்டாயப்படுத்தினதா நீ சொல்வதை நிஜமான்னு நான் கண்டுபிடிக்கணும்” என்று சொன்னார். “ஒரு ஊசியும் கொஞ்சம் நூலும் கொண்டு வாங்க” என்று உத்தரவு போட்டார்.
ஊசியும் நூலும் வந்ததும், சலவைக்கார சுந்தரி யிடம் நூலைக் கொடுத்துவிட்டு, ஊசியைத் தன் கையில் வைத்துக்கொண்டார். “இப்ப நீ இந்த ஊசியில உன்னோட நூலைக் கோக்கணும்.”
“எதுக்கு மை லார்ட்?”
“எல்லாம் காரணமாகத்தான். நான் சொன்னபடி செய். நான் பிடிச்சிருக்கிற ஊசியின் காதில் உன் கையில இருக்கிற நூலைக் கோர்.”
தோளைக் குலுக்கிக்கொண்ட அந்தச் சலவைக் காரி கவனமாக நூலை ஊசியின் அருகே கொண்டுபோனாள். ஊசிக்குப் பக்கத்தில் அவள் நூலைக் கொண்டு போனதும் நீதிபதி மெல்லத் தன் கையை அசைத்தார். திரும்பவும் அவள் முயன்றாள். இந்தத் தடவையும் நீதிபதி தன் கையை ஆட்டினார். மூன்றா வது தடவை அவள் முயன்றபோதும் அதுமாதிரியே நடந்தது. எரிச்சலான அவள், “நீங்க ஊசியை அசைக் காம பிடிச்சிக்கிட்டு இல்லேன்னா, என்னால அதில நூலை நுழைக்க முடியாது” என்று இரைந்தாள்.
நீதிபதி வெற்றிக்களிப்போடு சிரித்தார். “சரியாய்ச் சொன்னாய் பெண்ணே! நீயும் இந்த ஊசிமாதிரி இடம் கொடுக்காம இருந்திருந்தா சீர்துய்ஃஉவால் எதுவும் செய்திருக்க முடியாது. அவர் கட்டாயப் படுத்தினார்னு சொல்கிறாய்... கதையளக்கிறாயா?... இந்த மாதிரி விஷயங்களில் கட்டாயப்படுத்தினது பற்றி விசாரிக்க எனக்கு இனியும் பொறுமை இல்லை. உன்னுடைய புகாரை நிராகரிக்கிறேன்”.
“மைலார்ட், கொஞ்சம் பொறுங்க. நீங்க நிதானமா ஆராயவில்லை” என்றாள் மென்மையாக. “எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்க. நூல் நேரா இல்லாமல் தளர்வா இருந்தால் திறமையான தையல்காரிக்கும் கூட ஊசியில கோர்க்கிறது கஷ்டமாக இருக்கும்ன்னு அவங்க சொல்றதைக் கேட்டிருக்கிறேன்”
“அப்படிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அப்புறம் வேறு என்னவெல்லாம் தையல்காரப் பெண்கள் சொல்லியிருக்காங்க?”
“கொஞ்சம் மெழுகைத் தடவி இந்தமாதிரி நூலை நேராக்கிட்டா வேலை சுலபமா முடிஞ்சிடும். மைலார்ட், எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்க.”
அந்தப் பெண்ணின் சாதுரியமான பேச்சு நீதிபதி யைக் கவர்ந்துவிட்டது. எனவே மறுபடியும் ஊசி யைக் கையில் வைத்துக் கொண்டார். இந்தமுறை உடனடியாக நூலைக் கோர்க்க முயற்சி செய்யாமல், ஊசியைப் பார்த்து நைச்சியமாக உருகிவழிகிற மாதிரி பேசினாள்: “ஆஹா, என்ன அருமையான ஊசி நீ. ரொம்ப மெலிஞ்சு இருந்தாலும் விறைப்பா நேரா இருக்கிற உன் அழகே அழகு. எதற்கும் வளைஞ்சு கொடுக்காத உன்னோட காது என்னை அப்படியே இழுக்குது! அருகே வா, அழகான ஊசியே உன்னைக் கெஞ்சுகிறேன்”. அவளுடைய வார்த்தைகளால் கிறங்கிப்போன நீதிபதி ஊசியை அவளுக்குப் பக்கமாகக் கொண்டுவந்தார். சட்டென்று அவருடைய மணிக்கட்டைப் இறுகப் பிடித்துக்கொண்டாள். அழகான ஊசியே இப்ப என்கிட்ட வந்திட்டியா” என்று கொஞ்சியபடியே மெழுகுகைத் தடவிநேராக்கி வைத்திருந்த நூலை அதன் காதில் கோர்த்து விட்டாள்.
போர்தியோன் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள விவரங்களின்படி சலவைக்காரப் பெண்ணுக்குச் சீர்துய்ஃஉ நூறு கிரவுன் நஷ்டஈடு தந்ததாகத் தெரிகிறது; அந்தப் பெண் கேட்டதுபோல் ஆயிரம் கிரவுன் கிடையாது. ஆனாலும் ஆவணங்களில் குறிப்பிடப்படாவிட்டாலும், காதில் விழுந்த செய்திகளின்படி, நீதிமன்றத்தின் மற்ற ஒன்பது நீதிபதிகள் தாம் பெற்றுக்கொண்ட சேவைக்காகத் தலா நூறு கிரவுன் தம் பங்காகக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.
அமரர் அருண்மொழியுடன் எனது தொடர்பு என்பது 1977லிருந்து 42 வருடங்களாக நீடித்த ஒரு நட்பு. படங்களைப் பார்த்து ரசித்து விவாதிப்பதையே மையமாகக் கொண்ட உறவு. அவர் சிறிது காலம் தொலைக்காட்சியில் வேலை செய்த கட்டத்தில் பூனே திரைப்பள்ளிக்கு ஆறுமாத பயற்சிக்காக வந்திருந்தார். அது சதீஷ்பகதூர் போன்ற அருமையான சினிமா ஆசிரியர்கள் இருந்த காலகட்டம். அன்று நாங்கள் முதன்முதலில் சந்தித்தது கேரல் கசீனா என்கிற ஒரு செக்கொஸ்லாவிகிய இயக்குனரின் படம் பார்த்த பிறகு தான். அப்படத்தின் பெயர் ஆங்கில மொழி பெயர்ப்பில் எ ஃபன்னி ஓல்ட் மேன்/ A Funny Old Man ( Smesny Pan, dir. Karel Kachyna, 1969). ஏதோ ஒரு வகையிலே இன்று அவரது மாணவர்கள் முகநூலில் பதிவிடும் அவரது போட்டோக்களைப் பார்க்கையில் அவரும் ஒரு வேடிக்கையான வயோதிகராக நடித்திருப்பதில் மகிழ்வுற்றிருப்பதாகத் தெரிகிறது. நடிப்பிற்கான உந்துதல் எங்கேயிருந்து அவருக்கு வந்திருக்கும் என்றெண்ணிப் பார்க்கிறேன்.
அதற்கு நாம் முப்பது வருடத்திற்கு முன் காணி நிலம், ஏர்முனை போன்ற படங்களை அவர் இயக்கிய 1980களின் இறுதிக்கும் 1990களின் தொடக்க வருடங்களுக்கும் போக வேண்டும். அவரது படங்களில் கலைராணி, நாசர், தலைவாசல் விஜய், பாலாசிங் போன்றவர்களை அறிமுகப்படுத்தினார். நவீன நாடகத்தில் அவரது ஈர்ப்பென்பது நல்ல சினிமாவுடன் தொடர்புகொண்டது. அவர் பூனே திரைப்பள்ளியில் நான் மாணவனாக இருக்கையில் ‘மூன்றாவது தியேட்டரி’ன் சிற்பியான பாதல் சர்க் காரின் ஒர்க் ஷாப்பில் கலந்துகொண்டார். எழுபது களின் இறுதியில் ஷ்யாம் பெனெகல் கோவிந்த் நிஹாலானி போன்றோரை, பிலிம் பெஸ்டிவல்களுக்கு இடைவிடாமல் செல்லக்கூடிய நாங்கள் பேட்டி கண்டிருக்கிறோம். அவர்களது மாற்றுவழி கலை சினிமா சார்ந்த பயணத்தில் பூனே திரைப்பள்ளி மற்றும் தேசிய நாடகப்பள்ளியைச் சார்ந்த நசிருத்தின் ஷா மற்றும் ஓம் புரி போன்றவர்கள் ஆற்றிய பங்கு அதிமுக்கியமானது. நசீரும் ஓம் புரியும் தேசிய நாடகப் பள்ளியில் அல் காஷி அவர்களின் மாணவர்களாகத் தேர்ச்சிபெற்றபின் பூனே திரைப்பள்ளியிலும் நடிப்புக் கலையைப் பயின்றவர்கள். ஷபானா ஆஜ்மி, சாது மெஹெர் போன்றவர்கள் பூனே திரைக்கல்லூரி யைச் சார்ந்தவர்கள். ஸ்மிதா பாடீல் பூனே திரைப்பள்ளி மாணவர்கள் படங்களில் நடித்ததின் மூலமாகப் பெனெகலுக்குப் பரிச்சயமானவர். போலவே மற்ற சீரிய நாடகக் குழுவிலிருந்து வந்தவர்கள்தான் அம்ரிஷ் புரி போன்ற தேர்ந்த கலைஞர்கள். கிரிஷ் கர்னாட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு பூனே திரைப்பள்ளியின் இயக்குனராகப் பெனெ கலுக்குப் பரிச்சயமாணவர். பெனெகல் சத்யஜித் ரேயைப் போன்று விளம்பரத்துறையில் இருந்து வந்திருந்தாலும் விளம்பரப்படங்கள் எடுத்த அனுபவம் அவருக்கு உண்டு, ரே அவர்கள் ஒரு வரை கலைஞனாக எழுத்தாளனாகத்தான் அந்தத் துறையிலிருந்தார். பெனெகலின் அனுபவம் அவரே நடிகர்களை முன்னிருத்தி தன் படங்களுக்கென ஒரு நுகர்வோர் சந்தையை ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக யிருந்தது. வனராஜ் பாட்டியா போன்ற அவரது இசையமைப்பாளர்களும் விளம்பரத்துறையில் இருந்தே அவருடன் பயணித்தவர்களே.
ஷ்யாம் பெனெகலின் ஒளிப்பதிவாளர், பெங்களூர் பாலிடெக்னிகில் அந்தக்காலத்தில் ஒளிப்பதிவில் தேர்ச்சி பெற்று குரு தத்தின் ஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்தியவர்களிடம் பணியாற்றிய கோவிந்த் நிஹலானி அருண்மொழியின் மனதுக்குப் பெனெகலை விட நெருக்கமானார். அவரது சீரிய அரசியல் நோக்கும் தீவிர கருத்தியல் சார்பும் அருண்மொழிக்கு அணுக்கமாக இருந்தது. ஆக்ரோஷ் மற்றும் அர்த் சத்யா போன்ற படங்களைச் சேர்ந்து பார்த்திருக்கிறோம். அனந்து அவர்களைப்போல அந்தக் காலத்தில் டயரி குறிப்பு எழுதும் பழக்கம் அருண்மொழியவர்களுக்கு இருந்தது. தொண்ணூறுகளின் மத்தியில் என்னிடம் வந்து பழைய டைரிகளைப் படித்துக் காண்பித் திருக்கிறார். அதில் அவர் பெனெகல்-நிஹலானி போன்று நாடகத்தில் பயின்ற நல்ல நடிகர்களின் கூட்டில் ஒரு மாற்று சினிமா இயக்கத்தைப் பற்றிக் கனவு கண்டது புலனாகியது. இந்த அருண்மொழியின் கடந்த கால வாழ்க்கை எதுக்கு முக்கியம் வாய்த்ததாகிறதென்றால் அவருடைய சுய வாழ்வனு பவங்களை மையமாகக்கொண்டு தனது மாணவரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை மூன்று மாதங்களாகத் திட்டமிட்டு எடுத்துக்கொண்டிருந்தார். கடைசிக் காலகட்டங்களில் அவரது மாணவர் சாமிநாதனின் வீட்டிலும் செம்மலர் அன்னம் மற்றும் அன்னம் அரசுவின் வீட்டிலும் அதிகம் தங்கி யிருந்தார். சாமிநாதன் வீட்டில்தான் நான் சென்ற முறை ஆகஸ்ட் மாதத்தில் சென்னையிலிருந்தபோது செம்மலரின் பிறந்த நாளை கொண்டாடினோம். சாமிநாதன் வீட்டிலிருந்துதான் கடைசியாக அந்த ஜப்பானிய படத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.
சாமிநாதன் அவரைக் கடைசியாக அந்தத் தியேட்டர் வளாகத்திலேயே உள்ள ஹாஸ்பிடலில் பார்க்கும்போது சாயந்து மிகக் களைத்தபடி அமர்ந்திருக்கிறார். இசிஜியில் நார்மலாக இருக்கிறது; வெறும் கேஸாக இருக்கக் கூடும் என்று சொல்லியிருக்கிறார்கள். டாக்டர், “எதுக்கும் ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு அழைத்து”ப் போகச் சொல்லியிருக்கிறார். சாமிநாதன்
லைப் சப்போர்ட்டுடன் கூடிய ஆம்புலன்சுக்காகக் காத்திருக்கையில் அது மிக அருகாமையில் வந்த நிலையில் அருண்மொழி விடை பெற்றுக்கொண்டுள்ளார்.
அருண்மொழி சாமிநாதன் வீட்டிலிருந்து அந்த ஜப்பானிய படத்தைப் பார்க்கப் போவதற்கு முன் சாமிநாதனும் அவரும் அதற்கு முந்தைய நாள் அருண்மொழி தனது படத்திற்காக எடுத்த பூடேஜைப் டெஸ்க்டாப்பில் பார்த்திருக்கிறார்கள். அது இயக்குனர் ஹரிஹரனை அருண்மொழியின் கதாநாயகனான துணை இயக்குனர் வேலைக்காகக் காணச்செல்வதைப் பற்றிய காட்சி. அதற்கு முன் இயக்குனர் மிஸ்கினுடனும் அத்தகைய ஒரு காட்சியைத் தனது படத்திற்காக எடுத்திருக்கிறார். அந்தப் பூடேஜைப் பற்றியும் அன்றுஎன்னுடன் பேசினார். வாழ்வனுபத்திலிருந்து விளிம்புநிலையிலிருக்கும் கலைஞர்களையும் பெண்களையும் விவசாயிகளையும் சிமெண்ட் பேக்டரி தொழிலாளர்களைப் பற்றியும் தொடர்ந்து நான்கு பதின் வருடங்களாகப் படமெடுத்த அருண் மொழி சிறிது அயர்ச்சியினால் இளைப்பாறப் போயிருக்கிறார். நாளைக்கே அவரது அழைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?” “இல்ல. க்ளாசுக்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கேன்.” “என்ன கிளாஸ்?” “கேங்க்ஸ்டர் சினிமா பற்றியது.” “நாம பூனேயில் மெல்வில் படங்களைப் பார்த்தது ஞாபகமிருக்கா?” “ஆமா.” “அதைக் காமிச்சாலே போதுமே... ப்ரிபேரஷன் நோட்ஸ்ல்லாம் எதுக்கு... 1977லிருந்தே குறிப்பெடுத்துட்டிருக்கீங்க...” சிறிது மௌனத்துக்குப்பின் “இல்ல... இப்ப இந்தச் சனிக்கிழமை ஷூட் பண்ற சீக்குவென்ஸ் அசோகமித்திரன் சாருக்கு ஹோமாஜா இருக்கணும். நான் அனுப்பின அவரோட கரைந்த நிழல்கள் கதையிலருந்து உள்ள சீனைப் படிச்சுட்டேங்களா...” “ஆமா.” இப்படிச் சினிமா இயக்குநர்கள் மட்டுமல்ல இலக்கியகர்த்தாக்களும் அவர் கூடவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வெவ்வேறு காலகட்டத்தில் அவர் மணிக்கணக்காக ஆவணப்படுத்திக்கொண்டிருந்த சில கலைஞர்களை நானும் சந்தித்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு, நகுலனை அவர் பலதடவைகள் சந்திக்க முயற்சி செய்து பின்னர் ஷூட் செய்திருக்கிறார். நகுலனின் கவிதைகளைப் படித்துவிட்டு ஆர்வமாய் எனது ஊரான வழுதூருக்கு வந்துவிட்டார், நாகர் கோயில் செல்லும் வழியில். பின்னர் நாங்கள் கிளம்பி ரயிலில் போகும்பொழுதுதான் கேள்விகளைப் பற்றிய சிந்தனை. பின்னர் நாங்கள் திருவனந்தபுரம் சென்ற டைந்தபோது புயல் வரப்போவதாக ஒரு அறிவிப்பு இருந்தது. ஆயினும் அவருடன் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு கடற்கரையில் நெடுநேரம்வரை நடந்து சென்றதில் நேரம்போனது தெரியவில்லை. பாஸ்பிண்டரின் ஓர்பாலுறவை பற்றியும் நாங்கள் மாணவர்களாக இருந்த நேரத்தில் பார்த்த அவரது படங்களைப் பற்றியும் அந்த அந்திப்பொழுதில் பேசிக்கொண்டிருந்தோம்.
குறிப்பாகப் பாஸ்பிண்டரின் இன் அ யியர் ஆப் 13 மூன்ஸ் (In a Year of 13 Moons, 1978) என்ற படத்தைப் பற்றி. தஞ்சாவூரில் குடைவாசலிலிருந்து வந்த அருண்மொழிக்கு அணுக்க மான கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடத்திலிருந்து குறும்படமாக அவர் யோசித்த ஒரு திரைக்கதையையும் அவர் விவரித்தார். அது அருமையாக இருந்தது. சில படங்களை மனதளவில் கண்டுகளித்து விடுகிறோம். திரையில் கண்ட பல படங்கள் சுவடுகள் தெரியாமல் அழிந்தபோதும் அவையழியாமல் மனதில் நினைக்கும்தோறும் நிறைவை அளிப்பதாக உள்ளன.
அருண்மொழி அத்தகைய காட்சிகளை எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் அள்ளி வழங்கியிருக்கிறார். நடந்துகொண்டே, டீக்குடித்துக்கொண்டே.
அடுத்த நாள் நினைத்திருந்தபடி நான் அருண்மொழியுடன் நகுலன் அவர்களின் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. எனது தங்கம் படத்தின் இணை இயக்குனரான இலாரியாவுடன் சுந்தர ராமசாமியவர்களை அவரது நாவலான புளியமரத்தின் கதையின் (இத்தாலிய) பட உரிமைக்காகச் சென்று சந்திக்க வேண்டியதிருந்தது. அவர் அமரர் பாலு மகேந்திரா போன்ற பலர் சில வருடங்களுக்கு முன்னர் ஆர்வம் தெரிவித்திருந்தனர் என்றும் காப்புரிமை பற்றிக் கறாராக ஒப்பந்தமெதுவும் இல்லை என்றும் சொன்னார். தமிழ் நாட்டிலுள்ள இந்த மாதிரியான காப்புரிமை பற்றிய இறுக்கமற்ற சூழல் மேற்கேயில்லை என்று இலாரியாவின் நண்பர் ஓவியர் சல்வதோரே சிலாகித்தார். இலாரியா அதற்குப்படங்கள் எடுப்பதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தமில்லாமல் ஒத்துக்கமாட்டார்கள் மற்றும் காப்புரிமை சார்ந்த குழப்பம் என்பது எப்போதும் துணை இயக்குனர்கள் போன்ற விளிம்புநிலை கலைஞர்களையே அதிகம் பாதிக்கும் என்றும் வாதாடினார். அதற்குச் சல்வதோரே இங்குக் கலைஞர்களைப்போலச் சிந்திக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார். இத்தகைய கலைஞர்கள் மிகவும் வல்னெரபில் ஆக இருக்கக் கூடியவர்கள். எப்போதும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று எதிர்வினையாற்றினார் இலாரியா.
தங்கத்துக்குப் பிறகு அருண்மொழியுடன் இணைந்து செகண்ட் பெர்த் என்ற படத்தை உருவாக் கினார் இலாரியா. அதில் அவர்கள் கூவாகத்தில் முக்கியக் காட்சிகளை எடுத்தார்கள். திருநங்கைகளின் வாழ்வை மையமாக வைத்து அருண்மொழி எழுதிய கதையாடல் அது. இரண்டாம் பிறவியில் அருண் மொழி இயக்குனராக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துமிருந்தார். கடைசியாக அவர் எடுத்துக் கொண் டிருந்த படத்திலும் ஒரு (துணை) இயக்குனர்தான் மையமாக இருக்கிறார். ஏதோ ஒரு வகையில் அரசியல் சார்ந்து படங்களை ரசிக்கும் அருண்மொழியின் மனதில் த்ருபோவின் டே பார் நைட் மற்றும் பெல்லினியின் 8 அண்ட் லு போன்ற அவர் இளவயதில் பார்த்த படங்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது என்று சொல்லலாம். இரண்டாம் பிறவிக்குப் பிறகுஅவர் அன்றிலிருந்து இன்றுவரை இருபது வருடங்களுக்கும் மேலாக மாற்றுபாலினரின் வாழ்வை மையப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவே இருந்துவந்துள்ளார். அவருக்கு எப்போதும் இருக்கும் அக்கறை (கலைஞர்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளோரின்) வாழ்வை ஆவணப்படுத்துதலைப் பற்றியதுதான். செகண்ட் பெர்த்தின் சூட்டிங்கின் போதும் கதையாடலுக்கு வெளியேயிருந்த திருநங்கைகளின் வாழ்வை தனது கைவசமிருந்த ஹை-8 கேமராவில் டேப்பைக்கொண்டு பதிவு செய்திருந்தார். அதில் எங்களூர் பக்கத்திலிருந்து கூவாகத்திற்கு வந்திருந்த எனக்குப் பரிச்சயமான திருநங்கை தாடி வளர்த்து நோய்வாய்பட்டிருப்பதைக் கண்டேன்.
நானும் அருண்மொழியும் பின்னர் எடிட்டிங் ரூமில் எங்கள் மாணவ பருவத்திற்குப் பிறகு 90களில் இந்திய திரைப்பட விழாவில் கே அண்ட் லெஸ்பியன் படங்களின் சிறப்புப் பகுதியில் பார்த்த பல படங்களைப் பற்றிப் பேசினோம். அதில் மேற்கத்திய உலகில் எயிட்ஸினால் மறைந்த பல ஆளுமைகளைப் பற்றிய படங்கள் இருந்தன. அமரர் மார்லன் ரிக்ஸின் டங்ஸ் அன்டையிட் உட்பட (Tongues Untied, dir. Marlon Riggs, 1989) ஓரினச்சேர்க்கையாளர்களுடன் எயிட்ஸை தவறுதலாகத் தொடர்புறுத்தி அவர்களை வன்முறைக்கும் ஒதுக்குதலுக்கும் நிராகரிப்புக்கும் உள்ளாக்கியதைப் பற்றியும் முக்கியமான படங்கள் வந்திருந்தன. ஆனால் நமது நாட்டில் அவர்களது வாழ்க்கை இருட்டடிப்புக்கு உள்ளானதால் அவர் களுடைய அந்த இருண்ட காலகட்டமும் உளவூறும் பதிவாகவில்லை. அருண்மொழியவர்களின் வீடியோ வில் தான் தனது நெருங்கிய நண்பர்களை 1980/90 களில் இழந்த 60 வயதை ஒட்டிய திருநங்கையவர்களின் நேர்காணலைக் கண்டேன். அது எனக்கு எங்களூரை ஞாபகப்படுத்தியது மட்டுமல்லாமல் மிஸ்கின் அவரது கேமராவில் எடுத்திருந்த தாடி வைத்து மாலை அணிந்திருந்த ஒரு திருநங்கையின் உருவத்தையும் ஒத்திருந்ததாகப்பட்டது. அருண் மொழி திருநங்கைளையும் மாற்றுபாலினரையும் ஆவணப்படுத்தியிருந்த அனுபவமும் கைகொடுத்தது. அவ்வாறுதான் எனது படமான கட்டுமரத்தில் ஒரு மைய கதாபாத்திரமான அலங்காரம் உருவெடுத்தார். இன்று எண்ணிப் பார்க்கையில் பல வருடங்களுக்கு முன் கவிஞர் நகுலனைக் காரணமாகக் கொண்டு நானும் அருண்மொழியும் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் கால நேரம் மறந்து நடந்து திரிந்து அளவளாவிய அந்தத் தருணம் பின்னர் நடந்த பல விஷயங்களுக்கு காரணமாக இருந்தது தெரிகிறது. செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு இருமை சூழ்ந்ததினால் அவசரமாக நானும் அருண்மொழியும் திருவனந்தபுரம் கடற்கரையிலிருந்து திரும்பினோம். அருண்மொழி அவர்கள் (அவரது நண்பர்களுக்குப் பரிச்சயமான) ட்ரேட் மார்க் ஸ்டைலில் தனது ஜீன்ஸை கால் முட்டிகளுக்கு மேலே மடக்கி வைத்து அவரது இரு செருப்புகளையும் ஒவ்வொரு பாக்கெட்டிலும் போட்டுக் கொண்டார். நாங்கள் தங்கியிருந்த லாட்ஜை அணுகி அருகேயிருந்த டீக்கடையில் அமரும்போதுதான் அருண்மொழியின் ஒரு செருப்பு காணாமல் போயிருந்தது தெரிந்தது. “நாளைக்கு நடக்கேல எடுத்துக்கலாம்” என்றார் அருண்மொழி பதட்டமேதும் இல்லாமல். நமது கண்முன்னே நடப்பதை ஆவணப் படுத்தலில் ஆர்வம் கொண்ட அருண்மொழி அதற்கடுத்தும் நேசித்தது நடப்பதைத்தான்.
அலைந்து திரிந்து தான் சந்தித்த பேர் தெரியாத மக்களிடம் எப்பவும் பிரியமாக உலகைப்பற்றியும் வாழ்வைப்பற்றியும் அது அவர்களை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் அன்புடன் விசாரித்த அருண்மொழியின் நலம் விசாரித்துத் தோள் கொடுத்தோரும் இருந்தனர். தனது படங்களான காணி நிலம் (1987) மற்றும் ஏர்முனை (1992) மூலம் பல திரைப்பட விழாக்களுக்கு அன்றே சென்று வந்தவர் அருண்மொழி. ஷிலா விட்டேக்கர் போன்ற சினிமாவைப் பற்றி நன்கு அறிந்த க்யுரேடர்கள் அன்றிருந்தனர். அவர் காணிநிலத்தை அவர் மனதிற்குப் பிடித்ததினால் ப்ரமோட் செய்தார். பல உலக திரைப்பட விழாக்களுக்கு அன்றே சென்று வந்தவர் அருண்மொழி. குறிப்பாக இன்று சர்வதேச திரைப்படவிழாக்களில் முதல் பத்துக்குள் கணிக்கப்படும் டாப் டியர் பிலிம் பெஸ்டிவல் என்று சொல்லப்படக்கூடிய சுவிட்சர் லாண்டில் நடைபெறும் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவில் அன்றே காணிநிலம் பங்கேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அருண்மொழி அங்குக் கௌரவப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு அது. ஆயினும் எல்லா சுயாதீன இயக்குநர்களையும் போல தனது அடுத்தப் படமான ஏர்முனையை அவர் எடுக்க ஆறு வருடங்கள் ஆகியது. தளராமல் தனது ஆவணப்படங்களை இயக்கி வந்த அருண்மொழி ஏர்முனைக்காக அந்தக் காலத்திலேயே இன்று நாம் க்ரௌட் சௌர்சிங் என்று சொல்லக் கூடிய மக்களிடமிருந்து அதுவும் முக்கியமாகக் குறுவிவசாயிகளிடமிருந்து சிறு துளிகளாகப் பணத்தைச் சேகரித்து அவர்களுக்கான குரலாக ஏர்முனையை உருவாக்கினார்.
ஏர்முனை அன்றே இன்றைய விவசாயிகளின் நிலைமையை எதிர்ப்பார்த்துள்ளது. இன்றைய சுற்றுச்சூழல் சார்ந்த கரிசனத்துடன் உரங்களுக்கும் செயற்கை ரசாயனங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்க்கதரிசியாக அன்றே தனது குரலை பதிவு செய்துள்ளார் அருண்மொழி. அத்தகைய ஒரு படத்திற்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அனுமதி இல்லை என்றவுடன் வருத்தமடைந்தார். நாங்கள் கல்கத்தாவில் நடந்த இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்தியாவில் 1991ல் தனிப்பட்ட முறையில் ஏர்முனையைத் திரையிட்டோம். பல நண்பர்களையும் முக்கிய இயக்குனர்களையும் அழைத் திருந்தோம். எங்களுக்கு மகிழ்ச்சியான அதிர்ச்சி தந்த விஷயம் என்னவென்றால் நாங்கள் மிருனால்-தா என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கும் புகழ்பெற்ற வங்காள இயக்குனர் மிருனால் சென் அத்திரையிடலுக்கு வந்திருந்ததுதான். கல்கத்தாவில் ஆயிரம் முக்கியமான கலைஞர்கள் இருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை சத்யஜித் ரே, ரித்விக் கடக் மற்றும் மிருனால் சென் தலையானவர்கள். அதிலும் கவிஞர்களும் பிலிம்மேக்கர்களும் சூழ்ந்து உள்ள கல்கத்தாவில் திரைப்பட விழா என்றால் மிருணால் சென்னுக்கு உள்ள காலஅவகாச இக்கட்டை எண்ணிப்பாருங்கள். அதுவும் கடக் அவர்கள் அப்போது இல்லை. ரேயும் உடல் நலம் குன்றியிருந்த காலமது. மிருணால் சென் திரையிடலுக்கு வந்தது மட்டுமல்லாமல் ஆயிரம் பேர் நிறைந்திருந்த ஒரு பெரிய ஹாலில் ஏர்முனைக்காகக் குரல் கொடுக்கவும் செய்தார்.
சென்: “தமிழ்நாட்டிலிருந்து எந்தப் படமும் தகுதி பெறவில்லை என்றறிகிறேன். ஏர்முனை போன்ற படத்தை நிராகரித்ததற்குக் காரணம் சொல்ல முடியுமா?... என்எப்டிசி போன்ற நிறுவனங்கள் ஏர்முனை போன்ற படங்களை எடுப்பதில் உதவி புரியவேண்டும்... இல்லையெனில் கஷ்டப்பட்டு எடுத்த படத்தையாவது மக்களிடம் எடுத்துச் செல்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அம்மா அறியான் என்ற ஒரு அருமையான மலையாள திரைப்படத்தையும் இப்படித்தான் மக்களிடம் சென்றடைவதிலிருந்து தடுத்தீர்கள். திரைப்பட விழா எனும் இவ்வெளி யாருக்கானது என்று கேக்கிறேன்... மக்களுக்கானதும் மக்களுக்கான படங்களுக்கும் அது இல்லையெனில்...”
சென் அவர்கள் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஏர்முனை போன்ற சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சரியாகச் சப்டைட்டில் செய்யப்படாத ஒரு இளம் இயக்குநரின் தமிழ் படத்திற்குக் குரல் கொடுத்தது எங்களுக்கு ஒரே நேரத்தில் அதிர்வையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. அருண்மொழியும் நானும் அவரிடம் நன்றி சொல்ல வார்தைகளுக்குத் திக்குமுக்காடினோம். மிருனால் சென் போன்றவர்களுக்கு அவர்களது கலையும் வாழ்வும் அரசியலும் செயற்பாடும் ஒன்றேதான் என்பதை உணர்ந்து தலை வணங்கினோம். கலை சினிமா இயக்கமாகப் பரிணாமம் பெறாவிட்டால் நாம் எத்தகைய குரல்களை இழக்கிறோம் என்று இன்றளவும் எண்ணிப் பார்க்கிறேன். வணிகப்படம் எடுப்பவர்கள் அவார்டுக்காகப் படம் எடுப்பதிலிருந்து சென் போன்ற இயக்குநர்களின் வேள்வியை மையமாகக் கொண்ட சினிபயணம் வித்தியாசமானது. நிகரில்லாதது.
பின்னர் சென் அவர்கள் உருவாக்கிய பெருஞ்சலனத்திற்குத் திரைப்பட விழா இயக்குனர் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார். அப்பெரிய ஹாலில் மௌனம் நிலவியது.
இயக்குனர்: “தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். ஆயினும் நாங்கள் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் அனைத்து படங்களையும் தேர்வு செய்துள்ளோம்.”
சென்: “அப்போ அரசியலுக்கு இடமில்லாத சர்வ தேசிய திரைவிழாவா இது?”
இயக்குனர்: “அப்படியில்லை. உருவமும் முக்கியமானது. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவத்தின் தேடலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.”
சென்: “ஒரு நல்ல படத்தில் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா?...” அரசியல் இல்லாத அழகியலினால் வறுமையில் வாடும் நமது நாட்டிற்கும் மக்களுக்கும் என்ன பயன்? நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் பலகோடிகள் இறைத்து இவ்விழாவை நடத்துகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”
இயக்குனர்: ம்ம்ம் ...
சென்: “தர்ட் சினிமா என்று ஒரு அழகியல் இருக்கிறது. அதைப்பற்றி தெரியுமா? கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?”
இயக்குனர் மௌனம் சாதித்தார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். மிருனால் சென் போன்ற அரசியலில் ஈடுபாடுகொண்ட ஆயினும் மனிதத்தில் தோய்ந்த கலைஞர்கள் சமன் இழந்தால் சபை கொள்ளாது என்றறிந்தேன் அன்று. அருண்மொழியின் ஆன்ம விசாரங்களும் சமத்துவமும் நீதியும் சுயமரியாதையும் சார்ந்ததுதான். அதில் உள்ளடக்கத்தின் வீரியமே உருவத்தைத் தீர்மானிக்கிறது. உள்ளடக்கதில் சீர்மையில்லாத பொழுது ஒரு செயற்கையான உருவ மெருகேற்றலை அவரது மனம் நாடவில்லை என்பது தான் உண்மை. அவரது காணிநிலம், ஏர்முனை ஆகிய இரண்டு படங்களிலும் கூட நீடித்த ஒப்பாரி போன்ற கதையாடலை சீர்குலைக்கும் காட்சிகள் விமர்சனத்திற்கு உண்டானதுண்டு. அதுவே அப்படங்களின் ஆற்றல் மற்றும் தனித்துவம் என்று நான் அன்று எதிர்வினையாற்றியிருக்கிறேன். அலைந்து திரிந்து மக்கள் கலைஞனாக மக்களிடம் அக்கறை கொண்டு குசலம் விசாரித்து ஊடல் கொண்டு அவர்கள் வாழ்வை அதன் சமனின்மையை உள்ளபடியே பதிவு செய்து அவர்கள் மனதில் பதிந்த கலைஞனின் பயணம் முற்றுபெறாதபோது படத்தை மட்டும் அவர் சீராகக் கொண்டு சென்று கோர்வையாக முடித்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அவரது தனித்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரது பயணத்தைக் கண்டு பீதியடைவதையே காட்டுகிறது. சதா ஓடிக்கொண்டிருக்கும் மானுடம் எனுமாற்றில் அதன் ஏற்றத்தாழ்வுகளில் லயித்துச் சினிமா மூலம் அதன் சமமின்மையை ஆன்ம விசாரம் செய்துகொண்டிருந்த கலைஞனுக்கு அதன் பார்க்கும் பொழுதே மாறிக்கொண்டிருக்கும் தன்மையை ஆவணப்படுத்திக்கொண்டிருப்பதே அவனது தலையாயக் கடமையாகப்படுகிறது. அவனது வார்த்தைகளில் வடிக்க முடியாத சாத்தியங்களில் நம்பிக்கையற்று இருண்மையில் உழலும் மானுடத்தைப்பற்றிய கேள்விகளுக்கு அவனது அச்செயலிலேயே பதிலிருப் பதாகப்படுகிறது. மற்றபடி அத்தகைய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுக்கே இருக்கிறது எல்லா நேரங்களிலும் என்னைப் போன்ற எல்லோரும் செய்வது; படத்தைச் சீர்படுத்துதலும் திரைப்பட விழாக்களுக்கு எடுத்து செல்லுதலும் அங்கு நடக்கும் நாம் எதிர்ப்பார்க்கக் கூடிய கேள்வி-பதிலாடல்களும். அதைத் தனது 29 வயதிலேயே காணிநிலத்துடன் உலகம் சுற்றிய பொழுது முழுவதுமாகப் புரிந்து கொண்ட அபூர்வ கலைஞர்தான் என்றும் எனது மனதிற்கினிய அருண்மொழி!
மூன்றாவது டெஸ்டை இந்திய அணி டிரா செய்தது குறித்துத் தந்தியில் செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. ஐந்தாவது நாளில் ரிஷாப் பண்ட் ஆடிய ஆட்டத்தை அந்தக் கட்டுரை வெகுவாகச் சிலாகித் திருந்தது. நான்காவது நாள் ஆட்டத்தைப் பற்றிய நேற்றைய செய்தியில் கிட்டத்தட்ட அனைத்து நாளிதழ் களுமே இந்திய அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லையெனக் கூறியிருந்தன. கைவசம் மூன்றே விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு பந்துவீச்சுக்குச் சாதகமான கடைசி நாளில் நானூறு ஓட்டங்களையெடுத்து வெற்றி பெறுவது சாத்தியமேஇல்லை என்றும் சமன்செய்வதும்கூட முடியாத காரியமே என்றும் யூகங்களை வெளிப்படுத்தி இருந்தன. லோகுவுக்கும்கூட அப்படித்தான் தோன்றியது. ஆனால் ஏழாவது மட்டையாளராக இறங்கிய ரிஷாப் பண்ட் நம்பமுடியாத வகையில் ஆடி இருந்தார். இலக்கை அடைய சொற்ப ரன்களே தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் எதிர்பாராதவகையில் ரன்அவுட் ஆகிவிடப் போட்டி சமனில் முடிந்திருந்தது.
நாளிதழைப் புரட்டியவாறு கடைக்கு உட்புறம் மையப்பகுதி நாற்காலியில் அமர்ந்து லோகநாதன் தேநீரை அருந்திக்கொண்டிருந்தார். அவரது கவனம் அவ்வப்போது ஜெயபாலின் மீதும் சென்று சென்று மீண்டபடியிருந்தது. ஜெயபால் பேக்கரிக்கு முன்னா லிருக்கும் பெட்டிக்கடைக்கு அருகில் நின்றவாறு டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார். பாடாவதி ஆகிவிட்ட ஒரு பழைய டிவிஎஸ் பிப்டியில் தினமும் இந்த நேரத்திற்கு ஜெயபால் வந்துவிடுகிறார். அங்கிருந்தபடியே டீயைச் சொல்லிக் குடித்துவிட்டு காசுகுடுக்க வரும்போது மூன்று உளுந்து வடைகளையும் வாங்கி பார்சல் கட்டிக்கொண்டுபோய் மொபட்டின் டேங்க் கவருக்குள் வைத்து விடுகிறார். பிறகு பெட்டிக்கடையில் ஒரு கட்டுப் பத்தாம் நெம்பர் பீடி வாங்கி அதிலொன்றை உருவி அங்கேயே நின்றபடி புகைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.
லோகநாதன் சற்று நேரத்திற்குமுன் உளுந்து வடையைச் சாப்பிட்டபடியே முகநூலில் உலாவி கொண்டிருந்தார். ரிஷாப் பண்டின் ஆட்டம் குறித்தான பதிவொன்று தட்டுப்பட்டது. நேற்றைக்கு முழுவதுமே சமூக வலைதளங்களையெல்லாம் ரிஷாப்புதான் ஆக்கிரமித்திருந்தார். பத்துமணிநேரத்துக்கும் மேலாக நின்று விளையாடிய ரிஷாப் பண்ட் கூடுதலாக இன்னும் பத்தே நிமிடங்கள் நின்றிருந்தால்கூடப் போதும். அணியை ஜெயிக்க வைத்திருப்பார் என்றும் ரிஷாப்பின் வரலாற்றில் மிக முக்கியமான இன்னிங் ஸான இது கிரிக்கெட்டின் வரலாற்றிலேயும் மிகமிக முக்கியமான இன்னிங்ஸாக மாறிப்போயிருக்கும் என்றும் அந்த முகநூல் பதிவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
சுவர்போல நின்று சிக்ஸரும் போருமாக விளாசிக் கொண்டிருந்தவர், பந்து பீல்டரின் கைக்குப் போய் விட்டதுகூடத் தெரியாமல் ஒத்தை ரன்னுக்கு ஓடி ரன்அவுட் ஆனதைப் பற்றி என்னத்தைச் சொல்ல? என்றும் அந்தப் பதிவர் அங்கலாய்த்திருந்தார். பொதுவாகக் கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகளை ஆட்டத்திறமைகள் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் தீர்மானிக்கிறது என்பார்கள். பத்துமணி நேரத்துக்கும் மேலாக அனுக்கிரகம் புரிந்த அதிர்ஷ்டம் கடைசிப் பத்து நிமிடங்களுக்கு முகம் முழிக்காது போய் விட்டதே என்றவாறு அந்த முகநூல் பதிவு நீண்டு கொண்டிருந்தது. பதிவின் ஓரிடத்தில் இடம் பெற்று இருந்த சில வரிகள் சட்டென்று இழுத்துப் பிடித்துக்கொண்டது. வாழ்வின் புதிரான போக்குகளையும் பெரிய மாற்றங்களுக்குக் காரணமாக மாறிவிடுகிற சிறிய கணங்களையும் பற்றியெல்லாம் யோசிக்க வைத்தது. பொதுவாக லோகு இவ்விதமாக யோசிப்பவர் கிடையாதுதான். அவருடைய சிந்தனைத்தள மானது ஒரு சராசரி மனிதனுக்குரிய லௌகீகங்களால் ஆனது. ‘நூலளவுக்கும் குறைவான நூலளவு ஏமாந்த தால் மலையளவுக்கும் பெரிதான மலையளவு கை நழுவிப் போய்விட்டதே’ என்பதுதான் அந்த வரிகள். சாதாரண லோகுவை சிந்தனையாளர் லோகுவாக அவ்வரிகள் மாற்றியது. அதற்குக் காரணம் அவர் ஜெயபாலை கண் பார்வைக்குள் வைத்துக்கொண்டு மேற்படி வரிகளைப் படிக்க நேர்ந்ததால்கூட இருக்கலாம்.
லோகுவுக்கும் ஜெயபாலுக்கும் பரஸ்பரம் பரிச்சியம் உண்டாகி இருபது வருடங்களுக்குமேல் ஆகிறது. ஆனாலும், பெரிதாகப் பேசிக்கொண்ட தில்லை. அப்போது லோகு ஒரு பனியன் கம்பனி யில் டெய்லராக இருந்தார். இப்போது இரண்டு பனியன் கம்பனிகளுக்கு முதலாளியாக இருக்கிறார். பணம் சேர்ந்ததுமே உடம்பு பெருத்துவிட்டது. முக்கியமாக வயிறு பெருத்துவிட்டது. குருதியில் கொழுப்பும் இனிப்பும் சேர்ந்துவிட்டதாக மருத் துவர்கள் கூறினார்கள். காலையில் எழுந்ததுமே ஸ்போர்ட்ஸ் ஷூவும் பெர்முடாஸ் டிரவுசரும் டீசர்ட் பனியனுமாகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் நால் ரோட்டிற்கு வந்துவிடுகிறார். வந்த இடத்தில்தான் இன்றைக்கு ஜெயபாலைப் பற்றியும் வாழ்க்கையப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த ஆறுமாத காலமாகத்தான் ஜெயபால் மறுபடியும் கண்ணில் படுகிறார். அதற்குமுன்பு வெகு வருடங்கள் அவர் ஊரில் இல்லாதவராக இருந்தார். ஏழு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் ஊரைச் சேர்ந்தவரான ஜெயபால் லோகுவுக்குச் சோமுவின் மூலமாகத்தான் அறிமுகமானார். பனியன் தொழிலைவிட்டு விலகி சோமு அப்பொழுது பர்னிச்சர் கடை ஆரம்பித்திருந்தான். சோமுவின் ஊர் லோகுவின் ஊருக்கு வடக்கே இரண்டு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்தது. உண்டான விலையிலிருந்து கூடுதல் விலை நிர்ணயித்துக் கடனுக்குப் பொருட்களைக் கொடுப்பதும் தவணைத் தொகையை வாரத்தில் ஒருநாள் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று வசூலிப்பதுமாகச் சோமுவின் வியபார முறைமை இருந்தது.
எட்டுத் திசைகளிலும் சுமார் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வாடிக்கையாளர்கள் இருந் தனர். வேலையில்லாத நாட்களில் லோகுவும் சோமுவுடன் லைனுக்குப் போவதுண்டு. வாய்க்கால் பாதைகள், கிளுவைகள் மருங்கமைந்த இட்டேறிகள்,பஞ்சாயத்து ரோடுகள், எருக்கலைகளும் ஆவாரைகளும் பூத்துக் கிடக்கும் கொறங்காடுகளுக்குள் போகும் ஒற்றையடிப் பாதைகள் என வசூலின் பொருட்டு சோமு போய்வருகின்ற வழித்தடங்கள் அபாரமான அழகுடையவை. அவரது வாடிக்கையாளர் குடும்பங்களில் ஒரு குடும்பமாக ஜெயபாலின் குடும்பமும் இருந்தது.
பத்திரிக்கையில் வெளிவந்திருந்த சிக்ஸர் அடிக் கும் ரிஷாப் பண்டின் புகைப்படத்தை ஒருகணம் உற்றுநோக்கிய லோகநாதன் மறுபடியும் ஜெயபாலைக் கவனிக்க ஆரம்பித்தார். காலை நேரத்திற்கேயுண்டான பரபரப்புகளுடன் நால்ரோடும் நால் ரோட்டின் கடைகளும் அதன் மக்களும் இயங்கிக் கொண்டிருக்க இவைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப்போல ஜெயபால் அவர்பாட்டிற்கு நின்றபடி அவர்பாட்டிற்குத் தேநீரைஉறிஞ்சிக்கொண்டிருந்தார்.
போய் ஒரு புன்சிரிப்பைப்போட்டு ‘அப்புறம் நல்லாயிருக்கீங்ளா ஜெயபால்.. சௌக்கியம்தானே..?’ எனக் கேட்கலா மென்றும் தோன்றியது. கேட்பதாக இருந்தால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதே டீக்கடைக்கு முன்னால் ஜெயபாலைச் சந்திக்க நேர்ந்த அந்த முதல் நாளிலேயே கேட்டிருக்கவேண்டும். இத்தனை நாட்களாக யாரோ எவரோபோல உன்னையெல்லாம் எனக்கு ஞாபகமே இல்லை என்பது மாதிரி நடந்து கொண்டுவிட்டு திடீரென இன்றைக்குப்போய்ப் பெயர் சொல்லி விளித்து நலம் விசாரிக்கச் சங்கடமாகவும் இருந்தது.
‘என்ன ஜெயபாலு ஊருக்கே வந்துட்டாப்லயா..? தினமும் காலைல நால்ரோட்ல தட்டுப்படறாப்ல..?’ சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பொன்றில் லோகு சோமுவிடம் கேட்டார். சோமுவின் பர்னிச்சர் கடை இரண்டு மூன்று கிளை களுடன் இப்போது பெரிய நிறுவனமாக வளர்ந்து விட்டது. மிகவும் பிஸியான வியபாரியாகிவிட்ட அவனை முன்பு போலெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை.’
‘அப்படீன்னுதான் நானும் கேள்விப்பட்டே னுங்ண்ணா.. எனக்கும் பெருசா டச்சுக் கெடையாது. எங்காச்சும் குறுக்கமறுக்கப் பார்த்தா ரெண்டுவார்த்தை பேசிக்கிறதோட சரி... குண்டடத்தில் வாடகைக்கு வீடு பார்த்து வந்துட்டாப்லைனு தகவல்’ என்றான். ‘இங்க அவரோட அண்ணந்தங்கச்சியெல்லாம் பண்ணையத்தைப் பங்கி கறால் பண்ணிக்கலாம்னு இருப்பாங்களாட்டயிருக்குது. தனக்கான பங்கை குடுக்காம ஏமாத்தி எழுதிக்குவாங் களோங்கிற சந்தேகத்துல இங்கயே வந்துட்டாப்ல போல’ என்றும் கூறினான்.
ரிஷாப் பண்டிற்கு வாய்த்தது போலவே ஜெயபாலுக்கும் ஒரு நாள் வாய்த்தது. அந்த நாளின் பகல்முழுவதும் பொழுதெறங்கி இரவு எட்டு மணிவரைக்கும் ஜெயபாலுக்கு அதிர்ஷ்ட தேவதை அனுக்கிரஹம் புரிந்துவந்தாள். அன்றைக்கு நடந்த பைனலில் ஜெயபால் பின்னி பெடலெடுத்திருந்தார். அந்தப் போட்டியானது ஊரே கூடி திருவிழாவை யொட்டி ஊருக்கு வந்திருந்த ஒறம்பரைச் சனங் களெல்லாம் கூடி பலத்த கரவொலிகளையும் விசிலொலிகளையுமெழுப்பியபடி பார்த்து ரசிக்க உள்ளூர் குளக்கரை மைதானத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வாசுகியும் இருந்தாள். எட்டுமணியளவில் வெற்றிக்கோப்பையும் கையுமாக அரங்க மேடையிலிருந்து ஜெயபால் இறங்கி வந்த சமயம் தான் அதிர்ஷ்டதேவதை தன் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டிருந்திருக்கவேண்டும். மேலுமொரு பத்து நிமிடங்களுக்கு அவள் தனது அருட்பாலிப்பை நீட்டித்திருந்தாளேயாயின் - சோமு கூப்பிட்டது ஜெயபாலின் காதில் விழுந்திருக்கும். இவர்கள் இருக்கும் திசைநோக்கி அவரும் வந்திருப்பார். வந்திருப்பின் நிலைமையே வேறு. தள்ளிக்கொண்டு ஓடி ஸ்டார்ட் செய்யும் நிலையிலிருக்கும் பழைய டிவிஎஸ் பிப்டியில் இப்படிச் சுற்ற வேண்டியிருந்திருக்காது.
ஞாயிறு தவிர வாரத்தின் எல்லா கிழமைகளிலும் சோமுவுக்கு லைன் வசூல் இருக்கும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு ஏரியா எனப் பிரித்து வைத்திருப்பான். திங்கட்கிழமை லைனில் ஜெயபாலின் ஊரும் ஏனைய பிற ஊர்களும் இடம் பெற்றிருந்தன. அந்த லைனிலிருக்கும் மற்ற ஊர்களையெல்லாம் பார்த்துவிட்டு ஏதேனும் ஹோட்டலொன்றில் மதிய உணவை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயபாலின் ஊருக்கு வந்து அங்குள்ள பிற வாடிக்கையாளர்களை எல்லாம் பார்த்துவிட்டுக் கடைசியாகத் தோட்டத்திற்குள்ளிருக்கும் ஜெயபாலின் வீட்டிற்கு வந்து சேருவார்கள். வெயிலில் அந்தியின் சிவப்பு கூடிக் கொண்டிருக்கும்.
பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் ஜெயபாலின் தங்கை நித்யா பள்ளிச் சீருடை யிலிருந்து நிலம்தொடும் பூக்கள்போட்ட பாவாடைக்கும் தொளதொள டீசர்ட் அல்லது ரவுண்ட்நெக் பனியனுக்கும் மாறி கழுவப்பட்ட முகத்தில் பூசப் பட்ட பவுடரோடு காணக் கிடைப்பாள். நீளவாக்கில் இரண்டாக மடித்த ஈரிழைத் துண்டை மார்புக்குமேலெ கழுத்தாடையாகச் சுற்றியபடி அவள் வலம்வரும் காட்சியானது அவ்வளவு அழகாக இருக்கும். ‘தனக்கு ஒரு ஐந்து வருடங்கள் குறைவாக இருந்து அல்லது இந்தப் பொண்ணுக்கு ஒரு ஐந்துவருடங்கள் அதிக மாக இருந்திருந்தால் ஒரு கல்லை விட்டுப் பார்த்திருக்கலாமே’ என லோகுவுக்குத் தோன்றுவதுண்டு.
அந்தத் திங்கட்கிழமை லைனில் மனதைக் கவரும்விதமாக மற்றொரு பெண்ணும் இருந்தாள். வாசுகிதான் அவள். வாசுகியும் ஜெயபாலின் ஊர்தான். ஊர் முகப்பிலேயே விஸ்தீரணமான தோட்டமும் தோட்டத்தின் குபேரபாகத்தில் மிகப்பெரிய கான்கிரீட் வீடும் அவளுக்கு இருந்தது. நித்தியாவைவிடவும் ஐந்தல்ல குறைந்தது ஏழு வருடங்களுக்காவது மூத்திருப்பாள். இரண்டு டிகிரிகளை முடித்துவிட்டு அய்ந்தாறு வருடங்களுக்கும் மேலாக மணவாளனுக்காகக் காத்திருக்கும் முதிர் கன்னி. அம்சமான அழகி. முப்பதை நெருங்கிக்கொண்டிருந்த லோகுவுக்குச் சோடிபோட சரியான வயதுதான். ஆனால், வயதுப்பொருத்தம் இருந்தால் மட்டும் போதுமா என்ன? மாப்பிள்ளைகள் கிடைக்காததால் அல்ல. வந்த மாப்பிள்ளைகள் யாரையுமேவாசுகிக்குப் பிடிக்காததால்தான் கல்யாணம் தள்ளிப் போகிறதே தவிர மாப்பிள்ளைகளுக்கு வாசுகியைப் பிடிக்காததால் அல்ல என்று சோமு கூறினான்.
‘அதெல்லாம் பெரிய எடம் அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு உங்களுக்கெல்லாம் ஏணி வெச்சாலும் எட்டாது ஏதாவது முயற்சி கியற்சி பண்ணி என் பொழப்புல மண்ணைப் போட்றாதீங்க இங்க எல்லாருத்துகிட்டயுமே எனக்குனு ஒரு நல்லபேரு இருக்குது’ என்பது அவனது கூற்றின் உள்ளர்த்தமாகவும் இருந்தது.
ஜெயபாலுக்கு ஒரு அண்ணனும் இருந்தார். அவர் முழுநேர விவசாயி. இவர்கள் போய்ச்சேருகின்ற நேரத்தில் இரவு மார்க்கெட்டுக்குப் போகயிருக்கும் காய்கறிகளை மூட்டை பிடித்துக்கொண்டோ கறவை களுக்குத் தவிட்டுத் தண்ணீர் காட்டிக்கொண்டோ இருப்பார். அந்த நேரத்துக்கெல்லாம் ஜெயபாலின் அப்பாவும் கொறங்காட்டிலிருந்து செம்மறிகளை ஒட்டிக்கொண்டு வந்திருப்பார். பட்டியிலடைப்பதற்கு முந்தைய அந்தி மேய்ச்சலுக்காகத் தோட்டத்தின் எதாவதொரு பகுதியில் ஆடுகளை மேயவிட்டபடி நொச்சி விளாரும் கையுமாக நின்று கொண்டிருப்பார். ஜெயபாலின் அம்மாவும் எதையாவது செய்து கொண்டிருப்பார். சாயுங்கால நேரத்துக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருப்பதும் உண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும் ஒரு டம்ளர் கிடைக்கும்.
சிலசமயம் ஜெயபாலும் வீட்டிலே இருப்பதுண்டு. அப்போது அவர் திருப்பூரிலிருக்கும் பனியன் கம்பனியொன்றிற்குக் கட்டிங் மாஸ்டராகப் போய்க்கொண்டிருந்தார். போகும்போதோ திரும்பி வரும்போதோ எதிர்முட்டுப் போடநேர்ந்தால் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஜெயபாலின் அப்பா வோடு சம்பிரதாயமான நல விசாரிப்புகளுடன் சற்று நேரம் உரையாடுவதைச் சோமு தவறவிடக் கூடாத சம்பிரதாயமாகவே கடைபிடித்து வந்தான். வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தாரிடத்தில் வியபாரம் தாண்டியும் ஒரு நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சோமு திட்டமாக வைத்திருந்தான். அவ்விதம் செய்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பினான்.
ஜெயபாலின் அப்பாவுக்குத் தன் மூத்த மகனைப் பற்றிய கவலைதான் அதிகமுமிருந்தது. ‘வயசு இருபத்தியெட்டு முடியப்போகுதுங் தம்பி... படிக்காமப் போயிட்டான். பத்தாததுக்கு ஒரு தொழிலுக்கோ ஏவாரத்துக்கோ போகாம காட்டைக் காத்துட்டே கெடக்கறான். இந்தக் காலத்து புள்ளைங்க எல்லாமே படிக்க ஆரம்பிச்சிட்டுதுக.. தனக்கு வரப்போறவனும் தன்னைவிட அதிகம் படிச்சு நெழலான உத்தியோகத்திலியோ தொழில் வியபாரத்திலியோ இருக்கோணம்னு கண்டிசன் போடுதுகளாமா... பொட்டப்புள்ளைய வூட்லவெச்சிக்கிட்டு பையனுக்குக் பார்க்கறதுக்கும் யோசனையாத்தான் இருக்கு’ என்கிற ரீதியில் ஜெயபாலின் அப்பா சோமுவிடம் தன் மனக்கிடக்கைகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு.
அந்த வாரம் ஜெயபாலும் வீட்டிலே இருந்தார். லோகு முதன்முதலாக ஜெயபாலைப் பார்த்தது அன்றைக்குத்தான். வெள்ளை முண்டா பனியனும் லுங்கிவேட்டியுமாகத் துணிதேய்த்துக் கொண்டிருந்தார். வெள்ளை முழுக்கைச் சட்டையும் புளூகலர் ஜீன்ஸ் பேண்ட்டும்தான் பிடித்தமான உடைகள்போல. சிமெண்ட்சீட் போட்ட வாசல் பந்தலுக்குக் கீழ் மர மேசையின்மேல் தனியாக வெள்ளை முழுக்கைச் சட்டைகளாகக் கிடந்தது. வாசலுக்கு வெளிப்புறமிருந்த களத்தின் கொடிக்கயிற்றில் தனியாகப் புளூகலர் ஜீன்ஸ்களாகக் காய்ந்து கொண்டிருந்தது.
விளைந்த மூங்கிலை இரண்டாகப் பிளந்து நேராக நிறுத்தியதைப் போன்ற உடல்வாகு ஜெயபாலுக்கு. சற்றே உயரம் குறைவான நடிகர் ரகுவரனைப் போல இருந்தார். சின்னவயது ரகுவரன். கையிலும் காலிலும் தோளிலும் மார்பிலும் ரோமப்படர் வென்பதே சிறிதுமில்லை. உருவிவிட்டதைப்போல மின்னின.
‘இவுரு லோகண்ணன். பக்கத்து ஊர்க்காரரு. பனியன் கம்பனில டெய்லரா இருக்கார். நான் பனியன் கம்பனிக்குப் போன காலத்துல அண்ணந்தான் எனக்குத் டெய்லரிங் கத்துக்குடுத்த குரு. இன்னிக்கு லீவுனு வூட்ல உக்காந்திருந்தாரு பொழுது போகட்டும் வாங்கனு தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்’ என்கிறவிதமாகச் சோமு ஜெயபாலுக்கும் அவருடைய அம்மா அண்ணனுக்கும் லோகுவை அறிமுகப்படுத்தி வைத்தான்.
ஜெயபாலைப் பார்த்தவுடனே லோகுவுக்குப் பிடித்துப் போய்விட்டது. நிறையப் பேசவேண்டு மென்றும் தோன்றியது. ஒரே தொழிலைச் சார்ந்தவர்கள் வெளியிடத்தில் புதிதாக அறிமுககையில் தங்கள் துறைசார்ந்து உரையாடிக்கொள்ள நிறைய இருக்கும்தானே? தொழில்சார்ந்த விசயங்களைப் பேசப்பேச ஒரு புரிதல் உருவாகி வெறுமனே தெரிந்தவர் எனும் நிலைமாறி நட்பு உருவாகவும் பலப்படவும் வாய்ப்புகள் இருக்கிறதுதானே? அன்று அப்படியெதுவும் நடக்கவில்லை. சோமு அறிமுகப்படுத்தியதும் ‘அப்படியா, சரி, நல்லது’ என்பது போலச் சிறு புன்னகையையும் சிறு ஆமோதிப்பின் தலையாட்டலையும் பிரதிபலித்த ஜெயபால் அவர் பாட்டுக்கு துணி தேய்க்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், அவரது அம்மாவும் அண்ணனும் முதல் சந்திப்பிலேயே நிறையப் பேசினார்கள். வந்து நிற்கும் புதிய மனிதனை ஒரு விருந்தினரை உபசரிப்பதுபோல உபசரித்து அவன் குடும்பம் அவன் பின்னணி பற்றியெல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தது.
‘கட்டிங் மாஸ்டர்னா லோக்கல் கம்பனீல வெட்றீங்ளா? இல்ல, எக்ஸ்போர்ட் கம்பனீல வெட் றீங்ளா? பீஸ் ரேட்டுக்கா? ஷிப்டுச் சம்பளத்துக்கா?’ என்றெல்லாம் லோகுவிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. தவணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு குறிப்பேட்டில் எழுதிக் கொடுத்த பிறகு ஒரு டீ குடிக்கும் நேரம் அங்கே அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்துக்குள் மற்றவர்களிடம் உரையாடியபடிக்கே அவ்வப்போது ஜெயபாலிடமும் மேற்படியான கேள்விகளையெல்லாம் லோகு கேட்க முனைந்தார். ஒன்றிரண்டு கேள்விகளிலேயே நிறுத்தியும் கொண்டார். ஒரு நல்ல உரையாடலை வளர்த்தெடுக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் கேட்கப்படும் அன்பின் விளைவுக் கேள்விகளுக்குக்கூட மிசின் மாதிரி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு தன்பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக்கொண் டிருப்பவரிடம் மேற்கொண்டு என்னத்தைக் கேட்பது?
அன்று வரும்வழியில் லோகு தன் அபிப் பிராயத்தைப் பகிர்ந்துகொள்ளவும் சோமுவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘சேச்சே... நீங்க நெனைக்கிற மாதிரி மண்டைக்கனம் புடிச்ச ஆளெல்லாம் கெடையாதுங்ண்ணா. அந்தாளு சுபாவமே அதான். ஊட்டுச் சனத்துக கிட்டக்கூடப் பெருசா பேசிக்க மாட்டாரு. அவுரு பாட்டுக்கு தானுண்டு தன்னோட வேலையுண்டுனு இருக்கற டைப்புன்னு வெச்சுக் கங்களேன். நானும் பெருசா பேசிக்கறதில்லை. ஏதாச்சும் கேட்டாருன்னா அதுக்குப் பதில் சொல்ற தோட சரி. ஆளு சைலண்ட் பார்ட்டியா இருந்தாலும் ஊருக்குள்ள வளுசப்பசங்ககிட்ட இவுருக்குனுனொரு செல்வாக்கு இருக்குது. கிரிக்கெட் டீமுக்கு கேப்டன் கோயில் கமிட்டில இளைஞரணித் தலைவர்னு ஆளுமையான ஆளுதான்.’ அன்றைக்குத் திரும்பிவருகையில் சோமு மற்றொரு விசயத்தையும் கூறியிருந்தான். ‘இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாதுங்ண்ணா... இவுரு கூடவே வெகுநாளா வேலைக்குப் போயிட்டிருக்கற ஒருத்தர் எனக்குத் தெரிஞ்சவரு, அவுரு சொன்னது. ‘ஆளு பொம்பளை விசயத்துல மன்னனாமா...’
அதுசமயம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல் லாம் லோகு சோமுவோடு எல்லாக் கிழமை லைன் களுக்கும் போய்க்கொண்டிருந்தார். உடன் பணிபுரிந்த நண்பர்கள் இருவரோடு சேர்ந்து தனியாக ஒரு பனியன் கம்பனியைத் துவங்கும்வரை அந்தப் பயணம் தொடர்ந்தது. மேற்படியான காலகட்டத்தில் இவர்கள் போகும்போது ஜெயபாலும் வீட்டிலேயிருந்த சமயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எல்லாச் சந்திப்புகளிலும் ஜெயபாலிடமிருந்து வெளிப் படுவது அதே சலனமில்லாத ஒரு சிறு புன்னகையும் ஒற்றை வார்த்தையில் பதில்களும்தான். அவர் பாட்டுக்கு இருப்பார். அவரது சுபாவமே அது தான் என்பதால் லோகுவும் பெரிதாகப் பேச முயற்சிப் பதில்லை. ஆனால், அவரது அண்ணன் அப்பா எல்லாம் நன்கு பழக்கமாகிவிட்டார்கள். இன்றைக்கும் எங்காவது தடம்வழிகளில் காணநேர்ந்தால் சில வார்த்தைகளாவது பேசாமல் போவதில்லை.
‘நம்மகூடப் பேசறதுக்கே இவ்வளவு யோசிக்கிறானே...? ஙொய்யாலே... இவனெப்படீடா பொம்பளை விசயத்துல மன்னனாக இருக்க முடியும்? ஒருவேளை சோமான் கேள்விப்பட்டதாகச் சொன்னதெல்லாம் பொய்யாக இருக்கலாமோ...’ என்றும் லோகுவுக்குத் தோன்றியதுண்டு. ‘பேசினா லென்ன? பேசாவிட்டலென்ன? பற்றியும் சுற்றியும் கொள்ளும்படியான உடல்வாகு இவனுக்கு. எந்தக் கொடியும் பற்றிக்கொள்ளவும் சுற்றிக்கொள்ளவுமே விரும்பும்’ என்றும் நினைத்துக்கொள்வார்.
மஹா சிவராத்திரியைத் தாண்டியதும் சிவனை விட்டுவிட்டுச் சனங்கள் சக்தியைக் கொண்டாடத் துவங்கி விடுகிறார்கள். பங்குனி சித்திரை இரண்டுமே ஆசைதீர அம்மன்களைக் கொண்டாடி மகிழும் மாதங்கள்தான். இங்கே இந்த மாதங்களில் சாட்டுப் பொங்கல்களின் குலவைச் சத்தத்தை, தீர்த்தக் காவடிகளின் கொட்டும் முழக்கை, கொம்பின் ஓசையை, படுகளமெழுப்பும் உடுக்கைப் பாடல்களை, ஊர்தோறும் நிறைந்திருக்கும் வழியெல்லாம் அமர்ந் திருக்கும் காளிக்கும் மாரிக்கும் கன்னிமார்களுக்கும் படையிலடாமல் இருந்துவிட முடியுமா என்ன? அந்த எட்டுக்குச் சலிக்காமல் ஒவ்வொரு ஊரின் கோவில் விசேசங்களுக்கும் நிறைவு நாளில் நடக்கும் இரவு நிகழ்ச்சிகளுக்கும் சோமு போய்க்கொண்டிருந்தான். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறவிரும்பும் ஒரு பிஞ்சுநிலை வியாபாரி அவர்களின் யாதொரு அழைப்பையும் புறக்கணிக்க முடியாதுதானே? கூடாதும்தானே? சூழ்நிலையை அனுசரித்துச் சில நிகழ்ச்சிகளுக்கு லோகுவும் போய்க்கொண்டிருந்தார். அப்படிப் போனதில் ஒன்றுதான் அந்த ஆடல்பாடல் கலை நிகழ்ச்சியும். ஜெயபாலின் ஊரிலே நடந்தது.
இவர்கள் போய் சேர்ந்தபோது இரவு அன்ன தானம் முடிவுறும் தருவாயிலும் இன்னிசைக் கச்சேரி ஆரம்பிக்கப்போகும் தருவாயிலும் இருந்தது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவந்த கோவில் சாட்டையொட்டிய பல்வேறு நிகழ்வுகளுக்கு நிதி அளித்தவர் களையும் வெவ்வேறு வகைகளில் துணைபுரிந்தவர்களையும் குறிப்பிட்டு விழா மேடையில் உள்ளூர்பிரமுகரொருவர் நன்றி நவின்றபடியிருந்தார். விழாப்பந்தலில் ஊர்ச்சனம் முச்சூடும் சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்திருந்தனர். மையப்பகுதிக்குச் சற்று மேபுறமாகச் சில நாற்காலிகள் காலியாகக்கிடந்தன.
லோகுவும் சோமுவும்போய் அமர்ந்து கொண்டனர். ஊர் அறிந்த வியாபாரி அல்லவா? ‘வாங்க.. வாங்க..’ ‘இப்பதான் வர்றீங்களா..?’ ‘அன்னதானம் இன்னும் நடந்துட்டுத்தானிருக்கு.. சாப்பிடலீன்னா போயி சாப்பிட்டுட்டு வந்துருங்க..’ என்கிற ரீதியில் உபசாரமொழிகள் அணிவகுத்தன. அவைகள் வருகின்ற திசைகளை நோக்கி தலையைத் திருப்பிப் பணிவும் புன்சிரிப்புமாகச் சோமுவும் பதில் சொல்லியபடி அமர்ந்திருந்தான்.
‘மத்தியானம் மேட்ச் பார்க்க வர்லியாட்ட யிருக்குதுங் சோமு.. கண்டிப்பா வருவேன்னு சொல்லீருந்தீங்ளே..’ என்றொரு குரல். பரிச்சியமான குரலாக இருக்க லோகுவும் திரும்பிப் பார்த்தார். வாசுகிதான். நேர் பின்வரிசையில் இரண்டு நாற்காலி களுக்குக் கிழ புறமிருந்த மூன்றாவது நாற்காலியில் அமர்ந்திருந்தாள். ‘ஒரு ஆர்டரு சம்பந்தமா பல்லடம் வரைக்கும் போக வேண்டீதாப் போயிருச்சுங் வாசுகி.. அதான் வரமுடியாமப் போயிருச்சு..’ என்று காரணத்தைக் கூறிய சோமு ‘இன்னிக்கு உங்க ஊரு டீமு குள்ளக்காளிபாளையம் டீமை வெச்சுச் செஞ்சுட்டாங்க போல..’ என்றான். வாசுகியின் பிரகாசமான முகம் மேலும் வெளிச்சமடைந்ததைப் போலப் பட்டது. ‘பின்னே எங்க பசங்க இன்னிக்குப் பின்னியெடுத்திட்டாங்களாக்கும்’ என்றாள்.
எட்டு அணிகள் பங்குபெற்ற நாக் அவுட் போட்டியில் பைனல் வரைக்கும் வந்திருந்த இரண்டு அணிகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. முதலில் குள்ளக்காளிபாளையம் அணிக்கு ரன்னர் கப்பும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அடுத்ததாக வின்னர் கோப்பையை வென்ற ஜெயபாலின் அணி மேடையேறியது. உள்ளூர் அணி என்பதால் பார்வையாளர்கள் பகுதியில் விசிலும் கைதட்டலும் பட்டையைக் கிளப்பின. வாசுகியே அறியாத வண்ணம் லோகு வாசுகியை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மேன் ஆப் தி மேட்ச் ஜெயபாலுக்கு வழங்கப் பட்டது. மேன் ஆப் தி சீரியலும் அவருக்குத்தான். பதினைந்து ஓவரில் நூற்றியிருபது ரன்களைச் சேசிங் செய்தால் வெற்றி எனும் இலக்குடன் இறங்கிய அணி மூன்று ஓவருக்கே ஐந்து விக்கட்டுகளை இழந்து இருபத்தியேழு ரன்களோடு தடுமாறியதாம். ஆட்டம் காலி, தோல்வி நிச்சயம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்களாம். ஆனால், ஆறாவது விக்கெட்டுக்கு இறங்கிய ஜெயபால் அடித்து நொறுக்கி மூன்று பந்துகள் மீதமிருக்கவே வெற்றியை வசமாக்கினார் என்றும் இது உண்மையிலேயுமே ஒரு கேப்டன் இன்னிங்ஸாக்கும் என்றும் ஆட்டநாயகன் விருது வாங்கும் சமயம் ஜெயபாலைக் குறித்துச் சிறு புகழ்உரையை மைக்கிலேயே நிகழ்த்தினார்கள். கோப்பை களும் கையுமாக ஜெயபால் யாரையோ பற்றி யாரோ புகழ்கிறார்கள் நமக்கென்ன என்பது போல நின்றுகொண்டிருந்தார். இந்தாளிடம் இப்போது ஏற்புரையாற்றச் சொல்லி மைக்கை நீட்டினால் எப்படி இருக்கும் எனும் யோசனை உதிக்க லோகு வுக்குப் புன்னகை அரும்பியது. ஏதோ தோன்றி யவராகத் திரும்பி பின்வரிசையில் அமர்ந்திருக்கும் வாசுகியை நோக்க அரும்பிய புன்னகை அற்றும் போனது. போகத்தானே செய்யும்? சோமுவுக்கு ஜாடைகாட்டினார். திரும்பிப் பார்த்துவிட்டு நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் லோகுவின் காதில் கிசுகிசுப்பாகக் கூவினான். ‘அடங்கொய்யால... என்னண்ணாயிது இப்படிப் பார்க்குது? வுட்டா போயி தூக்கீட்டெ போயிரும் போலயிருக்குதே...’
ஆடல்பாடல் நிகழ்ச்சி ஆரம்பமாகியிருந்தது. பார்வையாளர்களுக்கான பந்தலையொட்டியே கிழ புறத்தில்தான் அன்னதானப் பந்தலும் அமைக்கப் பட்டிருந்தது. குறுக்கே தெனந்தடுக்குகளை வரிசை யாக நிற்கவைத்துக் கட்டிய தடுப்பும் இருந்தது. அதன் காரணமாக அன்னதானக் கூடத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதை இங்கே இருப்பவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அன்னதானமெல்லாம் முடிவுக்கு வந்து இளைஞர் அணியினரின் தண்ணிதானம் சத்தமில்லாமல் நடை பெற்றுக் கொண்டிருப்பதாகச் சோமுவுக்கும் லோகு வுக்கும் தோன்றியது. ஸ்டேஜையொட்டியே நேர் கீழ்புறத்தில் ஆட்டக் கலைஞர்களுக்கான மேக்கப் ரூமும் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பந்தலுக்கு வடகிழக்காவும் அன்னதானப் பந்தலுக்கு வடமேற்காகவும் மேக்கப் ரூமுக்கு நேர் தென்புற மாகவும் இருக்கின்ற பகுதியில் பேருக்கு சில நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அமர்வதும் எழுவதும் முக்கால்வாசி விளக்குகள் அணைக்கப் பட்ட அன்னதானப் பந்தலுக்குள் போவதும் வருவது மாக இளைஞர் அணியினரின் புழக்காட்டங்கள் இருந்தது. அத்தனை அமளி துமளிகளுக்கு நடுவி லும் ஜெயபாலின்மேல் ஒரு நிதானம் நிலவியது. உழவு நடக்கும் காட்டில் வயிற்றிலே தீயை வைத்துக் கொண்டதைப்போலத் தாவித் தாவிப் படைக்கால் மண்புழுக்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் புழுதிக் குருவிகளுக்கு நடுவே மிகுந்த அமைதியோடு இரை யெடுத்தப் படியிருக்கும் கொக்கின் நிதானம்.
இவர்கள் இருவரும் மேடையில் நிகழ்ந்து கொண்டிருந்த ஆடல்பாடலில் ஜெயபால் மீது ஒரு கண்ணையும் வாசுகியின் மீது மறுகண்ணையும் வைத்த படி அமர்ந்திருந்தனர். வாசுகி தனது பௌதீகமான மற்றும் அபௌதீகமான அனைத்துக் கண்களையும் ஜெயபாலின் மீதே வைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒரு தாக்கம் இல்லாது போய்விடுமா என்ன? ஏதோ தோன்றியதுபோல் அவரது கிடையிலிருந்தபடியே ஜெயபாலுவும் அவ்வப்போது இங்கே திரும்பிப் பார்ப்பதும் பின் ஒன்றும் விளங்காதவராக அங்கே திரும்பி ஆடலைக் காண்பதுமாக இருந்தார். ‘கூப்பிட லாமாங்ண்ணா..
உங்களுக்கொண்ணும் பிரச்சனையில்லையே?’ என்றான் சோமு.
“தாராளாமா கூப்டு. எனக்கென்ன பிரச்சனை?”
“இல்லே... உங்களுக்கு இதுமேல ஒரு நோட்டம் இருக்கலாம்னு ரொம்ப நாளாவே ஒரு டவுட்எனக்கு. அதுதான் எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கிலாமேன்னு கேட்டேன். இப்ப மட்டும் அந்தாளு இங்க வந்து ஒரு விசுக்கா இதுமுட கண்ணைப் பார்த்துட்டான்னு வெய்யுங்க... சீமெண்ணைல நனைச்ச பழைய துணிமேல தீக்குச்சிய ஒரசிப்போடற மாதிரிதான். கபக்குன்னு பத்திக்கும்.”
“நம்முளுக்கு நோட்டமிருந்து என்ன பிரயோசனம்? நம்மமேல அதுக்கு நோட்டமிருக்கோணமே.. நடை முறைக்கு வாய்ப்பில்லாத நோட்டத்தை வெச்சிக்கிட்டு என்ன செய்ய? அதுமுட தகுதிக்கு நானெல்லா அது மண்ட எடத்தைக்கூடப் பார்க்க முடியாது. கூப்டுட்ரு... பத்தராப்ல இருந்தா பத்திக் கிட்டுப் போகட்டும்”
சைகை காட்டினால் தெரிந்து கொள்ளும் தூரம்தான். ஜெயபால் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ‘இங்க வாங்க தல... வந்துட்டுப் போங்க...’ எனும் விதமாகச் சோமு கைச்சாடை காட்டினான். தெரிந்து கொள்ளாமல் போனதைப்பற்றி என்ன சொல்வது. விதி என்றுதான் சொல்லவேண்டும். அதிர்ஷ்ட தேவதை மூஞ்சியைத் திருப்பிக்கொண்டாள் என்று தான் சொல்லவேண்டும். ‘அண்ணா போதும்னு தோணுதுங்ண்ணா.. தண்ணியுங்கூட மூணுதடவை தான் தாட்சண்யம் காட்டுமாமா. நாலஞ்சுதடவை சாடை காட்டியும் இந்தாளுக்கு ஒறைக்கலை. மண்ணு மாதிரி பார்த்துட்டு அவம்பாட்டுக்கு மூஞ்சியைத் திருப்பிக்கிறான். எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கறாப்ல தோணுது.’ என்றான் சோமு. மணி நள்ளிரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியூர் ஆட்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்களும் புறப்பட்டனர்.
சில நாட்கள் சென்றிருக்கும். காலையுணவை உண்டு விட்டு லோகு கம்பனிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இதைச் சொல்வதற்கென்றேசோமு வந்திருப்பான்போல. வந்ததும் வராததுமாக விசயத்தை ஆரம்பித்தான். “உங்களுக்குத் தெரியு மாங்ண்ணா... ஜெயபாலு எஸ்ஸாயிட்டாரு...”
“என்னடா சொல்றே..? வாசுகிய கூட்டீட்டா..?”
“அதையக் கூட்டீட்டு ஓடீருந்தாத்தான் பிரச்சனையே இல்லையே. அந்த டேன்ஸ்குரூப்பைச் சேர்ந்த ஒரு புள்ளையவாமா. புள்ளையுங்கூடக் கெடையாது. பொம்பளை. அவ ஏற்கனவே ரெண்டுபேருத்தைக் கட்டி இப்போ ரெண்டு பேருககூடயும் இல்லாம தனியா இருக்கறாளாமா.. எட்டு வயசுல ஒரு பொண்ணும் இருக்குதாமா அவுளுக்கு... ரெண்டும் எஸ்ஸாயிருச்சு”
“அடக் கருமமே... இவுனுக்கேண்டா புத்தி இப்படிப் போச்சு?”
“ஊருபூராமே இப்படித்தாண்ணா பேசிக்கிறாங்க. இருக்கற எடம் தெரியாம இருக்கற பையன். இப்படிப் பண்ணிப்போட்டானே... நம்பவே முடியலையேனு”
“அவுங்க ஊட்டுக்குப் போயிருந்தியா...?”
“போகாம இருப்பனா..? அங்க ஒருத்தரையும் கண்ணுலயே பார்க்கச் சகிக்கலை. எழவு வுழுந்த வூடுமாதிரி இருக்குது”
“மொதல்லயேகீது பழக்கம் இருந்துருக்குமோ.? மொதச்சந்திப்புலயே இந்தளவுக்குப் போயிட்டாங் கங்கிறதை நம்பவே முடியலை. அதுலயும் ஒரு மாதிரி கெத்தான ஆளு இப்படிப் பண்ணீட்டாருங்கிறதை நம்பவே முடியலை”
“மொதல்லயெல்லாம் எந்தப் பழக்கமும் இல்லியாமா... அன்னிக்கு நைட்டு பங்ஷனப்போ பார்த்துக்கிட்டதுதான். எப்படியோ செட்டாகி அது இந்தளவுக்குப் போயிருச்சு.”
“கரும்மடா எல்லாம். ரெண்டுபேரும் எங்க இருக்கறாங்கனு ஏதாச்சும் தெரியுமா? ஜெயபாலு ஊட்லயும் மத்த சொந்தக்காரங்களுமெல்லாம் என்ன முடிவு எடுத்திருக்கிறாங்க?”
“அவுங்க அப்பாவும் அம்மாவும் ஆகவே ஆகாதுன்னு தலை முழுகீட்டாங்களாமா... நெருங்குன பங்காளிக நாலஞ்சுபேரு அந்தப் பொம்பளை யோட அட்ரஸை கலைக்குழு மேனேஜர்கிட்ட வாங் கீட்டுப்போயி பார்த்துருக்கிறாங்க. திண்டுக்கல்லுக்கு அந்தப் பக்கம் எங்கியோ மலங்காட்டுக்குள்ள இருக்குதாமா அந்த ஊரு. அவுளுக்குப் பணத்தைக்கீது கொடுத்து ஒதுக்கியுட்டுட்டு இவனைக் கூட்டீட்டு வந்துரலாம்னு போயிப் பேசிப் பார்த்துருப்பாங் களாட்டயிருக்குது. வந்தா கூட்டீட்டுப் போயிக்கங்கனு சொல்லீட்டு குடிசைக்குள்ள போயிட்டாளாமா அவ. நடந்தது நடந்துபோச்சு என்னை இப்படியே உட்ருங்கன்னு கையெடுத்துக் கும்புடறானாமாம் இவன். மறுபடியும் பேசறதுல பிரயோசனமில்லைனு எல்லோரும் வந்துட்டாங்களாம்”
இதெல்லாம் நடந்து இருபது வருடங்களாகி விட்டது. மீளவே முடியாத துக்கம் என்று எதுவுமில்லை. எழவு வீடு மாதிரி அன்றைக்குக் காட்சியளித்த ஜெயபாலின் வீட்டில் அதற்குப் பிறகு இரண்டு கல்யாணங்கள் நடந்துவிட்டது. எல்லோருமே நன்றாகத்தான் இருக்கிறார்கள். இன்னமும் அவர்மீது அவர்களுக்குக் கோபமோ வருத்தமோ இருப்பதற்கு வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது. இருந்தும் இத்தனை காலத்துக்குப் பிறகும் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் என்னவாக இருந்துவிட முடியும்?
பெரிய மலைகளையே விழுங்கிப் படுத்திருக்கும் நடுக்கடல் அமைதியின்மேல் சிறிய கல்லொன்று விழுந்தாலும்கூட அதற்குரிய ஒரு சலனம் அந்த நேரத்திற்கு உருவாகவே செய்கிறது. பிறகு கடல் மறுபடியும் அமைதியாகி விடுகிறது. அரூபமான மனிதமனமும் ஒருவகையான நடுக்கடல் அமைதி தான். சின்னஞ்சிறியதையும் ஏற்றுக்கொள்ளாமல் சலனமுறும். பென்னம்பெரியதையும் விழுங்கிவிட்டு அமைதி கொள்ளும். லோகு நினைத்துக்கொண்டார். ஜெயபாலின் பெற்றோர் அவர் இல்லாமல் வாழ்ந்து பழகிவிட்டார்கள். அண்ணனும் தங்கச்சியும் ஜெய பாலுக்குப் போகவேண்டிய சொத்தையும் தாங்களே அனுபவித்துப் பழகிவிட்டார்கள்.
வாசுகியை அவள் பெற்றோர் மிக வசதியான இடத்திற்குக் கட்டிக் கொடுத்தார்கள். தற்போது அது மிகமிக வசதியான இடமாக வளர்ந்துவிட்டது. பல தொழில்களைச் செய்யும் வாசுகியின் கணவர் பனியன் கம்பனியும் வைத்திருக்கிறார். டைரக்ட் எக்ஸ்போர்ட். லோகுவின் இரண்டு பனியன் கம்பனிகளையும் சேர்த்து நிறுத்தினால் அவர்கள் கம்பனியின் கணுக்கால் உயரத்திற்கு வரலாம். மூலைக்கு மூலை கணவர் வாங்கிப் போட்டிருக்கும் சொத்துக்களைப் பரிபாலனம் பண்ணுவதற்காக வாசுகியும் மூலைக்கு மூலை தனது கறுப்பு இன்னோவா காரில் போன படியும் வந்தபடியும் இருக்கிறாள். கடந்த சில மாதங்களில் எங்கேனும் தடம் வழியில் பழைய பாடாவதி டிவிஎஸ் பிப்டியை கறுப்பு இன்னோவா எதிர்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. அப்படி எதிர்கொண்டிருந்தால் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட கறுப்பு இன்னோவாவுக்குள் என்ன நடந் திருக்கும் என்றும் தெரியவில்லை. ஜெயபால் ஓடிப்போனசெய்தியை சோமு வந்து சொன்னதும் சட்டென்று அந்தரங்கத்தில் ஒரு ரகசிய இன்பம் ஊற்றெடுத்ததை லோகு இப்போது நினைத்துக் கொண்டார். சிரிப்பாய் வந்தது. கூடவே வரும் இன்பமென்றும் எதுவுமில்லை.
கோல்டு கிங்ஸ் சிகரெட் ஒன்றைப் பெட்டிக் கடையில் வாங்கிப் பற்றவைத்துக் கொண்ட லோகு சலூன் கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த மரப் பெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டார். நால்ரோட்டின் காட்சிகளை வேடிக்கை பார்த்தவாறு புகையை ஊதிக்கொண்டிருந்தார். பேக்கரிக்கு முன்னால் கடைரோட்டில் நின்ற இவருடைய சைக்கிளுக்குச் சற்றே மேபுறமாக ஜெயபாலுவின் மொபட்டும் நின்றது. பேக்கரிக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஜெயபால் உளுந்துவடைப் பார்சலைக் கொண்டுபோய் வண்டி யின் டேங்க் கவருக்குள் வைத்துவிட்டு பெட்டிக் கடைக்கு வந்தார். தலைமுடி மீசையெல்லாம் பாதிக்குப் பாதி நரைத்துவிட்டது. ஆனாலும், அந்த உடல்வாகும் முகமும். அவை இன்னும் அப்படியே தான் இருக்கிறன. பார்த்தும் பார்க்காதவராக லோகு சாலையைக் கவனித்தபடி புகையை ஊதிக்கொண் டிருந்தார் ஜெயபாலும் பார்த்தும் பார்க்காத மாதிரித் தான் போய்க்கொண்டிருக்கிறார். ஆனால், அதில் தன்னுடையதைப் போன்ற பாவனை இல்லை. திட்டமிடல் இல்லை. மிகவும் இயல்பாக இருக் கிறது. யாரென்றே தெரியாத ஒருவரைக் கடந்து போகும் இயல்பு. ஒருவேளை நம்மை உண்மையாகவே அவர் மறந்துவிட்டார்தானோ என்னவோ. இப்படியெல்லாம் யோசனைகளை ஓடவிட்டுக் கொண்டிருந்த லோகு சட்டென்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு காதைத் தீட்டிக் கொண்டார். பீடியை பற்ற வைத்தபடியே ஜெயபால் பெட்டிக்கடைக்காரரிடம் வினவிக்கொண்டிருந்தார். ‘நேத்து ரிஷாப் பண்டு பின்னியெடுத்திட்டானாட்ட இருக்குது...?’
குகையில் முடவர்களைப் போலில்லாமல், முழுமையாகவும் சாகசத்துடனும் எப்போது வாழப்போகிறோம்?
-விர்ஜீனியா உல்ஃப்
பெரிய ஆளுமைகள் பிரிட்டனில் அருகிவந்த 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தீவிரமாகச் சிந்தித்தும் எழுதியும், இலக்கிய உலகில் ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளவர் விர்ஜீனியா
உல்ஃப் (1882-1941). நாவல், விமர்சனம், பெண் ணியம், வரலாறு என்னும் தளங்களில் புதிய போக்குகளை அறிமுகப்படுத்தியவராக, தனது ஆளுமைப்பொலிவோடு உருகொண்டதற்கிணங்க, தனது எழுத்தையும் உருகொள்ளவைத்தவர். வாழ்ந்தது போல் எழுதியவர். சிந்தித்தது போல் வாழ்ந்தவர். இறக்கவும் செய்தவர்.
அவரது கவனக்குவிப்பெல்லாம், “தற்போதைய கணம், புரிதலுடன் முழுதாக ஆழமாகப் பிரவாகிக்கும் வரை, கடந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலத்தால் இன்னும் முழுமையாக நிரம்புமாறு” செய்வதாக இருந்தது.
இதுதான் அவருக்கு இருந்த சவால் - எழுத்திலும் வாழ்விலும். இரண்டாம் உலகப்போர் கட்டவிழ்த்து விட்டிருந்த பீதியுணர்வு, இலக்கிய உலகில் நிலவிய காழ்ப்புணர்வுகள் - பாரபட்சங்கள், தன் உடல் சார்ந்த நோய் குறிகள் - மனநிலை பாதிக்கப்பட்ட துயரங்கள் ஆகியவற்றின் பின்புலத்தேதான் விர்ஜீனியா இயங்கினார். எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த தீவிர பற்றுதலும் அர்ப்பணிப்புமே அவரது கணிசமான பங்களிப்புக்கு அடிப்படை. நாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், பெண்ணிய விவாதங்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் என நிறையவே விட்டுச் சென்றுள்ளார்.
பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி என்பது போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளுடன் குரல்களைக் கேட்பது போன்ற உளம் சார்ந்த பிரச்சனையும் இருந்து வந்தது. சீரிய இலக்கியவாதியான அவருக்கு, அவ்வப்போது வரும் இலக்கியவாதிகளின் கடுமையான விமர்சனங்களும் பாராமுகமும் பாதிப்பைத் தந்தன. சஞ்சலப்பட்டார். மனச்சிதைவு ஏற்பட்டது. தற்கொலை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றின. இதன் அதல பாதாள முடிவுதான் 1941இல் அவர் தன் கோட் பாக்கெட்டில் கற்களை நிரப்பி ஒயுஸ் நதியில் இறங்கி மூழ்கிப்போனது. அவரின் மனநிலைப் பிரதி அவதிப்பட மூலக்காரணம் அவரது குடும்பத்தில், குறிப்பாக அவரது தந்தையிடம் இருந்து வந்தது என்கிறார், விர்ஜீனியாவின் வாழ்க்கை வரலாற்றினை VIRGINIA WOLF: The Marriage Of Heavan and Hell / Peter Dally என்னும் தலைப்பில் எழுதியுள்ள உளவியல் மருத்துவர்.
விர்ஜீனியாவின் தந்தை வெஸ்லி ஸ்டீபன் பிரிட்டனில் இலக்கியவாதிகளது வாழ்க்கை வரலாறு சார்ந்த அகராதித் தொகுப்புகளை BIOGRAPHIA BRITANNICA என்னும் தலைப்பில் கொண்டுவரும் பணியில் ஆர்வம் கொண்டிருந்தவர். 1905இல் புற்றுநோய் கண்டு மடிந்தார். இரண்டு வருடங்களுக்குப்பின், அவரது மாற்றாந்தாய் சகோதரி ஸ்டெல்லா PERITONITIS என்னும் நோயால் இறந்துபோனார். விர்ஜீனியா 13 வயது யுவதியாக இருந்தபோது, அவரது மாற்றாந்தாய் சகோதரர்கள் ஜார்ஜ் மற்றும் ஜெரால்ட் டக்வொர்த்தால் பாலியல் இம்சைக்கு உள்ளாகியுள்ளார்.
பருவம் எய்தியபோது தாய் இறந்தது, தொடர்ந்து ஸ்டெல்லா இறப்பு, புற்றுநோய் காரணமாகத் தந்தை இறப்பது போன்ற காரணங்கள் விர்ஜீனியாவை கடுமையாகப் பாதித்துள்ளன. அத்துடன், தந்தை ஸ்டீபன், CYCLOTHYMIA என்னும் ஒருவித மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படி அடுக்கடுக்காக உடல் சார்ந்தும், குடும்பம் சார்ந்தும், மரபணு சார்ந்தும், காலகட்டம் சார்ந்தும் உருகொண்ட மனச்சிதைவு / பைத்திய நிலை அவரது சமநிலை பிறழ்வில் ஓர் ஒழுங்கினை ஏற்படுத்த முற்பட்டபோது தீவிரமாய் எழுதினார். அது இல்லாத தருணத்தில் ஆற்றில் கரைந்துபோனார். அவரது சிக்கல் இரு துருவநிலை, ஆளுமைச் சீர்குலைவு எனப்படுகிறது.
விர்ஜீனியாவின் தாய் ஜூலியா ஜாக்சன், மேரி அண்டோய்னிட்டா என்னும் அரசிக்குப் பணி பெண்ணாய் இருந்தவரது பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், இந்தியாவில் பிறந்தவர்.
இதன் காரணமாக விர்ஜீனியாவின் இல்லம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் மையமாக இருந்தது. தந்தையால் உருவாக்கப்பட்ட பெரும் நூலகம் அரிய கருவூலமாகக் கருதப்பட்டது. விர்ஜீனியா தனது ஒன்பது வயதிலேயே The Hyde Park Gate News என்னும் குடும்பச் செய்திதாளை நடத்தியிருந்தார். பொருளியலாளர் கீன்ஸ், ஓவியர் கிராண்ட், தத்துவவாதிகள் ரஸ்ஸல், விட்ஜென்ஸ்டீன் போன்றோர் விர்ஜீனியாவின் அண்ணன் அட்ரியன் நடத்தி வந்த கூட்டங்களில் பங்கேற்றனர். சீக்கிரமே இக்குழு BLOOMSBURY என்றழைக்கப்பட்டது. இக்குழுவினர் கூடிய விர்ஜீனியாவின் இல்லம் ப்ளம்ஸ்பரியில் இருந்ததால்.
இப்படியான பிரச்சினைகள் மற்றும் சாதக நிலையிலிருந்து பறக்கத் தொடங்கியவர்தான் விர்ஜீனியா.
சார்லஸ் டிக்கின்ஸின் எழுத்தில் பிரச்சினைகள் அலசப்படும் அளவுக்கு புனைவம்சம் கூடி வரவில்லை, தன் நோக்குநிலையை / கருத்தியலை வற்புறுத்தியவர் டி.எச். லாரன்ஸ், கருத்துகளில் மட்டும் செழுமையானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி என தனது நாட்டின் இலக்கியவாதிகளை மதிப்பிடும் விர்ஜீனியா, பாத்திரங்களின் அகஉலகை சித்தரிப்பதில் கவனக்குவிப்புச் செய்தார். அதற்கேற்ற உணர்வுக்கூர்மையும் துல்லியமும் கனபரிமாணமும் சேர்ந்த மொழியைக் கையாண்டார். கான்ஸ்டன்ஸ் கார்னட்டின் மொழியாக்கத்தில் வந்து கொண்டிருந்த ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து மனந்திறந்து பாராட்டினார், வரவேற்றார். மேற்கத்தைய எழுத்து, உலகியல் வாழ்வுடன் கட்டுண்டுவிட, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் ஆகியோரின் எழுத்து ஆன்மாவின் சஞ்சலங்களை / பாடுகளை / வரை களை / பரிசோதனைகளைப் பேசுகிறது என்றார். ரஷ்ய எழுத்து ஆன்மா நோயுற்றிருப்பதை, ஆன்மா குணப்படுத்தப்படாமலிருப்பதை அல்லது குணப்படுத்தப்படுவதைப் பதிவு செய்கின்றது. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் சீறிக் கொதித்தெழுந்து நம்மை உள்ளீர்த்து விடுவதான நீர்ச்சுழல்கள், மணற் புயல்கள், பெருக்கெடுத்தோடும் வெள்ளங்கள் என்று குறிப்பிட்டார். ஆங்கிலேய நாவலாசிரியனோ கருணை கொள்வதற்குப் பதிலாக அங்கதம் செய்வதிலும், தனிநபர்களைப் புரிந்துகொள்வதிற்குப் பதிலாகச் சமூகத்தைக் கூராய்வு செய்வதிலும் ஈடுபட்டுவிடுகிறான் என குறைப்பட்டார்.
தனது எழுத்து தனிநபரின் அக உலகத்தை விவரிப்பதாக அமைந்து, அவரது காலகட்ட சமூக வரலாறாக விரிவடையக் கூடியதாக இருக்குமாறு எழுதினார்.
“சாதாரண நாளில் சாதாரண மனதில் ஒரு கணத்தைப் பரிசீலனை செய்யவும், அற்பமானது, அதியதிசயமானது, தோன்றி மறைவது என பல்வேறான மனப்பதிவுகள் உண்டாகின்றன அல்லது உருக்கின் கூர்மையுடன் பொறிக்கப்படுகின்றன. நாலாபுறங்களிலிருந்தும் எண்ணற்ற அணுக்களின் இடையறாத பொழிவு; அவை வீழ்கையில், திங்கள் / செவ்வாயின் வாழ்வாக உருகொள்கின்றன; முக்கியத் தருணம் இங்கிருந்தல்லாமல், அங்கிருந்து வருகிறது; எனவே, ஓர் எழுத்தாளன் அடிமையாக இல்லாமல் சுதந்திரமனிதனாக விரும்பினால், தான் எழுதியாக வேண்டியதை அல்லாமல் தான் தெரிவு செய்ததை எழுத விரும்பினால், சம்பிரதாயத்தின் மீதல்லாமல் தனது உணர்வோட்டத்தின் மீது தன் எழுத்தை அமைத்துக்கொள்ள முடிந்தால், ஒத்துக்கொள்ளப்பட்ட பாணியில் கதைப்பின்னலோ இன்பியலோ துன்பியலோ நேசமோ விநாசமோ இருக்காது; வாழ்வென்பது ஒழுங்கில் நிறுத்தப்பட்டுள்ள விளக்குகளின் வரிசை அல்ல; பிரக்ஞையின் தொடக் கத்திலிருந்து முடிவு வரையில் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டம், அரைபாதி தெரியும் உறை. இவ்வேறுபடுகின்ற, அறியப்படாத, பாதிப்புறாத ஆன்மாவைத் தொடர்புறுத்தச் செய்வது ஒரு நாவலாசிரியரின் பணியல்லவா?”
300 ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு நபரால், ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கின்ற சாத்தியத்தை ORLANDO நாவலில் முன்வைக்கிறார். ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்றின் வடிவில் வந்துள்ளது இந்நாவல். 12 மணி நேரங்களில் கிலாரிஸ்ஸா டல்லாவே என்னும் பாத்திரத்தின் ஆளுமை கொள்ளும் வீச்சை விவரிப்பது Mrs. Dalloway நாவல்.
அவரது தலைசிறந்த நாவல் என்று கொண்டாடப்படுவது The Waves (1960). பெர்னார்ட், லூயி, நெவில்லே, சூஸன், ஜின்னே, ரோடா என்னும் ஆறு பாத்திரங்களின் அக உலகத் தனிமொழிகளாக இருக்கும்.
ஒரு நாளில் நிகழ்வதாக ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்னர் இடம்பெறும் பகுதிதான் ஒருவரால்/ஆசிரியரால் எடுத்துரைக்கப்படுகிறது. மற்றபடி எடுத்துரைப்பு இன்றியே, பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களாகவே அமைந்திருக்கிறது. அத்தியாய முகப்பில் இடம் பெறுவது, ஆடல் சார்ந்த இயற்கை விவரிப்பின் நாடகமாகிவிடும். இறுதி அத்தியாயத்தில் பெர்னார்ட் என்னும் பாத்திரம், மற்ற பாத்திரங்களையும் தனக்குள் உள்ளடக்கிப் பேசுவதாக, ஆன்மிக இழைகளின் நேர்த்தியான நெசவாக, கவிதா பூர்வ சித்திரமாக, உரைநடையிலான கவிதையாக, வாழ்க்கை சார்ந்த ஒரு பரிசோதனையா அல்லது இலக்கியம் சார்ந்த பரிசோதனையா என்ற ஊடாட்டத்தைக்கொண்டிருக்கும்.
“என் நண்பர்களை ஒவ்வொருவராகப் பார்த்து, நடு நடுங்கும் விரல்களால் அவர்தம் பூட்டிய பெட்டகங்களைத் திறக்க முயன்றேன். என் துயரத்துடன் இல்லை, எனது துயரமில்லை மாறாக, எமது வாழ்வின் புரிந்துகொள்ள இயலாமையுடன் ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பார்க்கப் போனேன். அவர்களைப் பரிசீலிப்பதற்காகச் சிலர் பாதிரியார்களிடம் செல்கின்றனர்; சிலர் கவிதையிடம்; நான் என் சிநேகிதர்களிடம், எனது இருதயத்திடம் துண்டு - துணுக்குகள், தொடர்களிடையே நொறுங்காத ஒன்றைத்தேடி - என்னைப் பொறுத்தவரை, நில விடமோ மரத்திடமோ அழகில்லை; இன்னொருவருடனான ஸ்பரிசமே ஒருவருக்குப் போதுமானது - இருந்தும், அதைக் கூடப் புரிந்துகொள்ள இயலாத, அவ்வளவு பரிபூரணமற்ற, பலவீனமிக்க, தனிமையானவன் நான்.”
இன்னொரிடத்தில் ஒரு வாக்கியம்:
“ஒரு கணத்தில் ஒரு வரவேற்பறையில், மெது வாழ்க்கை, வாளின் ஊடேயான நாளின் பெருமித அணிவகுப்புடன் தன்னைச் சரிசெய்து கொள்கிறது.”
பெர்னார்டின் அக மனத் தெறிப்புகளில் வேறோரு பதிவு :
“நான் திரும்பிப் பார்த்துக்கொள்வது ஒரு வாழ்வில்லை; நான் ஒரு நபரில்லை; நான் பலராக இருக்கிறேன்; நான் யாரென்று - ஜின்னியா, சூஸனா, நெவில்வேயா, ரோடாவா அல்லது லூயியா - முழுமையாகத் தெரியவில்லை; அல்லது அவர்களிடமிருந்து என்வாழ்வைப் பிரித்தறியத் தெரியவில்லை.”
பாலியல் நெருக்கடிக்குள்ளாகியிருந்த விர்ஜீனியா, மணமான பின், விட்டா சாக்வ்ல்லே-வெஸ்ட் என்னும் பிரெஞ்சு தோழியிடம் ஈர்ப்பு கொண்டிருந்தார். அவரை உத்வேக தேவதையாகக் கருதினார். அது தன்பால் உறவு வரை விரிந்தது. தன் கணவருக்கும் அது தெரியும் படி தயக்கமின்றி நடந்துகொண்டார். ‘ஒர்லாண்டோ’ நாவலை இத்தோழிக்குச் சமர்ப்பணம் செய்தார்.
லியோனார்ட் உல்ஃப் என்னும் யூதரை தன் 30வது வயதில் மணந்துகொண்டார். விர்ஜீனியாவின் மனச்சிதைவுப் பிரச்சனை, உடல்சார்ந்த நோய்க்கூறுகள், ஒருபால் உறவு என்பவற்றையெல்லாம் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுப் புரிந்துகொண்டார் லியோனார்ட். மனைவியுடன் சேர்ந்து ஹோகார்த் அச்சகத்தை (வெளியீட்டு நிறுவனம்) நிறுவி, டி.ஸ். இலியட், காதரின் மேன்ஸ்ஃபீல்ட் போன்றோரின் நூல்களுடன் விர்ஜீனியாவின் எழுத்துக்களையும் வெளியிட்டு வந்தார். இரண்டாம் உலகப்போரின் அழுத்தமும், தன் கணவர் யூதரென்பதால் நாஜிக்களுக்கு இலக்காக் கூடும் என்ற பயமும் சேர்ந்து விர்ஜீனியாவை வதைத்து, அவரைத் தற்கொலைக்கு உந்திய காரணிகளில் ஒன்றாய் இருந்தது. தன் கணவருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றுகூட ஒருமுறை திட்டமிட்டுள்ளார்.
ஆற்றில் கரைந்து போகுமுன் இரு கடிதங்களை விட்டுச் சென்றுள்ளார் விர்ஜினியா. ஒன்று கணவருக்கு, இன்னொன்று சகோதரி வாரனஸ்ஸா பெல்லுக்கு.
கணவருக்கு எழுதிய கடிதத்தில் :
“மீண்டும் பைத்தியமாகப் போவதுபோல் உணர்கிறேன். அப்பயங்கரமான காலகட்டங்களில் மீண்டும் நம்மால் வாழமுடியும் என்று நான் எண்ணவில்லை. இப்போது என்னால் மீளமுடியாது. குரல்களைக் கேட்கத் தொடங்குகிறேன், என்னால் கவன குவிப்புச்செய்ய இயலவில்லை. ஆகவே என்னால் செய்யக் கூடிய சிறந்ததைச் செய்கிறேன். சாத்தியமாகிவிடும் அதிகபட்ச சந்தோஷத்தை அளித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு விதத்திலும் யாரேனும் இருக்கக்கூடிய தன்மையில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இப்பயங்கர நோய் வரும்வரை, இருவர் இவ்வளவு சந்தோஷமாயிருக்க முடியும் என்றெண்ணியதில்லை. இனியும் என்னால் போராட இயலாது. உங்கள் வாழ்வை பாழாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றறிவேன், நான் இன்றி உங்களால் செயல்பட முடியும். செயல்படுவீர்கள் என்றறிவேன். இதைச் சரியாகக்கூட எழுத முடியவில்லை என்பதைப் பார்க்கிறீர்கள். என்னால் வாசிக்க முடியவில்லை. நான் சொல்ல வருவது, எனது சந்தோஷங்களுக்கெல்லாம் நான் உங்களுக்கே நன்றி பாராட்ட வேண்டும். முற்றிலும் பொறுமை காத்து, நம்பமுடியாத விதத்தில் நல்ல வராக இருந்துள்ளீர்கள். யாரேனும் என்னைக் காப் பாற்றியிருந்தால் அது நீங்களாகத்தான் இருக்கமுடியும். உங்களது நல்லியல்பின் உறுதிப்பாடு தவிர்த்து எல்லாவற்றையும் இழந்துள்ளேன். இனி மேல் உங்கள் வாழ்வைப் பாழ்படுத்துவதை என்னால் தொடர இயலாது. நானும் நீங்களும் சந்தோஷமாயிருந்ததுபோல வேறிருவர் சந்தோஷமாயிருக்க முடியும் என்றெண்ணவில்லை நான்.”
விர்ஜீனியாவின் தற்கொலை சாதாரணமாக நிகழ்வது போன்றதில்லை. பிரச்சினைகளை எதிர்கொள்ள இல்லாமல் செய்துகொள்வதில்லை. உலகியல் காரணங்களால் மேற்கொண்டதல்ல. இவ்வளவுக்கும் தாம்பத்தியத்தில் உறவுகூட நெருடலன்றி இசைவாக இருந்துள்ளதை, அவரின் இறுதிக் கடிதமே தெரிவிக்கும்.
The Waves - நாவலில் ஓரிடம். அது விர்ஜீனியாவின் இன்னொரு முகத்தைக் காட்டும்.
“தொலைவில் ஒரு மணி அடிக்கின்றது, அது சாவுக்கல்ல. வாழ்வுக்காக அடிக்கின்ற மணிகள் உண்டு. ஓரிலை வீழ்கிறது, ஆனந்தத்திலிருந்து. ஓ, நான் வாழ்வில் நேசம் கொண்டிருக்கிறேன்!...” இதனை எதிரொலிப்பதுபோல 1937ஆம் ஆண்டில் ஒரு நாட்குறிப்புப் பதிவு உள்ளது :
“...எனது மகிழ்ச்சி குருட்டுத்தனமானதில்லை. எனது 55 ஆண்டுகளில் இன்று காலை மூன்றிலிருந்து நான்கு மணி வரை, அதுதான் சாதனை என்றெண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வளவு அமைதியுடன் நிறையாமல் விழித்திருந்தேன் சுற்றிச் சுழலும் உலகில் இருந்து ஆழ்ந்தமைதியான நீலவெளிக்குள் அடி யெடுத்து வைத்ததுபோல, தீங்கு நெருங்காதபடி திறந்த விழிகளுடன் இருந்தேன்; நிகழக்கூடிய அனைத்துக்கும் எதிராக ஆயுதம் தரித்திருந்தேன். எனது ஆயுளெல்லாம் இதற்குமுன் இத்தகு உணர்வைப் பெற்றிருந்ததில்லை. ஆனால் கடந்த கோடைகாலத்திலிருந்து பலமுறை பெற்றுள்ளேன். எனது மோசமான மனச்சிதைவில் அதனை நான் அடைகையில் மேலங்கியைத் தூக்கியெறிந்து நட்சத்திரங்களைப் பார்ப்பது போல...”
நட்சத்திரங்களைக் கண்டு அகத்தை விசாலமாக்கிக் கொள்ளும் விர்ஜீனியாவால்தான், ‘ஒரு பெண்ணென்ற வகையில் எனக்கொரு தேசமில்லை, எனது தேசம் ஒட்டுமொத்த உலகமே’ என்று கூற முடியும்.
ஆதாரங்கள் :
1. Virgini Woolf / A Writer’s Diary / A Harvest Book - Harcourt INC, 1954
2. Thw Waves / Virginia Woolf / The Hogarth Press, 1960
3. Virginia Woolf on the creative benefits of keeping a diary / Haria popova / theguardian.com
4. The Common Reader / Virginia woolf
5. Virginia Woolf / biography.com
6. The Lone Grey Woolf / Curtis sittenfelol / Deccan heralol / 27 Nov 2005
7. Looking Through a Prism Of The Past / Halavika Karlekar / Biblio -Sep 1996
8. A sense of emptiness / Ravi vyas / The Hindu, Nov 3, 1996
9. Virginia woolf : The Marriage of Heaven and Hell / Peter Dally The feminist bible - Review of a Room of one’s own / Virginia Woolf / Ravi vyas / The Hindu - Aug 3, 1997
வாழ்வு நத்தையின் ஊர்தலைப் போல் அதிகுறை இயக்கத்தைக் கொண்டிருந்தது. எங்கும் சோர்வு சூழ்ந்த வெளி. ஒருவேளை அது என் மனதின் பிரதிபலிப்பாய் கூட இருக்கலாம். இம்முறையும் வங்கித் தேர்வின் முடிவு என்னை விரக்தியடையச் செய்திருந்தது. இதுநாள்வரை நான் எதிர்கொண்டிருந்த நேர்முகத் தேர்வுகளின் கேள்விகளுக்கான சாத்தியமான வேறு பதில்களை ஆராய்ந்துகொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் வழக்கம் போல் எண்ணங்களைக் கணிதச் சமன்பாடுகள் ஆக்கிரமித்துக்கொண்டன. அவை பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களில் என்னை ஒன்றவிடவில்லை. வண்டியோ வெகுநேரமாய்ப் புறப்படவிருப்பதைப் போல் முன்னேறுவதும் அதைத் தொடர்ந்து நடத்துநரின் விசில் ஒலிகளும் என என்னை எரிச்சலுறச் செய்திருந்தது. மாநகரின் அந்த நண்பகலை வாகனங்களின் புகையும் தூசியும் மேலும் உக்கிரமடையச் செய்திருந்தது. யாரோ என்னைத் தொட்டி நீருக்குள் அமிழ்த்துவதைப் போல் அந்த வெயிலையும் வெறுமையையும் உணரத் தொடங்கினேன். அது நீர் தொட்டியல்ல. நீராவியால் நிறைந்த தொட்டி. அப்பேருந்தே எனக்கு ராட்சச நீராவித் தொட்டியாய் தோன்றியது.
ஒருவழியாய்ப் புறப்பட்ட வண்டி எனக்கு இளைப்பாறலைத் தந்தது. சில நொடிகளில் யாரோ ஒருவர் ஓடிவந்து ஏறி என்னருகில் அமர்ந்தார். அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற உந்துதலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். சட்டென எழுந்த ஒரு துள்ளல் இசைக்கு அருகில் இருந்தவர் தொடையில் தாளமிட ஆரம்பித்தார். சில முறைத் தாளம் தப்பி என் தொடையிலும் விழுந்தது. அது வண்டிக் குலுக்கலில் இருக்குமெனக் கால்களை ஒடுக்கி அமர்ந்தேன். வண்டி மலைக்கோட்டை நிறுத்தத்தைத் தாண்டியிருக்கையில் அவரிடமிருந்து சிரிப்பொலி கேட்டது. முழுதாய் தலையைத் திருப்பாமல் விழிகளை அவர் மேல் ஓடவிட்டேன். நாற்பது வயதிருக்கும். சற்று நரைத்த தாடியும் வயதிற்கு மீறிக் குடியேறியிருந்த முதுமையின் சாயலோடும் இருந்தவர் என்னை நோக்கித் திரும்பாமலே நான் கவனிப்பதை உணர்ந்தவர்போல் முன்னிருக்கையின் கீழிருந்த ஒலிப்பெருக்கியைச் சுட்டிக் காட்டினார். “அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்” என மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடிய பாடலது.
“நல்ல பாட்டுங்க” என்றார். நான் “ஆமாம்” எனத் தலையசைத்தேன். “ஓடும் காவிரி இவதான் என் காதலி குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சப்பிடிக்கும்.” இம்முறை அவர் சற்று உரக்கச் சிரித்தார். நான் என்ன என்பதைப்போல் அவரைப் பார்க்க “இல்ல ரொம்ப நாளா என் காதுல கொஞ்சப் பிடிக்கும்னு விழுகல. என்னடா இப்படி விரசமாவா பாட்டெழுதுவாங்கன்னு நெனச்சேன். அப்பறம் என் நண்பர்தான் வௌக்கமா சொன்னாரு.”
நான் அவரிடம் பேச விருப்பமில்லாதவனைப் போல் கால்களை மேலும் ஒடுக்கி அமர்ந்தேன். சாலையோரத்திலிருந்த கடையின் பெயர் பலகையைச் சுட்டி அவர் மேலும் பேச்சைத் தொடர்ந்தார். “பேரு வச்சிருக்காங்க பாருங்க ஆதிகுடி காபி கிளப். ஆதிகுடி சாராயக் கடை. சொல்லிப்பாருங்க தம்பி எவ்வளவு நல்லா இருக்கு. காபி கிளப்புக்கு ஆத்திக் குடின்னு பேரு வைக்கனும். என்ன நான் சொல்றது” எனப் பதிலை எதிர்பார்த்து எனது முகத்திற்கு மிக அருகில் வந்தார். நான் வேறுவழியின்றி
“இல்லங்க ஆதிகுடிங்கறது ஊரு பேரு. லால்குடி பக்கத்துல இருக்கு” என்றேன்.
“ஓஹோ” என ஏமாற்றமடைந்தவரைப் போல் முகத்தை வைத்துக்கொண்டார்.
“தம்பிக்கு லால்குடி பக்கமோ?”
“இல்ல புதுக்கோட்டை.”
“காஞ்சப் பய ஊரு” என முகத்தைச் சுளித்தவாறு சற்று உரக்கச் சிரித்தார்.
எனக்கு அவரது முகத்தில் ஒரு குத்து விட வேண்டுமெனத் தோன்றியது. மேற்கொண்டு பேச்சை வளர்க்க விரும்பாமல் வெளியே வேடிக்கை பார்ப்பவனைப் போல் தலையை நன்றாகத் திருப்பிக் கொண்டேன்.
பேருந்து மரக்கடை வீதி வழியாகச் சென்று காந்தி மார்க்கெட் நிறுத்தத்தில் நின்றது. பயணிகளை ஏற்றுவதற்காய் சற்று நேரம் அங்கே காத்திருந்த பேருந்து உடனே புறப்படவிருப்பதைப் போல் பாவனைக் காட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சில நொடிகளில் உள்ளங்கை நீளமுள்ள மல்லிகைப் பூச்சரங்களைப் பத்து ரூபாய் எனப் பேருந்தில் ஏறி இருவர் விரைவாய் விற்றுக்கொண்டிருந்தனர். நான் ஓடாத மணிக்கூண்டில் உறைந்திருந்த நேரமும் சரியாய் என் அலைபேசியில் அப்போது சுட்டிய நேரமும் பொருந்துவதைப் பார்த்து மெல்லியதாய்ப் புன்னகைத்தேன்.
“எவனுக்காகவோ போயி எவனோ சாவுறான் பாத்தீகளா?” என அவர் மணிக்கூண்டைப் பார்த்தவாறு சொன்னார். முதல் உலகப் போரில் பிரிட்டிசாருக்காய் மரித்த திருச்சிராப்பள்ளி ராணுவ வீரர்களின் நினைவிடமது.
நான் அவரோடு பேச விரும்பாததால் அவர் சொன்னது செவிகளில் விழாததுபோல் இருந்துகொண்டேன்.
பேருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சிறுநீர் கழிப்பிடத்திற்குச் செல்கையில் அருகிலிருந்த தடுப்புச் சுவரின் மீது ஒரு பகார்டி பாட்டிலைப் பார்த்தேன். எனக்கு மது அருந்த ஆசைத் தோன்றியது. சமீபநாட்களாய் சுயஇன்பத்தைப் போல் அந்த நினைப்பும் மனதில் எழத் தொடங்கினால் என்னால் மனதை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. சுவர் முழுதும் ஹெச்.ஐ.வி மருத்துவம் மற்றும் ஆண்மை பெருக்கும் சுவரொட்டிகளால் நிறைந்திருந்தன. மிதமிஞ்சிய மூத்திர நெடியால் எனக்கு மூச்சடக்கி கண்மூடி சிறுநீர் கழிக்கச் சற்றுக் காலதாமதம் ஆனது. நான் தலை கவிழ்ந்து சிறுநீர் கழித்துவிட்டு நிமிர்கையில் மதுக்குடுவை கால் பங்கு நிரம்பியிருந்தது. நான் அதிர்ச்சியுற்றுத் திரும்ப நரைதாடிக்காரர்
“எவன் போதைக்காவது ஆகும்ல தம்பி” என்றவாறு சிரித்தார். சிரித்ததில் அவருக்குப் புரையேறி கண்களில் நீர் வழிந்தது. என்னால் அவரைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த ஆள் என்னைப் பின்தொடர்வது போலும் தோன்றியது. வேகமாய் வெளியேற மூத்திர நெடி பேருந்து நிலையம் முழுதும் நிறைந்திருப்பதாய் தோன்றியது. பேருந்தில் படிக்க வேண்டும் என்பதற்காய் வேளாண்மை குறித்த மாத இதழ் ஒன்றை வாங்கி வந்தேன். புறவழிச்சாலையில் செல்லும் வண்டிக்காய்க் காத்திருந்த வேளையில் அம்மாத இதழைப் புரட்டினேன். உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களோடு புன்னகை ததும்பும் முகங்களாய் தங்கள் வெற்றிக் கதைகளைச் சொல்லியிருந்தனர். நான் என்னுடைய எதிர்காலம் குறித்த கற்பனையில் மூழ்கத் தொடங்கினேன். அடுத்த வங்கித் தேர்வில் புரொபெசனரி ஆபிசராய் தேர்வானேன். நிலத்தடி நீர் ஆயிரம் அடிகளுக்குக் கீழ் சென்ற என் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தேன். என் குடும்பத்தின் ஒன்றரை ஏக்கர் நூறு ஏக்கர்களாய் விரிந்து பெருகியது. வங்கி அதிகாரியாய் இருந்துகொண்டே நஞ்சற்ற காய்கறிகளை உற்பத்தி செய்கிறேன். அதை விற்பனை செய்ய எல்லா ஊர்களிலும் இயற்கை அங்காடிகளைத் திறக்கிறேன். பின் எனது நிலத்தின் விளைச்சலை மட்டுமே சமைக்கும் ஒரு உயர்தர உணவகத்தை ஆரம்பிக்கிறேன். பின் எனக்கு வங்கி அலுவலர் வேலை தேவையில்லாமல் போகிறது. செல்வம் கணக்கற்றுப் பெருகுகிறது. நான் கட்ட நினைக்கும் பங்களாக்கள் குறித்தும் பயணம் செய்ய நினைக்கும் கார்கள் குறித்தும் கற்பனை வளர்கையில் என்னவென்று சொல்ல இயலா ஒரு குற்ற உணர்வு என்னுள் உருவாகியது. அப்போது மனக்கண்ணில் வெள்ளைக் குல்லாவோடு ஜே.சி.குமரப்பா எட்டிப்பார்க்கிறார். இ.எஃப்.ஷூமாஸர் ‘சிறியதே அழகு’ என்கிறார். காந்தி ஈறு தெரிய புன்னகைக்கிறார். எனக்குக் குற்ற உணர்விலிருந்து மீள வழி கிடைத்துவிட்டது. நார்த்தாமலை திருவிழாவிற்கும் திருவப்பூர் திருவிழாவிற்கும் காலை முதல் இரவு வரை எனது உணவகத்தில் அனைவருக்கும் அன்னதானம் நடைபெறுகிறது. என்னை மக்கள் ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு நிற்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நான் முடியாதென மறுக்கின்றேன். ஆனால் மக்கள் சக்திக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும். அப்போது எனது எண்ண ஓட்டங்களைத் தம்பி தம்பியென ஒரு குரல் இடைமறித்தது. நரைதாடிக்காரர் அழைத்தார். எனது எரிச்சலை காட்டிக்கொள்ளவில்லை.
“தம்பிக்கு கூகுள் பேல அக்கவுண்ட் இருக்கா?”
“இல்லண்ணே”
“என்ன தம்பி என்னய பாத்தா களவாணிப் பய மாதிரித் தெரியுதா?”
அந்த நேரடிக் கேள்வியால் என்ன சொல்வதெனத் தெரியாமல் நான் திகைத்த வேளையில் “தம்பி என் சேக்காளி பணம் தரணும். என் அக்கவுண்டுக்குப் போடுறான். ஆனா என்னோட எ.டி.எம் கார்ட தொலைச்சுட்டேன். அதான். ஆயிரம்தான். அவன் ஒங்க நம்பர்ல போட்டதுக்கு அப்புறம் கையில இருந்து குடுத்தா போதும்” என்றார்.
என்னிடம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு அலைபேசி எண்ணை கொடுத்தேன். என்னிடமிருந்து சற்று விலகிச் சென்று அலைபேசியில் பேசியவர் “தம்பி தர்மராசுங்கறது தான் ஒங்க பேரா” எனக் கேட்க நான் ஆமெனத் தலையசைத்தேன். எனது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய்ச் செலுத்தப்பட்டது குறித்த குறுஞ்செய்தி வந்தது. எனது கூகுள்பே செயலியை சோதித்து விட்டு ஆயிரம் ரூபாயைத் தந்தேன். அவர் வேகமாய் பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறினார். எனக்கு ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டதைப் போல் உறுத்தலாய் இருந்தது.
பேருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைத் தாண்டியிருக்கையில் எனது அலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்ற நொடியில் “யோவ் எவ்வளவு நேரமாச்சு போன் அடிச்சாலும் அந்த ஆளு எடுக்க மாட்டேங்குறான்?” என்றொரு குரல் சற்று ஆவேசமாய் முறையிட்டது.
நான் சற்றுப் பொறுமையாய் “யார்ணே நீங்க எதோ ராங் நம்பர்னு நினைக்கிறேன்” என்றேன்.
“மயிரு என்ன விளையாடுறீகளா புடுங்கிகளா ஆயிரம் ரூவா அட்வான்ஸ் வாங்குனீல அயிட்டம் எங்கடா?” அவன் குரல் மேலும் உக்கிரமடைந்தது.
“என்ன அயிட்டம்ணே” என் குரலில் படபடப்போடு சற்று ஆர்வமும் தொனித்தது.
“உங்க அக்கா.”
அப்பதிலால் நான் ஆத்திரமுற்றாலும் சற்றுத் திடமான குரலில் அவரிடம் சொன்னேன் “நான் வீட்டுக்கு ஒத்தப் புள்ளண்ணே.”
“டேய் தாயளி ஒங்காயி அப்பனுக்குப் புள்ளயே இல்லாம ஆக்கிருவேன். லாட்ஜ் ரூம் செலவு வேற... தர்மராசாம் மயிராண்டி தேடி வந்து கொல்லுவேன் பாத்துக்க.”
நான் வேகமாய் இணைப்பைத் துண்டித்தேன். அந்த எண்ணிலிருந்து தொடர்ச்சியாய் அழைப்புகள் வந்தன. சற்று நேரம் கழித்து ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்பதா வேண்டாமா எனக் குழம்பி இறுதியில் அழைப்பை ஏற்றேன்.
“என்ன தம்பி பஸ் ஏறியாச்சா? எதுவும் கூப்பிட்டாங்களா?” என்ற கேள்வியின் மூலம் அழைத்தவர் யாரென அறிந்துகொண்டேன்.
“அண்ணே யார்ணே நீங்க? ஒங்களால என்னைய கொண்ருவேன்னு மிரட்டுறாங்க.”
“தம்பி ஆயிரம் ரூவாக்குல்லாம் கொல்லுவாங்களா? சும்மா ஏசிட்டு விட்டுறுவானுங்க. பயப்படாதீக. உண்மையிலே என் ஏ.டி.எம் கார்டு தொலஞ்சு போச்சு. எனக்கு அவசரமா கொஞ்சம் காசு தேவை. நாளைக்கு வந்தீகண்ணா நீங்க ஆயிரத்துக்கு எறநூத்தம்பது எடுத்துக்குங்க. என்ன நான் சொல்றது. சலுகை புதிய ஏ.டி.எம் கார்டு வரும் வரை மட்டுமே” என்று இறுதி வரியை விளம்பர அறிவிப்பைப் போல் சொல்லிவிட்டுச் சிரித்தார். எனக்கு அடிவயிற்றிலிருந்து கிளம்பிய எரிச்சலோடு வாயில் வந்த வசைச் சொல்லைக் கட்டுப்படுத்தியவாறு அழைப்பைத் துண்டித்தேன். மீண்டும் பணம் அனுப்பியவனிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பைத் துண்டித்துவிட்டு அவனுடைய எண்ணுக்கு கூகுள்பேயில் இரண்டாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை.
இரவு உறங்குவதற்கு முன் நரைதாடிக்காரரிடமிருந்து வாட்ஸப்பில் நாளை காலை ஒன்பது மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் உங்களுக்காய் காத்திருப்பேனெனக் குறுஞ்செய்தி வந்தது. பதிலுக்கு நான் அனுப்பிய இரண்டாயிரம் ரூபாய் பரிவர்த்தனைக்கான ஸ்கிரின் ஷார்ட்டையும் அதன் கீழே “போயா லூசு கூ...” என்று தட்டச்சு செய்தும் அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து சற்று நேரத்தில் “தம்பி இன்று நடந்ததை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள் அனைவரும் உங்களைத் தான் லூசு கூ... என்று சொல்வார்கள்” எனப் பதில் வந்தது. ஆத்திரத்தில் அலைபேசியை ஒலிக்காதவாறு செய்துவிட்டு தலையணையை நாலு முறைக் குத்தி விட்டு உறங்கிப் போனேன்.
மறுநாள் காலை கண்விழிக்கத் தாமதம் ஆனது. அவசரகதியில் கிளம்பி திருச்சி பேருந்தில் செல்லும் போது நரைதாடிக்காரரின் நினைப்பு வந்தது. அவரைக் குறித்துச் சிந்திப்பதைத் தவிர்த்துப் பயிற்சி வகுப்பில் அன்றைய தேர்வுக்கான பாடங்களைப் புரட்டத் தொடங்கினேன். ஆனால் மத்திய பேருந்துநிலையத்தில் இறங்கியதும் நான் எதிர்கொண்டது அவரைத்தான். எனக்கு அவரை எப்படித் தவிர்ப்பதெனத் தெரியவில்லை. ஏதோ விதி என்னைப் பெரிய வில்லங்கத்தில் தள்ளிவிட முயற்சிப்பதாய் தோன்றியது. அவரோ எனது எண்ணங்களைத் தெளிவாய் ஆராய்ந்திட போதிய நேரம் அளித்திடவில்லை. “தம்பி ராத்திரி நல்லா ஒறங்குனீகளா? ஆன் லைனுக்கே வரலையே கொஞ்சம் உங்க அக்கவுண்ட செக் பண்ணுங்க” என்றார்.
“அண்ணன் என்னைய தொந்திரவு பண்ணாதீங்க அப்புறம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிருவேன் பாத்துக்குங்க.”
“சரி தம்பி நானே கூட்டிக்கிட்டுப் போரேன் பதராதீக.”
“என் பசங்க மூணு பேரு எஸ்.ஐ யா இருக்காங்க. ஒரு வார்த்தை சொன்னாப் போதும்.” (உண்மையில் என்னுடன் பயிற்சி வகுப்பில் பயில்பவனின் நண்பர்கள் சென்ற எஸ்.ஐ. தேர்வில் தேர்வாகியிருந்தனர்).
“அப்படியா என்னன்னு சொல்லுவீக”
“ஒங்ககிட்ட எனக்கென்ன பேச்சு”
“சரி தம்பி கோச்சுக்காதீக. நானும் புதுக்கோட்டைக்காரன்தான். அரண்மனைக் கொல்லைதான் பூர்வீகம். கொஞ்சம் அந்த டீக்கடைக்கு வாங்க பொறுமையாப் பேசுவோம்” என அழைத்தார். எனது அம்மாச்சியின் பூர்விக ஊர் அது. ஒரு வேளை அவர் என் உறவினராய் கூட இருக்கலாம். அதெல்லாம் நான் அவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. என் முகத்தில் குடியேறியிருந்த வெறுப்பைச் சரி செய்ய அவர் ஏதேதோ பேசியவாறு வந்தார். நான் அவருக்கு எதிர் திசையில் முகத்தைத் திருப்பியவாறு சென்றேன்.
பேருந்து நிலையத்திற்கு வெளியிலிருந்த தேநீர் கடைக்குச் சென்றோம். அவர் இரண்டு தேநீரைச் சொல்லிவிட்டுச் சாலையில் செல்வதற்குச் சிரமப்பட்ட காருக்கு வழிவிடும் விதமாய் ஒரு இருசக்கர வாகனத்தை ஓரமாய் நகர்த்தி வைத்தார். இருவருக்கும் தேநீர் வந்தது.
இரண்டு தேநீருக்கும் நானே காசைத் தந்துவிட வேண்டும் என்பதற்காய் சூட்டோடு அருந்த தொடங்கினேன். “தம்பிக்கு புதுக்கோட்டையில எங்க?” என்ற அவரது கேள்விக்கு “வம்பன் நால்ரோடு” என்றேன். என் ஊர் ஆலங்குடி என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.
“அப்படியா நான் எட்டாவதுலேந்து பன்னென்டாவது வரைக்கும் வேங்கிடகுளத்துல தான் படிச்சேன். தம்பியும் அங்க தான படிச்சிருப்பீக?” என்றார். “இல்ல நான் ஆலங்குடியில படிச்சேன்” எனப் பதிலளித்ததற்கு “அப்பன்னா ஆலங்குடியில தானே வீடு இருக்கு” எனச் சிரித்தார். நான் எப்படிக் கண்டறிந்தார் எனப் புரியாமல் விழித்தேன்.
அவர் எனது சங்கடத்தை உணர்ந்து சிரிப்பை அடக்கும் விதமாய் உதடுகளை மடித்துக்கொண்டார். நான் வேகமாய் தேநீரை அருந்திவிட்டுக் காசைக் கொடுக்கலாம் என முயற்சிக்கையில் நான் கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரை வாங்கி அருகிலிருந்த ட்ரேயில் வைத்தவாறு அவர் பேசத் தொடங்கினார். அக்குரலில் எதோ ஒரு வசீகரமிருந்தது.
“மதுரையில டிப்ளமோ அக்ரி படிச்சேன் தம்பி. அப்ப என் கூடப் படிச்சவன் ஒருத்தன் கரூர்காரன். படிக்குற காலத்துல நல்ல நண்பன். எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவோம் வருவோம். படிச்சு முடிச்சுட்டு திருச்சியில உரக்கடை வைச்சோம். யோசனை அவனோடது. ஆனால் காசு முழுக்க என்னோடது. எங்க அம்மா நகையை வித்துக்கொடுத்தா. ஆனா அப்பாவுக்கு அதுல விருப்பமில்ல. கூட்டுல போகாதடான்னாரு. நான் கேக்குற மனநிலையில இல்ல. என் பார்ட்னர் அஞ்சு காசு கொடுக்கலை. கடையில நல்ல வியாபாரம். இலாபத்துல அவன் முதல் போட்ட மாதிரி கழிச்சுக்கிட்டோம். வெவசாயி எங்க வாழ்ந்தான். உரக்கடைக்காரன் தானே வாழ்ந்தான். தில்லை நகர்ல சொந்த வீடு வாங்குனேன். கல்யாணம் ஆச்சு. எங்க அம்மா முதல்ல போயி சேந்துச்சு. கொஞ்ச நாள்ல அப்பாவும் அம்மாவோட கூட்டு சேந்துட்டாரு. நல்ல வேளை அப்புறம் நான் அனுபவிச்சதெல்லாம் அவரு பாக்கல.”
சூடு ஆறியிருந்த தேநீரை ஒரே மடக்கில் அருந்திவிட்டு அருகிலிருந்த ட்ரேயில் வைத்துவிட்டு காசு கொடுக்கச் சென்றார். ஏனோ எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.
தேநீருக்குக் காசைத் தந்தவர் பேச்சைத் தொடர்ந்தார். “எனக்கு ஊர்ல கொஞ்சம் நெலம் இருந்துச்சு. அதுல வெவசாயம் பாக்கணும்னு ஆசை. அப்பப்ப ஊருக்கு போயிட்டு வருவேன். அந்த நேரத்துல அவன் தனியா கரூர்ல ஒரு கடை ஆரம்பிச்சிருக்கான்.
எனக்கது தெரியல. நம்ம கடை பேர்ல கடனுக்குச் சரக்கெடுத்து அவன் கடையில வித்திருக்கான். கடன் அதிகமா போகவுட்டு கடையிலேந்து அவன் பங்கு காசையும் வாங்கிட்டு வௌகிட்டான். அதுக்கப்புறம் தான் எனக்கு விசயம் தெரிஞ்சுச்சு. ஆனா என்ன பண்றது எல்லாம் கைய மீறிப் போச்சு. ஏற்கனவே இருக்குற கடன அடச்சாத்தான் மேற்கொண்டு சரக்குன்னு எல்லா டீலரும் சொல்லிட்டானுங்க. கடையில விக்க ஒன்னும் இல்ல. வீடு வித்ததுல பாதிக் கடன் தான் முடிஞ்சுச்சு. அப்புறம் கடையயும் மூடிட்டேன். கடனக் கொடுத்தவன் எல்லாம் வீடு தேடி வர ஆரம்பிச்சான். கடனத் திருப்ப வழி யில்லேன்னா பொண்டாட்டிய வைச்சுச் சம்பாரிக்கச் சொன்னானுங்க. எங்க அப்பாரு சொன்னதக் கேட்காமவிட்டுட்டோமேன்னு அப்ப வருந்துனேன். மீள்றதுக்கு வழியே தெரியல. எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வர்ரறதுனா என்னன்னு அப்பதான் புரிஞ்சிச்சு. எனக்குச் சொந்தமானது எல்லாம் கையவிட்டுப் போச்சு. உசிரு மட்டும் மிஞ்சிச்சு. கொஞ்சநாள் எப்படி சாகலாம்னு யோசிச்சுக்கிட்டு சுத்தித் திரிஞ்சேன். எனக்குச் சாகப் பயம் இல்ல. ஆனா என் சாவு மூலமா அவனப் பழிவாங்கணும். ஒரு நாள் விடியயில கரூர் பஸ்ல கிளம்பிப்போனேன். எனக்கு அவன் கண் முன்னால சாகணும்னு ஆசை. ரொம்ப நாள் கழிச்சு கர்நாடகாக்காரன் காவிரில ஒரு லட்சம் கன அடி தொறந்திருந்தான். ரெண்டு கரையும் தொட்டுக்கிட்டு காவிரி பாயுறா? அவளும் கடலுக்கிட்ட தன்ன பலி கொடுக்கப் போறான்னு தோணுச்சு. அவளைப் பாத்துக்கிட்டே பஸ்ல போனேன். ரெண்டு பேரும் எதிர் எதிர் தெசையில. ஆனா நோக்கம் ஒன்னுதானே. குளித்தலையிய அவ என்னய கூப்புடுற மாதிரி தோணுச்சு. நான் முசிறி பாலத்துல எறங்கிட்டேன். அப்படியே பாலத்துல நடந்து போனேன். விடிஞ்சு அரை மணி நேரம் ஆகியிருக்கும். பெருசா ஆளுக நடமாட்டம் இல்ல. அதுதானே அகண்ட காவிரி. என்ன ஒரு பிரம்மாண்டம். அத முழுசாப் பாக்க எனக்குக் கண்ணு கொள்ளல. கெழக்காலச் சூரியன் மேகத்துக்குள்ளாற மறைஞ்சிருந்துச்சு. இன்னும் முழுசா மேல வரல. காவிரிய வடக்கு கரையிலேந்து தெற்கு கரை வரைக்கும் ஒரு பார்வை பார்த்தேன். அப்படியே தெகப்பா இருந்துச்சு. ஏதேதோ பறவைங்க மீன் தேடித் திரிஞ்சுதுங்க. நான் அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி நின்னேன்.” அதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களை மூடி சில நொடிகள் மௌனமாய் இருந்தார். அதை மீண்டும் மனதிற்குள் நிகழ்த்துபவரைப் போல. எனக்குப் படபடப்பாய் இருந்தது. இதோ அவர் என் கண் முன்னே ரத்தமும் சதையுமாய் நிற்கிறார் எதற்கு நான் பதட்டமடைய வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் என் சமாதானங்கள் என்னை ஆற்றுப்படுத்தவில்லை.
அவர் கண்களை மூடியவாறே தொடர்ந்தார். “அவள் ஆர்ப்பரிக்குற ஓசை. பால்கொடம் எடுக்கயில பொம்பள ஆளுக சாமி வந்து ஆங்காரமா ஆடுங்களே அது மாதிரி. கொஞ்ச நேரம் அந்தச் சத்தத்த கண்ண மூடிக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரு குரல் கேட்டுச்சு. வா ரெண்டு பேரும் ஒன்னாப் போவோம் அப்படின்னு.”
அப்போது அவர் கண்களைத் திறந்தார். “ஆமா காவிரி பொண்ணுதான். யோசிக்காம குதிச்சிட்டேன். நான் நல்லா நீந்துவேன். ஆனால் இதுவரைக்கும் ஆத்துல நீந்துனதே இல்ல. அவ என்ன இழுத்துக்கிட்டுப் போறா. நான் அவ இழுப்புக்கு நீந்துறவனோட உள்ளுணர்வுல நீந்திப் போறேன். என்னால தெடமாச் சொல்ல முடியும். அது உயிர் ஆசையில்ல. அப்பதான் அந்த அதிசயம் நடந்துச்சு. எங்கேருந்தோ பத்து நீர்காகம் எனக்கு முன்னால பறக்க ஆரம்பிச்சுதுக. என்னமோ எனக்கு வழிகாட்டுற மாதிரி.
எனக்கும் அதுகளுக்கும் இருபதடி தூரம் எடவெளி இருக்கும். நான் எருக்கம் புதருக்குள்ளயும் நாணலுக்குள்ளாறயும் மாட்டுறப்ப அதுகளும் அந்தரத்துல எனக்காகக் காத்திருக்குதுக. நான் அதுகள நோக்கி நீந்தத் தொடங்குனேன். அதுக என்னய எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போகுதுங்க. கருவேலம் முள்ளு கிளிச்சு என் உடம்பெல்லாம் எரியுது. எப்படியும் பத்து சுழலுக்கிட்ட இருந்தாவது தப்பிச்சிருப்பேன். அங்கெல்லாம் அதுக வௌகிப் பறக்குதுங்க. இல்லன்னா நிச்சயம் அந்தச் சுழலுக்குள்ளாற மாட்டிருப்பேன். அப்படியே எவ்வளவு நேரம் நீந்துனேன்னு தெரியல. திடீர்னு அதுக எல்லாம் வல்லாங்கை பக்கமா பறக்க ஆரம்பிச்சுதுங்க. நானும் அதுக பின்னாடியே நீந்திப் போனேன். அதுங்க அப்படியே பறந்து போயி கரையில இருந்த ஒரு கோயில் கோபுரத்துல அமருதுங்க. அதுல ஒரு சுதைச் சிற்பம் மட்டும் தெளிவா என் கண்ணுக்குத் தெரியுது. அது தெறந்த மேனியா ஒரு பொண்ணோட சிலை. ஆனா அவ விசித்திரமா காவிரிக்குத் தன்னோட யோனிய விரிச்சுக் காட்டுறா. எனக்கு எதுவோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. ஆனா மனசுல ஒன்னு தெளிவா மின்னலடிச்சுச்சு. காவிரி கடலுக்குத் தன்ன பலி கொடுக்கப் போகல. அவ எல்லாரையும் வாழவைக்கதான் போறான்னு. கடல்தானே இந்த ஒலகத்தோட கர்ப்பப்பை. மொத உசிரு அங்க இருந்து தானே உருவாச்சு. மழைத் தண்ணி இல்லென்னா நெடுங்கடலும் நீர்மை குன்றுங்கிறான் வள்ளுவன். நதிங்கிறது மழையோட ஓட்டந்தானே. கடல்ல ஆறு நொழையுதே அதுதான் பூமியோட யோனின்னு தோணுச்சு. இதெல்லாம் அப்பத்தான் தோணுச்சா இல்ல அப்புறமா நான் எனக்குள்ளாற இப்படி வௌக்கம் குடுக்குறேனான்னுத் தெரியல. நான் அப்படியே ஆத்தோட போக்குல போனேன். எலவம்பஞ்சு காத்தடிக்குறத் தெசையில பறக்குற மாதிரி. மனசுல இருந்த பாரமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. ரொம்பக் குதூகலமா இருந்துச்சு. முத்தரசநல்லூர் தாண்டுனோன்னே ஸ்ரீரங்கம் கோபுரம் கண்ணுல பட்டுச்சு. அப்படியே நீரோட்டத்துல போயி அம்மா மண்டப படித்துறையில கரையேறுனேன். தண்ணி அதிகமா ஓடுதுன்னு அங்க காவலுக்கு இருந்த போலீஸ்காரன் ஒருத்தன் என்னய ஏதோ கடவுளப் பாத்த மாதிரி கும்பிட்டான். என் உடுப்பெல்லாம் முள்ளுல கிழிஞ்சு ஆத்தோட போயிருந்துச்சு. அங்க யாருக்கோ திதிக் குடுத்த வேட்டியொண்ணு கம்பில சுத்திக் கெடந்துச்சு. நான் அதை உடுத்திக்கிட்டேன். அப்படியே நாலு நாள் தண்ணி குறையுற வர ஆத்த பாத்துக்கிட்டே அங்கயே ஒக்காந்திருந்தேன். நாலு நாளும் அந்தப் போலீஸ்காரன் தான் எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். அப்புறமா எனக்கு சாவத் தோணல” என்றார்.
இருவரும் மௌனமாய் இருந்தோம். நான் இப்படியொரு உணர்ச்சிப் பெருக்கான உரையாடலை எவருடனும் நிகழ்த்தியதில்லை. ஆகவே எனக்கு அவரிடம் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
அவர் தலை கவிழ்ந்து வெகுநேரம் மௌனமாய் இருந்தார். நான் அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாய் “இப்ப ஏன்ணே இந்த வேலை செய்யுறீங்க” என்றேன்.
நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் “என்ன தம்பி செய்யச் சொல்றீக. அரைக்காசுக்கு போன மானம் ஆயிரங் கொடுத்தாலும் திரும்ப வராது. நெட்ல இதுக்குன்னு சில சைட்ஸ் இருக்கு. அதுல என் நம்பர் கொடுத்து வைப்பேன். எவனாவது போன் பண்ணி பொம்பள கூட்டிவிடக் கேப்பான். நான் அட்வான்ஸ் அனுப்பச் சொல்லிட்டு அப்புறம் ஃபோன எடுக்க மாட்டேன். ஆயிரம் ரூபாய்க்கு மேல இல்ல. அதுவும் மூணு நாளைக்கு ஒருத்தன். எனக்கும் இந்த ஈனத் தொழில் பிடிக்கலதான். என்னால எவங்கிட்டயும் வேலைக்குப் போக முடியல.” என்றார்.
“சரிண்ணே நான் என்ன செய்யணும்”
“உங்க அக்கவுண்ட செக் பண்ணுங்க தம்பி” என்றார்.
நான் எனது அலைபேசியை வெளியில் எடுத்தேன். அதில் முப்பது தவறிய அழைப்புகள் இருந்தன. நல்ல வேளையாக நேற்றிரவு அலைபேசியை மௌனிக்கச் செய்திருந்தேன். கூகுள்பேயில் நேற்றிரவு மட்டும் ஒன்பது நபர்கள் ஆயிரம் ரூபாய் அனுப்பியிருந்தனர். அதை அவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஏ.டி.எம்முக்கு தனது ஹோண்டா ஷைன் பைக்கில் அழைத்துச் சென்றார். நான் ஒன்பதாயிரத்தை வெளியிலெடுத்து அவரிடம் தந்து விடைபெற முயற்சித்தேன். அவர் தன்னுடன் வரச்சொல்லி என்னையும் அழைத்தார். நான் மறுக்கவில்லை. அங்கிருந்து சிறிது தொலைவில் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். வழக்கறிஞரின் பெயர் புண்ணியமூர்த்தி என்றிருந்தது. நான் வெளியில் காத்திருந்தேன். அவர் அவ்வழக்கறிஞரோடு வந்தார். வழக்கறிஞர் நெற்றியில் குங்குமமிட்டு இருந்தார். கருப்பு வெள்ளை உடையில் சற்றுப்பருத்த உடலோடும் மயிரடர்ந்த செவிகளோடும் இருந்தார். நாங்கள் எங்களது வண்டியைக் கிளப்ப அவர் தனது வெள்ளை நிற ஆக்டிவாவை இயக்கினார். அதன் முகப்பில் வழக்கறிஞர்களுக்கான கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.
இரு வண்டிகளும் சாலையில் இணையாய் பயணிக்கையில் வழக்கறிஞர் “பரமசிவம் அந்தப் பயல நம்பலாந்தானே?” என்றார். (அப்போது தான் நரைதாடிக்காரரின் பெயர் எனக்குத் தெரிய வந்தது).
அதற்கு “சார் அவனுக்கு ரொம்ப வெவரமெல்லாம் தெரியாது. எவனோ வண்டிய ரிப்பேர் பாக்க குடுத்துருக்கானுங்க. அது செயின் அடிக்குறவங்க வண்டின்னு எப்படித் தெரியும்? முந்துன வாரம் ராமலிங்க நகர்ல செயின் அடிக்கும் போது சிசிடிவியில வண்டி நம்பர் சிக்கியிருக்கு. பாத்தா வண்டிய ரிப்பேர் பாத்த மெக்கானிக்க ஸ்டேசனுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க” என இவர் பதிலளித்தார்.
“சரிப்பா அவன் வண்டிக்காரன் போன் நம்பர வாங்கி வச்சிருக்கலாம்ல?” என்றதற்கு
“சார் இவன் நம்பரத்தான் கொடுத்திருக்கான். அவனுங்களடோத வாங்கல” என்றார்.
“போலீஸ்காரனுங்க வண்டி நம்பர வச்சும் ஆளப் புடிக்க முடியலேங்குறானுங்க. ஏதோ பழைய கண்டமான வண்டி நம்பராம் அது. சரி நீ எதுவும் வாயத் திறக்காத நான் பேசிக்குறேன்” என வழக்கறிஞர் சலிப்புடன் சொன்னார்.
நாங்கள் கண்டோன்மென்ட் காவல்நிலையத்திற்குச் சென்றோம். சில கரை வேட்டிக்காரர்கள் காவல் நிலையத்தின் வெளியே நின்றிருந்தனர். அதில் சிலர் வழக்கறிஞருக்கு வணக்கம் வைத்தனர். பரமசிவம் என்னை எங்கும் சென்றுவிட வேண்டாமென்றும் வெளியே காத்திருக்குமாறும் சொல்லிச்சென்றார். என்னைக் கடந்து சென்ற காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இடைவெளியில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தன. யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை. நான் காத்திருந்த நேரத்தில் அலை பேசியில் வாட்ஸப் செயலியைத் திறந்தேன். பணம் அனுப்பிய சிலர் என்னை மிக மோசமான வசைகளால் திட்டியிருந்தனர். அவர்கள் அனைவரையும் பிளாக் செய்தேன்.
அரைமணி நேரம் கழித்துப் பரமசிவமும் வழக்கறிஞரும் திரும்பி வந்தனர். உடன் வேறொருவரும் வலது காலைச் சற்றுத் தாங்கியவாறு நடந்து வந்தார். வழக்கறிஞர் தனது ஆக்டிவாவைக் கிளப்பும் முன்பு “யப்பா சக்திமானு அவனுங்க எதுவும் கால் பண்ணா ஒடனே போலீஸுக்கு சொல்லிரு. சரியா? என்ன சொல்லிருவாப்லயா பரமசிவம். பையனுக்குச் சாமர்த்தியம் பத்தாது போலயே?” என்றார். பரமசிவம் சக்திமானுக்கு நற்சான்றிதழ் வழங்கி “அதெல்லாம் சொல்லிருவாப்ல” என்றார். சக்திமானோ தலை கவிழ்ந்தவாறே இருந்தார். நான் அவரைப் பார்த்தவாறு இப்படியெல்லாமா பேரு வைப்பாங்க என யோசித்துக் கொண்டிருந்தேன்.
நாங்கள் மூவருமாகப் பட்டாபிராமர் தெருவில் இருந்த சக்திமானின் வீட்டிற்குச் சென்றோம். வீட்டை ஒட்டியாவாறே சிறிய டூவீலர் மெக்கானிக் ஷாப் இருந்தது. சில வண்டிகளும் நின்றன. சக்திமான் எங்களை வீட்டிற்குள் வரச் சொல்லாமலும் முறையாக விடைபெறாமலும் தனது வீட்டிற்குள் சென்றார். சற்று நேரத்தில் அவரது மனைவி வெளியில் வந்தாள். அவரும் “வாங்க” என உதட்டசைத்தாள். ஆனால் அது எங்கள் செவிகளில் விழவில்லை. அந்த அழைப்பும் வீட்டிற்குள் வரச்சொல்லி இல்லையென நான் புரிந்துகொண்டேன். பரமசிவம் அவளிடம் பைக் சாவியைத் தந்தார். பிறகுதான் அது சக்திமானின் பைக் எனப் புரிந்தது. “பையன் எப்படியிருக்கான்” எனப் பரமசிவம் கேட்டதற்கு “நல்லா இருக்கான்” எனத் தலையசைத்தாள். “உள்ள இருக்கானா?” என அவர் எட்டிப்பார்த்தார். “காலாண்டுப் பரிச்சை படிக்கிறான்” என்றாள். சரியென அவர் விடைபெற்றுக்கொண்டார். அங்கிருந்து தென்னூர் சாலையில் நடந்து சென்று வலது பக்கமிருந்த ஒரு குறுகிய சாலைக்கு அழைத்துச் சென்றார். அத்தெருவில் நடந்து செல்கையில்
“ஏன்ணே சக்திமானுங்குறது உண்மையான பேரா?” என்றேன்.
“இல்லப்பா அவன் பேரு சந்திரசேகர்.”
“அப்புறம் ஏன்ணே சக்திமானுன்னு கூப்புடுறீங்க?”
“நீ எந்த வருசம் பொறந்த?”
“தொன்னூத்தியேழு”
“அந்தச் சமயத்துல டிடிசேனல்ல சக்திமானுன்னு ஒரு நாடகம் ஓடுன்னுச்சு. அப்ப இவனுக்குப் பத்து வயசு இருக்கும். ஸ்கூல்ல எவனோ ஒருத்தன் சக்தி மானெல்லாம் சும்மா டூப்புன்னு சொல்லியிருக்கான். இவனுக்குக் கடுமையான கோவம் வந்துருச்சு. இவன் சக்திமான் உண்மைதான்னு நிரூபிக்கிறதுக்காக இப்ப சக்திமான் என்ன காப்பாத்துவாருன்னு மொத மாடியிலேந்து குதிச்சிருக்கான். நல்லவேளை அவன் ஸ்கூலுக்கு ஒரு மாடிதான். காலோட போச்சு. அதுலேந்து அதுவே அவன் பேராயிருச்சு” என்றார்.
“ஏன்ணே உங்களச் சுத்தி எல்லாம் இப்படிப்பட்ட ஆளுகளாத்தான் இருப்பாங்களா?” என்றேன்.
அவர் உரிமையோடு என்னை “டேய்” என்றார். அவரின் வீடு சற்று உள்ளடங்கியிருந்தது. “தம்பி நேத்து நீங்க அனுப்புன ரெண்டாயிரத்த இப்ப உடனே தேத்திரலாம்” என்றார். நான் அதெல்லாம் வேண்டாமென மறுத்துவிட்டு அங்கு இரைந்து கிடந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் உதவி வேளாண் அலுவலர் தேர்வுக்கான வழிகாட்டி நூல்களும் இருந்தன. நான் அதைக் கையிலெடுத்துப் புரட்டினேன்.
“என்ன பண்றதுப்பா நாப்பத்திரண்டு வயசாயிருச்சு. ஒங்கள மாதிரி சின்னப் பயலுகள்ட போட்டி போட முடியுமா?” என்றவர் அப்போது தனது அலைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசத் தொடங்கினார். அவர் பேச்சை சற்றுநேரம் கவனித்த எனக்கே அவரிடம் உண்மையில் ஏகப்பட்ட பெண்கள் கைவசமிருப்பார்களோ என எண்ணத் தோன்றியது. அவர் தன்னிடமுள்ள ஒவ்வொரு பெண்களாய் வர்ணித்து வந்தார். பழைய எழுத்தாளர்கள் அவ்வர்ணனையைச் சிருங்கார ரசம் என எழுதுவார்கள். அலைபேசியில் அவர்கள் புகைப்படம் அனுப்பச் சொல்லிக் கேட்க அது காவல் துறையிடம் சிக்கினால் பெண்களின் வாழ்க்கைப் போய்விடும். ஏனெனில் அவர்கள் கல்லூரி மாணவிகள் எனச் சொல்லி வைத்தார். பதினைந்தாயிரம் சொல்லி பன்னிரண்டில் பேரம் முடிவுற்றது. ஆயிரம் ரூபாய் முன்பணத்தை என் நம்பர் சொல்லி அதற்குக் கூகுள்பேயில் அனுப்பச் சொன்னார். இரண்டு நிமிடத்தில் என் எண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. நான் வேகமாய் அலைபேசியின் பேட்டரியை அணைத்தேன். அவர் என் பதட்டத்தைக் கண்டு உரக்கச்சிரித்தார். இம்முறையும் அவருக்குப் புரையேறி கண்களில் நீர் வழிந்தது.
சரி வீட்டிற்குக் கிளம்பலாமென அவரிடம் விடை பெற்றேன். தானும் பேருந்து நிறுத்தம் வரை உடன் வருவதாக எழுந்தார். எனக்குத் தாகமாய் இருந்தது. வீட்டின் மூலையில் மினரல் வாட்டர் கேன் இருந்தது. நான் அதனருகே சென்று நீரருந்த தலையை நிமிர்த்திய போதுதான் பரமசிவத்தின் திருமண புகைப்படத்தைப் பார்த்தேன். அவர் கண்களில் ஒருவிதக் குறும்பு தெரிந்தது. பிறகு புகைப்படத்தை மீண்டுமொரு முறை நன்றாக உற்று நோக்கி விட்டுக் கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் வரை பரமசிவமும் என்னுடன் வந்தார். நாங்கள் பேருந்திற்காய்க் காத்திருக்கும் போது என்னால் அக்கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஏன்ணே உங்க வீட்டுக்காரம்மா இப்ப சக்திமான் கூடத் தான் இருக்காங்களா?”
அவர் என் பக்கம் முகத்தைத் திருப்பவில்லை. பேருந்தின் வரவை எதிர்நோக்கியிருப்பதைப் போல் சாலையை வெறித்திருந்தார். நான் அக்கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதெனச் சங்கடப்பட்டேன். சற்றுத்தாமதமாய் அவரிடமிருந்து பதில் வந்தது
“கடன் காரனுங்களுக்குப் பதில் சொல்ல முடியாம நான் வீட்ட விட்டுப் போயிட்டேன். அவளும் எத்தன பேருக்குப் பதில் சொல்லுவா. கையில இருக்க எல்லாத்தையும் வித்துச் சாப்புட்டுக்கிட்டு இருந்திருக்கா. என் மகனுக்கு அப்ப ரெண்டு வயசு. என்ன பத்தி எந்தத் தகவலும் இல்ல. எங்க வண்டிய சக்திமான்தான் ரிப்பேர் பாப்பான். அவளோட பழைய ஸ்கூட்டிய அவங்கிட்ட வித்துத் தர முடியுமான்னு கேட்டுருக்கா. அப்படியே பழக்கம் ஆகிருச்சு. நான் மூணு மாசம் கழிச்சு திரும்பி வந்தப்போ என் சம்சாரம் அவன் கூட இருந்தா” என்றார்.
பரமசிவத்திற்கு அவர்கள் இருவர் மீதும் எந்தப் புகாருமில்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அன்று இரவு உறங்குவதற்கு முன் அலைபேசியை மீண்டும் உயிர்ப்பித்தேன். எனது வங்கிக்கணக்கில் இன்னொரு ஆயிரம் ரூபாய் செலுத்தப் பட்டதற்கான குறுஞ்செய்தி வந்திருந்தது. நான் கூகுள் பே செயலியை சோதித்துப் பார்த்தேன்.
பணம் அனுப்பிய எண்ணிலிருந்து எனக்கு வாட்ஸப்பில் மோசமான வசைகள் வந்திருந்தன. நான் அந்த எண்ணை பிளாக் செய்தேன்.
“இனிமேல் பணம் வேண்டாம்” எனத் தட்டச்சுச் செய்து பரமசிவத்திற்கு அனுப்பினேன். அவர் சரியெனப் பதிலளித்தார்.
“எதற்கு என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்? உங்கள் தெருவிலேயே யாரேனும் பிடித்திருக்கலாமே?” எனக் கேட்டேன்.
அவர் வடிவேலு ஏட்டாய் இருக்கும் புகைப் படத்தை அனுப்பி “அவங்கெல்லாம் தொழிலக் கத்துக்குவானுங்க தம்பி” என்றார். நான் ஒரு புன்னகையைப் பதிலாய் அளித்து விட்டு “என் நண்பர்களிடம் இன்று நடந்ததைச் சொன்னேன் அவர்கள் அனைவரும் உங்களைத்தான் லூசு கூ.... என்றார்கள்” என அனுப்பி வைத்தேன்.
“சரி விடுங்க தம்பி அப்படி இருக்குறதுலயும் ஒரு சொகம் இருக்கு” எனப் பதிலளித்தார். நான் அவருக்கு ஒரு புன்னகையை அனுப்பிய பின் அலைபேசியின் பேட்டரியை அணைத்து வைத்தேன்.
இடையும் இசையும் என்கிற பெயர் கொண்ட அந்த மனமகிழ் மன்றத்து இரவு நேர நடன விடுதியின் வாசலில் சில மாதங்களுக்குமுன், நகர மக்கள் அத்தனை பேருடைய நினைவுகளிலும் இன்னும் சில வருடங்களுக்காவது நீங்காமல் நிலைக்கப்போகும், தனித்துவமிக்கப் பேய்மழை பெய்துகொண்டிருந்த அந்த இரவில் எங்களுக்கு என்ன நடந்தது என்பதை இன்றும் எங்கள் ஐந்து பேராலுமே தெளிவாக மனக்கண்களில் திரும்பிப் பார்த்து விளங்கிக்கொள்ள முடியவில்லை. முதலில் அந்த நிகழ்வு நடன விடுதியின் வாசலில்தான் தொடங்கியதா அல்லது அதற்கு முன்பே, விடுதிக்குள்ளேயே, நிகழத் தொடங்கி விட்டிருந்ததா, அல்லது நடன நிகழ்வின்போது எங்களுக்கு நேர்ந்த வினோதமான அனுபவத்தை நாங்கள்தான் பேசிப் பெருக்கி அது எங்களை விடுதிக்கு வெளியிலும் தொடர்ந்து வந்ததாகக் கற்பனை செய்துகொண்டோமா என்பதேகூட எங்களுக்குத் தெளி வில்லாத இருண்மைப் பண்பு கொண்டதாகத்தான் இருக்கிறது. ஐவரில் ஒருவர் மட்டுமல்லாமல் ஐவருமே அந்த அனுபவத்தை அடைந்தோம் என்கிற ஒரேயொரு பலவீனமான மெய்ம்மையின் கொக்கியில்தான் நாங்கள் அந்த நிகழ்வினுடைய மாயத்தன்மையின் முழு எடையையும் தொங்க விட்டிருக்கிறோம்.
நாங்கள் அன்று முன்னாள் மாநிலங்களை இணைத்த நெடுஞ்சாலை மருங்குத் தொழிற்பேட்டைத் தொகுப்பில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள், உள்ளாடைகள், தூமைக் கழிப்புக் குட்டைகள், நெகிழி சிசினங்கள், பொம்மைகள், கைக்கருவிகள் முதலியன தயாரிக்கும் (நூறு விழுக்காடு பெண்களால் நடத்தப்படுகிறது என்ப தனாலேயே பிரபலமாகியிருக்கும்) யோநீ பெண் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலையை நிறுவி நடத்திவரும் அதன் இரட்டை உரிமையாளர்களும், அந்த மாலை நிகழ்வில் பங்குகொண்ட எங்கள் ஐவரில் இருவரும், உடன்பிறந்த சகோதரிகளுமான எங்கள் தோழிகள் இருவரில் ஒருத்தியாகிய நீமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக (கொண்டாட் டத்தை ஏற்பாடு செய்திருந்தவள் அவர்களில் மற்றொருத்தியான யோகா) அழைப்பின் பேரில்இடையும் இசையும் நடன விடுதியில் குழுமி இருந்தோம். அப்பொழுது மழைக்கான அடையாளம் எதுவும் வானில் இருக்கவில்லை. கூடவேதனிநாடு பிறந்தநாள் கொண்டாட்ட நாளாயும் அந்த நாள் இருந்ததால் சாலைகளிலும் விடுதிகளிலும் மன்றங்களிலும் கூட்டநெரிசலும் வாகன நெரிசலும் மிக அதிகமாக இருந்தது, அரசுப் பிரமுகர்களைத் தவிரப் பிறருக்குப் பொதுயிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான அனுமதி தரப்பட வில்லை, மற்றவர்கள் தங்களுடையதை வெகுதொலைவில் நிறுத்திவிட்டோ அல்லது திருப்பி அனுப்பிவிட்டு வேலை முடிந்ததும் (வேலையென்ன வேலை, அன்று அரசு விடுமுறையாதலால் பொது இடங்களில் அத்தனை பேரும் செய்துகொண்டிருந்தது விருந்தாடல்களையும் நடனங்களையும் முத்த மிடல்களையும் தழுவல்களையும் தவிர வேறெதையுமில்லை) செய்தியனுப்பி வரவழைத்துக்கொள்ளும் ஏற்பாட்டைச் செய்துவிட்டோதான் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டுமென்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததால் யோகாவும்நீமாவும் தங்களுடைய சொந்த வாகனத்தைக் கொண்டு வராமல் வாடகை வாகனத்திலேயே (மற்ற எங்கள் மூவரையும் அந்த வண்டியிலேயே எங்கள் இருப்பிடங்களிலிருந்து ஏற்றிக்கொண்டும்) நடன விருந்திற்கு வந்துவிட்டிருந்தார்கள். எங்களைத் தவிர அவர்களால் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்த மற்ற நண்பர்களும் தவறாமல் விடுதிக்கு வந்துவிட்டிருக்கப் பிறந்தநாள் நிகழ்வு கோலாகலமாகத் துவங்கி நடந்து கொண்டிருந்தது. பரிசுகளும் முத்தங்களும் வாழ்த்துக் களும் சீண்டல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டபின் இசை நடனம் துவங்கியது. மதுவகைகள் எச்சிலாய் வழிந்தோடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு இசைக்கோப்பு முடியும்போதும் உற்சாகம் அதன் உச்சத்திற்குச் சென்று பீறிட்டு அடங்கி அடுத்த இசைக் கோப்பு அதன் பணியைச் செய்ய அந்த இடத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. முதலில் கிட்டத்தட்ட அங்கேவருகை தந்திருந்த அத்தனை பேரையும் ஆட வைத்துஆரவாரித்துக்கொண்டிருந்த சூழல். நேரம் செல்லச் செல்ல ஆடிச் சோர்ந்துபோனவர்கள் தங்கள் இருக்கைகளில் ஒதுங்கிக்கொள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய இளைஞர் பட்டாளத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தது.
நடன விருந்து என்பதே ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை, நானோ அன்று தனிப்படக் கூடுதல்கிளர்ச்சியொன்றிலும் திளைத்துக்கொண்டிருந்தேன், என்னை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறா னென்று சொல்லப்பட்ட என்னுடைய கல்லூரியைச்சேர்ந்த (நான் அரசு வான்வெளி ஆராய்ச்சிக் கழகக் கல்லூரியில் வேற்றுக் கிரகவியல் துறையில் இளநிலை இரண்டாமாண்டு மாணவி. யோநீ பெண் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலையில் பகுதிநேர மேலாளராகப் பணி செய்தபடி போதா பெண்கள் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்) மாணவர்களில் ஒருவன் (ஒரு முறை தொழிற்சாலை யின் போட்டியாளர்களால் அதன் உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் அச்சுறுத்தல் நேரவிருப்பதாக ஒரு அநாமதேயத் தகவல் காற்றில் கசிந்தபோது நான் தங்கும் விடுதி வாசலிலேயே இரண்டு இரவுகளைக் கழித்தவன்) இன்று என்னைக் காட்டி என் மீதான தன்காதலையும் சொல்லிப் பகிர்ந்துகொள்ளத் தன் நண்பர் களுடன் அங்கே வரவிருப்பதாகச் சக மாணவிகள் மூலம் நான் கேள்விப்பட்டிருந்தேன். முதலில் அதை நான் நம்பவில்லையாயினும் அது அளித்த கிளர்ச்சி காரணமாக நம்ப விரும்பினேன். ஆனால் நான் கேள்விப்பட்டது உண்மைதான். அந்த மாணவன்மெய்யாகவே தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் அங்கே வந்துதானிருந்தான். பிறந்தநாள்கொண்டாட்டத்திற்கும் அவனுக்கும் தொடர்பில்லை யாதலால் தொலைவில், பொது வாடிக்கையாளர் களுக்குரிய பகுதியில், ஒரு மூலை மேசையில் என்னைப் பார்த்தபடியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறான் என்கிற ஊகமும் ஒருவேளை அவன் என்னை அணுகக்கூடும் என்கிறஎதிர்பார்ப்பும் தந்த போதையில் எனக்கு நடனத்தின் நடுவே அடிக்கடி காதுகள் சூடாகிச் சிவந்துகொண்டிருந்தன. தொடர்ந்து சுழன்றுகொண்டேஇருந்த மனிதவுடல்கள் கூடிப் பிரியும் இடைவெளியில் மயக்கமூட்டும் மங்கிய பன்னிற ஒளிவிளக்குகளின் அலைவில் உயர்ந்தும் தாழ்ந்தும் திரண்டும் திரிந்தும் தெரிந்தும் மறைந்தும் அவனுடைய இருப்பு என் பார்வைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அது என்னுடைய அசைவு களைப் பிரத்யேகமானதாக ஆக்கிக்கொண்டு இருப்பதாயும் எனக்குத் தோன்றியது. ஏதோ ஒரு கட்டத்தில் அவன் எழுந்து என்னை நோக்கி வருவானென்றும் தன்னுடன் நடனமாட என்னை அழைப்பானென்றும் நான் எதிர்பார்த்து அந்தத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டுமிருந்தேன். அப்போது அந்த அழையா விருந்தாளியை என் தோழிகள் திரும்பி வியப்புடன் பார்ப்பார்கள். அவன் என்னைக் காதலிப்பதாக அவர்களிடம்திக்கித் திணறிச் சொல்லுவான். அவர்கள் என்னை அது உண்மையா என்று உசாவுவார்கள். நான் பெருமிதமும் அலட்சியமும் கலந்த குரலில் அவன் என் கல்லூரி மாணவன் என்பது உண்மைதானென்றாலும் அவன் என்னை விரும்புகிறான் என்பதுஎனக்கே இப்போதுதான் தெரியும் என்றும்அந்த வகையில் அவனுடன் நடனமாட எனக்குமறுப்பேதும் இருக்கப் போவதில்லையென்றாலும் அவனுடைய காதலைப் பொறுத்தவரையில் நான் இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்றும் சமத்காரமாகப் பேசி என் தோழிகளே அவனைப்பற்றி என்னிடம் நான் விரும்பும் வகையில் பேச ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொள்வேன் (ஏன்,இவனுக்கென்ன, ஆள் பார்க்க வாட்ட சாட்டமாக, நாகரீகம் தெரிந்தவனாக, உன்னைப் புரிந்துகொள்ளவும் உனக்காகக் காத்திருக்கவும் முயற்சிக்கிறவனாகத்தானே தெரிகிறான் இத்யாதி). கற்பனைகளின் வேகத்திலும் நடனத்தின் வேகத்திலும் அகப்பட்டு உண்மையில் அப்போது நான் மூச்சுவிடத்திணறிக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் விரைவிலேயே, அவன் நான்எதிர்பார்த்த எந்த அசைவையும் காட்டாமல் தொலைவிலேயே தன்னைத் தன் நண்பர்களுடன் இருத்திக்கொண்டிருந்த காரணத்தால், அந்த மயக்கம் மெதுமெதுவாக வடியத் தொடங்கி என்னுடைய தன்னுணர்வு திரளத் தொடங்கி அவனுடைய பார்வை அத்தனை இடையீடுகளை மீறியும் என் மார்புகளில் ஒருவிதமான பிடிவாதத்துடன் மோதியதாக நான் உணர்ந்தபோது வெட்கத்தாலோ இயல்புணர்ச்சியாலோ எனக்கு அது ரசிக்காமல் போய்விட்டது. நான் வேண்டு மென்றே அவன் பார்வைக்கு என் பின்புறத்தைக் காட்டியபடியும் அவனுடைய இருப்பைச் சட்டை செய்யாதவளைப்போல இசையிலும் நடனத்திலும் என் கவனத்தைத் திருப்பிக்கொள்ளவும் முயற்சித்தேன். முதலில் அதில் ஓரளவு அழுத்த தணிவையும் உணர்ந்தேன். ஆனால் சிறிதுநேரத்திற்குப் பிறகு மீண்டும் அவனுடைய பார்வை என் முதுகைத் துளைத்து மார்புகளைத் துழாவுவதான உணர்வு நீங்க வில்லையென்று தோன்றவே அவனை வெளிப் படையாகவே முறைத்துப் பார்த்து என் எரிச்சலைக் காட்டிவிடும் எண்ணத்துடன் அவன் இருந்த திசையை நோக்கித் திரும்பினேன்.
அப்போதுதான் அது நிகழத் தொடங்கியிருக்க வேண்டும் (அல்லது ஏற்கனெவே நிகழ ஆரம்பித்து விட்டிருந்த அதை நான்தான் தாமதமாக உணர்ந்தேன் என்றும் சொல்லலாம்). அங்கே அந்த மாணவன் இல்லை. நான் அவனிடமிருந்து பார்வையைத்திருப்பியிருந்த சமயத்தில் ஏதோ ஒரு கணத்தில் அவன் கிளம்பிப் போய்விட்டிருக்கவேண்டும் (ஒருவேளை நான் முகத்தைத் திருப்பிக்கொண்டது தன்னை அவமானப்படுத்தியதாகவோ அவனை நான் விரும்பவில்லை என்பதாகவோ அவனை எண்ணச் செய்திருக்கக்கூடும். அல்லது அவனுக்குத் தன் நண்பர்களிடம் தான் காதலியாக வரித்திருக்கும் பெண்ணை வெறுமே காட்டிவிட்டுப் போகும் யோசனை மட்டுமே இருந்திருக்கக்கூடும். அல்லது இத்தனை கூட்டத்தில் தன்னுடைய காதலைச் சொல்வது, அது எனக்கு என் தோழிகள் முன்னிலையில் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடுமென்றால், அத்தனை அறிவுக்குகந்த செயலாக இருக்காது என்று தோன்றியிருக்கக் கூடும். அல்லது அப்படிஅவன் நண்பர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருக்கக் கூடும், அல்லது, அல்லது, அல்லது). என்னை அவனுடைய வெளியேற்றம் பெரிதாகப் பாதிக்கவில்லையென்றாலும் (எங்கே போய்விடப்போகிறான்) சிறிது ஏமாற்றத்தைத் தரத்தான் செய்தது(ஒருவிதத்தில் அந்த ஏமாற்றத்தில் ஏதோ ஒரு கிளர்ச்சியும் இருக்கத்தான் செய்தது). ஆனால் அதே கணத்தில் அந்தக் கிளர்ச்சியை நான் சிந்தித்துப் பரிச்சயப்படுத்திக்கொள்வதைத் தடை செய்யும் வண்ணம் என் மார்புகளைத் துளைக்கும் அந்தப் பார்வை மட்டும் இன்னும் என்மேல் தங்கியிருந்ததை என் இயல்புணர்ச்சி அறிந்துவிட்டது. நான் திடுக் கிட்டேன், என் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து விட்டது. அந்தத் துணிவற்ற மாணவனல்ல, மாறாக வேறு யாரோதான் என்னை அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களென்பதை நான் தெரிந்துகொண்டுவிட்டேன். குழப்பத்துடனும் சிறிது அச்சத்துடனும் கண்களை அரங்கத்தைச் சுற்றிஓட்டினேன். ஆண்களின் பார்வை அவற்றின் இயல்புப் படி என்மேல் சில கணங்கள் மின்வெட்டி விலகிக் கொண்டிருந்தனவேயன்றி என் உறுப்புகளில் பிரத்யேகமாகத் தங்கியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கழுத்தின் கீழ்புறம் மேற்சட்டையினடியில் யாரோ உதடுகளைக் குவித்துக் காற்றை ஊதும் குறுகுறுப்பை என்னால் வெறும் கற்பனை என்று எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை. பார்வையால் எத்தனை துழாவிப் பார்த்தும் ஆளையோ காரணத்தையோ கண்டுபிடிக்க முடியாமலும் தவிப்பை வெளிக்காட்டாமலும் தொடர்ந்து சிறிது நேரம் நடனமாடிக்கொண்டிருந்த நான் கடைசியில் அதன் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வேறு வழியின்றி அதை என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டுவிட்டேன்.
கெடுவாய்ப்பாக அந்தப் பகிர்தல் தீர்வைக் கொண்டு வருவதற்குப் பதிலாக சூழலை இன்னும் அச்சம் நிறைந்ததாயும், என் தோழிகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சுழலாயும் உடனே மாற்றிவிட்டது. நான் சொன்னதைக் கேட்டதும் அவர்களுடைய முகங்கள் கேலியினாலோ கோபத்தினாலோ சிவப்பதற்குப் பதிலாக பீதியில் வெளிறிப்போய்விட்டன. அவர்கள் நான் என் மார்புகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த பார்வையால் நிம்மதியிழப்பிற்கு உள்ளாகியிருந்த அத்தனைநேரமும் தாங்களுமே என்னைப் போலவே அதே விதமான உறுத்தலைத் தங்கள் முலைகளில் பரிச்சயப் பட்டுக்கொண்டிருந்ததாக என்னிடம் சொல்லித் தாங்களும் திகைத்து என்னையும் திகைக்க வைத்தார்கள். நான் அந்தப் பார்வைக்குரிய உடலைத்தேடிக் கண்களால் சலித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களும் என்னைப் போலவே மற்றவர் களுக்குத் தெரிவிக்காமல் அதே செயலில்தான் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தியுமே அது தனக்கு மட்டுமே தோன்றும் காரணமற்ற உணர்வு என்றே எண்ணி அதைத் தானே கண்டுபிடித்துச் சரிசெய்துகொண்டுவிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள்கள். இப்போது நான் வெளிப்படையாக அதைத் தெரிவித்தவுடன் அது தனிப்பட்ட உணர்வல்ல என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. தெரிந்ததும் அந்தப் பார்வையின் பிடிவாதம் கூடிவிட்டதைப்போல எங்கள் எல்லாருக்குமே மூச்சுத் திணறவும் தொடங்கிவிட்டது.
ஒப்பீட்டளவில் இடையும் இசையும் நடன விடுதி அளவில் சிறியதுதான். ஒருவேளை அதன் தாங்கும் சக்திக்கு அதிகமாகக் கூட்டம் சேர்ந்து அதனால்அறை வெப்பம் அதிகமாகி அதோடு பலதரப்பட்ட மது வகைகளின் நெடி மற்றும் காதையும் மண்டையும் பிளக்கும் இசையோலம் எல்லாமாகச் சேர்ந்து அந்த மூச்சுத் திணறலை உண்டாக்குகிறதோ, அதுதான் மார்பகங்களைத் தாக்கி யாராலோ பார்க்கப்படும் உணர்வை ஏற்படுத்துகிறதோ என்று நாங்கள் ஒரு மேசைக்கு நகர்ந்துபோய் உட்கார்ந்து பதற்றத்துடன் எங்களுக்குள் பேசி விடை தேட முயற்சித்தோம். ஒன்றுக்கு மேற்பட்ட நபருக்கு அந்த உணர்வு உண்டாகியிருப்பதால் அதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் எங்களைத் தவிர அப்போது அந்த விடுதியிலிருந்த வேறு யாரும் யாருடனும் அவ்விதமான உணர்வைப் பகிர்ந்துகொண்டதாக எங்களால் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து சிரிப்பும்களிப்பும் நடனமும் இசையுமாகவேதான் அரங்கம் நிறைந்திருந்தது. எங்கள் ஐவரையும் திகில் பிடித்துக் கொண்டுவிட்டது. எங்களை வலையில் வீழ்த்த யாரோ முயற்சி செய்கிறார்களென்றும் நாங்கள் அருந்திய மதுவிலோ நான் அருந்திய பானத்திலோ (நான் மது அருந்துவதில்லை) எதையோ தனிப்படக் கலந்து தந்திருக்கிறார்களென்றும் எங்களைக் கவனி யாதவர்கள்போல அமர்ந்திருப்பவர்களில் யாரோ ஒருவருக்கு அல்லது ஒரு குழுவிற்கு எங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதென்றும் கற்பனை செய்துகொண்டதில் எங்களுடைய உடல்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. வெறும்உணர்வு சார்ந்து விடுதி நிர்வாகத்திடம் முறை யிடுவது பலன் தராது என்றும் தோன்றவே வேறுவழியின்றி நாங்கள் உடனே விடுதியை விட்டுவெளியேறிவிட முடிவு செய்தோம். விருந்தினர்கள்விடைபெறுவதற்கு முன் விருந்தளிப்பவர் வெளியேறுவது நாகரிகமாகாது என்று யோகாவும் நீமாவும் தயங்கினாலும் எங்களுடைய வற்புறுத்தலின் பேரிலும் தங்களுடைய அச்சத்தினாலும் மேலும் எங்களில் ஒருத்திக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே அவள் பொருட்டாகத் தாங்கள் விடைபெற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது என்றும்வருகை தந்தவர்களிடமும் அவர்கள் வேண்டியஅளவு உண்டு குடித்து விருந்தாடிவிட்டுச் செல்லத் தங்கள் செலவில் அனுமதிக்கும்படி விடுதி மேலாளரிடமும் சொல்லிவிட்டு விடுதியைவிட்டு வெளியேறினோம். யோகாவும் நீமாவும் எங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்ப அங்கிருந்தவர்கள் யாருடைய உதவியையேனும் உரிமையோடேயே கேட்டுப் பெற்றிருந்திருக்கலாமெனினும் அச்சத்தாலும் சந்தேகத்தாலும் அந்த வழியைத் தவிர்த்துவிட்டு வாடகை வண்டி பிடித்துக்கொள்ளும்எண்ணத்துடன் நடன அறையைவிட்டு வெளியேறி விடுதி வரவேற்பறையையும் கடந்து வாசலைநோக்கிப் போனோம்.
இசையும் இடையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் கேளிக்கையுலகின் வகைமைகளையும் மாயாஜாலங்களையும் அவை தரும் பரவசங்களையும் சாலையிலிருந்து தன்னை வேடிக்கைப்பார்ப்பவர்களால் சற்றும் ஊகிக்கவியலாதபடி மறைத்து வைத்து வாடிக்கையாளர்களாகி உள்ளேநுழைந்த பின்பே வேறொரு உலகத்தின் அனுப வத்தை ஒரு பேரதிசயமாக அவர்கள்முன் விரித்துக் காட்டும் நோக்கத்துடன் தன் உள்ளரங்கங்களை ஒலித்தடுப்புச் சுவர்களின் வெகு ஆழத்திற்குள்புதைத்து வைத்திருக்கும் கட்டுமானத் தொழில் நுட்பத்தைத் தேர்ந்துகொண்டிருந்தது. அது ஒரு கனவுஉலகம். அங்கே அது உருவாக்கும் ஒளியையும் ஒலியையும் தாண்டி யதார்த்தவுலகின் ஒளியோஒலியோ உட்புகுவதற்கு எந்த வகையிலும் வாய்ப்பேஇல்லை. போலவே அதன் உள்ளிருந்து வெளியேறும்ஒருவர் வாசலைத் தொடும் கணம் வரையில் அதன்பிடியிலிருந்து தப்பி வெளியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் தருணமும் சித்திப்ப தில்லை (இசையும் இடையும் விடுதியைப்போன்ற மிகச் சில விடுதிகள் தங்கள் அரங்கங்களுக்குள் அலைபேசி போன்ற வெளியுலகத் தொடர்புச் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு, அது எத்தனை முக்கியமான பிரமுகராக இருந்தாலும், விலக்குப் பெற்றிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தானே). எனவே நாங்கள் வாசலைத் தொட்ட கணத்தில்தான் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியுடன் வெளியேவான் பிளந்து கொட்டிக்கொண்டிருக்கும் மழையைஎதிர்கொண்டோம். அது பொதுவாக ஆகஸ்ட்பதினைந்தின் மழை என்பதை அதைச் சந்தித்த வுடனேயே எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம்.ஆனால் அதே மழை ஏதோவொரு கோபத்துடனும் பழிவாங்கும் மூர்க்கத்துடனும் நகரத்தின் மேல், மிக அச்சமூட்டும் விதத்தில் விழுந்துகொண்டிருப் பதாகத் தோன்றியது. வானம் மிகப் பழையதாக, வேறு ஏதோ ஒரு காலத்தினுடைய வானம்போலத் தெரிந்தது. நகரத்தின் மூன்றாவது பிரிவின் முக்கியச் சாலைகளில் ஒன்றான அந்தச் சாலை எண் 7 அதன் வானுயர்ந்த கட்டிடங்களிலும் எண்பதடி அகலச் சாலையிலும் ஆள் நடமாட்டமற்றுப்போயிருந்தது. தனிநாடு நாள் கொண்டாட்டங்கள் பாயக் காத்திருக்கும் மிருகத்தைப்போல வெளிப்படுவதற்கான தருணத்தை நோக்கி அவற்றின் உட்புறங்களிலும் மறைவுகளிலும் பதுங்கியிருப்பதை இந்நிலத்தோடு பழகியிருக்கும் யாராலும் உணர முடியும். அந்தக் கொண்டாட்டத்தின் வண்ணங்கள் வேறு. இசை வேறு. நடனங்கள் வேறு. அவற்றிலும் பார்வைகள் உண்டுதான். ஆனால் அவை அச்சம் விளைவிக்கும் ரகசியத்தையும் இருண்மையையும் கொண்டிருப்பதில்லை. அவைவெளிப்படையானவை, துணிச்சல் கொண்டவை. சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்கெனவேதடையிருந்ததால் கனத்த மழைப் பொழிவிற்குஇடையிலும் சாலையின் நெடுந்தொலைவுவரை பார்வைத் தடையேதும் இருக்கவில்லை. எங்கள்ஐவருக்குள்ளுமே அதுவரையில் நிறைந்திருந்த, உடனடியாக இருப்பிடத்திற்குத் திரும்பும் தவிப்பையும் புதிர்மை கொண்ட அச்சவுணர்வையும் அந்த அகண்டபுறவெளி தணித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தது. என்றாலும் எங்கள் மார்புகளின் மேல் படிந்திருந்த அந்த உடலற்றப் பார்வை விலகிவிட்டதான உணர்வை நாங்கள் இன்னும் பெறவில்லை. வெளியே வந்ததும் யோகா தன்னுடைய ஓட்டுநருக்குத் தகவல் சொல்லி வண்டி வருவதை உறுதி செய்து கொண்டுவிட்டாளெனினும் காத்து இருக்கும் நேரத்தில் நாங்கள் குறைந்தபட்சம் விடுதி வாசலிலிருந்து அப்பால் நகர்ந்து செல்லவாவது ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துத் தவிப்புடன் மழைக்குள் பார்வையால் துழாவிக்கொண்டிருந்தோம் (விடுதி யுமே ஏதோவொரு விளங்காத முணுமுணுப்பால் எங்களை வழியை அடைத்துக்கொண்டு நிற்காமல் அகன்று போகச் சொல்லி அரற்றிக்கொண்டேதான் இருந்தது). நெடுநேரம் இப்படியே கடந்துபோனது.
பிறகு மினுதான் (மினு ஒரு படிமி. நடிகையாக முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். அரசு விமரிசனச் சிந்தனைகளைக்கொண்ட பெண் என்றும் அவ்வித மான சிந்தனைகளை உள்ளடக்கிய சிறு திட்டப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவளென்றும் சில தலைமறைவுக் குழுக்களுடன் ரகசியத் தொடர்பி லிருப்பவளென்றும் (தகுந்த ஆதாரங்களில்லாமல், அல்லது ஆதாரங்களெதையும் விட்டுவைக்காமல்) அறியப்பட்டிருக்கிறாள் சாலையின் எதிர்ப்புறம், விடுதி வாயிலிலிருந்து ஒரு இருநூறு மீட்டர் தொலைவில், நீர்த்திரையின்மேல் வரையப்பட்ட அபத்த ஓவியத்தைப்போலக் குத்துவாக்கில், ஏழெட்டு அடி உயரம் இருக்கலாமென்று கணிக்கத்தக்க கருப்பு உருப்படியொன்று உயர்ந்திருந்ததை எங்களுக்குச் சுட்டிக்காட்டினாள். ஏதோ ஒரு கட்டிடத்தின் திறந்துகிடக்கும் வாயிலைப்போலத்தான் முதலில் அது எங்களுக்குத் தோன்றியது. அதுதானா என்பதை அவதானித்துக் கொள்ளும் எத்தனிப்புடன் நாங்கள் அதை நீர்த்தாரையை ஊடுறுவி பார்த்துக்கொண்டிருந்த நிமிடங்கள் முழுவதிலும் (அப்போதைய மனநிலையில் அதைஉற்றுப் பார்க்கப் பார்க்க அந்தத் தோற்றத்தை ஒரு பெரும் மலையின் அடிவாரமாகவோ அல்லதுஒரு குகையின் முகப்பாகவோ தான் எங்கள் மனதில்உள்வாங்கிக்கொள்ள முடிந்தது) அதன் இருப்பிலோ அல்லது அதன் முன்புறத்திலோ எந்தச் சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. மழைக்காக ஒதுங்கியிருக்கவேண்டியவர்கள் ஏற்கெனவே புகலிடங்களைக் கண்டுகொண்டிருந்து இருப்பார்களாதலால் அந்த வாயில் வெறிச்சோடிக் கிடப்பதாயும் எங்களுக்காகவே அது தன்னை விரியத் திறந்துவைத்துக் காத்துக்கொண் டிருப்பதாயும் நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொண் டோம். முதுகின் பின்னே விடுதியின் இருப்பும் முள்ளாக உறுத்திக்கொண்டே இருந்ததால் அவ்விடத்திற்குச் சென்று ஒதுங்கி அங்கே எங்கள் வண்டிக்காகக் காத்திருப்பது என்றும் முடிவு செய்தோம். ஒரு சில வினாடிகள் மழைக்குள் எங்களை மூழ்கடித்துக்கொள்வதற்கும் குழப்பமான அந்தக் கரிய பொருளை நெருங்குவதற்கும் எங்களை மனதளவில் ஆயத்தப்படுத்திக்கொண்ட பிறகு ஒருவர் பின் ஒருவராக விடுதிப் படிகளிலிருந்து நழுவி அதை நோக்கி ஓடத் தொடங்கினோம். ஓடும்போதே அப்படிஎங்களை மழைக்குள் விரட்டிவிட்ட மர்மப் பார்வையின் பிடியிலிருந்து தப்பிவிட்ட உணர்வை அடைவதன்மீதும் கவனங்குவிக்க முயன்றோம். ஆனால்எங்களுக்கு நிகழவேண்டியது நிற்காமல் நிகழ்ந்து கொண்டுதானிருந்தது. ஓடும் கதியிலேயே நாங்கள் எங்கள் உடலைப் பழையபடி சுமையற்றதாக உணர்வதற்குப் பதிலாகக் கூடுதல் சுமையில் திணறுவதாக உணர்ந்தோம். உண்மையில் அந்தப் பார்வையிலிருந்து அகல்வதற்குப் பதிலாக நேரே அந்தப்பார்வையை நோக்கியேதான் நாங்கள் விரைந்துகொண்டிருந்தோமென்பதை நாங்கள் தெரிந்துகொள்வதற்குள் விடுதி வாயிலுக்கும் அந்தக் கருப்புப் படிமத்திற்குமிடையிலிருந்த தொலைவை எங்கள் ஓட்டம் கரைத்துவிட்டிருந்தது. நாங்கள் அங்கே பார்த்ததை நாங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பார்வையை, அதற்குரிய உடலை, நேருக்கு நேராக, கண்ணோடு கண்ணாக நாங்கள் வலியப்போய்த் திடீரென்று எதிர்கொண்டிருந்தோம். ஒரு மனித உருவமாக இருக்கலாமென்கிற ஊகத்திற்குச் சிறிதளவு கூட இடம் தராத நிறத்துடனும் உயரத்துடனும் வடிவத்துடனும் அங்கே நின்றுகொண்டிருந்தது ஒரு ஆணுருவம். மேலும் அவன் (இந்த வார்த்தையை நான் மிகச் சிரமப்பட்டுத்தான் உச்சரிக்க வேண்டியிருக்கிறது, ஒரு பரிணாமப் பொருளில் அந்த உருவத்தை, தொடர்ந்து அதனுடன் நடத்திய சிறு உரையாடலோடும் பொருத்திப் பார்த்தால், அதை உயர்திணையில் அழைக்கவோகற்பனை செய்யவோ இன்றும் எங்களுக்குத் தயக்கமிருக்கிறது) எங்களை எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தவனைப் போலவும் அவனுடைய அழைப்பின் பேரில்தான் நாங்கள் அவனை அணுகினோம் என்பதைப் போலவும் எங்களைப் பார்த்துப் புன்னகையும் செய்தான். மின்னலடித்ததைப் போல மழைக்குள்ளிருந்து அந்தச் சிரிப்பு எங்கள்மேல் பாய்ந்தது. நெருங்கிநிற்பது ஒரு மனித உருவம், அதிலும் ஒரு ஆண், அதிலும் தன்னை மறைத்துக் கொள்ளாமல் உடனேதன்னை எங்களிடம் வெளிப்படுத்திக் கொண்டுவிட்ட அதே பார்வைக்கு உரியவன் என்கிற அதிர்ச்சி எங்களைத்தொடர்ந்து முடிவெதையும் எடுக்கவிடாமல் செயலிழக்கச் செய்த தென்றால், கூடுதலாக அவனுடைய அசாதாரணமான உயரமும், அசாதாரணமான நிறமும், அசாதாரணமான உடலமைப்பும் (அந்த மாதிரியில்இன்னொரு உருவத்தை இந்த நிலத்தில் உங்களால்கண்டுபிடித்துவிட முடியாது என்று இப்போதும்எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்)தந்த வியப்பு அங்கிருந்து நகர்ந்து செல்வதற் குரிய விருப்பமென்று ஏதாவது இருந்தால் அதை யும் சுத்தமாக எங்களிடமிருந்து உறிஞ்சிவிட்டிருந்தது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அவனுடைய பார்வையின் அச்சுறுத்தலை (உண்மையிலேயே நாங்கள் அச்சமடைந்தோமா அல்லது அந்தப் பார்வையைத் தேடிக் கண்டடையும் தவிப்பை அச்சவுணர்வு என்று எண்ணிக்கொண்டு விட்டோமா) அவனுடைய பிரசன்னம் தணித்து விட்டிருந்தது. நாங்கள் அவனை நெருங்கிய வுடனேயே எங்களை அங்கே கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்ததைப்போல எங்கள்மார்புகளின் மீதிருந்த தன் பார்வையை விலக்கி அதை எங்கள் பார்வைகளுக்குள், அவற்றைவிலக்கிக்கொள்ள முடியாதபடி, சொருகி விட்டிருந் தான். மேலும் அவனை நாங்கள் நன்றாகப் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதைப்போலவும் (அவன் முகம் எங்களிடமிருந்து விலகிமிக உயரத்தில் மிதந்துகொண்டிருந்தது, அவனருகில் நாங்கள் எங்களை அவன் காலடியில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளாக உணர்ந்து கொண்டு இருந்தோம்), அவன் ஏதோ ஒரு குடையை எங்கள்தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருப்பதைப் போலவும், அல்லது உயர்ந்து பரந்திருந்த அவனுடைய ஆகிருதியே ஒரு மழைத் தடுப்பாகஎங்களைத் தனக்குள் பொதிந்துகொண்டு இருந்ததைப் போலவும் நாங்கள் நின்றிருந்த இடத்தில் மழையற்றிருந்தது. எங்களுடைய உடைகள் நாங்கள்ஓடி வந்த ஒரு சில வினாடிகளில் பெரிதாக நனைந்து விடவில்லையாயினும் அவனருகில் நின்றிருப்பதில் நாங்கள் மனவலம்பலை உணர்ந்தோம். ஏதோ எங்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அபூர்வப் பொருளைப்போல எங்களருகில் நின்றிருந் தான் அவன். இறுதியில் யோகாதான் துணிவை வரவழைத்துக்கொண்டு அவனை அண்ணாந்து பார்த்துயார் நீ என்று கேட்டாள். ஒரு தடவையல்ல, இரண்டு மூன்று தடவைகள் அவள் திரும்பத் திரும்ப அந்தக் கேள்வியைக் கேட்ட பிறகு கண்ணன் என்றான் அவன் குனிந்து எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே.
“லேய் முக்கா! டீப் லெக்ல போய் நில்லு.”
“குமாரண்ணே! யாமுன்ணே இப்படிச் செய்ய? நான் கீப்பிங் நிக்கேன்.”
“நல்ல வாயில வரும், பேசாம போய் நில்லு! லேய் கண்ணாடி! பஸ்ட் ஸ்லிப் வேண்டாம். நீ கீப்பிங் வா.” முந்தைய நாள் குமாரின் பந்துவீச்சில் சுஹைப் தவறவிட்ட கேட்சை அனைவரும் மனதில் நினைத்துக்கொண்டனர்.
ரன்னர் எண்டில் நின்ற குமாரின் அண்ணன் தமிழ் “எதுக்குல அவனைப் புடிச்சி எசலிட்டேயிருக்க?” என்று கேட்க, “நீங்க பொத்திட்டுப் பேட்டிங் பண்ணுங்க. எங்க டீமுக்குள்ள பேசிக்கிடுவோம்“ என்றான் குமார்.
சுஹைப் கீப்பிங்கை விடுத்து, முனகிக்கொண்டே டீப் லெக் தென்னையின் நிழலில் நின்று “கமான் காமன்! ஈசி விக்கெட்” என்று கீப்பிங் பழக்கத்தால் உரக்க கத்தி முன்னோக்கி நடந்து வந்தான். சுற்றிலும் விதைக்கப்பட்ட முன்னிரவு, அதிகாலை மலங்கள் ஈக்களால் மொய்க்கபட்டுக் கொண்டிருந்தன. வீச்சத்துக்குப் பழக்கப்பட்ட நர, பன்றி மூக்குகள் சிறியதும் பெரியதுமாய் நாள் முழுக்கப் பூங்காவில் மூச்சிழுத்துக்கொண்டிருக்கும். முன்னாள் பூங்கா வீதி பூங்கா இன்று பீ பார்க். செவ்வக வடிவ பூங்காவில் இடது மேல் ஓரத்தில் இருந்த பாலர் பள்ளியில் பெரும்பாலும் நந்தவனத்தெரு குழந்தைகள் மூக்குஒழுக அழுதும், ஏங்கியும், ஜன்னல் வழியே கிரிக் கெட் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நந்தவனத்தெருவின் பின்னிருந்த நந்தவனமும் பீ பார்க்கின் சிறுகிளைப் போன்றே சிறப்பாகச் செயல் பட்டுக்கொண்டிருந்தது. பூங்காவும், நந்தவனமும் அனைத்துச் சாதி மக்களின் மலங்களால் செழித்திருந்தன. பன்றிகளுக்குச் செம்மையான கோள்.சுற்றத்தின் உழைப்பில் குறைவற்ற விருந்து. பார்க் சுவரின் சுற்றிலும் சிறுநீர் உறிஞ்சி உயர்ந்த தென்னைகள் விளையாடுபவர்களின் சோர்வுக்குத் தங்களாலான நிழலளித்தன. அவ்வப்போது தெங்கு களையும் உதிர்த்தன.
பார்க்கின் வலது மேல் ஓரத்தில் கஞ்சா இழுப்போர் தங்களுக்கான இடத்தைப் பதிவுசெய்து கொண்டனர்.
ஸுஹைபால் ஆறு ஓவர்களும் டீப் லெகில் நின்று சில ஓட்டங்களை தடுக்கமுடிந்தது. மேலும் ஒரு டிரெக்ட் ஹிட்டில் ராஜாராமை அவுட் செய்ய முடிந்தது. பீல்ட்டிங் நிற்பதே அவனது விருப்பம். என்றாலும் பந்துவீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற வருத்தமும் ஓரத்தில் ஊறிக் கரைந்தது. இலக்கு 6 ஓவர்க்கு 58 என்று நிர்ணயிக்கபட்டிருந்தது. தனக்கு ஒரு ஓவர் அளித்திருந்தால், குறிப்பாக அந்தக் கடைசி ஒவரில் 22 ரன் போயிருக்க வாய்ப்பே இல்லை. குமார் அண்ணன் கண்டிப்பாகத் தன்னைப் பேட்டிங் கடைசியாகத்தான் இறங்க சொல்லுவான். அனைவரும் பாலர் பள்ளியின் வெளி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் ஓய்வு எடுத்தனர்.
“யாருக்கெல்லாம் ரஸ்னா வேணும்?” என்று சுனில் கேட்டவுடன் வியர்த்த கருத்த 4 கைகள் உயர்ந்தன. அவன் நாலு எட்டு வைத்ததும், மேலும் இரண்டுரஸ்னா எண்ணிக்கை சேர்ந்துகொண்டது.
கடைசி ஓவரில் லேகா பாலு அடித்த மூன்று சிக்ஸர்களை நினைத்துப்பார்த்தான் குமார்.
“லேய் திரும்பத் திரும்ப சொன்னேன்ல ஓபி போடாத போடாதனு, அவனுக்கு அது ஒன்னுதான் கனெக்ட் பண்ண தெரியும். ஆப்சைடு தூக்கி போட வேண்டியதுதான?” என்று ஷாஜியைக் கேட்டான்.
“தெரியலனே பால் கிரிப் இல்ல போல, அதா” என்று கூறி மீதி பதிலை குமாரின் முகம் பார்க்காமல் விழுங்கினான்.
சுஹைப்புக்கு குமார் அண்ணன் ஏன் தன்னையே குறிவைக்கிறான் என்பது நன்றாகத் தெரியும். கடந்தமாத பெட் மேட்சில் மாணிக்கம் அண்ணன் எதிர்பார்த்தபடி குமார் அண்ணன் பந்து வீச இயலாமல் “பால் கிரிப் கிடைக்கல” என்று கூற,தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 3 ஓவர் களில் 4 விக்கெட்கள் வீழ்த்திய ஸுஹைபை மாணிக்கம் அண்ணன் மனதார புகழ்ந்தான். கூடவே அன்று பயன்படுத்தப்பட்ட பந்தையும் அவனிடமே கொடுத்தான். மறுநாள் மாலை நேர பயிற்சிக்குப் பின் நடந்த அரட்டையில் அணியில் விளையாடுவோர்களின் “மசை”களைப் பற்றிய உரையாடலில் குமார் அண்ணன் முதலில் சோழவராஜாவை இழுத்தான்.
“கிளி இன்னும் டியூஷன் விட்டு கௌம்பலபோல?”
“நீ சும்மா இரியாண்டே! கிளிய நம்ம மட்டும்பார்த்தா போதுமா? நமக்கு அந்த மேஜிக் எல்லாம் தெரியாத கிளிக்குக் கண்ணு யார் மேலயாக்கும் தெரியுமா?” என்று சோழவன் ஸுஹைபை நோக்கி கண்காட்டினான்.
குமார் அண்ணனுக்கு அது போதாதா? “லேய்! ஸுஹைபு... முக்கா மாமா. அண்ணே அண்ணேனு சொல்லிக்கிட்டு அண்ணிக்கே லைன் அடிக்கியால?” என்று கூற அனைவரும் வெடித்துச் சிரித்தனர். “முக்காமாமாவா?” என்று மலைச்சாமி உரக்க கூறிச் சிரித்தான்.
“அதெல்லாம் ஒன்னில்லணே. சோழவண்னே சும்மா இருக்கமாட்டியா? நான் கௌம்புகேன் நேரமாயிட்டு” என்று கூறி ஓட, அனைவரும் சேர்ந்து “முக்கா மாமா” என்று கூவினார்கள். அவர்களின் கூவலின் அர்த்தம் அடுத்த நாள் காலை வெளிக்குப் போய்க்கொண்டிருந்தபோது புரிந்தது. என்றாலும் அணியில் உள்ள யாரையும் அவன் எதிர்கேள்வி கேட்டு பழக்கப்படவில்லை. அன்றிலிருந்து தன்னை ‘முக்கா’வுக்குப் பழக்கிக்கொண்டான்.
ஆட்டம் வெகு விரைவில் முடிந்துவிடும் போலிருந்தது. நாலு ஓவர்களில் 48 ரன்கள் அடித்து விட்டாகியது.
“ஸுஹைபு... மக்கா. ஸுஹைபு” பார்க்கின் வாசல் அருகே நின்று கையசைத்து அழைத்தார் ஸுஹைபின் தந்தை நைனா முகமது. வடக்கிலிருந்து வீசிய காற்றில் மென் சிறுநீர் வீச்சம் ஸுஹைபின் மூக்கிற்கும், தந்தையின் அழைப்பு காதுக்கும் எட்டின.
“குமார் அண்ணே, எங்க அப்பா கூப்டுகு, போயிட்டு வரேன்” என்றவாறே எழுந்தான். அவனது கால்கள் செருப்புடன் உறவாடி ஓட தயாராகின. “போய் வா” என்பதாய் ஸுஹைபுக்கு தலையசைத்து “ஈஸி வின்னிங்., ரெண்டே ரன்தான்” என்று கூவினான்.
“டீம்ல எடுத்துப் போடுணே இப்போ வந்துருவேன்” என்று கூறிக்கொண்டே பார்க் வாசலை நோக்கி ஓடினான் ஸுஹைபு.
“என்ன பா!” நைனாவின் கையில் கேஸ்ட்ரால் காலி கேன் இருந்ததைக் கொண்டு ஒருவாறு கணித் திருந்தான் ஸுஹைபு.
“மக்கா! காலைல சொன்னேம்லா. இப்போ கடை கொஞ்சம் கூட்டமில்ல பார்த்துக்கோ, போய் வாங்கிட்டு வந்துரு” - நைனா.
“யப்பா! ஏம்பா அவளோ தூரம் போகச் சொல்லுஹ, ஒன்னோட ஒரே செரையா இருக்கு.”
“இந்த வெயில்ல எரிச்சல் படுத்துஹாப நீ” ஸுஹைபு.
“மக்கா ஒரே ஓட்டத்துல போய் வாங்கிற மாட்டியானி. ஒரு ஓட்டம்டே. நேத்துகூட அம்மா பொண்ணு வீட்ல வடை வாங்க போயிட்டு பத்து நிமிஷ வேலைய ரெண்டே நிமிஷம் சிட்டா பறந்து வந்துடேலா, ஒரே ஓட்டம்டே, அம்ம வேற கத்திக்கிட்டே இருக்கா” என்றவாறு கேனை கைகளில் திணித்தார். தனது சட்டை மேல் பாக்கெட்டில் இருந்து பல ஓட்டைகள் கண்ட ரேஷன் கார்டை ஸுஹைபிடம் கொடுத்தார். வேண்டா வெறுப்பாக இரண்டையும் வாங்கிக்கொண்டு போகத் தயாரானவனை “மக்கா! கொஞ்ச தண்ணி அடி கைகால்கழுவிகிடுகேன்” என்று பார்க்கின் வெளிப்புறம்இருந்த அடிபம்பை நோக்கி நடந்தார் நைனா.
அருகிலிருந்த கிணற்றின் மேல் கேனை வைத்து விட்டு, பம்பினை துள்ளி துள்ளி அடித்தான். மேட்ச் முடிந்துவிட்டது போலும்.
“மக்கா கொஞ்சம் தெம்பா அடி.”
இன்னும் உயரம் துள்ளி வேகமாக அழுத்தினான். தண்ணீரை கையில் ஏந்திதன் முகத்தில் தெளித்தும் முழங்கை வரை தண்ணீரை விட்டும் கழுவினார். பாதங்களை அடியில் கிடந்த கருங்கல்லில் அழுத்தி தேய்த்து அழுக்கினை போக்கினார். “ மக்கா! நீயும் வா,கைகால் கழுகிட்டு போ” என்றார்.
“வேண்டாம். நா வீட்டுக்கு வந்து கழுவுக்கேன்.”
“சும்மா வாடே ஒரு நிமிஷம்” என்று நைனா பம்ப் அடித்தார். நைனாவுக்கு மூச்சி வாங்கியது. “போதும்பா கழுவிட்டேன்.”
“டே காலக் கழுகுடே” அழுத்தி அடித்தார் நைனா.
கழுவி முடித்ததும் தன் தோளில் கிடந்த துண்டை கொடுத்தார். வாங்கி லேசாகத் துடைத்துக்கொண்டு கேனை எடுத்து நடக்கத் தொடங்கினான்.
“மக்கா, நில்லு”
“என்னப்பா?”
“வரும்போது பக்கத்து நாடாங்கடையில பாப்பாக்கு மட்டிப்பழம் மூனு வாங்கிக்கோ, அப்டியே ஒரு சர்வத்தும் குடுச்சிக்கிடு என்னா” என்று ஐந்து ரூபாயை அவனது பாக்கெட்டில் சொருவினார். ஸுஹைபு சவேரியார் கோவில் தெரு திசைநோக்கி நடந்தான். குறுந்தெரு தாண்டி செல்கையில் ஏனோ கடைக்குப் போவது பிடித்திருந்ததாய் தோன்றியது. ஆனால் ஏன் அப்பாவுடன் எரிச்சல் என்று பிடிபடவில்லை. அம்மாவிடமும் கடைக்குப் போகச்சொல்லும் போதெல்லாம் இதே கூத்துதான்.
தெருவின் இடப்பக்கமிருந்த கசாப்பு கடையின்கூரைக்கம்பில் ஆட்டின் ஈரல் தொங்கிக்கொண்டு இருந்தது. ஆட்டின் தலைகள் இரண்டு, பெரும் அடி மரத்துண்டின் மீதிருந்தன. அதில் ஒரு ஆடு நாக்கை வேலியை விட்டபடி சிரித்த வண்ணம். வானம் நோக்கி ஏதோ யோசிக்கும் தருணத்தில் வீழ்த்தப்பட்ட ஆடுகளின் நான்கு கண்கள்.
ஸுஹைபுக்குக் குலசேகரநங்கை அம்மன் கோவில் தெருவின் இடப்பக்கம் திரும்பியபோது விர்ஜின் வீட்டைக் கடக்கப்போகிறோம் என்ற எண்ணம், சிறிது கிளர்ச்சி ஊட்டியது. சனிக்கிழமை அதுவும் மதியம் வீட்டில் இருக்கத்தான் வாய்ப்பதிகம், அவள் வீட்டைக் கடக்கும் கணத்தில் கேஸ்ட்ரால் கேன் இடக்கைக்கும், கண்கள் வலப்புறமும் சென்றன. “ஏசு அழைக்கிறார்.... ஏசு அழைக்கிறார்...” வழக்கம் போல் வரும்போது ஒருவேளை வாய்ப்பிருக்கலாம்.
ரேஷன் கடை வரிசையில் மூன்று பேருடன் நான்காவதாகப் போய் நின்றான். அந்த மொட்டை வெயிலிலும் சவேரியார் கோவில் சுடுமணலில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். பார்க்கில் அடுத்த ஆட்டம் ஆரம்பித்திருக்கலாம்? அவன் பின்னால் மேலும் ஒருவர் வந்து நின்றார். வரிசை குறைவதாய்த் தெரியவில்லை.
“அண்ணே! இங்க கேன் வச்சிகிட்டுப்போறேன். இரண்டு நிமிசத்தில வந்துருவேன். கொஞ்சம் பார்த்துக்கிடுங்க” பின்னால் நின்றவரிடம் கேட்டான் ஸுஹைபு.
“செரி! சீக்கிரம் வந்துருடே” என்றார். கேனை வைத்துவிட்டு சித்ரஞ்சன் தாஸ் கடைக்கு எதிரில் இருந்த நாடார்கடையைச் சேர்ந்தான்.
வெளியில் தொங்கிய ஏத்தம், செந்தொழுவன், கதலி, மட்டி, மோரிஸ், பேயன் குலைகளைக் கடந்து,வலப்பக்கம் நனைத்த வெத்தலை, இடப்பக்கம் சோடா பாட்டில் டிரே. நடுவில் ஒரு ஆள் நிற்பதற்கான இடம் மட்டுமே இருக்க, அங்கு நின்றவன்பின் நின்று ஸுஹைபு “அண்ணே! மூணு மட்டினே”என்றான். கடையின் இருளிலிருந்து வெத்தலை குதப்பியவாறு நாடார் கைகளில் இரண்டு சோடா போஞ்சுடன் வந்தார்.
“இந்தா. அடுத்து என்னடே மட்டி மட்டும்தானா?” என்று கேட்டார்.
“ஒரு சர்வத். சோடா சர்வத்.. மஞ்ச”
இருளில் புகுந்தார். கையில் சோடா போஞ்சு சர்பத்துடன் வந்தார். காசு கொடுத்துவிட்டு, அடிக்கும் வெயிலுக்கு ஒரே அடியில் சர்பத்தைக் குடித்து முடித்தான். மேலும் காசிருந்தால் இன்னும் ஒன்று குடித்திருக்கலாம். முன்தின மாலைமுரசினுள் மட்டிகள் அடங்கின. ஓடி சென்று சரியான நேரத்தில் வரிசையில் இடத்தைப் பிடித்துக்கொண்டான். மண்ணெண் ணெய் கவனமாக அளவு குறைத்து ஊற்றப்பட்டது. கேனை இறுக மூடி அதன் மேல் கடையில் அருகில் கிடந்த வெள்ளை பிளாஸ்டிக் கவரால் கட்டி தூக்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தான். விர்ஜின் வீடு பூட்டியிருந்தது. கசாப்புக் கடையில் நாக்கு வெளி தள்ளிய தலையின் கண்களில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. கடைக்காரர் ரத்தம் தெறித்த முண்டா பனியனுடன் கூரையினுள் அமர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தார். வீட்டுக்கு போகும் முன் இன்னும் ஆட்டம் தொடர்கிறதா என்று பார்க்கை ஒரு பார்வை இடலாம் என்று பார்க்கை அடைந்தான். பிட்சில் பேட்டிங் எண்டின் மூன்று ஸ்டம்புகளும், ரன்னர் எண்டின் கருங்கல் மட்டுமே தென்பட்டன. மண்ணெண்ணெய் மனம் சலித்துப்போயிருந்தது. பார்க் வாசலில் இருந்த ட்ரான்ஸ்போர்மரின் கீழ் செடிகளின் நடுவே தூங்கிக்கொண்டிருந்த கொழுத்த பன்றி எழுத்து, சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் துயின்றது. பசி வயிற்றை உரச, வீடு நோக்கி வேகம் பிடித்தான் ஸுஹைபு.
“உம்மா! இதை எங்க வைக்கது?” என்று நடையில் நின்று கூவினான். மீன்குழம்பின் கொதிப்பு மேலும் பசியேற்றியது.
“அங்கன வச்சிட்டு கைகால் கழுவிட்டு உள்ள கேறு” என்றாள், “நாள் முழுக்கப் பீ காடு, எரிய வெயிலு, என்ன கொண்டாட்டமோ?” என்று அடுக் களையில் வேலையின் நடுவே முணுமுணுத்தாள். அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து பனை ஓலை விசிறியால் காற்றை அலைந்துகொண்டிருந்தார்.
மிதியடியில் பாதத்தின் ஈரத்தை நன்றாகத் துடைத்து, “உம்மா! வயிறு பசிக்கி. எப்பா, பேன்போட வேண்டியதுதானா?” என்று ஸ்விட்ச் பக்கம் போனான்.
“லேய்! லேய்! வெக்க காத்து தான் வருகு.பேசாம இரு. மொதல்ல பழத்த குடு, ரேஷன் கார்டு எங்க?” என்றார் நைனா.
“எதுக்குப் பறக்க? இந்த இருக்கு.” பாண்ட் பாக்கெட்டில் இருந்து விழுந்த 50 காசை மேல் பாக் கெட்டில் போட்டு அடுக்களையினுள் நுழைந்தான். ருக்ஷனா உம்மாவின் சேலையைப் பற்றிக்கொண்டு நின்றாள்.
“ருக்கு. வா வா வா... பழம் சாப்டுகியா?” நைனாகுரல் கொடுத்தார். குழந்தை அண்ணனை இடித்து விட்டுத் தத்தகா புத்தகா என்று அப்பாவிடம் ஓடியது.மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தைத் திறந்து “சூரன் செமையாட்டு கொதி. ஹ்ஹ்ம். நல்ல மனம். உம்மா வேற என்ன?”
“ஹ்ஹ்ம்... அடுப்புக்கரி. எவளோ மட்டம் சொல்லிருக்கேன். நீ வேலைய முடிச்சிட்டு போய் பந்தடினு” என்று கொழம்பு கரண்டியால் ஓங்கினாள் உம்மா. அதே கண்கரண்டியைக் கொண்டே அருகில் மூடியிருந்த பாத்திரத்தைத் திறந்து கிண்டிவிட்டாள்.
“அடிபொலி நெத்திலி அவியலும் உண்டு” என்றுஉம்மாவின் தோள்பற்றி, “அதான் வேலைய முடிச்சாச்சுலா?” என்றான் ஸுஹைபு.
“என்னத்த கிழிச்சியோ? படிக்கத கோட்டவிட்டுறாத, எதோ இப்ப தான் கொஞ்சமாட்டு வருகமாறி இருக்கு” என்றவாறு தட்டத்தில் சுடுசோறு போட்டு, மேல் கறுத்த மீன்குழம்பை ஊற்றி, நல்ல துண்டத்தை உம்மா தேட, “அந்தத் துண்டம் போடு, இது இது இந்தச் சின்னத் துண்டும்” என்று ஸுஹைபு சுட்டினான். “அவியல நானே வச்சிக்கிடுகேன், கரண்டியைக் குடு” என்றான்.
“ஒண்ணு வேண்டாம், அஞ்சு பேரு சாப்பிடணும், நீரு அள்ளி கொட்டிட்டு போவேறு” என்று தட்டத்தைப் பிடுங்கி ஒரு பகுதி நெத்திலி அவியலை வைத்து, “போய் சாப்டு” என்றாள் உம்மா.
மச்சிப்படியின் கீழிருந்த மரக்கட்டிலில் சம்மணங் கொட்டி அமர்ந்து, தட்டின் நடுவுல இருந்த மாந் துண்டினையும், எண்ணெய் குளித்த கருவேப்பிலை களையும் தட்டின் ஓரத்தில் ஒதுக்கி, விரவிய சோற்று உருண்டையின் மீது நெத்திலி அவியலை வைத்து உண்டான். உண்ட வேகத்தில் புரையேறியது.
“மெள்ள மெள்ள! தண்ணிய குடியாண்டே” என்றார் நைனா மட்டிப்பழத்தின் பாதி அவர் இடக்கையில் இருந்தது.
தலையைத் தட்டிக்கொண்டான். கண்களில் நீர் கோர்க்க, கழுத்திலிருந்து வியர்வை ஸுஹைபின் சட்டைக்குள் ஊற்றியது. பசியின், ருசியும் சேர்ந்து சூரையோடும், நெத்திலியோடும் விளையாடின. தலை குனிந்து, உடல் வளைத்து பெரும் ஏப்பம் ஒன்றை வெளியேற்றினான்.
“உம்மா! ரசம் உண்டா?”
“நேத்தைக்க ரசம்தான் இருக்கு? இங்க மூடி வச்சிருக்கேன்” உம்மா அடுக்களையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இடக்கையால் அடுப்பைச் சுட்டினாள். சிறிது சோறும், ரசமும். மூன்று வாயில் சோற்றை முடித்து, தட்டையேந்தி ரசம் குடித்தான்.
“ரசம் நல்ல வொரப்பு” என்று மூக்கை உறிஞ்சிய வாறு தட்டு, மற்றும் கையைக் கழுவி, ஈரத்தை பேண்டில் துடைத்து, “வாப்பா! மாணிக்கம் அண்ணே உன்ன பார்க்கணும்னு சொல்லுச்சி” என்று கட்டிலில் அமர்ந்தான் ஸுஹைபு.
“என்னயவா? எதுக்கு மக்கா?”
“தெரில, பேசணும்னு சொல்லுச்சி. எதுக்குனு தெரில.”
“எதாவது எலவ இழுத்துட்டு வந்துராத மக்களே!” என்று உம்மா குரல்கொடுத்தாள்.
“உம்மா அதெல்லாம் ஒன்னுமில்ல, நீ சும்மாகெட. வாப்பா என்ன சொல்லுகது?” என்றான் ஸுஹைபு.
“திங்க கிழம வாப்பா வருவானு சொல்லு” என்றார் நைனா. ருக்ஷனா அவர் நெஞ்சில் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“செரி, நா மேல போய் கொஞ்சம் முதுக சாய்க்கேன்.” ஸுஹைபு தலையணையுடன் படிகள் ஏறினான்.
“பிள்ளைக்கு மண்டைக்காட்டுல கைவாங்கிப் போடணும் மறக்காம?” என்று நைனாவிடம் நினைவு படுத்தினாள் உம்மா.
“ஹ்ம்ம்! சாப்பிடுகேலா?”
“துஅ முடிச்சிட்டு வந்துருகேன். இந்தப் பய அந்த வழக்கமெல்லாம் பீகாட்டுல கரைச்சிட்டான்போல” என்று வாப்பா சொன்னது ஸுஹைபுக்கு கேட்டது. உண்ட மயக்கமும், உடல் சோர்வும் அனல்காற்றைக் கண்டுகொள்ளவில்லை.
மாலை நான்குமணி வெயிலின் சூடும், மணமும் ஸுஹைபுக்கு பெரும்பாலும் தலைவலி அளிக்கும். அன்று தலைவலி இல்லை என்பதே ஸுஹைபுக்கு ஆறுதல் அளித்தது. வாப்பா படிகளில் ஏறும்போதே குரல்கொடுத்தார் “மோனே! ஸுஹைபு சாயா குடிக்கலயா” என்று வார்த்தைகளுக்கு நடுவே மூச்சி வாங்கினார்.
கண்களைக் கசக்கி, சாரத்தைச் சரி செய்து எழுந்து அமர்ந்தான்.
“நா கீழ வருவேம்லா.”
“இருக்கட்டும் மக்ளே, குடி.”
வாப்பா போட்ட சாயா தான். உம்மா பட்டை, கிராம்பு சேர்த்து மணமாய்க் கொடுப்பாள். இனிப்பின் அளவு ஒருநாளும் தப்பியதில்லை.
“சாயா நல்ல இருக்கா?”
“ஹ்ம்ம்... உம்மா எங்க?”
“பிள்ளைய தூக்கிட்டு காத்தாட போயிருக்கா.”
“ஹ்ம்ம்” நைனாவின் உடல்மொழி ஸுஹைபுக்கு எரிச்சலூட்டியது. கிழமைகளை மனதில் கணக்குப் போட்டுப்பார்த்தான்.
“மற்றபடி, கயிறு இழுக்கணும், ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம், என்ன மக்கா ?” என்றார் நைனா.
“வாப்பா நீ சள்ள படுத்தாத பார்த்துக்கோ. என்னால முடியாது. போய் தூண கட்டிட்டு அழு” ஸுஹைபு சிவப்பு டைல்ஸ் பார்த்த வண்ணம் சாயா குடித்துக்கொண்டே கூறினான்.
“உம்மா வந்த உடனே ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம். செரி ஒரு ரெண்டு நிமிஷம் மக்கா” என்று நைனா கெஞ்சினார்.
“அத செஞ்சே ஆகணுமா? நிறைய இருக்குலா, சின்னப்பிள்லேள்தான, வாயில இருந்து கலர் பேப்பர் இழு, தொப்பி, கலர் பூக்கூட, முட்ட, கோமாளினு நெறைய இருக்குலா. பின்ன எதுக்கு இத பிடிச்சிட்டு தொங்குக. என்னால முடியாது. வேணும்னா உம்மாவையும், உங்குட்டியையும் பிடிக்கச் சொல்லு” என்று எரிந்து விழுந்தான் ஸுஹைபு.
நைனா பொறுமையாய் படியிறங்கி சென்றார்.
சொல்லிருக்கக்கூடாதுதான், வாப்பாவுக்கு வேறு போக்கில்லை. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் எதிர்வினை இப்படியே தான். இம்முறை என்ன செய்வார்? ஸுஹைபின் அடிவயிற்றிலிருந்து நெத்திலியின் புளிச்ச ஏப்பம் குமட்டி அடங்கியது.
வாயிலில் குட்டியின் குரல் கேட்டது.
“என்னா எந்திரிச்சாச்சா?” என்று உம்மா வாப்பா விடம் ஸுஹைபை கேட்பது புரிந்தது. ஸுஹைபு காதை நன்றாகத் தீட்டிக்கொண்டும் யாதொரு பயனுமில்லை. அவர்களின் கிசுகிசுக்கும் மொழி அவர்களுக்கே வெளிச்சம்.
“குட்டி.. இந்தா கயிறைப் புடி... இங்க தும்பு கிட்ட, நீ இந்தப் பக்கம்” வாப்பா ஸுஹைபு சொன்னபடி உம்மாவையும், குட்டியையும் கயிறு பிடிக்கச்சொல்வது ஸுஹைபுக்கு எரிச்சலூட்டியது. என்னவாக இருந்தாலும் சரி இந்தமுறை கயிறை தொடப்போவதில்லை என்று தன்னிடம் கூறிக் கொண்டான். ஏன் இவருக்கு இந்தச் சோலி?. ஒரு முறைகூடத் தப்பியதில்லை என்று பலவருடங்கள் மார்தட்டிக்கொண்டிருந்த வாப்பாவின் வித்தை, போன செப்டம்பர் மாதம் டிவிடி பள்ளியில் ஆட்டம் கண்டது. அன்று முதல் இந்த ஒன்றை மட்டும் ஒத்திகை பார்க்காமல் நிகழ்ச்சிக்கு போகமாட்டார். “அதுக்கு நானா பலிகடா?” என்று ஸுஹைபு பொருமிக்கொண்டே படியிறங்கினான். கீழே சிரிப்பும் கும்மாளமும் மேலும் கோபமூட்டியது.
“நீ ஒழுங்கா புடி, இன்னும் டயிட்டாட்டு” என்று வாப்பா சொன்னதும், அவரது கழுத்தில் சுத்தப்பட்டிருந்த நல்ல வடக்கயிற்றின் இடத்தும்பை உம்மா இழுத்துக்கொண்டிருந்தாள்.
“குட்டி ஒழுங்கா புடிச்சி இழுக்கணும் கெட்டியா?வாப்பா கழுத்த அப்டியே இருக்குபோது, கயிறு ரெண்டு பக்கமும் நல்ல டையிட்டா ஆகணும். எங்க இழு பாப்போம்?” என்று இடப்பக்க கயிறை இடக்கையால் பற்றி வலப்பக்க கயிறை தன் கழுத்தால் இழுக்கக் குட்டி கயிறுடன் வந்து வாப்பா வின் காலில் சிரித்துக்கொண்டே விழுந்தாள். சற்றென்று அழுவதுபோல் முகம் இடப்பக்கம் கோணி சென்றதை கண்ட வாப்பா சுதாரித்துக் கொண்டு “குட்டி! அப்படித்தான். நல்ல இழுத்த பார்த்துக்கோ, உம்மாவ பாரு ஒரு மண்ணும் தெரியல. எந்திரி. நல்ல புடிக்கும். இன்னும் டயிட்டா” என்று வாப்பா அடிக்கும் கூத்தைக் கண்டு ஸுஹைபு உள்ளூர எரிச்சலடைந்தான். உம்மாவும்ஏன் இதை எதுவுமே கேட்பதில்லை, அவள் கேட்கமாட்டாள். பள்ளிக்கூடத்தில் இவர்கள் நடத்தும் மேஜிக் நிகழ்ச்சிக்கு இவர்கள் இருவர் மட்டுமே வித்தைக் காரர்கள். உம்மா பெரும்பாலும் மேஜிக்கிற்குத்தேவையானவற்றை ஒருங்கிணைப்பதோடு சரி. அனைத்து வித்தைகளையும் வாப்பாவே செய்வார். கோழியாகி முட்டை இடுவார், கோமாளியாகி குட்டிக்கரணமிடுவார், விஸில் அடித்தவாறு வாயிலிருந்து வண்ணவண்ண காயிதங்களை இழுத்து கொண்டே இருப்பார். பள்ளி சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு சில வித்தைகளைச் செய்வார். கருப்பு கை குட்டையிலிருந்து வெண்புறா வெளிவரும், அதுவரை மாணவர்களைச் சிரிக்கவைத்து கடைசி வித்தையாகக் கயிறை எடுத்து ஒரு பக்கம் உம்மா பிடித்துக்கொள்வாள். கூட்டத்திலிருந்து ஏதேனும் ஒரு மாணவனை அழைத்து இழுக்கச் சொல்லி, ஏன் இவர் இதை மட்டும் தூக்கித் திரிக்கிறார், ஸுஹைபு உம்மாவை பார்த்தான். வாப்பாவின் கழுத்தை இறுக்குவதில் உம்மாவுக்கு எவ்வித தயக்கமுமில்லை. குட்டி இன்னும் கீழே விழுந்துகொண்டே இருந்தாள். வாப்பா ஏன் இன்னும் இந்தக் கூத்தை நிகழ்த்துகிறார். பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருக்கும் இன்னும் ஒரு முறைகூட உருப்படியாய் கழுத்தில் கயிறு இழுக்கப்படவில்லை.
“இங்க குடு குட்டி, நான் இழுக்கேன், எவளோ நேரம்” ஸுஹைபு வலப்புற கயிறைப் பற்றிக் கொண்டான்.
வாப்பா உம்மாவிடம் தயாரா? என்பதாய் கண் காட்டினார். “சொன்ன உடனே இழுடே, கோவத்துல சோலிய முடிச்சி போடாத” என்று சிரித்துக்கொண்டே இருபக்க கயிறின் இழுப்பை ஆராய்ந்தார்.
ஸுஹைபு விரல்கள்மேல் ஒரு சுற்றுசுற்றி கயிறை இழுத்தான். உம்மாவின் பக்கம் மிக சரியான இழுப்பில் இருந்தது. வாப்பா கயிறில் இருந்து கையையெடுத்தார்.
“இழு. இன்னும் டயிட்டா... இழு” என்றார் வாப்பா. குட்டி இடக்கை விரல்களை வாயில் வைத்து வாப்பாவை இமைகொட்டாமல் பார்த்தாள். வாப்பாவின் கழுத்து நரம்புகள் வெளித் தெரிய ஆரம்பித்தன.
“இழு.. இன்னும்... இ...” என்று கயிறின் முழுஇழுப்பில் இருபக்க கயிறை ஓங்கி அடித்தார். ஸுஹைபின் கையிலிருந்த கயிறு நழுவி ஸுஹைபு பின்னால் விழுந்தான். வாப்பாவின் கழுத்தில்முடிச்சி அவிழாமல் அப்படியே இருந்தது. உம்மா சுதாரித்துக்கொண்டாள்.
“என்ன மயிரல புடிக்க ஒழுங்கா புடினு சொன்னேன்லா” என்று வாப்பா விழுந்துகிடந்த ஸுஹைபை மிதிக்கக் காலை ஓங்கினார். ருக்ஷனா கூவி அழுது, உம்மாவின் கால்களில் முகம் புதைத்தாள்.
“வா ஒழுங்கா புடி” என்று மீண்டும் கயிறை ஸுஹைபின் கைகளில் திணித்தார். ஸுஹைபு வாங்காமல் கீழே அமர்ந்திருந்தான்.
“செரி புடி மக்ளே” என்றாள் உம்மா.
ஸுஹைபு வாப்பாவின் முகம் பார்க்காமல் கயிறை வாங்கினான். மீண்டும் தயாரானார்கள்.
“இழு... இன்னும் இன்னும் மேல தூக்கி...” வாப்பா பாதங்களால் தரையை இறுக பற்றினார். கழுத்து நரம்புகள் புடைத்தன. முடிச்சி இறுக ஆரம்பித்தது. ஸுஹைபு இன்னும் இறுக்கினான். வாப்பாவின் ஓங்கிய காலை நினைவில் இருந்து விலக்க முடிய வில்லை. இழுத்தான். தன்கைகளில் நரம்புகள்புடைக்க இழுத்தான்.
“ஹ்ஹ்ம்... ஹ்ஹ்ம்.. ஆ ஆஅ அட்...” என்று வாப்பா கயிறின் இருப்பக்கமும் ஓங்கி அடிக்கவே முடிச்சி மறைந்து கழுத்து விடுபட்டது. மீண்டும் ஸுஹைபு வலப்பக்கம் விழுந்தான். உம்மா குட்டியை தூக்கிக்கொண்டு அடுக்களைக்குச் சென்றாள்.
“அவளோதான் மக்ளே” என்று வலக்கையை ஸுஹைபிடம் நீட்டினார். ஸுஹைபு தானாகவே எழுந்து, மாடிப் படியேறினான். வாப்பா பொறுமை யாய் சுற்றி இரும்புப் பெட்டியினுள் வைத்துமூடினார்.
“வர புதன்கிழம மலையாள ஸ்கூல்ல ஷோ, அட்வான்ஸ் வாங்கிட்டேனாக்கும்” என்று உம்மா விடம் கூறுவது ஸுஹைபின் காதுகளுக்கு விருப்பற்ற செய்தியாய் விழுந்தது.
ஞாயிறும், திங்களும் வாப்பாவின் கால் பாதத்தை யும், கழுத்தின் இறுக்கத்தையும் எண்ணிக் கடந்தன. எதற்கு அவருடைய வீம்பை எண்ணி மீண்டும்மீண்டும் சுழல்கிறேன் என்று ஸுஹைபு தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். “என்னடே கீப்பரு ஈவினிங் பெட் மேட்ச், வந்துரு” என்று ஜி குரூப் நண்பன் பொன் மாதவன் நினைவூட்டினான்.
“இல்ல மக்கா நா சீக்கிரம் வீட்டுக்கு போணும். நெட் ப்ராக்டிஸ் இருக்குப் பார்த்துக்கோ” என்றான் ஸுஹைபு.
“சரியான நேரத்தில கால வாருகியேடே, வெளையாண்டுட்டு போடே”
“மத்தநாள்னா வெளையாடுவேன்லா. இணைக்கு வாய்ப்பே இல்ல, வேணும்னா திருவாழ்மார்பன எடுத்துக்கோ, மசக்காட்டான், நல்ல சுத்துவான், கீப்பருக்குச் செமையா காத்து வீசும்” என்று ஸுஹைபு கூற, “முடியாதுனுடேலா கௌம்பிட்டே இரு” என்று பொன் மாதவன் இ குரூப் கிளாஸ்நோக்கி நடந்தான்.
பள்ளிமுடிந்து வீடு சேர்ந்தவுடன் வாப்பா இருப்பதைப் பார்த்தும் பார்க்காமலும் மாடியேறிய ஸுஹைபிடம், “மாணிக்கத்த பார்க்கணும்னு சொன்னேலா, போயிருவோமா என்னா?” என்று நைனா கேட்டார்.
“ஆமா.”
“சரி, டீ குடிச்சிட்டு ட்ரெஸ்ஸ மாத்திட்டு வா. நான் பாய் கடை கிட்ட நிக்கேன்” என்று நைனா படியிறங்கி சென்றார். கட்டிலில் ருக்ஷனா தூங்கிக்கொண்டிருந்தாள். உம்மா துணியைக் கல்லில் அடிப்பது ஸுஹைபுக்குக் கேட்டது. மாடிக்குச் சென்று சட்டையை மட்டும் மாற்றிக்கொண்டு கிளம்பினான்.
நைனா “அதுக்குள்ள வந்துட்டா, டீ எடுத்தியா?” என்று கேட்க, “ஸுஹைபு நல்ல துடியில்லா, வேகமாட்டு கப்ப கவுத்திட்டு வந்துருப்பான்” என்று கிண்டினார் பாய், விரல்களின் நடுவே புகை வெளியேறிக்கொண்டிருந்தது.
“சும்மா இருங்க மாமா! அப்புறம் குடிக்கலாம்னு வந்துட்டேன்.”
“நாயர் கடையில ஒரு காபி எடுக்கியா” என்று நைனா பாக்கெட்டில் கைவிட்டு சில்லறையைத் தேடினார்.
சாரதா பவன் திண்டில் பாலின் தரமறிய கண்ணாடி குவளைகள் அடுக்கப்பட்டிருந்தன. சில குவளையில் கால் பங்கு வெண்மை, அரைக் குவளை தண்ணீர், ஒரு குவளையில் முக்கால் பங்கு நீர், அடியில் கால் பங்கு வெண்மை. அந்தக் குவளைகளில் நடுவே நாயர் பட்டையுடன் அமர்ந்திருந்தார்.
“வேண்டா. வந்து சாப்டுட்டுப் பார்த்துக்கிடலாம்” என்று ஸுஹைபு அவ்விடத்தை விட்டு நகர ஆயத்தமானான்.
“வரட்டா, மாமிய கேட்டதா சொல்லுங்க, இமாமுதீனையும்” என்று பாயிடம் கூறிவிட்டு நைனாவும் ஸுஹைபும் பார்க் நோக்கி சென்றனர்.
“வாப்பா, இங்க ஐயப்பங் கோயில் கிட்ட நில்லுங்க, நான் உள்ள போய் கூட்டிட்டி வாரேன்” என்று ஸுஹைபு பார்க்கினுள் சென்றான்.
நெட் ப்ராக்டிசில் வழக்கம்போல் வேகப்பந்து வீச்சாளர்கள் ஐயப்பனும், மாசானமும் ஆக்ரோஷமாய்ப் பந்து வீசிக்கொண்டிருந்தார்கள். நெட்டில் மாணிக்கம் ஹெல்மெட், கிலோவிஸ் என்று சகல பாதுகாப்புடன் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
“டப்... லவ்லி டெலிவரி... லவ்லி டெலிவரி... சேம் லெங்த்...”
“வெல் லெப்ட் வெல் லெப்ட்... என்ன டெஸ்ட் மேட்ச்சானே... கனெக்ட் பண்ணு” - ஐயப்பன்.
“எண்ணே மாணிக்கனே, வாப்பா வந்துருக்கு”
“டப்... குட் ஷாட்... அப்படியே புல்லா பேட் போகட்டும்... ஸ்டாப் பண்ணாத” - மாசாணம்.
“வாப்பா வந்துருக்கு, மாணிக்கண்ணே” என்றான் குரல் கூட்டி அழைத்தான் ஸுஹைபு.
“இத புடி மக்கா” அடுத்தப் பேட்டிங் பிடிக்க ஆயத்தமாகி இருந்த கணேஷிடம் நெட் பொசிஷனை ஒப்படைத்துவிட்டு மாணிக்கம் ஸுஹேபுடன் ஐயப் பன் கோவில் நோக்கி நடந்தார்.
“மாமா நல்லா இருக்கேளா?” மாணிக்கம் கேட்டார், கை, கால்களில் பேடுடன்.
“நமக்கென்ன! ஆச்சி நல்லா இருக்காளா?” என்றார் நைனா.
“இப்போ பரவாயில்ல, மெல்ல நடக்கா, டீ குடிக்கலாமா மாமா?”
“இல்ல இப்போ தான் வீட்ல குடிச்சிட்டு வந்தே, இவன் நீ எதோ பேசணும்னு கூப்ட்டேனு சொன்னான், அதான்” என்றான் நைனா.
“ஆமா மாமா, நம்ம டீம் பத்தி கேள்விப் பட்டிருப்பேள்லா?”
“அது இல்லாமலா, போன வருஷம் பெருசா போட்டியெல்லாம் நடத்துனேளா, இந்த வருஷம் அப்டி ஏதாச்சும் உண்டா? பையனையும் எடுத்து போடு, வெயிலுக்கப் பிள்ளலா இவன்?” என்று ஸுஹைபை தோளில் தட்டினார் நைனா.
“அதான் மாமா, ஸுஹைபு நல்ல விளையாடுகான், பேட்டிங், பௌலிங், கீப்பிங்னு எல்லாம்நல்லா வருகு, அதான் டீம் சார்பா டிஸ்ட்ரிக்ட் செலேச்ஷன் அனுப்பலாம்னு ஒரு யோசனை. அவன்கிட்ட கேட்டேன், உங்க கிட்ட கேக்கணும்னு சொன்னான். அதான்.”
வாப்பா ஸுஹைபை பார்த்து புன்னகைத்தார். “அது சரிதான். நல்ல போகட்டும். அதுக்கென்ன?”
“சில நாட்கள் ஸ்கூலுக்கு லீவு போட வேண்டிவரும். செலேச்ஷன் ட்ரைனிங்ஸ் போகணும், மேட்ச்லாம் இருக்கும். போனா உறுதியா செலக்ட் ஆகிருவான்” என்றார் மாணிக்கம்.
ஐயப்பன் கோவிலில் பூசைக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
“அப்போ வேண்டாம் மக்கா. படிக்கட்டும். சும்மா விளையாடுகது சரிதான். பின்ன இந்த விளையாட்டு சோறு போடுமானு தெரியல?” ஸுஹைபைப் பார்த்தார். அவன் இம்முடிவை ஏற்கனவே எதிர் பார்த்ததைப்போல் மாணிக்கம் அண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
நைனா தொடர்ந்தார். “மக்கா இந்தப் பீ காட்டுல நம்ம சுத்திலும் இருக்கப் பிள்ளேல் எவளோ பேரு எவளோ நாள் விளையாடுகா. அதே மாற்றி எவளோ பேர் விளையாடுவா. நீங்க எல்லாரும் நல்லத்தான் விளையாடுகெயோ. பொழுதனைக்கு ப்ராக்டிஸ் செஞ்சாச்சாலும் இது நிரந்தரமானு தெரில.”
“இல்ல மாமா, ஒரு மாதிரி விளையாண்டு உள்ள போய்ட்டா போதும். ஏதாச்சும் கவர்மண்ட் வேல கூடச் சிக்கும்” என்று மாணிக்கம் விளக்கினார்.
“இங்க நித்தம் ப்ராசிடிஸ் பண்ணுக பாதிபேர் மெடிக்கல் ரெப்பாட்டு தான வெயில்ல சுத்திக்கிட்டு இருக்கீங்க மக்கா. கொறச்சி சொல்லல. அதுலகஷ்டம் இருக்குனு சொல்லுகேன். இவன் படிக் கட்டும், எனக்கும் முன்னால மாதிரி திருவிழா, ஸ்கூல், கல்யாண ப்ரொக்ராம்ன்னு கெடைக்கதுஇல்ல. இவன் படுச்சி கொஞ்சம் தலையெடுத்தாததான்” என்று வாப்பா தொடர, அருகிலிருந்த குமார் அண்ணன் வீட்டினுள்ளிருந்து “எம்மா... எம்புள்ள... எம்புள்ள...” என்று பெருங்குரலொன்று பூங்கா வீதியை நிறைத்தது. வாப்பாவும், மாணிக்கம் அண்ண னும் வீட்டுக்குள் சற்றும் யோசிக்காமல் ஓடினர். ஸுஹைபு சுதாரித்து அவர்களைப் பின்தொடர்ந்தான்.
உள்ளே தமிழ் அண்ணன் வாயில் நுரை தள்ள, அவனை மடியில் தாங்கி சுப்பம்மாள் கதறிக் கொண்டிருந்தாள்.
நைனா தமிழைத் தூக்கி, அவனது வாயில் விரல்களை விட்டு வாந்தி எடுக்க வைத்தார்.
“அந்தத் துணிய எடு” என்று மாணிக்கத்திடம்கூற, தமிழின் யமஹா பைக்கில் காயப்போட்டிருந்த துண்டை எடுத்து கொடுத்தார். அதற்குள் பக்கத்துக்கு வீட்டார் கூடிவிட்டனர். துணியை வைத்துத் தொண்டையில் அழுத்த, தமிழ் குமட்டிக்கொண்டு வாந்தி எடுத்தான். தமிழின் அப்பா வீட்டிற்கு ஓடி வந்தார். “என்னாச்சி டீ...”
“உம்ம வெச வாய வச்சிட்டு எம்புள்ளய என்ன சொன்னீரு. அவனுக்கு எதாச்சின உம்ம என்ன சிச்சை செய்யேன் பாரும்” என்று அழுது கீறினாள்.
வாப்பா தமிழைச் செவுட்டில் அறைந்தார். அவனைத் தூக்கிக்கொண்டு “அவசர” டாக்டர் மருத்துவமனை நோக்கி ஓடினார்.
“மாமா! வண்டில போயிரலாம்” என்று மாணிக்கம் கூவ, எதையும் கேளாதவராய் நைனா தமிழைத் தோளில் போட்டு ஓடினார்.
மாணிக்கம் வண்டியை எடுத்துக்கொண்டு தொடர்ந்தார். அடுத்தத் தெரு முக்கில் நைனாவை நெருங்கி, “மாமா ஏறுங்க” என்று வண்டி மருத்துவமனை நோக்கி பயணப்பட்டது.
“கொஞ்சமா கொழம்பு... கொஞ்சமா. ஹ்ம்ம் போதும். பையனுக்கு ஆயிசு கெட்டி தான். இருந்தாலும் பொன்னையா நாயக்கர் வெடுக்குனு வார்த்தையைப் போட்ருவாரு. தமிழு சுடுசொல் பொறுக்காத பையன்” என்று நைனா சோற்றை அள்ளி உண்டார். ஸுஹைபு கோழி கொத்துப் பரோட்டா தின்றுகொண்டே வாப்பா ஓடியதை எண்ணினான்.
“அப்டி இப்டி படிச்சாலும் பள்ளிக்கூடத்துக்குப் போறான். அப்புறமென்ன. செத்துப்பார்க்கலாம்னு நெனச்சிருப்பான் போல. நமக்கும் சாவுக்கும் நடுவுல பையன் கெடந்து கடைசில இப்போதைக்கு நம்ம கிட்ட இழுத்துப் போட்டாச்சி” என்ற வாப்பாவின் பேச்சில் சற்றுப் பெருமை தெரிந்தது. ஸுஹைபுக்கு வாப்பாவின் புதன்கிழமை மேஜிக் நிகழ்ச்சியை நினைவுக்கு வந்தது, கூடவே எரிச்சலும்.
வாரங்கள் கடந்தன.
“கமான் கமான், குமரண்ணே அப்டியே போடு, ஈஸி ஈஸி” என்று ஸுஹைபு கீப்பிங்கில் நின்று கூவினான். “ரெடி” என்று குமார் பௌலிங் போட போகும் கணத்தில், தமிழ் அண்ணன் பேட்டிங் நின்றுகொண்டிருந்த விஜயிடம் சென்று “லேய் பேட் குடு, நான் பேட்டிங் புடிக்கென்” என்று கேட்டான்.
குமார் அண்ணன் “கொடு” என்பதாய் கண் அசைத்தான். தமிழ் பேட்டை வாங்கிக்கொண்டு சுத்தி நின்ற பீல்டர்களை எண்ணி, “என்ன ஸுஹைபு அப்பா எப்படி இருக்கா?” என்றான்.
“வாப்பா நல்ல இருக்கானா?”
“அடுத்த மாசம் லவன்ஸ்ல இருக்கியா?” என்று கேட்டான் தமிழ்.
“பெட் மேட்ச் லவன்ஸ்ல இருக்கேன். கீப்பிங்” என்றான் ஸுஹைபு.
குமார் “ரெடி? லேய் “ஐடியா” பிரஸ்ட் ஸ்லிப்ல நின்னு என்ன பக்கடா போட்டுட்டு இருக்க. பொசிஷன்க்கு வாடே! மக்கா ஸுஹைபு! ரெடியா...”
“ரெடினே... கமான் ஈஸி ஈஸி” - ஸுஹைபு.
அன்று மலவீச்சம் சற்று குறைவாகவே இருந்தது.
கவிதை குறியீட்டு ரீதியிலான மொழியில் உறவையும் உணர்வுகளையும் பற்றிப் பேசுகிறது. அதனால்வாழ்க்கையில் நுட்பங்களாயுள்ள அம்சங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அப்போது முடிவு இல்லாமல் அறிந்துகொண்டிருப்பதின் ஆனந்தம் கிடைக்கிறது. பிறகு அதுவே கால ஓட்டத்தில் தனிப்பட்ட அனுபவத்தின் பகுதியாக மாறியும் விடுகிறது. மாறாக அபியின் கவிதைகளில் எல்லாமும் அனுபவ வடிவங்களாகவே உருவாக்கித் தரப்படுகின்றன. அவை வாசகருக்கு தேடலை அளிக்கின்றன என்பதை விடவும் தாமே உள் முகத் தேடலை நிகழ்த்திக்கொள்கின்றன எனலாம். அத் தேடல் தனக்குத் தானே உண்மையாயிருப்பதால் ஆழ்ந்த கவித்துவத்தைப் பெறுகின்றன. அதைத் தவிரவும் வேறு நோக்கங்களில்லாதிருப்பதால் அவை பழக்கமான அன்றாடச் சொற்களில் சொல்லப் படுகின்றன. அதனால் தெளிவாயிருப்பதைப் போன்ற மேற்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. அதைக் கடந்தால் முற்றிலும் புதிய சொல் இணைவுகளால் அறிந்திராத தளத்துக்கு இட்டுச் செல்கின்றன.
அபியின் ஆரம்பகாலக் கவிதைகளில் கூரிய படிமங்கள் தனித்து வெளியில் பிரித்தெடுக்கக் கூடியதாகப் புலப்படுகின்றன. பிறகு எழுதப்பட்டவற்றில் முழுக் கவிதையும் படிமமாக மாறியதாகத் தோன்றுகின்றன. அவை புறத்தில் அசாதாரண எளிமையுடன் காட்சி கொடுக்கும். உள்ளே செல்லுந்தோறும் திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடியாத தன்மையை உணர வைக்கும். இன்னும் அணுக்கமாக முயன்றால் புரிவதை போன்ற பாவனையைத் தரும். அதை முழுதாக விளக்கிட இயலாது. கடைசியாக அடையப்படுவது இருண்மையே. தெளிந்த மொழியில் பெரும் அர்த்தமின்மையே உருவாக்கப்படுகிறது. இக் கவிதைகளில் மெய்யாய் இருப்பது சூன்யம்தான். இவை அபி கவிதைகளின் தனித்தன்மை. ‘தெளிவு’ கவிதையில் ‘தெளிவு என்பது பொய்’ என்றிருப்பதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
அபி கவிதைகள் முதலில், தவிர்க்க முடியாமல் வாழ வேண்டியிருக்கும் இருத்தலை அறிகின்றன. அதனால் தெரிய வருவது நிறைந்துள்ள தடைகளும் எல்லைகளும். அவற்றிலிருந்து தப்பித்துச் சென்று விட முயலுகின்றன. பிறகு வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பதால் கிடைக்கிற சூட்சம வடிவான நிம்மதியை அடைகின்றன. அதைச் சித்தரித்துக்காட்ட கவிதைகள் வழக்கமான பொருள் வயப்பட்ட உருவகங்களைக் கைவிடுகின்றன. கருத்துகளாய்இருக்கும் படிமங்களால் தனக்குள் பேசத் தொடங்கு கின்றன. அவற்றை நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அப்போது அர்த்தங்களை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாகக் குறியீடுகளாக்கிக்கொண்டு அப்படியே உணர முடிகிறது. அதனாலேயே தொடர்ந்த வாசிப்பில் அபி கவிதைகள், இது வரையிலும் இல்லாத அளவு எல்லையற்ற அனுபவங்களை வழங்குவையாய் இருக்கின்றன.
‘புரண்டு படுக்க இடமின்றி / ஒற்றையடிப் பாதை / சலிக்கிறது’ என்ற வரிகள் நமக்கு நீண்ட, தனித்த, குறுகிய பழக்கமான பாதையைக் காட்சியாக்குவதுடன், ஒற்றையடிப் பாதையாக மாறி நாமும் சென்றுகொண்டிருக்கும் மேலான அனுபவத்தை அளிக்கின்றன. ‘ஆடுகள் மலையிறங்கித் / தலைதாழ்த்தி வருகின்றன’ என்கையில் ‘தலை தாழ்த்தி’ என்ற ஒரு வார்த்தையே துல்லியமான முழு வடிவை வழங்கிவிடுகிறது. ‘வானம் சுற்றிலும் / வழிந்து இறங்குகிறது’ என்ற அடுத்த அழகான வரி, மறுபடியும் பிரம்மாண்ட பிரபஞ்சமெனும் கருத்துக்கு அழைத்துப் போகிறது. ‘காடு எரிந்த கரிக்குவியலில் / மேய்ந்து களைத்துத் / தணிந்தது வெயில் / என்னோடு சேர்ந்து.’ இதில் தன்னையும் இயற்கையின் அங்கமாக்கிக்கொண்டு பார்த்தல் வெளிப்படுகிறது. ‘மெலிதாக அசையும் வீடுகளும் / தடதடக்காது நகரும் தெருக்களும்’ என்று தன்னுடன் சேர்ந்து சடப் பொருட்களும் இயக்கம் பெறுவதாகக் காணுகிறது. ‘சாயல்... நீண்டுகொண்டிருந்த சாலையில் / நெடு நேரம் நின்றுகொண்டிருந்தது’ ‘யாருமில்லா இரவில் / நீண்டு உயர்ந்த தேக்குகள் / காட்டின் எல்லைக்குள் / நடமாடித் திரியும்’ போன்றவற்றிலெல்லாம் புறத்திலுள்ளவையும் கற்பனையால் உயிரடைந்து சலனமுறும் மாயம் நிகழ்ந்தேறுகிறது.
இதன் கவிதைகள் சொல்லப்படுவதில் ஒரு போதும் வெளிப்படுத்த முடியாத இசைமையையும் படிமங்களாக்குகின்றன. அது தூய அனுபவத்தைத் தர விரும்புகின்ற முயற்சி. அதை அரூபமாக மட்டும் உணர முடியும். ‘தந்தியைப் பிரிந்து / கூர்ந்து கூர்ந்து போய் / ஊசி முனைப் புள்ளியுள் இறங்கி / நீடிப்பில் நிலைத்தது / கமகம்’ என வார்த்தைகளால் இசை உணர்வு ஏறக்குறைய விவரிக்கப்பட்டுவிடுகிறது. ‘சுருதியின் / பரந்து விரிந்து விரவி... / இல்லாதிருக்கும் இருப்பு’ என்பது நம்மை நாம் மறந்து போய்விடும் நிலையைத் தருகிறது. இசையின் உருவற்ற தன்மை முடிவில் மௌனம் என உணர்த்த ‘நூறு வருஷ நீளத்துக்கு / இதன் / ஸ்பரிச சுகத்தில் / அரூபமுற்ற / சுருதி’ ‘... படலமாக்கிப் படர்த்திற்று மௌனம்’ என்கிறது. ‘தாள லயம் மீண்டும் / நீருக்கடியில் / கூழாங்கல் உருளும் ஓசையைப் / பெற்றுவிடும்’ ‘மாட்டு வண்டிகள் / எழுப்பும் ஓசையிலிருந்து / தோன்றினான்’ என இயற்கையில் எழும் இசைகளும் படிமங்களாக உருவாகின்றன. இவற்றின் முன்பு நாம் விளங்கிக்கொள்ள முற்படாது வெறுமனே காண்போராக இருக்கலாம். அதனால் தாமாகக் கிடைப்பது நிறைய.
அபி கவிதைகள் சுய தேடலைக் கொண்டிருப்பதால், அவற்றை வாசிக்கையிலும் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதைப் போலிருக்கின்றன. அவைவினா விடைகளாக, குறிப்புகளாக, நனவோட்டங் களாக உள்ளன. நீ, நான், அவன், இவன் என்றுகுறிப்பிடப்படுவதெல்லாம் தன்னை நோக்கிபேசுவதாகவே அமைகின்றன. ‘அதிர்வு’ கவிதை,தனக்குள் மாற்றி மாற்றி உரையாடிக் கொள்வதா யிருக்கிறது. ‘போவதும் வருவதும் உணர்வது வாழ்க்கை’ என்பதற்கு ‘இருப்பதை உணர்வது இல்லாதிருப்பது’ என்று பதில் கூறப்படுகிறது. ‘இன்று’ கவிதையில் ‘இன்று / நீ வர வேண்டிய நாள் / எனினும் / வரமாட்டாய்’ என்று சொல்வது வெளிப்படையாகவே மற்றொருவரின் இன்மையைக் காட்டுவது. மேற்கொண்டு ‘என்ற ஒன்று’ கவிதை, நீ, நான் என்பதை அடையாளச் சிக்கலாகவும் எதிர்மறைகளின் இரைச்சலாகவும் பார்க்கிறது. அந்த முரண்படாத் தன்மையை, குழந்தைகள் பெற்றுள்ள சூன்யம் என்கிறது. அச்சூன்யம், தன்னை மறந்த மனம் கொள்ளும் தோற்றம். நான், நீ என்பது வெறும் பாவனையாயிருப்பதை ‘நமக்குள் ஒரு ஏற்பாடு’ என்று ‘ஏற்பாடு’ கவிதை தெளிவாக்குகிறது. ‘உள்பாடு’ கவிதை ‘புள்ளியைத் தொட்டுத் தடவி / அதன் மூடி திறந்து / உள் நுழைந்து / விடு’ என்பது தனக்குள் நம்பிக்கையுண்டாகச் சொல்லிக்கொள்வதுதான். ‘சுற்றி லும் பெருகி நுரைத்துத் ததும்பும் குரல்களில் - நான் நீக்களில்’ என்பதில் அந்த இருமையை இல்லாமலாக்கும் விருப்பம் மேலிடுகிறது. ‘என்னுள் / புதர் விலக்கித் துருவிக் / கண்டுபிடித்ததென்ன, உன் / சிதறல்களேயன்றி’ என்ற ‘அடையாளம்’ கவிதையின் வரிகளில் இரண்டையும் ஒன்றாகக் காணும் நிலையைத் தோற்றுவிக்கிறது. ‘உன்னைப் பிரித்து விலக்கிக்கொண்டே / உன்னைத் தேடி / உன் தவம் மட்டும் உடன் வரப் / போகிறாய்’ என்பது தன்னை நோக்கிய கூறலாயிருக்கிறது. ‘ஆடுவேன் ஆடினேன் கிலுகிலுப்பை ... சூழ்ந்து செறிந்திருக்கும் / தன் அணுக்களின் / முகச்சோர்வு சகியாது / அவன் வெளிவந்தான்’ என்ற கவிதை ‘இன்னும் ஒரு விளையாட்டைத் தேடி வியர்க்கிறேன்’ என்று முடிகிறது. இதில் தன்னிலிருந்து முளைத்தெழுந்த ஒருவனையே சுட்டுகிறது. இது ‘அவன்’ கவிதையில் ‘அவன்’ ஓசையிலிருந்தும், விநாடியிலிருந்தும் தோன்றியதாக அரூபமாக்கப்பட்டு ‘எனக்குக் கிடைத்த சொந்த உருவம் / அவனைப் பார்த்தபோது மங்கிப்போனதை’ காட்டுகிறது. வெளிப்படையாகவே தனக்குள் தான் சுருங்கி முணுமுணுத்துக்கொள்ளும் ‘மாலை வரிசை’ கவிதைகள் வாழ்வின் அந்திமத்தை தரிசிப்பது எனலாம். அவற்றில் நான், நீ பேதம் அறவே ஒடுங்கி இருக்கின்றன. இங்கு, நான், என் என்று, தான் மட்டும் இருக்கும் இருப்பாகிறது. ‘மாலை-பாழ்’ கவிதையில் பிறரின் இருப்பையும் துறந்து ‘இருத்தலின் நிமித்தம் / தெருவும் நானும் என / இருத்தலே’ என்று எண்ணிக்கொள்கிறது. மற்றொரு கவிதையில் ‘சாவு சொன்னதை / ஸ்வரப்படுத்திப் / படுக்கை வசமாக / விரிய விட்டிருக்கிறோம்’ என்று ‘மாலை-விரிவு’ கவிதை வாசிப்பவரின் பங்கேற்பையும் வெளிப் படுத்துவது. ‘மாலை - போய்வருகிறேன்’ கவிதையில் மாலைப் பொழுதையே ஒரு முன்னிலையாக்கி ‘ரத்தம் இருள்வது தெரிகிறது ... போய் வருகிறேன்’ என்பது வாழ்விலிருந்து விடைபெற்று மரணத்தை நோக்கிப் போதலாகப்படுகிறது.
அபி கவிதைகளில் ‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’ என்கிற கவிதை எல்லா கவிதைகளையும் பிரதிநிதித்துவப்படுத்திவிடுகிறது. அரூபமான படிமங்களுக்கும், அர்த்தம் காண முடியாத தன்மைக்கும், அனுபவமாக உணர்கிற மொழிக்கும் எடுத்துக்காட்டாகிறது. அக்கவிதையில் வாழ்க்கையை விட்டு வெளியேறிச் செல்லுதல் நிகழ்கிறது. விடுபட்ட வாழ்க்கை முடிவில்லாமல் பெருகுகிறது. அது மகிழ்வுடன் நடந்தும் பறந்தும் செல்கிறது. எந்தத் தடையுமில்லாத ‘சூன்யத்தை’ அனுபவிக்கிறது. அங்குவாழ்வும், சாவும் இருப்பதில்லை. அதேபோல் எந்தசிந்தையும் எழுவதுமில்லை. தன்னை யாருக்கும் உணர்த்த கூட வேண்டியதுமில்லை. அந்த வாழ்க்கைபரிபூரணச் சுதந்திரமானதாயிருக்கிறது. இதுவே பெரும்பாலான கவிதைகளில் வெவ்வேறு படிமங் களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ‘வருவோம்போவோமாய்த் / தெருவை நிறைப்போம்’ என்றுவாழ்க்கையின் தொடரோட்டத்தையும் நெரிசலையும்நிலையாமையையும் கூட ஓர் இயல்பான அன்றாடவாழ்வின் புழக்கத்தில் கிடைக்கிற படிமத்தால் வெளிப்படுத்துகிறது. வாழ்ந்தாக வேண்டிய நிர்ப் பந்தத்தையும் காட்டுவது ‘விரயமின்றி வாழ்க்கையை/ நிலைகளில் நிரப்பலும் / ஒட்டாது திரட்டலும்/ தொழில்’ என்பது. ‘காலம்/ ஊசியிட்டுக் குத்திமல்லாத்திய / பூச்சிகளாய் / மனிதர்கள் - புகைப் படங்களில் / பேச முயன்று/ சிரித்துத் திகைத்து இப்படி.’ இது வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நிலைக்கான சிறந்த படிமம்.
அந்த வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டு மானால் அறிந்த பிறகு வெளியேறுதலை ‘இல்லா திருத்தலே / இருத்தல்’ என அரூபமான முறையில் வகுக்கிறது. அதை உணர்த்தும் இசைப் படிமம் ‘நாதம் / அலை பாய்வதெப்படி / இருப்பது அது / அலைவதன்று.’ ‘கொஞ்சம் கொஞ்சமாக / விலகி / விலகலில் நீடித்தாயெனில் / நீ வாழ்கிறாய்’ என்பது ‘அவர்’ சொன்னதாக உள்ள ஆப்த வாக்கியம். ‘உன்னைச் சுற்றி / வட்டங்கள் உருவான பின் / விலகிக் கொள்கிறேன்.’ ‘புள்ளியைத் தொட்டுத்தடவி / அதன் மூடி திறந்து / உள் நுழைந்து / விடு.’ என்பதெல்லாமும் விட்டு விலகுதலின் முயற்சிகளாகத் தோன்றுகின்றன. பல்வேறு பசிகள் உண்டாவதும் அவற்றுக்கு எப்போதும் உணவிட்டுக்கொண்டிருப்பதும் வாழ்க்கை யாகும். இருப்பினும் அவை நிறைவுற்று அடங்குவ தில்லை. ‘சமையல்’ கவிதை தனக்குள் புகும் ‘அராஜகப் பசிகளை’ தவிர்க்க, தான் ‘பதுங்கிச் சுருண்டேன்’ என்றும், கடைசியில் ‘என்றுமே சமையல் இல்லை’ என்றும் அறிவிக்கிறது. அதனால் இனி வாழ்வில் பற்று ஏற்படப்போவதில்லை. ‘அவசரமில்லாத / சிறிய ஓடைகள் நடுவே / கூழாங்கற்களின் மீது / என் வாழ்வை / மெல்லத் தவழவிட்டேன்.’ இதுவே விலகலை நாடும் நிலை. அத்தேடலும் நம்மைப் பிணைத்துவிடும் தளையாகவும் மாறலாம் என்பது ‘குறிப்பிட்ட தேடல் / அலுப்பாகி / தேடலினின்றும் விடுதலை / என்பதில் / திகைத்துச் சுருளும் / அனுபவம்’ ‘வாழ்க்கையின் / பச்சை வாசனை / தவறிப்போகலாம்’ போன்ற வரிகளாக வருகின்றன. அதை ‘வெளியேறத் துடிப்பேன்/ ஆனால் எப்படி’ என அரற்றவும் செய்கிறது.
இருத்தல் என்பதிலிருந்து விடுபட்டு அடையும் மௌனத்தைக் கவிதைகள் எட்ட முயலுகின்றன. அப்போது வார்த்தைகளின் போதாமையை உணர்ந்தபடியிருக்கின்றன. ‘என் சப்தக் கூறுகள் பிளந்து / மௌனம் / நீலம் காட்டியபோது / அபத்தமான சைகைகளுடன் / வெட்கமற்ற வெறுமையில் / புரண்டுகொண்டிருந்தன / வார்த்தைகள்’ என்பதில் அதைக் காணலாம். கூறியதிலும் ‘பாவம் வார்த்தைகள் / மலடு வழியும் முகத்தோடு / வெளியேறும்’ என்ற அதிருப்திதான் கிடைக்கிறது. ‘சொல்லாதிருந்ததற்கும் / சொன்னதற்கும் / இடைவெளியில் / புல் வளர்ந்து / பூமியை மூடும்’ என்பதும் எண்ணியதை சொல்ல இயலாத நிலைதான் எனத் தெரிகிறது. ஆனாலும் ‘நெடுங்கால நிசப்தம் / படீரென வெடித்துச் சிதறியது’ என தானாகவும் அது வெளிப்பட்டும் விடலாம்.
இயல்பும், நுட்பமுமான படிமங்களால் ‘மாலை’ வரிசை கவிதைகள், அபூர்வ அழகியல் தன்மைகளுடன் மிளிர்கின்றன. இந்தக் கவிதைகளில் மீண்டும் மீண்டும் மாலைப் பொழுதில் உலா போதல் எழுதப்படுகிறது. ‘என் மாலை சொல்கிறது / இது ஏதோ திசைதான் என்று / விலகலுக்கென்று உள்ள திசை’ என்பது வாழ்வு நாள் முடிந்து சூரியன் மறையும் பொழுதுதான். நடை செல்லுமிடம் சற்றுஎட்டவுள்ள மலையாக, காடாக இருக்கிறது. பெரும் பாலும் அங்கு நின்றுதான் கவிதைகள் தமக்குள் சொல்லிக்கொள்ளப்படுகின்றன. புறப்பட்டு வந்த ஊர் யாருடையதாகவோ சிறிதாகத் தோன்றுகிறது. ‘யாதும் ஊர் ஆகிறது’ இவ்வரிசைக் கவிதைகளின் அனுபவம் வாழ்க்கையிலிருந்து விடுபட்டுச் செல்வ தாயிருக்கிறது. மேலும் குறுக்கி, வாழ்க்கையின் அந்திமக் காலம் என்றும் சொல்லாம். ‘திரியில் சுடர் இறங்கிக்கொண்டிருக்கிறது / கதைகள் தீர்ந்து போயிருந்தன’ ‘வெறுமைப் பாங்கான / எனது வெளியில் / ஒளியும் இருளும் முரண்படாத / என் அந்தியின் த்வனி’ என்பவை அது பற்றிய கவிதை வரிகள். நடைப் பயிற்சியின் முடிவில் அடையப்படுகிற இடம் ‘எப்போதும் காலியாயிருக்கும் இடம்’ என அடையாளம் காட்டப்படுகிறது. ‘சுழல்வதும் சுற்றுவதுமான / இயக்கங்கள் / நினைவிழந்து கொண்டிருக்கின்றன. ‘அடிவான் விளிம்பில் / பறவை கூச்சல் மொய்த்துப் / பிணம் போல் / என் மாலை’ எனவும் கவிதை தன்னை உணர்ந்தபடியிருக்கிறது. ‘மாறிமாறி வருதல் ஒழிந்து / முற்றிலும் நாம் இழந்துகொள்ளும் வரை / இப்படியே நடக்கட்டும் / போய்வருகிறேன்’ என்று வெளிப்படையாக விடைபெறலை அறிவிக்கிறது.
‘கனலும் எனது / அனைத்துத் தரைகளையும் / பனிப்புகை செலுத்திக் / குளிர்விக்கிறது’ எனத் தெரிவிக்கும் போதே, ‘பாறைகளை / ஊதி உருட்டித்தள்ளும் / என் மலைகளின் மீது / என் கனல் சுற்றிவந்தது’ என்று இளமையைத் திரும்பியும் பார்க்கிறது. ‘மாலையோடு பேசித் தளிர்க்கும் / கதை / என் வடிவில் இருந்த கதை’ என்றும் ‘அருமையாய்க் கழிந்தது / சருகுகளடிப் பொழுது’ என்றும் அதை எண்ணி மகிழ்கிறது. வாழ்விலிருந்தும் காலத்திலிருந்தும் சேர்ந்து விலகுவதால் மீண்டும் குழந்தைப் பிராயம் கிட்டிவிடுகிறது. ‘காலம்’ வரிசைக் கவிதை ஒன்றிலும் இது ‘யார் சொன்னது / அந்த நாட்கள் போயினவென்று... இந்த ஒற்றையடிப் பாதையில் / புதிதாய் வரும்’ என்றும் ‘காடு முழுவதும் சுற்றினேன் / பழைய சுள்ளிகள் கிடைத்தன’ என்றும் கடந்த கால மீட்பு அடையப்படுகின்றன. ‘என்னைச் சுற்றி நிரம்பும் / காட்டுக் களிப்பு.’ ‘இங்கே என்னருகே / எனது மாலை / பிரபஞ்ச சோகம் திளைத்து.’ இந்தக் களிப்பும் சோகமும் உச்சத்தில் ஒன்றுதான் என்று படுகிறது.இறுதியில் அடையப் பெறுவது எல்லையில்லா ஆனந்தம். ‘இனி / இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு / இல்லை என்று / இருக்கும்’ இருக்கையில் இல்லாதிருப்பதாகக் கருதிக்கொள்வது பூரண மகிழ்ச்சி தான். ‘என்ற ஒன்று’ கவிதை ‘சூன்யம் இருந் தவரை / எல்லாம் சரியாயிருந்தது’ என்று ஏதும்அற்றிருந்த நிலையைக் காட்டுகிறது. அது திறந்த மனமுள்ள குழந்தைத் தன்மை. அங்கு மற்றது என்றபேதங்களில்லை. அறிவின் எல்லைகளும் இருப்ப தில்லை. எதையும் முடிவற்று காணும் வாய்ப்புகளையும் கொண்டது. அப்படி உணர்வதுதான் ஆனந்த மயமான இருப்பு போலும்.
நான் அதைப் பற்றி முன்பே யோசித்திருக்க வேண்டும், இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. பன்னிரண்டரை மணிக்கு மேலாகிவிட்டது மேலும் நான் நிரப்பிக்கொள்ள மறந்துவிட்டேன். சேவை நிலையங்கள் மூன்று மணிவரை மூடியிருக்கும். ஒவ்வொரு வருடமும் பூமியின் பாறை மடிப்புகளில், ஆயிரங்கோடி நூற்றாண்டுகளாய் மணல் மற்றும் களிமண் படிவங்களுக்கு இடையில் சேகரித்துப் புதையுண்டிருந்த இரண்டு மில்லியன் கச்சா எண்ணெய் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பொழுது நான் கிளம்பினால் பாதி வழியில் தீர்ந்துபோய் விடும் ஆபத்து இருக்கிறது. எச்சரிக்கை அளவைமானி கொஞ்ச நேரமாகவே டேங்க் ரிசர்வ்வில் இருக்கிறது என்று எச்சரித்துக்கொண்டிருக்கிறது. பூமிக்கு அடியிலான உலகளாவிய சேமிப்புகள் உத்தேசமாக இருபது வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று அவர்கள் கொஞ்சகாலமாகவே எச்சரித்து வந்திருக்கிறார்கள் அல்லது அவ்வாறு. அது பற்றிச் சிந்திப்பதற்கு எனக்கு நிறைய நேரம் இருந்தது. எப்போதும் போலப் பொறுப்பில்லாமல் நான் இருந்திருக்கிறேன். டேஷ்போர்டில் சிவப்பு விளக்கு மினுங்கி எரியத் தொடங்கும்பொழுது நான் கவனம் செலுத்துவதில்லை, அல்லது விஷயங்களைத் தள்ளிப்போடுகிறேன், பயன்படுத்துவதற்கு முழு ஒதுக்கப்பட்ட சேமிப்பும் இன்னமும் மிச்சமிருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் பிறகு மறந்துவிடுகிறேன். இல்லை, ஒருவேளை, அதுதான் கடந்த காலத்தில் நடந்திருக்கும், காற்று அளவுக்கே பெட்ரோல் ஏராளமாக இருந்த அந்த நாட்களில். கவனக்குறைவாக இருந்துவிட்டு பிறகு அதைப் பற்றி மறந்து விடுவது. இப்பொழுது அந்த மினுங்கல் வெளிச்சம் வரும்பொழுது அது ஒரு அபாயத்தையும், பெரும் அச்சுறுத்தலையும், ஒரே சமயத்தில் தெளிவின்றியும் ஆனால் நடந்து விடக்கூடியது என்கிற மாதிரியும் பரிமாற்றம் செய்கிறது.
பலவிதமான பதற்றம் நிறைந்த சமிக்ஞைகள் எனது பிரக்ஞையின் மடிப்புகளுக்கிடையே வண்டலாய்ப் படியும் அவற்றுடன் அந்த செய்தியையும் நான் எடுத்துப் பதிவு செய்து கொள்கிறேன். இது எனது ஒருவிதமான மனோநிலையில் கரைந்து விடுகிறது. அதை என்னால் உதறித்தள்ள முடியாத பிரக்ஞை நிலையில் அது கரைகிறது. அதே சமயம் அது அதன் விளைவாய் கச்சிதமான நடைமுறை காரியம் செய்வதற்கு என்னைத் தூண்டுவதில்லை. எடுத்துக்காட்டாக நான் பார்க்கும் முதல் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி நிரப்பிக் கொள்வதற்கு அல்லது சேமிப்பைச் செய்வதற்கான உள்ளுணர்வு என்னைப் பற்றிக்கொண்டிருக்கிறதா, நம்மை அறியாமலே நாம் மேற்கொள்ளும் கருதாத் தன்னியல்பு செய்கையின் கஞ்சத்தனம். என்னுடைய டேங்கில் எண்ணெய் தீரப் போகப் போகிறது என்பதை நான் உணரும்போதே எண்ணெய்ச் சுத்திகரிப்பு கையிருப்புகள் குறைந்து வருவதையும், எண்ணெய்க் குழாய்களின் போக்குகள் பற்றியும், மேலும் எண்ணெய்க் கப்பல்கள் பாரங்களுடன் கடல்களை உழுது செல்வதையும் உணர்கிறேன். டிரில் பிட்டுகள் பூமியின் ஆழங்களைத் துழாவி அசுத்த நீரைத் தவிர வேறு எதையும் மேலே கொண்டு வருவதில்லை. எனது கால் ஆக்ஸிலேட்டரின் மீதிருக்க, நமது பூமிக்கோளம் சேமித்து வைத்திருக்கும் கடைசிப் பீற்றுதாரை சக்தியை அதன் மிக எளிய அழுத்தம் கூட எரித்துவிடக்கூடும் என்ற உண்மையை உணர்கிறது. எனது கவனம் கடைசிச் சொட்டு எரிபொருளைஉறிஞ்சுவதில் நிலை கொள்கிறது. டேங்க் ஏதோ ஒரு எலுமிச்சைப் பழம் என்பது போல, அதிலிருந்து ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பிழியப்பட வேண்டும் என்பது போல நான் பெடலை அழுத்துகிறேன். நான் வேகத்தைக் குறைக்கிறேன். இல்லை. அதிகரிக்கிறேன். என் உள்ளுணர்வுபூர்வமான எதிர் வினை, நான் எந்த அளவுக்கு வேகமாகச் செல்கிறேனோ, இந்த எனது பிழிதலில் இருந்து அந்த அளவு தூரமாகச் செல்வதற்கு எனக்குக் கிடைக்கும் என்பதாய் இருக்கிறது. அது இறுதியானதாய் இருக்கவும் கூடும்.
நிரப்பிக்கொள்ளாமல் நகரத்தை விட்டுச் செல்லும் ஆபத்தில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாகத் திறந்திருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தை நான் கண்டுபிடிப்பேன். நிழல்மரச்சாலைகளில் காரை ஓட்டியபடி, வேறுபட்ட பெட்ரோலிய கம்பெனிகளின் வண்ண அறிவிப்புப் பலகைள் முளைத்து நிற்கும் நடைபாதைகளையும், மலர்ப்படுகைளையும் தேடிச் செல்கிறேன். ஒரு காலத்தில் அவை இருந்த ஆக்கிரமிப்புடன் இன்று இல்லாத போதிலும் கூட. அந்த நாட்களில் புலிகளும் பிற தொன்ம விலங்குகளும் நமது என்ஜின்களின் உள்ளே தீப்பிழம்புகளை உமிழ்ந்த காலத்தைப் போல அவை இன்றில்லை.
மீண்டும் மீண்டும் திறந்திருக்கிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து நான் முட்டாளாகிறேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையம் வழமையான நேரத்தில் திறந்திருக்கும் மதிய இடைவேளை சமயத்தில் மூடி யிருக்கும். சிலநேரங்களில் ஒரு பெட்ரோல் நிலைய உதவியாளன் ஒரு மடக்கு நாற்காலியில் அமர்ந்தபடி சாண்ட்விச்சை சாப்பிட்டுக்கொண்டோ, அல்லது, அரைத் தூக்கத்திலோ இருக்கிறான். மன்னிப்புக் கோரும் தோரணையில் அவன் தனது கைகளை விரித்தும் காட்டுகிறான். சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான். எனது கேள்வி கேட்கும் சைகைகள் நான் அவை அவ்வாறு ஆகும் என்று அறிந்திருந்தவாறே பயனற்றவையாகின்றன. சகலமும் எளிமையாகத் தோன்றிய காலம் முடிந்துவிட்டது.
அதாவது மனித சக்தியானது இயற்கை சக்தியைப் போலவே நிபந்தனையற்று உங்கள் சேவையில் இருக்கிறது என நீங்கள் நம்ப முடிந்த காலம். அப்போதுபெட்ரோல் நிலையங்கள் எல்லாமும் உங்கள்வழியில், வரிசையாக ஈர்ப்புடன் முகிழ்த்தவாறு இருக்க அவற்றின் உதவியாளன் பச்சை அல்லது நீல வண்ணத்திலோ அல்லது கோடுபோட்ட தொள தொள முழு அங்கியை அணிந்தோ வண்டுக்கூட்டத்தின் அரைபடலால் காரின் முன்பக்கக்கண்ணாடி அசுத்தமானதைத் துடைப்பதற்குத் தயாராகச் சொட்டச் சொட்ட ஸ்பாஞ்சினை கையில் வைத்துக் கொண்டிருப்பான்.
அல்லது, மாறாக. குறிப்பிட்ட பணியிலிருந்த மனிதர்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் பணிசெய்து கொண்டிருந்த காலத்தின் முடிவுக்கும், சிலவித பொருட்கள் பயன்படுத்தித் தீரவே தீராது என்று நீங்கள் கற்பனை செய்திருந்த காலத்தின் முடிவுக்கும் இடையே ஒரு முழு யுகத்தின் வரலாறே கிடக்கிறது. -- அதன் நீளம் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும், ஒரு தனிநபருக்கும் இன்னொரு தனிநபருக்கும் வேறுபடுகிறது. அதனால் நான் சொல்கிறேன் இந்தக் கணத்தில் செழுமைச் சமுதாயங்கள் என்று அழைக்கப்பட்டவற்றின் எழுச்சியையும், உயர்வையும் வீழ்ச்சியையும் நான் ஒரே சமயத்தில் அனுபவம் கொள்கிறேன் - ஒரு சுழலும் டிரில் கருவி ஒரே நொடியில் பிளியோசீனிய, கிரெடீசிய, டீரசீய படிவப் பாறைகளின் ஊடாக ஒரு மில்லினியத்திலிருந்து அடுத்த மில்லினியத்திற்கு நுழைவதைப்போல.
கிலோமீட்டர்மானி தந்திருக்கிற தகவல்களை உறுதி செய்த பின் காலம் மற்றும் புவி வெளியில் எனது நிலைமையைக் கணக்கெடுக்கிறேன். இப்பொழுதான் முள் பூஜ்யத்திற்கு வந்து நிற்பதையும், எரிபொருள்மானி இப்பொழுது நிலையாகப் பூஜ்யத்தில் நிற்பதையும் காலக்கடிகாரத்தின் சிறிய மணிக்கை இன்னும் மேற்புற கால்வட்டத்தில் நிற்பதையும். மதிய வேளைகளில் தண்ணீருக்கான தற்காலிக உடன்பாடானது தாகம் நிறைந்த புலியையும் மானையும் கலங்கிய ஒரே குட்டைக்கு வர வைப்பதைப் போல, எனது கார் பயனின்றிப் புத்துணர்ச்சிக்காகத்தேடுகிறது, எண்ணெய் தொடர்பான தற்காலிக உடன்பாடு அதை ஒரு பெட்ரோல் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு ஓடச் செய்கிறது.
மதிய வேளைகளில் கிரெடீசிய வாழ்வுயிரிகள் கடலின் மேற்புறத்தில் திரண்டு வந்தன, அடர்ந்த கூட்டமான நுண்ணியப் பாசிகள், பிளான்க்டன்களின் மெல்லிய ஓடுகள், மென்மையான கடல்பஞ்சுகள், கூர்ந்த பவளப்பாறைகள் சூரிய ஒளியில் மென்மையாய்க் கொதித்து அவற்றினூடாய்த் வாழ்வைத் தொடர்ந்த மரணம் என்ற சுழற்சியில் தொர்ந்து வாழ்கின்றன. அவை விலங்கு மற்றும் தாவரக் கசடுகளின் மெல்லிய மழையாகச் சுருங்கும்போது அவைமேலோட்டமான நீர்களில் படிந்து, மண்ணுக்குள் மறைந்து, பிரளயங்களின் நடப்புகள் கடந்த பிறகு கால்கரீசியப் பாறைகளின் தாடைகளினுள் மெல்லப் பட்டு, சின்-கிளைன் மற்றும் ஆன்ட்டிகிளைன் மடிப்புகளில் செரிமாணமாகி, அடர்த்தியான எண்ணெய்களாய் திரவமாக்கப்பட்டுப் பிறகு இவை இருண்ட பாதாளத்தின் நுண்துளைகளில் மேல் நோக்கி தள்ளப்படுகின்றன - ஒரு பாலைவனத்தின் மத்தியில்பீச்சி அடித்துத் தீப்பிழம்புகளாய் வெடிக்கின்றன. இவை மீண்டும் ஒரு முறை உலகின் தொடக்கநிலைக்காலத்து மதியத்தில் இருந்தது போன்றதான ஒரு கொழுந்து விட்டு எரிதலில் பூமியின் மேல் தளத்தைச் சூடாக்குகின்றன.
தனது வெறுங்கைகள் இரண்டைத் தவிர வேறு ஆயுதம் எதுவுமில்லாத மனிதனை யந்திரமயமான உலகம் வளைத்துக் கொண்டுவிட்டது. அது சந்தேகமின்றிக் காட்டுத்தனமான இயற்கையைப் பயன்பாட்டுக்கு உள்ளாக்குவதை விட எளிமையாளது. இந்த உலகில் நமது கைகள் இனி அவற்றின் செயல்பாடுகளை அவைதான் மேலாண்மை செய்ய வேண்டியிருக்கும் நிலை. இனியும் நமது யந்திரமயமான தினசரி உழைப்பினை நம் கைகள் பிற கைகளுக்கு மாற்றிவிட முடியாத நிலை.
மேலும், இங்கே மதியத்தின் மத்தியில் உள்ள நாகரீக பாலைவனத்தில் திறந்திருக்கும் ஒரு சேவைநிலையத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கார்களின்கூட்டம் ஒன்று அதைச் சுற்றி பரபரத்துக்கொண்டிருக்கிறது. உதவியாளர்கள் ஒருவருமில்லை. பண நோட்டுக்களை மெஷின்கள் பற்றி எடுத்துக் கொள்ளக் கூடிய சுயசேவை நிலையங்களில் ஒன்றுதான் அது. காரோட்டிகள் குரோம் நிற பம்ப் நுனிகளை அவற்றின் உறைகளில் இருந்து வெளியில் எடுத்தபடி சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இயக்கக் குறிப்புகளை வாசிப்பதற்காக அவர்களின் கையசைவுகளைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். நிச்சயமற்ற கைகள் பித்தான்களை அழுத்துகின்றன, ரப்பர் குழாய்களின் பம்புகள் தமது சுருள்களுக்குத் திரும்பி விடுகின்றன. இடை மாறுபாட்டுக்கான காலத்தில் உருவான என் கைகள் பம்ப்புடன் தடுமாறுகின்றன. எனது உயிர்பிழைத்தலுக்கு அவசியமான அது போன்ற செயல்களைச் செய்வதற்கு என் கைகள் பிற கைகளுக்காகக் காத்திருந்து பழகி விட்டவை. இந்த நிலைமை நிரந்தரமானதல்ல என்பதைப் பற்றி நான் எப்போதும் பிரக்ஞையுடன் இருந்தேன். கோட்பாட்டளவில் என் கைகள் ஒரு இனத்தின் யந்திரம் சாரா செயல்பாடுகளை நிகழ்த்திக் கொள்ளும் அதன் பங்கினைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எதையும் செய்ய விரும்பாது. கடந்த காலங்களில் விரோதமான இயற்கையினால் வளைத்துக் கொள்ளப் பட்ட மனிதன் தன் வெறும் கைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லாது இருந்ததைப் போல இன்று நாம் ஒரு யந்திர உலகத்தினால் வளைத்துக் கொள்ளப் பட்டுள்ளோம். அதை சந்தேகமின்றி காட்டுத் தனமான இயற்கையை விட எளிமையான வகையில் கையாள முடியும். அந்த உலகத்தில் அப்போதிலிருந்து தம் சொந்த விஷயங்களை சமாளிக்க வேண்டியிருக்கும் இனியும் மற்ற கைகளுக்கு தம் யந்திரமயமான தினசரி உழைப்பில் நம்பி இருக்க அவசியமின்றி எதிர்பாராத விதமாக நிஜத்தில் எனது கைகள் சிறிது ஏமாற்றம் அடைந்திருக்கின்றன.
பயன்படுத்துவதற்குப் பம்ப் மிக எளிதாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே சுயசேவை நிலையங்கள் ஏன் சர்வ சாதாரணமாக ஆகவில்லை என உங்களை வியக்க வைக்கிறது. ஆனால், ஒரு தானியங்கி சாக்லேட் விநியோக யந்திரத்தைப் பயன்படுத்துவதிலிருப்பதை விடவும் அல்லது வேறு எந்தப் பணம் எண்ணும் இயந்திரத்தை இயக்குவதால் வருவதைவிடவும் இதில் நீங்கள் கூடுதலான சந்தோஷத்தைப் பெறவில்லை. சிறிது கவனம் தேவைப்படும் ஒரே செயலாக்கமானது பணம் செலுத்துவதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறிய இழுப்பறையில் நீங்கள் ஒரு ஆயிரம் லயர் நோட்டை சரியாக வைக்க வேண்டும்--அதன் எலக்ட்ரிக் ஒளிக்கண் குய்செப் வெர்டியின் தலை உருவப் பொறிப்பினை அடையாளப்படுத்திக் கொள்வதற்கேற்றவாறு, அல்லது, ஒவ்வொரு வங்கிநோட்டின் குறுக்காகச் செல்லும் மெல்லிய உலோகப் பட்டியை அடையாளம் காணுமளவுக்குக் குறுக்காகச் செல்லும்படி.
அந்த நோட்டு விழுங்கப்படும் போது ஒரு வெளிச்சம் கிளம்பும். அப்பொழுது நான் விரைய வேண்டும், பம்பின் நுனியை டேங்கின் வாயில் நுழைத்து கச்சிதமாகவும், நடுங்கியபடியும் வரும் ஜெட்டை உள்ளே பொங்கிப் பீறிட நுழைக்க வேண்டும். இந்தப் பரிசினை நான் அனுபவிக்க விரைய வேண்டும். இது எனது அறிவுணர்வுகளைச் சந்தோஷப்படுத்துவதற்குத் தகுதியற்றவை எனினும் எனது போக்குவரத்து வழமையாக இருக்கும் எனது உடற்பகுதிகள் அதற்கு ஆர்வத்துடன் ஏங்குகின்றன. இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடித்ததுதான் தாமதம் அப்பொழுது ஒரு கூர்மையான க்ளிக் ஓசையுடன் பெட்ரால் வருவது நின்று சமிக்ஞை விளக்குகள் அணைந்து போகின்றன. சில விநாடிகளுக்கு முன்பாக இயக்கிவிடப்பட்ட சிக்கலான கருவி ஏற்கனவே இயக்கமற்று நிறுத்தப் பட்டுவிட்டது. எனது சடங்குகள் உயிர் கொடுத்த நிலவுலகம் சார்ந்த சக்திகளின் நகர்வுகள் ஒரு கணத்திற்கு மேலாக நீடிக்கவில்லை. வெறும் உலோகப் பட்டிகையாகக் குறைக்கபட்ட ஆயிரம் டாலர் நோட்டுக்கு மாற்றாகப் பம்ப் மிகக் குறைந்த அளவு பெட்ரோலையே தரும். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை பதினோரு டாலர்கள்.
நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். வேறு ஒரு நோட், பிறகு மற்றவை, ஒரு தடவைக்கு ஒரு ஆயிரம் எனத் தர வேண்டும். பணமும் பாதாள லோகமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை நீண்டகாலம் பின்னோக்கிச் செல்கின்றன. அவற்றின் உறவு ஒரு பிரளயம் அடுத்து மற்றொரு பிரளயமாக வெளிப்பாடு காண்கிறது--சில நேரங்களில் மந்தமாகவும், சில நேரங்களில் மிகத் திடீரென்றும். எனது டேங்கை சுயசேவை நிலையத்தில் நிரப்பிக்கொண்டிருக்கையில் பாரசீக வளைகுடாவில் புதையுண்டிருக்கும் ஒரு கருப்பு ஏரியில் ஒரு வாயுக் குமிழி வீங்கி உயர்கிறது. ஒரு எமீர் மௌனமாக, அகன்ற வெண்ணிற கைச் சட்டைகளில் மறைக்கப்பட்ட கைகளை உயர்த்தித் தனது மார்புக்கு குறுக்காக மடிக்கிறார். ஆகாயத்தைத் தொடும் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் எக்ஸான் கம்ப்யூட்டர் ஒன்று எண்களை மெல்லுகிறது. கடலின் மிகத் தூரத்தில் ஒரு சரக்குக் கப்பல் அது திசைமாறிச் செல்லவேண்டும் என்ற ஆணையைப் பெறுகிறது. எனது பாக்கெட்டுகளில் நான் துழாவுகிறேன். காகிதப் பணத்தின் நோஞ்சான் சக்தி ஆவியாகிப் போகிறது.
என்னைச் சுற்றிலும் நான் பார்க்கிறேன். ஆளற்ற பம்புகளுக்கிடையில் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இந்த நேரத்தில் திறந்திருக்கும் ஒரே பெட்ரோல் நிலையத்தைச் சுற்றியிருந்த கார்களின் முன்வருதலும் பின்போதலும் எதிர்பாராத விதத்தில் நின்று போயிற்று. ஏதோ மிகச் சரியான இந்தக் கணத்தில் பதுங்கிக்கொண்டிருந்த பிரளயங்களின் ஒருமிப்பு திடீரென்று அந்த உச்சபட்சமான பிரளயத்தை உருவாக்கிவிட்டதைப் போல ஒரே சமயத்தில் பம்ப்புகள், கார்புரேட்டர்கள், மற்றும் எண்ணெய் பம்ப்புகள் எண்ணெய்க்கிணறுகளின் குழாய் வழிகள் போன்ற சகலமும் வறண்டு போகின்றன. இதில் பொருட்படுத்தப்பட வேண்டியது என்னவென்றால் நீங்கள் இதையெல்லாம் முன்னரே எதிர்நோக்கி விட்டீர்கள் என்று சொல்ல முடிவதுதான். இப்பொழுது கொஞ்சகாலமாக எதிர்காலத்தை என்னால் அச்சமின்றிக் கற்பனை செய்யமுடிகிறது. என்னால் ஏற்கனவே வரிசை வரிசையான, நூலாம்படை படிந்த, கைவிடப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது. இந்த நகரம் ஒரு உடைந்த பிளாஸ்டிக் குவியலாகச் சிறுத்துப் போவதையும், முதுகின் மேல் சாக்குக்களுடன் திரியும் மனிதர்கள் எலிகளால் துரத்தப்படுவதையும் இப்பொழுதே என்னால் பார்க்க முடிகிறது.
திடீரென்று இந்த இடத்தை விட்டு அகலவேண்டும் என்ற ஏக்கத்தால் நான் பீடிக்கப்படுகிறேன். ஆனால், எங்கே போவது? எனக்குத் தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. ஒரு வேளை சக்தியின் எந்தச் சிறு மிச்சம் விடப்பட்டிருக்கிறதோ அதை எரித்துச் சுழற்சியை முற்றுப் பெறச் செய்ய விரும்பு கிறேனாக இருக்கலாம். இன்னும் ஒரு தாரைப் பெட்ரோலை வடித்துவிட நான் ஒரு கடைசி ஆயிரம் லயர் நோட்டைத் தோண்டி எடுக்கிறேன்.
ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோல் நிலையத்தில் வந்து நிற்கிறது. அதன் ஓட்டுநர் ஒரு இளம்பெண். அவளுடைய வழிந்தோடும் கூந்தல் சுழற்சிகளில் சுற்றப்பட்டும், கழுத்தை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி ஸ்வெட்டர் மற்றும் ஸ்கார்ஃப் உடன். இந்தச் சிக்கு விழுந்த குவியலில் இருந்த ஒரு சிறிய மூக்கினை உயர்த்தியபடி சொல்கிறாள்: “அதை நிரப்பு.”
நான் அங்கே பெட்ரோல் நிரப்பும் நாஸிலுடன் நின்று கொண்டிருக்கிறேன். நான் நிகழ்த்தும் இயக்கங்கள், நான் பயன்படுத்தும் பொருட்கள், நான் எதிர்பார்க்கும் மீட்பு எனச் சகலமும் கவர்ச்சி யற்றிருக்கும் ஒரு உலகத்தில் குறைந்த பட்சம் அவை எரியும் பொழுது மகிழ்ச்சிகரமான ஞாபகங்களை யாவாது விட்டுச் செல்லட்டும் என்பதற்கு வேண்டி இந்தக் கடைசி ஆக்டேன்களை அவளுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஸ்போர்ட்ஸ் கார் மீது இருக்கும் எரிபொருள் செலுத்தும் மூடியைக் கழற்றுகிறேன். பம்ப்பின் வளைந்த மூக்கினை உள்ளே நுழைத்துப் பித்தானை அழுத்துகிறேன். அந்தப் பிரவாகம் உள்ளே செல்வதை உணர்கையில் இறுதியாக ஒரு தூரத்துச் சுகிப்பின் ஞாபகமொன்றினை அனுபவம் கொள்கிறேன். ஒரு உறவினை உருவாக்கக் கூடிய ஒரு விதமான வீர்ய சக்தி, ஒரு திரவ ஒழுகலோட்டம் எனக்கும் கார் ஸ்டீயரிங் வளையத்தின் முன்னால் அமர்ந்திருக்கும் அந்த அந்நியளுக்கும் இடையே நிகழ்கிறது.
அவள் என்னைப் பார்க்க வேண்டி திரும்புகிறாள். அவளது மூக்குக் கண்ணாடியின் பெரிய சட்டங்களை உயர்த்துகிறாள். அவளுக்கு ஒளிகசியும் ஊடுருவல் மிகுந்த பச்சைக் கண்கள் இருக்கின்றன : “ஆனால் நீங்கள் பெட்ரோல் நிலைய உதவியாளர் இல்லையே... என்ன செய்கிறீர்கள் நீங்கள்... ஏன்?...” என் பக்ககாதலின் அதீதமான செயல்பாடு இது என அவள்புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித இனம் தனதென்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளக் கூடிய வெப்பத்தின் கடைசி வெடித்தலில் அவளை நான் இணைக்க விரும்புகிறேன். அந்தச் செயலானது ஒரு காதல் செயலாக இருக்கையில் வன்முறை செயலாகவுமிருக்கும், ஒருவிதமான வன்புணர்ச்சி, பாதாள சக்திகளின் உயிரை அழிக்கும் உக்கிரத் தழுவல்.
அவளைக் கப்சிப் என்று இருக்கச் சொல்லி சைகை செய்கிறேன். காற்றில் என் கையைக் கொண்டு கீழ் நோக்கிச் சுட்டுகிறேன். இந்த மயக்குநிலை எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் துண்டிக்கப்பட்டு விடலாம் என எச்சரிப்பதற்கு என்பது போல. பிறகு நான் ஒரு விதமான வட்டவடிவக் கையசைப்பினைச் செய்கிறேன். பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை என்று சொல்வது போல. மேலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் என் வழியாகக் கருப்பு நிற புளூட்டோ பாதாள உலகிலிருந்து மேலே வருகிறான், அவள் வழியாக ஒரு சுடர் விடும் பெர்ஸிஃபோன்-ஐ சுமந்து செல்லும்படி. ஏனெனில் அவ்வாறுதான் வாழும் வஸ்துக்களைக் கருணையற்று விழுங்குபவளான பூமி தன்னுடைய சுழற்சியை மீண்டும் தொடங்குகிறாள்.
தனது கூர்மையான, இளமையான முன்பற்களை வெளிக்காட்டியபடி அவள் சிரிக்கிறாள். அவள் தீர்மானமில்லாதவளாக இருக்கிறாள். காலிஃ போர்னியாவில் எண்ணெய்ப்படிவுகளுக்காக மேற் கொள்ளப்பட்ட தேடல் அதில் வாள்வடிவப் பற்களை உடைய புலியும் அடக்கம். கரிய ஏரிக் குழியின் மேற்புறமிருக்கும் நீர்ப்பரப்பால்தான் அந்த மிருகம் கட்டாயமாக ஈர்க்கப்பட்டிருக்கும். அந்த நீர்ப்பரப்பு அதை உறிஞ்சி உட்கொண்டுவிட்டது.
ஆனால் எனக்களிக்கப்பட்ட குறைந்த நேரம் முடிந்துவிட்டது. பெட்ரோல் வருவது நின்று போய் விட்டது. பம்ப் சலனமில்லாதிருக்கிறது. அணைப்புத்துண்டிக்கப்பட்டுவிட்டது. மனித இனத்தின் சுழலும்வாழ்வும் எல்லா இடங்களிலும் சகல என்ஜின்களும் எரிப்பதை நிறுத்திவிட்ட மாதிரியும் ஒரு ஆழ்ந்த மௌனம் நிலவுகிறது. இந்தப் பூமியின் மேல் ஓடு இந்த நகரங்களை மறுபடி உள்ளிழுத்துக் கொள்ளும் நாளில், மனித இனமாக இருந்த ப்ளாங்க்டன் படிவம் ஆஸ்பால்ட் மற்றும் சிமிண்ட் புவியியல் அடுக்குகளால் மூடப்பட்டுவிடும் ஒரு மில்லியன் வருட காலத்திற்குள் அது எண்ணெய்ப் படிவுகளாகப் பெருகும். யார் பொருட்டு என்று நாம் அறியோம்.
அவளுடைய கண்களுக்குள் நான் பார்க்கிறேன்: அவள் புரிந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப் பொழுதுதான் பீதியடையத் தொடங்கி இருக்கிறாள் போலும். நல்லது. நான் நூறு வரை எண்ணுவேன். மௌனம் தொடர்ந்தால், நான் அவள் கையைப் பற்றுவேன். பிறகு நாங்கள் ஓடத் தொடங்குவோம்.
****
இந்தச் சிறுகதை நம்பர்ஸ் இன் த டார்க் என்ற தொகுதி யிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. நம்பர்ஸ் இன்த டார்க் கால்வினோவின் இறப்புக்குப் பிறகு அவரதுமனைவியான எஸ்தர் கால்வினோவால் சேகரிக்கப் பட்டு வெளியிடப்பட்டது.
Numbers in the Dark and other Stories, Italo Calvino, Translated from the Italian by Tim Parks. Published by Vintage International, New York, 2009
நீங்கள் எழுத வந்ததன் சமூக, அரசியல் பின்னணியைச் சொல்லுங்கள்?
கடும் உடலுழைப்பால் வாழ்வை நடத்தும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சாதியினர் கலந்து வாழும் சூழலில் வளர்ந்தேன். வீட்டிலும் வெளியிலும் எவ்வளவு உழைத்தாலும் பெண்களின் இடம் துயரம் நிறைந்ததாக இருந்தது. படித்த பெண்களாயிருந்தாலும் படிக்காத பெண்களாயிருந்தாலும் அவர்களுக்கு இங்குச் சமூக அந்தஸ்தும் மரியாதையும்இல்லை. நான் படிக்கும் காலத்தில் என் தெருவில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகவில்லை. இந்தச் சாதிய, வர்க்க, ஆணாதிக்க முரண்கள் தொந்தரவளித்தன. ஆதிக்கச் சாதி ஒடுக்கப்பட்டசாதிப் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, சாதிய வன்மம், ஆணாத்திக்கக் குரூரம், பெண் மதிப்பு பற்றிய சிந்தனைகள் அநீதியான சமூக அமைப்பு மீதான கோபத்தை வளர்த்தன.
நான் படித்த பள்ளியில் தொண்ணூறு சதம் ஆசிரியர்கள் பெண்கள். பெண் ஆசிரியர்களில் முக்கால்வாசி முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந் தவர்கள் மீதமுள்ளவர்கள் பிற்படுத்தப்பட்டவர். அனைவரும் பெற்றோர் பார்த்துக்கொடுத்த ஆண்களைத் திருமணம் செய்தவர்கள். வாங்கும் சம்பளத்தை அப்படியே கட்டிய கணவன் கையில் கொடுத்து விடுவார்கள். சில ஆசிரியர்கள் புருசனிடம்அடி உதைப்பட்டுக் கன்றிய சதையுடன் வரும்காட்சிகள் எனக்கு அதிர்ச்சியளித்தன. ஆசிரியர்கள் என்ற மதிப்புள்ள நிலையைப் பெண்கள் எட்டிய பின்பும் அவர்கள் வாழ்வு எந்த விதத்திலும் அப்போதுமேம்பட்டிருக்கவில்லை. ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் அறிவாசானாய் கம்பீரமாய் மரியாதைக் குரியவராய் தோன்றியவர்கள் குடும்பத்திற்குள் தமதுவிருப்பு வெறுப்புகளைச் சொல்லவும் தன்னிச்சையாய் முடிவெடுக்கவும் முடியாதவர்களாய்ச் சிறுமைப்படும், வன்கொடுமைக்காளாகும் வாழ்வின் நிர்பந்தம் பெண் நிலை குறித்து யோசிக்க வைத்தன.
ஆனால் நான் பிறந்த சமூகத்தில் தொண்ணூத் தொன்பது சதம் பெண்கள் படித்திருக்கவில்லை. குடும்பத்தின் மொத்த வருமானமும் பெண்களிட மிருக்கும், பெண்கள்தான் நல்லது கெட்டது பார்ப்பார்கள். எதையும் துணிந்து சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். எதற்கும் புருசனிடம் உத்தரவு கேட்டு நிற்க மாட்டார்கள், தகவலாகத்தான் சொல்வார்கள். குடும்பச் சண்டையில் புருசன் ஒரு அடி அடித்தால் திரும்பி இரண்டடி அடித்து நான் உனக்குச் சளைத்தவளில்லை என்று காண்பிக்கும் துணிவு மிக்கவர்கள். கூட்டத்தை வழிநடத்தும் பிடிபோல எம் தாய்மார்கள் கம்பீரமானவர்கள். மீனவச்சமூகப் பெண்களின் தலைமைத்துவப் பண்பு எனக்குப்பெண் ஆளுமை, பெண்ணுரிமை குறித்த தெளிவானபார்வையையும் புரிதலையும் கொடுத்தது. ஒரு பெண் எந்நிலையிலிருந்தாலும் சமூகத்துக்கும் குடும்பத்துக் கும் ஆணுக்கும் அஞ்சாமல் தன்னிச்சையாக, துணிவாக முடிவெடுக்க வேண்டும். பெண் தலைவியாக, சுதந்திரமாக வாழ வேண்டுமென்பது எனது சிறு வயது தீர்மானம். பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் ஔவையின் கதையை சொன்ன போது ஔவையை எனக்குள் தேடத் தொடங்கினேன்.
தமிழ்க் கவிதையை ஆணாதிக்கத்தின் அதிகாரப் பீடமாகக் கட்டிக் காத்தார்கள் கவிஞர்கள். அதை யெல்லாம் உடைத்துக்கொண்டு பெண்ணிய எழுத்துதீவிரமடைந்து இன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பெண்கள் தீவிரமாக 2000-க்குப் பிறகு எழுத வந்தபோது பல எதிர்ப்புகள் வந்தன.அவற்றையெல்லாம் வென்றெடுத்துப் பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து புதிய பாய்ச்சலைத் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தியிருக்கிறீர்கள். அதில் உங்களின் ஒருங்கிணைப்பு முதன்மையானது. அதைக் குறித்துச் சொல்லுங்கள்.
மரபில் ஒடுங்கி, ஆண்மொழிக்குள் அடங்கி எழுதப் படும் பெண் எழுத்துக்களை ஏற்றுக்கொண்ட இலக்கியவாதிகள் பெண் மொழி, பெண் அடையாளம், ஆணாதிக்க எதிர்ப்பு என நேரடியாகப் பெண்ணிய அரசியல் வயப்பட்ட எழுத்துகள் புதிதாக உருவான போது இழிவுபடுத்தவும், இல்லா மலாக்கவும் முயன்றார்கள். 2000-க்கு பிறகு வெளியான பெண்ணெழுத்துகள் ஆணாதிக்க விதிகளை மீறி விட்டதென்ற வன்மம் அவர்களிடம் பல்வேறு வடிவில் வெளிப்பட்டது. நேரடியான வசைகள், கூட்டங்களில் இழிவுபடுத்திப் பேசுதல், ஊடகங்களில் பெண்ணியம் பற்றிய வெறுப்பைப் பரப்புதல், பெண் எழுத்து இப்படி இருக்கக்கூடாது என்றும் எப்படி இருக்கவேண்டும் என்றும் விளக்கமளித்தல், பெண் படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்வை இழிவுபடுத்தி எழுதியும் பேசியும் உளவியல் தாக்குதல் தொடுத்தல் என பல வன்முறைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். திரைத்துறையில் இருந்து சிறு பத்திரிகை வரை பெண்ணிய எதிர்ப்பாளர்கள்பல்வேறு வடிவில் செயல்பட்டார்கள். இவற்றை எதிர்க்கவும், மறுப்புகள் எழுதவும், பெண் மொழிக்கான இடத்தை உருவாக்கவும், நேரடியான தாக்குதல் களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என நான் இயக்கத்தை, குழுக்களை உருவாக்கிச் செயல்பட்டிருக்கிறேன். எதிர்ப்புக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பெண் கவிஞர்கள் படைப்பாளிகளின் சந்திப்புகள் எனப் பெண் வெளிகளை உருவாக்கியபொழுது பெண்ணெழுத்து பற்றிப் பேசவும் எழுதவும் வலிமையான களம் உருவாக முடிந்தது. இயக்கம், பெண்ணியப் பதிப்பகம், பெண்ணிய இதழ் என அணங்கு சிறிய அளவில் செயல்பட்டாலும் பெண்ணெழுத்திலும் பெண்ணிய அரசியலிலும் அது வலிமையான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உருவாகி வந்த புதியவர்கள், இளையவர்கள் தடைகளை மீறி எழுதவும், தற்பொழுது பரவலாகப்பேசப்படும் புதிய பெண்ணிய, பெண் அடையாளஎதிர்ப்புக் கருத்தாடல்கள் உருவாகவும் நான் முன்னெடுத்த இயக்க - குழுச் செயல்பாடுகள் பெரும்பங்காற்றியுள்ளன. இவை கடந்த இருபது ஆண்டுதமிழிலக்கிய வரலாற்றில் மறைக்க முடியாத, மறுக்கமுடியாத அளவுக்கு நேரடியாகப் பதிவாகியுமுள்ளன. பெண்ணெழுதுதலில் இருந்த மனத்தடைகளைத் தகர்த்து அனைத்தையும் எழுது வதற்கான சுதந்திர மொழி வெளியை இனிவரும் பெண்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது எனத் தற்போதுள்ள வாசகர்கள் சொல்லும்போது எனது எழுத்தின் - இயக்கத்தின் செயல்பாட்டின் பயன் என அதனையே உணர்கிறேன்.
உங்கள் கவிதை மொழி சிடுக்கான மொழி கிடையாது. தாங்கள் கவிதை எழுத ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து இன்று வரை ஒரே வகையான மொழி வெளிப்பாட்டு முறையைப் பின்பற்றி வருகின்றீர்கள். துயரங்களையும், விடுதலைகளை யும் வெகு இயல்பாக்குவதும் அவைகளை இயற்கையின்பால் மடை மாற்றம் செய்வதாயும் உங்களது கவிதைகளை வரையறை செய்யலாம். மொழியிலும், பாடுபொருளிலும் ஒருவித எடையற்ற தன்மையைப் பின்பற்றுவதே நவீன கவிதைகளின் தற்காலப் போக்கு என்ற நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. அந்த வகையில் தாங்கள் எழுத வந்த காலகட்டத்திலிருந்து இன்றைக்குள்ள கவிதைகள் என்னென்ன வகை யான மாற்றங்களை அடைந்துள்ளதாக நினைக் கின்றீர்கள் ?
சிடுக்கான கவிதைமொழி வாசகரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் மொழியிலிருந்தும் சற்று அந்நிய மாய்த் தள்ளி நிற்கிறது. கவிதையென்பது மொழியின் புதிர்விளையாட்டல்ல. அகழியில் விழுந்து நீந்திக் கரையேறும் சிரமம் எதற்கு. மொழி பொழிந்து அதன் போக்கில் பாதையை அடையவேண்டும்.
எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை ஒரே வகையான மொழி வெளிப்பாட்டு முறையைப் பின்பற்றுகிறேன் என்பது தவறான பார்வை. எனது கவிதைகளின் மொழி பன்மையானது. ‘மனக்கடல், நிறமாறும் திரைச் சீலைகள், கொக்கைக் கவனித்துக்கொண்டேயிரு’ போன்றவை உருவகக் கவிதைகள், ‘யானைக்கதை, வானத்தைக் கோர்ப்பவள், கன்யாக்குமரி, விஸ்வரூபம், பகலை மேய்ப்பவன், நெடுஞ்சாலை நடனம், கண்ணாடிப் பூனைகள், ஊஞ்சல்’ வகைக் கவிதைகளில் மொழியில் மாயத் தளங்களை உருவாக்கியிருப்பேன். ‘பேய்மொழி, விலக்கப்பட்ட குருதி, வேம்பாயி’ தொன்மக் கவிதை மொழியும் ‘வார்த்தைகளின் பேரரசி, புலி சேர்ந்து போகிய’ செம்மொழியையும் ‘காதல் கடிதம், என் குழந்தை பல வாரங்களாகப் பேசவில்லை, ஒட்டகங்கள் குதிரைகள் ஒரு மீன்கூடை, அம்மா ஒரு தொடுவானம், அமராவதி லைலா ஜுலியட்டின் காதல் கொடி, கடலொரு அசையும் மாமலர்’கவிதைகள் கதைச்சொல்லல் முறையில் அமைந்தவை. பெண்மொழி, விடுதலை அரசியல், சூழலியல் என நுட்பமான மொழியில் இந்நூற்றாண்டின் பேரரசியலை நுண்ணரசியலை அசைத்துப் பார்க்கும் பன்மொழிக் குரல்களுடையவை எனது கவிதைகள். பெண்ணரசியல் வாசிப்பில் ஒரு வகையிலும் அரசியலற்ற பொது வாசிப்பில் வேறு ஒரு வகையிலும் அவை அர்த்தமடையக் கூடியவை.
தன்னிலைக் குரலில் அகவயமாய் நிகழ்ந்த கவிதை மொழி தற்பொழுது சமூக மொழிக்குள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. சுய கற்பனை போதை, அபத்தக்காதல், கழிவிரக்கம் போன்றவற்றிலிருந்து வெளியேறி இருக்கிறது ஒரு பகுதி கவிதை. தமிழ் கவிதையின் வெளியை விரிவடையச் செய்யும் இம்மாற்றத்தை மிக்க மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்.
பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல்குரலான உங்கள் கவிதைகளில் பிரச்சாரமாக மட்டும் போய்விடாதவாறு தொழிற்படும் உங்களது கவிதை மொழியை நீங்கள் எங்கிருந்து பெற்றதாக கருதுகிறீர்கள்?
“வீடுகளாலான இனம், நரமாமிசர், நுகர் பொருள், அவன், ஆயிரத்து இரு இரவுகள், தாயம்” இவ்வகைக் கவிதைகள் பெண் மீதான ஒடுக்குமுறையின் வடிவங்களை மொழிப்படுத்துபவை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மொழியில் நம் ஆன்மாவை துளைக்கும் கவிதைகள். இம்மொழியை நான் தீர்மானிப்பதில்லை திட்டமிடுவதில்லை. கவிதையின் கரு அல்லது அக்கணம் அல்லது உள்ளுணர்வு மொழிக்குள் வினையாற்றிப் பல காட்சிகளாக விரிந்துபடிமமாகவோ, உவமையாகவோ அல்லது உரு மறைத்தோ கவிதைக்குள் தன்னைத்தானே எழுதிக் கடக்கிறது. கவிதைச் சொல்லி மொழி வினையை அவதானிப்பது மட்டுமே செய்ய முடியும். படைப் பாக்கம் முடிந்த பின்புதான் அதன் மீதான ஓர்மை வரும். கவிதைக்குள் கவிஞர் இடையீடு செய்யும் போது அது பிரச்சாரமாக மாறிவிடும்.
பள்ளிச் சிறுமிகள் போல் புதுவெள்ளத்தில் குழுமிக் குழுமிக் குசுகுசுக்கும் மீன்கள் என்ற உங்களது உவமையில் அந்தச் சிறுமிகளில் நீங்களுமே ஒரு சிறுமி. வானத்தில் மேகங்களாக மேய்ந்து கொண்டிருக்கக்கூடிய வரையாட்டின் கழுத்தில் குன்று போன்ற பெரிய மலையைக் கட்டியது யாரென்று யோசித்தபடியே தொடர்வண்டியில் தூங்கிப்போன சிறுமியும் நீங்கள்தான். ஒருசிறுமியாக மாறிவிடமாட்டோமா என்ற ஏக்கம் உங்கள் கவிதை முழுவதும் படர்ந்திருக்கிறது. சுற்றியுள்ள இரைச்சல்களிலிருந்தும், பெரியாள் தனம் என்றவொன்றை நிரூபிக்க முயலும் வீண் ஜம்பங்களிலிருந்தும் விடுபடவேண்டுமென்ற உங்களது மனவோட்டம் புலனாகிறது. இந்தக்குழந்தை மனநிலைதான் உங்களது இயல்பு மனநிலையா? அல்லது எல்லாவற்றிலிருந்தும் விடுபடவேண்டி இப்படியொன்றை தரித்துக் கொள்கிறீர்களா?
எதற்கும் எவற்றுக்கும் முகம்கொடுப்பதே எனதுஇயல்பு. எதிலிருந்தும் எப்போதும் விடுபட முனைந்த தில்லை.
ஊரில் கர்வத்துடன் வலம் வரும் மருத்துவச்சி போல மொழியின் மருத்துவச்சிக்கும் கர்வமுண்டு. என் காலப் பெண்களுக்கு எட்டாத, மறுக்கப்பட்ட கால வெளிகளில் பயணித்து நுழைந்து வெளிவந்தவள் நான். எவ்வளவுதான் குடும்பச் சுமைகள் பொறுப்புகள் அழுத்தினாலும் கற்பனைகளும் கனவுகளுமாய் எனது வானம் எனது பூமியெனத் துள்ளித் திரிந்திருக்கிறேன். இக்காலக் குழந்தைகளுக்கு வாய்க்கப் பெறாத சுதந்திரமான மகிழ்வான காலத்தை, காட்சி இன்பத்தை மொழியின் நினைவுப் பாதையில் அசைபோடும் கவிதைகள் அவை. அமைதி யாகவும் இருப்பேன், கூச்சலிட்டும் குதிப்பேன், பாம்பு வாயில் மாட்டாத தவளை மாதிரி. புறங்கை உள்ளங்கை பிரிக்க முடியுமா, முதிர்ச்சியும் குழந்தைமையும் அப்படித்தான்.
தங்கள் உடல் மீதான புனிதங்களைக் கட்டுடைத்தல் என்பது பெண்ணியக் கவிதைகளின் முதன்மை அரசியல் செயல்பாடு. அவ்விதத்தில் பெண்ணுடல் பற்றிய ஆண்மொழியிலிருந்து இக்கவிதைகள் எவ்வாறு வேறுபட்டுத் தம் தனித்துவத்தை அமைத்துக்கொள்கிறது ?
தமிழில் எழுத்து, வார்த்தை, சொல்லமைப்பு, மொழிக் கட்டமைப்பு, மொழிக் குறியமைப்பு, மொழிஉருவாக்கம், மொழிந்துரைப்பு அனைத்தும் ஆண் ஆதிக்கத்தை உற்பத்தி செய்யும் சமூக இயந்திரங்களாகச் செயல்படுகின்றன. இம்மொழி புனிதம்- புனிதமற்றமவை என உடல்களை வகைப்படுத்தி மேன்மையானவர் கீழ்மையானவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பிரிக்கிறது. பிறகு ஒருவர் மற்றவர் மேல் அல்லது ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மேல் மேலாதிக்கம் செய்யும் அதிகாரத்தையளிக்கிறது. பெண் விடுதலையை மொழி விடுதலையிலிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது. ஆண்மைய மொழி யைச் சிதைத்துப் புனித-புனிதமின்மை என்ற குறி அமைப்புகளைக் கட்டுடைத்து எனக்கான மொழியை மிகக் காத்திரமாக உருவாக்கியிருக்கிறேன். பெண் வெறுப்பு மொழியரசியலின் அதிகாரத்தைக் கட்டுடைத்து மொழிக்குள் உயர்நிலையாக்கப்பட்ட ஆண் ஆராதனைகளையும் ஆண் துதிகளையும் ஆண் பஜனைகளையும் ஆண்மையையும் மொழிவெளி யிலிருந்து நீக்கிப் பெண் மொழியுடலை உருவாக்கும் போது அவை தனித்துவமானவைகளாய் நிறுவிக் கொள்கின்றன.
கர்ப்பம் தரிக்கின்ற பெண் உடலமைப்பே பெண்ணை இரண்டாம் பாலினமாகக் கருதுவதற்கான எளிய உண்மையாக இருந்து வந்தாலும் பெண் உடலின் இந்த அம்சம் தான் நம் கலாச்சாரத்தில் புனிதமான ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்களது படைப்பிலும் தாய்மையின் பரிபூரணத்துவத்தைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகியுள்ளதை அறிய முடிகிறது. இந்நிலையில் கர்ப்பம் தரித்தல், கர்ப்பப்பையினைப் புறக் கணித்தல் என்ற இருவேறான நிலைப்பாட்டை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
தாய்மையைப் புனிதமாகப் பிம்பப்படுத்துவது, தாய்மையைக் கொண்டாட்டமாகக் காட்சிப்படுத்துவது அனைத்தும் சமூக பாவனை, அது ஒரு மாயை. வயிற்றில் வளரும் சிசு பெண்ணெனக் குறிகேட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணிகள் உண்டு. கருவில் அழிக்கும் வசதி வந்த பின் தாய்மார்களாவது தப்பினர். சாதிமாறிக் காதலித்ததற்காக எத்தனை தலித் கர்ப்பிணிகள் மிகக்கொடூரமாகச் சாதியக்கொலை செய்யப்பட்டார்கள்.
பெண் உடல் மீதான அதிகாரத்தை இன்னும் இந்தச் சமூகமும் குடும்பமும் தான் வைத்திருக்கிறது. பெண்ணின் அசைவுகள் இருபத்து நான்கு மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. அவள் ஏன் கருத்தரிக்கவில்லை, ஏன் கருத்தரித்தாள், யாருக்குக் கர்ப்பமானாள், எந்தக் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் தந்தை பெயர் எவருடையது என நிறைய விதிகளும் தண்டனைகளும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கருவைச் சுமப்பது அவள், சாவா வாழ்வா எனப் பெற்றெடுப்பது அவள், நோய் நொடி காத்து ஊட்டி வளர்த்தெடுப்பது அவள். ஆனால் சமூகம் சொல்கிறது குழந்தையின் மீது தாய்க்கு உரிமையில்லை. தாய்மை புனிதமென்ற தோற்றத்தை உருவாக்கிப் பெண்ணை இரண்டாம் இடத்தில் அடக்கி வைத்திருக்கிறது சமூகம். பெண்கள் மீதான சமூக அதிகாரத்தை உடைத்து தாய்மையின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டாமா. தாய்மையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் கவிதைகள் என்னுடையவை.
பெண் உற்பத்தி செய்த பொருளை ஆண் கைப்பற்றி தனது பெயரை எழுதி ஒட்டி தனதாக்கிக் கொள்வது பெண்ணை நிர்மூலமாக்கும் அரசியல். பெண் படைத்தளிக்கும் உயிர் மீதான அதிகாரம் தாய்க்கு மட்டுமே உரியது.
பெண் உடல் பெண்ணிற்கு உரிய வெளி. கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆணின் அத்துமீறல் பெண் உடலில் நிகழ்வதற்கு எந்தச் சமாதானம் செய்தாலும் அத்துமீறலை விடச் செய்யப்படுகின்ற சமாதானம் தான் மிகப்பெரிய அத்துமீறலாகும். பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படுகின்ற கட்டுப் பாடற்ற வன்முறைக்கு எதிராக இங்கே என்னதான் தீர்வுள்ளது. ஆண் உலகத்திலிருந்து பெண் முழுக்கவே ஒதுங்கிட வேண்டுமா...? அல்லது ஓரினச் சேர்க்கை மாதிரியான பாலியல் சுதந்திரத்தைக் கைக்கொள்ளலாமா...?
பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுப்படுத்த முடியாத உச்சத்தை எட்டிவிட்டன. ஓரினச் சேர்க்கை எல்லாருடைய தேர்வாகவும் திணிக்க முடியாது. சுயபால் விருப்பமுடைய இணைகள் மட்டுமே இணைய முடியும். அனைத்து பெண்களுக்கும் இவை சாத்தியமில்லை. ‘ப்ரீ வுமன் - நோ மேன்’ உண்மையில் தொடங்கலாம். ‘கென்யா உமோஜா’ கிராமத்தை போலப் பெண்கள் மட்டுமே வாழும் சமூகத்தை உருவாக்கும் தேவை அவசியமாகிறது.
‘திருகி எறிய முடியாத முலைகள்’ என்று ஒரு இடத்தில் சோக நாடகமாகவும், ‘இன்றெனக்கு ஒரு மகள் பிறந்தாள்; அவளுக்குப் பிறப்புறுப் பில்லை’ என்று இன்னொரு இடத்தில் ஆழ்மனப் படிமமாகவும், ‘காளிகளின் பிறப்புறுப்பில் சொருகப்பட்ட கம்பிகளை ஆயுதமாய் வடிக்கும் எங்கள் உலைக்கூடங்கள்’ என ஆணினத்திற்கு விடும் சவாலாகவும் வேறோர் இடத்தில் கூறு கின்றீர்கள். இறுதியாக, ஒரு பெண், பெண்உடலை எவ்வாறுதான் பார்க்க விழைகின்றார். அந்தந்தக் கண நேர மனநிலை, சூழமைவு தான் பெண்ணுடல் பற்றிய பெண் சிந்தையைத் தீர்மானிக்கின்றதா? அல்லது பெண்ணுடல் என்பது பெண்ணியத்திற்கான ஆயுதமாக உபயோகப் படுத்தப்படுகிறதா? பெண்ணுடல் வழியாகப் பெண் முன்வைக்கும் தீர்க்கமான கருத்தாக்கம்தான் என்ன?
இக்கவிதைகள் அனைத்தும் ரியாக்டிவ் பொயட்ரி அதாவது எதிர்வினைக் கவிதைகள். ஒரு சமூகத்தில் இப்படியான வலி மிகுந்த துன்பியல் கவிதைகள் உருவாகக் கூடாது.
ஒரு பெண் தன்னுடலை மண்ணாகப் பார்க்கட்டும் மரமாகப் பார்க்கட்டும் அல்லது சதையாகவோ சருகாகவோ பார்க்கட்டும் அது பெண்ணுக்குரிய பார்வை. பெண் என்பவள் எங்கள் உடமை என்று சொல்ல நீங்கள் யார். பெண் மீது ஆதிக்கம் செலுத்த, அதிகாரம் செய்ய வன்முறைக்குள்ளாக்க சமூகம் ஏன் அனுமதிக்கிறது என்ற மைய முரணி லிருந்துதான் பெண்ணியம் உருவாகிறது. பெண்ணியம் வன்முறையைத் தூண்டுகிறது என்றால்தூண்டுகிறோம். இதுவரை சமூகத்துக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்த பெண்களுக்கு வலி, வேதனை, துன்பம், வன்முறையைத் தவிர என்ன தந்திருக்கிறது இந்தச் சமூகம். ஆண்குறிகளைக் கொய்யும் நீலிகள் தோன்றத்தான் வேண்டும், ஆண்குறி மைய முற்றதிகாரத்தை வேரறுக்க.
உங்களின் கவிதைகள் ஆண்மைய மொழியைத் தலைகீழாக்கம் செய்து புதிய மொழிவெளியைக் கட்டமைக்கின்றன. அந்தவகையில் இயற்கை, சூழல், சமூக அரசியல் கூறுகள் இணைகின்றன கவிதைகளில். இந்நிலையில் கவிதைக்கு அரசியல் தேவையில்லை என்ற புனிதவாதக் கருத்து இன்னும் தொடர்வதைப் பார்க்கிறோம். இதன் நுண்ணரசியலை எவ்வாறு அணுகுவது?
ஆணாதிக்கக் கட்டமைப்பை பாதுகாக்கும், சேவை செய்யும் மொழி விடுதலையைப் பேசும் தகுதி இழக்கிறது. பால் சமத்துவ விடுதலை உணர்வு, பாலின வெறுப்பு மொழியைக் கட்டுடைத்து ஒடுக்கப் பட்ட விளிம்புநிலை உடல்களை மொழிச் சிறையி லிருந்து விடுவிக்க விழைகிறது. மொழியால் மதிப் பூட்டப்பட்ட, உயர்நிலையாக்கப்பட்ட ஆண்மைய கருத்தமைவு, குறியமைப்பின் பேரரசியல், நுண் அரசியலைக் கட்டுடைத்து மொழியால் கீழாக்கம் செய்யப்பட்ட கருத்தமைவுகள் குறியமைவுகளிலிருந்து பெண்ணுடலை விடுவிக்கும்போது பெண்ணியப் புத்தாக்கக் கவிதைகளாக அவை மொழியில் வினையாற்றுகின்றன. மொழியில் ஆண் உளவியலை அடித்து நொறுக்கும் பெண்ணிய நுண்ணரசியல் மொழியில் சில கவிதைகள் பகடியாக உருமாறுகின்றன. உதாரணமாகப் பெண்ணென்னும் நினைவு, ஆயிரத்து இரு இரவுகள், கோழிக் குழம்புக்கான குறிப்புகள் போன்ற கவிதைகளில் பெண் கூற்றில் பொங்கும் ஏளன நகைப்பை வாசகருக்குச் சரியாகக் கடத்தியிருப்பேன்.
கலை கலைக்காக என்று ஒரு குழு அரசியல் உருவானது. அது மொழி ரசனை வயப்பட்டதென்றது. எங்களுக்கு அரசியலில்லை மொழியின் அழகியல், அனுபவத்தின் அழகியல், மொழியின் புதுமை மட்டும்தான் நோக்கம் என்றனர். உலகில் அரசியல்அற்ற, கருத்தியல் சார்பற்ற படைப்பு ஒன்று இருக்க முடியுமா? “தமிழ் தான் என் மூச்சு அதைப் பிறர் மேல் விடமாட்டேன்” என்பது இனவெறி மிகுந்த வாசகம். ஒரு நிலத்தின் மீது, ஒரு இனத்தின் மீதான அந்நிய மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது இந்திதான் என் மூச்சு அதைபிறர் மேல் விடமாட்டேன் என்றுதானே அக்காலகட்ட அரசியலைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.தமிழ் பிற மொழி மீது ஆதிக்கம் செய்யப் போய் கவிஞர் தார்மீகக் கோபம் கொண்டு பொங்கிஎழுந்தது போல் பிழையான வரலாற்றைப் பதிய வைக்கும் அரசியல் யாருக்கானது. கலை கலைக்காக என்ற பிரச்சாரம் எவ்வளவு போலியானது, பொய் யானது பக்கச் சார்பானது என்பது அம்பலமாகியது. படைப்பாக்க மொழியை எந்தக் குழுவும் நாட்டாமை செய்ய முடியாதென அப்போதே இன்குலாப் போன்றோர் பதிலடி தந்துள்ளனர்.
ஆண் மைய மொழிக் கலாச்சாரத்தின் புளிப்புஏறிய தன்மையின் சீர்மையைக் கலைத்துவிட்டுப் பெண் மொழி என்ற புதிய சொற்கூட்டை அர்த்தவியல் சார்ந்தும், வடிவவியல் சார்ந்தும் உரக்கச் சொல்லி பதிய வைப்பவை யாகவே உங்களது இலக்கியச் செயற்பாட்டை வகுக்கலாம். அந்த வகையில் பெண் மொழி என்ற கருத்தியல் தளம் பற்றிப் பெண் படைப்பாளர்களுக்குள்ளாகவே ஒரு ஓர்மைஉள்ளதாகத் தோன்றவில்லையே... பெண் மொழியின் இந்த பன்முகத்தன்மை பெண்ணிய நிலைப்பாட்டை எங்ஙனம் கூர்மைப்படுத்த உதவுகின்றது?
பெண் மொழி, பெண்ணியரசியல் கூர்மைப்படும் வழிகளைப் பிரபல பதிப்பகங்களும் பிரபல ஊடகவெளியும் கபளிகரம் செய்து வருகிறது. முன்னோடிகள் ரத்தம் சிந்திய தியாகத்தில் விளைந்த பெண் விடுதலையரசியல் நிழல் வேண்டும், கனி வேண்டும் என்பது வரை சரிதான். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கத்தானே போராடினர், இதை அனுபவிக்கட்டும். ஒற்றை மரத்தை தோப்பாக்க வேண்டாம் வேரை வெட்டாமல் இருக்கலாம் அல்லவா. மீடூ-க்கும் குரல் கொடுப்பது, மீடூ வழக்கில் சிறைச் செல்ல வேண்டிய குற்றவாளிகளையும் கொண் டாடுவது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா. நூல் அச்சாக, விளம்பரத்துக்காக, விருதுக்காக அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகள், லாபியிஸ்டுகள் சுயமரியாதையற்றவர்கள் எல்லா தளங்களிலும் இருப் பார்கள் அது இங்கே அதிகம் என்பதால் அடுத்தத் தலைமுறையும் பாதிக்கிறது.
ஆணின் சகல அதிகாரங்களையும் கேள்விக்கு உள்ளாக்கும் உங்கள் கவிதைகளில் ஆண்உடலுக்கான தவிப்பு தவிர்க்கப்படுவதன் மூலம்அவை ஆணை மறுத்தொதுக்கும் லெஸ்பியன் அரசியலை முன்வைப்பதாகப் புரிந்துகொள்ளலாம் எனத் தோன்றுகிறது. இது பற்றித் தங்கள் கருத்து?
ஏற்கனவே மூன்றில் ஒரு பெண் ஆணால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்கள்தன்னிச்சையாக வாழ்ந்து கொண்டுதான் இருக் கிறார்கள். அவர்களுக்குள் ஆணுடலுக்கான தவிப்புஇருக்கிறதா என்பது கேள்விக்குரியது. பெரும் பான்மையான பெண்கள் தம் வாழ்வில் இருந்து ஆண் ஒழிந்தது நிம்மதியென நினைப்பவர்கள். ஆனால் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் சமூகச் சூழலும் மரபுத் தளைகளும் தடுக்கின்றன. சமூகத்தில் ஏசெக்சுவல் பெண்களுமிருக்கிறார்கள். பாலியல் பகிர்வு இல்லாமல் பெண்கள் குழுவாய் வாழ்வதும் கூட்டமாய் வாழ்வதும் சாத்தியமே. பொதுச் சமூகப் பொருளாதார அரசியல் அதிகாரப் புறக்கணிப்புக்கும் முகம் கொடுத்தபடி திருநங்கைகள் தங்களுக்குள் கூட்டாக ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் உதவியபடி சமூகமாய் வாழ்கிறார்கள். பெண்ணுலகில் ஆண் தவிர்ப்பு என்பது லெஸ்பியன் அரசியலை நோக்கிய நகர்வாக மட்டுமே குறுக்க முடியாது. ஆனால், பெண்கள் சமூகத்தில் லெஸ்பியனாக வாழ்வதும் ஒரு பகுதி, அது சிலரின் தேர்வாக இருக்க முடியும்.
ஆண் பெண்ணைக் காலங்காலமாகக் காத்து வருகிறான் என்ற நோய் பீடிக்கப்பட்ட சிந்தனையை உங்களது கவிதைகள் வாயிலாக தகர்த்து வரக் கூடியவர் நீங்கள். உங்களிடம் விபரீதமான ஒருகேள்வி. என்றைக்காவது ஒருநாள் ஒரு ஆண் மனநிலையில் வாழ்ந்துள்ளீர்களா... அதாவது நான் ஒரு ஆண் என்பது மாதிரி. அது உங்களால் முடியுமா? முன்னுதாரண ஆண் என்பது போல ஒரு கற்பனை வடிவம் கொடுக்கலாமே. பெண் எதிர்பார்க்கும் ஆண் அங்குதானே சாத்தியமாகும். என்ன சொல்கிறீர்கள்?
ஆண் உலகின் மையமென்று நம்புவது தீவிர மனநோய் பிரச்சினை. ஒரு எறும்பாக வாழ்ந்தாலும் பெண் எறும்பாக வாழ வேண்டும். பெண் படைப்பின் உச்சம், பெண் உலகின் மையம். ஆண்மையைத் துறந்து அனைவரும் பெண்ணாக வாழ முயல வேண்டும். ஆனால் இங்கு ஆணுக்கான எல்லா அதிகாரத்தையும் அனுபவித்தபடி பெண் பெயரடையாளத்தையும் புனைப்பெயராகத் திருடிக்கொள்கிறார்கள். ஆணாதிக்கத் திமிருடன் வாழ்பவ னெல்லாம் நான் தாயுமானவன், பெண்ணாலானவன் என்று படைப்புகளில் போலி முற்போக்கு பேசும் கிரிமினலாக இருக்கிறான்.
நான் பூரண விடுதலையின் குறியீடாக, சுதந்திர மானவளாக இருக்க எந்த அதிகார மைய நிழலிலும் நிற்பதில்லை. நான் ஏன் ஆண் என்னும் குறை உருவத்தை ஏற்கவேண்டும். ஆணினால் ஒரு உயிரைச் சுமந்து இந்த உலகுக்கு அளிக்க முடியுமா. ஆண் உயிரும் அடையாளமும் பெண் கொடுத்தது.
ஆண் உயிரணுக்கள் இன்றி உயிரியல் தொடர்ச்சியைப் பெண் மட்டுமே தொடர முடியும்என்பதற்கு இயற்கையில் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதை அசெக்சுவல் இனப்பெருக்கம் Parthenogenetic Reproduction என்று அழைக்கிறார்கள். வரிக்குதிரை சுறா, சுத்தித்தலை சுறா, நட்சத்திர மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் கொமோடோ ட்ராகன், ஒரு வகைப் பல்லியினம், பிலிப்பைன்ஸ் காடுகளில் வாழும் மலைப்பாம்புகள் போன்ற நிலத்தில் வாழும் உயிரினங்களும் ஆண் இல்லாத காலங்களில் இணைச் சேர்ப்பு இன்றி முழுக்க முழுக்கப் பெண் டிஎன்ஏ மரபணுவுடன் குட்டிகள் ஈனுகின்றன. பூச்சி, புழு, பூஞ்சையினங்களிலும் இவ்வகையுண்டு. உலகில் ஆணினம் பெண்ணினத்திற்கு விளையாட்டுப் பொம்மைகள். இந்த விளையாட்டுப் பொம்மைகள் ஆயுதம் தாங்கிய படையாகி பெண்ணினத்தை ஒடுக்கியதன் வழி மனிதகுல வரலாறு தலைகீழாக மாறியது.
விளிம்புநிலை அரசியல் பேசுவது என்பது இன்றைக்குப் பலருக்கு வணிகமாகவும் பேஷனாக வும் இருக்கிறது. அல்லது அப்படிப் பேசுவதன்மூலம் பொதுவெளியில் தங்களை யோக்கிய வானர்களாக அடையாளப்படுத்திக் கொள் கிறார்கள். ஆனால் நடைமுறையில் எதுவுமில்லை. அதாவது ஒருவர் சாதி, பாலின ஆதிக்க நீக்கத்தைத் தன்னுள் செய்துகொள்ளாது வெறுமனே பெண் விடுதலை, தலித் விடுதலை, பால்புதுமையர் விடுதலை என விளிம்புநிலை அரசியல் பேசுவது என்பது ஒரு வணிகச் செயல்பாடுதானே. இத்தகைய போக்கை இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் மத்தியில் பார்க்கமுடிகிறது. எழுத்தாளர், இயக்கச் செயல்பாட்டாளர் என இரு நிலையிலும் செயல்படுபவர் எனும் நிலையில் எவ்வாறு இதைப் பார்க்கிறீர்கள்?
பிழைப்புவாதிகள் எல்லாக் குழுக்களிலும் இருப் பார்கள். அவர்கள் ஆட்சி அரசியல், ஊடகம் போன்ற அதிகார மையங்களின் தொடர்பிலிருப்பார்கள். இந்தவிசைப்பலகை போராளிகள் தகவல்களையும் ஆவணங் களையும் களவாண்டு ஊடகங்களில் பரபரப்பு உருவாக்குவார்கள். இப்போலிப் போராளிகள் அனைத்துவிடுதலை களத்திலும் எங்காவது வந்து நின்று விளம்பரத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் சிலஆவணங்களை உருவாக்கி ஆதாரமாக வைத்துக்கொள்வார்கள். நிஜ களப் போராளிகளின் இடத்தைஊடக அதிகார அரசியல் ஆதரவுடன் பொது வெளியில் தட்டிப் பறித்துக்கொள்வார்கள். சிலர் பாதிக்கப்பட்ட, போராளி பிம்பத்தை உருவாக்கி உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடையில் நிதிக் கொள்ளையடிப்பார்கள். அடிப்படைச் சமூக அரசியல்மாற்றமே குறிக்கோள் என்பதால், சமூகப் பணிச் சுமையில் இதையெல்லாம் களையெடுப்பது தங்கள் பணியல்ல எனக் களப்போராளிகள் பொருட்படுத்தாமல் கடந்து விடுகின்றோம்.
உங்களின் கவிதைகள் பெண்விடுதலை அரசியலை பிற எல்லா விளிம்பின் விடுதலையுடன் இணைத்து முன்வைக்கும் வகையில் தனித்துவமாக உள்ளன. இந்நிலையில், பெண்ணிய அரசியல் தலித்தியம், பழங்குடி, சூழலியல், பால்புதுமையர் எனப் பிற விளிம்புநிலை அரசியல்களுடன் இணைந்து செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் என்ன?
LGBTQ+ வானவில் குடை போல அனைத்து விடுதலையரசியலும் ஒரு சங்கிலியில் இணைய வேண்டுமென்பது கனவுப் பெருந்திட்டம். ஆனால் சூழலியல் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களின் பிடிக்குள் உள்ளது. தொண்ணூறு சதம் விளிம்புநிலை விடுதலையரசியல் அமைப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றப் போதுமான கருத்தியல் பலத்துடன் இயங்குவதில்லை. தலித்தியத்தைப் பெண்ணியத்தை, பால்புதுமையர் அரசியலை உள்வாங்காத அல்லது ஏற்காத பிற்போக்குநிலை தொடர்கிறது. குறிப்பாகச் சூழலியல் அரசியல் சாதியைக் கடந்து செயல்பட வேண்டியிருக்கிறது. ஜென்டர் பாலிடிக்ஸ் பேசும் நாம் தான் பிற விளிம்புநிலை அரசியலை இணைத்துப் பேச குரல்கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜென்டர் பாலிடிக்சில் இயங்குபவர்கள் சுயநல மீடியேட்டர்களால் வழிநடத்தப்படும் அபாயமும் சூழ்ந்திருக்கிறது. இந்த மீடியேட்டர்களை மிக எளிதாக அடையாளம் காணலாம். வெளிநாட்டு உள்நாட்டு நிதி கிடைக்கிறது என்பதற்காகவே இவர்கள் திடீரென்று தலித்தியம் பெண்ணியம் பால்புதுமையர் பிரச்சினையெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள். ஒரு நிறுவனத்தைக் கூட உருவாக்குவார்கள். ஒன்றுக்கு நிதி நின்றதும் நிதிக் கிடைக்கும் அடுத்த விசயத்தைக் கையிலெடுப்பர். படைப்பு வழியாகவும் களத்திலும் தொடர்ந்து நமதுஅரசியலுக்கான இணைப்பை நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும். அதே சமயம் இதுபோன்ற வழிப்பறி கொள்ளையர்களையும் அடையாளம் காட்ட வேண்டும்.
இன்றைய இந்திய, தமிழகச் சூழலில் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் மார்க்சியச் சிந்தனைகளின் முக்கியத்துவமும் கூட்டிணைவும் தேவையென்ற கருத்தியல் சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளர், இயக்கச் செயல்பாட்டாளர் என்ற முறையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
உலகில் சமத்துவச் சமூகம் புரட்சிகரச் சமூகத்தை வென்றெடுக்க உருவான முற்போக்கு சித்தாந்தங்களும் கொள்கைகளும் செயல்திட்டங்களும் முற்றுமுழுதாய் அனைத்து இனங்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஒழித்துச்சமத்துவத்தை நிலைநாட்ட போதுமானவையாக இல்லை என்பதைக் காலம் நமக்குப் படிப்பித்து இருக்கிறது. ஆகவே நம் நிலத்தில் தோன்றிய, வளர்த்துஎடுக்கப்பட்ட பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் அயோத்திதாசரியம் போன்ற சித்தாந்தங்களின் புரட்சிகரச் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை அறத்துக்கான சிந்தனைகளைக் கொள்கைகளை இணைத்து அரசியல் செயல் திட்டங்களை வகுத்து செயல்படுவதே இன்றைய மாற்று அரசியலுக்குத் தேவையான செயல்திட்டம்.
மதவாத எதிர்ப்பு, ஆணாதிக்க மற்றும் சாதிய தகர்ப்பு போன்ற நெடும் போராட்டங்களின் களச் செயல்பாட்டிற்குத் தாங்கள் வாழும் மாநகரச் சூழல் எந்த அளவு உதவக்கூடியதாகவும் தடை போடுவதாகவும் உள்ளது ?
கடந்த காலங்களில் தலைநகரிலிருக்கும் அமைப்புகள் கட்சிகள் மாணவர்களை இணைத்துப் போராட்டங்களை நடத்த முடிந்தது. பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாசிச அடக்குமுறையால் ஜனநாயக வெளி குண்டாந்தடியால் துப்பாக்கிகளால் புல்டோசர்களால் முடக்கப்படுகிறது.
அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துக்காகச் சிறைப்படுத்தும் கொல்லப்படும் ஆபத்து அதிகரித்திருக்கிறது அதற்குத் தயாராகவும் இருக்கிறோம். உழைக்கும் வர்க்கம், மாணவர்கள், அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை போராளிகள், சிறுபான்மையோர், விளிம்புநிலையோர் ஜனநாயக வழியில் அமைதியாய் பதாகைப் பிடித்துப் போராட முடியவில்லை. இந்துத்துவ, சங்க் பரிவார் பயங்கரவாதிகளும் அவர்களின் ஏவல் காவல்துறையும் பல்கலைக்குள் நுழைத்து தாக்குகிறார்கள் சுடுகிறார்கள். மக்களின் அறவழிப் போராட்டங்களில் புகுந்து தாக்குகிறார்கள் சுடுகிறார்கள். ஊரை கொளுத்தி உடைமைகளைக் கொள்ளையடிக்கிறார்கள். மனிதஉரிமை கருத்துரிமை பேசியதற்காக அர்பன் நக்சல் முத்திரைக் குத்தப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுகள், பிணை மறுப்புச் சிறைத்தண்டனை கொடுமைகள் நடக்கின்றன.
இங்கு அறிமுகமான நிறைய நண்பர்கள் சமூகச்செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிவிட்டனர். சோசியல் மீடியா பக்கங்களைக் கூட மூடிவிட்டனர். சிலர் கட்சி அமைப்புகளிலிருந்தும் வெளியேறி விலகி நிற்கின்றனர். என் தலைமையில் இணையும் மாணவர்கள் பிரச்சனைக்களுக்குள்ளாகக் கூடாதென்று அவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாதென்று போராட்டங்களை ஒருங்கிணைப்பதில்லை. மூத்த அமைப்புகள் இயக்கங்கள் கட்சிகளும் வெளிப்படையாகப் போராட்டங்கள் நடத்த முடியாத சூழல். போராட்டங்களைக் குறைத்து அறைக் கூட்டங்களில் அரசியல் விவாதங்களை முன்னெடுக்கிறோம் செயல்படாமல் இருக்க முடியாது இல்லையா? பாசிசத்தின் அனுமதியுடன்தான் சுவாசிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், பாசிசம் இறுதியில் மக்களிடம் தோற்றதே வரலாறு.
நவீன, நுகர்வுப்பெருக்கம், பன்னாட்டுபோர் வணிக அரசியல் சூழல், இந்திய சாதிய, ஆணாதிக்க, சனாதனச் சூழல் எல்லாம் கலந்த ஒரு சிக்கலான உளவியலாகத் தமிழ் உளவியல் இருக்கிறது. இச்சூழலில் பெண்ணிய எழுத்தின் முக்கியத்துவம் எவ்வாறு அமைகிறது?
ஒரு சமூகத்தில் பெண் விடுதலையடைந்தால்தான் பிற பகுதியினர் விடுதலையடைய முடியும். ஓட்டை வாளியில் நீர் சேந்தி விளைச்சல் காண முடியாது. ஆணாதிக்கச் சமூகம் பெண் மையச் சமூகமாக நகர்ந்தால்தான் சமூக மாற்றமும் சமூகப் புரட்சியும் நடக்கும். அதுவரை மக்களாட்சி என்ற பெயரில் முதலாளிகள், கார்ப்ரேட்டுகளின் அடிமையாய் வாழ்ந்து வீடுபேறு அடைய முடியும். பெண்ணியம், பெண்ணியரசியல், விளிம்புநிலையிலிருந்து மையஅரசியல் அதிகார நிலை எட்ட வலுவான பெண்ணியஅரசியல் இயக்கம் அவசியம். பெண்ணியச் சொல்லாடல் பெண்ணெழுத்து மைய நீரோட்டங் களாய் மாறும் காலம் எழும். ஆண்மையக் கழிவுகள் கசடுகள் அடித்துச் செல்லப்பட்டு மொழியும் நிலமும் புத்துயிர்ப்பு பெரும்.
கவிதை சார்ந்து இல்லாவிடினும் முகநூலில் தொடர்ந்து இயங்குபவர் நீங்கள். நவீன கவிதைகளுக்கான எல்லையற்ற ஒரு பரந்தவெளியாக முகநூல் விரிந்துள்ளது. கவிதைகள் அளவுக்கு அதற்கான விளம்பரங்களும் நிறைந்திருக்கும் அச்சூழலில் இப்போக்கு விளைவிக்கும் நன்மை, தீமை குறித்த தங்களின் அவதானிப்பு?
புதிதாக எழுத வருகிறவர்கள் தங்கள் அடை யாளத்தைத் தனித்துவமாக வெளிக்காட்ட முடிகிறது. சின்ன வட்டமோ பெரிய வட்டமோ பயனாளிகளுக்கு உடனடி சமூக அடைவு கிடைக்கிறது. கடந்த காலங்களில் கவிஞராய் அடையாளம் பெற பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். தற்காலத்தில் சமூக ஊடகத்தில் ஒரு சில வாரங்களில் நிகழ்ந்துவிடுகிறது.
ஜோசியம் பார்ப்பவர்கள் பிரபலங்களுடன் படமெடுத்து வைத்து வியாபாரத்தில் வெற்றியடையப் பார்ப்பார்கள். கவிஞர்களும் ஜோசியர்கள் மாதிரி உருமாறிவிட்டனர். கொள்கை முரண் பேணாது நாலு பிரபலங்களுடன் விளம்பரம் செய்கிறார்கள். நாலு பேர் போற பாதை நல்வழி என்ற ஆழ்ந்த மூடநம்பிக்கையுடைய நம் மக்கள் தொடர்கிறார்கள். இளையராஜாவை கொள்கை அடிப்படையில் விமர்சிக்க தகுதியிருக்கிறது என நம்பும் படைப்பாளிகள் சுய விமர்சனத்துக்குத் தயாராக இருப்ப தில்லை.
இன்று பெண் எழுத்தின் போக்கு என்னவாக இருக்கிறது. எதைநோக்கிச் செல்ல வேண்டும்? புதிதாக எழுத வரும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
புதிதாக எழுத வருபவர்கள் அதிகம் படித்தவர்கள், என்னைவிடப் புத்திசாலிகள் உலக அனுபவம் வாய்த்திருக்கிறது. பெண்ணியம், பெண்ணெழுத்துத் தளத்தில் இயங்க அரசியல் தெளிவு வேண்டுமென்றால் உலகளாவிய பெண்ணியம், பெண்ணெழுத்துக் குறித்துக் கற்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக் கும் மலை மடு வித்தியாசம் கொண்டோரை அடை யாளம் கண்டு புறக்கணிப்பதன் வழி புதியவர்களின் தனித்தன்மை காக்கப்படும். தமிழின் கொல்லைப் புறத்தில் பெண்ணியம், பெண்ணெழுத்து அரசியலை குட்டையாய் குறுக்கும் அதிதீவிர இலக்கிய அரசியல் நகர்த்தல்கள் நடக்கின்றன, எவரும் அதிலூறும் ஒரு மட்டையாகிவிடக் கூடாதென விழைகிறேன்.
உலக அறிவு விரல் சொடுக்கில் கிடைக்கும் காலத்தில் எதிர்ப்பாற்றலை மாற்றரசியலை அவரவரே உருவாக்க முயற்சிக்க வேண்டும், அது முன்னோக்கி நகர உதவும்.
வானமும், மேகங்களும் இழைந்து புழங்கும் வெளியின் ஒரு துண்டு. மூன்று பக்கம் சுவரும், ஒருபக்கம் கண்ணாடியும் கொண்டதோர் அறை. மலைச் சிகரத்தில் சரிவை நோக்கியபடி இருக்கும் மனிதக்கூடு. நிர்மானித்த காலம் முதல் பறவைகளை எள்ளியபடி அது மிதந்துகொண்டிருந்தது.
அதன் அகத்தில் அவன் இருந்தான். கண்ணாடிச் சுவரின் திறப்பைக் கொஞ்சம் நெகிழ்த்தினாலும் குளிர்க்காற்று பாய்ந்து பற்றியது. கீழே பார்வையைத் தாழ்த்தினால் புற்படுக்கையின் மீது விழிக்கதிர் உருண்டு அதல பாதாளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றில் போய் விழுந்தது. கண்ணாடித் திரவம் பாய்கின்ற நீர்வழி. திவலைகள் தெறித்து, தண்ணீர்த் துகள்கள் பரவி, நீர்ப்புழுதியைப் படியவிட்டு கடக்கும் சிறுவெள்ளம். அவ்வப்போது மீன்கள் எழும்பி மறைந்தன.
நீ கனவை அடைய முயற்சி செய்கிறாய். நான் கனவாகவே இருக்கிறேன். வெகுதூரம் பயணம்செய்து, மலைச் சிகரத்தின் மீதேறி, களைத்து உட்கார்ந் திருக்கும் உன்னால், நீயே நிர்மானித்திருக்கும் இந்தப்பாவனை வெளியெனும் சுவரைத் தாண்டி வர முடியாது. நானோ இன்னும் மேலே பறப்பேன். எங்கும் சுற்றித் திரிவேன்! புதிர் சுவரை வருடியபடி எப்போதேனும் ஒருபறவை அவனைக் கேலி செய்தபடியே கடந்தது. சில தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் தான்தோன்றித் தனமாகச் சுற்றின.
அவன் பாடத் தொடங்கினான். தும்பி வா தும்பக் குளத்தில்... தென்றல் வந்து தீண்டும்போது... இசையில் தொடங்குதம்மா... இதயவானின் உதய நிலவே... நானன்றி யார் தொடுவார்... மாலையில் மலர் சோலையில்... இன்னும் என்னென்னவோ பாடல்கள். நினைவில் தெளிந்து எதிர்நீச்சல் பழகி மீன்களாய் மேலேறும் பாடல்கள். விரிந்தவானே வெளியே, திரிந்த காற்றே கதிரே... மனம் பிதற்றும் கவிதைகள். இவற்றுக்கு இடையில் தான் அவன் அறைக்குள் அவள் நுழைந்திருந்தாள்.
இலேசாகத் திறந்திருந்த கதவை அவள் தட்டியதும், உள்ளே வந்ததும் அவனுக்குத் தெரியவில்லை. அவன், வேதாந்தமே விஞ்ஞானமே விளங்க முடியாத அதிசயமே... என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் கூடு பாய்ந்து மேலேறிக்கொண்டிருக்கையில் பின்னால் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டு, இலேசான பதற்றத்துடன், அற்புதங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் நிகழலாம் என்பதற்கு இதை விட வேறேதாவது சான்று இருக்க முடியுமா என்றெண்ணிக் கொண்டு, அவளைப் பார்த்தான். அவள் ஒரு சிறு புன்னகைக் கரிசனமும் இன்றி அழைத்தாள்.
“நான் காட்டாத்துல குளிக்கணும். தொணைக்கு வரமுடியுமா?”
அவன் குழம்பினான். சிரிப்பதா வேண்டாமா எனத் தவித்தான். அந்த ஒரு கணமே, அவளுடைய உருண்டை முகம் அவன் மனதில் பதிந்துவிட்டது. சரிவில் இறங்குகையில் அவளுடைய கால்கள் வரையாடுகளினுடையதாய் இருந்தன. அவனுக்கோ கால்கள் பின்னின. இவள் என்னைக் கவர்ந்து செல்லவந்திருக்கும் நீர்கன்னியோ? அவள் சிரித்துக்கொண்டே திரும்பி, சொன்னாள்.
“தேவையில்லாத கற்பனையெல்லாம் வேணா!”
அய்யோ, என்ன இது? மனதைப் படிக்கும் இவள் யார்? அவன் மீண்டும் சிரிக்க முயன்று தடுமாறினான்.
“காட்டாத்துல குளிக்கலாம்னு நெனச்சேன். இந்த வழியும், ஆறும், கொஞ்சம் ரிஸ்க்கான எடங்களா பட்டுச்சி. யாராவது கூட இருந்தா நல்லாருக்குமேனு தோணுச்சி. நெனச்சுக்கிட்டே வரும் போது உங்க பாட்டு கேட்டது. மொழி... இல்ல... இசை என் தயக்கத்த ஒடச்சிடுச்சி. அதனாலதான் உங்கள தொணைக்குக் கூப்டேன்.”
அவன் முகத்தைத் தாழ்த்தி சரிவில் கவனத்தைச் செலுத்தினான். அவளோ பதிலை எதிர் நோக்காமல் விடுவிடுவெனக் கீழே இறங்கிச் சென்றுகொண்டே இருந்தாள். இறுக்கமான ஷார்ட்ஸூம், தளர்வான பனியனும் அணிந்திருந்தாள். கால்களில் அருமையான ஷூ இருந்தது.
ஆற்றை நெருங்க நெருங்க காட்டுப் புற்களின் வாசனை அடர்த்தியாய் விரவி ஈரப்பதம் இமிரிய காற்று தழுவியது. எங்கும் காட்டுப் புற்கள். வேறு வகையான செடிகள் எவற்றையும் பார்க்க முடியவில்லை. காட்டாற்றின் நடுவே அங்கங்கே எழும்பி இருக்கும் பாறைகளில் மோதி நுரைத்துச் சுழித்து அங்கிருப்பவற்றோடு பேசிக்கொண்டே சென்றது நீர்.கூப்பிடு தொலைவில், பாறைக்கூட்டங்களுக்குஅருகில், மணல் தேறியிருக்கும் ஒரு சிறுசமவெளியைத்தேர்ந்து, அவள் குளிக்கச் சென்றாள். அவன் வேறொருபக்கம் நீரில் இறங்கினான். அது உறைநிலைக்குச் செல்லும் வெப்ப நிலையின் அருகில் இருந்தது.
அவர்கள் இருவரும் அப்படித்தான் அந்த மலை யுச்சியில், மேகங்கள் தொட்டுச் செல்லும் அந்தர வெளியில், எப்போதும் மழைத்துளிகள் வீழ்ந்து கொண்டிருக்கும் குன்றில், பாறையொன்றின் மீது எழுப்பப்பட்டிருக்கும் சிறிய தங்கும் விடுதி அறையில் சந்தித்துக் கொண்டார்கள்.
ஆனால் உண்மையில் அதையே அவர்களுடைய முதல் சந்திப்பாகக் கொள்ள முடியாது. கோட்டயம் நகரத்துக்கு வடக்கே, வாகமன் நோக்கி முன்னேறும் சாலையில் பஜாஜ் அவெஞ்ஜெரில் அவன் போய்க் கொண்டிருக்கையில், அவளை முன்னமே பார்த் திருந்தான். தன்னுடைய ராயல் என்ஃபீல்ட் இன்டெர் செப்டார் பைக்கில் வேகமாக அவள் அவனைக் கடந்தாள்.
அவள் அணிந்திருந்த மேல் கோட்டுக்குள் காற்று நுழைந்து தழுவியிருந்தது. மொழுமொழுவென அழகானதொரு ஹெல்மெட், கண்ணாடி, கை உறைகள், காலில் கருத்த ஷூ, பழுப்புநிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். இருக்கையில், அவளுக்குப்பின்னால், பயணப்பை உறுதியாகக் கட்டப் பட்டிருந்தது. அதனுள்ளே கேம்பிங் கியர்ஸ், கூடாரம், தூங்கும் பை, படுக்கை, சிறிய அடுப்பு, தேயிலை அல்லது காபிதூள், சர்க்கரை, சில நொறுக்குகள், முதலுதவி மருந்துகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அவனும் கூட அவற்றைத் தன்னுடைய பயணப்பையுள் வைத்திருந்தான்!
அவள் அனுபவம் வாய்ந்த பயணியாக இருக்க வேண்டும் என்பது அவனுக்கு உறுதியாகிவிட்டது. திருப்பங்களில் இலாவகமாகத் திருப்பினாள். சக பயணிகளையும், வாகனங்களையும் கச்சிதமான இடைவெளியோடு கடந்தாள். சாலையில் தென்படும் ஆட்களில் சிலரை, அனிச்சையாய் திரும்பிப் பார்ப்பதைப் போல, அவளும் அவனை அனிச்சையாகத் திரும்பிப் பார்க்கும் சம்பவம் அப்போது நேர்ந்தது.
அவர்கள் குளித்துவிட்டு விடுதி அறையை நோக்கிய சரிவில் மேலேறியபோது அவள் உடல் இலேசாக நடுங்கியது.
“தண்ணி இவ்ளோ குளிர்ச்சியா இருக்கும்னு நான் எதிர்பாக்கல. விட்டா, அப்டியே ஒறஞ்சிருப்பேன்!”
அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆமோதித்துத் தலையை ஆட்டினான்.
“ரூம் போனதும் எதையாவது சூடா ஆர்டர் செஞ்சி குடிங்க!”
அவள் புன்னகை செய்தாள். அடுத்த நாள் காலையிலேயே அவன் புறப்பட்டபோது அவளிடம் சொல்லிவிட்டுப் போகலாமென எண்ணினான். குளிக்கப் போகையில் அவளின் அறையெண்ணைச் சொல்லியிருந்தாள்.
அவளுடைய அறைக் கதவைத் தட்டியதும், மெல்லிய முனகலுடன் உள்ளே வரச்சொல்லி அழைப்பது கேட்டது. அவன் உள்ளே சென்று பார்த்தான். அவள் காய்ச்சலில் நடுங்கியவாறு கிடந்தாள். தொலைபேசியில் வரவேற்பறைக்கு அழைத்து, மருத்துவரை ஏற்பாடு செய்யச் சொன்னான். அவள் குணமடையும் வரை தன்னுடைய பயணத் திட்டத்தை அவன் துறக்க வேண்டியதானது.
வாகமனிலிருந்து திரும்புகையில் இருவரும் இணையாகவே தங்களின் வண்டிகளில் மலைப் பாதையில் கீழிறங்கி, கோட்டயம் ரயில் நிலையத்துக்கு முன்னாலிருக்கும் ஒரு தேநீர்க் கடையில் தேநீரைப் பருகிவிட்டுப் பிரிந்தார்கள். இடையில் அவர்கள் நிறையப் பேசிக்கொண்டார்கள். தன்னைக் குறித்துப் பெரிதாக ஒன்றுமே சொல்லாத அவள், உலகம் முழுவதையும் தன் இருசக்கர வாகனத்தால் சுற்ற வேண்டும் என்னும் ஆசையை மட்டும் அவனிடத்தில் அழுத்தமாகத் தெரிவித்தாள்.
அதன் பின்னர் வெவ்வேறு நிலப்பரப்புகளில் உயிர்த்துக்கொண்டிருந்த மனோரஞ்சனியும், ஞான குருவும் கடிதங்களிலும், தொலைபேசியிலும் பேசிக் கொண்டனர். ஆசிரியர்களாய் இருந்த அவர்கள், தங்களுக்குக் கிடைத்த நீண்ட பள்ளி விடுமுறை நாட்களில், ஆண்டுக்கு மூன்று முறை சந்தித்து, ஒன்றாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள். செப்டம்பரிலும், டிசம்பரிலும் கிடைக்கும் விடு முறைகளைச் சில நேரங்களில் மழையும், பண்டிகை களும் பங்கு போட்டுக்கொண்டன. கோடைக் காலங்கள் அவர்களை உற்சாகம் கொள்ள வைத்தன. பகுதி பகுதியாக இந்தியாவை முழுவதுமாகச் சுற்றிவிட வேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டார்கள்.
கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, வங்காள விரிகுடா கரையை ஒட்டியவாறே கொல்கத்தா வரைக்கும். பஞ்சாப் தொடங்கி நாகலாந்து வரை இமயமலையின் அடிவாரத்தை உரசியபடி. திருவனந்தபுரத்திருந்து தாத்ரா நாகர்ஹவேலி வரைக்கும். கம்பாத் மற்றும் கட்ச் வளைகுடாக்களையும், இந்தியப் பெரும் பாலைவனத்தையும் ஊடுருவி பஞ்சாப் வரை. தமிழகத்தின் தென்முனையிலிருந்து இந்தியாவின் வடமுனை வரையும், பின்னர் மய்யப்பகுதியில் இடதும் வலதுமாய் ஒரு சிலுவையைப்போல. அவர்களின் சக்கரங்கள் மலைகளிலும், சமதளங்களிலும் உற்சாகமாய் ஏறி இறங்கின. விசிறும் காற்றில் அவர்களின் வாகனச் சத்தம்காற்று வெளியைக் குடைந்தது. புதிய புதிய நிலப்பரப்புகளை வடிவமைக்கும் சிற்பிகளெனத் தங்களைக் கருதிக்கொண்டார்கள். வகை வகையான நிலத் தோற்றங்களும், முகத் தோற்றங்களும், வாழ் முறைகளும், மொழிவழக்குகளும் உற்சாகப்படுத்தின.
பயணங்களின் இடையே கிடைத்த சொற்ப ஓய்வில், சொற்ப அளவில் அவர்கள் பேசிக்கொண் டார்கள். பெற்றோர்கள் பயணத்துக்குகந்த பைக்கை வாங்கிக் கொடுத்து உலகம் சுற்ற வாழ்த்தியதை மனோரஞ்சனி ஆர்வத்தோடு சொன்னாள். இளமை காலம் முதலே பைக்குகளின் மீது கொண்டிருந்த ஆர்வம், சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வமாக வளர வளர உருமாறியதை ஞானகுரு சொன்னான்.
ஒரு கோடையில் கொல்கத்தா சென்றபோது அவர்கள் அதிகம் பேசிக்கொள்ள முடிந்தது. வண்டிகளை நிறுத்திவிட்டு கால்நடையாகவே கொல்கத்தா வின் வீதிகளிலும் சாலைகளிலும் குறுக்கும் நெடுக்கு மாய் அலைந்தார்கள். விக்டோரியா அருங்காட்சி யகத்தைச் சுற்றியிருக்கும் மைதானங்களில் சிறுவர் களுடன் கிரிக்கெட் ஆடினார்கள். புனித பவுல் கதீட்ரலில் மனோரஞ்சனி நீண்ட நேரத்துக்கு மௌனமாக அமர்ந்திருந்தாள். அங்கிருந்து திரும்ப எண்ணிய மனோரஞ்சனியை சம்மதிக்க வைத்து சிங்கூர், புர்துவான், போல்பூர் வழியாகச் சாந்திநிகேதன் வரை பேருந்தில் அழைத்துச் சென்று வந்தான் ஞானகுரு. கொல்கத்தாவிலிருந்து பைக்கு களில் திரும்பும் வழியில், ஒரு காட்டிடையே, அகன்ற பாறையின் மீது, கற்திட்டைகள் நிறைந்திருந்த இடத்தில் அமர்ந்து, அவள் மெல்லிய புன்னகையோடு தலையாட்டிச் சம்மதிக்க, தன் காதலைத் தெரிவித்தான் ஞானகுரு.
அந்தக் காலைக்குக் கொண்டலாத்தியின் குரல் பின்னணி பாடிக் கொண்டிருந்தது. தோட்டத்து செம்பருத்திகளில் தேன்சிட்டுகள் வந்து வந்து அந்தரத்தில் மிதந்தபடியே தேனை உறிஞ்சின. அவற்றின் சிறகடிப்பு தேன் குடிப்பதால் உண்டாகும் களிப்பா, அல்லால் தேன் குடிப்பதற்கு மேற்கொள்ளும் பாடா என்று நினைத்தான் ஞானகுரு.
படுக்கையிலிருந்து எழுந்ததும் பெரும்பாலும் தேநீர் தயாராகிவிட்டிருக்கும். மனோரஞ்சனி தூங்கிக்கொண்டேயிருப்பின் அவன் தயாரிப்பான். இல்லைஎனில் அவள். மனோரஞ்சனியோ, ஞானகுருவோ முன்னறை நாற்காலியில் வந்து உட்கார்ந்திருக்கையில் ஒருவருக்கொருவர் கோப்பைகளை நீட்டிக் கொள்வார்கள். அவர்கள் இருவரும் தேநீர் பித்துக்கொண்டவர்கள். பலவிதமான சுவையும் மணமும் கொண்ட தேநீரைப் பருகியவர்கள். பைக் பயணத்தில் பல இடங்களில் தேநீரைச் சுவைத்து, எத்தனையோ விதமான பிராண்டுகளுக்குத் தாவிப்பார்த்து விட்டவர்கள்.
விரும்பிய பிராண்டுகளை வெளியிலிருந்து தருவிப்பது என்பது மாறி, ஊரைச் சுற்றியிருக்கும் அங்காடிகளில் கிடைக்கின்ற பிராண்டுகளையே வாங்கத் தொடங்கி, பலவற்றுக்கும் கடந்து, இப்போது ஆ.வே.தாமஸ் தங்க பிராண்ட்டை பருகினார்கள். அவள் நீட்டிய தேநீர் கோப்பையில் அதிகாலையின் மொத்த ரம்மியமும் வீசியது. நுண்மையான நுரைப் பொங்கிய தேநீரின் வட்ட முகம். ஆவி மெல்ல எழும்பி முகத்தில் படிந்து இதமளித்தது.
திரவங்களுக்கென்று ஒரு திடமான வடிவம் கிடையாது. அவை இருக்கும் பாத்திரத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும். அல்லது அதைப் போலவே வடிவத்தை மாற்றும். நம்மால் ஏன் அவ்விதம் முடிவ தில்லை என்று ஞானகுரு நினைத்தான். ஒருவேளை திட திரவ வாயுக்களின் கலவையினால் ஆன உடல் என்பதால் மனிதனுக்கு அப்படியொரு குழப்பம் மேலிடுகிறதோ என்று தோன்றியது.
அவள் ஒரு கோப்பையுடன் அவன் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். அவன் ஒரு புன்னகையுடன் அவளை நோக்கிவிட்டு, தூயதும் தெள்ளியதுமாயிருந்த இளங்காலை மனதின் துப்புரவிலிருந்து ஒரு கதையை எடுத்துச் சொல்லத் தொடங்கினான். அவன் அவளுடன் எல்லாவற்றையும் கதைப்பான். அவளும் அவனுக்கென்று சில கதைகளை வைத்திருப்பாள். அல்லது அவன் விவரிக்கையிலேயே, அவள் மனதில் ஆழப்புதைவிலிருந்து சில சடாரென முகிழ்த்துக் கிளைத்து வெளியே வரும். தேநீர் கோப்பை தீர்ந்து போவதற்குள்ளாகச் சொற்ப அளவிலேனும் சில கதைகளை அவர்கள் பகிர்ந்து முடித்திருப்பார்கள்.
அவ்விதம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தேன் சிட்டுகளும், சிட்டுக்குருவிகளும் முன்னறை கம்பிச்சுவரின் மேல் அமர்ந்தோ, அல்லது உள்நுழைந்து வந்தோ அவர்களைச் சுற்றிப் பறக்கும். முன்னாலிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து பார்த் திருந்து விட்டு மீளப்பறக்கும்.
ஞானகுருவின் கதைகள் புதிதாய் இருந்தன. ஆனால் மனோரஞ்சனியோ, நீண்ட நாட்களாய் அவனிடத்தில் ஒரே கதையையே சொல்லிக்கொண்டிருந்தாள். அதை ஒவ்வொரு முறை சொல்லும் போதும், முதன்முதலாய் அவனோடு குளித்த நீரின் குளுமையை அவள் கொணர முயன்றாள்.
அவள் கதை தேங்கிய நீரின் மணம் கொண்டு, பல்வேறு உயிரினங்களைப் பெருக்கி, நெருக்கடிகளை அதிகரித்து நெளிந்தது. தன்னுடைய கதைகளைப் புதுப்பிக்க அவளுக்கு வழியேதுமில்லாமல் போய் விட்டது. அவர்கள் மணம் புரிந்துகொண்டு குடியேறிய வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் கம்பீரமாக நிற்க வைக்கப்பட்டுப் பளபளவென மின்னிய அவளின் ராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டார், மங்கி மங்கி சிறிது சிறிதாக ஒளியிழந்து ஒருநாள் முற்றிலுமாக மறைந்து போனது.
பின்னர் வாகனம் நிறுத்துமிடத்தில் மனோரஞ்சனி மலர்ச்செடிகளை நட்டாள். அங்கு மலர்களிடத்தில் வந்த கொண்டலாத்திகளிடமும், வெள்ளைச் சில்லை களிடமும் அவற்றின் சிறகுகளின் மீதமர்த்தித்தன்னை எங்காவது வெகுதூரம் கூட்டிச் செல்ல வேண்டினாள். தோட்டத்தில் பூத்திடும் மலர்களின் மணங்களோடு பயணம் செய்வதற்கு யத்தனித்தாள். பட்சிகளும், புஷ்பங்களும் கைவிரித்த நிலையில் எண்ணங்களை மட்டுமே முடுக்கிவிட்டுப் பயணங் களை மேற் கொண்டு வந்தாள் மனோரஞ்சனி.
கதையென்பது என்ன? நம்முடைய கதையை நமக்கே சொல்லிக்கொள்வதுதானே? அவனும் அவளும்பயணத்தின்போது சந்தித்துக்கொண்ட கதையை, பார்த்த இடங்களை, கிடைத்த அனுபவங்களை, அவன்அறிந்தக் கதையை அவளும், அவள் அறிந்தக்கதையை அவனும் தினந்தோறும் அவ்விதம்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அன்றும் அப்படித்தான் ஞானகுரு கதையைச் சொல்லத்தொடங்கினான்.
ஆனால் மனோரஞ்சனி அவன் சொன்ன கதைகளைக் கேட்கவில்லை. நிர்தாட்சண்யமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு திசைகளை நோக்கினாள். அவன் முகம் பார்க்க விரும்பாதவளாய் தோன்றிய மனோரஞ்சனியை எதிர்கொள்வதற்கு விரும்பாத ஞானகுரு திகைத்துத் தடுமாறினான். அவளே முகம் காட்டாமற் போனால் பிறகு யாரிடம் தன் சொற்களைச் சேர்ப்பது?
அவன் முகத்தை அவளும் அவள் முகத்தைஅவனும் வெகு காலமாகப் பார்த்து வந்தனர். ஆழ்ந்து நோக்கி அவற்றின் அழகுகளையும், அசட்டுத்தனங்களையும், அசிங்கங்களையும் பரஸ்பரம் கண்டறிந் திருந்தனர். சொல்லப்போனால் அவன் முகம்அவளுடையதாகவும், அவள் முகம் அவனுடைய தாகவும் இடம் மாறிவிட்டதாகத்தான் ஞானகுரு நினைத்தான். மணம் புரிந்துகொண்டோ, ஒன்றாகவோ வாழும் இணையரின் முகங்கள் பெரும்பாலும் ஒரே சாயலில் இருப்பதைத் தன் நெடுங்கால ஆய்வின் வழியே கண்டறிந்திருந்தான் ஞானகுரு. முகச்சாயல் ஒத்திருந்தால் தான் பிரியமே ஏற்படுகிறது. இது ஒரு வகையான சுயமோகம் என்றும் அவன் நினைத்தான். ஆழ்ந்த தியான மனநிலையோடு தேநீர் பருகும் இத்தருணத்தில் தன் முகமே தன்னைப் பார்க்காமல் போனால் என்செய்வது என்று துணுக்குற்ற ஞானகுரு, இன்று நாம் எங்காவது வெளியில் செல்லலாம் என்று மனோரஞ்சனியிடத்தில் சொன்னான்.
சிறப்பாய் தயாராகியிருந்தாள் மனோரஞ்சனி. அவளுக்குப் பிடித்தமான பருத்திப் புடவை. தலையில் அவள் வளர்த்த ரோஜாவில் இளையது. அப்படியே தழுவி உட்செரித்துவிடலாம் போல சுகந்த மணம். இப்போது அவனிடத்தில் இருந்த ஸ்பிளண்டரை மனோரஞ்சனி அந்நியமாய்ப் பார்த்தாள். இதற்கு முன்னால் பைக்கிலேயே உட்காராதவளைப்போலத் தடுமாறி பின்னிருக்கையில் அமர்ந்து அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். எங்காவது ஒரு மலைவாசஸ்தலத்துக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படிக்கு ஞானகுருவை அவள் கேட்டுக் கொண்டாள்.
வீட்டிலிருந்து கிளம்பி சிறு நகரத்தைக் கடந்ததும் வந்த நெடுஞ்சாலையின் ஓரங்களில் பெரும் புளிய மரங்களும், தூங்கு மூஞ்சி மரங்களும் கிளைத்திருந்தன. அவளுக்கு எல்லாமே புதிதாகத் தோன்றின. சாலையோர உணவகத்தில் நின்றபடியே சிற்றுண்டியை முடித்துக்கொண்ட அவர்கள் அருகிலிருந்த செல்லாபுரியம்மன் சாமிச்சோலையில் இளைப்பாறினார்கள். பெரும் விருட்சங்கள் நிழல் பந்தலிட்டிருந்த அவ்விடம் அவளுள் மௌனத்தை நிறைத்தது. மனோரஞ்சனி எண்ணுவதை அங்கிருந்த நாகணவாய்ப் புட்கள் பிதற்ற முயன்றன. வானத்தை முட்டும் கற்தூண்களுக்கிடையில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலில் பூமிக்கும் விண்ணுக்குமாகச் சென்றுசென்று வந்த அவள் சிறிது நேரத்தைக் கழித்து அங்கிருந்து புறப்படலாமென்று விரும்பினாள்.
பொழுது மெல்ல பொலிந்து வந்தது. வெய்யில் சுள்ளென்று கிள்ளியது. அங்கிருந்து பார்த்தாலே கிழக்குத் திசையில் வானத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டியதைப் போலத் தெரியும் மலையுச்சிக்குத்தான் அவர்கள் செல்வதற்குத் தீர்மானித்திருந்தனர். அதற்கு இன்னும் பல கிலோமீட்டர்கள் போக வேண்டியிருந்தது. ஆனாலும் ஞானகுரு வேகத்தில் நிதானம் காட்டினான். மனோரஞ்சனியிடம் அவன்மட்டுமே பேசிக்கொண்டு சென்றான். அவளின் உம்கொட்டல்கள் மட்டுமே அவனுக்குக் கேட்டு வந்தன.
அவர்கள் பாதி வழியைக் கடந்திருந்தார்கள். அந்த இடத்தில் நெடுஞ்சாலைப் பள்ளங்கள் புதிதாகச் செப்பனிடப்பட்டிருந்தன. அங்கு வேகத்தடை ஒன்று இருப்பதாக சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகை சொன்னது. ஆனால் சாலையில் வெள்ளைநிற டிவைடர்களோ, எச்சரிக்கைக் கோடுகளோ வரையப்பட்டிருக்கவில்லை. ஞானகுரு கூர்ந்து பார்த்தபோது சில மீட்டர் தொலைவில் கருநிறச்சாலை இலேசான வயிறு வீக்கத்துடன் படுத்துக்கிடந்தது. ஞானகுரு ஸ்பிளண்டரின் வேகத்தை வெகுவாகக் குறைத்தான். பைக்கை சாலை ஓரமாகவே செலுத்தினான். வியூபைண்டர் கண்ணாடியில் அவர்களின் பின்னால் ஒருவர் வண்டி யில் வந்துகொண்டிருப்பது நிழல் தீற்றலைப் போல உள்ளே பதிந்தது.
மனோரஞ்சனி அவனிடத்தில் பேசத் தொடங்கினாள்.
“வாகமனில்...”
பெருவெடிப்பை போன்றொரு சப்தம் திடீரென்று எழுந்தது. என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் பின்னால் வந்த வாகனம் அவர்கள் வாகனத்தின் மீது மோதியது. ஞானகுருவும், மனோரஞ்சனியும் வண்டியிலிருந்து கீழே வீசப்பட்டார்கள். ரத்தம் கசியும் உள்ளங்கைச் சிராய்ப்பைக் கொண்டே சாலையில் ஊன்றி எழுந்து நின்ற ஞானகுரு, பதற்றத்துடன் மனோரஞ்சனியைத் தேடினான். அவன் உடல் நடுங்கியது. இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. பய உணர்வு கவ்விக்கொண்டது. ஸ்பிளெண்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து கிடந்தது. அவர்களை மோதிய பைக் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்திருந்தது. அதை ஓட்டிவந்திருந்த நடுவயது கடந்த மனிதர் அதன் அருகிலேயே கிடந்தார். மனோரஞ்சனி சாலை வேகத்தடையைத் தலையணைப் போலப் பாவித்துக்கொண்டு பேச்சுமூச்சற்று கவிழ்ந்து கிடந்தாள். மனோரஞ்சனியிடத்தில் ஓடினான் ஞானகுரு. அவன் கத்தல் அருகிலிருந்த ஊரையே எழுப்பியது.
ஆம்புலன்ஸ் வந்ததும், மருத்துவமனைக்குச் சென்றதும் எதுவும் துல்லியமாக அவனுக்கு நினைவுஇல்லை. அவர்களின் வண்டியை இடித்த பெரியவர் மயக்கத்தில் இருந்து தெளிந்துவிட்டதாகச் சொன்னார்கள். அவரைப் பற்றிய மேலதிக செய்திகளை ஞானகுரு கேட்டுக்கொள்ளவில்லை. மனோரஞ்சனிக்கு உயிர் இருக்கிறது என்று ஆம்புலன்ஸ் ஊழியர் சொன்ன பிறகே ஞானகுருவின் இதயத்துடிப்பு சீரானது. பரிசோதனைகள் முடிந்து, அவசர பிரிவில் சேர்த்து, அவனைப் பார்க்க அனுமதிப்பதற்குச் சில மணி நேரமானது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் போல மனோரஞ்சனி படுத்திருந்தாள். உயிர் காக்கும் கருவிகள் அவள் உடலுடன் பொருத்தப்பட்டிருந்தன. அவளைப் பார்க்கையில் அழுகை பீறிட்டு வந்தது.
அவனை மருத்துவர் அழைப்பதாகச் சொன்னதும் சென்று மேசை முன்னால் காத்திருந்தான் ஞானகுரு. மீண்டும் அவன் இதயம் விசைகூட்டி துடிக்கத் தொடங்கியிருந்தது. சில நிமிடங்களில் அங்கு வந்த மருத்துவர் மிக இயல்பாக அவனை விசாரித்தார்.
“நீங்க ஓக்கேதானே?”
“ஆமா சார். என்னோட ஒய்ஃபுக்கு...”
“ஷி ஈஸ் ஓக்கே! தலையில அடிபட்டிருக்கு. அவங்க கோமாவுல இருக்காங்க. மேபி இது ஷார்ட் டைம் கோமாவாகூட இருக்கலாம். இப்ப உயிர்பொழச்ச மாதிரி, கோமாவுலர்ந்தும் திடீர்னு கண்முழிக்கலாம்”
“சார்...”
“அப்புறம் இன்னொன்னு. ரெக்கவரி ஆயிட் டாங்கனா, அதுக்குப் பிறகு அவங்க நினைவாற்றல் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. மெமரி லாஸ் இருக்கும்”
ஞானகுரு அதிர்ச்சியுடன் மருத்துவரை பார்த்தான். அவர் தொடர்ந்தார்.
“ஆமா. ஒருவேள அவங்க உங்களையே அடையாளம் காணாமப் போனாலும் ஆச்சரியமில்ல. பாக்கலாம். எல்லாமே நம்பிக்கைதான்”
ஞானகுரு இன்னொரு முறை சார் என்றான். எத்தனை முறை சார் சொன்னாலும் அதுதான் செய்தி என்ற பாவனையோடு மருத்துவர் இருந்தார்.
தொடர்ந்த நாட்களில் வீட்டுக்கும், மருத்துவ மனைக்குமாகப் போய்வந்து கொண்டிருந்தான் ஞானகுரு. மனோரஞ்சனி கண்விழிப்பாளா என்று நினைப்பதை விடவும், அவள் தன்னை அடையாளம் கண்டுகொள்வாளா என்று நினைப்பதிலேயே மனம் உழன்றது. பலவாறாக நினைத்து நினைத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொள்வதற்கு முயன்றான் ஞானகுரு.
ஒருவாரம் கழிந்திருந்தது. அந்த நாளின் மஞ்சள் வெய்யில் துலங்கும் மாலை வேளையில், மனோரஞ்சனி கண் விழித்துவிட்டாளென்று கூவிக்கொண்டே அவனிடத்தில் ஓடிவந்தாள் செவிலி. ஞான குரு எழுந்து ஓடினான். சிலநிமிடங்களுக்கெல்லாம் மருத்துவரும், ஞானகுருவும், செவிலியும் மனோரஞ்சனியின் படுக்கையருகில் இருந்தார்கள்.
ஞானகுருவின் முகத்தில் அழுகையும், மகிழ்ச்சியும் தளும்பிக் கொண்டிருந்தது. மனோரஞ்சனியை பிரேமையுடன் நோக்கினான். அவள் எல்லோரையும் குழப்பத்துடன் பார்த்தாள். இலேசான வலியில் அவள் முணகுவது கேட்டது. அவள் அருகில் சென்ற ஞானகுரு அவளுடைய கையைப் பற்றிக்கொண்டான். அவள் வினோதமாக நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் ஹாஸ்பெட்டலுக்கு எதுக்கு வந்தேன்?”
ஞானகுரு அவளை மிரட்சியுடன் பார்த்தான். அவளிடத்தில் முதல் சொல்லாக எதை உதிர்க்க லாமென்று போராடியது அவன் மனம். மனோரஞ்சனியின் பார்வையிலிருந்த அந்நியமோ இன்னும் விலகிடவில்லை.
“நீங்க யாரு?”
அவனைப் பார்த்து மனோரஞ்சனி அவ்விதம் கேட்டதும் வெடித்து அழத் தொடங்கினான் ஞானகுரு. அவன் தோளை அழுத்திய மருத்துவர் சொன்னார்.
“கண்ட்ரோல் யுவர்செல்ஃப். கண்டிப்பா அவங் களுக்குப் பழய நினைவுகள் திரும்பும். அதுவரைக்கும் நீங்க அவங்கள பொறுமையா கவனிச்சிக்கணும்”
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்ட பிறகு மனோரஞ்சனியை கவனித்துக்கொள்வதற்கென நீண்ட விடுப்பை ஞானகுரு எடுக்கவேண்டியிருந்தது. முதல் வேலையாகத் தன்னுடைய ஸ்பௌண்டரை விற்றுவிட்டுப் பஜாஜ் அவெஞ்ஜர் வாங்கினான். மனோரஞ்சனிக்கென ராயல் என்பீஃட்ல் இண்டெர் செப்டாரை வாங்கி நிறுத்தினான். மீண்டும் பைக் பயணத்தைத் திட்டமிட்ட ஞானகுரு, மனோரஞ்சனியை தன்னுடைய பஜாஜ் அவெஞ்சரில்அழைத்துக் கொண்டு வாகமனுக்குக் கிளம்பினான்.
வானமும், மேகங்களும் இழைந்து புழங்கும் வெளியின் ஒரு துண்டு. மூன்று பக்கம் சுவரும், ஒருபக்கம் கண்ணாடியும் கொண்டதோர் அறை. மலைச் சிகரத்தில் சரிவை நோக்கியபடி இருக்கும் மனிதக்கூடு. நிர்மானித்த காலம் முதல் பறவைகளை எள்ளியபடி அது மிதந்துகொண்டிருந்தது. அதன் அகத்தில் அவர்கள் இருந்தனர்.
கண்ணாடிச் சுவரின் திறப்பைக் கொஞ்சம் நெகிழ்த்தினாலும் குளிர்க்காற்று பாய்ந்து பற்றியது. கீழே பார்வையைத் தாழ்த்தினால் புற்படுக்கையின் மீது விழிக்கதிர் உருண்டு அதல பாதாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் காட்டாற்றில் போய் விழுந்தது. கண்ணாடித் திரவம் பாய்கின்ற நீர்வழி. திவலைகள் தெறித்து, தண்ணீர்த் துகள்கள் பரவி, நீர்ப்புழுதியைப் படிய விட்டு கடக்கும் சிறுவெள்ளம். அவ்வப்போது மீன்கள் எழும்பி மறைந்தன.
இயற்பியல் பாடத்தில் நாம் இருவகை விசைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஒன்று மைய விசை (Centripetal force) இன்னொன்று மைய விலக்கு விசை (Centrifugal force). ஒரு கயிற்றின் நுனியில் ஒரு கல்லைக் கட்டி, இன்னொரு நுனியைப் பிடித்துக்கொண்டு சுற்றுவதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்.
கயிறு சுழற்றுகையில், வேகம் குறைந்து விட்டால் கயிறு தொய்வடைந்து, கல் கையை நோக்கி வந்து விடும். வேகம் அதிகரித்தால், கயிற்றின் நுனியில் கட்டப்பட்டிருக்கும் கல் தெறித்துவிடும். இரண்டு விசைகளும் சரிசமமாகச் செயல்படுகையில், ஒரு சீரான வட்டத்தில் தொய்வில்லாமல் கல் சுற்றிவரும்.
கூட்டாட்சி என்பதற்கான சரியான உவமை இதுவாகத்தான் இருக்கக் கூடும். விடுதலைப் பெற்ற 75 ஆண்டுகளில், இந்தியா என்னும் ஜனநாயகத்துக்குப் பல சோதனைகள் வந்துள்ளன. ஆனால், இந்தியா ஒவ்வொன்றையும் கடந்து ஓரளவு நிலையான ஜனநாயகமாக முன்னேறி வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், அதிகாரத்தை மையப்படுத்தி ஏதேச்சதிகார நாடாகமாற்ற முயன்ற ஒவ்வொரு முயற்சியும் இதுவரை மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதங்கள், நேரு போன்ற மாமனிதரின் ஜனநாயகத்தன்மை கொண்ட அணுகுமுறையால் வெல்லப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில், இந்தியா அத்தனை பிரச்சினைகளுக்குமிடையில், ஒரே நாடாக இருந்து வந்துள்ளது.
இந்தியாவின் பரப்பளவு 32.9 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். மக்கள் தொகை 140 கோடி. இந்திய அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகள் 22. அது தவிர, இந்தியாவில் 122 பெரும்மொழிகளும் 1599 சிறுமொழிகளும் இருப்பதாக இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கூறுகிறது. 1947 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு விலக முடிவெடுத்த பின்னர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்திய நாட்டுடனும், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் பாகிஸ்தானுடனும் இணைந்து இரு பெரும் நாடுகளாக உருவெடுத்தன.
இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், மேற்கத்திய அரசியல் பார்வையாளர்கள் இந்திய ஜனநாயகம் 10-15 ஆண்டுகள்கூட நிலைத்து நிற்காது என ஆருடம் கூறினர். நேரு இறந்த பின்னர் நடந்த தேர்தலிலும், பின்னர் அவசர நிலைக்காலத்திலும், இதே ஆருடங்கள் மீண்டும் ஒலித்தன. அத்தனையையும் பொய்யாக்கி விட்டு, இன்றுவரை இந்தியா ஒரு ஜனநாயக நாடாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவோடு ஒப்பிடுகையில், ஆப்பிரிக்கா பத்து மடங்கு பெரியது (3.03 கோடி சதுர கிலோமீட்டர்கள்). மக்கள்தொகை இந்தியாவைவிடக் குறைவு (121 கோடி). பேசப்படும் மொழிகள் 1200 - 2000 வரை எனச்சொல்லப்படுகிறது. பல மொழிகளுக்கு லிபிகள் இல்லை. மொத்தம் 54 நாடுகளாகப் பிரிந்து இருக்கிறது.
பொருளாதார அலகில் ஆப்பிரிக்கக் கண்டமும், இந்திய நாடும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன. ஆனால், வணிகம் மற்றும் அரசியல் தளங்களில், இந்தியா பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உருவாகியுள்ளது. 54 நாடுகளாகப் பிரிந்து இருப்பதால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தனிநாடுகள் ஒப்பீட்டில் பெரும் அரசியல் சக்தியாக மாறவில்லை. இதுதான் இந்தியா ஒரு நாடாக ஒன்றிணைந்ததன் வெற்றி.
இந்தியா ஒன்றாகி, அதற்கான அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட போது, இவ்வளவு பரந்துபட்ட மொழிகளும் கலாச்சாரமும் கொண்ட ஒரு பூகோளப் பகுதி ஒரே நாடாக இருத்தல் பற்றிய பயம்அனைவரிடமும் இருந்தது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என அரசியல் சட்டம் சொன்னாலும், அரசியல் அதிகாரங்கள் ஒன்றிய அரசிடம் கூடுதலாக இருந்ததற்கு இந்த அடிப்படை பயம்தான் காரணம். அந்தப் பயமே, இந்திய அரசியல் சட்டத்தின் 356 போன்ற பிரிவுகள் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்திய நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிராகவோ அல்லது சட்டம் ஒழுங்கு குலையும் போதோ, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரத்தைஅரசியல் சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது.
அரசியல் சட்ட உருவாக்க விவாதங்களில் பல முறை இந்த அதிகார மையப்படுத்துதல் விவாதிக்கப் பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒன்றிய அரசுக்கு மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுத்திருந்தாலும், நிதித் துறையில், மிகத் தெளிவான வரையறைகளைக் கொடுத்திருந்தது. தத்தம் வரையறைகளுக்குள் வரிகளை விதித்துக் கொள்ளும் இறையாண்மை கொண்ட சம உரிமை கொண்ட அரசு அலகுகள் என ஒன்றிய அரசையும் மாநில அரசுகளையும் குறித்து அம்பேத்கர் கூறி இருக்கிறார். பல உச்சநீதி மன்றத் தீர்ப்புகளும் இதை உறுதி செய்திருக்கின்றன.
ஆனால், தில்லியை மையமாகக் கொண்ட ஒன்றியஅரசுகள் தொடக்கம் முதலே, தில்லிதான் இந்திய அமைப்பின் அதிகாரத் தலைநகர் என்னும் மன நிலையில் செயல்பட்டு வந்துள்ளன. இந்தியை தேசியமொழி ஆக்கும் முயற்சி அதில் முதன்மையானது. அதை மூர்க்கமாக முன்னெடுக்கும் முயற்சி தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
அவசர நிலைக்காலத்தில், ஒன்றிய அரசு, பாராளு மன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மாநிலங்களின் கீழ் இருந்த கல்வித் துறையை மாநில / மத்தியப் பொதுப்பட்டியலுக்குமாற்றியது. இதனால் கல்வி மீதான ஒன்றிய அரசின் பிடி இறுகத் தொடங்கியது.
அதேபோலத் தொடக்கத்தில் மிகவும் கவனமாகப்பயன்படுத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் 356ஆவதுபிரிவு ஒரு காலத்தில், ஒன்றிய அரசுக்கு எதிரான கட்சிகளின் ஆட்சிகளைக் கலைக்க என அரசியலாக மாறியது. 1991ஆம் ஆண்டுக் கர்நாடக மாநில அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம், மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பல்வேறு விதிகளை உருவாக்கி, ஒன்றிய அரசுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆனாலும், மாநிலங்களின் மீதான மேலாதிக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நேரிடையாகவும், மறை முகமாகவும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. சில சமீபத்திய எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம்:
1. வேளாண்மை மாநில அரசின் கீழ் வரும் துறை. ஆனால், அதைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
2. துறைமுகங்கள் பொதுப்பட்டியலில் இருந் தாலும், நடைமுறையில், பெரும் துறைமுகங்கள் ஒன்றிய அரசின் நிர்வாகத்திலும், சிறு துறைமுகங்கள் மாநில அரசின் நிர்வாகத்திலும் இருந்து வருகின்றன. பாஜக அரசின் 2021 ஆண்டுத் துறைமுகச் சட்டம், எல்லாத் துறைமுகங்களையும் ஒன்றிய அரசின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.
3. மருத்துவத் துறை மாணவர் சேர்க்கைக்கு மையப்படுத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு போல, மற்ற துறைகளுக்கும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிடப் படுகின்றன.
4. நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதியை, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மட்டுமே செலவு செய்ய அனுமதி என்னும் இறுகிய விதிகள்.
5. புதிதாக அறிமுகப்படுத்த உள்ள மீன்வள மசோதா, கடற்கரை வாழ் மீனவர்களின் உரிமையைப் பறிக்கிறது என மீனவர்கள் ஏற்கனவே எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்
இது போன்ற அணுகுமுறை மாநில அரசுகள், தங்கள் மாநிலத்திற்கேற்ப திட்டம் வகுக்கும் சுதந்திரத்தை, அதற்கேற்ப நிதி ஒதுக்கும் உரிமையை முற்றிலுமாக மறுதலிக்கிறது. இது போன்ற மையப் படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டால், மாநிலங்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்து வெறும் கௌரவ உள்ளாட்சி அமைப்புகளாக மாறிவிடுவார்கள்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், பாஜக மிக நுட்பமாகத் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள், ஊட கங்கள், நீதித்துறை இவை மூன்றின் பங்களிப்பைக் குறைத்திருப்பதை அரசியலைக் கூர்ந்து கவனிப் பவர்கள் அனைவரும் உணர்வார்கள். இவை பாஜகவின் வெற்றி என்பதைவிட, ஜனநாயகத் தூண்களின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.
தேசிய அளவில், எதிர்க்கட்சித் தலைவர் எனும் இடத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. காங்கிரஸ்தன் உட்கட்சிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் தீவிரம் இல்லாத கட்சி போலத் தோற்றமளிக்கிறது. எரிபொருள் விலைஉயர்வு, வேலைவாய்ப்பின்மை, சிறு/குறு தொழில்கள்முடக்கம், வேளாண் சட்டங்கள் என மிகமிக அருமை யான வாய்ப்புகளைப் பாஜக அள்ளி வழங்கினாலும், ஒரு நாள் அடையாளப் போராட்டத்தை மட்டும் நடத்திவிட்டுக் காங்கிரஸ் தன் கடமை முடிந்தது என விலகிவிடுகிறது.
உழவர்கள் தாங்களே முன்னின்று போராடி, 700 உயிர்களைப் பலிகொடுத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. அது தாங்கள் செய் திருக்க வேண்டிய போராட்டம் என்பதைக் காங்கிரஸ்இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதைத் தாண்டி மம்தா, கம்யூனிஸ்ட்போன்ற எதிர்க்கட்சிகளும் தலைவர்களும் மக்களுக்காக என்ன பிரச்சினை களைக் கையில் எடுக்கிறார்கள் என்பதைப் பொதுமக்கள் அறிந்திருக்கிறார்களா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எமர்ஜென்சியை நினைவுறுத்தும் வகையில் பெரும் பாலான ஊடகங்கள் தவழ்கின்றன. பாஜகவை நிலை நிறுத்தவென்றே அவற்றில் பல, எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கின்றன.
கட்சிகளைக் கவிழ்க்க, எம்.எல்.ஏக்களைக் கவர,சிபிஐ, ஈ.டி என்னும் மத்திய நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவது மிக இயல்பாகிவிட்டது, பாஜக வையும், மோதியையும் எதிர்க்க நினைக்கும் எந்த அரசியல்வாதிக்கும், அவர்கள் செய்த ஊழல் தொடர்பான பயங்கள் இருப்பதால் எவரும் பெரிதாக எதிர்க்கத் துணிவதில்லை.
இந்தநிலையில்தான், பிடிஆர் என்னும் வழக்கமான அரசியல் பின்னணி இல்லாத ஒருவர் எழுந்து வருகிறார். தான் ஏற்றிருக்கும் துறை பற்றிய அறிவும், உலகளாவிய அனுபவமும், நல்ல பேச்சுத் திறனும் கொண்டவர். கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களில் தரவுகளை முன்வைத்து வாதிடக் கூடியவர். அவர் அகில இந்திய அரசியலுக்குப் புதிய முகம் என்பதாலும், ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதாலும், அவர் குரலுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது.
சமீபத்தில், ‘த வயர்’ இதழுக்காக, கரண் தாப் பருடனான பிடிஆரின் நேர்காணல் அரசியல் தளங் களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேர் காணலின் முதல் கேள்வியிலேயே அண்ணாவின் ‘தனிநாடு கோரிக்கையை’ கண்ணி வெடியாக வைத் திருந்தார் கரண். பிடிஆர் அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், அதன் பின்னால் உள்ள சித்தாந்தம் என்ன என்பதை ஒரு விரிவான தளத்தில் வைத்துப் பதிலளித்தார்.
அதே போல மாநில உரிமைகள், நட்டாவின் ஒரு கட்சி ஆட்சி என்னும் பல கேள்விகளுக்கு மிகவும் தெளிவாகப் பதில் சொன்னார். இந்தித் திணிப்பு பற்றிய கேள்விக்கு அண்ணாவை மேற்கோள் காட்டிச் சொன்ன பதில் சரியாக இருந்தது என்றா லும், ஆங்கிலம் எப்படித் தமிழ்நாட்டின் முன் னேற்றத்துக்கு உதவியது என்பதைச் சொல்லி, இந்திமாநிலங்களும் ஆங்கிலம் படித்தால் நல்லது எனச்சொல்லியிருக்கலாம் என்பதைத் தவிரக் குறை காண முடியாத நேர்காணல்.
அண்ணாவுக்கு அடுத்தப் படியாக, தம் கட்சியின் சித்தாந்தத்தை நல்ல ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் தலைவர்கள் திமுகவில் இன்றுவரை இல்லை என்னும் உண்மை, பிடிஆரின் நேர்காணலைக் காண்கையில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
1962 ஆம் ஆண்டு அண்ணா பாராளுமன்றத்தில் திராவிட நாடு கேட்ட போதும், பின்னர்ச் சீனப் போர் காலத்தில் அதைக் கைவிட்ட போதும் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவை. ஆனால், அக்காலத்தில் ஜவஹர்லால் நேரு என்னும் பெரும் உலகத் தலைவர் அவருக்கு எதிரில் நிற்கையில், அவரின் ஆளுமையின் வெளிச்சத்தில், அண்ணாவின் குரலும் கொள்கையும் எடுபடாமல் போயின.
ஆனால், இன்றிருக்கும் பிரதமர் நேரு அல்ல. தன் நிர்வாகத் திறனாலோ, கொள்கைகளாலோ தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டவரல்ல. அவருக்கு எதிரில் யாருமே இல்லாத ஒரு வெற்றிடம் இருக்கிறது. இந்தச் சூழலில், மிகத் தெளிவாக, நல்லஆங்கிலத்தில் கோர்வையாக, சரியான நேரத்தில், பிடிஆர் வழியாகக் கூட்டாட்சிக்கானக் குரல் எழுந்திருக்கிறது. வெற்றிடம் என்பதால், பிடிஆர் குரல் இன்று நாடு முழுவதும் எதிரொலித்திருக்கிறது.
பாதுகாப்பு, வெளியுறவு, பன்னாட்டு வர்த்தகம் போன்ற தளங்களில் மையப்படுத்தப்பட்ட சக்தி யாகவும், மாநில நிர்வாகம், கல்வி மருத்துவம், வேளாண்மை போன்ற தளங்களில் தன்னாட்சி பெற்ற மாநிலங்களின் கூட்டமைப்பாகவும் இந்தியா தன்னை மாற்றிக் கொள்வது, இந்தியாவை வலுவான ஜனநாயக நாடாக்கும். அமெரிக்கா போன்ற உலகின்வெற்றிகரமான ஜனநாயக நாடுகள் இந்த அமைப்பைத்தான் பின்பற்றுகின்றன.
எனவேதான் அந்த இலக்கை நோக்கி மிகவும் வலுவாக எழுந்துள்ள பிடிஆரின் குரல் முக்கியத்துவம் பெறுகிறது.
எஃப் என் சௌசா 1924-இல் கோவா, சாலிகௌவில் பிறந்தார். இளம்வயதில் தந்தையை இழந்த இவர், சின்னம்மையின் கோரப்பிடியிலிருந்து வாழ்வைப் போராடிப் பெற்றவர், அது முதல் எந்தவொரு மரபையும், வழக்கத்தையும் தேமே என்று பின் பற்றாமல், சுயாதீனமாக, தனக்கான ஒரு வழியில் வாழத் தொடங்கினார்.
மும்பை சர் ஜே ஜே கலைக்கல்லூரியில் பயின்று வந்தபோது, இந்திய விடுதலை போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக, கல்லூரியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
1947-இல் எஸ்.எச்.ரஜா (SH Raza), எம்.எப்.ஹுசைன் (MF Hussain), கே.எச். ஆரா (KH Ara) ஆகியோருடன் இணைந்து முற்போக்கு கலைஞர்கள் PAG (Progressive Artists Group) எனும் குழுவினைத் தொடங்கினார்.
(இதனை முன்வைத்து இவர்கள் வழி வந்த பல படைப்புகள் குறித்து, மணல்வீட்டின் சென்ற இதழில் இந்திய நவீனத்துவத்தின் அக்கினிக்குஞ்சுகள் எனும் கட்டுரை வந்துள்ளது.)
அதீதக் காட்டம் கொண்ட ஓவியங்களை மென்மேலும் உசுப்பிவிடும் வகையில், தலைப்புகளையும், அடிக்குறிப்புகளையும், கூர்மையாகப் பயன்படுத்தும் தெளிவுகொண்ட ஞானியாவார் சௌசா. எந்தவொரு வரையறையுமில்லா சௌசாவின் பாணி, காண்போரின் சிந்தனையைத் தூண்டி, மனதில் ஆழமாகப் பதிவன. அவரது தொகுப்புகளில் வழக்கமாக வலம் வரும் பாணிகள், சாயல்கள் எனப் பல உள்ளன.
உறைநிலையிலுள்ள வாழ்வின் நொடிகள், நிர்வாணநிலை, நிலப்பரப்புகள், கிருத்துவ சின்னங்கள் என யாவும் பெரும் மன பிரளயத்தின் சிக்கி உருக்குலைந்த சிதிலமடைந்த தன்மையில் காணமுடியும்.
வழமையாய் போன அலுப்பூட்டும் பொது மரபு களையும், அற்பமான அன்றாட வாழ்கையையும், மறுதலிப்பதும் சாடுவதுமே சௌசாவின் ஓவியங்களின் முக்கிய பண்பாக காணமுடிகிறது.
சௌசாவின் கலைத்திறனும் படைப்புத்தளமும் பல்வேறு கலை பள்ளிகளின் சாராம்சங்களைச் சார்ந்து வருகின்றன. பூர்வீக கோவாவின் நாட்டார் கலை வடிவங்கள், மறுமலர்ச்சி கால ஓவியக் கலை பண்பாடு, கத்தோலிக்க தேவாலய கிருத்துவ மத அபிமானம் மேலும் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய நிலவெளி பிரதேசங்கள் மற்றும் நவீனத்துவ ஓவியக்கலையின் புதிய முன் னெடுப்புகள் என அவரது ஓவியங்களின் சாராம்சம் நீள்கிறது. குறிப்பாக, குழப்படிகளுக்கு பஞ்சமில்லாத ஆண் பெண் உறவுகளில், அவர்தம் பாலுறவில் தோன்றும் மனக்கசப்புகள், உராய்வுகள் ஆகியவற்றை சௌசாவின் ஓவியங்களில் காணலாம்.
அளவாகவே கோடுகளை பயன்படுத்தினாலும், வடிவங்களும், உருவங்களும் நேர்த்தியாகவும் சமரசமாகவும் இருக்கும் மேலும் சௌசாவின் உருவங்கள்குறுக்கும் நெடுக்குமாய் பின்னியுள்ள கோடு களிலேயேக் காணப்படும்.
1949இல் லண்டன் சென்ற சௌசா அங்கு தனக்கென்றொரு அடையாளத்தை உருவாக்கத் தொடங்கினார். ஒரு வருடத்திலேயே, தனது படைப்புகளை தனியரங்கில் காட்சிபடுத்திவிட்டார் மேலும் அவரது சுயவரலாற்று கட்டுரை ‘புழுவின் நிர்வாண நிலை’ யினை (Nirvana of a Maggot) வெளியிட்டார்.
1967இல் நியூயார்க் சென்று குகென்ஹெய்மர் சர்வதேச விருதினை வாங்கிய பின்பு அங்கேயே குடிபுகுந்தார். உலகளாவிய மிகவும் பிரசித்திப்
பெற்ற அரங்கங்களில் அவரது ஓவியங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கின்றன.
லண்டன் டேட் கேலரி, புது தில்லி நவீன ஓவியங்களின் தேசிய அரங்கம், பாரீஸ் க்ரூஸ் கேலரி ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் காட்சிபடுத்தப் பட்டிருக்கின்றன.
சௌசா 2002 மார்ச் மாதம் காலமானார்.
‘எப்போதோ தான் கண்ட அற்புதத்தை, அன்றாடம் தனது வீட்டில் நிகழ்த்த விரும்பும் ஒரு குழந்தையைப் போலத்தான் இவ்வாழ்வு எனக்கு. நீங்கள் அமர்ந்திருக்கும் கட்டிலுக்குக் கீழே உள்ள அந்தப் பெட்டியில் சில தருணங்களை மடித்து வைத்திருக்கிறேன். அவற்றையே பூட்டிய கதவுக்கு உட்புறம் மீண்டும் மீண்டும் உடுத்திக்கொண்டு இத்தனிமையை மறைக்கிறேன்’. சொல்லி முடித்தபோது கோபால் சார் சட்டையில்லாமல் இருந்தார், அல்லது அவர் அப்படியிருந்ததை நான் முன்பே கவனிக்காமலிருந்தேனா?
அவரது அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருக்கும் அளவுக்குக் கோபால் சார் எப்போது பொருட்படுத்தத்தக்க ஒருவராக மாறினார் என்பது தெளிவாக நினைவிலில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்குமுன்பு அவர் முதுகலை விடுதி காப்பாளராகப் பணியில் இணைந்தபோது கரீம் சார், ‘இவரு சரிப்பட்டு வரமாட்டாரு. வார்டன்னா ஒரு இது வேணாமா? பசங்க ரூமுக்கு வெளியில பவ்யமா நின்னுக்கிட்டு அட்டெண்டென்ஸ் எடுக்குறாரு சார்’ என்று என்னிடம் சொன்னது நினைவிலிருக்கிறது. இந்த விடுதியில் நிறைய மாணவர்களும் என்னைப்போலக் கல்யாணமும், காலாவதியும் ஆகாத சில ஆசிரியர்களும் இருக்கிறோம்.
கோபால் சார் தொடர்ந்தார் ‘அந்தப் பெட்டியின் இடதுபக்க மூலையில் ஒரு டைரியும், அதற்கு எஞ்சிய முத்தங்களின் அகராதி என்றொரு பெயரும் வைத்திருக்கிறேன். அதன் நிறம் வெப்பம். அதில் நான் முழுமையாக இறங்க முடியாமல் போனமுத்தங்களைத் தேதி வாரியாகக் குறித்து வைத்திருக்கிறேன். காரணம் அவை ஒன்றல்ல இரண்டல்ல, ஒரு பட்டியல். ஒரு பள்ளிக்கூடக் குமாஸ்தாவாகத்தான் வாழ்வைத் தொடங்கினேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் எதுவுமே விளங்கவில்லை, பழகியது போலிருந்தது பக்கத்து இருக்கையிலிருந்து வந்த பெண் வாடைதான். மதிய இடைவேளையில் தனது வெக்கையை உருட்டி உருட்டி சோறாக என் தட்டில் வைத்தாள். நானும் எந்தவித கூச்சமுமில்லாமல் அதையெடுத்து என்னுடலிலிருந்து நீளும் யாவைக்கும் உண்ணக் கொடுத்தேன். பணியாளர் அறையில் நாங்கள் மட்டும் தனித்திருந்த வேளைகளில், தனதுநரம்பு நாற்காலியிலிருந்து சாய்ந்து கைகளை உயர்த்தி அவள் சோம்பல் முறித்தது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அவள் ஆசிரியை, இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாய் என்பதெல்லாம் என்னை வந்தடைய ஒவ்வொருமுறையும் பார்வையற்றவனின் முதுகையே தேர்ந்தெடுக்கின்றன’.
‘ஏற்கனவே முத்தங்களுக்குப் பழகியிருக்கிறோம் என்றாலும், அன்றைய மாலை வேளையில் அனைவரும் கிளம்புவதற்காகக் காத்திருந்து மிகவும்பொறுமையாக மற்றுமொரு முத்தத்திற்குத் தயாரானோம். கைகளால் எனைப் பற்றாமல் முத்தமிடு என்றாள். கண்களைக் கட்டி விளையாடும் குழந்தையைப் போலக் காற்றில் விரல்களை அசைத்து ஒரு முத்தத்தின் மூலம் அவளுள் இறங்கினேன். ஈர உதடுகளோடு பிரிந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த பெரும்பறவையின் இறகென ஒரு ஓவியம் எங்கள் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. அதில் அருவமான வனமிருகங்களிரண்டு ஒன்றையொன்று விழுங்குவது போல வரையப்பட்டிருந்ததைப் பார்த்தேன், அல்லது அப்படித்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. அவள் பதறிப்போய் ‘ப்ரீத்தி உன்னைக் கம்ப்யூட்டர் லேப்ல தானே இருக்கச் சொன்னேன்’ என்றாள். ப்ரீத்தி அவளது இரண்டாவது மகள். அச்சிறுமியின் உடல்மொழி காட்டிய திசையில் மேலும் (அங்கே படிக்கும்) இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எதை எதையோ பொறுக்கி தேர்ந்தெடுத்து அடுக்கி இயல்பை உண்டாக்க நான் தான் முயன்றுகொண்டிருந்தேன். அவள் அவர்களோடு அவ்வளவு இணக்கமாக நிதானத்துடன் கிளம்பினாள். ஒருகணம் தற்கொலைக்குத் தூண்டியது என்னை நோக்கிய அவளது நிறை புன்னகைதான். அன்றிரவு உறக்கமில்லை, அடுத்தநாள் பள்ளிக்குள் அனுமதியில்லை, பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். அவள் பள்ளிக்குள்தான் இருந்தாள், கோபமெல்லாம் ஒன்றுமில்லை அந்தந்த நேரங்களில் தேவைப்பட்டது பருகிக்கொண்டோம், அவ்வளவுதான்.’
‘அதன்பிறகு உள்ளூரில் புணர சில உடல்கள் கிடைத்தன. இருப்பினும் பள்ளி பணியாளர் அறையை விடுத்து நான் விரிய முயன்ற போதெல்லாம், வானம் அச்சுறுத்தும் வகையில் தனது நிறங்களை மாற்றிக் கொண்டே இருந்தது. அன்றைய நிறம் விரிசல், துணைக்கு இருந்தவள் என்னிலிருந்து நீங்கி தூரத்தில் ஒரு லென்சைக்கொண்டு என் தொட்டி மீனை விடிய விடியத் துரத்திக்கொண்டிருந்தாள். மூன்று மாதங்கள் கழித்துப் பின்னிரவில் வந்த இன்னொருத்தியிடம், ‘அசையத் தொடங்கியதுமே என்னிடுப்பு உறைந்து விடுகிறது. நீயாவது ஏதாவது செய்யேன்’ என்று கெஞ்சினேன். அவள் ‘முத்தமிடும்போதே தோன்றியது. உன் எச்சிலில் ஏனோ தண்டனையின் ஈரம்’ என்றாள். கிளம்புவது வரைக்கும் அவளது கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். அவள் எரிச்சலில் ‘சீ கண்டாரொலி கால நக்கி’ என்றாள். ‘கொஞ்சநேரம் கொஞ்சநேரம் என்று சொல்லிக்கொண்டிருந்தது ஒன்று தான் அந்த நேரத்தில் எனக்குப் பேராறுதல்’.
விடுதியில் ஒருநாள் இரவுணவுக்குப் பிறகு கோபால் சாரின் அழுகுரல் கேட்டது. ஒரு கைப்பந்து மைதானம் அளவிற்கு இடைவெளி, அதைச்சுற்றி செவ்வக வடிவத்தில் அடுக்கப்பட்டிருக்கும் மூன்றடுக்கு ரயில் பெட்டிகளைப் போலத்தான் இருக்கும் விடுதியின் சி ப்ளாக். இரண்டாவது மாடியிலிருந்த போதும் கூட அவரது அழுகை தெளிவாகக் கேட்டது. நான் கீழிறங்கிப் போவதற்கு முன்பே, மாணவர்கள் தங்கள் அறைகளுக்கு வெளியே நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் ‘கோபால் சாரை அடிச்சுட்டாங்க’ என்றான்.
‘யாரு பசங்களா அடித்தது?’
‘இல்லை. கரிம் சார் தான் அறைஞ்சுட்டாரூ.’
பெண்ணழகின் உச்சங்களை வாசித்திருக்கிறேனே ஒழிய அறிந்தவனில்லை. ஒரு ஆண் சுற்றியிருப்பவர்களின் பிரக்ஞையின்றித் தேம்பித் தேம்பி அழும்போதே அவனது உச்ச அழகு வெளிப்படுகிறது என்பதை அன்றறிந்தேன். கோபால் பேரழகன்.
அதன்பிறகு கோபால் சாரைபற்றி நிறையப் பேசினார்கள். நிறையக் காயங்கள் அவர் முகத்தில் புதிது புதிதாகத் தோன்றி மறைந்தன. என் மாணவன் ஒருவன் ‘அவரு ராத்தரியில இங்க இருக்கறது கிடையாது சார். வெளியில ஏதோ வேல நடக்குது’ என்றான். ‘ஹாஸ்டல்ல புரோட்டா போட்டுட்டா போதும், தலைவரு மலுமிச்சம்பட்டிக்கி சரக்கு சாப்பிட கிளம்பிட்ராரூ’ என்றான் இன்னொருவன். வெள்ளை சட்டை மட்டும் தான் உடுத்துவார், நல்லநிறம். மனக்கசப்பில் இருக்கும் பெரிய இடத்துப் பிள்ளைக்குண்டான தோரணை. தொடர்ச்சியாகக் கவனித்தபோதுதான் தெரிந்தது, படிக்கட்டுகளுக்கு மேலிருக்கும் தடுப்புச்சுவருக்காக அவர் ஒருபோதும் குனிவது கிடையாது. இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் ஒன்று மிதமிஞ்சிய போதை, இல்லையென்றால் பார்வை குறைபாடு.
ஒருநாள் கருக்கலில் என் அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். ‘எங்க அப்பா செத்துட்டாரு சார். நா போயிட்டு வந்தர்றேன். ஒரு ரெண்டு நாளைக்கு ஹாஸ்டல பாத்துக்கோங்க’ என்றார். எனக்கு வித்தியாசமாகப்பட்டது அதை அவர் சிரித்துக் கொண்டே சொன்னதுதான். சோகப்புன்னகை என்றெல்லாம் வர்ணிக்க மனம் விரும்பியது. நிச்சயம் அது புன்னகை அல்ல, ஒரு பெருஞ்சிரிப்பு.
சொன்னபடியே இரண்டுநாளில் விடுதிக்குத் திரும்பினார். அவரை மீசையில்லாமல் எதிர்பார்த்திருந்தேன், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. திருத்தமாக வந்து சேர்ந்திருந்தார். இழவு விசாரிக்கத் தான் அவர் அறைக்குச் சென்றேன்.
‘என் தகப்பனாரின் சொல் ஊரில் உரத்து ஒலித்துக்கொண்டிருந்த காலமொன்றிருந்தது. தன்னை முன்னிறுத்தி எனக்கு ஒரு பெண்ணைக் கட்டி வைத்தார். நல்லவள்தான் ஆனால் அழகியென்று சொல்லுவதற்கில்லை. அவள் மீதேறியபோதெல்லாம் எனக்குத் தோன்றியவை இவை. அவளுடல் விஷமேறியதுபோலக் குளிர்ந்து கிடக்கிறது, அல்லது அவள் நாள்பட்ட நோய்க்குச் சிகிச்சைக்காக நீட்டிக் கிடக்கிறாள், இல்லையெனில் ஆட்டத்திற்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஆழ்துயிலில் சொப்பனத்திலிருந்து அவளோடிருக்கும் என்னைக் காண்கிறாள்’. பல வருடங்கள் கல்வி நிறுவனங்களில் வேலை செய்ததால் ஒரு வாத்தியாரின் உடல்மொழியில் கடினமான ஒரு சூத்திரத்தை விளக்குபவர் போலப் பேசிக்கொண்டிருந்தார் கோபால்.
‘ஊரில் ஒருநாள் காலையில் கூட்டாளியின் மனைவி புற்றுநோயில் இறந்துபோனதாகச் சேதி வந்தது. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் குடும்பத்தின் சார்பாக அப்பாதான் போவார். அன்று ஏனோ எனக்குக் கிளம்பிப் போகவேண்டும் போலிருந்தது. அங்கே நண்பனைப் பார்த்து இழவு கொடுத்தேன். அந்த இடத்து வாசனையிலேயே இருக்க மனம் விரும்பியது. இறந்தவளின் பாதங்கள் நோக்கிய திசையிலிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது. எழுந்து அவ்வுடல் முழுமையாகத் தெரியுமிடமாகத் தேர்ந்தெடுத்து நின்றுகொண்டேன். உயிரற்று இருந்தபோதும்கூட ஒரு பெண்ணுடலால் இயக்க முடிந்த சாத்தியத்தை என்னுள் உணர்ந்தேன். ஒரு விக்ரகத்தைக் கண்டு அழும் பக்தன், மலையுச்சியை அசையாமல் கண்டமர்ந்திருக்கும் சித்தன், இவர்களைப் போலத்தான் அசைவற்றுக் கிடக்கும் அந்த உடலோடு ஒரு அலைவரிசையில் இணைக்கப் பட்டிருந்தேன். ஒரு இழவு நாளில் அவ்வுடல் ஆதிசேஷனைப்போல என் ஆண்மையைக் கடைந்து கடைந்து கண்டெடுத்துத் தந்தது. அந்த மீட்சியில் தூரத்திலிருந்த போதும் கூட என் உச்சத்திலிருந்தேன்’.
‘வீட்டிற்குத் திரும்பி ஒரு நான்கு நாட்கள் தாக்குப்பிடித்தேன். மறுநாள் இரவு ஒரு பாயில் என் மனைவியைக் கிடத்தினேன். இரண்டு குடங்களில் தண்ணீரை அவள்மீது ஊற்றினேன். தலைமயிரையும் பின்னங்கழுத்தையும் கழுவினேன். பாதங்களின் அழுக்கை மனதார நீக்கினேன். அந்தச் சுத்தத்தின் இச்சையில் அவற்றை முத்தமிட்டேன். அவளது வயிற்றுச் சிராய்ப்பு நிறத்திலிருந்தது அவ்வறை, வெளிச்சம் வேண்டி மஞ்சள் பூச அவளது ஆடைகளைக் களைந்தேன். அழுத்தித் தொட்டால் நொறுங்கும் வெண்சாம்பலின் மீது இழைப்பதுபோல, அவ்வுடலில் மஞ்சள் பூசினேன்.
ஒரு வேலியென அவளைச்சுற்றி பன்னீர் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி வைத்தேன். நெற்றிக் குங்குமமும், பிணமென அலங்கரித்த உடலின் பெருமூச்சும், ஏறியடங்கும் வயிறும்தான் எனக்கான ஓல அழைப்பு. வழக்கத்திற்கு மாறாக அவளுடலின் சூடு என்னுள் பரவியது.
மண்டியிட்டு மலைக் கோயிலேறும் பித்தனென மெதுவாக முன்னகர்ந்து அவளையசைத்தேன். ஒவ்வொரு அசைவிலும் தண்டனையின் கொப்பளங்கள் உடைந்து அதன் சீழ் விந்து நிறத்தில் வெளியேறின. பாயை நீங்கி அவளது கைகளைக் கோர்த்து வயிற்றில் வைத்தேன், மூன்றுமுறை சுற்றி வந்தேன், தலைகுனிந்து வணங்கினேன்’.
‘மறுநாள் விடியலிலிருந்து அவளென் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள். மூன்றாவது நாளில் தூக்கில் தொங்கினாள். நான் செய்ததையே அவளுக்குத் திரும்பச் செய்தார்கள், அதற்கு முழுமனதாகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கிடந்தாள். என் உடலிலிருந்து நீள வாய்ப்பிருந்த யாவும் உதிர்ந்து பொசுங்கின. வெள்ளைத் துண்டைப் பற்றிக்கொண்டு இழவுப்பெற நீட்டிய கைகளில் மீண்டும் கொப்பளங்கள். அதன் பிறகு ஊரில் என்னைச் சில ஆண்கள் குனியவும் மண்டியிடவும் அழைத்தார்கள். கைக்கு வந்த சொத்துக்களைத் தம்பிகளுக்கே விற்றேன். ஊரை நீங்கி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. தகப்பனின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவே ஊருக்குச் சென்றேன், எத்தனையோ முறை பார்த்தும் பிணமாகக் கிடந்தது என் அப்பனின் சாயலில் இல்லை, அந்த ஊரும்தான்’.
இதைக் கோபால்சார் சொல்லிமுடித்தபோது கிட்டத்தட்ட இடைவெளியே இல்லாமல் அவரருகே அமர்ந்திருந்தேன். அவர் வர்ணித்த சவக்களையைப் போலவே அவரது முகமும் மினுங்கியது. கைகளைப் பற்றினேன், தோளில் சிறிதுநேரம் சாய்ந்திருந்தேன், பிறகு அவர்தான் என் பின்னந்தலையை வருடி தன்பக்கம் திருப்பி என் உதடுகளில் முத்தமிட்டார்.
கல்லூரி விடுதிகளுக்கெனச் சில விதிமுறைகள் உண்டு. அதன்படி மாணவர்களுக்குப் பிறகே விடுதி பணியாளர்கள் உணவருந்த வேண்டும்(ஆசிரியர்கள் விதிவிலக்கு). அன்று காலை காந்திபுரம் வரைக்கும் செல்லவேண்டியிருந்ததால் சீக்கிரமே தட்டை எடுத்துக் கொண்டு உணவறைக்குச் சென்று காத்திருந்தேன். கோபால் சாரைக் காணவில்லை. அன்றைய அட்டவணைப்படி தோசை, நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு தட்டுடன் வந்தமர்ந்தார் கோபால். அதில் இரண்டு லட்டுகள் இருந்தன. ஒன்றையெடுத்து என் தட்டில் வைத்து ‘வெள்ளன எந்திரிச்சி கோயிலுக்குப் போயிட்டு வந்தேன் சார், நல்ல பசி’ என்றார்.
கல்லூரிகளில் தங்களது அதிகாரத்தை அவ்வப்போது ருசிக்க நினைப்பவர்கள், யாருக்கும் சொல்லாமல் விடுதிக்குள் ரோந்து வருவது உண்டு. முதலில் பேராசிரியராகச் சேர்ந்து மாணவ சேர்க்கை இல்லாத காரணத்தால் அங்கேயே விடுதி உணவு ஒப்பந்தத்தை எடுத்து நடத்திவந்த முரளிக்கும் ‘ரவுண்ட்ஸ்’ போக ஆசை வந்ததில் பெரிய தவறொன்றும் கிடையாது. சிக்கலே கோபால்சார் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தது தான்.
கோபாலைப் பார்த்து ‘ஏன் சார் பசங்களுக்கு முன்னாடி தட்டத் தூக்கிக்கிட்டு வந்து ஒக்காந்து இருக்கிறீர்கள்? கொஞ்சம் பொறுத்து சாப்பிட்டா ஆவாதா?’ என்றார்.
இவர் சிறிதும் யோசிக்காமல் ‘நான் திங்கிற இந்த ரெண்டு தோசையில தான் உங்குடி முழுகி போயிரப் போவுதா?’ என்று சாப்பிடுவதை நிறுத்தி எழுந்து நின்றார்.
அந்த ஆள் எங்கள் மேஜையருகே வந்து கோபாலை அறையத் தொடங்கினார். தன் ஈரக்கையால் ஆன மட்டும் தடுத்துப் பார்த்தும் பயனில்லை. ‘கணக்க முடிச்சிவிட்றா’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த கோபால் சார் ஒரு கட்டத்தில் கைகழுவும் இடத்தில் வழுக்கி விழுந்தார். ‘கணக்கு கேக்குது நாயி’ என்று காரி உமிழ்ந்தார் முரளி. பசங்களும் நாங்களும் இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்தோம்.
கோபால் சார் எழுந்து விடுவிடுவெனத் தன் அறைக்குச்சென்று தனது பெட்டியை எடுத்துக்கொண்டு யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விடுதியை விட்டு நீங்கினார். பலமுறை முயன்றும் அவரை அதன்பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை.
இன்னும் இரண்டு மாதங்களில் எனக்குத் திருமணம். பெண், வாழப்பாடி பக்கம்.
பா.ரஞ்சித் அட்டகத்தியிலிருந்து சார்பட்டா பரம்பரை வரைக்கும் ஒரு வெற்றிகரமான வெகுசன திரைப்பட இயக்குனர். வெகுசனத்தின் மொழியில் விளிம்புநிலையினர் பிரச்சினைகளைப் பேசியவர். ரஞ்சித்தின் வருகைக்குப் பின்னர் தமிழ் வெகுசன திரைப்படச் சூழலில் விளிம்புநிலையினர் பற்றிப் பேசுவதற்குப் புதிய சந்தை உருவாகியுள்ளது என்பதே மகிழ்ச்சிக்குரியது.
மேலும், தமிழில் அதுவரை சுயாதீனப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் மட்டுமே பேசி விவாதித்து வந்த மாந்தர்களின் குரல்களை அழகியலுடனும் சுயமரியாதையுடனும் வெகுசனத்தளத்திற்குக் கொண்டுசென்றவர்.
வெகுசனத்தளமென்பது மையநீரோட்டத்துடன் தொடர்புடையது. ஆவணப்படங்களும் சுயாதீனப் படங்களும் மிகக் குறைந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டது. இவற்றிற்கான பார்வையாளர்கள் முன்னமே அரசியல் விழிப்புப் பெற்றவர்களாகவும் பால்புதுமையினர் பற்றிய விவாதங்களிலும் இருப்பர். வெகுசனத் தளப் பார்வையாளர்கள் அவ்வாறில்லை பெரும் மந்தையைப் போன்றது. வெகுசன ரசனை ஒழுங்கின்மையைப் போலத்தோற்றமளித்தாலும் தன்னளவில் ஒரு ஒழுங்கைக் கொண்டே இயங்குகிறது. அதனுடன் பேசுவதற்கென ஒரு மொழி இருக்கிறது. அம்மொழியில்தான் வெகுசன கலைகளைப் பேசுகின்றன.
வெகுசன திரைப்படங்கள் தன்னகத்தே வைத்திருக்கும் திரைக்கதைக்கான விதிமுறைகள், நடிகர் நடிகையர் தேர்வு, அதன் இசை வடிவம், காட்சிகளின் ஊடான பாடல்கள், விளம்பர உத்தி போன்றவையெல்லாம் அம்மொழியைச் சார்ந்தவை. இவ்வாறு கழுத்தை நெறிக்கும் காரணிகளுடனே ஒரு திரைப்படம் வெளியாகிறது. ஆக, ஒரு திரைப்படத்தைத் தீர்மானிப்பதில் வெகுசனத்தின் பங்கே பிரதானமானது. வெகுசன ரசனையைப் புரிந்து கொள்வதும் அதன் கவனத்தைக் கோரும் படங்களும் திரைக்கலைஞர்களின் பிரதான பணி. இவ்வாறான எந்தச் சிக்கல்களும் சுயாதீன திரைப்படக் கலைஞனுக்கோ ஆவணப்படக் கலைஞனுக்கோ இல்லை. அவனுக்கான சந்தை வேறு, அவனுக்கான பார்வையாளர்கள் வேறு. அவர்களின் படைப்புலகம் வேறானது. அவை வேறுவகையான விதிமுறைகளுடன் மாற்று அழகியலை பேசுபவையாக இருக்கின்றன.
அடிப்படையாக எல்லாக் கலை வெளிப்பாடுகளைப் படைக்கும்போது கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “இது யாருக்காகச் செய்யப் படுகிறது?” என்பதே. அவ்வாறு பார்க்கையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ வெகுசனத்தை மனதில் கொண்டு உருவானதில்லை என்றே தோன்றுகிறது. காரணம் அதன் திரைமொழியில் காணப்படும் குழப்பம்.
படம் துவங்கும்போது நாடகமாக்கல் பற்றிய புனைவு - ஆவணப்படமாக நகர்ந்தது. ஆவணப்படத்திற்கான தன்மைகளைக்கொண்டு சாதி, பால்புதுமையினர் உரையாடல்களைப் பேசுகிறது. சற்று நேரத்தில் புனைவாக முயற்சிக்கிறது. இன்னும் நேரம் சென்றபோது நாடகமாகவே நகர்கிறது. அதற்கு அப்பால் பிரச்சார மேடையாக நகர்ந்து இறுதியில் குழப்பமே அதன் மொழி என விடைபெற்றுக் கொண்டது. வெகுசன திரைப்படத்திற்கான மொழியுமின்றி, சுயாதீன படத்திற்கான மொழியுமின்றித் தன்னைத் தானே குழப்பிக்கொண்டிருக்கிறது.
பா.ரஞ்சித் தன்னளவில் வெற்றிகரமாகக் கையாண்ட வெகுசன திரைமொழியின் மறதியில் கட்டமைந்திருக்கிறது இதன் திரைக்கதை. பார்வையாளர்களுக்கு அறிவு புகட்டும் பாணியிலான உரையாடல்கள், சமூகப் பிரச்சினைகளை இருமைகளாக மட்டுமே பார்க்கத் தூண்டும் வழக்கமான (வழக்கமானதல்ல என நம்ப வைப்பதற்காகப் பால் புதுமையினர் கதாப்பாத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன) கதாப்பாத்திர சித்தரிப்புகள், துண்டு துண்டான திரைக்கதைகளின் நெகிழித்தனமான ஒருங்கிணைப்பு சுயாதீன படப் பார்வையாளர்கள் கேட்ட, பார்த்த, விவாதித்தவற்றை மீண்டும் மீண்டும் கூறும்போது வரும் சலிப்பே இப்படம். படமும் வெகுசனத்தை மனதில் கொள்ளவில்லை என்பதால் இங்குப் படம் சுயாதீன படத்தை விரும்பும் பார்வையாளர்களுக்கானது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. படம் சுயாதீனத்தன்மையும் பெறவில்லை என்பதே அதிருப்தி. உணர்வு அடிப்படையிலும் திரைக்கதை அடிப்படையிலும் படம் ஒரு தொடர்ச்சியின்மையிலேயே நகர்கிறது. வசனங்களில் காணப்படும் செயற்கைத்தன்மை மைய கதாப்பாத்திரத்தின் மீதான பார்வையாளரின் நெருக்கத்தைக் குறைத்துவிடுகிறது.
திரைப்படம் பார்வையாளனுடன் உரையாட ஏதுமின்றித் தனக்குத் தானே பேசிக்கொள்கிறது. பார்வையாளர்களுக்கு அறிவுப் புகட்டவேண்டிய பெரும் கடமை தனக்கிருப்பதாகப் படம் காட்டிக் கொள்கிறது. அதனால், திரைப்படம் தன்னை மேன்மை பொருந்தியதாகக் கருதிக்கொண்டு எதிரிலுள்ள பார்வையாளனை அறிவற்றவனாக்குகிறது.
ரெனே பாத்திரம் தன்னுள் ஏறிக்கொண்ட பக்குவமானவள் என்ற சோடனைகள் எதிரிலுள்ள ஏனைய அனைவரையும் குறை அறிவுடையவர்களாக அரசியல் சரி தன்மை தெரியாதவர்கள் என்பதாகக் கருதி அறிவுரைகளை வாரியிரைக்கிறது. இதுவே, ரெனே கதாப்பாத்திரம் பார்வையாளர்களை எரிச்சலுறச் செய்வதற்கான பிரதான காரணம்.
நாடகத்தைத் தடுக்கவரும் நபரும் நாடக நடிகரைப் போல வேடமிட்டு வந்து நிகழ்த்திவிட்டு செல்வதைப் பார்த்ததும் அவரும் நாடக குழு நபர் என நினைக்கையில், பின்னர் அவர் ஒரு அடிப்படைவாத குழுவைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. அந்தக் கதாப்பாத்திரம் கதையின் ஓட்டத்தில் இல்லாமல் திடீரெனக் கதையை முடித்து வைப்பதற்குப் பயன்படுத்துவது என்பது அபத்தம். இன்னும் ஒரு படி சென்று அர்ஜூனைத் திருத்தியது போல எதிர்பாராத திருப்பமாக அவரையும் பேசித் திருத்தியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். திரைப்படம் நெடுந்தொடராகிவிடும் என்ற காரணத்தால் அம்முடிவை இயக்குனர் கைவிட்டிருப்பார் என நினைக்கிறேன்.
புதிய தலைமுறை லிபரல் அரசியல் சிந்தனைக் கொண்ட இளைஞன் காதலி ரெனேயுடன் இளையராஜா பாடல் பாடியதற்காகக் கோபப்பட்டான் என்பதே ‘அவன் போலியாகச் சாதி ஒழிப்பு பேசுபவன்’ என்பதை நிறுவ போதுமானது எனச் சித்தரித்திருப்பது எத்தனை வேடிக்கையானது.
இந்தப் படத்தில் ஒரு சுவாரஸ்யமான நல்லவிசயம் அர்ஜுன் ஒரு பட்டியலினப் பெண்ணைக் காதலிப்பதை தெரிந்த அவனின் அம்மா அவனுக்கு ஏதோ பேய் புகுந்து பேசவைக்கிறது என்கிறாள். இது ஒரு பிரமாதமான உற்றுநோக்கல். தமிழ் சமூக நெடுங் காலமாகவே காதல் உணர்வை பேய் பிடித்திருப்பதாகவே (முருகு அணங்கியதாக) கருதி வருகிறது. மரபான சமூகங்களின் காதல் பற்றி யோசனையைச் சிறு கீற்றில் காட்டிவிட்டு சென்றதே பிரமாதமானது.
‘நட்சத்திரம் நகர்கிறது’ சாதிபற்றிய உரையாடலுக்கும் மாற்றுப் பாலுறவு பற்றிய உரையாடலுக்கும் பயன்படுத்தியிருப்பது நாடகக் கலைஞர்களையும் நாடக ஒத்திகையையும். கலைஞர்கள் என்பவர்களே சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்கள். சமூகம் தன்பால் கொண்டிருக்கும் விழுமியங்களுக்கு அப்பால் தன்னை நிறுத்திக் கொள்பவர்கள் அல்லது நிறுத்திக் கொள்ளத் தகவமைக்கப்பட்டவர்கள்.
ஒரு சமூக மனிதனுக்கான விதிமுறைகளில் இருந்து சற்றே விலகலான தன்மையைக் கலைஞர்கள் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூக மனிதன் பாலினத்திற்கென வரையறுக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே பொதுவெளியில் உடுத்த இயலும் எனும்போது சடங்கு மற்றும் கலை சார்ந்தவர்களுக்கு அதில் ஒரு தற்காலிக விடுப்புள்ளது.
ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் உடையணியும் சாத்தியம் கொண்டவர்கள். ஆண் பெண்ணாகப் பாவனை செய்யும் சாத்தியம் பெற்றவர்கள். பெண் வேடக் கலைஞரின் பாவனைகள் சராசரி ஆண் போன்றதல்ல. அதனால், கலைஞனின் பால் ஒழுக்கம் பற்றிப் பேசுவது ஒட்டு மொத்த சமூகத்தைப் பேசுவதாகிவிடாது என்பதாகச் சமூக மனிதன் கருதுகிறான்.
‘கூத்தாடி வீட்டில் பெண்ணை எடுக்காதே’ என்று கூறும் பழமொழிகள் உங்கள் நினைவிற்கு வரட்டும். அதனால் கலைஞர்கள் முறையற்ற பால் ஒழுங்குடன் இருப்பதாகவே சமூகம் கருதுகிறது. அவ்வாறானக் கருத்தையே திரைப்படம் சமூகத்திற்கு பால்புதுமையினர் பற்றிப் பேச எடுத்துக்கொண்டு இருப்பது எந்த அதிர்வையும் ஏற்படுத்த போவதில்லை. மாறாகச் சமூகம், ‘கலைஞர்கள் அப்படியானவர்கள் என்று நான் முன்னமே சொல்யிருக்கிறேன்’ என்று பெருமை பேசிக் கொள்ளும்.
தமிழ் சினிமாவில் பால்புதுமையினர் பற்றியும் மாற்றுப் பாலுறவுகள் பற்றிய திரைப்படங்கள் குறைவுதான் அதற்காக நட்சத்திரம் நகர்கிறது அதனைப் பூர்த்திச் செய்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. எளிய மனிதர்களிடம் காணப்படும் மாற்று பால்ஒழுக்கம் பற்றிய பிரத்யேக வாழ்வையோ அழகியலையோ காட்ட முயற்சிக்கவில்லை. மாறாக, கலைஞர்கள் விசித்திரமான பாலுறவு பழக்கம் கொண்டவர்கள் எனக் காட்டியிருக்கிறது. மேலும், ஒரே படத்தில் அரசியல் அத்தனையையும் பேசிவிட்ட திருப்தியைப் படம் அடைந்திருக்கிறது.
வழக்கமாகப் பா.ரஞ்சித் படங்கள் சுயமரியாதைத் தன்மைகொண்டதாக இருக்கும். அதற்குக் காரணம் அதன் புனைவாக்கத் தன்மையில் விளிம்புநிலை சமூகம் பற்றிய நேர்மறையான, சமூகக் கட்டமைப்புக் குறித்தான பிரக்ஞையைக் கொண்டிருப்பது.
நாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றிய எந்தச் சொல்லாடலை வளர்த்தெடுக்கிறோமோ அதுவே பின்னர் யதார்த்தமாகச் சமூகத்தில் நிலவும். வழக்கமாக விளிம்பு நிலையினரின் இருப்பிடத்தை(சேரிகளை) காட்சிப்படுத்தும் திரைப்படங்கள் (அசுத்தமானவர்கள், ரவுடிகள், ஒழுக்கம் குறைவானவர்கள் வாழுமிடம்), பா.ரஞ்சித்தின் அட்டகத்தி முதல் சார்ப்பேட்டா வரை காட்டப்பட்ட இருப்பிடத்திற்குமான (எல்லா இருப்பிடங்களைப் போலவும் சண்டைச் சச்சரவுகளுடனும் அவர்களுக்கே உண்டான வாழ்க்கை அழகியலுடன் வாழும் மனிதர்களின் இடம்) வித்தியாசம், கதைமாந்தர் தான் அவமானப்படும் தருணங்களில் காட்டும் எதிர்வினை போன்ற காரணிகளே இந்தச் சுயமரியாதைத் தன்மையைக் கொண்டு வருகிறதே தவிர வசனங்களினால் மட்டுமே அல்ல.
இந்தக் காரணிகள்தான் வளர்த்தெடுக்கவேண்டிய சொல்லாடல்களின் சாரமாக இருக்கிறது. ஏனெனில் சமூக மையநீரோட்டத்துடன் இணைவதற்கே இச்சொல்லாடல் முயற்சிக்கின்றன.
‘நட்சத்திரம் நகர்கிறது’ தன்னுள் கொண்டிருக்கும் ஆவணத்தன்மை இந்தச் சுயமரியாதை காரணியைத் தின்றுவிடுகிறது. ஏனெனில், ஆவணங்கள் யதார்த்தத்தின் மீது கட்டமைவதாகக் காட்டிக்கொள்ளும். யதார்த்தத்தைப் பேசும் படங்கள் விளிம்புநிலையினரை குறுகச் செய்கிறது.
யதார்த்தத்தைத் திரை அப்படியே காட்டுவதாக எண்ணும் திரைப்படங்கள் (மதுரைக்காரர்கள் எப்போதும் கையில் அருவாளுடன் அலைபவர்கள்) புதிய சொல்லாடல்களை உற்பத்திச் செய்யவிடாது தடுக்கின்றன. இதனால், நம்பிக்கையை ஏற்படுத்தும் லட்சியவாத சொல்லாடலை வளர்த்தெடுக்கும் சாத்தியம் குறைவு. இங்கு யதார்த்தம் எனச் சொல்லப்படுவதும் தொடர் விவாதங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பாதிப் பொய்கள் (பாதி உண்மைகள்).
புதிய அலை இயக்குனர்களான நாகராஜ் மஞ்சுளே, பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்கள் லட்சியவாத சொல்லாடல்களைப் பேசியதன் மூலமாகவும் வெகுசன திரைமொழியை அதற்குரிய சாத்தியம் கொண்டது எனக் காட்டியதாலும் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ஆனால், விளிம்புநிலை சமூகங்களின் சுயமரியாதையைக் கொல்லும் ஆவணங்களைப் பேசும் படங்களால் ஒரு போதும் இலட்சியவாதத் தன்மையைத் தர இயலாது. மேலும் மைய நீரோட்டத்துடன் இணைய விரும்பாத சொல்லாடல்கள் இனவாதத்தின் சாயலையே பெறும்.
“தத்தவவாதிகள் உலகை பல்வேறு விதமாக விளக்கினார்கள்: இருந்தபோதிலும், முக்கியமானது அதனை எப்படி மாற்றுவது என்பதுதான்”
- கார்ல் மார்க்ஸ்
“The philosophers have only interpreted the world in various ways; the point, however, is to change it.”
- Karl Marx
தத்துவத்தின் பணி உலகை குறித்த மற்றொரு விளக்கம் அல்ல. உலகை மாற்றுவதே என்றார் கார்ல் மார்க்ஸ். காரணம், இதுநாள்வரை தத்துவவாதிகள் உலகு, மனிதர்கள், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றின் தொடர்புகளையும், இப்பிரபஞ்ச தோற்றம் குறித்தும், இந்த வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு விளக்கங்களை கூறி வந்தார்கள். கிரேக்கத்தைச் சார்ந்த சாக்ரடிஸ் துவங்கி ஜெர்மானிய ஹெகல் வரை மேற்கத்திய சமூகங்களில் வாழ்க்கை, உலகம், மனிதன், பிரபஞ்சம், உயிர் குறித்த பல விளக்கங்கள் தத்துவமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்திய ஒன்றியம் உள்ளிட்ட கீழ்திசைச் சமூகங்களில் தத்துவம் என்பது வீடுபேறு அதாவது மோட்சம், தனிமனித விடுதலை அதாவது பற்றற்ற துறவறம் என்றும், பிறவியற்ற பெருவாழ்வு, உலக தோற்றம் பற்றிய பல விளக்கங்களை தந்துள்ளது. வேதங்கள் துவங்கி இன்றைய ஆன்மீக கார்ப்பரேட் சாமியார்கள் வரை இதனை விளக்க பல்வேறு தத்துவப் பள்ளிகளும் இருந்து வந்துள்ளது.
அனைத்துமே மார்க்ஸ் கூறியதைப்போல உலகை மாற்றுவதைப் பற்றியும் அதற்கான சரியான வழிமுறைப் பற்றியும் பேசவில்லை. உற்றுக் கவனித்தால், இத்தத்துவங்கள் அனைத்தும் தனிமனித நோக்கில் முன்வைக்கப்பட்டவையே தவிர, ஒரு சமூக முன்னேற்றம் குறித்து கவலைப்படவில்லை. உலகளாவிய தத்துவங்களில் நாத்திகம் சார்ந்த கடவுள் மறுப்பு சிந்தனைகள் ஓரளவு சமூகத்தின் நிலைகுறித்த விமர்சனங்களை, அது மாறவேண்டிய தேவைகள் குறித்து பேசினாலும், முறையான திட்டமிடலுடன் கூடியதாக அவை அமைய வில்லை.
பொதுவாக, தத்துவங்கள் தனிமனிதர்களை அடிப்படை அலகாக கொண்டிருக்கின்றனவே தவிர, சமூகம் குறித்த கவனம் அதிகம் இல்லை. இங்கு தமிழ் சிந்தனை மரபு திணை என்கிற சமூகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்று என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். தமிழ் சிந்தனை மரபில் தனிமனிதன் குறித்த கவனத்தைவிட, குழும முன்னேற்றமே அடிப்படையாக இருந்துள்ளது.
தமிழ் குடிமரபு குறித்து ஒரு தனித்துவமான பண்பாக இது அமைந்துள்ளது. அவ்வகையில் தமிழ் சிந்தனை மரபின் முக்கியத்துவம் ஆய்விற்குரிய பொருளாக உள்ளது. அது விரிவாக மற்றொரு தளத்தில் உரையாடப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பதிவு செய்துவிட்டு தொடரலாம்.
மார்க்ஸ் கூறியதைப்போல உலகை மாற்றுவது தத்துவத்தின் பணி மட்டுமல்ல, இலக்கியத்தின் பணியும்கூட. தத்துவம் உலகை அறிவார்த்தமானதாக மாற்ற முயல்கிறது என்றால், இலக்கியம் உலகை உணர்வார்த்தமானதாக மாற்ற முயல்கிறது. உலகுடன் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்குவதே கலை இலக்கியத்தின் பணி. ஆதிச் சமூகத்தின் குகை ஓவியங்கள், பாவனை நடனங்கள், சடங்குகள், நாட்டார் மரபுகள், கூத்துகள் ஆகியவை தொன்மங்களாக வெளிப்பட்டது துவங்கி இன்றைய கலை இலக்கிய முயற்சிகள் வரை உலகை உணர்வு சார்ந்த ஒன்றாக உருவாக்கியுள்ளன.
திடப்படுத்தப்பட்ட அல்லது கருத்தாக்கமாக மாற்றப்பட்ட உணர்வே அறிவு என்பதால், இலக்கியத்தின் திடப்படுத்தப்பட்ட உணர்வாக தத்துவம் அமைகிறது. அல்லது தத்துவம் இலக்கியத்தின் அறிவாக அமைகிறது. அதனால், தத்துவத்திற்கே முன்னோடியாக இலக்கியம் அமைகிறது. ஏனெனில் உணர்விலிருந்துதான் அ றிவு உருவாக்கம் நிகழ்கிறது. ஆகவே, இலக்கியத்திலிருந்து வாழ்க்கையும், வாழ்விலிருந்து தத்துவமும் பிறக்கிறது. வாழ்க்கைத் தத்துவங்களை புனைவது மட்டுமல்ல இலக்கியம், வாழ்வை தத்துவமயமாக வாழ்வதற்கான வேட்கையைத் தருவதும் இலக்கியமே.
அதனால்தான், தத்துவத்திற்கு முன்பே கலைகளும் புனைவடிவங்களான இலக்கியமும் உருவாகியுள்ளது. இலக்கியத்தின் தோற்றத்திற்கு பிந்தையதாகவே தத்துவத்தின் தோற்றம் அமைந்திருக்கிறது. இலக்கியம் அதாவது கலை இலக்கியம் ஒரு சமூகத்தினைச் சார்ந்த மனித உணர்வுகளுடன் உறவுகொண்டது. மேலும், ஒரு சமூகத்தின் உணர்வியக்கமாக இருந்து அதனை சமூகமாக காப்பதிலும் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. தத்துவத்தின் தோற்றுவாயாக இலக்கியம் அமைந்த போதிலும், இலக்கியம் தனக்கென்று ஒரு தத்துவத்தைக் கொண்டுள்ளது. அது என்ன? என்பதை உரையாடிப் பார்ப்பதே நோக்கம்.
தத்துவம் என்று புழக்கத்தில் உள்ள சொல் வடமொழியைச் சார்ந்தது. அதற்கான சரியான தமிழ்ச்சொல் வள்ளுவர் கூறும் மெய்ப்பொருள் என்பதிலிருந்து தற்காலத்திற்கான சொல்லாக மெய் இயல் என்பதைப் பயன்படுத்தலாம். இச்சொல்லே தத்துவத்தின் சிக்கலை தமிழில் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது தத்துவம் என்பது மெய் குறித்த இயல். மெய் என்றால் உண்மை அல்லது பண்டிதர் அயோத்திதாசர் பயன்படுத்தும் உள்+மெய் உள்ளார்ந்துள்ள மெய். இந்த உள்ளார்ந்த மெய்என்பதே இறை மறுப்பின் அடிப்படையாக அமைகிறது.
சத்தியம், உண்மை இரண்டும் மாறுபாடு உடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சிந்தனைமுறையில் மெய் அதாவது உண்மை என்பதே சத்தியம் என்பதாக கருதப்படுகிறது. ஒருவகையில் தமிழில் மெய் என்பது உடலை பருப்பொருளைக் குறிப்பதைப்போல, சத்தியம் என்பதில் உள்ள ‘சத்’ என்பதும் வடமொழியில் பொருளைக் குறிப்பதே. எனவே உண்மை என்பது ஒரு கருத்து அல்ல, பொருள் அல்லது பொருள்வயமான கருத்து என்று புரிந்துகொள்ள வேண்டும். இங்கு சத்தியம் என்பது ஒரு மாறா உண்மை என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், உண்மை மாறும் தன்மைக் கொண்டது. சத்தியம் மாறாத்தன்மைக்கொண்ட தர்மாவுடனும், உண்மை மாற்றத்திற்குறிய அறத்துடனும் இணைந்துள்ளது என்பதை அறிவது அவசியம். இத்துணை நுட்பமும், கனதியும் கூடியதாக இருப்பதே தத்துவம் குறித்த சிந்தனையிலுள்ள சிக்கல். மிகவும் நுண்மையான பல வேறுபாடுகளை வித்தியாசங்களைக் கொண்டதே தத்துவம் (மெய்யியல்). (இனி இக்கட்டுரையில் கூடுமானவரை தத்துவம் என்ற சொல்லிற்கு பதிலாக மெய்யியல் என்ற சொல்லையே பயன்படுத்தலாம். தத்துவம் என்ற சொல் உருவாக்கும் படிமம், மெய்யியல் என்பதில் உருவாகுவதில்லை. காரணம் அச்சொல் மக்களின் வழக்கில் பயன்பாட்டில் ஒரு சிந்தனைப் படிமமாக மாறவில்லை இன்னும்.)
இந்திய மெய்யியல் சார்ந்த கலைச்சொற்களில் பல குழப்பங்கள் உள்ளது. பரவலாக தத்துவம் (மெய்இயல்) என்பதை, கோட்பாடு என்பதை எல்லாம் சித்தாந்தம், வேதாந்தம் என்றே புழக்கத்தில் பயன்படுத்துகிறோம். தத்துவம் படித்தவர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் கூட இப்படியே பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் அது தவறானது. காரணம்...
1. வேதாந்தம் வேதத்தை பிரமாணமாகக் (ஆதாரமாகக்) கொள்வது. அது விஷ்ணுவை முதன்மைக் கடவுளாக கொள்வது. அதன் சமய வடிவம் வைணவம் (தமிழில் மாலியம்).
2. சிந்தாந்தம் சித் என்கிற அறிவைப் பிரதானமாகக் கொள்வது. சிவனை முதன்மையானக் கடவுளாகக் கொள்வது. அதன் சமயவடிவம் சைவம் (தமிழில் சிவனியம்).
3. மெய்யியல் (தத்துவம்) என்பதன் உட் பிரிவுகளே சித்தாந்தம், வேதாந்தம், சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை. ஆகையால் மார்க்சிய சித்தாந்தம் போன்ற சொற்பயன்பாடு அடிப்படையில் தவறானவை. மார்க்சிய மெய்யியல் என்று சொல்வதே சரியானது.
இந்திய ஒன்றியச் சிந்தனை மரபில் பெரும்பாலும் தத்துவம் இறையியல் சார்ந்ததாகவே உள்ளது. அதன் இறுதி இலக்கு கடவுள் ஏற்பு X மறுப்பு என்பதே. அல்லது வேதத்தை ஏற்பது X மறுப்பது என்பதே. ஆனால், தத்துவம் (philosophy) என்று மேற்கத்தியப் பொருளில் சொல்லப்படும் ஒன்றாக இவை இல்லை. இந்தச் சிக்கலை உணர்ந்து ஆங்கிலேய காலனியம் தனது ஆளுகைத் தொழில்நுட்பமாக மீள் கண்டுபிடிப்புச் செய்த வேதங்கள் அது குறித்த உரையாடல்கள், சிந்தனைகள் ஒழுங்கமைக்கப்பட்டதே இந்தியத் தத்துவமாக இன்று சொல்லப்படுகிறது. இதன்பின் ஒரு உயர்சாதிய மேலாண்மைக்கான பின் காலனியச் சிந்தனையின் அரசியல் உள்ளது. ஆனால், மேற்கத்தியச் சமூகத்தில் தத்துவம், அறிவியல், இறையியல் (மதம்) என்ற பிரிவுகள் கிரேக்கர்கள் துவங்கி இருந்து வந்தது. அது தத்துவம் (philosophy) தர்க்கம் (logic தமிழில் அளவையியல்) சார்ந்த அறிவு மரபாக இருந்தது. இறையியல் (theology) மத உணர்வு சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையாக இருந்தது. அறிவியல் என்பது தர்க்க நெறிபட்ட, நிரூபிக்கப்பட்ட அறிவு சார்ந்ததாக இருந்தது.
இந்திய தத்துவம் தர்க்கத்தைப் பயன்படுத்தி கடவுள் என்பதை நிரூபிப்பதாகவும், சமயம் சார்ந்ததாகவும் இருந்தது. நாத்திகம்கூட கடவுள் மறுப்பில் செலுத்திய வாதங்களை சமூக மாற்றம் குறித்து பேசவில்லை. ஆக, இந்திய தத்துவ மரபு, இறை மையவாதமாக அமைந்த இறையியல் சார்ந்ததாகவே அமைந்தது. அதிலிருந்து விலகிய சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை தர்க்க நெறியில் அமைந்த சரியான பொருளில் தத்துவம் அல்லது மெய்யியல் என்ற சொல்லக்கூடியவையாக உள்ளன. ஆகையால் மெய்யியல் குறித்து பேசும் போது இறை சார்ந்து பேசுபவையும் (வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவை), மெய் சார்ந்து பேசுபவையும் (சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை) என்ற பிரிவு அவசியப்படுகிறது. அதனால் இலக்கியமும் இறை சார்ந்து பேசுவதாகவும், மெய் சார்ந்து பேசுவதாகவும் பண்டைய செவ்வியல் சமூகங்களில் அமைந்தது.
சான்றாக? தமிழின் காப்பிய மரபு ஒரு சமயம் சார்ந்து அமைந்தாலும் அது மெய்காண்முறை குறித்துப் பேசுகிறது. குறிப்பாக மணிமேகலை, நீலகேசி போன்றவற்றை சுட்டலாம். தமிழில் மெய்யியல் சார்ந்த ஒரு உரையாடல் என்பது இக்காப்பியங்கள் வழியே அமைகின்றன. அதன்பின் சித்தாந்தம் என்கிற சைவ சாத்திரங்கள் வருகின்றன. இவை வைதீகத்தைவிட அதிகம் வேதச்சார்புடையதாக தங்களைக் காட்டி வைதீக பார்ப்பனிய மேலாண்மையை, சைவ வேளாளர்கள் மேலாண்மையாக மாற்றின. இதில்தான் சைவமும் தமிழும் இணையும் புள்ளிகள் உருவாகுகிறது. இங்கு ஒன்றை அவசியம் சுட்ட வேண்டும். தமிழருக்கான மெய்யியல் குறித்து விரிவான ஆய்வுகள் அவசியம். அந்த ஆய்வுகளுக்கான அடிப்படைகளை இலக்கியத்தில் எப்படிப் பெறுவது என்பதற்கு இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் இடையிலான பயிற்சி அவசியம் என்பதைச் சொல்லித் தொடரலாம்.
மெய்யியல் அல்லது மெய்ப்பொருளியலின் அடிப்படைகள்
பொதுவாக கோட்பாட்டு அடிப்படையில் மெய்யியலை இரண்டு பிரிவுக்குள் அடக்கலாம். வழக்கமாக மார்க்சியம் கூறும் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பது உலகின் முதன்மையானது எது? என்ற அடிப்படையில் பிரிக்கப்படும் பிரிவு. ஆனால், இங்கு சுட்டப்படும் பிரிவு மெய்யியலின் சிந்தனைமுறைச் சார்ந்த ஒன்று. அல்லது சிந்திப்பதின் பின்னுள்ள பிம்பம் (தமிழில் படிமம்) சார்ந்த ஒன்று.
மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அப்பால் ஒரு சக்தி அல்லது உண்மை இருப்பதான பிம்பம். இது பொதுவாக இறையியல் பின்னணி கொண்டதாக அல்லது எல்லாவற்றிற்கும் அப்பால் அனைத்தையும் இயக்கும் சக்தி அதாவது மூலாதார சக்தி என்று ஒன்று உள்ளது என்பதை நம்புவது. அதுவே உலகை இயக்குவது. உலக உற்பத்தி என்பது ஒரு சக்தியால் நடைபெறுவது என்பது. இதன் பிம்பம் பானையை வனைய ஒரு குயவன் தேவை என்ற பிம்பச்சிந்தனை எனக் கூறலாம்.
இதன் அடிப்படைகள்
1. பேருண்மை - உலகம் - மனிதன் இடையிலான தொடர்புகளை ஆராய்வது அல்லது அப்பாலை உண்மைகளை அறிய முயல்வது
2. பிரபஞ்சத்திற்கு வெளியே பேருண்மை உள்ளதாக நம்புவது
3. பேரறிவைப் பெறுவதே ஆன்மீக இன்பம் என்பது அதாவது ஞானம் பெறுதல்
4. அனைத்தும் சாராம்சப்படுத்தப்பட்டவை என்ற சாராம்சவாத சிந்தனையே இதன் அடிப்படை
மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவை இயல்பாய் உறைந்துள்ள உள்ளுறை (உண்மை = உள் + மெய்) ஆற்றலால் திரண்டவை என்கிறது. எந்த வெளி ஆற்றலிலும் உருவானவை அல்ல. அப்பாலை மெய்யியல் கூறும் வெளி ஆற்றல் என்பது ஒரு உள்ளார்ந்த அல்லது மையம் சார்ந்த ஒன்றிருப்பதை அங்கீகரிப்பது. ஆனால், இம்மெய்யியல் சார்ந்த சிந்தனை மையம் என்பதையும் மறுக்கிறது. பானை வனையும்போதுதான் ஒருவன் குயவனாகிறான். பானையும் குயவனும் இணைவதால் திரள்வதே பானை. இதனை டெல்யுஸ்-கத்தாரியின் திரளுதல் (அசம்பலேஜ்) என்ற கோட்பாட்டுவழியாக புரிந்து கொள்ளவேண்டும். சுருக்கமாக புரிந்துகொள்ள, ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவர் புழங்கும் சூழலே தீர்மானிக்கிறது. ஒருவர் பள்ளியில் ஆசிரியர், வீட்டில் தலைவர், நண்பர் குழாமில் நண்பர்...
இப்படியாக அவரது இருப்பு உருவாகிக் கொண்டே இருப்பதுடன், அவர் என்னவாக உருவாகவேண்டும் என்பது சூழலால் திரளும் ஒரு அடையாளம் அல்லது இருப்பு எனலாம். இதைதான் திரளுதல் என்கிறோம். ஒரு இலக்கியப் பிரதி வாசிப்பில்தான் பொருளாக (அர்த்தமாக) திரள்கிறது என்பதன் மெய்யியல்சார்ந்த பின்னணி இதுதான். இதனை இலக்கியத்தின் தத்துவம் (மெய்யியல்) என்பதாக முன்வைக்கலாம்.
இம்மெய்யியலின் அடிப்படைகள்
1. இயல்புநிலை (இந்தியத் தத்துவ சிந்தனையில் சுபாவவாதம் மற்றும் பௌத்தம்). பிரபஞ்சம், மனித இருப்பு அனைத்தும் இயல்பானது, அது உருவாகிக்கொண்டே உள்ளது. அல்லது அதன் இயக்கம் உருவாகிக்கொண்டிருப்பதே.
2. பேருண்மையை மறுப்பது. உண்மை சூழலால், புறத்தால் திரளும் ஒன்று என்பது.
3. உணர்வு என்பதும் ஒரு திரளுதலே. உண்மையான ஆன்மீக இன்பம் உணர்வுகள் பேருணர்வாக திரளும் அந்த ஒரு கணமே.
4. அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது.
முன்பு சுட்டியதைப்போல, இது கொஞ்சம் புரிதலுக்கு சிக்கலான, கடினமான ஒன்று. என்றாலும், புரிந்துகொள்ள வேண்டியது, இதுநாள்வரை சொல்லப்பட்ட விண்ணில் திரியும் அப்பாலை உண்மையை அல்லது தான் தியானித்துக் கண்ட சத்தியத்தைப் பிடித்தெடுத்து, வாசகனின் மண்டையில் திணித்துவிடுவதே இலக்கியத்தின் மெய்யியல் என்பதன் பின் ஒரு எதேச்சதிகாரம் உள்ளதென்பதையே. உண்மையில் இலக்கியத்தின் தத்துவம் அதன் திருளுதல் உருவாக்கும் உருவாகுதல் (பிக்கமிங்) நிலையே. இலக்கியப் பிரதி பல திரளுதல் வழியாக பல்வேறு உருவாகுதலை தருவதே. அது முடிந்த முடிபாக நின்றுவிடும் ஒன்றல்ல.
முக்கியமான இக்கேள்விக்கு பதில் தேடுவதன் வழியாக, இலக்கியத்தின் மெய்யியலை கூடுதலாக புரிந்து கொள்ளமுடியும். மெய்யியல் குறித்து மூன்று விதமான சிந்தனைகள் உள்ளது.
1. பொதுவான மெய்யியல் சிந்தனை- இது உலகை விளக்க முயல்வது.
2. மார்க்சிய மெய்யியல் சிந்தனை - உலகை மாற்ற முயல்வது - இயங்கியல் சார்ந்த ஒன்று - உலகம் மாறிக்கொண்டிருப்பது என்கிறது.
3. டெல்யுசிய மெய்யியல் சிந்தனை- தத்துவம் (மெய்யியல்) என்பது புதிய கருத்தாக்கத்தைப் படைக்கும் கலையே - இது மொழி-சமூகம் அவற்றின் இயக்கம் சார்ந்த ஒன்று “philosophy is the art of forming, inventing, and fabricating concepts.” - டெல்யுஸ் - கத்தாரி).
டெல்யுசிய சிந்தனை மனிதன், உலகு, பிரபஞ்சம் ஆகியவற்றின் உறவை conceptualize செய்து அதனை ஒரு கருத்தாக்கமாக வெளிப்படுத்துவதே மெய் இயலின் பணி என்கிறது. மெய்யியல் குறித்த இறை இயல், கடந்தநிலை, பேருண்மை, தரிசனம், ஆன்மீகம், பேரறிவு உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு மெய்யியலை ஒரு மொழிச் செயலாகப் பார்க்கிறது. தத்துவம் ஒரு மொழிச் செயல்பாடு என்பதால் அது புதிய அனுபவங்களை, உணர்வை சமூகத்தில் ஒரு புதிய கருத்தாக்கமாக அறிமுகப்படுத்தும் ஒன்றே. இப்புதிய கருத்தாக்கம் புதிய வாழ்தலாக உருவாகும் பல மெய்யியல் சிந்தனையாளர்கள் பல கருத்தாக்கங்களை உருவாக்கி உள்ளனர். அதற்கு நிறைய சான்றுகளைத் தரலாம் - நிலையாமை, ஆத்மா, மாயாவாதம், பரமாத்மா, ஜீவாத்மா, பிளாட்டோ கூறும் வடிவம் - தெகார்த் கூறும் காஜிட்டோ...
இப்படியாக.
இக்கேள்வி மிகவும் சிக்கலானது என்பதுடன் அதனை வரையறுப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இத்தலைப்பில் பிரஞ்சு மார்க்சிய, இருத்தலியத் தத்துவச் சிந்தனையாளரான ழான் பால் சார்த்தர் ஒரு புகழ்பெற்ற கட்டுரையை எழுதியுள்ளார். அவர் இலக்கியமாக அதில் கவிதையியல் (poetics) என்பதை முன்வைத்து, இலக்கியம் என்பது கடப்பாடு (commitment) சார்ந்த ஒன்று என்கிறார். இலக்கியத்தை உரைநடை, கவிதை என்று இரண்டாகப் பிரித்து, உரைநடை என்பது மொழியை திட்டமிட்டு பயன்படுத்தும் ஒரு அரசியல் நடவடிக்கை என்றும்,
கவிதை மொழிக்கு வெளியே இருப்பது அது எழுதுபவரால் பயன்படுத்தப்படுவதற்கு மாறாக, மொழி அமைப்பிலிருந்து பிரித்து அதன் சொற்களை அகஉலகின் உணர்த்தலாக வெளிப்படுத்துவது என்கிறார். சுருக்கமாக இலக்கிய எழுத்தில் கவிதையை மட்டும் உணர்வுடன் உறவுகொண்டதாக முன்வைக்கிறார்.
இலக்கியம் குறித்த வரையறையில் எதிர்படும் சிக்கல் அதன் உணர்வுதளம் குறித்ததே. இலக்கியம் உருவாக்கும் இலக்கிய அல்லது கலை உணர்வு என்பதே அதன் அழகியல் அடிப்படையாக உள்ளது. உணர்வு என்பது ஒரு உடலில் உருவாகும் தனித் தன்மையான ஒரு விளைவு. அது அவ்வுடலை இயக்குவதாகவும், அவ்வுடலின் புலன்களை மறு வடிவமைப்பு செய்வதாகவும் உள்ளது. அது எழுதுதல் என்ற ஒரு மொழிவினையாக இருந்தாலும், அவ்வினை வாசிப்பின் வழியாகவே தன்னை தகவமைத்துக் கொள்கிறது. இலக்கியம், தத்துவம் இரண்டுமே மொழியால் நிகழ்த்தப்படுவதே மற்றும் எடுத்துரைக்கப்படுவதே. இரண்டுமே மொழிவினை என்றாலும், இரண்டின் வினையும், விளைவும் வேறாகும். இலக்கியமும், கலையும் உணர்வுப் புலத்தை உருவாக்குபவை. அதன்வழியாக, ஒரு உடலின் புலனாக்கத்தையும், உணர்வாக்கத்தையும் கட்டமைப்பதாக உள்ளது.
சுருக்கமாகக் கூறினால் மெய்யியல் பேரறிவு சார்ந்த ஒன்று, என்றால் இலக்கியம் பேருணர்வு சார்ந்த ஒன்று என்று கருதலாம். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இலக்கியத்தின் தத்துவம் (மெய்யியல்) இந்த பேருணர்வை சார்ந்ததே. ரோலான் பார்த் கூறும் ‘ஜூவான்ஸ்’ என்பதை அடைவது அல்லது வாசிப்பின்பம் வழியாக ஒரு களிப்புநிலையை அடைவதன் மூலம் ஒரு புதிய உலகை, உணர்வைப் பெறுவது (சூஃபிகள் கூறும் ‘எக்ஸ்டஸி’ என்ற பேரின்பநிலை, இந்திய சிந்தனைமுறை முன்வைக்கும் பேரானந்த நிலை). இதனைதான் தரிசனம் (உளக் காட்சி என்று தமிழில் குறிப்பிட்டால் அதன் இறைசார் தத்துவம் கழன்றுவிடுவதைக் காணலாம்) என்கிறார்கள் இந்தியத் தத்துவ சிந்தனையாளர்கள்.
இத்தரிசனத்தை ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினரே பெறமுடியும் என்ற ஒரு சிக்கலான நிலையை உருவாக்கியுள்ளனர். இத்தரிசனத்தை பிற சமூகத்திற்கு மறுப்பவர்களாக தங்களது சனாதன வருணக் கோட்பாட்டை அமைத்தனர். அதனால் தத்துவம் (மெய் இயல்) என்பது சிக்கலான ஒருவகை ஞானம் சார்ந்த நடைமுறையாக முன்வைக்கப்பட்டது.
ஆனால், இலக்கியம் அனைத்து மக்களுக்கான தரிசனத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. வாசிக்-கும் மக்களிடம் ஒரு உளக்காட்சியை உருவாக்கக் கூடியதாக உள்ளது. இந்த உளக்காட்சியை பெற ரசாக் கோட்பாடு என்கிற வடமொழி சார்ந்த கோட்பாட்டை முன்வைக்கிறார்கள் அதே ஆன்மீகவாதிகள். அதில் உள்ள ‘த்வனி’ என்கிற ஒன்றை தொல்காப்பியம் கூறும் ‘உள்ளுரை’ மற்றும் ‘இறைச்சி’ என்பதோடு ஒப்பிடலாம். இறைச்சி, இறைவன் இரண்டும் இறை என்ற ஒரே வேர்ச்சொல்லில் இருந்தே உருவானவை. அதைக்கூட கட்டவிழ்த்து வெளிப்படுத்தும் ஒரு இலக்கிய கோட்பாட்டு வாசிப்பை தமிழ்ச் சூழலில் நிகழ்த்தியதில்லை இந்த ரசாக் கோட்பாடு பேசும் ரசனைவாதிகள் (இவர்களால் இலக்கியம் ஒரு உணவுப் பண்டத்தைப் போல அணுகப்படுகிறது. ஸ்பெஷல் மசாலா, ஆனியன் தோசை, சாம்பார் வடை என்பதைப்போல).
காரணம் இலக்கியத்திற்கு என்று ஒரு தத்துவம் உள்ளது என்பதையே இவர்கள் மறுப்பவர்களாக உள்ளனர். அதன் நீட்சி கோட்பாடுகளை மறுப்பதாகவும் அறிவை மறுப்பதாகவும் உள்ளது. அறிவு என்பது பதப்படுத்தப்பட்ட உணர்வும், அனுபவமுமே அல்லது உணர்வின், அறிவின் சாரமாக பெறப்படும் ஒன்றே. உணர்வு என்பது பதப்படத்தப்படாத அறிவு அல்லது சாரப்படுத்தப்படாத உணர்வு. இலக்கியத்தின் தத்துவம் உணர்வை உருவாக்கி வாசிப்பவனின் அகக் காட்சியை உருவாக்குவதன் வழியாக உயர்ந்த உணர்வுத் தளத்திற்கும் அதன் சாரமான அறிவிற்கும் இட்டுச் செல்வதே. பக்தியிலிருந்து ஞானம் என்பது உணர்விலிருந்து அறிவு என்பதே.
இலக்கியத்தின் தத்துவம் என்பது உலகை மாற்றுவது, புதிய மனிதர்களைப் படைப்பது, புதிய அறிவை உருவாக்குவது, புதியதொரு உணர்வுத் தளத்தை உருவாக்குவது அல்லது பெயரற்ற ஒரு உணர்விற்கு பெயர் தருவது. இலக்கியம் உணர்வு, புனைவு, கற்பனை சார்ந்தது என்றால், மெய்யியல் அறிவு, கருத்தாக்கம், மெய் சார்ந்த ஒன்று. இரண்டும் சமூக அறம் சார்ந்தவையே.
அழகியல் என்பது இயற்கைத் தத்துவம் என்கிறார் டெல்யுஸ். இயல் உலகை அழகியலாக உள்வயப்படுத்துவதே கலை. இலக்கியம், சினிமா ஆகியவற்றின் அடிப்படை. உணர்வுகளை கருத்தாக்கமாக மாற்றுவது தத்துவம். கருத்தாக்கத்தை உணர்வாக மாற்றுவது இலக்கியம். மெய்யியல் வாழ்க்கைக் குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கி ஒருவரது உலகப் பார்வையைக் கட்டமைக்கிறது என்றால் இலக்கியம் வாழ்க்கை குறித்த அழகியலை உருவாக்கி ஒருவருக்கு எண்ணற்ற உலகை அறிமுகப்படுத்துகிறது. அவரது உணர்வை உருவாக்கி சமூகத்துடன் இயைபுபடுத்துகிறது. வாழ்வதற்கான வேட்கையைத் தருவதே இலக்கியம் இதுதான் எனது பார்வையில் இலக்கியத்தின் தத்துவம் அல்லது இலக்கியத்தின் மெய்யியல்.
தொகுத்துக் கூறினால், இலக்கியத்தின் தத்துவத்தை (மெய்யியல்) இலக்கியத்துவம் என்று கூறலாம். அதன் தனித்தன்மைகள் மூன்று. 1. அழகியல், 2. அறவியல் 3. வாழ்வதற்கான வேட்கையை உருவாக்குதல்.
இங்கு வேட்கை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வேட்கையை, பிராய்ட் மற்றும் லக்கான் இன்மை (லேக்) என்றார்கள். ஒருவரிடமில்லாத ஒன்றின்மீது வரும் ஆசை என்பதாக. சான்றாக ஆண் பெண்ணாக இல்லை என்பதால் பெண்மீதான வேட்கை உருவாகுகிறது என்று. டெல்யுஸ்-கத்தாரி வேட்கை ஓர் உற்பத்திச் சக்தி என்றார்கள். யதார்த்த உலகை ஒருவரது விருப்பிற்கு ஏற்ப உற்பத்தி செய்யும் ஆற்றலே வேட்கை. இந்த உலகை உற்பத்தி செய்வதே சமூகத்தின் வேட்கைதான் என்பதாக இதனைப் புரிந்து கொள்ளலாம். இதனை அத்வைத மாயாவாதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது புறஉலகு என்பதே ஒரு மாயை, அதை மாயையாக அறிவதே ஞானம் என்கிறது. ஆனால், வேட்கையின் வழி உருவாகும் புறஉலகு என்பது புத்தம் கூறும் ஆசையே (வேட்கையால் கட்டப்படும் தன்மையவாத அகவிருப்பு) அனைத்திற்கும் காரணம் என்பதோடு இணைத்து நோக்கத்தக்கது. டெல்யுஸ்-கத்தாரி முன்வைக்கும் வேட்கை பன்மையான புற உலகை படைத்தளிப்பது என்பதே.
ஆக, தத்துவம், வேட்கையை எதிர்மறையாக - unproductive-ஆக பார்க்கிறது. அது வேட்கையை பாவம் என்றும் புனிதமற்றது அல்லது கறை என்றும் அதனை துறக்கச் சொல்கிறது. துறவறத்தை போதிக்கிறது. இலக்கியத்துவம், டெல்யுஸ் - கத்தாரி வழியில் வேட்கையை நேர்மறையாகப் பார்க்கிறது - productive-ஆக பார்க்கிறது. இலக்கியம் சமூகத்தின் உற்பத்திச் சக்தியாக உள்ளது. இலக்கியத்தின் தத்துவம் சமூகத்தில் வாழ்வதற்கான வேட்கையைப் பெருக்குவதே. அந்த வேட்கை அறம் சார்ந்தாக, அழகியல் சார்ந்தாக இருக்க வேண்டும். செவ்வியல் தத்துவம் குறித்த கோட்பாட்டிற்கு எதிரானதாக இலக்கியத்துவம் உள்ளது. டெல்யுசின் புதிய தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப, இலக்கியம் மொழியியல் வினையாக, சமூகத்தில் புதிய கருத்தாக்கத்தை, உணர்வாக்கமாக அதன்வழி புலனாக்கமாக கட்டமைக்கிறது. இலக்கியத்துவம் என்று புதிய அறிதலே இலக்கியத்தின் தத்துவமாக உள்ளது. தொகுத்துக் கூறினால், இலக்கியத்துவத்தின் வினை என்பது...
1. அறிவார்ந்த தளத்திலான ஆன்மீகம் அதாவது அறிவியல் சார்ந்த ஒரு அறிதல் தரும் களிப்பு நிலையை உருவாக்குவது.
2. ஒற்றை உலகிலிருந்து பல்லுலகம் நோக்கிப் பரவுதல்.
3. புதிய சமவெளிகளை (இயற்கைகளை) அறிமுகப்படுத்துதல்.
4. வாழ்ந்துபெற்ற அனுபவத்தை தருதல்.
5. வாழ்வதற்கான புதிய வேட்கைகளை உற்பத்தி செய்தல். பல்வேறு உலகங்களை உருவாக்குதல். அவ்வுலகங்கள் வழி நாமும் பல்வேறு உருவாகுதலாக மாறுதல்.
மெய்யியல் (தத்துவம்) உலகை அறிவாக உள்வாங்குகிறது என்றால், இலக்கியம் உலகை உணர்வாக உள்வாங்குகிறது. உணர்வே அழகியலாக இலக்கியத்திலும், அறமாக மெய்யியலிலும் வெளிப்படுகிறது. இலக்கிய அழகியலே மெய்யியலின் அறமாக உள்ளது. அறம்சார் அழகியலே வாழ்விற்கான வேட்கையை, சமூக வாழ்விற்கான அடிப்படைகளைத் தருவது. இனியான இலக்கியம் தமிழ் இலக்கிய பீடங்கள் உருவாக்கி வைத்துள்ள ரசனைவாதம் சார்ந்த வெறும் உணர்ச்சி சார்ந்த ஒன்றாக இல்லாமல், அறம் சார்ந்த அறிவு சார்ந்த அழகியலாக அமைய வேண்டும். அதற்கு அறம் சார் அழகியல் என்ற ஒரு புதிய கருத்தாக்கமே இலக்கியத்தின் தத்துவம் அல்லது இலக்கியத்துவம் முன்வைக்கும் ஒன்று.
“அந்த நாட்களில், குழந்தைகள் நாங்கள், பெரியோர்க்கு ஒப்பாய் கருதப்படாது, மட்டு மரியாதையின்றி நடத்தபட்டோம்; ஆனால் எனது அபிப்ராயத்தில், பெரியோர்களோ, குறிப்பாக அனைத்து வகையான அறிமுகமில்லாதவர்களோ, யாராக இருப்பினும் எனது கால் தூசிக்கும் கீழானவர்கள்.”
“இவ்வுலகினும் பெரிதாய் நான் கருதுவது குழந்தைகளை மட்டுந்தான்.”
- என்ரி டர்கர் (1892-1973)
இவ்வாசகங்கள், இளைஞர்கள், பெரியவர்கள், சமூகத்தின் முதியவர்கள் என சமூகத்தின் எந்த வளர்ந்த மனிதர்களோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத, என்ரி டர்கர் எனும் கலைஞரின் நாட்குறிப்பிலிருந்தவை.
குழந்தைகள் என்றால் அவருக்கு உயிர், அதீத பற்று; அதீதமென்றால், தத்து குழந்தை வேண்டி விண்ணப்பிக்குமாறு அவரைத் தூண்டும் அளவுக்கு அதீதம். (அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவல் இங்கு தேவையில்லை.)
குடும்பம் என்று எதுவுமிருக்கவில்லை, வெகுசிலர் என்பதே அதிகம் போல, விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை வைத்திருந்தார் டர்கர். எளிதாக மக்களிடையே ஜன ரஞ்சகமாக உலாவர, அவரிடம் ஓரிரு சூத்திரங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் ஒன்று, அந்தந்த நாளின் வானிலை நிலைய அறிக்கையைப் பற்றியும், நிலவிவரும் வானிலை பற்றியும் சிலாகிப்பது. இவ்வாறு சமூகத்தின் விளிம்பின் முனையிலிருந்து கொண்டு தத்துக் குழந்தைக்கு விண்ணப்பித்திருந்தார் அந்தத் துறவி.
மேலும், மிகவும் வறியவரான டர்கர், மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக ஓர் அத்தக் கூலியாய் நிரந்தரமில்லாத ஜீவனம் செய்து வாழ்ந்து வந்தார். அவர் ஒரு தீவிர ரோமன் கத்தோலிக்கரும் ஆவார்.
இதுதான் அன்றாட வாழ்வு டர்கர் மீது செலுத்திய ஒளியின் பிம்பம்.
ஆனால் இவையெல்லாம் தாண்டி, அவரது அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை அறைக்குள், அவருக்கென்று தனியாக ஒரு உலகம் பரந்து விரிந்திருந்தது - அவற்றை பீடித்திருந்த மாய மந்திர சக்திகளும், துர்சக்திகள் உட்பட.
டர்கரின் படைப்புலகம் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் என எதிலிருந்தாவது தொடங்க வேண்டுமென்றால், எப்பொழுதும் வெகுஜனத்தின் கண்ணை உறுத்தும், டர்கரின் ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்குறி வளர்ந்த, குட்டிப் பெண்களிலிருந்துதான் தொடங்கவேண்டும். அதைப்போல, பெண்குழந்தைகள் மீதிழைக்கப்படும் அநீதியும் அதை விஞ்சும் அதீதமான, வன்முறையும், குரூரச் சித்திரவதைகளையும் புறக்கணிக்கமுடியாது.
முதற்கண் பார்வையாளர்கள் சிலருக்கு இதன் விகாரம் மட்டுமே தெரியும். படைப்பாளியின் மன நிலை மீது சிறு சந்தேகமும், குரூரத்தின் மறைவில், கலைஞனின் வக்கிரம் இருப்பதாகவும் தோன்றும்.
இவ்வகை, எதார்த்தம் நீங்கிய உலகைக்கண்டு, சமகால கலைபடைப்புகளே கொஞ்சம் தள்ளிதான் நிற்கும்.
இவற்றை கடந்தே, டர்கரின் பரந்த தனியுலகத்தை புரிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் டர்கர் மிகவும் கைதேர்ந்த ஓவியரோ, கோடுகளில், வண்ணங்களில் நிபுணத்துவம் பெற்றவரோ கிடையாது. அது அவருக்கும் தெரிந்திருந்திருக்கக்கூடும் அதனால்தான் அவர் அதிகமாக வித்தைகளையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்கினார்.
இன்றைய கலை ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள் யாவருக்கும் அவரது வித்தையில் புலப்பட்ட டர்கரின் சாமர்த்தியம், மெய்சிலிர்க்க வைக்கிறது.
செய்தித்தாள்கள், விளம்பரங்கள், வண்ணங்கள் தீட்டும் ஓவியப்புத்தகங்கள் மேலும் குப்பைகளில் அவருக்கு கிடைக்கும் மதிப்பற்ற பொருட்கள், என அவற்றில் கிடைக்கும் உருவப்படங்கள் யாவையும் சேகரித்துகொள்வார். அவற்றை தடமெடுத்து உருவங்களை கொலாஜ் ஆக கோவைக்கலையாக (Collage) உருவாக்குவார்.
இவ்வாறு சுவரோவியங்கள் போல, (Murals), ஒட்டு காகித டேப்களைக்கொண்டு இணைத்து, எட்டு அடி நீளம்கொண்ட ஓவியங்கள் பலவற்றை படைத்துள்ளார்.
சில நேரங்களில் அந்த கோவை படைப்புகளுக்காக, சரியான உயர அகல விகிதத்துக்கு உருவங்களை பெரிதாக்க, ஒரு சாதாரண மருந்துக்கடை நகலக இயந்திரத்தில், பல புகைப்பட நூதனங்களைப் புரிந்திருக்கிறார்.
(யோசிக்க: இவ்வாறு செய்வதற்கு மூன்று டாலர்கள் வரை செலவு ஆகும். ஆனால், டர்கரின் வாரக்கூலியே இருபத்தி ஐந்து டாலர்கள்தான். அவரது படைப்பு கோருகின்றவற்றை அரும்பாடுபட்டாவது பூர்த்தி செய்ய வேண்டும் எனும் கடப்பாடு உள்ளவராக இருந்திருக்கிறார்.)
இவற்றை கடந்து, நம் கண்ணில் புலப்படுவது ஒரு கலைஞன் மட்டுமே - வெகுஜன மைய நீரோட்டத்திலிருந்து விலகி, எந்த கலையறிவு பின்புலமும் சாராது, கருத்துகள், விமர்சனங்களுக்கு செவி மடுக்காது (அவர் படைப்புகள் வாழ்நாள் முழுவதும் படைப்புகள் வெளிவராதவை என்றாலும், முடித்து வைத்த படைப்புகளின் தரத்தை சோதித்து பார்க்க விரும்பும் ஆசையையே இங்கு நாம் நோக்கவேண்டும்), கலைபடைப்புகளுக்கு மட்டுமே நேர் செய்ய நினைத்த, என்ரி டர்கர் எனும் சுயாதீனக்கலைஞன் மட்டுமே முன்னுக்கு வருகிறார். (Outsider Artist)
மரித்தபோது அனாதையாக முதியோர் இல்லத்தில் கிடந்தவருக்கு, இப்பொழுது, அமெரிக்க சட்டப்படி மொத்தம் ஐம்பது வாரிசுகள் உரிமைகோருகின்றனர். சொத்துரிமைக்கோரி நடப்பாண்டில், மாகாண நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளனர்.
டர்கர் முதியோர் இல்லத்திற்கு செல்லும் முன்னர், அவரது வாடகை வீட்டின் பொறுப்பை முழுக்க முழுக்க வீட்டு உரிமையாளருக்கே (நேத்தன் லெர்னர், கியோகோ லெர்னெர் தம்பதியினர்) விட்டு சென்று விட்டார்.
வீட்டை சுத்தப்படுத்த முயன்ற நேத்தனுக்கு அங்கிருந்த கலைபடைப்புகளைக் கண்டு தூக்கிவாரி போட்டது.
படைப்புகளை இனங்கண்டு, நாட்டார்கலை மைய ஆர்வலர்களுக்குக் கொண்டு சென்றது லெர்னர் தம்பதியர்கள்தான்.
“அவரது பாரம்பரியத்தை ஏந்திசெல்லும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை உரக்க சொல்லவே இந்த வழக்கு” எனக் கூறுகிறார் டர்கரின் தூரத்து சொந்தக்காரர் க்ரிஸ்டன் சாடவ்ஸ்கி. “அவரது வாழ்நாள் படைப்புகளை வேற்றாள் சொந்தம் கொண்டாடிவந்திருக்கிறார் என்பதே எங்களுக்கு மிகுந்த வேதனை - தவறையெல்லாம் சரி செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கிருக்கிறது.”
மைக்கேல் போன்ஸ்டீல் எனும் டர்கரின் ஆய்வாளர் கூறும்போது, “லெர்னர் தம்பதியினர் எப்பொழுதும் முழு உரிமைதாரராக இருக்க முடியாது என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், ஒருவகையில் வாரிசுதாரராகக் கோரும் உரிமைகூட அந்தத் தம்பதியினருக்கு இருக்கிறது. கலை படைப்புகளை, அவற்றின் அந்தஸ்தை இனம் காணும் கலைகண்கள் எல்லோருக்கும் இருக்காது.”
உயில் என்று எதுவும் எழுதாதவரையில், லெர்னர் தம்பதியினர் தரப்பு வாதம் சட்டப்படி செல்லுபடி யாகாதுதான். ஆனால் குப்பையை ஒதுக்க சென்ற, வீட்டு உரிமையாளருக்கு அவையாவும் கலை படைப்புகளாக தோன்றியதுதான் நிதர்சனம்.
அவரது கலைபடைப்புகளைப் போல அவரது 15000 பக்க நாவலோ, 5000 பக்க சுயவரலாறோ அல்லது பத்துவருட வானிலை அறிக்கை குறிப்பேடுகளோ இதுவரை வெளியிடப்படவில்லை.
அதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் டர்கர் அறையில் தொட்டதெல்லாம் பொன்னாகிக் கொண்டிருக்கின்றன. சுயாதீனக்கலைகளை அங்கீகரிக்காத அருங்காட்சியக அறங்காவலர்கள் கூட, இன்று அவரது படைப்புகளுக்கு பெருமதிப்பு வைத்து பின்தொடர்கின்றனர்.
1997இல் மிக முக்கியமான, அமெரிக்க நாட்டார் கலை அருங்காட்சியகம் ஒன்றில் டர்கர் முதன்முதலில் இடம் பிடித்தார். அதிலிருந்து தொடங்கிய விவாதங்களைப் பேசும் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓவியக் கலை ஞராக மட்டுமல்லாது நாவலாசிரியராகவும் வலம் வந்த டர்கர் ஏன் டோல்கியேனின் காதல் மொழியில் பேசவில்லை என்று டர்கரின் இதிகாச நாவலை பற்றிய மற்றொரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
டர்கரின் விசிறிகள், அவரைப்போன்ற தனிமை வாதகலைஞர்களின் கூற்று (Reclusive Artists) டர்கர் குறித்த, மைக்கேல் தெவொஸ் கட்டுரையிலிருந்து :
ஒரு வழியாக, அவர் சிறிதும் சட்டை செய்யாத வெகுஜன சந்தையை டர்கர் சேர்ந்துவிட்டார். அவரது கலைகளை அருங்காட்சியகங்கள் கொள்ளட்டும். இவர் சைக்கோவா இல்லை அப்பாவியா என்று மேதாவிகளும், கருத்து சொல்பவர்களும், டர்கரை குறுக்குவெட்டாக மனோரீதியான தளத்தில், கூராய்வு செய்யட்டும். ஆனால், டர்கரை மட்டும் நாங்கள் வைத்து கொள்கிறோம். எங்களிடையே வாழும், அனாதை யாய் திரியும், சுயாதீன அறிவுஜீவிகளுக்கானவர் டர்கர்.
1977இல் டர்கரின் படைப்புகள் ஹைட் பார்க் கலைமயத்தில் (Hyde Park Art Centre) காட்சிப் படுத்தபட்டது.
2008, Intuit : The centre for Intuitive & Outsider Art in Chicago, டர்கரின் வீட்டு அறைகளையும், பொருட்களையும், அருங்காட்சியகப்படுத்தி, நிரந்தர அருங்காட்சியகமாகத் தொடங்கியது.
Museum of Everything, ஜேம்ஸ் ப்ரெட் (James Brett) சுயம்பு (Self-taught artists) கலைஞர்களுக்கான நகரும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்.
2010, American Folk Art Museum “ The Private collection of Henry Darger ” டர்கரின் சேகரிப்புகளை காட்சிப்படுத்தியது.
Jim Elledge : Henry Darger, The Throwaway boy - The Tragic life of an Outsider Artist
டர்கர் குறித்த ஆவணப்படம்:
The Realms of the Unreal - 2004, Documentary on Darger.
டர்கர் படைப்புகள் காணக் கிடைக்கும் அருங் காட்சியகங்கள் :
Hyde Park Art Centre
American Folk Art Museum 1990s
Intuit : The centre for intutitive and outsider art on chicago.
Museum of Modern Art, New york
Art Institute of Chicago & Smithsonian
சின்ன ஆசையுள்ளுக்குள் எண்ணமாய்ச் சிறுகணத்தில் துளிர் விட்டதும் வேகமான அவ்விழைவு விளைச்செயலிலும் மண்ணள்ளிப் போடுகிறது சித்துகளில் சிறந்து விளங்கும் சித்தனொருவனின் மந்திரங்களிலொன்றை கைப்பற்றும் எண்ணமும் அவ்வாறேயெனக்கு முளைவிட்டது நயந்தும் பயந்தும் நஞ்சுணவிட்டும் எதுவும் பயனற்றுப்போயின மோதிரமாய் மூன்று சுற்றுச் சுற்றியிருக்கும் பாம்புக்கேயித்தனை பரிதவிப்புகளென்பதை பதறாமலுணர்ந்தானோ அச்சித்தன் சிறு கயிறுமொரு நீறும் அணியாதவனின் அவ்வுயிர் மோதிரம் எனக்குத் தனித்துறுத்தியதில் வியப்பேதுமில்லை பெருமுயற்சிகளுக்குப் பின்னர் அரைமனதாயதை கைவிட்டேன் கைவிட்ட பின்பாவது கிட்டுமென்ற நப்பாசையாய் உறுத்தியது தொலி மினுக்கங்கொண்ட நாகமோதிரம் கனவுக்குள் நஞ்சைப் பாய்ச்சின மோதிர விரலிலிருந்து பாம்பு டிஸ்கோ இரப்பர் பேண்டாய் விரிந்தது வேளை பார்த்தெட்டி கட்டைவிரலைத் தவ்வி கடித்ததும் அதனிரு கண்களிருந்தும் ஒருநிறயிரு கடுவன் பூனைகள் தவ்வின கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் சீலையையவை கவ்வின ஒருகையால் குழந்தையையும் மறுகையால் சீலையையும் பாதுகாத்தாள் ஓடியுதவி செய்யும் முன்னே அக்கனவு தெளிநீரை மறைக்கும் நுரையானது மறுநாள் அச்சித்தன் வாய் திறவாமலே என்னிடமொரு வாக்கு கேட்டான் கைப்பற்றும் தீயயெண்ணம் கைவிடுவதாய் ஒப்புக்குக் கையடித்துச் சொல்லவும் சித்தன் உள்ளங்கைத் தீண்டலில் வௌமெடுத்த நாகம் விரலைத் தீண்டியது நஞ்சு மணிக்கட்டைத் தாண்டு முன் இரு கடுவன் பூனைகளும் சதையைப் பிறாண்டிப் பிறாண்டி பதம் பார்க்கத் துவங்கின மேனியெங்கும் பொங்கும் குருதியைத் துடைத்துக் கொண்டே விரைவிலிக் கனவும் கலையுமென உறை குருதியாய் பன்னெடுங் காலமாகத் தளராது காத்தோ காத்திருக்கிறேன்.
சின்னத் தொடையிடுக்கில் கை வைத்துறங்குமச் சிறுவன் வளர்ந்ததும் பிறவிக்குணத்தை மட்டை வைத்துக் கட்டமுடியாமல் தனக்கொரு பெண்ணைத் தேடிக்கொள்கிறான் தலையணையைக் கட்டிப் பிடித்தபடியுறங்குமச் சிறுமியின் வளையாத அப்பண்புக்காய் பெருந்தொகையீடாகத் தந்தொரு ஆணை பதிலீடாக விலைக்கு வாங்கித்தருகிறார் தந்தை தனித்திருக்கும் நாய் குரைக்குமோ கடிக்குமோவென இரு நாய்களையும் இணைக்குமச் செயலால் அவ்விரண்டையும் அதுகளுக்குள்ளே செய்கின்றன விதிவிலக்கான விலகலில் பிறன்மனையும் நெடுநாட்கள் நீடிக்காத காரணத்தால் தடுப்பூசியற்ற தயக்கங்களை உடைக்குமக் கணத்தில் வெறிகளும் கடிகளும் வினயமாக்கப்படுகின்றன விளையாட்டாய் அடுக்குமருமை உடைக்கும் நாய்க்கு தெரியாததால் அடைக்கண்ணவதியில் முடக்குமிருவரையும் ஏழிழைப்போட்டு ஏங்கி வாங்கிய பேறுகாலத்திலவள் பெற்றயிருபால் குழந்தைகளும் வளர்பிராயக் கிளர் முறையில் வழிவழியாய் பெற்றுவந்த பழக்கங்களைச் செய்கின்றனர் மகளையும் மகனையும் மருவி நோக்கும் பெற்றோரால் பெறுமதிப்புக் கூடியும் உறுமதிப்புக் குறையாத சந்தைகள்.
சின்னமேதுமற்று தோன்றிய கணமிருந்தே இலங்குகின்ற கவிதையென்பது உப்புத்தாளால் முகந்துடைப்பது நகைத்தபடியே நரம்பையறுப்பது கற்பனையுறுப்பில் களி கொள்வது கூரூசியை கண்ணிலிறக்குவது உறவுகள் முகஞ்சுழிப்பது கொதியிரும்பாய் தனித்திருப்பது கவிதையென்பது நறுக்கப்பட்ட விரல்கள் குவிந்தெழும் வெடிப்புகைகள் உடற்வேட்கையின் உயிர்த்துடிப்பு இமைகளின் அதிவுயர் பயன்பாடு வெக்கை தணிக்கும் காற்று நெருப்பை வாங்கும் காரணி பிய்ந்த உள்ளீட்டுச் சொற்கள் மேலும் கவிதையென்பது படர்தாமரையின் வடிவங்கள் அரிக்கப்பட்ட கரைகள் புண் பத்திய மேலுகள் புலப்படாத் துரோகங்கள் நிறை போதையின் வாநீர் வறுகடலையின் மணம் பிரண்டையுப்பின் துவர்ப்பு அப்புறம் கவிதையென்பது தெரிந்த பெண்ணின் புன்னகை தீட்டி மறையும் சொற்சித்திரம் கனவுகளின் கடுஞ் சஞ்சரிப்பு தனிப்பட்ட முறையில் சீரழிவது தன்னாலேயே நெறிபடுவது பிறரறிவரென எவருமேயெண்ணுவது மேலும் கவிதையென்பது அளவு கடந்த மதிமயக்கங்கள் அதனார்வலர்களை தூண்டும் கதிகள் புரிபடா தன்மையில் புலன்கள் நெறிபடுவது எக்காலத்திலும் குறுங்குழு மண்ணள்ளிப் போடுவது தெளிவற்ற வழியிலே நிலைக்கச் செய்வது வழியுற்றும் அதிலேயே திளைக்கச் செய்வது மென்மேலும் கவிதையென்பது சலிப்பு மேலிடுமிரவுகள் குதிகாலின் உயர்வழுத்தம் செறிவூட்டிய உயிரிருப்பு நெஞ்சுக்குள் சுடும் பொங்கச்சோறு வறுபடும் உளுந்தின் மணம் வெட்டவெளி மின்னல் வேவு பார்க்கும் சன்னல் அய்யா கவிதையென்பது வரவழைத்த வெஞ்சினம் தெளிவற்றவுணர்வின் அலைவு மறைந்திருக்கும் புதை மணல் கொதிப்பேறும் சிறு மூளை மரிப்பதற்கெனவே பிறக்குமுயிரி இடையிடையே வாழும் தன்மை நாட்பட்டு படருமுள்ளாடைத் தடம் மேலும் கவிதையென்பது இனங்கெட்ட கழுதைக்கில்லா ஏனம் குணங்கெட்ட மாட்டுக்கற்ற கூளம் வெங்கம்பயலுக்கு வாய்த்த யோனி உத்தம பரத்தையின் உற்சவம் சொற்ப காலங்களின் அற்பம் பட்டதனால் பதறும் மனம் இட்டதனால் இடறுரும் கரம் மென்மேலும் கவிதையென்பது இன்னதுதானென்று உறுதியாக ஒரு கூதியானுக்குங் தெரியாது.
சர்ப அவதாரம் ஏற்றான் காதலியின் கண்கண்டவன் அண்டம் நடுநடுங்க சூலகப் பொழுதின் கர்ப்பகால ஓவியத்தை உடைத்தான் கடைசிக் கண்ணியையும் இணைக்கத் தெரியா செம்படவன் உன் தெப்பத் தலைவன் தந்தைக்குப் பெண் கேட்டு ஓம்கார சொல்வளர்த்து வைபவப் பார்வைகள் பதட்டம் சூட சமுத்திர மும்முரம் அடங்க தவளைக் காய் நடை நடந்து மூழ்கிப் போனான் இன்றைக்கு மூன்றாம் நாள் பார்த்து வந்த ஆறு இன்னமும் நகர்ந்து கொண்டிருக்க வெந்ததும் பாரம் குறையும் மங்களமீன்கள் அலையலைந்து நிர்வாணம் தேட நெல்லுக்கு அல்லாமல் புல்லுக்குப் பண்ணும் குடி ஆயர் வலம்புரியில் எழுதாதே உன் மஞ்சள் வானத்தை மெயில் அனுப்பு ஓடக்காரன் பாடலில் பயணமேறி ஜோக்கர் பறவைகள் எச்சமிட்டால் மரங்கள் என்ன செய்யும் முளைக்கும் போல் பொங்கிப் பொழியும் மழை ஆன்டி-ரஸ்ட் முலாம் வேய்ந்த நுரையீரல்கள் கள்ளியின் உதிரத்தில் முறுக்கேறி உறும கழுவி ஊற்றிய வார்த்தைகளை ஈரத்தில் அணுகாதே வழுக்குதல் தவிர்க்க இயலாது தோரோ உன் ஏரிக்கரை காகிதத்தில் வாசம் ஏறா மழைக்காலம் இடித்து மின்ன கொடிமுடி மலர கண்கட்டி வித்தையில் நூற்றியொரு கலசங்கள் ஒன்று பெண்பால் மாற்று உடையற்ற சயனக்கன்னி ஆற்றோடு போகவிடு சமுத்திரத்தை ஒற்றைப்படையில் இரவும் பகலும் அடங்கி எழும்.
நான்காம் வேற்றுமையில் பிருஷ்ட முகம் சிறுத்தைப் போல் பிம்ப ஆப்டிக்கல் மாயை முதல்வாத அர்த்தத்தில் பூ விரிக்கும் தென்னம் பாலை கிழமேல் பொதுவழியில் தென்வடலாய் திறக்கும் தேகமனம் பாறைகள் நிற்கும் இடைபெருவெளி இலைகள் சிரிக்கும் சவரக்கத்தி முகம் துடைத்துக்கொண்டவன் கந்தர்வன் அவன் உறங்கா சிசு உறங்கும் கவிதை குரல் ஏறிய பாரத்தில் சர்க்கரைக் கப்பல் எறும்புப் புற்று வட்டங்கள் வரைய பெருநதி வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது மரம் நிறையத் தங்கக் கிளிஞ்சல்கள் ஃப்ரீஸ்டாண்ட் ஃபிரேமில் நான் போல் நிழல் பட்ட புத்தி நாக்கிலிருந்து தலைகீழாய் தேள் இறங்க முகம் நோக்கிய ஆவுடை மறைக்கும் பச்சை ஆப்பிள் மங்கல் காட்சியில் கோணம் குறைந்த கோபுரம் ரீங்கரிக்கும் சூரியன் மை பூசிய ஒரு ஜோடி ரெட்டைவால் குருவி கம்பிகள் குறுக்கிடும் ஜன்னல் கான்கிரீட் காலம் பெயரற்று மிதக்கும் படகு ஸ்வரம் மீறி அலையும் வயோதிகச் சமுத்திரம் பயமும் நடுக்கமுமாய் இருக்க உடைந்த வில் முறியாக் கரும்பு நாரை புரியும் சௌக்கார் நடனம் குதிரைகள் கால் பதித்த பள்ளத்தில் விசுவாசம் அறுத்த நாய் குளிர்கால உடையில் துணையுடன் வருகிறது மீன்கொத்தி யூகலிப்டஸில் சுருதி இணைக்கிறது பீத்தோவன் தொப்பியணந்த மரம்கொத்தி இரட்டைக் கனவில் சுதந்திர வாசல் நீலநிறப்பெண் இழுப்பறைகளாய் திறந்து நிற்க செவ்வானவேளையில் மலைகள் உறங்க.
பரிவர்த்தனை பேசும் வலதுகரம் உயிர்பெற்று நேரத்தை எட்டாவதாக எட்டென்று அடிக்கிறது கடிகாரம் கோயில்களின் நகரத்தில் வயோதிகத்தைப் பார்சல் பண்ணும் யுவதிகள் காலத்தை விஷமிட்டுக் கொன்று புதைத்த இடத்தில் முளைத்த மரம் காற்றின் திசைக்கண்டு கிளை வளர்க்க நடுநரம்பு விரைத்து இலை மலர நிற்கிறான் குதிரைவீரன் சமுத்திர சதுரங்கத்தில் துப்பாக்கித் தூக்கி வந்தாள் குறிவைத்து நின்றாள் எதிரி ராணி மானோ மயிலோ மஞ்சத்தில் குயிலோ விருந்தினர்கள் வரவேற்கப்படுகிறார்கள் விருப்ப முலையலங்காரத்தில் அலை கொண்டு பறக்கும் நீர்க்கரையில் வியர்த்த முகம் ஞாபகத்தில் பால்குடி உதடுகள் கவனத்தில் மீன்பிடி வலைகள் புல்லின் சலசலப்பை தாய் பாஷையில் பெயர்க்க விளைநிலப் பாறைகளுக்கு தடைகள் இல்லை சிலந்தியின் நீர்மணிமாலை முறை விடுத்து ஆளாகிவந்த சூரியக் கபாலம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது சபலத்தில் சொல்லில் சொல் கூட கூடா சொல்லில் புதிர் கூட இருபத்து ஐந்தாவது வரியில் குருட்டுக் கவிஞன் பறக்கவிட்ட ஒற்றைக்கால் வெட்டுக்கிளி கடவுளின் சாயலில் சாக விரும்புகிறது விருட்சம்.
ஒரு மரண வீட்டில் ஒருவர் பத்தியை இறந்தவர் தலை மாட்டில் வைத்தார் இன்னொருவர் சரிந்து விழுந்த மாலையைச் சரி செய்தார் ஆளாளுக்கு ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தவர்கள் தங்களுடைய மரணத்தினை கீழே விழுந்திடாதவாறு ஒரு கையால் கெட்டியாகப் பிடித்திருந்தார்கள் ஏன் எப்பொழுதும் போல இருக்கலாம் மிகவும் கஷ்டமாக இருந்தால் தன்னுடைய முகத்திலிருக்கும் அமைதியை வாசித்துக்கொண்டிருங்களென இறந்தவர் வந்து எல்லாருக்கும் அறிவுரையைப் பொழிந்தார் எல்லாரும் கைகளை விலக்கி சாதாரணமாகி இறந்தவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் குடிகொண்டிருந்த அமைதியை ஆளாளுக்குத் தங்கள் முகத்தில் வைத்துச் சோதித்துப் பார்க்க அது யாருக்குமே வரவில்லை இறந்தவர் கால் பெருவிரல்கள் இரண்டும் ஒட்டியிருப்பது போல தன்னுடைய கால் பெருவிரல்களைக் கூட்டத்தில் ஒருவர் ஒட்டி வைத்தார் உடனே எல்லாரும் அவசர அவசரமாக ராட்டினம் உயரச் செல்லுகையில் முகத்தைக் கைகளால் பொத்துவது போல இரண்டு கைகளை வைத்து அவரவர் மரணத்தினைப் பொத்திக்கொண்டனர்.
நன்றாக ஏந்தலாக இருப்பதால் வந்த சிக்கல் கழுத்துக் குழிக்குள் அமுங்கியிருந்தால் இது நடந்திருக்காது தனியாக வேறு துருத்திக்கொண்டு நிற்கிறது அங்கு வேறெதுவும் வளர்ந்து தொந்தரவாகவும் இல்லை நல்ல போதுமான இடம் வாய்த்துள்ளது ஒரு சிறிய கவர்ச்சியும் லேசாக மிளிர்கின்றது மெல்லிய வன்முறைக்குத் துணிகின்றவர்கள் அதனால் கன்னத்தில் பளாரென ஒன்றை விடுகிறார்கள் கன்னமே இதைக் கேட்டு வாங்கிக்கொண்டது கன்னமே தான் இதற்கு முழுப்பொறுப்பு கன்னத்தை யார் அப்படியிருக்கச் சொன்னது யேசு அன்றைக்குக் கோடு போட்டார் இன்றைக்கு வரை ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் நம்ப வேண்டியதில்லை நம்பினாலும் யேசுவிற்கென்ன ஒரு மெல்லிய புன்னகையைத்தான் எல்லாருக்குமாக பூக்கவிடப் போகிறார்.
மரம் எனக்கு லட்சம் வயதாக்கும் என்றது அந்த மரத்தை விடப் பெரிய ஒரு மரத்தை அதனிடம் காட்டினேன் என்னுடைய கூற்றை மமதையாகப் புரிந்துகொண்டாய் எங்களுக்கு லட்சம் வயதாக்கும் என்று அதன் கருத்தை அது திரும்பச் சொன்னது இதிலும் மமதை ஒட்டிக் கொண்டுள்ளதே ஒரு மலையைக் காட்டவா இல்லை உன்னுடைய கூற்றை திரும்பப் பெறுகிறாயா மமதை கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் அதனிடம் சொன்னேன் இல்லை இல்லை மலையையே காட்டு யாரெனப் பார்த்துவிடுவோம் என்று குரலை சற்று உயர்த்தியது அதனுடைய வாழ்க்கையில் திடீரென வந்த மலையை அதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இரண்டு மரங்களுக்கிடையே ஒரு மலை வந்து உயரமாக நின்றது அந்த மலையைப் புரட்ட வேண்டுமென மரம் நினைத்துவிட்டது அதனால் தேவையில்லாமல் மலையின் வாழ்க்கையில் ஒரு மரம் குறுக்கே வந்து தேவையில்லாமல் ஒரு மலை புரண்டது ஆனால் உண்மையில் மலைகள் மரங்களெல்லாம் எப்பொழுதும் சாதாரண ஒன்றாக நின்றுகொண்டிருக்கின்றன அந்தச் சாதாரணவொன்றே திரும்பத் திரும்ப ஒன்று போல அங்குத் திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருந்தது பார்க்க மிரட்சியாக இருந்தது.
சக்கரங்களில் எப்போது எது எந்தத் திசையில் கழண்டுகொள்ளுமெனத் தெரியாது யார் எப்போது எதற்காக எதில் விஷத்தைக் கலந்துவிடுவார்களெனத் தெரியாது அடுத்த அடியில் எந்தச் சர்ப்பம் சீறிக்கொண்டு நிற்குமெனத் தெரியாது எந்தக் காரணத்திற்காக எனது விரிப்புகள் பறிக்கப்படுமெனத் தெரியாது அது ஏன் வழங்கப்பட்டது என்பதும் எனக்குத் தெரியாது ஒரு நொடி அடுத்த நொடியில் மோதிக்கொள்வதற்குள் கடவுளிடம் எத்தனை முறையீடுகளைச் சொல்லி விலக்கு கேட்பது.
ஒவ்வொன்றிலும் மூழ்குவதற்கு எவ்வளவு தேவையோ அதிலிருந்து சமவெளிகளுக்குத் திரும்பவும் அவ்வளவே தேவையாயிருக்கிறது பால்நிறப் பற்களின் புன்னகைகள் அனைத்துமே வெண்மையானவை அல்ல அப்படியொரு சிரிப்பும் அதேநிறப் பற்களும் எனக்குமிருந்தன புன்னகைக்கும் சிரிப்பிற்குமான இடைவெளி பயங்கரமானது அந்தப் பயங்கரத்தின் ஊடாகதான் இரண்டின் மரணத்தையும் அறிய நேர்கிறது ஆக்கிரமிப்பு முழுதாகவே நிகழ்ந்துவிட்டதெனப் புரியவரும்போது அறிமுகம் வேண்டி நீட்டப்படும் உள்ளங்கைகளும் அதே இருட்குகைகளுக்கான வழியவே காட்டுகின்றன கண்ணிமைக்காமல் ஒரு நிமிடம் பார்க்கிறோம் எதிரே நிற்பவரின் முகத்தினை முதுகுக்குப் பின்னால் விரிந்துசெல்லும் பாதையினை அதில் உறைந்திருக்கும் நட்சத்திர பொறியினை தலைக்குப் பின்னால் மீண்டும் எழும்ப இருக்கும் ஒரு கரியநிற பறவையினை.
மாமிசம் கேட்கும் ஓநாயே ஒரு நிமிடம் நண்பனாக இரு அது மட்டும்தான் உன்னால் முடியும் அவ்வளவு தூரம்தான் என்னாலும் முடியும் மொழியின் அகர வரிசைகளைக் கண்டறிவதற்குள் அதனால் நடக்கும் அனைத்து வன்முறைகளும் தொண்ணூறு சதவீதம் முடிந்துவிடுகின்றன மின்மினிகளைச் சிறைபிடிக்கும் நேரமெல்லாம் அவை என் உள்ளங்கைகளில் குட்டி வௌவாலாக மாறிவிடுகின்றன தாராளமாகத் தேடிக்கொள்ளுங்கள் நான் போதைப் பொருட்களைப் பயன்படுத்தவில்லை சட்டைப் பையிலிருந்து நீங்களே எடுத்து இன்னும் சில பத்தாண்டுகள் என் ஏணியைச் சரிக்க எண்ணினால் மறுவார்த்தை பேசாமல் நான் கூடவே வருவேன் நிர்வாணத்தில் மச்சங்களைத் தேடி எனக்குச் சலித்துவிட்டது கைகளை உயர்த்தி வானத்தைக் கேட்கிறேன் கைகளை இறக்கி மீண்டும் திணிக்கிறார்கள் ஒரு பூமிப்பந்தை பூமியும் வேண்டாம் கைகளும் வேண்டாம் கடவுள்கள் உறையும் வானமும் வேண்டாம் கண்களை மூடிக்கொண்டு பலிபீடத்தில் தலையைக் கொடுக்க தயார் அதுவே என் கடைசித் தலையாக இருந்தால் மட்டும் போதும்.
நலம் விசாரிக்கும் போது உன் கண்களில் பசியுடனான அந்தப் புலியைப் பார்த்தேன் வேட்டையாட அவ்வளவு தயார் நிலையில் இருந்தது அதன் பூரிப்பும் மதமதப்பும் யாரையும் எளிதாக வீழ்த்திவிடும்தான் எனினும் எச்சரிக்கை நண்பா அதனுடன் ஒட்டிப்பிறந்த மற்றொரு புலி அவ்வளவு சீக்கிரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காதெனினும் அதற்கும் குரோதத்தில் ஒளிரும் இரண்டு சிவப்புநிற கண்கள் நிச்சயம் உண்டு.
உன் கதைகளையெல்லாம் எங்கிருந்து தோண்டியெடுக்கிறாய் அதனுலகம் நிச்சயமாக இதுவல்ல பல்லடுக்குகளில் படைக்கப்பட்ட பூமி ஒன்றிலிருந்து உனக்கு யாரோ தூதனுப்ப வேண்டும் என் பிரமிப்பைப் பார்க்கத்தான் நீ அவைகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறாய் யாரும் அறியா அமைப்பில் அது பனுவலாகிறது ஒருவர் மனதிலிருந்தும் நீங்க முடியாத கதையாக உருக்குலைத்துப் போடும் கனவின் வாதையாக அடுத்தமுறையாவது உனக்கோலை வரும் தந்தி நரம்பில் என் பிராணனைப் பிணைத்துவை உடலொழிந்தேனும் அவ்வுலகின் சிருஷ்டிகளை நான் காணவேண்டும் இந்நிலக்கோட்டின் கீழ் நம்மைவிட என்ன கீழ்மை இருந்துவிடப் போகிறது. விதைகளை நீ கையிலே வைத்திருக்கிறாய் ஊறிய சேற்றைக் காணும்போதெல்லாம் ஒன்றிரண்டைத் தூவுகிறாய் விருட்சமாவது பற்றி உனக்குக் கவலையில்லை உன் கெண்டியில் அடர்த்திக் குறையக் குறைய சிறகுகள் பெறுகிறாய் விடுதலைப் பறத்தலில் அல்ல என்கிறாய் கால்தடம் பதியா நிலத்திலிருந்து சிந்தியதைப் பார்க்கிறாய் அங்கே உன் தசை நார்கள் கடுகுருண்டையாய் மாறி நிற்கின்றன புள்ளியிலும் புள்ளி இந்த மன்னிப்புக்கான உன் அப்பியாசம் மறவாதே சொப்பனமே அதன் உயரம் காணவும் நேரம்வரும்.
உன் பாதங்களைக் கிள்ளியது பற்றி
என்ன நினைத்தாய்?
நாம் சாலையில் விழப் பார்த்தபோது
கவனக்குறையை எடையிட்டாயா?
பொடனி வியர்வையை நக்கிச் சுவைக்கையில்
ஏக்கப் பேர்வழி எனத் தோன்றியதா?
பரஸ்பரம் கீழ்மைகளை ஒப்புவிக்கும்
சுதந்திரம் நமக்குள் இருந்ததே
இல்லை, யோசித்தாயா?
உதடுகளைப் பொத்திக்கொண்டு
எச்சிலுக்குக் காத்திருப்பது
மார்பில் முகம் புதைத்ததற்கு
வருத்தப்படுவது எனப் பூப்படையாமலே
புதைந்துவிட்டது எல்லாமும்
அரூபமாய்த் தொட்டுக்கொள்வதுதான்
புனிதமென்றால்
பிறப்புறுப்புகளில் ஏனிந்த சுனைப் பெருக்கம் சகி.
எங்கே கட்டி வைத்திருக்கிறாய் கிடை நாயை? கட்டவிழ்த்துவிடு உன் மூதாதை தடம் பதித்த மேய்ச்சல் நிலம் செந்நரிகள் சூழ குதறப்பட்டுக் கிடக்கிறது எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் கிடை மேய்க்கும் கம்பை? இதோ குள்ள நரிகள் சூழ கிடை மாடுகள் புனைந்து வைத்திருந்த நிலமெங்கும் நரியின் பல் தைத்த தந்திர வேலிகள் உள்ளன நரிகள் உன் குட்டியையும் கன்றையும் தூக்கிக்கொண்டு ஓடியபோது கோவம் வந்ததா உனக்கு? நரியைக் கொன்று பல்லெடுத்து மாட்டிக்கொண்டாயே! உன் நிலம் பறிபோகின்றபோது மட்டும் ஏன் இந்த மௌனம்! மூதாதையான குலதெய்வத்தை அழை மருளாட்டம் மறந்துவிட்டதா சலங்கையைச் சீர் செய்து கட்டிக்கொள் கொம்பூதச் சொல் கிடைக்காளைகள் எக்காளமிடட்டும் முறுக்கேறிய உடம்பை வளைத்து நெளித்து ஆடு இவ்வுலகம் உன் நெளிவுகளில் ஆடட்டும். கண்மாயைத் தொலைத்த நத்தைகள் வெறுங்கூடாகிய பின் எங்கள் விளையாட்டுக்குக் கிடை ஆடுகள் ஆகிப்போயின குட்டி நத்தைகள் இளங்குட்டிகளாகின பெருத்த நத்தை கிடாய்களாகின சற்றே மின்னிய நத்தைகள் பெட்டை ஆடுகளாகின அப்பா தொலைத்த கிடை ஆட்டு மந்தையை இப்படித்தான் என் சட்டைப் பையில் வைத்திருந்தேன்.
இரவின் அணுக்கம் கூடியிருக்கும் தூரத்தில் நாய் ஊளையிட்டால் கூட நரி என்று அடிமனது பிதற்றும் ஆடுகளுக்கு எந்தப் பயமும் இருக்காது கரும்புத் தோகை அசைந்தால் உயிரில் சுனை பிடுங்கும் ஆனால் ஆடுகள் துணையாய் இருக்கும் அந்தியில் தோன்றும் நிலா நடுச் சாமத்தில் மறையும் வளர்பிறை நாளில் அப்பா ஒருநாள் ஊர் போய்த் திரும்புவதற்கே மூச்சு முட்டுகிறதே அமாவசை நாட்களிலும் பிறை நாட்களிலும் அப்பாவுக்கு எத்தனை நாள் மூச்சு முட்டியிருக்கும் இருந்தாலும் இந்த இருள் எங்களின் தாய்.
கேள்விகள் நிறைந்த அதிசய சிகரெட் ஒன்றை காலமெனக்கு பரிசாக அளித்தது பேராவல் தாங்காது அந்தச் சிகரட்டைப் பற்ற வைத்தேன் முதல் புகையை உள்ளிழுத்தபின் நான் லாஸ் ஏஞ்சலில் நின்றிருந்தேன் பழரசம் வரவைக்கும் கைகள் இதுதானே? எனக் கேட்டு கன்னி ஒருத்தி என் உள்ளங்கையில் முத்தமிட்டாள் புகையை வெளிவிட்ட போது என் வலது கை துண்டிக்கப்பட்டு இருந்தது இரண்டாவது முறை நான் புகையை உள்ளிழுத்த போது கதகதப்பேற்படுத்தும் விறகுத்தீயின் முன்பு ஆதி மனிதர்களோடு ஆடைகளற்று அமர்ந்திருந்தேன் குகைச் சுவற்றில் உள்ள படங்களைச்சுட்டிக் காட்டி இவை புரிகிறதா? என அவர்கள் வினவினர் என்ன படம் என நான் உற்றுப் பார்த்தபோது நான் ஒரு தெருவோரத்தில் அமர்ந்திருந்தேன் என் விழிகள் களவு போயிருந்தன மூன்றாவதாகப் புகையை உள்ளிழுக்க எத்தனித்த போது சிகரெட் பாதியில் அணைந்திருந்தது எனக்கு உதவுவதற்காகப் பக்கத்திலிருந்த பால்ய நண்பனொருவன் அதைப் பற்ற வைத்து எனக்குக் கொடுத்தான் இருவரும் நஞ்சை நிலத்தின் மாமரம் ஒன்றின் முன்பு நின்றிருந்தோம் மாங்கனி ஒன்றைப் பறித்து உண்ட நான் மாங்காய் ஏன் இவ்வளவு புளிக்கிறதென அவனிடம் வினவினேன் யாரோ உலுக்கியதில் புகையை நான் வெளிவிட்ட போது எங்கள் வீட்டு மாமரம் என் நண்பனை முழுவதுமாய் விழுங்கியதாய் அனைவரும் பேசிச் சென்றனர் நான்காவது முறையாக நான் சிகரெட்டை உள்ளிழுத்தபோது நான் ஒரு கோட்டை வாசலில் நின்றிருந்தேன் ராஜ பரிவாரங்களோடு வந்த என் நண்பன் எனக்கு ஏனடா அந்தச் சிகரெட்டை கொடுத்தாய்? எனக் கேட்டு மலர் மாலை ஒன்றை அணிவித்தான் மறுநாள் என் வீட்டில் நீண்ட நாக்கினால் தூக்கிட்டு தொங்கும் என் கையில் இன்னும் அணையாமலிருக்கும் சிகரட்டை ஊரார் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.
அது நான் என்றுமே சொல்லாதது நான் எப்போதும் பாட இருப்பது அது தினங்களில் இல்லை அது எப்போதும் தொடங்கும் ஒன்று பாதி இருளிலும் பாதி ஒளியிலும் அதன் ஒளிர்வு அத்தனை வளைவாய் என்பினும் அத்தனை உயர்வாய் எழும்பிச் சொல்கிறது எங்கே முதல் மலர் புறா கடவுளின் கைகள் நேசத்தை இழந்தபோது அது ஓர் ஒலியற்ற மகத்தான வார்த்தையை வெளிப்படுத்த எதிரொலியற்றதாய் எங்கே சுகந்தம் கீழே சென்றதோ அங்கே ஓ ஆனால் எல்லாமே அங்கே இருந்தது என் கவிதைகளின் மேலே ஒரு மலர்வளையம்.
முதலில் ஒரு கவிதை கண்டிப்பாக ஜாலமாய் இருக்கவேண்டும் பிறகு ஒரு கடற்காகம் போல் இசைமயமாய் ஒரு பிரகாசத்தின் இயக்கமாய் ஒரு பறவையின் மலர்வின் ரகசியம் பொதிந்ததாய் அது ஒரு மணியைப் போல மெலிவாய் மற்றும் அது கண்டிப்பாக தீயையும் அத்துடன் கொண்டிருக்க அதற்கு வில்களின் விவேகம் இருக்கவேண்டும் அது ஒரு ரோஜாவைப் போல முழந்தாளிடவேண்டும் அதனால் செவிகொள்ள முடியவேண்டும் புறா மற்றும் மானின் ஒளிர்மையை ஒரு கல்யாணப்பெண்போல தான் தேடுவதை மறைக்கவேண்டும் எல்லாவற்றுக்கும் மேலாக நான் கடவுளின் மீதாக மிதக்கவேண்டும் கவிதைகளின் புத்தக அட்டையிலிருந்து அவர் புன்னகை செய்தபடி இருக்க.
நிச்சலனம் என்பது சிந்தனையின் ஒருமித்தல் படிவாகாதிருத்தல் ஒரு கழைக்கூத்தாடி இறுக்கமான கயிற்றின் மேல் சமன்செய்தவாறு இருத்தல் குன்றா வினைப்பொருள் மொட்டுப் போல அவளது செயல் முடியும்வரை ஓர் அழகிய தாவலில் அவள் தரையில் இருக்கிறாள் வளைந்து வணங்குகிறாள் தன்னைப் பிரகாச கரவொலியில் முங்கச் செய்கிறாள் பிறகு நிசப்தம் இனி இல்லை இப்பொழுது அது பேச்சென்று அழைக்கப்படும் ரோஜா.
நான் எண்ணுகிறேன் ஆம், சோகமான நீலநிற சிறுத்தை அதன் கண்கள் பச்சைநிறத்தில் இருந்தால் ஈடற்றதாய் இருக்கும் மற்றும் மரணத்தை இரு பூக்களைப் போல் பார்க்க வேண்டும் நானே கூட அதற்குக் கொணர்வேன் திகைப்பூட்டும் தங்கம் அனைத்தையும் கடவுளின் பொருட்டு அதன் காலடியில் கிடப்பேன் மரணத்திற்காய் காத்திருந்து அதன் நீலநிற விலங்குப் பாதம் தன் ஈடற்ற சட்டவிதியைக் கொண்டிருக்கும் பச்சைநிறக் கண்கள் ஈடற்ற சொற்களை என்னவிதமான குரல் இந்த நீலம் இந்த பச்சை திரட்டும் என்பது மாபேரளவான நேசம் மற்றும் நானே கூட நேரம் நானே காத்திருக்கிறேன் இந்த அபரிமிதத்திற்கு. ஓ விரைந்து வீழ்வாயாக, தூய தாளே தூய கண்களே வீழ்வாய் கனம் மிகுந்து அமரத்துவமான சிறுத்தையே மரணத்திற்கிணையாக என்னை தூக்கி நிறுத்து என்னை உனது ஒப்புமையின்மையுடன் ஒப்புமைப்படுத்து.
புயல்களையும் சூரியனையும் தாங்கிய புராதன எறும்பைப் போல அழகாய் இரு தலைக்கவசமோ அல்லது தளர் அங்கியோ அணியாது அது தலைமை பிஷப்பாகவும் போர்வீரனாகவும் இருந்தும் கூட அது தன் தசையைத்தான் அணிந்தது இனிய மரியாதையுடன் பாத்திரங்களுக்கு வணக்கம் செய் இவை யாவும் என்னவென்பது உனது விளக்கத்திற்கு விடப்பட்டிருப்பினும். மிகச்சரியாக பிரபஞ்சம் அவ்வளவு சிறிதில்லை ஆனால் இவை கண்டுபிடிக்கப்படும் எங்காவது மிகச்சரியாக அவை கண்டுபிடிக்கப்படும் பெரும் நிதானத்துடன் பேசு ஆனால் யோசி மாபெரும் ஆவேசத்துடன் எரியும் பேருணர்ச்சி எறும்பு என்ன நினைத்தது என்று எந்த ஆண்டுப்பதிவேடுகளும் வெளிப்படுத்தவில்லை என்பினும் அதன் சந்ததியினர் முத்திரையை உடைக்காத போதிலும் எறும்பின் தடயமற்ற தன்மையை அடியொற்றிப் பிரதியெடு ஒவ்வொரு எறும்பும் இந்தப் பூரணத்தை எட்டிவிட்டது அது வருகிறது அது போல அது செல்கிறது தண்ணீர் வழிவது போல் வழிகிறது அத்தியாவசியமாக ஆனால் ரோஜாவைப் போல ரகசியமாக.
கடல்நீரில் செய்யப்பட்ட ஒரு ரேடியோ இசைப்பதற்கு கடல்கன்னிகளைக்கொண்டிருக்கும் அவர்கள் என்னை முத்தமிடும் சமயம் எனது புலன்கள் அனைத்தும் வரவேற்கும் பறவைகளால் செய்யப்பட்ட ஒரு ரேடியோ திராட்சைகளின் இசையைக் கொண்டிருக்கும் அவற்றின் விலாக்களுக்கு இடையே மகிழ்ச்சிகளை சுமந்து செல்வர் இணைநிலையினர் இன்றி ஆனால் ஒளியால் செய்யப்பட்ட ஒரு ரேடியோ வில்லியம் பிளேக் -இன் இசையைக் கொண்டிருக்கும் அவர் தன் மாபெரும் புலிவால்களால் தோற்கடிப்பார் கடவுள் - இசைவிருந்துகளை.
எண் ஒன்றுக்கும் ஒன்றுக்குமிடையில் ஒரு முற்றெண்ணுக்கும் மற்றொரு முற்றெண்ணுக்கும் இடையில் அதுவே வெறுமையாக இருக்கிறது அந்த அரூப பூஜ்யம் நானுக்கும் நானுக்கும் இடையே சுயத்துக்கும் சுயத்துக்கும் இடையே அதுவே சர்வமானது அந்த அரூப நாயகன் அந்த சுயம் சமமாய் இருக்கக்கூடும் அல்லது என்றென்றுமாய் இரண்டாக இருக்கலாம்.
எனது நிலையான முகவரியை உங்களுக்கு அளிக்க (அது) உங்களைத் திகைப்பூட்டும் நான் ஆனது போல (கொண்டது) விலாசமற்ற நாட்கள் அல்லது விசாரணையின் நாட்கள் கடந்து போயின கண்டுபிடிக்கப்பட்டன ஏணி மூலம் மதிலேறிக் கடக்கும் இடப்பெயர்வு மேலே அல்லது கீழே ஆனால் எப்போதும் ஒரு பார்வைக்குவிப்பு ஒரு எப்போதுமான - விலாசம் கண்டுபிடிக்கப்பட்டது காதல் என்னை வெற்றிகொள்ளாதிருந்திருப்பின் (அது) மரணமாக இருந்திருக்கலாம். மரணத்தைவிடக் கூடுதல் அல்லது குறைவாக இருந்திருக்கலாம் ஆனால் கடவுள் அதை செவியுற்றதும் உடனே மாட்சிமையுடன் பதவி துறந்தார் நான் அங்கே இருந்தேன் எந்த ஒலியுமின்றி வார்த்தை.
பிக்காஸோவில் நீங்கள் காண்பது நீலம், ரோஜா நிறம் மற்றும் கனசதுரங்களின் கன்னித்தன்மை அவரது நிறங்களின் ஒலி இலையுதிர்காலம் ஆப்ரிகாட் பழங்களின் மனச்சோர்வு ஒவ்வொரு ஓவியத்தின் மேலும் ஷகாலின் தேவதைகள் போல் தொங்குகின்றன இந்த மனிதன் மில்ட்டன் கே என்பவன் மிக சோகமானவன் மேலும் அவன் தேவதைகளையும் நிர்வாணிகளையும் ஓவியம் தீட்டுவதில்லை என்றாலும் அவை அவற்றைப் போலவே அவலமானவை மிக நிச்சலனமான மணிகள் இரங்கற்பாடல்களுக்கு ஒலிக்கின்றன கனசதுரங்கள் துக்கத்தின் கனசதுரங்கள் ஆனால் கன்னிகளாய் இருப்பதால் கனசதுரங்கள் அதிக கவனத்துடன் எழுகின்றன ஆனால் நிர்வாணிகள் அனைவரும் நிச்சலனமாய் அவர்கள் கன்னிகளாய் இல்லாமையால் இதை உள்வாங்க மென்மை தேவைப்படுகிறது வர்ணங்களின் பொருட்டு நிர்வாணிகள், கனசதுரங்களை பீடிக்க இருக்கின்றனர் ஒருவர் ஓவியக்கலையின் காளைச்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்தால் ஒழிய. பிறகு இணங்குவித்தல் உடனடியானது: நீங்கள் கிடக்கிறீர்கள் வீழ்ச்சியுற்று, வெற்றியாளராய், மிகத் துயரமான கொம்புகளைப் பற்றிப் பிடித்தபடி.
ஒவ்வொருவரும் ஓர் அறையை தம்முடன் சுமக்கின்றனர் இதை கேட்டலின் மூலமாய்க் கூட நிரூபிக்கலாம் யாரோ ஒருவர் விரைந்து நடந்தால் மற்றும் ஒருவர் காது கொடுத்து கூர்ந்து கேட்டால் இரவில் சுற்றியெங்கும் சகலமும் அமைதியாய் இருக்கையில் ஒருவர் செவியுறுகிறார் எடுத்துக்காட்டாக சரியாக சுவற்றில் இறுத்திக் கட்டப்படாத கண்ணாடியின் சடசடப்பை. From Franz Kafka’s ‘First Octavo Note-book.’ Wedding Preparations (Secker and Warburg)
ஒரு வில்லாளன் ஆவதற்கு நீங்கள் ஒரு தறியின் அடியில் இரண்டு வருடங்கள் முன்னும் பின்னுமாய் போய்வரும் ஓடக்கட்டையை கண் இமைக்காமல் பார்க்க வேண்டும் பிறகு மூன்று வருடங்கள் உங்கள் முகம் ஒளியின் பக்கம் திருப்பப்பட்டு ஒரு பட்டு நூலின் மேல் ஒரு பேன் மேலேறுவதைக் கவனிக்க வேண்டும் ஒரு சக்கரத்தை விடப் பெரியதாய் அந்தப் பேன் தோன்றும் பிறகு ஒரு மலையைவிட அது சூரியனை மறைக்கும் போது நீங்கள் அம்பை விடலாம் நீங்கள் இதயத்தின் மையப்புள்ளியைத் தாக்குவீர்கள். From Lao-Tse, quoted in The Notebooks of Simone Weil, volume 1 (Putnam)
அவனது கவிதைகளின் நிழலிலிருந்து விரைந்து பறந்து மறையும் பொன்னாலான பறவைகள் ரைம்போவின் அந்தத் தங்கப் பறவைகள் எங்கிருந்து வந்தன? எங்கே பறந்து போகின்றன? அவை புறாக்களோ அன்றி பருந்துகளோ அல்ல அவை காற்றை வசிப்பிடமாய்க் கொண்டவை இரவில் பொறிக்கப்பட்ட தனிநபர் தூதுவர்கள் ஒளியூட்டத்தின் வெளிச்சத்தில் விடுவிக்கப்படுகின்றன காற்றின் உயிரிகளுடன் அவற்றுக்கு எந்த உருவ ஒற்றுமையும் இல்லை அவை தேவதூதர்களும் கூட இல்லை ஆன்மாவின் அரிய பறவைகள் சூரியனிலிருந்து சூரியனுக்கு இடம்பெயரும் பறவைகள் கவிதைகளில் சிறைப்பட்டிருப்பதில்லை அங்கிருந்து விடுதலை அடைகின்றன. From Henry Miller, The Time of the Assassins (New Directions).
தனது ஓவியத்தட்டின் முதன்மை வர்ணங்களைத் தறித்தார் மற்றும் அவரது அமைப்பாக்க உத்திகளில் செங்குத்துக்களையும் கிடைத்தளங்களையும் கூட இறுதியாக ஒரு புள்ளியை அடைந்தபோது அவரால் பச்சை நிறத்தின் ஒழுங்குகளை அனுசரிக்க இயலாமல் மரங்களைப் பார்க்காமலிருக்க மேஜையருகே இருக்கையை மாற்றி அமர்ந்தார் இந்த மந்திரவாதி அவரது ஆரம்பப் பணியில் அதி நுட்பமான மரங்களின் ஆய்வுகளை சாதித்தார் அரூப கோணத்திற்கு முன்னேறி எடுத்துக்காட்டு அடுத்த எடுத்துக்காட்டாய் அவை சதுரங்களிலும் செவ்வகங்களிலும் மறையும் வரை. From a book review by Howard Devree of Piet Mondrian by Michel Seuphor. New York Times Book Review, 1957.
தாகமாயிருக்கும் ஒரு சிறு பறவை அதன் மரணத்திலிருந்து ஒருவர் எடுத்து விடுகிறார் அதன் சிறிய இதயம் துடிக்கிறது படபடத்து கதகதப்பான நடுங்கும் கை மீது எந்த பிரம்மாண்டமான கடலின் கரையாக நீங்கள் இருக்கிறீர்களோ அதன் இறுதி அலையென நீங்கள் திடீரென அறிகிறீர்கள் இந்த சிறு உயிரி தேறிவருகிறது என வாழ்வு மரணத்திலிருந்து தேறுவதுபோல மற்றும் நீங்கள் அதைப் பிடித்திருக்கிறீர்கள் பறவைகளின் தலைமுறைகள் மற்றும் அவை பறக்கும் எல்லாக் காடுகளையும் அவை பறந்து சென்று மேலேறும் அனைத்து சொர்க்கங்களையும். From a letter to Otto Modersohn. Letters of Rainer Maria Rilke, volume 1 (Norton).
ஆன்ட்டிபோலோ நகரில் பல இளைய வயதினர் இருப்பார்கள் அவர்கள் உன்னிடம் வருவார்கள் அவர்களை நீ விரும்புவாய் காரணம் அவர்களது நாவுகள் தேன்தடவியது போன்றவையாக இருக்கும் அவர்களின் கால்கள் மென்மையாய் நடப்பவை நீ என்னை மறந்துவிடுவாய் உன்னால் மறக்கப்பட்ட என்னால் உன்னை மறக்கவியலாது நீ என்னை மறக்கும்போது நான் எனது நெஞ்சின் மேல் விரல்களால் தட்டிக் கொள்வேன் உன்னை அழைத்தபடி மரங்களின் ஊடாய் நான் உன்னிடம் பேசுவேன் நாட்டியக்காரர்களின் கைகளின் ஊடாய் பல காதலர்களால் பேசப்பட்ட வார்த்தைகளின் ஊடாய் உன்னிடம் பேசுவேன் நாட்டியக்காரர்களின் கரங்கள் உன் உடலைச் சுற்றி இருக்கும் உன்னை வியந்து நோக்கும் ஆண்களின் கண்கள் எனது கண்களாய் இருக்கும் எனக்குப் பல கைகள், பல கண்கள் உள்ளன. உன்னைக் காதலிப்பதால் நான் பல காதலர்களாக ஆகிவிட்டேன் கற்பனையில் காரணம் பிற ஆண்களின் கரங்கள் உன்னைச் சுற்றி இருப்பதை நான் விரும்பவில்லை பல நாட்டியக்காரர்களை நானே உண்டாக்கி இருக்கிறேன் அவர்கள் உனது வட்டவடிவான இடையைப் பற்றும்போது பற்றிக் கொண்டிருப்பது நானாக இருக்கும் அவர்கள் சொல்லும் காதலின் சொற்கள் அவர்களது அல்ல மாறாக எனது நான் பல காதலர்களாக இருக்கிறேன் உனக்கு நீயும் கூட என்னை நேசிப்பாயானால் பல நாட்டியக்காரர்களில் நீ என்னைக் காணலாம் அவர்களின் உடல்களில், அவர்களின் சொற்களில் நானே பல காதலர்கள் காரணம் நான் உன்னைக் காதலிக்கிறேன். * பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு நகரம்
நிழல் ஊசலாடுவதும் மரம் கிளைவிரித்து இறங்குவதுமாய் ஏறி இறங்குவதும் நீரின் பிழையல்ல கண்ணின் மாயம் இறங்கி உடல் மறைக்கும் வரை தெரிவதுமில்லை அதன் உயரம் சமநிலை என்பது மேல்காண்பதெனில் வேரின் நீட்சியை எதில் கழிப்பது ஒவ்வொரு முறையும் ஒரு தவறை நீயோ அவரோ காண்கையில் தவறின் மீது உனக்கு அக்கறை ஏதுமில்லையோ கொதிக்கும் மனதை ஆசுவாசப்படுத்த இளநீர் இளநீர் எனும் குரல் எங்கோ ஒலித்துக்கொண்டே செல்கிறது. ஒலித்துக்கொண்டிருக்கும் சப்தத்தை தாண்டிய மௌனம் உரைப்பதென்ன மகிழம்பூக்கள் வசிக்கும் தெருவில் ஒரு நாடோடி முகவரி தேடி அலைகிறான் வீசும் நறுமணம் நிர்க்கதியானவற்றை கேள்விக்குள்ளாக்குகிறது ஒவ்வொரு விநாடியும் முடிவற்றதன் நீட்சி பார்த்த நொடியில் நீர் சுரக்கிறது உப்புக்கரிக்கும் உன் நினைவு வடுக்கள் ஏற்படுத்துவதை எந்தத் துணிகொண்டு துடைப்பது எந்த நீரைக் கொண்டு கரைப்பது தூரமென்பது திரும்பிப் பார்ப்பதற்கும் விடைபெறுவதற்கும் நாமே வகுத்த நிமித்தம்.
நினைவுகளை அழிப்பதென்பது பிறப்பின் மறுஅவதரிப்பு ஒருநாளின் பகலை இரவு விழுங்கி மீண்டும் பிரசவிக்கிறது புதுப்பகலை மறக்கடிக்க மிச்சமிருப்பது ஒரு நினைவு. கொதிக்கும் நீரில் முகம் பார்க்க முடியுமா அடிக்கும் காற்றில் அசையாக்கொடியை எப்படிக் காண்பது விளையும் பயனை உணரா மனங்கள் வினையும் முடிவும் அதனதன் வழியே நீரில் மிதக்கும் தக்கைக்கு வயதோ ஆயிரம் மீனெனப்படுவது நீரின் வாழ்க்கை.
மிகத்துல்லியமானது ஒவ்வொரு விநாடியும் மனதின் நிழலில் அசைந்தாடும் உருக்கள் உரைப்பது என்ன மத்திம காலத்தின் ஞானம்தான் சங்கீதம் அது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது ஓங்கி ஒலிக்கையில் நிச்சயமாய் எழுந்து நிற்கவேண்டும் ஒட்டு மொத்தமானதாய் அனைவருக்குமானதாய் ஏதேனுமொன்று இருக்கத்தான் வேண்டும் இடமும் வலமும் மாறிப்போகையில் உன் இடதும் என் வலதும் முழுமையடைய வேறொன்றைத் தேடுவதென்பது எதன் பொருட்டு தேடிக் கொண்டே முடிவடைகிறது கண்டடைந்ததாய் நாம் கொண்டாடுவது யாரோ ஒருவருடைய வலப்பாகத்தை விநாடியென்பது காலம் சிதறிய ஒரு பருக்கை.
பாலச்சந்தர் (30)
குமாரசாமி (31)
சிவஞானம் (31)
(பாலச்சந்தர் வீட்டு நீண்ட சதுர முன் அறை. மேடையில் இடது, வலது, மற்றும் பின்பக்கங்களில் சுவர்கள். இடது சுவருக்கு அருகில் மேடை விளிம்பை ஒட்டி பழுப்பு வர்ண கிளியர்டோன் மடக்கு மேசை.
இதன் மேல் சால்பெல்லோவின் ‘ஹெர்ட்சாக்’, இலக்கியச் சங்க வெளியீடான ‘கோணல்கள்’, கு.ப.ராவின் ‘சிறிது வெளிச்சம்’, பழைய ‘நியூஸ்வீக்’ ஒன்று, ‘லைஃப்’ மூன்று, முழு அளவு வெள்ளைத்தாள் கொஞ்சம், பிலிப்ஸ் பயனியர் டிரான்ஸிஸ்டர் ஆகியவை உள்ளன.
இதற்குப் பின்னால் சுவரில் பதித்த அலமாரி, கதவு மூடி இருக்கிறது. இதற்கும் பின்னால் கோத் ரெஜ் மடக்கு நாற்காலி மூன்று சுவரில் சாய்க்கப் பட்டுள்ளன. சுவர்க்கோடியில் உள்ள கதவு உட்புறமாகத் திறந்திருக்கிறது.
பின் சுவரை ஒட்டியபடி, நடுவில் இல்லாமல் சற்று இடது பக்கம் ஒதுங்கிய மாதிரி கிளியர்டோன் சாய்வு நாற்காலி; இதில் நீலத்தில் கறுப்புப் பட்டைத் துணி போட்டிருக்கிறது.
பின் சுவரின் வலது கோடியில் ஒரு கதவு; இதுவும்உள்ளுக்கே திறந்துள்ளது. இதன் வழியே ‘சோவியத்நாடு’ மாதக் கேலண்டர் தெரிகிறது. 1969 டிசம்பர்;தேதிகள் கீழே; மேலே படம். வலது சுவரின் பின்கோடியில் ஒரு கதவு மூடியுள்ளது.
இச்சுவரில், மேடையின் முற்பகுதியில், ஒரு நீண்ட சன்னல்;இதன் கீழ் பகுதியில் பல நிறங்கொண்ட நவீன பாணி மஃபட்லால் திரை, சன்னல் விளிம்பில் ‘வீக்லி’ இரண்டு, சன்னலுக்கு அருகில் ஒரு ஆலிவ் பச்சை கோத்ரெஜ் டீபாய்; இதன்மேல் முழு அளவு அட்டை ஒன்று, ‘ஸ்பான்’ ஒன்று, வெள்ளைத்தாள் சில, ரைட்டர் பேனா, ஆஸ்ட்ரே, வில்ஸ் பெட்டி, தீப்பெட்டி இருக்கின்றன.
டீபாயை ஒட்டி ஒரு ஆலிவ் பச்சை கோத்ரெஜ் கட்டில், டன்லப் பில்லோ பாணி மெத்தை, மஞ்சள்-கறுப்பில் ஷோலாப்பூர் விரிப்பு. கட்டில் அகலத்திற்கு நீண்ட, வெள்ளை லாங்க்லாத் உறை போட்ட மூன்று தலையணைகள் ஒன்றன்மேல் ஒன்றாகக் கட்டிலின் பின்பக்கம் அடுக்கி உள்ளன. இதற்குப் பின்னால் சாய்வு நாற்காலிக்கும் முன்னால் நேர் மேலே 60 வாட்ஸ் அர்ஜெண்ட்டா எரிகிறது.
கட்டிலின் இடது பக்கத்தில் ஹவாய் செருப்பு. தரையில் இங்கும் அங்கும் கட்டில் மற்றும் சாய்வு நாற்காலி. அருகில் அதிகமாகச் சிகரெட் துண்டுகளும் சாம்பலும் உள்ளன. கால்கள் கட்டில் விளிம்பைக் கடந்து நீண்டிருக்க, மூன்றாம் தலையணையில் தலையழுந்த படுத்து, ஜான் அப்டைக் எழுதிய ‘கப்புல்ஸ்’ என்னும் நாவலின் மலிவுப் பதிப்பை இரு கைகளாலும் பிடித்தபடி படிக்கிறான் பாலச்சந்தர்.
வெள்ளை, நீலம், செங்கல் நிறங்களில் சிறிதும் பெரிதுமான கட்டங்கள் போட்ட பின்னி லுங்கி; வெள்ளை டெரிகாட்டன் ஸ்லாக்; இடது கையில் மெடல் ஸ்ட்ரே போட்ட ஹென்றி ஸாண்டஜ் வாட்ச். 34 விநாடிகள் அசைவற்றுப் படிப்பில் ஆழ்கிறான். பிறகு வலது கையால் பக்கம் திருப்புகிறான். அதே சமயத்தில் இடது காலை மடக்கிக்கொள்கிறான். 15 விநாடிகள் சென்றதும் வலது காலை மடக்குகிறான்.
வலது கையின் மேல்புறத்தால் நெற்றியை ஆறு முறை அழுத்தித் தேய்க்கிறான். புத்தகத்தைப் பிடித்துள்ள இடது முழங்கை முட்டியை மெத்தையில் ஊன்றி, இடுப்பின் கீழ் பகுதியைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு தலையணைகளில் சாய்ந்தபடி அமர்கிறான். பலமாக மூச்சு விடுகிறான்.
புத்தகத்தை வலது கைக்கு மாற்றுகிறான். படித்துக்கொண்டே இடது கையை நீட்டி டீபாய் மீதுள்ள சிகரெட் பெட்டியைத் தடவி எடுத்துப் படுக்கை மேல் வைக்கிறான்; அதே கையால் ஒரு சிகரெட் எடுத்து வாயின் இடது கோடியில் திணிக்கிறான். பெட்டியைத் திருப்பி வைத்துவிட்டு தீப்பெட்டி எடுக்கிறான்.
சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்துக் கொண்டு, பெரு விரலால் உள் கூட்டைத் தள்ளி விடுகிறான். உள்ளங்கையில் பெட்டியை இடுக்கிக் கொண்டு, பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு குச்சி ஒன்றை உருவுகிறான்.
பெட்டியை மெத்தைமேல் வைத்து நடுவிரலால் அழுத்திக்கொண்டு குச்சியைக் கிழித்து எரிய வைக்கிறான். சிகரெட் பற்ற வைக்கிறான். அணைக்காமலே குச்சியை எறிகிறான். ஒரு முறை புகைத்த பின் சிகரெட் எடுக்கிறான்.
புத்தகம், சிகரெட்டைக் கை மாற்றிக்கொள்கிறான். திரும்பவும் பழையபடியே படுக்கிறான். படித்துக்கொண்டே ஐந்து முறை புகைத்து விடுகிறான். பிறகு, புகைக்காமல் படிக்கிறான். ஐம்பது விநாடிகள்.)
(புத்தகத்தை மெத்தை மேல் போட்டுவிட்டு எழுந்து கொண்டே) பாவி (ஷெல்ப் உள்ள சுவர் பக்கம் திரும்பி கால்களைத் தொங்கப்போட்டபடி) படுபாவி (முதல் அசையை அழுத்தி) Updike, (இரண்டாம் அசைக்கும் அழுத்தம் தந்து) UPDIKE - UP-DIKE (செருப்பைப் போட்டபடி) John UP-DIKE. John - my uncle John has a thing Cong (ராகம் போட்டபடி) Long john Updike’s Couples, Couples Couples, Up (என்று எழுந்து நிற்கிறான். ஒருமுறை புகைக்கிறான். சாய்வு நாற்காலியை நோக்கி நடக்கிறான்; வழியில் துண்டு சிகரெட்டைப் போட்டு மிதிக்கிறான்.
திரும்பி கட்டில் அருகில் வந்து இடதுகை நீட்டி சிகரெட், தீப்பெட்டி எடுக்கிறான். வலது கையால் ஆஷ்ட்ரே எடுத்தவன், தலையை அசைத்துவிட்டு திரும்பவும் அதை வைத்து விட்டு நிமிர்கிறான். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டே போய்ச் சாய்வு நாற்காலியில் சாய்கிறான். சிகரெட், தீப்பெட்டிகளை வலது புறம் தரையில் போடுகிறான். கண் மூடியபடி வேகமாக, ஆழமாகப் புகைக்கிறான்.
வெறித்தனமான சிந்தனையின் சாயல் முகத்தில் படர்கிறது. (55 விநாடி கழித்து) ஹாங்ங். (20 விநாடி கழித்து) அதான் சரி. (10 விநாடி கழித்து) வேற வழி. (ஒரு நீண்ட புகையிழுப்புக்குப் பின் எழுகிறான். சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் தேய்க்கிறான்.
அவனுக்கு வலதுபுறம் உள்ள வழியில் நுழைந்து மறைகிறான். சில சப்தங்கள். 22 விநாடியில் திரும்புகிறான், கையில் பிளாஸ்க் மூடியுடன், சாய்வுநாற்காலியில் சாய்கிறான். மூடியிலிருந்து காபி குடிக்கிறான்.
அப்போதும் ஆழ்ந்த சிந்தனை, குடித்தபிறகு மூடியை வலதுபுறம் வைத்துவிட்டு, டிரான்ஸிஸ்டரை வெறிக்கிறான். 9 விநாடி கழிந்ததும் ஒரு சொடுக்குப் போட்டு எழுந்தோடி, அட்டை + ஸ்பேன் + தாள் + பேனாவுடன் திரும்பி வந்து அமர்ந்து அவற்றை மடியில் வைத்து விரைவாக எழுதுகிறான்.
25 விநாடியானதும் நிறுத்துகிறான். சிகரெட் ஒன்று எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு, பெட்டிகளை மூடிக்கு அருகில் போடுகிறான். 10 விநாடி விழிக்கிறான். புகைத்தபடி எழுதிய தாளை எடுத்துஎழுதாத கீழ் பாதியில் சிகரெட் நெருப்பால் துளை போடுகிறான்.
பிறகு ஒரு இழுப்பு, ஒரு புகை விடுதல், ஒரு துளைப்பு என்று மேலும் நான்கு துளை போடுகிறான். ஆறாம் துளை போடும்போது, வெளியிலிருந்து குரல்: பாலா, பாலா.
பால: வர்றேன். (அட்டை முதலியவற்றை இடது பக்கம் வைத்துவிட்டு, விரைந்து சென்று மூடியுள்ள கதவைத் திறக்கிறான். முதலில் சிவஞானம் நுழைகிறான்; சந்தன டெரிலீன் ஸ்லாக், கறுப்புவாருடன் வெஸ்ட் எண்ட் வாட்ச், கடல் பச்சை பாண்ட், ஸான்டக் காலணி. பின்னால் குமாரசாமி வருகிறான்; வெள்ளை டெரிகாட்டன் ஸ்லாக், மெடல் ஸ்ட்ரே போட்ட ஃபார்டிஸ் வாட்ச், மான் நிற டெரிகாட்டன் பேண்ட், ஸான்டக்) வாங்கடா உங்களைத்தான் நினைச்சிக்கிட்டே இருந்தேன். (கதவை மூடாமல் பின் தொடர்கிறான். சிகரெட்டைக் கீழே போட்டு மிதிக்கிறான்).
குமா: (நடந்தபடி); அதனாலேதான் கதவை மூடி வச்சிருந்தியா?
சிவ: (கட்டிலை நோக்கி நடந்தபடி): அப்படி என்னடா பண்ணிக்கிட்டிருந்தே? (திரும்பிப் பார்க்கிறான்.)
பால: Paper ஐ ஓட்டைப் போட்டுக்கிட்டிருந்தேன், சிகரெட் நெருப்பாலே, (நிற்கிறான்.)
குமா: (சாய்வு நாற்காலியை அடைந்து, திரும்பி நின்று) எப்படியும் Paper ஐ கெடுக்கனும்.
சிவ: (கட்டிலில் உட்கார்ந்தபடி) அதாண்டா லட்சியம். எழுதிக் கெடுக்கனும், இல்லேன்னா இப்படி, ரொம்ப tired ஆ இருக்கு. நான் கட்டிலியே உட்கார்றேன். முடியலேன்னா அப்படிச் சாயலாம்.
பால: உன் விளக்கம் இல்லாமயே புரியுது, சும்மா இரு. (அருகில் சென்று நிற்கிறான்.) நான் இப்போ ஒரு mood லே இருக்கேன். பயங்கரமான mood, தெரியுமா?
சிவ: தெரியுது.
பால: (குமாரசாமியிடம்) ஏண்டா நிக்கறே, உட்காரேன். (அவன் உட்காருகிறான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டே சிவஞானத்தைப் பார்த்தபடி, சிவஞானத்திடம்) எப்படி?
குமா: Studs, வேற எப்படி? என்ன Couple- படிச்சியா? முடிச்சாச்சா?
சிவ: Couples ஐ படுக்கையிலேயே வச்சிருக்கான், படிக்காம இருந்திருப்பானா? அதான் இத்தனை cigarete, இந்த mood.
பால: (சிவஞானத்தை முறைத்துவிட்டு) இன்னும் முடிக்கல, பாதிதான். என்னமா எழுதறான்டா, கொல்றான், சே!
சிவ: சே, சே, ஒரே அசிங்கமா இருக்கு; முதல்ல இந்தக் குப்பையைக் கூட்டித் தள்ளி கதவுக்குப் பின்னால ஒதுக்குடா.
பால: நல்லவேளை.
(நகர்கிறான்; உள்ளே செல்கிறான்.)
குமா: நானும் பயந்துட்டேன் சிவஞானம். c Couples ஐத்தான் சொல்றீயோன்னு.
சிவ: (புத்தகத்தை எடுத்துப் புரட்டியபடி) இதையே சொல்லியிருந்தாதான் என்னடா? much too much. De Sade கெட்டான் போ. (புத்தகத்தை டீபாய்மேல் போடுகிறான்)
குமா: But - (பாலச்சந்தர் எழுதி வைத்த தாளைப் பார்த்து விட்டு எடுக்கிறான்.)
பால: (விளக்குமாற்றுடன் திரும்பியவன்) குடுடா அதை. (ஓடிக்கொண்டே விளக்குமாற்றைப் போடு கிறான்.)
குமா: (அதைப் பார்த்து) என்னடா எழுதியிருக்க?
பால: (அதைப் பிடுங்கி மடித்தபடி) நேரம் வர்றப்போ நானே படிக்கச் சொல்றேன். (சட்டைப் பைக்குள் வைக்கிறான்) இது beginning தான். (ஒரு நாற்காலியை எடுத்து அருகில் போட்டுக்கொண்டே) But what a beginning...
குமா: பெருக்கல?
பால: வேணுன்னா நீயே பெருக்கிக்கோ. (உட்கார்கிறான்.)
குமா: கட்டிலே இழுத்துப் போடுடா, சிவஞானம் (நன்றாகச் சாய்ந்துகொள்கிறான்) கடைசியில பெருக்கிக்கலாம், ஒரே அடியா, போகும்போது (வலதுகை நீட்டி, தரையில் கிடந்த பெட்டிகளை எடுக்கிறான். இருந்த ஒரே சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். சிகரெட் பெட்டியை கதவுக்குப் பின்னால் வீசுகிறான்; தீப்பெட்டியைக் கீழே போடுகிறான்.)
(இதற்குள் சிவஞானம் எழுந்து கட்டிலைக் குறுக்காக நகர்த்திவிட்டு, பாண்ட் பைக்குள் இருந்து பர்க்கலி, தீப்பெட்டி எடுத்துக்கொண்டு உட்கார்ந்து, ஒரு சிகரெட் பற்ற வைக்கிறான். இரண்டு பெட்டிகளையும் அருகில் வைத்துக்கொள்கிறான்.)
பால: இதுக்குக் குறைச்சல் இல்ல.
சிவ: என்ன, குமார்? (செருப்பை விட்டுவிட்டு, காலைத் தூக்கிப்போட்டுச் சாய்ந்து படுத்துக் கொள்கிறான்.)
குமா: நானும் கேட்டேன். (பிளாஸ்க் மூடியில் சாம்பல் தட்டுகிறான்.)
பால: ஏண்டா, flask மூடிதான் உனக்கு ash-tray வா? அதான் உன் கண்ல படணுமா; இவ்வளவு பெரிய (அறையைச் சுட்டிக்காட்டி) ash-tray படலியா? (எழுந்து, வலதுகையை நீட்டி) And you a Critic! Bah! (நகர்ந்துசென்று ஷெல்பிலிருந்து புதுச் சிகரெட் பெட்டி எடுத்துக்கொண்டு உடைத்தபடி திரும்புகிறான்.)
குமா: (சிவஞானத்தை உற்றுப் பார்த்துவிட்டு) Allright என்ன விஷயம்? (தீப்பெட்டியை எடுத்து வீசுகிறான்.)
பால: (தீப்பெட்டியைப் பிடித்துக்கொண்டு) உடைக்கணும்!
குமா: Cigarette packet டையா? (புகையை வேகமாக விடுகிறான்) இப்பத்தானே உடைச்சே.
சிவ: ஹஹ்ஹா ஆ!
பால: (வலது கையிலுள்ள சிகரெட்டை சிவ
ஞானத்திற்கு முன்னால் நீட்டி) உன்னை நான் முறைக்கிறேன். உன்னைத்தான் (சிகரெட் பற்றவைத்த பின், எரியும் தீக்குச்சியை அவன் முன்னால் கொண்டு போய்) Cigarette டைப் பற்ற வைக்கிற மாதிரி உன்னைப் பற்றவைக்க விரும்பறேன்.
சிவ: ஏன்?
பால: (தீக்குச்சியைக் கீழே போட்டுத் தேய்த்து) அவன் ஒரு கேனன். நீ ஒரு பெரிய கேனன். But you are always great. At silly things.
சிவ: நீ?
பால: A Cannon, I ’ II smash everything. எல்லாத்தையும் எல்லாத்தையும் உடைப்பேன். பிடிடா (குமாரசாமிக்குத் தீப்பெட்டியை வீசுகிறான்.)
குமா: (அதைப் பிடித்துக் கீழே போட்டுவிட்டு); Dramatise பண்ணது போதும், விஷயத்தைச் சொல்லு.
சிவ: (சிகரெட்டைக் கீழே போட்டு) மிதிடா, பாலா. (மிதிக்கிறான்) உட்கார். (உட்காருகிறான்) கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு பார்க்கலாம்.
குமா: (தனது சிகரெட்டை அணைத்துவிட்டு); உடைக்கணும் உடைக்கணும்ன்னு திரும்பவும் ஆரம்பிக்காதே.
பால: (யாரையும் பார்க்காமல்) உடைக்கணும் உடைக்கணும்ன்னுதான் வருது, குமார். வேற மாதிரியே வர மாட்டேங்குது. (ஒரு முறை புகைக்கிறான்) உங்க கிட்டே என்ன சொல்லணும், எப்படிச் சொல்லணும்ன்னு ரொம்ப நல்லா தெரிஞ்சது, நீங்க வந்து சேர்றவரைக்கும். நீங்க வந்து சேர்ந்தப்பறம் ஒண்ணும் புரியல.
சிவ: புரியுது; எல்லாச் சனியனும் ஒரே சமயத்தில தோணும். ஒவ்வொரு கேள்வியா கேட்டா எல்லாம் சரியாப்போயிடும். சரி, எதை உடைக்கணும்!
பால: வேற எதை, மரபைத்தான்.
சிவ: ஏன்?
பால: வேற என்னா செய்றது மரபை? வேற எதுக்கு இருக்கு மரபு?
சிவ: (குமாரசாமியிடம்) நீ கேள்டா.
குமா: எதுக்காக?
பால: என்னையா கேட்கற? (அவன