எண்மத் தொடர்பு அறுபடுநிலையெனும் (Digital Alienation) உலகை அணுகுவது குறித்து, தத்துவவியலாளர் ப்யூங் சூல் ஹான்

ஜெசின் போர்ச்செ
மொழியாக்கம்: சிபி சக்கரவர்த்தி செல்வராஜ்

பகிரு

நான் தத்துவவியலைக் கலையெனப் பயில்கிறேன்

கலை உலகின் பெரும் ஆதரவைப் பெற்ற தத்துவவியலாளர், A Philosopher with more artists for followers, ப்யூங் சூல் ஹான், தொடர்பறுநிலையும் தனிமையும், சிதறுண்டாதலும், எதார்த்தத்தின் சிதைவும், இதுபோல மேலும் பல வியாதிகளை வளர்த்தெடுப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு நிரந்தரமென்றாகிவிட்ட நவீன வாழ்நிலைகளின் பாடுகளை விவரிக்கும் இவரது எழுத்துக்களின்மீது, ஆதரவையும் அதேநேரம் ஐயப்பாடுகளையும் காணமுடிகிறது. (இவரது மூலமொழி ஜெர்மன்) தென்கொரியாவில் பிறந்து, பெர்லினைச் சார்ந்த அறிஞரின் சமீபத்திய புத்தகம் அன் டிஞ்சு (Undinge) பொருளெனப்படாதவை (Non objects), இவ்வருடத்தின் முற்பகுதியில் வெளிவந்தது. புத்தகம் குறித்துக் Art Review இதழுக்கு அளித்தப்பேட்டி.

அன் டிஞ்சு, பொருளெனப்படாதவை புத்தகம், எண்மத் தகவலையே சார்ந்திருப்பதனால், பொருட்கள் மீதிருந்த, இழந்துவரும் தொடர்பு குறித்தது. நவீன தொழில்நுட்பங்களில் இல்லாத எவை பொருட்களில் உள்ளன?

பொருளெனப்படாதவை புத்தகம், பொருட்களின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக முன்வைக்கிறது. மண் சார்ந்த ஏற்பாடு அல்லது மண்ணுலக ஏற்பாடு (Order of Earth), நிரந்தர உருவ வடிவங்கொண்ட பொருட்களால் ஆனது மற்றும் மனித வாழ்விட அமைப்புக்கு ஒரு நிலையான சூழலைத் தருவது ஆகும்.

எண்ம ஏற்பாடு (Digital Order) உலகைத் தொட்டு உணராதபடிக்குத் தகவல்மயமாகத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா பக்கங்களிலிருந்தும், பொருட்களைப் புறந்தள்ளி, நமது சூழலுக்குள் பொருளெனப்படாதவை எனும் Non Objects நுழைந்து கொண்டிருக்கின்றன. பொருளெனப்படாதவைகளை நான் தகவல்களென்று பெயரிடுகிறேன். இன்று நாம் பொருட்களின் காலத்திலிருந்து பொருளெனப்படாதவைகளின் காலத்திற்கான மாறுதலில் இருக்கிறோம்.

பொருட்களல்ல, தகவல்களே தற்போது நமது சூழலை நிர்ணயிக்கின்றன.

நாம் கூகுள்பூமி, கூகுள்மேகம், இவற்றில்தான் வாசம் செய்கிறோம், இதுமுன் வரையிருந்த பூமி, ஆகாசத்திலில்லை. உலகம் தன் தொடுநுகர்வு குன்றி, மேகத்தைப்போல, ஆவியைப்போல நிலைமாறி வருகிறது. எதிலும் ஸ்திரமில்லை.

ஜப்பானிய எழுத்தாளர் யோக்கோ ஓகாவாவின் ஞாபகக்காவல் (Memory Police) நாவல் நினைவுக்கு வருகிறது.

பெயரில்லாத ஓர் தீவில் பொருட்கள், சடை முடித்துணி (சடை ரிப்பன்), தொப்பி, அஞ்சல்தலை, ஏன் ரோசாப்பூ, பறவைகளுங்கூட மறையத் தொடங்குவதாக அந்நாவலில் வருகிறது. பொருட்களுடன் சேர்ந்து ஞாபகங்களும் மறைகின்றன. தொடர்ந்து நிலவும் ஞாபகமறதி, இழப்பு என உறைபனிக்காலத்திலேயே மக்கள் வாழ்கின்றனர். யாவற்றையும் பல்கி பெருகும் சிதைவு பீடித்துக் கொண்டுள்ளது. உடலில் கூடப் பாகங்கள் மட்டும் மறைந்து போகின்றன. தொடர்ந்து, இறுதியாக, உடலிலிருந்து பிரிந்து, உடலை நீங்கிய குரலொலிகள் மட்டும் காற்றில் மிதந்து வருகின்றன.

ஒருவகையில், தொலைந்துபோன ஞாபகங்களாலாகிய தீவு, தற்காலத்தை நினைவூட்டுகிறது. ஆவியாக, உடல் நீங்கிய குரலொலியாக, எதார்த்தத்தைத் தகவல்கள் கரைத்துக் கொண்டிருக்கின்றன. எண்மமயமாக்கல் பொருளை அர்த்தமற்றதாகவும், உடற்கூடற்றதாகவும், தொடர்ந்து நம் உலகின் அடிநாதத்தையும் உருவழியறுப்பதாகவுமிருக்கிறது. ஞாபகங்களையும் நீக்குகிறது. ஞாபகங்களை நம் பார்வையில் கொண்டிருப்பதை விடுத்து நாம் தரவுகளையும், தகவல்களையும் கொட்டி குவித்து வருகிறோம். நாம் எல்லோரும் தகவல் பித்தர்களாகி விட்டோம். இப்பித்தம்தான் பொருட்களை மறையச்செய்கிறது.

தகவல்களால் ஊடுருவி செல்லப்பட்ட பொருட்களின் நிலையென்ன?

தகவலாக்கம் செய்யப்பட்ட உலகம், பொருட்களைத் தகவலிகளாக (Infomat) உருமாற்றம் செய்கிறது, அதாவது தகவல்களைப் பரிவர்த்தனை செய்யும் செயலிகளாக.

திறன்பேசிகள் பொருட்களல்ல, அவை தகவலிகள், சொல்லப்போனால், நம்மை வேவு பார்க்கும், மனதில் தாக்கங்களை உருவாக்கும் ஒரு வகைத் தகவல் உளவாளிகள்.

ஆனால் பொருட்கள் நம்மை உளவு பார்ப்பது இல்லை. அதனால்தான் நாம் அவற்றை நம்புகிறோம், திறன்பேசிகளை நம்பாத அதே காரணத்துக்காகவே.

எந்த ஒரு உபகரணமும், எந்த ஒரு மேலாதிக்க நுட்பமும், தனக்கான சில பூஜைச் சாமான்கள் (வழிபாட்டு) பொருட்களை விருத்தி செய்கின்றன, அவை அடிபணிதலை உயர்த்திப் பிடித்துச் செல்லும். திறன்பேசி, எண்மத்தகவல் அதிகாரத்தின் பூஜைச் சாமானாகும்.

ஜெபமாலையைப்போலக் கையடக்கத்திலுள்ள திறன்பேசி, அடக்குமுறையின் கருவியாகச் செயல்படுகிறது. லைக் செய்வது என்பது, எண்மவெளியில் பிரார்த்திப்பது ஆகும். நாம் தொடர்ந்து பாவமன்னிப்புக் கோருகிறோம். நம்மை நாமே, வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறோம், இதெல்லாம் இருந்தும், நாம் மன்னிப்பைக் கோருவதாகத் தோன்றுவதில்லை, கவனத்தை ஈர்ப்பதாக மட்டுமே தெரிகிறது.

பொருளெனப்படாதவையிலும் இதற்கு முந்தைய உங்களது புத்தகங்களிலும் அடிக்கோடிட்டதுபோல, மற்றவர்களுடனான உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டிய சூழலில், தங்களது பிம்பத்தை முன் நிறுத்தியே செயல்படுகின்றனர் எனும் பதம் முன் வைக்கப்படுகிறது. அவ்வாறேயெனினும் மக்கள் இன்னமும் உறவுநிலைகளில் ஈடுபடத்தான் செய்கின்றனர் மற்றும் இன்றளவுங்கூடத் தூர எறிய விரும்பாத பொருட்கள் மீது பிடிப்புடன் இருக்கவே செய்கின்றனர். அன்றைக்கும் இன்றைக்கும் அதாவது உலகமயமாக்கத்திற்கும் எண்மமயமாக்கத்திற்கும் என்ன வேறுபாடு?

பொழுதுக்கும் திறன்பேசியை நோக்கியபடியே நேரச் செலவு செய்யும் மக்களுக்கு, மனதோடு நெருக்கமாகப் பொருட்களைக் கொள்ள அல்லது கொள்ளும் அவா இருக்கிறதா என்ன?

எனக்குத் தெரியவில்லை. பொருட்கள் நமது கவனத்திலிருந்து விலகி பின் வரிசையில் ஒதுங்கியுள்ளது. பொருட்களின் தற்போதைய அதீத நடப்பு பணவீக்கம் (Current Inflation), அதன் விளைவாகச் சரசரவெனப் பெருகிய உற்பத்தி, இவையாவும் பொருட்கள் மீதான அதிகரித்து வரும் நமது  அலட்சியப்போக்கைத்தான்   குறிக்கிறது.

அவையாவும் (உற்பத்தியான) இறந்து பிறந்த குழந்தையைப்போலவே.

அதிகப்படியான நாட்டம், பிடிப்பு எல்லாம் பொருட்களை நோக்கியல்ல, தகவல்களும், தரவுகளும் மீதுதான். பொருட்களை விடவும் இன்று நாம் தகவல்களைத்தான் அதிகம் உற்பத்தி செய்து நுகர்வு செய்கிறோம். சொல்லப் போனால் நாம் தொலைத் தொடர்பின் மூலம் போதையடைகிறோம்.

இச்சை எனும் ஆற்றலானது, பொருட்கள் மீதிருந்து விலகி பொருளெனாதவை நோக்கி மடைமாற்றப்பட்டுள்ளது. அதன் விளைவே தகவல்பித்து. நாம் அனைவரும் தகவல் பித்தர்கள். பொருள் மீதான அதீத பற்று ஏறக்குறைய ஒழிந்துவிட்டது எனலாம்.

நாம் தரவு, தகவல் பற்றாளர்களாகிக் கொண்டிருக்கிறோம். தற்போது, தரவு-பாலுறவு என்றொன்றைப் பற்றிய கதையாடல் உலவத் தொடங்கியுள்ளது. திறன்பேசியின் திரையைச் சொடுக்குதலும் (ஷொட்டு வைத்தலும்) வழித்தலும், தேய்ப்பதும், தடவுவதும் ஒரு வகைத் தொழுகை மொழியாகவேப்படுகிறது.

இவ்வுலகத்திற்கும் நமக்குமான உறவுநிலையில் இது ஒரு பெருத்த விளைவு. நம்மை ஈர்க்காதத் தகவல்கள் தூர வீசப்படுகின்றன. நமக்குப் பிடித்த விசயமெனில், அவை இடுக்கியைப் போன்ற விரல்களின் செயலால் பெரிது செய்து பார்க்கப்படுகின்றன. அதாவது இவ்வுலகின் மீதான நமது பிடிமானம் அதுதான் எனலாம். அது முழுவதும் நம்மைச் சார்ந்தது.

அவ்வாறுதான் ஆனால் திறன்பேசி நமது அகங்காரத்தைப் பெருக்கித் தருகிறது. உலகை ஓரிரு வழித்தல் செய்கைகளில் நமது தேவைக்கேற்றாற்போல நம் விருப்பத்திற்குக் கொண்டுவருகிறோம்.

எண்மைய வெளிச்சத்தில், இவ்வுலகம் முற்றிலும் நமக்கானதாகத் தோன்றுகிறது. அவ்வாறான ஒரு இருப்பாக இல்லாததினாலேயே மற்றவை மற்றவையாகவே இருக்கின்றன. ஆகையால் அவை மறைந்தும் போகின்றன (ஞாபகக்காவல் நாவலில் போல). மற்றவையெனும் பண்பு களவு போகுமாயின் அவை நுகர்வுபொருளாகின்றன.

டிண்டர் (Tinder) எனும் செயலி, அவ்வாறே மற்றவர்களைக் காமப்பொருளாக மாற்றுகிறது.

திறன்பேசியைக்கொண்டு மற்றவைகள் குறித்த ஞானத்தின்பால் பொருட்டில்லாத ஒரு சுயவழிபாட்டுக் கோளத்திற்குள் நம்மை நாம் உள்ளிழுத்துக் கொள்கிறோம். இவை மற்றவையை நுகர்வு பொருளாக மாற்றிவிடும். உங்களை ‘அது’ என்றாக்கி விடும். மற்றவை (The Others) என்பவை மறைவதுதான் திறன்பேசி நம்மைத் தனிமைப்படுத்துவதற்கான காரணம்.

பொருட்கள் வாழ்வில் நாம் களைப்பாறும் இடங்கள், அதாவது அவற்றுக்கென ஒரு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பாட்டுபெட்டி ஒன்றை உதாரணமாகச் சொல்கிறீர்கள், அது உங்களுக்கெனவே ஒரு மந்திர ஆற்றலைத் தன்னுள் கொண்டுள்ளது. இவ்வாறான உங்களது ஏக்கத்தைச் சுட்டி யாராவது குற்றம் சுமத்தினால், உங்களது பதில் என்ன?

எந்த ஒரு சூழலிலும், நான் பழைய, அழகான பொருட்களுக்குத் துதி பாட விரும்பவில்லை. அது தத்துவத்தன்மையற்றதும் கூட. பொருட்கள் வாழ்வின் களைப்பாறும் இடங்கள். ஏனெனில் அவை மனித வாழ்வை நிலைப்படுத்துகின்றன. அந்தப் பழகிய நாற்காலி, பழகிய மேஜை, பழக்கமானது, தாவியபடியேயிருக்கும் மனித வாழ்வுக்கு ஓரளவு நிலையானத்தன்மையும் தொடர்ச்சியையும் இரவல் அளிக்கிறது.

நாம் பொருட்களுடன் பழகிக்கொண்டேயிருக்கலாம், ஊடாடிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் தகவல்களுடன் அப்படி முடியாது.

எவ்வகையான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் தகவல் என்பது யாது என்பதனை முழுதும் கிரகித்துக் கொள்ளவேண்டும். எல்லாச் சூழலுக்கானதாகத் தகவல் எப்போதும் செல்லுபடியாகாது (Information has little currency).

வியந்துபோவதிலிருக்கும் பரபரப்பைத் தொக்கியே பயணிப்பதால் தகவலுக்குக் காலந்தாண்டி நிற்கும் ஸ்திரத்தன்மையும் கிடையாது. ஆயுளுக்கும் தொடரும் ஸ்திரத்தன்மையின்மையால் அது உணர்தலுக்கு சிதைவையூட்டும். தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பு செய்தியெனும் வெறித்தனத்துக்கிடையே அது நம்மை வீசிவிடும்.

ஆகையால் தகவலையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது இயலாத காரியம். அவ்வாறுதான் அவை பொருட்களிடமிருந்து வேறுபடுகிறது. தகவல் நமது அறிவாற்றல் திறத்தையே பதற்றமான சுழலுக்குள் இடுகிறது.

ஒரு தகவலை நாம் அணுகும்போதும், இது வேறொன்றாகயிருக்க வாய்ப்புள்ளதாகவே எண்ணி, சந்தேகத்துடனேயே பார்க்கிறோம். அடிப்படையிலேயே நம்பிக்கையின்மையை அது தன்னுள் கொண்டிருக்கிறது.

அவசர அவசரமான பழக்கங்களை அது மேலும் வலுவூட்டுகிறது.

தகவல்களின் இயல்பிலேயே கலந்துள்ள அதீத அவசரத்தன்மையே போலி செய்திகள் உருகொண்டுத் திரியக் காரணம். சூடத்தைப்போலச் சில நேரமே தாங்கும் தகவலானது, காலச்செலவு கோரும் அறிவாற்றல் திற பயிற்சிகளான அனுபவங்கள், மனனம், உணர்தல் ஆகியவற்றை மறையச்செய்கின்றன. ஆக எனது ஆய்வுக்கும் ஏக்கத்திற்கும் தொடர்பில்லை.

உங்களது படைப்பில் நீங்கள் எண்மமயமாக்கலைச் சுற்றியே மீண்டும் மீண்டும் வட்டமடித்தபடி இருக்கிறீர்கள், அது எங்ஙனம் மற்றவைகளை மறைய வைக்கிறது, சுயமோகித்தனத்தைப் பூக்கவைக்கிறது, அதோடு நவ தாராளமயவாத காலத்தின் தன்னிச்சையான சுயச்சுரண்டலுக்கு இலகுவாக்குகிறது. நீங்கள் இவற்றை முதலில் கருவாகக்கொண்டது எப்படி? பின்னணியில் தனிக் கோணம் ஏதும் உளதா?

எனது படைப்புகளான சோர்வுற்ற சமுதாயம் (Burnout Society) 2010, உளவியல் அரசியல் (Psycho Politics) 2017 ஆகியவற்றில் காணப்படும் அடிநாதம், ஃபூக்கோ-வின் ஒழுங்குமுறை சமுதாயம் குறித்த ஆய்வின் மையக்கருத்தைக் கொண்டு தற்காலத்தினை எடுத்தியம்ப இயலாது என்பதே.

நான் இப்போது ஒழுங்குமுறை சமுதாயத்திற்கும், நவதாராளமயவாத சமுதாயத்திற்கும் உண்டான வேறுபாட்டினை எடுத்து வைக்கிறேன்.

ஒழுங்குமுறை அதிகாரபீடம் ஆணைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு இயங்குவது. அது அடக்குமுறை.  சுதந்திரத்தையும் நசுக்குகிறது.

மறுபுறம், நவதாராளமயவாத அதிகாரபீடம், அடக்குமுறையைக் கொண்டதல்ல, வசீகரமிக்கது, அது அனுமதி தரக்கூடியது, ஆனால் அது சுதந்திரத்தை அடக்குவதை விட்டுவிட்டு, சுதந்திரத்தையே சுரண்டுகிறது. நம்மைப் பூர்த்திச் செய்வதாகக் கருதிக்கொண்டு, நம்மை நாமே சுரண்டிக்கொண்டிருக்கிறோம், ரசனையுடன் தன்னிச்சையாக.

ஆக நாம் வாழ்வது தகுதியாட்சியின் கீழ், ஒழுங்கு முறை சமுதாயத்திலில்லை. ஃபூக்கோ இதைக் கணித் திருக்கவில்லை.

நவதாராளமய தகுதியாட்சியின் குடிகளாக, தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பவர்கள், அடிப்படையில் வேலையாட்கள்தான். முதலாளியே இல்லாது, முழுமுதல் வேலையாட்களான அவர்கள் தம்மைத் தாமே சுரண்டிக் கொண்டிருப்பவர்கள். மற்றவர்களால் சுரண்டலுக்கு ஆளாவதைவிட, சுயச் சுரண்டல் மிகுந்த நேர்த்தி உடையது, திறமையானது, ஏனெனில் அது சுதந்திரச் சிந்தையோடே கைகோர்த்துப் பயணிக்கிறது.

காஃப்கா வேலையாட்களின் சுதந்திரத்தின் இம்முரண்பாட்டினை, பொருத்தமான நீதிமொழியில் எடுத்துக் கூறுகிறார்:

“கோமானின் கையிலிருந்த சாட்டையைப் பிடுங்கிய கால்நடை, தன்னைத்தானே, விளாசிக் கொண்டதாம், தானும் கோமானாகிக்கொள்ள.”

இச்சுயவன்முறை - தன்னைத்தானே விளாசிக்கொள்வது, மிகுந்த களைப்பை, மன அழுத்தத்தினை உண்டாக்கும். வேலையேக்கூடக் கடிமானதாயிருந்தாலும் அது அதீத சோர்வை விளைவிக்காது.

அதுவே, வேலை முடிந்தபிறகு களைப்பாயிருப்பதும், அதீத மனச்சோர்வும் ஒன்றல்ல. வேலை ஒரு கட்டத்தில் முடிந்துவிடும். ஆனால் மறுபுறம், வேலையில் சாதித்துக் காட்டச் சொல்லி நம்மீது நாமே அடுக்ம் அழுத்தம், வேலைநேரத்தைத் தாண்டி விஞ்சி நிற்கிறது. அது நம்மைத் தூக்கத்திலும் துன்புறுத்தும், தூக்கமில்லா  இராத்திரிகளுக்கே  இட்டுச்செல்லும்.

வேலையிலிருந்துகூட மீண்டு வரலாம், சாதித்துக் காட்ட வற்புறுத்தும் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மிகக்கடினம்.

குறிப்பாகச் சாதித்துக்காட்ட, மேம்படுத்த எனச் சதா நேரமும் வேண்டும் இந்த உள்மனதின் அழுத்தந்தான், நம்மைச் சோர்வடைய, மன அழுத்தமுறச் செய்கிறது.

ஆக அடக்குமுறையல்ல, மன அழுத்தந்தான், இக்காலத்தின் நோய்க்குறியீடு.

அடக்குமுறை அதிகாரப்பீடத்திற்கு எதிராகக் கலகத்தைத் தூண்டும். நவதாராளமய ஆட்சியதிகாரப் பீடம், அடக்குமுறை செய்யாது சுதந்திரத்தைச் சுரண்டும், நவதாராளமயம் எந்தவொரு கலகத்தையும் காணாது. சுதந்திரம் எனும் முகமூடி தரித்து வலம் வரும்போது, அதிகாரம் முழுமையடைந்து விடுகிறது.

இவையே எனது சமூகவிமர்சனக் கட்டுரைகளின் மையக் கருவாகும். அவற்றையெலாம் குறிப்புரையில் புகுத்தினால், அதுவே “மற்றவை மறைந்து போகின்றன” (The Other Disappear) கரு எனலாம்.

நீங்கள் மாயம், மர்மம் ஆகியவற்றிலிருந்து கூச்சப்பட்டு விலகியிருக்கவில்லை. உங்களை ஒரு கற்பனாவாதியென நீங்கள் வகைப்படுத்துவீர்களா?

யாவுமே எனக்கு மாய மர்மமாகத்தான் தெரிகிறது. நமது கண்ணில் விழித்திரை, விழியின் வெண்படலத்தால் முற்றிலும் போர்த்தப்பட்டுள்ளது, அதன்மேல் ஒரு படலமாக வளர்ந்து இருக்கிறது, எந்தளவுக்கெனில், அப்படலத்தை விழித்திரை உணர முடியாத மட்டுக்கு.

நான் எனை கற்பனாவாதியென மாட்டேன், ஆனால் உள்ளவாறே உலகத்தை உணர நினைக்கும் எதார்த்தவாதி, அதில் மாயங்களும் மர்மங்களும் அடக்கம்.

மூன்றாண்டு காலம் நானொரு பனிக்காலப் பூந்தோட்டத்தை ஏற்படுத்தியிருந்தேன். அதுகுறித்து, ஒரு புத்தகமும் எழுதியிருந்தேன், பூமிக்குப் பாராட்டு (2018) Praise to the earth. ஒரு தோட்ட விவசாயியாக நான் புரிந்துகொண்டது, பூமி ஒரு மாயை. அதனை மறுப்பவர்கள் கண்கள் குருடு. பூமி வெறுமனே வளம்சார் ஆதாரம் அல்ல, குறிப்பாக, மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கருவியல்ல.

இயற்கையுடனான நமது இன்றைய உறவு, ஆச்சரியத்தில் கூர்நோக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படவில்லை, மாறாக முழுவதுமாகக் கருவிகள் கொண்டு வரையறை செய்யப்பட்டது. குறிப்பாக மானுட ஆதிக்கக் காலத்தில்தான் இயற்கையும் பூமியும் மனித செயல்பாட்டு நீதிக்குக் கீழ் முற்றிலுமாகப் பணிக்கப்பட்டன. தனது விருப்பத்திற்கேற்ப, இணக்கத்தை மீறி, இயற்கை முழுவதையும் அதன் கோளத்தைத் தாண்டி, நிர்பந்தங்களைத் திணித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.

ஆதலாலேயே அவனது இடையூறின்றி உருவாக வாய்ப்பில்லாத பல நடப்புகளை வெளிக்கொணர்ந்து விடுகிறான் மேலும், முழுக்கட்டுப்பாட்டையும் இழப்பதற்கு இது வழி வகுக்கிறது.

இப்போது, பூமியெனும் வளத்தைக் கண்ணும் கருத்துமாகக் கையாளவேண்டும் என்பதெல்லாம் போதாது. மாறாக, பூமியுடனான நமது உறவுநிலையில் முழுமாற்றம் தேவை. அதன் மாயாஜாலத்தை, அதன் கௌரவத்தை அதற்குத் திருப்பியளிக்க வேண்டும். அதன் அசாத்தியத்தைப் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர்கள், ஒட்டு மொத்த மனித செயல்பாடுகளின் முழுமையாக விளைபவை.

செயல் என்பது வரலாற்றின் வினைச்சொல்.

வால்டேர் பெஞ்சமின் வரலாற்றின் தேவதை (Angel of History), மனித செயல்பாடுகளின் பேரழிவு விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவருக்கு முன்னால் வானைத்தொட உயர வளர குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், வரலாறு எனும் குப்பைக் குவியல் உள்ளது. அவரால் அதை அப்புறப்படுத்த முடியாது, ஏனெனில் எதிர்காலத்திலிருந்து வீசும் முன்னேற்றம் எனும் புயல் அவரைச் சுழலில் தூர வீசுகிறது. அவரது அகண்ட கண்களும், பிளந்த வாயும் அவரது கையாலாகாதத்தனத்தைப் பிரதிபலிக்கிறது.

சும்மா எனும் மற்றொரு தேவதைதான் (Angel of Inaction) அவரைப் புயலிலிருந்து காப்பாற்ற இயலும்.

நாம் சும்மா, செயலற்றுக் கிடக்கவேண்டிய திறனை மறுகண்டுபிடிப்புச் செய்யவேண்டும். சும்மாவென இருக்கும் திறன்.

ஆதலால் எனது அடுத்தப் படைப்பு, தற்போது பணி புரிந்து கொண்டிருக்கும் புத்தகத் தலைப்பு, “செயல் படாமை குறித்து” (Vita Contemplativa / Of Inactivity).

இது ஹானா அரெண்டெட் அவர்களின் செயல்பட்டுகொண்டிருக்கும் வாழ்க்கை குறித்து, (Vita activa / Of the active life) எனும் படைப்புக்கான எதிர்வினை போல.

அன் டிஞ்சுவில் நீங்கள் எழுதுவதாவது, நாம் அதிகப்படியான தரவுகளைச் சேமிக்கிறோம், இருந்தும் ஞாபகங்களுக்குத் திருப்பிச் செல்வதில்லை, நண்பர்களையும், பின்தொடர்பவர்களையும் குவிக்கிறோம், ஆனால் மற்றவர்களைச் சந்திப்பதில்லை

இதேபோல வசனங்களை உச்சாடனங்களை நாம் அச்சு இயந்திரம், பின்னர்ச் செய்தித்தாள், பின்னாளில் தொலைக்காட்சி கண்டுபிடித்தபோதும் கேட்டிருந்தோம். ஒரு வேளை இந்தச் சந்தர்ப்பத்தில், இது குறித்துப் பீதியடைந்த நீங்கள் அபாயச்சங்கு ஊதுகிறீர்களோ?

எனது எண்ணம் உலகைத் திகிலுறச் செய்வதற்கில்லை, மாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதுவே. ஒரு தத்துவவாதியாக எனது பணி, நாம் எவ்வகைச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதை விவரிப்பது.

நவதாராளமயவாத அதிகார பீடம் சுதந்திரத்தை நசுக்குவதில்லை, சுரண்டுகிறது எனும்போதோ, திறன்பேசி, எண்மத்தகவல் அதிகாரப்பீடத்தின் பூஜைச்சாமான் எனும்போதோ, நான் பீதியைக் கிளப்ப எண்ணுவதற்கென்று பொருள் கொள்வதற்கு இல்லை.

தத்துவவியல் என்பது உண்மையை விளம்பும்.

இன்றைய உலகைப் புரிந்துகொள்வதற்காக, கடந்த சில வருடங்களாக, நான் தகவல்களின் நிகழ்வியலைக் கவனித்துப் படித்துவருகிறேன். அதை வைத்து ஒரு முன்மொழிதலை வைக்கிறேன், சமீபநாட்களில் நாம் எதார்த்தத்தையே, தகவல்கள் மூலமாக மட்டுமே முதன்மையாக வைத்து உணர்ந்துகொண்டிருக்கிறோம். அதன் விளைவு எதார்த்ததுடனான நேரடித் தொடு பரிச்சயம் பெருவாரியாக இல்லை.

எதார்த்தம் அதன் இருப்பைக் களவுகொடுத்து விட்டது. அதன் சரீர அதிர்வுகளை நாம் ஒருபோதும் உணர்வதில்லை. பொருட்களின் மீது தோல் படல மெனப் படர்ந்துள்ள தகவலானது, அவற்றின் தீவிரத்தை உணர்வதைத் தடை செய்கிறது.

உணர்வதே தகவல்களாகிப் போனபோது, நம்மைச் சுற்றிய மன நிலைக்கோ, வானிலைக்கோ நம்மை மரத்துபோகச் செய்கின்றன. அறைகள் கவித்துவத்தை இழக்கின்றன, அவை தகவல்கள் பரவ, அறையில்லா வலைய முனையத்திற்கு வழிவிட்டு நிற்கின்றன.

நிகழ்காலத்திலேயே குவிந்துள்ள, எண்மத்தின் மணிக்கூறு, நேரத்தின் நறுமணத்தை வீசியடித்து விடுகிறது. நேரமானது, தனித்தனி நிகழ்காலத் தீவுகளாக, நிகழ்கால அணுக்களாகப் பிளவுபடுகின்றன. அணுக்களுக்கோ வாசமில்லை.

கதையாடி, பயிற்சி கொண்டு மட்டுமே காலத்தை நறுமணமிக்கக் கூறுகளாக முன் கொண்டுவரமுடியும். எதார்த்தத்தினைத் தகவல் மையமாக்கியதில், காலமும் இடமும், வெளியும் தொலைந்து போகின்றன. இதற்கும் அபாயச் சங்கூதுவதற்கும் தொடர்பில்லை.

இது நிகழ்வியல்.

நீங்கள் தற்போது இருப்பது ரோம், ஒரு தனி அடையாளங்கொண்டது, வரலாறு, தொன்மை பூச்சு, தெருக்களில் அரங்கேறும் வாழ்க்கை, குடும்பத்தினர், நண்பர்களுடனான விருந்து உணவு மற்றும் எல்லா இடங்களிலும் உணரக்கூடிய வாட்டிகன் என யாவும். தற்போது உங்களுக்குத் தோன்றுகிறதா, தனித்துவிடப்பட்ட மனிதன், அவனிடத்தில் அவனது எண்ம மாற்று - மன நிறைவு, இவை குறித்த உங்களது வருத்தங்கள் ஒரு சில குழுக்களையோ அல்லது ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையோ மட்டும் பொருந்துமோ என்று?

என்ன பயன், மக்கள் ஒருவரையொருவர் சந்தித்த மறுகணம் தங்கள் திறன்பேசிக்குள் கவனத்தைத் திருப்பிக்கொள்ளும்போது?

இணைப்பிலிருந்தும், முழுத் தொலைத்தொடர்பிலிருந்தும், மக்கள் முன்னைவிடவும், இன்னும் அதிகமாக, தனிமையை உணர்கின்றனர். நாங்கள் உங்களைக் கிடைப்பதற்கெளிதாய் நுகர்பொருளாய் ஒரு ‘அது’ வாய் மாற்றுகிறோம். இவ்வாறுதான், “நீங்கள்” என்பதே உலகின் பற்றாக்குறையாகிறது. அதுவே நம்மைத் தனியராய் உணர வைக்கிறது.

அதையொத்து ரோம், நியூயார்க், சீயோல் ஆகிய நகரங்களுக்கிடையே யாதொரு வித்தியாசமும் இல்லை. ரோம் என்னை வேறுவகையில் மனம் கவர்கிறது. மகிழ்ச்சிக்காக வேண்டி, நமக்கு, உயர்தரமான, உயரமான மற்றெதாவதொன்று தேவைப்படுகிறது. எண்மமயமாக்கல், மற்றவைகளை, அதன் இடர்களை, அதற்கு இணையான வேறெதாவது ஒன்றை, என யாவையும் ஒதுக்குகிறது, எல்லாவற்றின் மீதும் மென்மையைப் பூசுகிறது.

எல்லாத் தடங்களையும் நீக்கி, யாவற்றையும் கிடைப்பதற்கெளிதாய் அளிப்பதால்தான் அதன் பேர் திறன்பேசி. ரோம் நகரம் ஆனால் சிறப்புடையது, ஏனைய யாவற்றையும்விட உயர நிற்பதில்.

இன்று நான் மீண்டும் முழு நகரத்தைச் சுற்றி மிதிவண்டி அழுத்தி எண்ணற்ற தேவாலயங்களைத் தரிசித்து வந்தேன். ஒரு அழகான தேவாலயத்தைக் கண்டுபிடித்தேன், இருத்தல் குறித்த மிக அரிதான அனுபவத்தை அந்தத் தேவாலயம் எனக்கு வழங்கியது. தேவாலயம் மிகச் சிறியது, உள்ளே நுழைந்ததும், நீங்கள் உடனேயே, உணர்வீர்கள், நீங்கள் ஒரு குவி மாடத்தின் கீழ் நிற்பதை.

குவிமாடம் எண்கோணங்களைக்கொண்டு பாங்காக வடிவமைக்கப்பட்டிருக்கும். குவிமாடத்தின் மையத்தை நோக்கி அவை படிப்படியாய் அளவு சிறிதாகிச் செல்லும். ஒரு சக்திவாய்ந்த மேல்நோக்கிய விழிவழி இழுவையொன்றை உருவாக்கும் வகையில், சுற்றியுள்ள குவிமாடத்தின் உச்சியைச் சுற்றியுள்ள சன்னல்களை உடைத்து வெளிச்சம் தெறித்து உள்ளோடி வரும், அங்கு மாடத்தின் மையத்தில் தங்க வெண்புறா மிதந்த கோலத்தில் சிலையாயிருக்கும்.

கம்பீரமான ஒன்றை அனைத்தும் சேர்ந்து உருவாக்கியிருந்தது, அந்த மேல்நோக்கிய இழுவை என்னை வெளியில் மிதக்க வைத்தது.

நான் மேலெழுப்பப்பட்டேன்.

அந்த நேரம்தான் உணர்ந்தேன், புனித ஆவியென்பது யாதென்று?

அது ‘மற்றவைத் தவிர’ வேறொன்றும் இல்லை.

ஒரு புனிதப்பொருளுக்குள்ளே இருத்தலின் அனுபவத்தை உணர்வது, களிப்பூட்டும் அனுபவமாக இருந்தது.

உங்கள் கருத்துப்படி, நாம் உண்மையான பொருட் கள் மீது மறுபடியும் கவனம் செலுத்த, மீண்டும் உயிராற்றல் பெற, குறிப்பாக மற்றவர்களுடன் சேர்ந்தியங்க, என மாற இவ்வுலகில் என்ன நடக்க வேண்டும்? நமது காலத்தில், சிக்கல்களை எவ்வாறு சரிக்கட்ட கற்றுகொள்வது?

எனது ஒவ்வொரு புத்தகமும் ஒரு கற்பனாவாத எதிர் கதையாடல் கொண்டு முடியும். சோர்வுற்ற சமூகத்தில் (Burnout Society) மன அழுத்தத்தைத் தரும், ‘நான் எனும் மனச்சோர்வினை’ அதாவது சமூகத்தினரை இணைக்கும் வகையில் ‘நாம் எனும் மனச்சோர்வு’ கொண்டு எதிர்வினை செய்திருப்பேன்.

மற்றவர்களை வெளியேற்றுதலில் (Expulsion of Others) 2016 அதிகரித்து வரும் சுயமோகித்தனத்தைக் கேட்டலின் கலை கொண்டு எதிர்த்திருப்பேன்.

உளவியல் அரசியலில் (Psychopolitics) மூடத்தனம் எனும் கற்பனாவாத உருவத்தினைக் கொண்டு, ஒன்றுக்கொன்று இணைந்தத் தன்மையும், முழு கண்காணிப்புத் தன்மையும் எதிர்த்திருப்பேன்.

எவ்வகை இணைப்பிலும், எந்த முனையத்துடனும் தன்னை இணைத்துக்கொள்ளாதவனே மூடன்.

எரோஸின் சங்கடத்தில் (Agony of Eros) எரோஸ் மட்டுமே மன அழுத்தத்தைத் தோற்கடிக்க சக்தி பெற்றவன் என முன்மொழிந்திருப்பேன்.

காலத்தின் வாசனையில் (The Scent of time) 2014 உலாத்துதலின் கதையைக் கூறியிருப்பேன்.

சமூகத்தின் குறைகளை ஆராய்ந்து எனது புத்தகங்கள், அவற்றைத் தாண்டிவர கருத்தாக்கங்களை முன் மொழிவன. ஆம்! நாம் புதுவகையான வாழ்க்கை முறைகளிலும், புதுக் கதையாடல்களிலும் பணிசெய்ய வேண்டியிருக்கிறது.

உங்களது இன்னொரு புத்தகமான சடங்குகளின் மறைவு (Disappearance of Rituals) (2020). எவ்வாறு சடங்குகள், மக்கள் மற்றும் பொருட்கள், நமது வாழ்வில் வேரூன்ற உதவுவனவாகும்? ஏன் நம்மால் நம்மை பார்த்துக்கொள்ள இயலாதா?

சடங்குகள் காலத்தின் கட்டிட சாத்திரங்கள், வாழ்வின் வடிவத்தைக் கட்டமைக்கவும் நிலைநிறுத்தவும் செய்வன தற்போது அவை அரிதாகி வருகின்றன.

பெருந்தொற்றுக் காலம் அவற்றின் மறைவை அதிவேகப்படுத்தியுள்ளது. வேலையும் சடங்கு நோக்கங்கள் கொண்டுள்ளது. நாம் குறிப்பிட்ட நேரத்தில் தான் வேலைக்குச் செல்கிறோம். வேலை ஒரு குழுவில்தான் நிகழ்கிறது.

வீட்டிலிருந்தே வேலையில், வேலையெனும் சடங்கு முழுவதும் தொலைந்துபோகிறது. நாள் என்பது அதன் அமைப்பையும் தாளத்தையும் இழக்கிறது. இது ஒரு வகையில் நம்மைக் களைப்பு அடையவும் மன அழுத்தமடையவும் செய்கிறது.

குட்டி இளவரசன் (1943) புனித எக்ஷுபெரி (The Little Prince by Saint Exubery) எழுதியது. அதில், குட்டி இளவரசன், நரியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் துல்லியமாக வரச் சொல்வான். அவ்வகையில் வருகை என்பது ஒரு சடங்காக மாறும் பொருட்டு.

அவன் நரிக்கு விவரிக்கிறான், சடங்கு என்பது யாதென்று.

காலத்தின் அங்கங்கள் சடங்குகள், பலமாடிக் கட்டிடங்களில் உள்ள அறைகளைப்போல. அதில் ஒரு வீட்டைப்போல, நேரம் என்பது அணுகக்கூடியதாக இருக்க, சடங்குகள் உள்ளன. அவை நேரத்தை வகை தொகை செய்து, அடுக்கிவைப்பன. இவ்வகையில் காலம் அர்த்தமுள்ளதாகிறது.

நேரம் இன்று ஒரு திடக்கட்டுமானத்தை இழந்து விட்டுள்ளது. அது வீடல்ல மாறாக ஒரு நிலை ஒழிந்தச் சலனங்கொண்ட ஆறு. சடங்குகளின் மறைவு, நாம் அதிகச் சுதந்திரத்தைக் கொள்வதற்குச் சமம் என்பதாகயில்லை.

முழுதும் இலகுவான வாழ்க்கை நஷ்டமும் கூட. சடங்குகள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திய போதும், அவை வாழ்க்கையை அமைப்பாகவும், நிலையாகவும் கொள்ளும். அவை உடலில் மதிப்புகளையும், குறியீட்டு அமைப்புகளையும் நங்கூரமாக்கச் செய்யும், சமூகக்குழுவினை வலுவூட்டும்.

சடங்குகளில், நாம் குழுவையும் குழுவின் நெருக்கத்தையும் உடல் ரீதியில் அனுபவிக்கிறோம். எண்ம மயமாக்கல், உலகின் பௌதீகத்தன்மையை உருவித் தூர வீசுகிறது. பின்னர், பெருந்தொற்று வருகை, சமுதாயக்குழுவினரிடையேயான நேரிடை அனுபவத்தின் இழப்பை அது மேலும் வதைக்கிறது.

நீங்கள் கேட்கிறீர்கள், ஏன் இதை நாமே நாமாகச் செய்துகொள்ளக்கூடாது?

நாம் இன்றைக்கு எதாவதொன்றின் பேரில் அடுக்கும் காரணங்களான, அந்நியமானது, முறைபடுத்துவதனால் அசலானதல்ல ஆகியவற்றால் எல்லாச் சடங்குகளையும் புறக்கணிக்கிறோம்.

நவதாராளமயவாதம் ஒரு அசல் கலாச்சாரத்தை உருவாக்குகிறது, அதன் மையத்தில் அகங்காரம் உள்ளது. அக்கலாச்சாரம் சடங்குகளாக்கப்பட்ட செயல் எதிர்ச்செயல்கள் மீது சந்தேகங்களை வளர்த்தெடுக்கின்றன. உடனுக்குடனான உணர்ச்சிகளும், குறிப்பிட்ட நிலைகள் மட்டுமே அசல் என்றாகிவிட்டன.

வடிவிக்கப்பட்ட பண்புகள் உதாரணத்திற்கு, மரியாதை நிமித்தம் என்பது அசலல்லாதது, மேம்போக்கானது என மறுக்கப்படுகிறது. அசல் அல்லது உண்மைத்தன்மையின் சுயமோக மரபுதான், அதிகரித்து வரும் சமுதாயத்திலிருக்கும் வெறித்தனத்திற்குப் பகுதி பொறுப்பு.

அழகான வடிவங்களின் நெறி பொருட்டு, அசலெனும் மரபினை எதிர்த்து எனது புத்தகத்தில் நான் வாதங்கள் செய்கிறேன். மரியாதை நிமித்த தோரணைகள், பழக்க வழக்கங்கள் வெறுமனே மேம்போக்கானவையல்ல.

பிரஞ்சு தத்துவவியலாளர் அலேன் சொல்வதாவது, “மரியாதையான தோரணைகள் நமது எண்ணங்களில் பெரும் சக்தியைத் தேக்குகின்றன.”

நீங்கள் அன்பை, நற்பண்பினை மற்றும் மகிழ்ச்சியைப் பிரதிபலித்தால் மேலும் தலைபணிவது போன்ற கரணங்கள் ஆகியவனவற்றைச் செய்வது, மோசமான மனநிலைக்கு எதிராகவும் அதேசமயம் வயிற்றுவலிக்கெதிராகவும் உதவிசெய்யும். அக உலகைவிடவும் வெளியுலகிலிருப்பவைதான் அதிகம் நம்மைத் தாங்கிப் பிடிக்கும். பிளேய் பாஸ்கல் ஒருமுறை சொன்னதாவது, நம்பிக்கை இழப்பதைக் குறித்துப் பரிதவிப்பதற்குப் பதில், வெறுமனே, (பிரார்த்தனை) கூட்டத்திற்குச் சென்று, சடங்குகளில் பிரார்த்தனை, பாடல்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு, இன்னொரு வகையில், பார்த்து நடிப்பது, அது நம்பிக்கையைச் சரியாக மீட்டுவரும்.

வெளியுலகு அக உலகை மாற்றியமைக்கும், புது வரையறைகளைக் கொண்டுவரும். அதுவே சடங்குகளின் சக்தி. பிறகு, நமது ஆழ்மனது, இன்றைக்கு, பொருட்களில் வேரூன்றியிருப்பதில்லை. இப்புற உலகப் பொருட்கள், ஆழ்மனதை நிலையாக்க அதிகப் பலனளிக்கும். இதுவே தகவல்களிடம் மிகுந்த சிரமம், ஏனெனில் அது ஆவியாவது, நிலையற்றது, மிகக் குறுகிய தொடர்பைக்கொண்டது.

நீங்கள் ஜெர்மன் மொழியைக் கிட்டத்தட்டக் கூறுகூறாக ரசிக்கிறீர்கள், மேலும் துணைச்சொற்களற்ற வாசக அடுக்கான ஒரு பாணியைக் கொண்டாடுகிறீர்கள், அது உங்களுக்கு ஒரு தனித்தன்மையான குரலை, இந்தத் தற்கால, சமகாலக் கலாச்சார விமர்சன மரபில், அளிக்கிறது. இது ஒரு கலவையைப் போல உள்ளது, மார்டின் ஹெடெகர் மற்றும் ஜென். அவர்களுக்கும் உங்களுக்குமானத் தொடர்பு என்ன?

டெ ஜெட் (Die zeit) எனும் ஜெர்மன் வார செய்தித்தாளின் இதழியலாளர் ஒருவர் ஒருமுறை கூறினார், அன்றாட வாழ்க்கையினைத் தேக்கி வைக்கும் சிந்தனை கட்டமைப்புகளை, ஓரிரு வாக்கியங்களில் என்னால் கொண்டு வர இயலும் என.

எதற்காக நீங்கள் ஆயிரம் பக்க புத்தககத்தை எழுதுகிறீர்கள், சில வார்த்தைகளில் உங்களால் இவ்வுலகிற்கு அறிவூட்டமுடியுமெனில்?

ஓராயிரம் பக்க புத்தகம், உலகமெனில் அது எதன் பொருட்டு, எனும் விவரிக்கும் அப்புத்தகம், சமயத்தில் ஒரு ஹைக்கூ அளவுக்கு விவரமாக இல்லாமல் போகலாம்.

முதல் பனி
டெஃபொடில் இலைகள்கூட வலைகின்றன
அல்லது
கோவில் மணிகள் அழிந்து போகின்றன
வாசமான பூக்கள் மீதியிருக்கின்றன
ஒரு பொருத்தமான மாலை!

- பாஷோ

எனது எழுத்துக்களிலும், நான் ஹைக்கூவின் பாதிப்புகளைப் பயன்படுத்தவே செய்கிறேன்.

நான் சொல்கிறேன்:

அது அப்படித்தான்.

இது ஒரு ஆதாரத்தின் விளைவை உருவாக்குகிறது, அது எல்லோருக்கும் ஒரு புரிதலை அளிக்கிறது. ஒரு இதழியலாளர் ஒரு முறை எழுதினார், எனது புத்தகங்கள் படிப்படியாய் ஒல்லியாய்கொண்டே போகின்றன, ஒரு சமயத்தில் அவை முற்றிலும் மறைந்து போகக்கூடும் என.

அதோடு சேர்த்து நான் ஒன்று சொல்கிறேன், எனது சிந்தனைகள் காற்றில் ஊடுருவி, கலந்துவிடுமென்று. யாவரும் அதைச் சுவாசித்துக் கொள்ளலாம்.

கடைசியில், நீங்கள் குட்டி இளவரசனை மேற்கோளிடுகிறீர்கள், நம்பிக்கை, வாக்கு, பொறுப்பு ஆகிய மதிப்புகள் அபாயத்தில் உள்ளன என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இவைதானே நமது தனிப்பண்புகள் காலங்களைத் தாண்டி, சர்வாதிகாரிகளையும், போர்களையுங்கூடத்  தாண்டி  நம்முடன் இருப்பவை!

இன்று, நேரமெடுக்கும் எல்லாப் பயிற்சிகளும் அதாவது நம்பிக்கை, விசுவாசம், வாக்கு, பொறுப்பு ஆகியன எல்லாம், மறைந்துவருகின்றன. யாவும் சிற்றாயுளுடன் இருக்கின்றன. நாம் நமக்கே சொல்கிறோம், நமக்கு அதிகச் சுதந்திரம் இருக்கிறதென்று.

ஆனால் இச்சிற்றாயுள் நமது வாழ்க்கையை நிலை குலையவைக்கின்றன.

நம்மால் பொருட்களுடன் பிணை செய்துகொள்ள இயலும் ஆனால் தகவல்களுடன் முடியாது. நம்மால் தகவல்களைச் சிலநேரமே கவனிக்கமுடியும். அதன் பிறகு, அது ஒரு பதிலளிக்கும் இயந்திரத்தில் ஒலிக்கும் குறுந்தகவல் போலத்தான். பின்பு அது மறதியை நோக்கி சென்றுகொண்டிருக்கும்.

நம்பிக்கை ஒரு சமூகப் பயிற்சி என்று நினைக்கிறேன், இன்று அது தகவல் மற்றும் வெளிப்படைத்தன்மை  ஆகியவற்றால்  மாற்றப்பட்டு வருகின்றன.

அறிவு போதவில்லையென்றாலும், நம்பிக்கை ஆக்கப்பூர்வமான உறவுநிலைகளைக் கட்டியெழுப்ப உதவும்.

வெளிப்படைத்தன்மையான சமூகத்தில், ஒருவர், உடனே மற்றவர்களிடம் தகவல்களைக் கேட்பார். நம்பிக்கையோ ஒரு சமூகக்கடன், அது மேவாரியாயிருக்கும். வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் சமூகமோ, நம்பிக்கையின்மை கொண்ட சமூகத்தைத் தான் வளர்த்தெடுக்கும்.

உங்களது புத்தகங்கள், அதிகமாகக் கலைப் பின்புலத்திலிருந்தே வாசிக்கப்படுகிறதே, தத்துவவியலிலிருந்தில்லையே, எவ்வாறு அதை விளக்குவீர்கள்?

அதிகமாக, கலைஞர்கள் தான், தத்துவவாதிகளை விட எனது புத்தகத்தை வாசிக்கின்றனர். தத்துவவாதிகள் தற்போதெல்லாம், நிகழ்காலத்தில் ஆர்வங் காட்டுவதில்லை.

ஃபூக்கோ ஒரு முறை பேசும்போது, தத்துவவாதி என்பவன், இப்பொழுதை எண்ணங்களைக் கொண்டு மடக்கி பிடிக்கும் ஒரு இதழியலாளன், என்கிறார்.

அதைத்தான் நானும் செய்கிறேன்.

மேலும் எனது கட்டுரைகள், வேறொரு வாழ்க்கைக்குச் செல்லும் வழியிலிருக்கின்றன, இன்னொரு வேறுப்பட்டக் கதையாடலுக்கு. கலைஞர்களுக்கு அந்தக் குரல் கேட்கின்றது.

நான் கலையை நம்பி ஒரு பணியை எடுப்பேன், புது வாழ்க்கை வழிமுறை, புது விழிப்புணர்வு, புதுக் கதையாடல், என நிலவிவரும் கோட்பாடுகளுக்கு எதிராக, அதை மேம்படுத்துவேன்.

இந்தத் தருணத்தில், ரட்சகர் கலைதான், தத்துவம் கிடையாது அல்லது நான் தத்துவத்தைக் கலை வடிவில் பயில்கிறேன்.

நூலாசிரியர் குறிப்பு

ப்யூங் சூல் ஹான் (Byung Chul Han), ஜெர்மனி தத்துவ வியலாளர் மற்றும் கலாச்சாரக் கோட்பாட்டாளர், இவரது தொடக்கக் காலத்தில், சியோல் கொரிய பல்கலைக்கழகத்தில் உலோகவியல் படித்தவர், பின்பு, தத்துவவியல், ஜெர்மானிய இலக்கியம் மற்றும் கத்தோலிக்க வேதசாத்திரம் பயில, ஜெர்மனிக்குக் குடியேறினார்.

இருபதுக்கும் மேலாகப் புத்தகங்களை எழுதியுள்ளார், ஆய்வுக்கட்டுரை பாணியில் அமைந்திருப்பவை யாவும்.

களைப்படைந்த சமூகம் (Society of tiredness), வெளிப்படைச் சமூகம் (Society of transparency), சோர்வுற்ற சமூகம் (Burnout Society) எரோஸின் சங்கடம் (Agony of Eros), பொருளெனப்படாதவை - உயிரான உலகின் எழுச்சி (Nonthings - Upheaval in the lifeworld).

இவரது கருத்தில், வெளிப்படைத்தன்மை என்பது சமூகத்தின் மீது வீசப்படும் வலை, ஒரு சூது, குறிப்பாக அதன் மூலம் நம்மை இயக்குவது, நவயுகப் பொருளாதாரத்தின் யுக்தியெனக் குறிப்பிடுகிறார்.

ஆளுமைத்திறன் பிறழ்வு, சுயசீர்கேடு, அதீதக் களைப்பு, மன அழுத்தம், உளைச்சல், காதல், பாப் கலாச்சாரம், பகுத்தறிவு, காதல், சமூக ஊடகம், வெளிப்படைத்தன்மை, இணையம் எனப் பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

வெகு சமீபம் வரையிலும் இவர் தொலைகாட்சிகளுக்கோ, வானொலிகளுக்கோ எந்தப் பேட்டியும் அளித்ததில்லை. மேலும் பொதுவெளியில் தன்னைப் பற்றியும், குடும்பப் பின்னணியையும் பகிர்ந்து கொண்டதில்லை.

பத்திரிக்கையாளர் / நெறியாளர் குறிப்பு

ஜெசின் போர்ச்செ (Gesine Borcherdt) ஜெர்மானிய எழுத்தாளர், கலை அறங்காவலர், Art Review போன்ற கலை இதழ்களுக்குத் தொகுப்பு ஆசிரியர்.

2004 - இல் இருந்து எழுதிவரும் இவர், தற்காலக் கலைவடிவங்கள், தனி கவனங்கொண்டு பெண் கலைஞர்களை, சர்வதேச கலை வடிவங்கள், பாணிகள் குறித்தும் எழுதிவருகிறார்.

தனியார் ஸ்தாபனங்களுக்கு, அரங்கங்களுக்கு, வணிக நோக்கில்லா அமைப்புகளுக்காகப் பல கண்காட்சிகளுக்கு நிறுவனராகவும், அறங்காவலராகவும் இருந்து உள்ளார்.

லியாம் டிக்நர் (Liam Tickner) ஜெர்மானியிலிருந்து ஆங்கில மொழியாக்கம் செய்தவர்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer