ரைனர் மரியா ரில்கே:
ஒரு கலைஞனின் வாழ்வும் சாதனையும்

பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கக் கட்டுரை

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த பிரமிக்க வைக்கும் ஜெர்மென் மொழி படைப்பாளர்கள் (வான் கதே, பெர்டோல்ட் ப்ரக்ட், நீட்ஷே, ஹெர்மேன் ஹெஸ்ஸே, ஹென்ரிக் ஹெய்ன், காட் ஃபிரைட் பென், தாமஸ் மன்.) மற்றும் அறிவுஜீவுகளில் அதீதமான காஸ்மொபொலிட்டன்தன்மை கொண்டவராய் இருந்தவர் ஆஸ்த்ரிய பொஹீமியக் கவிஞர் ரைனர் மரியா ரில்கே (1875-1926).

ஒருவேளை உலகியல் தன்மைகளில் அவருக்கு இணையாக இருந்தவரெனச் சொல்வதென்றால் அவரது நண்பர் ஸ்டெஃபென் ஸ்வெய்க்-ஐ சொல்ல முடியும்.

ரில்கே ஆஸ்த்ரிய+ ஹங்கேரியக் கவிஞராக வகைப்படுத்தப்பட்டாலும் அவரை நாம் ஜெர்மன் இலக்கியத்தில்தான் சேர்க்கிறோம். காரணம் அவர் போலிஷ் மொழியிலோ அல்லது ஹங்கேரிய மொழியிலோ தன் படைப்புகளை எழுதவில்லை.

நவீனத்துவ இயக்கத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் ரில்கே ஆற்றிய பங்கு தனித்துவம் மிக்கது.

அவரை அமெரிக்க + ஆங்கில இலக்கிய ஆளுமைகளில் ட்டி.எஸ்.எலியட்டுக்கும், ஃபிரெஞ்சுக் கவிஞர்களில் பால் வெலேரிக்கும், ஐரிஷ் கவிஞர்களில் ஏட்சுக்கும் இணையான சாதனையாளர் என்று ஒப்பிட்டுச் சொல்லலாம்.

அவரது படைப்புகள் மூன்று வேறுபட்ட கலை வகைமைகளில் இன்றியமையாதவை:

1. ஓவியம்.

2. தத்துவம்.

3. மதம்.

ஓவியர் செஸானின் கலைக்கும் அவரது சுயத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிடும்போது ரில்கே எழுதிய வரி: “செஸான் தன் கலையுடன் இணைந்திருக்கும் நிலையானது ஒரு மறைஞானி தன் கடவுளுடன் இணைந்திருப்பதற்குச் சமமானது”

ரில்கேவின் படைப்புகள் தொடர்ந்து நவீன வாசகர்களை வசீகரித்துக்கொண்டே இருப்பது இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம்.

தற்போது அதிகமாக மொழிபெயர்க்கப்படும் ஒரு ஜெர்மன் கவிஞர் ரில்கே தான்.

இந்த உலகெங்கிலும் உள்ள காண் கலைஞர்களுக்கு உந்துதலாய் அமைந்தவர் அவர்.

அவரதுபடைப்புகள் சாஸ்த்ரீய மற்றும் பாப் இசைக்கலைஞர்களால் இசையாக மாற்றப்பட்டுள்ளன.

ரில்கேவைப் பற்றிப் பேசுவதென்பது உலக இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதற்குச் சமானமாகும்.

வடக்கு ஆப்பிரிக்காவுக்கு ரில்கே 1911இல் மேற்கொண்ட பயணத்தைத் தவிர அவரது உலகியல் அனுபவம் ஆங்கிலோ சாக்ஸன் பிரதேச எல்லைகளை உறுதியாகத் தவிர்த்தது.

ஆங்கிலேயர்கள் மற்றும் அமெரிக்கர்களின் முனைமழுங்கிய லோகாதாயத் தன்மைகள் குறித்து அவரது வாழ்வின் இறுதிவரை சந்தேகம் கொண்டிருந்தார்.

ஒரு கவிஞன் என்ற முறையில் அவரது பார்வை சர்வதேசீயம் சார்ந்தது.

பிற மற்றும் அந்நிய கலாச்சாரங்களைக் குறித்துத் திறந்த மனம் கொண்டவராய் இருந்தார்.

ரில்கே வாழ்ந்த வாழ்க்கை பிரத்யேகமான நாடோடித்தன்மைமிக்கது.வறுமை நிறைந்தது.

கவிதை குறித்து அவர் கொண்டிருந்த அணுகல்களில் இருந்த அப்பூதிநெறி சம்பிரதாய மதவாத நம்பிக்கைளுக்கு அப்பால் நிகழ்ந்தது.

இந்தநூற்றாண்டின் முதல் கவிதை நாவல் என்று சொல்லக் கூடிய (Notebooks of Malte Laurids Brigge) ஒரு நாவலை எழுதிய பெருமை அவருக்கு உரியது.

ஓவியத்துறைக்கும் அவருக்கும் இருந்த உறவு அபாரமானது.

இம்ப்ரஷனிச ஓவியர் செஸானின் ஓவியங்கள் குறித்து அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் ஓர் ஓவியர் எழுதியிருக்க வேண்டியவை என்பதான புரிந்து கொள்ளல் மிக்கது.

மேலும் பாரிஸ் நகர வாழ்க்கையின் சொகுசு கானல்நீர் போன்றது என்பதை இடையீடின்றி நேரடியாக அனுபவப்பட்டுப் பாரிஸை விமர்சித்தார்.

ஏறத்தாழ 10 வருட காலங்களுக்குப் பாரிஸ் நகரமே அவருக்குத் தலையிடம் என்று ஆனதை நாம் மறந்து விடக்கூடாது.

நாம் ரில்கேவை அவரது கவிதைகளுக்காக, உரைநடைக்காக, நாவலுக்காக, ஆயிரக்கணக்கில் எழுதப்பட்ட கடிதங்களுக்காக மட்டும் படிப்பதில்லை.

நம் பார்வையில் அவரது வாழ்க்கையானது ஒரு நவீனகலைஞனின் வாழ்வையும் இருப்பையும் எடுத்துகாட்டுவதாகவும், பிடிவாதமான அழகியல் தேடலாளராகவும் அவர் இருப்பதால்தான் இன்றும் வாசிக்கிறோம்.

ஹேப்ஸ்பர்க் ராஜ்ஜியத்தில் பிரதானமாய்ப் போலந்து மொழி பேசப்படும் விளிம்பெல்லையில் பிராக் நகரில் வீடற்ற ஏழைக்கவிஞனாய்ப் பிறந்தார் ரில்கே.

ரில்கே அவரது பாரம்பரியம் என்ற ஒன்றை அவரே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

அவர் பிரபுக்கள் பாரம்பரியத்திலிருந்து வந்ததாகக் கோரினாலும் அது சந்தேகத்திற்கு இடமானதாய் இருந்தது.

ஜெர்மன் இலக்கியப் பாரம்பரியத்தில் நீண்ட நெடுங்காலமாய் ஒரு மகா கவிஞர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர் என்கிற அந்தஸ்தைப் பெற்று வந்திருப்பவர் வுல்ஃப்கேங் வான் கதே மட்டுமே.

தவிர அவர் ஒரு கருத்தியலான மானுடப் பிறவியாகவும் கருதப்பட்டவர்.

பூர்ஷ்வா சமூகத்தின் மத்தியில் மதிப்புமிக்க அறிவார்ந்த சாதனையாளராக நின்றவர். அவரிடம் ஒரு விஞ்ஞானியின் தேடல் இருந்தது குறித்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பேர்ப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியில் வருபவர்தான் ரில்கே.

ஆனால் மிக வித்தியாசமான முறைகளில். ஒரு ஏகாந்தி, உள்மன யாத்திரைகளில் மூழ்கிப் போகிறவர். வாழ்க்கையின் பிற்பகுதியில் புத்தகங்கள் வெளியிடுவது பற்றிய அக்கறை கூட அற்றவராய் இருந்தார்.

அவரது குறுகிய வாழ்க்கையின் இறுதிவரை சுவைத்திற வல்லுநர்களின் சிறிய குழுக்களுக்கு அப்பால் அவர் பிரசித்தமாய் இருக்கவில்லை.

கதேவைப் போல ஒரு அமைச்சராகவோ, ஏட்ஸைப் போல ஒரு செனேட்டராகவோ சென் ஜான் பெர்ஸ் (ஃபிரான்சின் நோபல் பரிசு பெற்ற கவிஞர்) ஐப் போல ஒரு அயலகத் தூதுவராகவோ இருக்கவில்லை.

ஆனால் அவர் அரச குடும்பத்தவர்களின் உடனிருப்பை அனுபவித்தார். ஆனால் எந்தச்சபையிலும் அல்ல. தனிநபர்களாய் மட்டுமே அவர்களைச் சந்திக்க இயன்றது.

கற்பனையானது ஒரு மத்தியகால ஐரோப்பாவின் வண்ணமிகு எச்சங்களாய்த்தான் அவர் அந்தக் கோமகள்களைக் கண்டார்.

தர்ன் அண்ட் டேக்ஸிஸ் குடும்பத்திற்குச் சொந்தமான டியூனோ கோட்டை பல காரணங்களுக்காக இலக்கிய வரலாற்றில் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படுகிறது.

முதல் உலகப் போர் சமயத்தில் அது அழிவுற்று மீண்டும் கட்டப்பட்டது. அவருக்குத் தெரிந்த அந்த அரச கும்பத்தினர் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தவர்கள்.

அவர் காலத்தில் தாக்கம் மிகுந்த எந்த ஒரு அரசியல்வாதியும் ரில்கேவை சந்திக்க விரும்பி இருக்கமாட்டான்.

லெனினையும் ரில்கேவையும் நாம் ஒரு சந்திப்பில் இருப்பதாகக் கற்பனை செய்ய முடியுமா?

ஆனால் ஃபிரெஞ்சுக் கவிஞர் பால்வெலேரி ரில்கேவின் நண்பராய் இருந்தார். வெலேரியின் கவிதைகளை ரில்கே ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.

நகரச் சந்தடிகளால் எழுத முடியாதிருந்த ரில்கேவுக்கு அட்ரியாட்டிக் கடற்கரையிலிருந்த டியூனோகோட்டையில் ஒரு வருடம் தனிமையில் வாழ அனுமதி வழங்கினார் மேரி வான் தர்ன் டேக்ஸிஸ்.

குறியீட்டு அளவிலான ரில்கேவின் இருப்புநிலை அந்தக் காலகட்டத்தின் புற சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுடன் தொடர்பில்லாதது.

கதேவைப்போலன்றி ரில்கே அவரது காலத்தின் சக்திமிக்க ஆள் இல்லை. சொல்லப் போனால் அவர் வரலாற்றுப்பக்கங்களின் மார்ஜினில் இருந்த ஒரு கேள்விக்குறியாக இருந்தார்.

எதிர்+நவீனத்துவவாதிகளின் மத்தியில் நவீனத்துவ இயக்கத்தில் தனித்து நின்றார்.

ஆனால் அவரது கருத்துருவங்களை ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கையாக ஆக்கவில்லை.

அவர் ஒரு கவிஞர், ஒரு தத்துவம் சார்ந்த பத்திரிகையாளர் இல்லை.

இசைக் கலைஞர் ஷோப்பாங்கைப் பற்றி ஜெர்மன் கவிஞர் காட்ஃபிரைட் பென் இன் தன் கவிதையில் சித்தரித்தது போலத் தோன்றினார்.

அவருக்குள் நிலவிய உள்வய ஒழுங்குகள், வாழ்க்கையைப் பற்றிய ஒழுங்கு குறித்த சிந்தனை மற்றும் அவர் செய்த சில தியாகங்கள் நமக்கு உவப்பாய் இருக்கின்றன.

அவரது கவிதைகளின் ஊடாய் அவற்றின் முகத்திரைகளை ஊடுருவி நாம் கலைஞன்+ கவிஞனைப் பார்க்க முடியும்.

அதிகாரபூர்வமான வெளிப்பாட்டுக்கு எதிராக அவர் இந்த நவீன யுகத்தின் மெல்லிய கிசுகிசுப்பாகவும் ஒரு ரகசியக் குரலாகவும் இருந்தார்.

அவரது பயணங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஃபிரெஞ்சு சிற்பியாகக் கருதப்படும் ஹோதானிடமிருந்து அவர்கற்றுக்கொள்வதற்கு விருப்பத்துடன் இருந்தது, மேலும் ஓவியர் செஸானிடமிருந்து கற்றது மற்றும் ஒரு இளம் கவிஞருக்கு கவிதை என்பது என்ன என்பதைச் சொல்லிக் கொடுக்கப் பொறுமையுடன் இருந்தது போன்றவை நம் மனதிலிருந்து நீங்கி விடாதவை.

ஒரு தசாப்த காலத் தடையீடுகளற்ற படைப்பாக்கத்திற்குப் பின் அவர் Notebooks of Malte Laurids Brigge என்ற கவிதை நாவலின் பக்கமாய் ஈர்க்கப்பட்டார்.

இந்த நாவல் எழுதிய காலத்தில் அவருள் சுய சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்து கிடந்தன.

இந்த நாவல் 1910ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த வெளியீட்டுக்குப் பிறகு திசையற்றும் வாழ்க்கையை வாழ்வதில் களைத்துப் போனவராயும்இருந்தார்.

புதிதாய்த் தொடங்கவிருக்கும் ஒரு கவிஞன் ஆரம்பிக்க இயலாமல் இருந்தது போலிருந்தது அவரது நிலைமை.

எனவே 1910லிருந்து 1922ஆம் ஆண்டு வரையிலான காலம் ரில்கேவின் பிரச்சனைக் காலமாக இருந்தது. இடையில் அவர் கவிதைகள் எழுதாமல் இருக்கவில்லை.

ஆனால் அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் அவற்றை எப்போதாவது எழுதும் கவிதைகள்  (occasional poems) என்று குறிப்பிட்டார்.

தனியனாய் ஸ்பெயின் தேசத்தின் டோலேடோவிலும் ரோம் நகரிலும் மற்றும் கெய்ரோவிலும் அவர் பயணித்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

இந்தப் பயண அனுபவங்களிலிருந்து அவர் சேகரித்துவந்த சிறு சிறு கூழாங்கற்களை ஒரு அற்புத மொசைக்காக அவரது டியூனோ இரங்கற் பாடல்களில் மாற்றினார்.

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நீள்காவியமாக டியூனோ இரங்கற்பாடல்கள் கருதப்படுகின்றன (உங்களுக்கு ட்டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம், ஆக்தாவியோ பாஸின் சூரியக்கல், டெரக் வால்காட்டின் ஓமரோஸ் போன்றவை நினைவில் ஆடினால் நல்லது).

10 இரங்கற்பாடல்களின் தொடராக அமைகின்றது டியூனோ இரங்கற் பாடல்கள்.

மேரி வான்தர்ன் அண்ட் டேக்ஸிஸ் என்ற கோமகளின் விருந்தினராக இருந்தபோது தொடங்கப்பட்டதால் அந்தக்கோட்டையின் பெயர் அதற்குத் தலைப்பாக இடப்பட்டது.

கோட்டை வடக்கு இத்தாலியின் துறைமுக நகரான டிரியஸ்ட்டுக்கு அருகில் அட்ரியாட்டிக் கடலில் அமைந்திருக்கிறது.

முதல் உலகப் போரின் பின்விளைவுகளால் பெரும் மனோவியல் பாதிப்புக்கு ஆளானார் ரில்கே.

டியூனோ கோட்டையில் இந்தப் பாடலில் ஒரு பகுதி தொடங்கப்பட்டு, நிறுத்தப்பட்டு பிறகு 1922ஆம் ஆண்டுதான் ஸ்விட்சர்லாந்தின் வலேஸ் என்ற பகுதியில் முற்றுப் பெற்றது. மொத்தவரிகளின் எண்ணிக்கை 859.

டியூனோ கோட்டையில் ரில்கேவை இருக்க அனுமதித்த இளவரசி தர்ன் அண்ட் டேக்ஸிஸ் என்பவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. முதல் பகுதியை அவர் டியூனோவில் தொடங்கிவிட்ட போதிலும் தொடர்ந்து எழுத இயலவில்லை.

ஏறத்தாழ முதல் உலகப் போர் முடியக்காத்திருந்தது போலிருந்தது அவரது படைப்பியக்கம். 1923இல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

டியூனோஇரங்கற்பாடல்கள் ஓர் உக்கிரமான மதநிலைகொண்ட (கிறித்தவ மதத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை) மறைநிலைத் தியான கவிதைகள்.

இவை அழகியலையும் இருத்தலியல் துயரங்களையும் எடைபோட்டுப் பார்க்கின்றன.

இக்கவிதைகளில் தேவதூதர்கள் மற்றும் மீட்புநிலை போன்ற குறியீடுகள் நிறைந்திருப்பினும் இவற்றைக் கிறித்தவ அர்த்தத்திலோ முறைமையிலோ வியாக்கியானப்படுத்தி அர்த்தம் தரமுடியாது.

டியூனோ இரங்கற் பாடல்களின் தாக்கத்தை நாம் பல வகைப்பட்ட வாசகர்களிடம் பார்க்கமுடியும்.

பாப் இசையிலிருந்து தொலைக்காட்சி வரை ஏதோ வகையில் ரில்கே தொடர்புபடுத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்.

இருக்கிறார்.

புதிய சகாப்த தத்துவவாதிகள், இறையியல்வாதிகள், சுயஉதவிப் புத்தகங்கள் எழுதுபவர்கள், போன்றோர் நேரடியாக இலக்கியம் சாராத வகையினர்.

நவீன ஜெர்மன் நாவலாசிரியர் ஹெர்மேன் ஹெஸ்ஸே அவரது புத்கத்தில் இருத்தலியல் பிரச்சனைகளின் எல்லைப்பாடுகளைத் தாண்டி அவற்றைத் தீர்க்கும் வழிவகையை அளிப்பவராக டியூனோ இரங்கற்பாடல்களில் தெரிகிறார் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்தப் பிரபஞ்சத்தின் இசை ரில்கேவின் கவிதைகளில் எதிரொலிக்கிறது என்றார்.

ஆனால் 1920களில் ஜெர்மானிய இளைஞர் சமுதாயத்தினருக்கு டியூனோ கவிதைகள் உவப்பாக இருக்கவில்லை.

ஃபிரான்ஃபர்ட் இலக்கிய விமர்சன இயக்கத்தின் மதிப்பு வாய்ந்த சமூகவியலாளர் மற்றும் மனோவியல் அறிஞருமான தியோடர் அடார்னோ (Theodor W. Adorno  1903-1969) இக்கவிதைகள் தீவினைமிக்கவை என்று விமர்சித்தார்.

இவற்றில் 5-ஆம் இரங்கற்பாடல் பிக்காஸோவின் ரோஜா (Rose Period) காலகட்டத்தில் தீட்டப்பட்ட ஓவியமான ‘கழைக் கூத்தாடிகளின் குடும்பம்’ என்ற ஓவியத்தினால் நேரடி பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை வாசகர்கள் அறிய வாய்ப்பிருக்கிறது.

ஓவியத்திற்கும் கவிதைக்குமான வேறுபாடு அவர்கள் நிற்கும் தளத்தில் இருக்கிறது. ரில்கேவின் இலக்கிய மதிப்பு ஆங்கில இலக்கிய உலகைப் பொருத்தவரை பிரபலமாக டியூனோ இரங்கற் பாடல்களின் மேல் அமைந்திருக்கிறது.

இக்கவிதைகள் வெளியிடப்பட்ட பிறகு சுமார் 18 முறை வேறு வேறு மொழி பெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.

அமெரிக்க வெளியீட்டாளர்கள் ஸ்டீபென் ஸ்பென்டர் மற்றும் ஜே.பி.லேய்ஷ்மன் ஆகியோரின் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவில் பல இளம் கவிஞர்கள் டியூனோ இரங்கற்பாடல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர்.

பதற்றத்தினாலும் மனத்தொய்வினாலும் பல ஆண்டுகள் கவிதை இல்லாமல் கூட ரில்கே இருந்தார்.

இந்த இடைப்பட்ட காலங்களில் இங்கும் அங்குமான நிலையற்ற அலைக்கழிப்புகளே மிஞ்சின.

இந்தக் காலகட்டத்தில் பாலடைன் கிளாஸ் கோவ்ஸ்கா (1886-1969) என்ற பெண் ஓவியருடன் சற்றே காதல்வயப்பட்டிருந்தார்.

அப்போது நண்பரும் வணிகரும் புரவலருமான வெய்னர் ரைன்ஹார்ட்டின் அழைப்பின்பேரில் ரைன்ஹார்ட்டின் ஷேட்டு முஸோ (Chateau Muzot) என்ற பெரிய வீட்டிற்குக் குடி பெயர்ந்தார்.

இந்தத் தற்காலிக உறைவிடம் (ரில்கே கடைசிவரை அந்த வீட்டில் இருக்கலாம்) பெரிதும் வசதிக் குறை வானதுதான்: மின்சாரமோ அல்லது எரிவாயுவோ இல்லாதது.

டியுனோ கோட்டை எவ்வித காரணங்களுக்காக இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறதோ அதைவிட முக்கியமான காரணங்களுக்காக முஸோ குறிப்பிடப்படுகிறது.

ரில்கேவுடன் முஸோவில் கிளாஸ்கோவ்ஸ்கா இணைந்துகொண்டார். இங்குதான்  ரில்கே பால்வெலேரியின் ஃபிரெஞ்சுக் கவிதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.

மைக்கேல் ஆஞ்சலோவின் கவிதைகளையும் கூட. கட்டற்ற வகையில் கவிதைப் பிரவாகம் எடுத்ததும் முஸோவில் தான்.

ரில்கேவின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படும்போது (Power of Prayers) அவருக்கு 23 வயதுதான் ஆகியிருந்தது. லூ ஆந்ரியாஸ் சலோமி என்ற திருமணமான, அவரை விட வயதில் மூத்த பெண்ணுடன் அவர் ரஷ்யாவில் பயணம் செய்து திரும்பியிருந்த காலமது.

சிறிய இடைவெளியில் சலோமியுடன் இணைந்து இரண்டாம் முறையும் ரஷ்யப்பயணத்தை ரில்கே மேற்கொண்டார்.

அதுவரை அவரது வாழ்க்கை இறுகியது போன்றும் கட்டுப்படுத்தப்பட்டது போன்றும் இருப்பதாய் உணர்ந்தவர் மற்றும் அவரது பூர்வீக குறுகிய தெருக்கள் கொண்ட பிராக் நகரிலிருந்து சென்றவர், சலோமியின் சக்தி வாய்ந்த ஆளுமையாலும் ரஷ்யாவின் திறந்த சமவெளிகளாலும் பிரமித்துப் போனார்.

ரஷ்யாவின் புறவெளியை அவரது அகவெளியாக மாற்றிக் கொண்டார். அது ஐரோப்பாவின் கிழக்கில் இருந்தது:

சில சமயம் ஒரு மனிதன் 
அவனது இரவு உணவு
மேஜையிலிருந்து எழுந்து
வெளியில் செல்கிறான்
மேலும்  அவன்  போய்க்கொண்டே இருக்கிறான் 
காரணம் எங்கோ கிழக்கில் ஒரு தேவாலயம் 
உள்ளதென்பதற்காக
அவனது பிள்ளைகள் 
அவன் இறந்துவிட்டது போல ஸ்தோத்திரம் 
சொல்கின்றனர்
வேறொரு மனிதன் தன் வீட்டிலேயே 
தங்கிவிடுகிறான் அவனது இறப்புவரை 
அவனது தட்டுக்கள் மற்றும் கண்ணாடித் 
தம்ளர்களுடன்
எனவே அவனது பிள்ளைகள் 
வெளியே செல்கின்றனர் இந்த உலகினுள் 
அவன் மறந்த தேவாலயத்தைத் தேடியபடி.

ரில்கேவின் உள்மன யாத்திரை தொடங்கியது இந்தத் தொகுதியிலிருந்துதான் என்று சொல்லலாம்.

அவர் இக்கவிதையில் குறிப்பிடுவது எந்த வகையிலும் சம்பிரதாயமான கிறித்தவத் தேவாலயம் அல்லவென்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு மனிதன் உள்வய வெளியை நோக்கி நடக்கும்போது அவன் தனது பிள்ளைகளுக்கும் விடுதலை அளிக்கிறான்:

ஒரு மனிதன் உம்மைப் பெற்றடைய 
மிக விரும்பிய காரணத்தால்
நாங்கள் அனைவரும் உம்மைப் பெற முடியும்
என்பதை அறிகிறேன்.

இந்த விருப்பமும் பெற்றிருத்தலும் இப்பொழுது முழுமையான சாத்தியம் என்று ரில்கே உணர்ந்துதான் எழுதினார்.

இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் கூட. வளர்ச்சி என்பது புவிசார் வெளியை நோக்கியது.

ஒரு விருட்சம் அதன் ஆண்டு வளையங்களில் வளர்வது போல.

ஒரு நத்தை அதன் புரிகளில் வளர்வது போன்றும் இந்தச் சூரிய மண்டலம் அதன் சுற்றுப் பாதைகளிலும் வளர்வது போன்றும்.

கிளாரா வெஸ்டாஃப் என்ற பெண் சிற்பியை மணந்தார் ரில்கே. திருமணம் ஒரு பெண் குழந்தை (பெயர் ருத்) பிறந்த கொஞ்ச நாட்களில் முடிவுக்கு வந்தது.

கிளாரா வெஸ்ட்டாஃப் ஃபிரெஞ்சு சிற்பி ஹோதான் என்பவரின் மாணவி.

கிளாராதான் ஹோ தானை அணுகச் சொல்லி ரில்கேவுக்கு அறிவுறுத்துகிறார்.

ரில்கே முதல்முறையாகச் செப்டம்பர் 1902ஆம் ஆண்டுப் பாரிஸ் நகருக்கு வந்து சேர்ந்தார். இந்த நகர்வினால்தான் ரில்கே ஒரு ஐரோப்பியர் ஆகிறார்.

மேலும் ஒரு நகரக் கவிஞராகவும். வறுமையின் எல்லையில் வாழும் ஒரு கவிஞராகவும்.

பாரிஸ் நகரில் அவர் மனம் ஒரு வேட்டையாடப்பட்ட விலங்காக இருந்தது. சந்தடி நிறைந்த தெருக்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி எளிய உணவ கங்களில் உணவு உண்டார்.

ஒரு ஜெர்மன் வெளியீட்டாளருக்காக ஃபிரெஞ்சு சிற்பியான அகஸ்த் ஹோதான் (August Rodin 1840-1917) பற்றி ஒரு அறிமுக நூல் எழுதும் நோக்கத்தில் பாரிஸ் நகரத்தை அவர் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

அவருக்கு அப்பொழுது வயது 27. ஏற்கனவே சாதனைகள் ஓரளவுக்குச் செய்திருக்கும் கவிஞராய் அறியப்பட்டிருந்தார்.

ஒன்பது கவிதைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாவல்.

பிரார்த்தனை வேளையின் புத்தகத்தின் (Books of Prayers) இரண்டு பகுதிகள் முழுமையாக்கப்பட்டிருந்தன. தவிரச் சித்திரங்களின் புத்தகம் (Book of Pictures) என்ற நூல் வெளியிடும் தயாரிப்பில் இருந்தது.

இதுவரை அவர் எழுதிய அனைத்துக் கவிதைகளும் தன்வயமானவை மற்றும் உள்மன யாத்திரை சார்ந்தவை. பிற்கால 19ஆம்ஆண்டு அழகியலின்படி அவை உணர்ச்சிகளை மையமாய்க் கொண்டவை.

ஒருவேளை ரில்கே ஹோதானைச் சந்திக்காதுபோயிருந்தால் அவரது கவிதை வெளிப்பாட்டு பாணியானது ரில்கேவின் வாழ்விறுதிவரை அப்படியே மாறுதலின்றித் தொடர்ந்திருக்கும்.

ஆனால் பாரிஸ்நகரை நோக்கிய பயணம் சகலத்தையும் மாற்ற இருந்தது. ஹோதானைச் சந்தித்த சிறிதுகாலத்திலேயே சிற்பியின் மீதிருந்த அவரின் ஈடுபாடு ஒரு மாணாக்கனுடையதாய் மாறிற்று.

சிற்பியின் மீதான அக்கறைகள் அதிகமாக ஆக ஆகரில்கேவின் சுய அதிருப்தி அதிகமாகிக்கொண்டு இருந்தது. சிற்பி ஹோதான் ஒரு கடுமையான உழைப் பாளர், தொழில்நுட்பன்.

அவர் தன் படைப்புகளுக்கு அர்ப்பணித்த அளவற்ற சக்தியைக் கண்டு மலைத்துப்போனார் ரில்கே. “நீ உழைக்கவேண்டும் எப்போதும் உழைக்கவேண்டும்” என்று அவரது சிற்பங்களைச் சுட்டிக் காட்டியபடி ரில்கேவிடம் கூறினார்.

உழைப்பு என்று அவர் சொன்னது படைப்பைத்தான். கவிதை வரவில்லை என்றாலும் கவிதைக்காக (குறிப்புகள் எடுத்தல் இதுபோல) புதிய உழைக்கும் பழக்கங்களை ஹோதானிடம் கற்றுக்கொண்டார்.

1905ஆம் ஆண்டு ஹோதான் ரில்கேவை தனக்கான செயலராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே ஹோதானின் இருப்பிடத்தில் ரில்கேவுக்குத் தங்க அனுமதியும் கிடைத்தது.

இருவருக்கும் இடையில் ஒரு வகையான நட்பு மலர்ந்தது. பேச்சு மற்றும் கனவு போன்றவற்றை விட்டுவிட்டு ஹோதான் உச்சரித்த மந்திரம் “உழைப்பு, உழைப்பு, உழைப்பு.

”சமீப காலமாய்த் தனக்குக் கவிதை உந்தம் வரவில்லை என்று இளம் ரில்கே சொல்ல, பூங்காவில் உள்ள விலங்குக்காட்சிச் சாலைக்குச் சென்று வரச்சொன்னார் ஹோதான்.

அங்கு என்ன செய்வது?

ஒரு விலங்கை முழுமையாகப் பார்த்து முடிக்கும்வரை பார் என்றார் ஹோதான்.

ஹோதானின் எடுத்துக்காட்டு மற்றும் சொற்களின் ஊடாக ரில்கே தான் ‘காண்பது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதும் ஹோதான் சொல்வதும் வேறு வேறு என்பதைப் புரிந்துகொண்டார்.

ரில்கே ஒரு சிறுத்தையைத் தேர்ந்தெடுத்தார். இதன் விளைவாக உருவானதுதான் ரில்கேவின் பிரசித்தமான ‘சிறுத்தை’ என்ற தலைப்பிலான கவிதை.

அது சிறுத்தை ஒரு கூண்டுக்குள் எப்படி நடக்கிறது என்பதையும் அதே சமயத்தில் கவிதை எப்படி உருவாகிறது என்பதையும் சொல்கிறது.

ஒரு சிறு மனஸ்தாபத்தினால் ரில்கேவால் தொடர்ந்து ஹோதானோடு இருக்க இயலாததால் ஒரு வருடத்தில் பிரிந்தார்.

ஆனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் குறையவில்லை. சிறுத்தை கவிதையைத் தொடர்ந்து ரில்கே இது போன்ற ‘காணும் கவிதைகளை’ நிறைய எழுதினார். ‘அன்னம்‘, ‘ஃபிளேமிங்கோ பறவைகள்’ இது போல.

ஒரு இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் (Letters to a Young Poet )மிகவும் பிரபலமான புத்தகமாய் இருந்தது.

அது ராணுவ உணவு உறைவிடப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஃபிரான்ஸ் ஸாவர் காப்பஸ் (Franz Xaver Kappus) என்ற மாணவருக்கு ரில்கே எழுதியவை.

இதே பள்ளியில் ரில்கே 5 ஆண்டுக் காலம் படித்தார். ஆனால் ரில்கே ராணுவப் பள்ளியில் படிப்பைத் தொடரவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை. காப்பஸ் எழுதிய கவிதைகளின் மீது விமர்சனம் செய்ய விரும்பாமல் பதில் கடிதங்களை எழுதினார்.

இந்த 10 கடிதங்களில் ஓர் உணர்ச்சி ததும்பும் தொனியில் கலைஞனாய் இருப்பது என்பது என்னவென்றும் எப்படிக் காதலிக்க வேண்டும் என்றும் மேலும் எப்படி வாழவேண்டும் என்றும் அறிவுரை கொடுக்கிறார்.

இந்தக் கடிதங்களைக் காப்பஸ் பெற்றுக்கொண்ட காலம் 1902லிருந்து 1908 வரையிலானது. ஒரு சிறிய முன்னுரையுடன் முதன்முதலில் காப்பஸ் இன்ஸல் வெர்லேக் என்ற பதிப்பாளர் மூலம் ரில்கேவின் இறப்புக்குப் பிறகு 1929ஆம்  ஆண்டு லீப்ஸிக்  நகரில்  வெளியிட்டார்.

தவிர ரில்கேவின் இறப்புக்குப் பிறகு அவரது குடும்பத்தார் 6 தொகுதிகளாக அவர் கலை பற்றியும் கலைஞனின் வாழ்தொழிலைப் பற்றியும் எழுதிய கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டனர். இந்தக் கடிதங்களின் காலகட்டம் 1930-1937.

இவற்றில் பல அவர் தன் மனைவி கிளாரா வெஸ்ட்டாஃபுக்கு எழுதியவை.

இவை பாரிஸ் நகரில் ரில்கே கண்ட ஓவியங்களைப் பற்றிய அனுபவங்களைச் சித்தரிப்பவை.

ரில்கேவின் கடிதங்களை நான்கு பிரதான வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது தொழில் முறை சார்ந்தது: இவற்றில் அவர் பதிப்பாளர்களுக்கும் சககலைஞர்களுக்கும் (சிற்பி ஹோதான் உட்பட) எழுதியவை முதல் வகை.

அவர் தன் மனைவிக்கும் குடும்பத்திற்கும் எழுதியவை இரண்டாம் வகையில் அடங்கும்.

புரவலர்களுக்கும் (மேரி தர்ன் அண்ட் டேக்ஸிஸ், நாநி உண்டர்லி+வொக்கார்ட்) மற்றும் காதலிகளுக்கும் (லூ ஆன்டிரியஸ் சலோமி மற்றும் பாலடைன் க்ளாஸோவ்ஸ்கா) எழுதியவை.

பிரசித்தமான எழுத்தாளருக்கு (ரில்கே) முன்பின் தெரியாதவர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்கள் கடைசி வகைப்பட்டவை.

இந்தக் கடிதங்களின் வாயிலாக அவர் நெருக்கமானவர்கள் பலருக்கு அவரது உள்வய சுயத்தைத் திறந்து காட்டுவதன் மூலம் நேரடி சந்திப்பில் அவர்களை ஈடுபடாமல் வைப்பதும் நோக்கமாய் இருந்திருக்கக் கூடும்.

கிளாரா வெஸ்ட்டாஃப் மற்றும் ரில்கேவின் திருமணப் பிரிவில் இருவருக்குமான சுயநலம் கலந்திருந்தது என்பதை மறுக்க இயலாது தத்தமது கலைவாழ்க்கையைத் தொடர்வதற்குக் குடும்பம் இடைஞ்சலானது என்பதை அவர்கள் கண்டுபிடித்துக்கொண்டிருக்கலாம்.

மேலும் பெண்கள் ரில்கேவின் வாழ்வில் நிறைய முறை குறுக்கிட்டிருந்தாலும் எவருடனும் அவர் தொடர்ச்சியான உறவு கொண்டிருக்கவில்லை.

ரில்கே ஒரு முன்மாதிரியான கணவனுமில்லை முன் மாதியான தந்தையும் இல்லை. அவர் பெண்களைப் புரிந்துகொள்வதில் நிறைய முரண்பாடுகளும் சிக்கல்களும் இருந்தன.

கிளாராவே கூட அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமாய்ச் சேர்ந்து வாழ்வது என்பதை விட இருவரும் சேர்ந்து கலைக்காகத்  தங்களை அர்ப்பணித்துக்கொள்வது முக்கியமானது என்று எண்ணினார்.

எனவேதான் இறுதிவரை அவர்கள் இருவருக்குமிடையிலான கடித உறவு தடையற்றிருந்தது. குழந்தை ருத் சிறிதுகாலம் கிளாராவின் ஸ்டூடியோவில் விளையாடினாள்.

கொஞ்ச காலம் பாட்டி வீட்டில் காலம் கழித்தாள். ருத் திருமணம் செய்துகொள்ளும் செய்தி அறிவிக்கப்பட்டும் ரில்கே தன் மகள் திருமணத்திற்குச் செல்ல மறுத்துவிட்டார்.

தனது மனஒருங்கிணைப்பை அவர் இழந்துவிடுவார் என்று பயந்ததாகக் கூறினார்.

ரில்கே தான் சந்தித்த பல பெண்களுக்கு நித்திய காதலை உறுதியளித்தார். பிரமிப்பூட்டும் காதல் கடிதங்களை எழுதினார். தனது கவிதைகளிலேயே பெண்களுக்கான அழைப்புக் குறிப்பு இருப்பதாய்க் கூறினார்.

இந்த அழைப்பின் குரலை அடையாளம் கண்டவர் மாக்தா வான் ஹாட்டிங்பர்க் (Magda von Hattingberg  1883-1959) என்ற ஆஸ்த்ரியாவைச் சேர்ந்தபெண் பியானோ இசைக்கலைஞர்.

அவரை ரில்கே செல்லமாக ‘பென்வனூட்டா’ என்று கூட அழைக்கத்தொடங்கியிருந்தார். பல மாதக் கடிதப் போக்குவரத்துகளுக்குப் பிறகு இருவரும் சந்திப்பது என முடிவெடுத்தனர்.

ஆனால் கடிதங்களில் இருந்த உணர்ச்சிப் பெருக்கு நிஜசந்திப்பில் இருக்கவில்லை.

பென்வனூட்டாவின் அறிவுக்கூர்மையும் உணர்ச்சிகளும் அலாதியானவையாக இருந்தன.

ஆனால் இந்த உறவு தொடர முடியாததற்கு ரில்கேதான் காரணம்.

அவர் எந்த ஒருமனித உயிரையும் மனம் விட்டுக் காதலிக்க இயலாதவராக இருந்தார். அவரது இந்த அணுகல் ஒரு மனோவியல் பிரச்சினையாக, ‘ஃபோபியா’வாக மாறிவிட்டிருந்ததாய் எண்ணினார்.

அவர் பெண்களின் உள்வய ஆளுமைகளைக் கண்டு பயந்துபோயிருந்தார். எனவே கவர்ந்திழுக்கப்பட்டிருந்தாலும் அருகில் சென்றவுடன் பின்வாங்கிவிடுவது அவருக்கு வழக்கமாக இருந்தது.

1922ஆம் ஆண்டு ஆர்ஃபியஸ¨க்கான 14 வரிக் கவிதைகள் (Sonnets to Orpheus) மற்றும் டியூனோ இரங்கற்பாடல்கள் எழுதி முடிக்கப்பட்டன.

பயணம் செய்யாதபோது பிரெஞ்சு பேசப்படும் ஸ்விட்ஸர்லாந்தின் வாலைஸ் பள்ளத்தாக்கில் இருந்த சிறிய கோபுரத்தில் (Chateau de Muzot) தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்தார்.

இடையில் நண்பர்கள் வருகை நிகழ்ந்துகொண்டிருந்தது. 1923ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் அவர் உடல்நிலையில் ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆரோக்கிய நிலையத்தில் டிசம்பர் மாதத்தைக் கழித்தார்.

அவருக்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் ஒரு விநோத வகையைச் சார்ந்தது. அவரது நோயின் பெயரைத் தெரிந்து கொள்ளக் கூட இறப்பு வரை ரில்கே விரும்பாதவராய் இருந்தார்.

1926இல்தான் அது அந்த நோய் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டின் டிசம்பரில் அவர் கடும்வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடன் கூட இருந்தது நாநி உண்டர்லி வொக்கார்ட் மட்டுமே.

1926ஆம் ஆண்டு டிசம்பர் 19 காலை ரில்கே காலமானார்.

“கதேவைத் தவிர அமெரிக்காவுக்கு மிகப் பிரபலமான ஜெர்மன் இலக்கிய இறக்குமதி”யாக இன்று இருப்பவர் ரில்கே.

இந்தச் செய்தி சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடியதாய் இருக்கலாம்.

ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் அவர் படைப்புகளுக்கான வர வேற்பு இரண்டாம் உலகப் போர், ஃபாஸிஸம் போன்ற அம்சங்களால் பாதிப்புக்கு உள்ளாயிற்று.

1945ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது முக்கியத்துவம் குறைந்தது என்பதும் உண்மை.

போருக்குப் பிந்தியவிமர்சகர்களுக்கு அவரது பாதி மறைநிலை கலந்த உள்வயப் பார்வை ஏற்க முடியாததாய் இருந்தது. ஆனால் இந்த நிராகரணம் நீண்ட நாட்கள் தொடர வில்லை.

1975இல் அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது ரில்கேவின் தாக்கமானது கண்மறைவான நிலையில் குறையாமல் தொடர்ந்து நீடித்து வந்திருப்பதை அறிய முடிந்தது.

ஆனால் ஆங்கிலம் பேசும் கலாச்சாரங்களில் அவரது பிரசித்தமோ என்றுமே குறையாமல் இருந்து வந்திருக்கிறது.

இந்த அபரிமிதமான வரவேற்புக்குக் காரணம் என்ற ஒன்று இருக்குமானால் அது பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் கவிதைகளில் நிலவிய பெரும்பான்மையான ஒரு இடைவெளி அல்லது வெறுமை.

மேலும் வீடற்றவருடையதும் மற்றும் திரிந்தலையும் ஒரு இலக்கியவாதியினுடையதுமான படிமம் அமெரிக்கர்களுக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது.

ரில்கே உறுதியான அளவில் எந்தத் தேசீயகலாச்சாரத்திற்கும் சொந்தமானவராக இல்லாதிருந்ததும் மற்றொரு காரணம்.

ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற விரிவான பயணங்களில் ரில்கே இங்கிலாந்தின் பக்கமோ அல்லது அமெரிக்காவின் பக்கமோ செல்லவில்லை.

அவர் கற்க எடுத்துக்கொண்ட சிறுமுயற்சிகளுக்கு அப்பாற்பட்டு அவருக்கு ஆங்கில மொழியும் கூட இறுதிவரை அந்நியமாகத்தான் இருந்தது.

இந்த உண்மையுடன் அவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய 400க்கும் மேற்பட்ட கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவருக்குப் பிடித்த கீட்ஸையும் எலிஸபெத் பேரட்பிரவுனிங் என்ற பெண் கவிஞரையும் (ராபர்ட் பிரவுனிங் என்ற ஆங்கிலக் கவிஞரின் மனைவி) ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்க விரும்பினார். 

ஆங்கிலம் மற்றும் பிரித்தானியா ஆகியவை பற்றிய தனது வெறுப்பும் உதாசீனமும் பற்றி மனம் திறந்து சில கடிதங்களில் எழுதியிருக்கிறார்.

சகல அருவெறுக்கத்தக்க விஷயங்களின் மொத்த உருவமாய் அமெரிக்கா அவருக்குத் தோன்றியது. ஆஸ்த்ரியக் கவிஞரான நிக்கோலஸ் லெனாவ் என்பவருக்கு ரில்கே எழுதிய கடித வரிகள்:

“America has no wine, no nightingale [ . . . ] brother, these Americans have the souls of shopkeepers, they are dead to all life of the mind, as dead as mutton.The nightingale is in the right not to visit these fellows. It seems to me seriously and profoundly significant that America has no nightingale. It seems to me like a poetic curse.’’

அமெரிக்கப் பொருள்கள் எதுவுமே நிஜமானவை அல்ல

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer