மர்ம நபர்
தேவதச்சன் கவிதைகள்

ஜீவன் பென்னி

பகிரு

நிகழ்காலத்தின் தனித்த நொடியொன்றில் துவங்கிடும் நெருக்கமும் விலகலுமான மொழி:

காலத்திலிருந்து நேரெதிராகப் பயணம் செய்வதன் அனுபவத்தையே ஒரு கவிதை வழங்க முயற்சிக்கிறது.

கவிதைக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கணத்தைப் பூரணமாக அனுபவிப்பதென்பது அதன் தனிமையான மொழியை நெருக்கமாக உணர்ந்து கொள்வதிலிருந்தே துவங்குகிறது. கவிதையைப் புரிந்துகொள்வதன் வழியே நிரம்பத் துவங்கும் அனுபவ உணர்வுகளின் சேகரமானது அதுவரையில் கைவசமிருந்த ஞாபகங்களின் அடுக்குகளை இரட்டிப்பாக்குகிறது அல்லது வெறுமையாக்கி விடுகிறது. சொற்களுக்கான ஸ்தூல வடிவத்தின் பொருண்மையை மிக நேர்த்தியாக உடைத்துக் காண்பித்திடும் சாராம்சத்தையே ஒரு நல்ல கவிதை தனக்கான இயங்கியலாகக் கொண்டிருக்கும். தினசரி அணுகு முறை சார்ந்த யதார்த்தம் என்பது ஒரு கவிதையில்நிலை குலைந்து போகிறது, ஏனெனில் ஒரு கவிதைதனக்குள் பத்திரப்படுத்தும் எல்லாமும் அதைத் தாண்டிய வாழ்வெளிக்கான எல்லையற்ற புலன்களுக்கான  நீட்சியைத்தான்.

சுமார் இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரிய மிக்கதான தமிழ் இலக்கிய மரபில்கவிதை சார்ந்த இடம் மிகவும் தனித்துவமானது. தமிழ் மரபில் செய்யுள்களும், யாப்பு வரி பாடல்களுமே கவிதைக்கான முன்னோடி வடிவங்கள். கலையின் உயிர்ப்பான வாழ்வியலுக்கான திறப்புகளை உணர்வு ரீதியில் நிறைவாக உணர்ந்துகொள்ளக்கூடிய அழகியலை கவிதைப்பாடல்களே மிகவும்துல்லியமாகவும், நெருக்கமானதாகவும் கொண்டிருந் தன. வாழ்வு வெளியில் படர்ந்திருக்கும் அன்றாட நெருக்கடிகளுக்கான வடிகால்களாக ஆரம்பத்திலிருந்து கவிதைப் பாடல்களும், நாடோடிப்பாடல் களும், கூத்துகளுமே பிரதானமாக அமைந்திருந் தன. இவையே தமிழ்ச்சூழலின் ஒவ்வொரு கட்டத்திற்குமான இன்றியமையாத மாற்றங்களை மேற்கொண்டு அவற்றின் பரிமாணங்களுடன் இன்று வளர்ந்து நிற்கின்றன. கடவுளையும், அரசரையும், நிலத்தையும், எளிய மனிதர்களையும் ஒரே நேர்கோட்டில் சுவாரசியமாக இணைத்துக் காட்டியதுவே கவிதைப்பாடல்களின் மிகப்பெரிய வெற்றியாக நம் மரபில் நிலைத்து நின்றுகொண்டிருக்கிறது. மெய்மையில் உணரக் கூடிய ஆன்மீக ரீதியிலான செயற்பாடுகளின் மையப் புள்ளியை கடவுள் சார்ந்தபாடல்களான செய்யுள்களே மிகப் பிரமிப்பாகவெளிப்படுத்திக் காண்பித்தன. அதனுள் இயங்கிக் கொண்டிருந்த இசைவடிவத்தின் நுண்ணழகியலும், இலக்கண வடிவமும் அவற்றிற்கு ஒரு காரணமாக யிருந்தன. பக்தி இலக்கிய வகைகள் இந்த நுட்பத் திலிருந்து துவங்கி, எளிய மனிதர்களின் கடவுள் சார்ந்த சாளரங்களைத் திறந்துவிட்டன. மேலும் தங்களுக்குள்ளிருந்தே கடவுளை உணர்ந்து அடைவதற்கும், அர்த்தப்படுத்திக் கொள்வதற்குமான தனித்த பாதைகளையும் உருவாக்கிக் காண்பித்தன. இலக்கண வகைப்பாடுகளைக் கறாராகப் பின்பற்றி எழுதப்பட்டு வந்த சங்ககாலக் கவிதைப் பாடல்களைக் கடந்து எளிய சொற்பிரயோகத்தின் வழியே மக்களின்வாழ்வியல் சூழல்கள் சார்ந்த பாடுகளை, மகிழ்ச்சி களைக் கவிதைகளாக இயற்றி வந்த ஒரு பகுதியினரும் நம் மரபில் உள்ளனர். சிறந்த உதாரணம் - இராம லிங்க அடிகளார், சக உயிரின் மீதான அளவற்ற கருணைகளின் வடிவமாகத் தன் படைப்புகளைத் திறந்து காண்பித்தவரவர். ‘வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ போன்ற வரிகள், நம் நிலத்தின் எத்தனை நித்தியத்துவமான கருணையின் பரப்பை நமக்குக் காண்பிக்கின்றன. கவிதையின் திறப்பு என்பது இதைப்போல எளிதானதுதான்.  சிறிய வரிகளில் உலகம் முழுமைக்குமான, பரந்த பொருள் கொண்ட மானுடத்திற்கான விசாலமான தன்மைகள் அதில் இழையோடியிருக்கவேண்டும். ஆனால் அது அத்தனை எளிதானதாக எல்லாப் படைப்புகளிலும் தெளிவாக அமைந்துவிடுவது இல்லை.

தமிழ் இலக்கியச் சூழலில் பத்தொன்பதாம் நூற் றாண்டின் கடைசி நாற்பது ஆண்டுகளில்தான் நவீனகவிதை சார்ந்த தீவிர கருத்தாக்கங்களும், அதன் நேர் மறையான மனநிலையின் பெருக்கமும், புதிய வடிவம் சார்ந்த சொல்லாடல்களும், கோட்பாடுகளினூடான உரையாடல்களும் மிகப்பெரிய அளவில் சிற் றிதழ்களின் வழியே கூட்டியக்கச் செயல்பாடுகளாக நிகழ்ந்திருந்தன. அவையே, தமிழில் நவீன கவிதைகளுக்கான தேவைகளை, இடத்தை, அதன் நுட்பமான செயல் தளங்களை, வெளிப்பாட்டு வடிவங்களின் அலகுகளை இன்னும் கூர்மையடைய வைத்தன. இதன் தொடர்ச்சியான தகவமைப்பின் செயல் பாடுகள்தான் இன்றும் நவீன கவிதைகளுக்கான தனித்த மொழியை நம் நிலத்தில் விரிவான தளத்தில் வைத்திருக்கின்றன. மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில், நவீன படைப்பு சார்ந்த மொழி அடிப்படையிலான கருத்தியல் ரீதியிலான மாற்றங்களும், படைப்புகளின் அளவும் ஒப்பீட் டளவில் மிகக் குறைவானவையே. பெங்காலியில் நம் மொழியைப் போலவே சிற்றிதழ் இயக்கங்களின் தொடர்ச்சிகளால் ஓரளவு நவீன படைப்புகள்சார்ந்த தனி மொழி உண்டு. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகமயமாக்கலின் விளைவானகச்சாப் பொருட்களை, மனித இருண்மைகளின் சேகரங்களை, மெய்யியலின் ஆழ்மனத் தத்துவங் களை, நகரமயமாக்கலின் நிகழ்வுகளை மற்றும் அன்றாட வாழ்வில் இவை ஏற்படுத்திடும் நெருக்கடிகளைப் பரிசோதனை முறையில் எல்லாவிதக்கருப் பொருட்களுடனும், இணைத்து அனுபவங்களின் சாராம்ச நீட்சியுடன் அசலான கவிதைகளாக மாற்றிக் காண்பித்ததும், அதன் வழியே பன்முகப்புரிதலை துவக்கி வைத்ததும் தமிழ் இலக்கியத்தில்நவீன கவிதைகளுக்கான மிக முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தன - வெற்று விவரணைக் குறிப்புகளினாலான சொற்கூட்டங்கள் மற்றும் போலி கவிதைகள்  குறித்தவைகள்  எதுவும்  இதற்குள்  அடங்காது.

இத்தனை நெடிய பாதைகளில் தமிழ்ச் சூழலின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக, எழுபதுகளின் முன்பகுதியிலிருந்து, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு களாக இயங்கி வரும் தேவதச்சனின் கவிதைகள் அதன் சொல்முறை சார்ந்தும், பாடுபொருள்கள் சார்ந்தும், படிமங்களின் நுட்பமான பகிர்தல் முறைசார்ந்தும் மிகவும் தனிப்பட்ட மொழி அழகியலின் நுண்ணுணர்வுகளையும், வெளிப்பாட்டு நேர்த்திகளை யும் கொண்டிருப்பவை. ஒரு கவிதையின் வழியே அவர் உருவாக்கிடும் சிறு நிகழ்வின் சாளரம், மிகஇயல்பாக யதார்த்த உலகின் மேல் ஓட்டை மிகச் சுலபமாக உடைத்து விடுபவை. மேலும் அதுவரை யிலான புரிதலின் எல்லைகளைச் சற்றே திருப்பி, அதன் அந்தரங்கமான நொடியொன்றின் மீது மிகுந்த நெருக்கத்தையும், விலகலையும் அடுத்தடுத்து ஏற்படுத்திவிடுபவை. கவிதைகளின் வழியே மட்டுமே தமிழ்ச் சூழலில் தொடர்புகொண்டிருக்கும் தேவ தச்சன், நவீன கவிதைகளின் நுட்பமான இயங்கியல்குறித்த ஆழமான கருத்துக்கள் நிறைந்த குறிப்பு களையோ, கட்டுரைப் பிரதிகளையோ தன் கவிதைகளின் காலத்திலேயே உருவாக்கிக் காண்பிக்க வில்லை என்பது மிகவும் ஏமாற்றமானது. நண்பர் களுடன் உரையாடியிருக்கலாம், ஒரு பிரதியாக அவர்வெளிப்படுத்தி இருந்தால் என்னைப் போன்ற எளியவாசகர்களுக்கு உதவியாக இருக்கும் – (ஆனந்துடன் இணைந்து வெளியிட்டது) தனது முதல் தொகுப்பின் இறுக்கமான படிமங்களின் உருவக ரீதியிலான வெளிப்பாட்டு உத்திகளைக் கைவிட்டுவிட்டுத் தனது கவிதை மொழியை, பிரக்ஞைப் பூர்வமான, எளிய புதிர்களடங்கிய தினசரி நிகழ்வுகளின் மீதான நுட்பமான கவனிப்பு அம்சங்கள் நிறைந்திருக்கும் வடிவ மாற்றத்துடன், அடுத்தடுத்தகவிதைத் தொகுப்புகளில் அவர் வந்து சேர்ந்திருக்கும் புள்ளி அவரின் கவிதை மொழிக்கான தகவமைப் பில் மிக முக்கியமானது. அவர் உணரத்தரும்கவிதை மொழியின் வீச்சும், சொற்பிரயோகங்களின் வனப்பும், சாதாரணச் செயல்பாடுகளின் வழியேஅவர் உருவாக்கிடும் அசாதாரணத் தருணங்களின்உபரி நீட்சியும், நேரடித்தன்மையின் அனுகூலமும்,சில கவிதைகளில் செறிவான அனுபவப் பகிர்வைநித்தியத்துவமாக வழங்குகின்றன. இருந்தபோதும்தொடர்ச்சியாக அவர் கைக்கொண்டு வரும் ஒரேமாதிரியான கவிதைகளின் அகம் சார்ந்த வடிவயுத்தி களின் சாயல்களினால் அவற்றின் பிரதானத்தன்மை யின் மீது சிறு சலிப்பும், அதன் உள்ளார்ந்த அனுபவப்பகிர்வுகள் சற்றே நீர்த்தும் போவதற்கான அபாயமும் வாய்ப்புகளும் இருக்கின்றன. உ.ம்:‘சிரிப்பு’, ‘புலம்பெயர்தல்’, ‘ரவுடிக் குயில்’, ‘இறந்தநேரம்’, ‘மூன்று பெண்கள்’, ‘வேப்பிலைகள்’, ‘ருசி’, ‘முகம்’, ‘தருணம்’, ‘காதல் உவகை’, ‘மணல் துகள்’, ‘இறப்பு’, ‘நிழல்’, ‘ஆள் பாதி, ஆடை பாதி’, ‘பை’, ‘மௌனமாக’, ‘எதிர்பிளாட்பாரத்தில்’, ‘வெங்கரிசலில்’, ‘என் பிறப்புறுப்பு’, ‘நான் அங்கும் இங்கும்’, ‘சுதந்திர யாத்திரை’, ஆகிய தலைப்பிட்ட கவிதை களில் சொல்முறைச் சார்ந்தும், அதனுள் இயங்கிக்கொண்டிருக்கும் அனுபவப் பரப்பு சார்ந்தும் அவர் கடத்திடும் சாராம்சமானது சற்றேறக் குறைய ஒரேமாதிரியான தீர்க்கமான ஓவியங்களையே திரும்பத்திரும்பக் காணத் தருகின்றன. மேலும் இவைகளில் இழையோடியிருக்கும் ஒரே தருணத்தைப் போலான புறச்சூழலின் காட்சிப்படுத்தல்கள் கவிதை மொழியின் வனப்பைக் குறைத்து, இடையறாது அவர் உருவாக்கிக் காண்பிக்க முயன்றிடும் யதார்த்தச் சவால்களை நிலைபெறச் செய்யவிடாமல்   தடுத்துவிடுகின்றன.

தேவதச்சன் கவிதைகளின் இயக்கமும், வாழ்வும், ஆழமும் :

கவிதையின் தனித்த மொழி செயற்பாட்டில் ஒரு கணத்தின் தீவிர கதியை அடையாளப்படுத்திடும் தனித்துவமான நெகிழ்ச்சிகள் நிறைந்த லாவகத்தைக் கொண்டிருப்பவை தேவதச்சன் கவிதைகள். வாழ் வில் நிகழ்ந்துகொண்டிருக்கும் எண்ணற்ற நொடிகளில் பரவிக்கிடக்கும் ஆச்சரியங்களின் பரப்பை மிக நெருக்கமாக உணர்ந்திடச் செய்பவை அவரின் சில கவிதை வரிகள். சிறிய பூவொன்றின் இதழை ஒத்த மென்மையும், பாறையில் நீர்வடிந்தத் தடத்தி லிருக்கும் ஞாபகத்தையும், சுழலும் வாளின் விவேக மும், யதார்த்த சமன்குலைவும் கொண்டு அவர் உருவாக்கிடும் நிகழ்வுகளின் வழியே அவர் கடத்திக் காண்பிக்கும் உலகின் விசித்திரங்களும், அதன் நிச்சயமற்ற கணங்களும் அசலான கவித்துவ அழகியலின் தன்மைகளிலானவை. ஒரு படிமத்தின் வழியே நிகழ்காலத்தின் உள்ளிருந்து, எதிர்காலத்தை நோக்கி எறியப்படும் கல்லின் திசையையும், வீச்சையும், வெளியையும் பிரதானமாகக்கொண்டிருப்பவை அவரின் கவிதைச்சொற்கள். கவிதைகளில் ஒரு சாதாரண நிகழ்வின் வழியே பிரம்மாண்டமான சாளரத்தை ஒரு நொடியில் திறந்து, மூடிக்காட்டும் அற்புத மான தன்மை அவரின் நிறைய்யக் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன. மிகச் சாதாரணச் சொற்சேர்க்கை போலத் தோன்றிடும் வரிகளினுள்ளே  அவர்புதைத்து வைத்துக் காண்பித்திடும் பல்வேறு வாழ்வுகளின் ருசியான பக்கங்களும், விசித்திரங்களும், எளிமையின் சவால்களும் அந்த நொடியில் நம்முள் பரவி ஆழமாகப் பதிந்துகொள்கின்றன. இவற்றை நம் நிலத்தில் மிக நெருக்கமாகச் செய்துகொண்டிருப் பவர்களில், தேவதச்சன் தனித்த கவிதை முகம்கொண்டவர். மிக அசலான வாக்கியப் பிரயோகங் களைக்கொண்டு, படிமங்களின் வழியே நேரடியான யதார்த்தத்தன்மையின் இலகுவான அம்சத்தை அவர்குலைத்துக் காண்பிக்கும் லாவகமும், கச்சிதமும் அவரின் நிறைய்யக் கவிதைகளில் மைய இயங்கியலாக அமைந்திருக்கின்றன. கவிதைகளில் கடத்திக் கொண்டிருக்கும் அனுபவங்களினூடே, அதனுள் பரவிக்கிடக்கும் ஒலிகளை, எளிய தெறிப்புகளை, அவர் குவித்துக் காண்பிக்கும் யுத்தி மிக யதார்த்தத் தன்மையிலானது. ஒற்றைப்புள்ளியில் இயங்கிக்கொண்டிருந்த, தொடக்கம் முடிவு சார்ந்த அக்கறையுடன் நேர்கோட்டில் பயணித்துக்கொண்டிருந்த கவிதைகளை எளிதாகக் கடந்து அதன் ஒற்றைப் புரிதலுக்கான திசையை, பன்முகம் கொண்டதாக மாற்றி வாசிப்பனுபவத்தில் சிறுசிறு முடிச்சுகளின் சுவாரசியங்களுடன் வெளிக் காண்பித்திடுபவை அவரின் கவிதை மொழிகள். மொழியின் சாரமான இசை லயத்திலிருந்து துவங்கிக்கொள்ளும் ஒரு படிமத்தை, ஒரு யதார்த்த வெளியின் நொடியைகவிதையில் திறந்து விட்டு அதனுள் நிகழ்ந்துகொண்டிருக்கும் செயலை பன்முகத்தன்மையின் நிதானமான வேறொரு புற வடிவமாக மாற்றிக்காண்பிப் பதுவே அவரின் கவிதை வெளிப்பாட்டு முறையாக ஆகிக்கொள்கிறது. அன்றாடத்தில் காணக்கிடைக்கும் எல்லாவற்றிலிருந்தும் அவரின் தேர்வுகள் மிகஎளிமையானவையே ஆனால் அதன் சூட்சமத்தில் அவர் வரைந்து காண்பிக்கும் உலகின் நீர்மையான கோடுகளே மிக பிரமிப்பானவை. கவிதைகளில் ஒருநிச்சயமற்றக் கணத்தைத் துவங்கி வைத்திடும்அவரே, அதன் நெருக்கமான இன்னொரு பக்கத் தின் அபூர்வத்தில் ஊடுருவிப் பார்ப்பவராகத் தன்னைமாற்றிக் கொள்கிறார். பிரத்யேகக் கவித்துவ அழகியலின் வடிவங்களை எளிய சொற்சேர்கையிலும், கச்சிதமான சொற்சிக்கணத்தின் வழியிலும் அடைந்து கொள்ளும் அவரது கவிதைகள் வாழ்வின் சிறு சிறு உரையாடல்களிலிருந்து உருவாகும் தரிசனங்களை ஆழமாகக் காண்பிப்பவை.

சில கவிதைகளின் தொடர் வரிகள் :

எப்பொழுது வேண்டுமானாலும் விடைபெற்றுச்
செல்லும் யத்தனத்தில்
மொட்டைமாடியில் சுற்றிக்கொண்டிருக்கிறது
சாம்பல் நிறப் புறா ஒன்று
திடீர் என்று அதுவும் கேட்கிறது
இது யாருடைய வீடு
உன் கூட யார்யார் இருக்கிறார்கள் என்று.

- வீடு - பக்-25.

தோட்டா ஒன்றின் சிறு
சொடக்கில்
தெறித்துச் சிதறியது
பாறையில் இருந்த
கல்வெட்டு ஒன்று
அதில் ஒரு
துண்டை எடுத்து
என் தேநீர்க் கோப்பையில்
போட்டேன்
மிதக்கத் தொடங்கியது சிறுகல்
மிதந்து அங்கும் இங்கும் அலைகிறது
இனி
இந்தக் குமிழ்தான் என்
குடில் போலும்.

- என் குடில் - பக்-31.

செந்நிற ஆப்பிளை
என்னை நோக்கி
நீட்டினாள் காதலாள்
நான் வெறுமனே
வாங்கி
அருகிலிருந்த மேஜையில்
வைத்தேன் மெதுவாக
முன் சாய்ந்து
அவளது
இடது தோளின் கீழாகச் சாய்ந்தேன்
எப்போதும் அவளது சிறிய
இந்த அரைக்கனிகள் போதும்
எனக்கு
எப்போதும், எப்போதும்.

- அரைக்கனிகள் - பக்-44.

நினைவு என்பது எப்போ
நீரை கீழிருந்து அல்ல
மேலிருந்து பற்றும் வரலில்
சொட்டும் அப்போ.

- ஒரு நினைவின் தவறான முகவரி - பக்-47.

ஓ! ஓ!
26 நிமிடங்கள் உடனே
சேர்ந்துவிட்ட
திடீர்ப் பணக்காரனாக உயர்ந்தேன் நான்
தின்னத் தின்ன தின்னத் தின்ன
தீர்ந்து போகாத சிறு
அப்பத்தின் ருசியாயிருந்தது
அந்த
6.44 am. – 6.44 am.

பக். 50.

காற்றில்
லப்டப் என்று அடிக்கும்
ஜன்னல் வழியே
எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது
சில நேரம் பின்மதியத்தில்
சில நேரம் நள்ளிரவில்
சில நேரம் ஆஸ்பத்திரியில்
சில நேரம் ஓய்வூதிய வரிசையில்
எப்போதும்
விடிந்துகொண்டிருக்கிறது.

- எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது, பக். 55

தலையின்
பூவிலிருந்து
ஒரு வெண்ணிற இதழ்
உதிர்ந்தது
அது
கீழே
விழத் தொடங்குகிறது
அச்சிறு இதழ்
தரையைத் தொடாதிருக்கட்டும்.

– காதல் உவகை, பக்.59.

குப்பைத் தொட்டி அருகே
மன நோயாளி ஒருத்தி
அவசர அவசரமாய்
பூவைப் பிய்த்து தன்
மடியில் கொட்டுகிறாள்
மலர்
தானே
சருகாகும் ரணத்தை
யாரால் தாங்க முடியும்.

- அவசர அவசரமாய், பக். 64.

இலையின்
முன்பக்கத்தையும்
பின்பக்கத்தையும்
யாரால்
பிரிக்க முடியும்.

– ஆலிலை, பக். 68

இராப்பகல் அற்ற இடத்தே
இருக்கும்
வினோத ராட்சசனுக்குப் போதும்
அவனது விரல்களும்
பற்களும்
மற்றும்
அவன் மேனியைப் போல்
அடுக்கடுக்காய் வரும்
மேகங்களும்.

– போதும், பக்.80

ஒரு இலை
நெளிந்து
உதிரும்போது
முழு மரமும்
சாய்ந்து விழுகிறது.

- முழு மரம், பக். 97

ஒரு
சின்னஞ்சிறிய மலரை
மலரச் செய்யணுமா
வேறு வழியில்லை
உன் புஜபலத்தால்
பூமியைச்
சுற்றி விடு.

- வேறு வழியில்லை, பக்.119

ஒரு கம்பளிப்பூச்சி வண்ணத்துப் பூச்சியாய்
சந்தோஷம் அடைவதை
ஒரு தடவையாவது
பார்த்திருக்கிறாயா.

- இரண்டு சூரியன், பக். 131

உன் விரல் ஓரங்களை ஈரப்படுத்தும்
தூய்மையான நீராய்
மாற்றிக்கொள்கிறேன்
இப்போது,
உன்னிடம் நான் பேசிக்கொண்டிருப்பதெல்லாம்
ஒரு டினோசார்
தண்ணீரில் நடந்து செல்லும் ஓசைகளைத்தான்
வேறு மொழி
என்னிடம் இல்லை.

- மொழி-2,  பக். 178

உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுக்கள்.

- பரிசு, பக். 191

மலையிலிருந்து திரும்பிய பின்னும்
வண்டிக்கருகில் நிற்கும் எருதுகளின்
கண்களில்
மலை மறையாமலிருந்தது.

- மலையின் விலாப்புறம், பக். 213

அவர்கள்
சுடுகாட்டில்
முதலும் கடைசியுமாக
என்
புகையைப் பார்ப்பார்கள்
பிறகு
என் கவிதைப் புத்தகத்தில்
எப்போதும்.

- ஊர் நடுவே, பக். 275

எப்பவாவது ஒரு
கொக்கு பறக்கும் நகரத்தின்மேலே
என்
கவசமும் வாளும்
உருகி ஓடும்
ஊருக்கு வெளியே.

- எப்பவாவது, பக். 315

இக்கவிதைகளின் வெளியில் அன்றாடங்களின் வாழ்வியலே காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. இருந்தபோதும் அதன் ஆழத்தில் நிகழ்ந்துகொண் டிருக்கும் தனித்த புள்ளியையே மிகுந்த நுட்பமாகக் காணத்தரும் கவிஞர், சிறு அவகாசம் ஒன்றில் அந்நிகழ்விற்கு முன்னும் பின்னுமான நொடியை நம் மனதிற்குள் உருமாற்றி அலையவிடுகிறார். ஒன்றிலிருந்து பலவாகப் பிரிந்திடும் தொடர்பின் கண்ணி யைச் சிறிதுசிறிதாக வெட்டி அதன் ஆன்மரீதியிலான வெளிச்சமொன்றை பரவ விட்டுவிடுகிறார் இக்கவிதைகளில். மெலிதான ஒரு நிகழ்வை கவிதைக்குள் கொண்டு வந்திடும்போது அதன் தனித்த மௌனத்தின் மொழியை ஆழமான கீறலின் வலியாக உருவாக்கிக் காண்பிக்கிறார். ( மலர் தானே சருகாகும் ரணத்தை யாரால் தாங்க முடியும் ) வாசிப்பின் சிறு நொடியில் உருவாகி வந்திடும் புரிதலுக்கான குவியத்தை, மேலுமான சில வரிகளின் நீட்சியில் வேறொன்றின் உருவகமாக மாற்றிக்காண்பிக்கிறார். ‘கிளிங், ளிங்’ ஒலியை, அடையாள அட்டையின் குறியீட்டை, அலுவலகப் படிவங்களை, மனுக்களின் வரிசைகளை, ‘மீன் வாய்’களின் புனைவுகளை, பல கவிதைகளில் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

சொற்பிரயோகங்களின் எளிமையும், அவையேற்படுத்திடும் வியப்புகளும் :

தேவதச்சன் கவிதைகளின் ஆகப்பெரிய பலம் நிறைந்த தன்மை அவரின் சொற்பிரயோகத்தின் பிரக்ஞைப் பூர்வமான தேடலின் ஒரு பகுதியால் நிறைந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் எளிய சொற்களின்மூலமாகத் தீவிர கதியில் ஒரு நிகழ்வைச் சொல்லத் துவங்கி, பிறகு விசாலமான தன்மைக்கான வெளியாக அதைச் சில சொற்களினால் மாற்றிடும் தொனிக்குள் இருக்கும் நிதானமான பார்வை சுழற்சி என்பது மிகக் கூர்மையானது. கவிதைக்குள் ஒவ்வொரு தொடர்புகளையும் ஏற்படுத்தி அல்லது அறுத்து அதன் எல்லைகளை மிகச் சமீபமாக உணரக்கொடுப்பதும், மிகப் புதிதான அனுபவ சேகரத்தை உருவாக்க முயல்வதுமே அவரது கவிமன தூண்டுதல்களாக நம்பிக்கை கொள்ள வைக்கிறது. நேரடியான / உடனடியான அர்த்தப் பகிர்வுகளுக்கான வாய்ப்புகளிலிருந்து வாசகனை துண்டித்து, சமன்செய்திட முடிந்திடாத இருவேறு உலகின் நிகழ்வுகளுக்குள் தற்செயலாகக்கொண்டு செல்லும் உணர்ச்சிகள் நிறைந்திருக்கும் வழிகளே இக்கவிதைகளின் நுட்பமான செயல்தளங்களாக அமைந்திருக்கின்றன. உம். சில கவிதை வரிகள் :

நான் இறந்த பின்னால்
என் போட்டோவில் ஏதும்
மாலைகள் போடவேண்டாம்
முன்னதாகச் சிறு அகல்விளக்கு
ஏற்ற வேண்டாம்
சின்னதாக ஒரு அழிரப்பரை
வைத்துவிடுங்கள்
அது போதும்
புத்தம் புதியதாக இருக்க வேண்டிய
அவசியம் இல்லை
நிறைய்யப் பிழைகளையும்
தவறுகளையும்
அடித்தல்களையும் சந்தித்து
சந்தித்து
அங்கங்கே
கரியின் நிறம் பூசியிருந்தாலும்
பரவாயில்லை
மேலும் அந்த அழிரப்பரை
எனது இடதுகைப் பக்கம்
வை
உன் வலதுகை
பக்கமாக இருக்கும்
அது.

- சகோதரிகள், பக்.26.

‘என் தோட்டம் எங்கும்
ஏகப்பட்ட
ஒடிந்த செடிகள்
சாய்ந்த செடிகள்
ஒரு சிறு வண்ணத்துப்பூச்சி
அதை
நிமிர்த்தி வைத்தபடி
நிமிர்த்தி வைத்தபடி
செல்கிறது
எனக்கு அதை
பின் தொடர வேண்டும் போல்
இருக்கிறது.

- பின்தொடரல், பக்.69

தேவதச்சனின் கவித்துவ முகம் இதுதான், இதிலிருக் கும் நேரடியான, எளிமையான வரிகள் உருவாக்கும் அளவற்ற சுதந்திரமே அபூர்வமான தரிசனத்தை ஆழ மாக உணர்த்துகின்றன.

இரவுக்குத் தேவை
ஒரு பூட்டு
சின்ன விளக்கு
மென்காற்று
மற்றும்
சுவரோர சிறு மூலை
பகலுக்குத் தேவை
வெவ்வேறு பூட்டுகள்
வெவ்வேறு வகை ரூபாய் தாள்கள்
லேமினேசன் செய்த
அடையாள அட்டை.

- போதும், பக். 80.

அம்மா நீங்க பிறந்திட்டீங்களா
என்றான்
குழந்தை
ஈரக்கையைச் சேலைத் தலைப்பில்
துடைத்தபடி அவள்
சொன்னாள்
இருடா என் அம்மாவைக் கேட்டுச் சொல்கிறேன்
அம்மா நீங்க பிறந்திட்டீங்களா

- பக். 93.

மலர்
ஏன் மௌனமாக
இருக்கிறது. உள்ளே
அவ்வளவு
கனமாக இருக்கிறது போலும்.

- அவ்வளவு, பக்.107

இரண்டு பேர்தான் என் ஊரின் ஜனத்தொகை
நேற்று பைத்தியமாய் இருந்து, இன்று
லோடுமேனாக இருக்கும் ஒருத்தன் இன்று
சிறுதொழில் செய்து நாளை
பைத்தியமாகப் போகிற இன்னொருத்தன் - எனது

- ஊர் பக். 132.

‘ஒரு சின்னப் பலூனைப்போல
பெருங்காற்றை
ரகஸ்யமாய் வைத்திருக்கும்
சின்னஞ்சிறு பலூனைப் போல’

- ரகசியக் கல்.  பக். 173.

ஆஸ்பத்திரியில்
வெண் தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்துகொண்டிருக்கிற குழந்தையின் மூச்சொலி
பார்க்க
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக்கொண்டு போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை.

- ஆஸ்பத்திரியில், பக். 250

தெருவில்
கலைந்து கிடக்கும்
இரும்புச் சேர்களில்
காத்திருக்கிறது
நிலவொளி

- காத்திருத்தல், பக்.263.

ஒரு
உயரமான நாரை
என்னைத் திறந்து
தின்னும் போது
அதன்
ஆரஞ்சுக் கால்களில்
படிக்கத் தொடங்குவேன்
மரணத்திற்கு அப்புறம்
எப்படி நடந்துகொள்வது என்று.

ஆட்கொல்லிகளால், பக். 295.

என்
அன்பின் சிப்பியை
யாரும்
திறக்க வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்துகொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்.

- என் அன்பின் சிப்பியை, பக். 341.

உலகிலேயே
குட்டியான
அணில் ஒன்றை
உனக்கெனக் கொண்டுவந்தேன்
பல கிளைகளிலிருந்து வாழ்வைப் பார்க்க
உனக்குச்
சொல்லிக் கொடுக்குமென்று.

- உலகிலேயே குட்டியான,  பக். 361

மேலும் ‘யாரும் பேசவில்லை / யாரும் பேசாமலும் இல்லை’, ‘தூங்கவும் இல்லை / தூங்காமலும் இல்லை’ - என் அறை, பக்.176 - மாதிரியான ஒரே நிகழ்வின் இரண்டு நிலைகளையும் சொல்லி இரு வேறு புரிதலுக்கான அனுபவத்தையும் சில கவிதைகளில் காணத்  தருகிறார். ‘காற்றில் வாழ்வைப் போல்’ மற்றும் ‘கைலாசத்தில்’ (பக். 318, 319) ஆகிய கவிதைகளில் மெய்மையில் கரைந்திடும் நொடியையும், யதார்த்த வாழ்வின் கடவுளின் இருப்பையும் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.
நீட்டிச் சொல்லப்படும் கவிதைகளின் விவரணைகளும் வெற்றுக் கூடுகளும் :
சற்றே நீட்டி எழுதப்பட்டிருக்கும் சில கவிதை களின் மொழியில் - இறுதியில் - ஏதுமற்ற வெறுமையே எஞ்சி நிற்கின்றது. மேற்சொன்ன பிரிவுகளில் சொல்லப்பட்டிருந்த தனித்துத் தெரிந்த கச்சிதமும், லாவகமும் இல்லாத, உணர்த்துதலில் ஒன் றையுமே புலப்படுத்திடாத மற்றும் முழுமையான கவிதானுபவத்தை அடைந்திடாத கவிதை மாதிரிகள் சிலவும் காணக்கிடைக்கின்றன. உ.ம்: ‘நேனோ இட்லிகள்’, ‘திறந்து கிடக்கும்’, ‘மௌனம்’, ‘வீட்டுக்கடிகாரம்’, ‘காந்தி சிலைக்குக் கீழ்’, ‘பின்னிருந்து பார்த்தல்’, ‘கண்ணாடித் தொலைவு’, ‘ஒரு பிரிவு’, ‘என் புனைபெயர்’, ‘நாம்’, ‘வினோத ராட்சசன்’, ‘பார்க்கும் போதெல்லாம்’, ‘ரகசியக் கல்’, ‘கடுஞ்சிவப்புப் பழங்கள்’, ‘மழையைப் பற்றிய’ - இவை,இவர் கவிதையின் மீதான இலகுவான நம்பிக்கைகளின் அடிப்படையிலும், மோசமான தேர்ந்தெடுப்புகளினாலுமே இத்தொகுப்பு வரை வந்திருக்கின்றன. மேலும் இக்கவிதை மாதிரிகளில் நுழைந்து திரும்பும்போது ஏற்படும் அயர்ச்சி, நல்ல கவிதைகளைக் கண்டறியும் புலன்களையும் காயப்படுத்துகின்றன. வெறுமனே தன்னிச்சையான பொழுதுகளில் படர்ந்திருக்கும் அனுபவத்தின் சேகரத்தை முழுவதுமாகக் கூர்மையாக்காமல், தனக்கான மொழி விவரிப்பில் ஏதேனுமொன்றுடன் பொருத்தி, உடனடியாகச் செய்து பார்க்கும் அபத்தத்தின் விளைபொருள்களாகவே இந்த வெற்று விவரணைகள் இருக்கின்றன. குழு நண்பர்களின் ஒப்புக்கான பிரமிப்புகளாலும், சில தொடர்புகளின் வழியான நேர்மையற்ற விமர்சனங்களினாலும் வேண்டுமானால் இவை மறைக்கப்பட்டு எல்லாமும் சரியாக உள்ளது போல் காட்டிக்கொள்ளலாம். ஆனால் இது சார்ந்த உண்மையான அக்கறையும், நேர்மையான வாசிப்புணர்வும் கொண்டு அது போன்ற கவிதைகளின் மோசமான இயங்கு நிலைகளின் மீதானத் தேடலை, மீளாய்வைத் தேவதச்சனே மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் அவரின் மற்றும்அவரது கவிதைகளுக்கான ஒருவித பிம்ப மனநிலையிலிருந்து விடுபட்டு வரத் துவங்கும் முதல் நொடியிலிருந்து இது சாத்தியப்படும். அதுவே இன்னும் சிறந்த அவரது கவிதை மொழியின் பரப்பைத் தேர்ந்த வாசகனுக்கு முழுமையாக வெளிப்படுத்திக் காண்பிக்கும். எளிய உதாரணமாக,
கண்ணகிசிலையை அகற்றுகிறார்கள்தேர்ந்த பொறியாளர்கள் உயர்நுட்ப எந்திரங்கள்அவசரமான அரசாணைஅரவமில்லாமல் நடக்கவேண்டும்சிலையை ஏந்திவேலை முடிந்ததுஓசையில்லாமல்வண்டி நகர்ந்ததுகேட்கத் தொடங்கியதுசிலம்பின் சத்தம்.
கவிதையில் ‘கண்ணகி சிலையை அகற்றுகிறார்கள் / கேட்கத் தொடங்கியது சிலம்பின் சத்தம்’ என்ற நாலு வரியே போதுமானது என்றே நம்புகிறேன். யதார்த்த உரையாடலின் வழியான சில கவிதைகளின் இலகுவான வெளிப்பாட்டு முறையானது - படிம குறியீடுகளின் வழியே, அனுபவத்தில் ஒளிந்திருந்த சவால்களை, அவற்றின் ருசிமிக்கத் தருணங்களை உணர்த்திக் காண்பித்திருந்த முறைகளுக்கு முற்றிலும் மாறான- நீர்த்துப்போன பழைய வடிவத்தின் மெல்லிய அசட்டுத்தனம் நிறைந்த பாதையாகவே எனக்குப்படுகிறது. உ.ம்- ‘மூங்கில் செடி’, ‘என் எறும்பு’, ‘மயான  கரைக்கு’, ‘கொட்டுச் சத்தம் கேட்டு’, ‘அவர்கள் இருவரும்’, ‘அம்மாவும் மகளும்’ போன்றவை.

கவிதைகளில் நின்றிடாத மைக்ரோ நொடியொன்றின் பிரகாசம் :

அன்றாடங்களில் பரவிக்கிடக்கும் எல்லையற்ற வைகளின் மீது நிகழ்ந்துகொண்டிருக்கும் தனித்தனி உலகத்தையும், அதன் மிகச்சிறிய நொடியையும் எப்போதும் காட்சிப்படுத்திக்கொண்டிருப்பவை இவர்கவிதைகளின் சொற்கள். அம்மிகச்சிறிய நொடி, நம்வாழ்வின் மீதான நம்பிக்கையில் ஏற்படுத்திடும் மாற்றங்களையும், கீறல்களையும், வினோதங்களையும் தர்க்கரீதியில் இல்லாமல் அதன் அசாதாரணப் புள்ளிகளின் காரியங்களோடு சாதுர்யமாகஇணைத்துக் காண்பித்திடும் லாவகமான கவிதைமொழி தேவதச்சனுடையது. ஒரு வெட்டப்பட்ட தருணத்திலிருந்தும், செயலிலிருந்தும் விட்டு விலகிட விரும்பும் சுதந்திர மனதொன்றை, அவ்விறுக்கமான நிகழ்விலிருந்து யாருக்கும் தெரியாமல்பிய்த்து வெளியேற்றிடும் நிதானமான செயல்அலகுகளை மையமாகக்கொண்டிருக்கின்றன இத்தொகுப்பிலிருக்கும் சில கவிதைகள். உடனடியானஅர்த்தப்புரிதலுக்கான, ஸ்தூல வடிவ பொருண்மைக்கான நெருக்கடிகளைச் சுலபமாகக் கடந்து நிகழ்வுகளின் வழியே அவை சென்றடைந்திடும் விதத்தைச் சுவாரசியமான முடிச்சுகளோடு வெளிப்படுத்திடும் வெளிப்பாட்டுமுறை இக் கவிதைகளைத்தனித்துத் தெரிய வைக்கின்றன. மேலும் சில கவிதைகளில் நீண்டுவரும் யதார்த்த ரீதியிலான, நேரடிப்பேச்சுவழக்கின் மெலிந்த உரையாடல்களினாலான சொற்சேர்க்கை மூலமாக அக்கவிதையின் புரிதலுக்காக அவர் ஏற்படுத்திடும் இணைப்புவரிகள், மேலோட்டமான உடனடியான ரசனைமதிப்பீட்டிற்கான வாய்ப்புகளை உருவாக்கி, அவரின்அசலான கவிதை மொழியின் பிரகாசம் நிறைந்திருக்கும் கலனை வெறுமையாக்கிவிடும் என்றே சொல்லத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் அபத்தங்களின் கேளிக்கைகளைக் கவிதைகளில் வெறும் தரவாக இல்லாமல், ஒருநிதானமான பார்வையின் வழியாகச் சமகாலத்தைக் கேள்விகளுக்குள்ளாக்கும் ஒப்புமை வடிவ முறையில் அமைக்கப்பட்டிருப்பது வாசிப்பனுபவத்தில் நல்ல மாற்றங்களைக் கொடுக்கின்றன. கவிதைக்குள்தனியாக ஒலித்துக்கொண்டிருக்கும் அவர் மனதின் ஓசையிலிருக்கும் லயமானது, நினைவுகளின் ஒரு ஞாபகத்தை அக்கவிதைகளில் மீட்டெடுக்கவே திரும்பத் திரும்ப முயல்வதை நெருக்கமாகப் புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் முடிகிறது. ஒரு சிறிய துவாரத்தின் வழியே இப்பிரபஞ்சத்தின் முடிவிலித் தன்மையைக் காண்பிக்க முயல்வதும், அதன் எல்லை வரை சென்று பார்த்துத் திரும்ப வைத்திடும் அபாரமான மொழியனுபவமும் நிறைந்திருப்பவையே இவரது கவிதைகளின் ஆகச்சிறந்த இயங்கியலாக, அனுபவத்தின் குறியீடுகளாக விரிந்திருக்கின்றன. தினசரிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்வு களில், பிரக்ஞாபூர்வமான ஒரு துளியின் தனித்த வடிவமொன்றைத் தியானிக்கும் ஒரு மனதின் கட்டுப்படுத்த முடிந்திடாத அமைதியே, தேவதச்சனின்  கவிதைகள்



வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer