வான் ரமோன் ஹிமினெஸ் கவிதைகள்


பகிரு

நுண்ணறிவே எனக்குத் தா

நுண்ணறிவே எனக்குத் தா
வஸ்துக்களின் மிகச்சரியான பெயரை
எனது வார்த்தையே
அந்த வஸ்துவாகவே ஆகட்டும்
எனது ஆன்மாவினால் இரண்டாம் தடவை சிருஷ்டிக்கப்பட்டு
வஸ்துக்கள் பற்றிய அறிதலற்ற அனைவரும்
என் ஊடாய்
அவற்றை அடையட்டும்
வஸ்துக்களை மறந்த அனைவரும்
என் ஊடாய் அவற்றை அடையட்டும்
வஸ்துக்களை நேசிப்பவர்களும் கூட
என்னூடாய் அவற்றைச் சென்றடையட்டும்...
நுண்ணறிவே, எனக்குத் தந்தளி
வஸ்துக்களின் மிகக் கச்சித பெயரை, மற்றும்
உன்னுடையதை
மற்றும் அவர்களுடையதை, மற்றும் என்னுடையதை.

கவிதை

கள்ளமின்மையால் மட்டும் ஆடை உடுத்தி
என்னிடம் முதலில் அவள் தூய்மையாய் வந்தாள்
மேலும் நான் அவளை நேசித்தேன்
நாம் ஒரு குழந்தையை நேசிப்பது போல
அவள் எங்கிருந்தோ எடுத்து வந்த ஆடைகளால்
தன்னை அலங்கரிக்கத் தொடங்கினாள்
நான் அவளை வெறுத்தேன் அதை அறியாமல்
சிறிது சிறிதாய் அவள் ஒரு அரசியானாள்
ஆபரணங்கள் கண்ணைப் பறித்தன...
எத்தனை கசப்பு எத்தனை சீற்றம்
ஆனால் மீண்டும் அவள் நிர்வாணத்திற்குத் திரும்பிச் சென்றாள்
அவளைக் கண்டு புன்னகை செய்தேன்
அவளது முற்காலத்திய கள்ளமின்மையின்
ஒட்டிய உள்ளாடை மட்டும் எஞ்சியிருந்தது
அவளை நம்பினேன் நான் இரண்டாவது முறை
அவளது உள்ளாடையையும் கூட அகற்றி
மேலும் இப்போது மிக நிர்வாணமாக...
ஓ நிர்வாணக் கவிதை, எப்போதுமே என்னுடையது
நான் என் வாழ்க்கை முழுவதிலும் அதை நேசித்தேன்.

பெப்ருவரி 1

நீ எல்லாம் நீயாகவே இருக்கிறாய், கடலே
என்றாலும் அந்த அளவு நீயாக இல்லாதிருக்கிறாய்
எத்தனை தனிமையாக
என்றென்றைக்குமாய் உன்னிடமிருந்து அப்பால்
ஓராயிரம் காயங்களில் திறந்திருக்கிறாய், ஒவ்வொரு கணமும்
எனது நெற்றியைப் போல
எனது எண்ணங்களைப் போல உனது அலைகள் வந்து போகின்றன
மேலும் வருகின்றன போகின்றன
முத்தமிட்டு பின்வாங்கும் கடல்
ஒரு நித்திய நட்பில்
மற்றும் மனப்பிணக்கில்
நீ நீயேதான் ஆனால் அதை அறிவதில்லை
உனது இதயம் துடிக்கிறது ஆனால் அதை அது அறிவதில்லை...
தனிமையின் என்னவிதமான நிறைவாக்கம்
தனிமையான கடலே.

நான் நானில்லை

நான் நானில்லை
நான்
என் பக்கத்தில் என் கண்ணில் படாமல் நடந்து செல்லும் அவன்
சில சமயங்களில் நான் அவனைச் சந்திக்கிறேன்
மற்றும் அவனைச் சில சமயம் நான் மறக்கிறேன்
நான் பேசும்போது, மௌனமாகவும் அமைதியாகவும் இருப்பவன்
நான் வெறுக்கும்போது மென்மையாக மன்னிப்பவன்
நான் இல்லாத இடத்தில் நடந்து செல்லும் அவன்
நான் இறக்கும்போது நிமிர்ந்து நிற்கப் போகிறவன்.

ஒரு மாலுமிக்கான கருத்தியலான கல்லறை வாசகம்

ஒருவர் விண்ணின் ஊடாய்ப் பார்க்க வேண்டும் கண்டிப்பாக
உனது கல்லறையைக் கண்டுபிடிக்க
உனது மரணம் ஒரு விண்மீனிலிருந்து மழையெனப் பொழிகிறது
பாறை உன்னை அழுத்தவில்லை
அது கனவின் பிரபஞ்சம்
அறியாமையில் நீ இருக்கிறாய்
சகலத்திலும்
வானம், கடல் மற்றும் பூமியில்
மரித்து.

வெண்ணிற எல்ம் மரம்

மிக உயரத்தில் பறவை பாடிக்கொண்டிருக்கிறது
கீழே பாடிக்கொண்டிருக்கிறது தண்ணீர்
மேற்புறத்திலும் அடியிலும்
என் ஆன்மா திறக்கிறது
இரண்டு லயங்களின் இடையில்
வெள்ளியின் பத்தி
இலைகள், பறவை, நட்சத்திரம்,
மிளாறு, வேர்கள், தண்ணீர்
இரு கொந்தளிப்புகளுக்கிடையில்
வெள்ளியின் பத்தி
மேலும் நீ, கருத்தியலான அடிமரம்
எனது ஆன்மா மற்றும் எனது ஆன்மாவிற்கு இடையே
அலைவுறும் ஒலியை நட்சத்திரம் தொட்டிலிடுகிறது
அலை மற்றும் தாழ்வாய்த் தொங்கும் கிளை
மேலும் மற்றும் கீழும்
நடுங்கிக் கொண்டிருக்கிறது எனது ஆன்மா.

சின்னஞ்சிறு பச்சைநிறப் பெண்

சிறுபெண் பச்சைநிறமானவள்
அவளுக்குப் பச்சைநிறக் கண்கள், கேசம் பச்சைநிறம்
அவளது காட்டுரோஜா மொட்டு
அடர்சிவப்பல்ல அல்லது வெண்ணிறமும் அல்ல
ஆனால் பச்சை
அவள் பச்சைநிறக் காற்றில் வருகிறாள்
பூமி பச்சையாக மாறுகிறது
அவளது பளிச்சிடும் ஒளி ஊடுருவும் ஆடை
வெண்ணிறமும் அல்ல நீலமும் அல்ல ஆனால் பச்சைநிறம்
அவள் பச்சைநிறக் கடலில் வருகிறாள்
வானம் பச்சையாக மாறுகிறது
எனது வாழ்க்கை தொடர்ந்து திறக்கிறது
ஒரு சிறு பச்சைநிறக் கதவை அவள் பொருட்டு.

உச்சமான ரோஜா

சேகரித்து வை அதை, ரோஜாவைச் சேகரித்து வை
இல்லை ஆனால்
அது சூரியன்
பிழம்பின் ரோஜா
தங்கத்தின் ரோஜா
கருத்தியலின் ரோஜா
ஆனால் அது இல்லை, அது சூரியன்
கீர்த்தியின் ரோஜா
கனவுகளின் ரோஜா
இறுதி ரோஜா
ஆனால் அது இல்லை, சூரியன்
சேகரித்து வை அதை, ரோஜாவைச் சேகரித்து வை.

திரும்பிவரும் மலர்

மலர் திரும்பி வருகிறது மாற்றமின்றி
நமக்கான நீலநிற கணத்தைக் குறியிட
நம் உடலுக்கென்று ஒரு இனிமையான சகோதரத்துவத்தை அளிக்க
மேலும் அதீதமாய் வாசனை ஊட்டப்பட்டு
சுருக்கமானதே போதுமெனச் சொல்ல
சுருக்கம் பொன்னிறச் சூரியனில், பொன்னிறக் காற்றில்
பொன்னிற பூமியில், பொன்னிறம் பூசிய கடலில்
வானம் மற்றும் கடவுளர்களுக்கு எதிராய் சுருக்கம்
ஓர் இருண்ட இல்லையின் மத்தியில் சுருக்கம்
போதுமான செயல்பாட்டில் சுருக்கம்
லயம் மற்றும் ஒளிக்கு இடையிலான சமனிலை
மேலும் மலர் அசைந்தாடுகிறது
தசையின் செறிவான நறுமணத்தில்
இருப்பில் நுழைந்து இறுதிவரை சென்றுசேர்கிறது
முடிவின்மையின் முடிவு வரை சென்று தொலைந்து போகிறது
நம்மை ஒரு தோட்டமாய் மாற்றிவிட்டு
வாழும் மலர் அசைந்தாடுகிறது
உள்ளேயும் வெளியேயும்
அதன் எடை அதன் சந்தோஷத்திற்கு
மிகச்சரியான விகிதத்தில்
மேலும் பறவை அதை நேசிக்கிறது
மேலும் பேருணர்ச்சியால் அதை நிறைக்கிறது
மற்றும் ஒரு பெண் வளைந்தபடி அதை நேசிக்கிறாள்
ஆண் அதை நேசித்து முத்தமிடுகிறான்
மலர்வதற்கு, வாழ்வதற்கு
வஸ்துக்களினிடையே ஒரு கணத் தீப்பொறி
ஒரு சபலப்படுத்தும் வடிவத்தினுள்
ஒரு இயக்கமற்ற நிலையில்
கடந்தகாலமற்ற ஒரு கணம்
அதில் காம்ப்பஸின் நான்கு புள்ளிகளும்
சரிசமமாய் ஈர்க்க
இனிமையாயும் ஆழ்ந்தும்
காதலின் கணம் திறக்கிறது ஒரு மலரென
காதலும் மலரும் வடிவத்தில் பூரணமானவை
பரஸ்பர  வெறியெழுச்சிகொண்ட  மறதியின்  உறுதிப்பாட்டில்
ஒரு பித்துப்பிடித்த இழப்பை ஈடுசெய்தலில்
சுகந்தம், சுவை, சுகந்தம்
வர்ணம், நறுமணம் மற்றும் தொடுதல், நறுமணம், காதல், நறுமணம்
செந்நிறக் காற்று அதை வசியப்படுத்துகிறது
மேலும் தூக்கிச் செல்கிறது, இனிமையான வன்புணர்ச்சி
அது ஒரு வாழும் வீழ்ச்சி, இதம், புத்துணர்வு
பரிபூரண அழகில் ஒரு மலரின் மரணம்
பறந்தபடி, கடந்து சென்றவாறு
அழகின் உன்னதத் தினத்தில்
அதன் இவ்வுலகிடமிருந்து ஆர்வமிக்க விடைபெறலில்
எந்தத் துயரமும் மிச்சமின்றி
பூமியை இதமாக்கி, சூரியனை மற்றும் நிழலை
ஒளியின் கண்களில் தன்னையே இழந்தபடி.

முழு நிலவு

கதவு திறந்திருக்கிறது
சில் வண்டு பாடுகிறது
வயல்களில் நீ நிர்வாணமாய்ச்
சுற்றி வருகிறாயா?
ஓர் அமரத்துவமான தண்ணீர் போல
சகலத்திலும் உள்ளே சென்று வெளியேறுகிறது
காற்று வீசுகையில்
நீ நிர்வாணமாய் சுற்றி வருகிறாயா?
பேஸில் செடி உறங்கவில்லை
எறும்பு சுறுசுறுப்பாக இயங்குகிறது
வீட்டினுள் நீ நிர்வாணமாய்ச் சுற்றி வருகிறாயா?

நகரச் சுவர்களின் வெளியே விடியல்

உங்களால் எல்லாவற்றின் முகங்களையும் பார்க்க முடியும்
மேலும் இது வெண்மை
கட்டுமாவு, கொடுங்கனவு, அடோபி சுவர், ரத்தசோகை, சில்லிடுதல்
கிழக்குப் பக்கம் திருப்பப்பட்டுள்ளது. ஓ வாழ்வின் நெருக்கமே.
வாழ்வின் கடினத்தன்மையே
உடலின் உள்ளே உள்ள ஏதோ ஒன்று விலங்காய் - வேராக, எரிகசடு முனைகளாய்
அங்கே இன்னும் சரிவர அமைவுறா ஆன்மாவுடன்
மற்றும் கனிமம் மற்றும் தாவரம்
மனிதனின் பின்னணியில் சூரியன் விரைப்பாக நிற்கிறது
பெண் பன்றி, முட்டைக்கோசுகள், இந்த மண் சுவர்
பொய்யான சந்தோஷம், காரணம் நீ வெறுமனே
காலத்தில் இருக்கிறாய், அவர்கள் சொல்வது போல
ஆன்மாவில் அல்ல
முழு ஆகாயமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது
ஈரமானதும் ஆவிப்புகை விடும் குவியல்களால்
சாணிக்குவியல்களின் ஆன ஒரு தொடுவான்
கரிப்பு எஞ்சுகிறது
இரவின்
இங்கு மற்றும் அங்குவில்
பச்சைநிற நிலவின் கீற்றுக்கள், பாதி உண்ணப்பட்டு
பொய் விண்மீன்களிலிருந்து படிகத் துகள்கள் வீழ்கின்றன
கட்டுமாவு, காகிதம் கிழித்தெறியப்பட்டுள்ளது
இன்னும் மெலிதாய் வான் - நீலத்தில்
பறவைகள்
நிஜமாக இன்னும் விழிக்கவில்லை
கச்சாவான நிலாவில்
தெருவிளக்கு ஏறத்தாழ மறைந்தது
உயிரிகள் மற்றும் வஸ்துக்களின் கலவரக்கும்பல்
ஒரு மெய்யான துயரம், காரணம் நீ நிஜமாகவே ஆழமாய்
ஆன்மாவினுள்
அவர்கள் சொல்வது போல
காலத்தில் இல்லவே இல்லை.

பெயர்களிலிருந்து பெறப்பட்ட பெயர்

உனது இடத்தில் நான் உனக்கொரு உலகினைப் படைத்திருப்பேனேயானால்
நீ நம்பிக்கையுடன் அந்த இடத்திற்கு வந்துவிட்டாய்
மேலும் அதன் பொருட்டு நீ வந்துவிட்டாய், எனது தஞ்சமாய்
காரணம் எனது முழு உலகுமே உனது நம்பிக்கை தவிர வேறு ஒன்றுமில்லை
நான் சேகரித்துச் சேமித்துக்கொண்டிருந்தேன் எனது நம்பிக்கையை
மொழியில், பேசப்பட்ட ஒரு பெயரில், எழுதப்பட்ட ஒரு பெயரில்
நான் சகலத்திற்கும் ஒரு பெயர் தந்திருந்தேன்
நீ எல்லாப் பெயர்களின் இடங்களையும் எடுத்துக் கொண்டாய்
இப்பொழுது எனது இயக்கத்தைத் தடுத்து நிறுத்தவியலும்
எனது தொடர்ச்சியான வாழ்தலிலும் இருத்தலிலுமாய் இருந்த நெருப்பினுள்
காற்றினால் சூழப்பட்டு அதுவே நீலநிற நெருப்பாகித்
தீப்பிழம்பு மறுபடியும் சிவந்த நெருப்பினுள் லகானுக்குள் வரும்போது
திடீரென எங்கோ தடுத்து நிறுத்தப்பட்ட
நானே எனது கடலாக இருக்கிறேன்
எதுபற்றி நான் பேசிக்கொண்டிருந்தேனோ அந்தக் கடல்
ஆனால் கனமில்லை
ஒளியால் நிரப்பப்பட்ட அறிதலின் அலைகளின் இறுக்கமாய்
சகலமும் நகர்ந்து கொண்டிருக்கின்றன மேல்நோக்கி, மேல்நோக்கி
பிரபஞ்சத்திற்கென நான் அளித்த அனைத்துப் பெயர்களும்
கடவுளால் படைக்கப்பட்டவை, மீண்டும் படைக்கப்பட்டு, மீண்டும் படைக்கப்பட்டவை
அருளால்
வலிமையால் அல்ல
பெயர்களிலிருந்து பெறப்பட்ட பெயர்.

நீக்ரோ பெண்ணும் ரோஜாவும்

நியூயார்க், ஏப்ரல் 5

பெட்ரோ ஹென்ரிக்கஸ் உரேனாவுக்கு

வெண்ணிற ரோஜாவைக் கையில் வைத்தபடி நீக்ரோ பெண் உறங்குகிறாள். அந்தப் பெண்ணின் சோகமான அணிமணிகளை ரோஜாவும் கனவும் மந்திரமயமாய் ஒன்றின்மேல் ஒன்று ஏற்றப்பட்டு அகற்றுகின்றன: அடர்சிவப்பு கொக்கிப் பின்னல் வேலை காலணி உறைகள், ஒளி ஊடுருவும் பச்சைநிற ரவிக்கை, அடர் சிவப்பு பாப்பி மலர்களுடன் பொன்னிற வைக்கோல் தொப்பி. தற்காப்பற்ற கனவுகளில், அவள் புன்னகை செய்கிறாள், அவளது கரியநிறக் கையில் வெண்ணிற ரோஜாவைப் பிடித்தபடி.

எத்தனை இறுக்கமாக அவள் அதைப் பிடித்திருக்கிறாள். அதை இறுக்கமாகவும் கவனமாகவும் பற்ற வேண்டும் என அவள் கனவு காண்கிறாள் எனத் தோன்றுகிறது. அவளது நனவிலி மனதில் அவள் அதுபற்றி அக்கறை கொண்டிருக்கிறாள் - உறக்கத்தில் நடப்பவர் ஒருவரின் கச்சிதத்துடன் - அது அவளது சொந்த மென்மை, அதை ஏதோ இன்று காலைதான் அதை அவள் பிரசவித்தாள் என்பது போல, கனவில் அந்த வெள்ளை ரோஜாவின் ஆன்மாவின் தாய் என உணர்பவள் போல. சூரியனைச் சுற்றி அது ஏதோ பொன் என்பது போல். சுருக்கமடைந்த பரிவட்டம் சில நேரங்களில் அவளது மார்பின் மேலோ அல்லது தோள் மீதோ தலை அசைக்கிறது, ஆனால் ரோஜாவைப் பிடித்திருக்கும் கை மரியாதையைக் காக்கிறது, வசந்தத்தின் நிலையான காப்பாளன்.

ஒரு கண்காணா மெய்மை சுரங்கப்பாதையில் உள்ள சகலத்தையும் துளைத்துச் செல்கிறது, கதகதப்பான ஆனால் அசுத்தமான முரண்படும் இருள் அரிதாய் உணரப்படுகிறது. சகலரும் தங்கள் செய்தித்தாள்களைக் கைவிட்டுவிட்டனர், அவர்களின் சூயிங்கம், அவர்களின் கத்தல்கள் அனைத்தையும். ஒரு சோர்வுமயமான கொடுங்கனவு மற்றும் துயரத்திலிருந்து அவர்கள் இந்த வெண்ணிற ரோஜாவினால் உறிஞ்சப்பட்டவர்கள் போல. நீக்ரோ பெண்ணை ரோஜா மாட்சிமைப்படுத்துகிறது அது சுரங்கப்பாதையின் மனசாட்சி என்பது போல. கவனிப்பான நிசப்தத்தில் உள்ள ரோஜா ஒரு சுவைமிக்கச் சாரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் ஸ்தூலமான இருப்பு ஆனால் சகலத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இரும்பும் நிலக்கரியும், செய்தித்தாள்களும் சகலமும் ஒரு கணம் வெள்ளை ரோஜாவினால் நறுமணமூட்டப்படுகின்றன, ஒரு மேம்பட்ட வசந்தகாலத்தினாலும், நித்தியத்துவத்தாலும் ...

காலனிய இல்லம்

நியூயார்க், மார்ச் 26

ஆன்ட் பெஸ்ஸிக்கு

என்ன அமைதி இந்தப் புராதன இல்லத்திற்கு, வெண்மையும் மஞ்சளுமாய் ஒரு டெய்ஸி மலரைப் போல. எளிமையான மரத்தால் உருவாக்கப்பட்டு முழுவதும் பூட்டப்பட்டு, அதன் தூசி நிரம்பிய புராதன ஜன்னல்களில் அவற்றின் இளம் ரோஜா சட்டங்களுடன், வசந்தத்தை வளப்படுத்தும் சாய்வான பச்சை மற்றும் அடர்சிவப்பு சூரியன், ஒரு கணம், இருண்ட காலியான உட்பாகங்கள் ஒளியிலும் வண்ணத்திலும், கரையின் சித்திரத்துடனும். பிற அசிங்கமான வீடுகள் அதைச் சூழ்ந்திருக்க “ரிவர்சைட் ட்ரை” வில் தனிமையில் விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது, ஒரு சுத்தமான சிறிய கிழவனைப் போல் அது தனிமையாகவும் சிறியதாகவும், பாசாங்குடன் இருக்கும் வீடுகளின் மத்தியில். அது நகரத்தில் விடப்பட்ட சிறு பொருள் போல ஒரு சிறு சட்டையை ஒத்திருக்கிறது. அதை எவரும் நேசிப்பதில்லை. அதன் கதவின் மேல் உள்ள இந்த வாசகம் சொல்கிறது: “வாடகைக்கு”. அவ்வப்பொழுது அதற்குச் சலிப்பு ஏற்படாவண்ணம் சந்தோஷமான காற்று அந்த அட்டையுடன் விளையாடுகிறது.

ஆனால் அதன் கல்லறைமயமான தனிமையிலிருந்து அவ்வளவு உயிர்ப்பு சக்தி வெளிப்படுவதால் வரிகள் மற்றும் வர்ணங்களின் ஒன்றன் மீதான பதிதல், அதன் முற்காலத்திய நாட்டுப்புறத்தன்மை வெளிர்ந்து மங்கலாகி, பயங்கரமான எஃகு மற்றும் கற்களின் திரட்சிகளை விரட்டி அடிக்கிறது. அவை அதனை மூச்சு முட்டச் செய்வதால், மேலும் அதைச் சுற்றி இனிமையானதும், தொலைவானதும் தனிமையானதுமான மலை, நீண்டகாலமாய் எதிர்பார்க்கப்பட்ட நாட்டுப்புற வசந்தகாலப் பசுமையுடன்,

பக்கமாய்ச் சாய்ந்து மென்மையாய்க் கிடக்கிறது ஒரு நன்றிமிக்க நாய் போல ஆற்றை நோக்கியவாறு

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மூல ஆங்கில நூல்கள்:

  • Selected Poems: Lorca and Jiminez, Chosen and Translated by Robert Bly A Seventies Press Book, 1973, New York
  • The Selected Writings of Juan Ramon Jiminez, Translated by H. R. Hays Farrar,Straus, And Cudahy, New York

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer